line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 1: சர்வதேச புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசத்திற்கான வேலைத்திட்டமா?

Print part 1on single page

10. சமூக தேசப்பற்று தவறுகளின் தொடர்ச்சியாக தனியொரு நாட்டில் சோசலிச தத்துவம்

ஒரு நாட்டில் சோசலிசம் பற்றிய தத்துவம், வெல்லப்பட வேண்டிய சிக்கல்கள் குறித்து குறைத்து மதிப்பிடுவதற்கும், பெற்றுள்ள சாதனைகள் குறித்த மிகைப்படுத்தலுக்கும் பிடிவாதமாக இட்டுச் செல்கிறது. "சோவியத் ரஷ்யாவில் சோசலிசம் ஏற்கனவே 90 சதவீதம் எட்டப்பட்டு விட்டது" என்னும் பொருள்படும்படியான ஸ்ராலினது கூற்றினை விடவும் கூடுதல் சோசலிச எதிர்ப்பு மற்றும் எதிர்புரட்சிகர வலியுறுத்தலை ஒருவர் காண முடியாது. இந்த கூற்றானது குறிப்பாக சுயதிருப்திகொண்ட அதிகாரத்துவத்தினரை நோக்கி கூறப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வகையில் உழைக்கும் வர்க்கத்தின் கண்களில் சோசலிச சமுதாயத்திற்கான சிந்தனையை ஒருவர் மதிப்பிழக்க செய்ய முடியும். சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் பாரிய வெற்றிகளானது, அவை பெறப்பட்ட சூழல்களையும் மற்றும் கடந்த காலத்தில் இருந்து மரபுவழி பெற்ற குறைந்த கலாச்சார நிலைகளையும் கருத்தில் கொண்டு பார்த்தோமானால், மிகப் பெரும் சிறப்பு வாய்ந்தவை என்பதை உணர முடியும். ஆனால் இந்த சாதனைகள் சோசலிச இலட்சிய அளவுகோல்களில் ஒரு மிக மிகச் சிறிய அளவிலானதே. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளிகள், மற்றும் ஏழை விவசாயிகளை ஒன்றிணைத்து உறுதிப்படுத்த கடினமான உண்மையே அவசியமன்றி இனிப்பூட்டப்பட்ட பொய்கள் அல்ல, இவர்கள் புரட்சியின் பதினோராம் ஆண்டிலும் தங்களை சுற்றிலும் வறுமை, துயரம், வேலைவாய்ப்பின்மை, ரொட்டிக்காக காத்திருக்கும் வரிசைகள், படிப்பறிவின்மை, வீடற்ற குழந்தைகள், குடிப்பழக்கம், மற்றும் விபச்சாரம் ஆகியவை தம்மை சுற்றி குறைந்தபாடில்லை என்பதைக் காண்கிறார்கள். அவர்களிடம் 90% சோசலிசத்தை எட்டி விட்டதாக பொய்கள் கூறுவதை விட, நமது பொருளாதார நிலை, நமது சமூக மற்றும் கலாச்சார நிலைகள் சோசலிசத்தை விடவும் முதலாளித்துவத்திற்கு தான் மிகவும் நெருக்கமாக, அதிலும் ஒரு பிற்பட்ட நாகரீகமற்ற முதலாளித்துவத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன என்பதைத் தான் நாம் சொல்லியாக வேண்டும். மிகவும் முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போது தான் நாம் உண்மையான சோசலிசக் கட்டுமானப் பாதையில் நுழைவோம் என்பதை நாம் அவர்களுக்குக் கூற வேண்டும்; இதற்காக உள்நாட்டு பொருளாதார முயற்சிகளுக்கான சிறிய நெம்புகோல் மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்க போராட்டத்திற்கான நீண்ட நெம்புகோல் ஆகிய இரண்டு நெம்புகோல்களையும் பயன்படுத்தி தளர்ச்சியின்றி உழைக்க வேண்டியது அவசியம் என்பதை கூறவேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சோசலிசம் ஏற்கனவே 90% சாதிக்கப்பட்டாகி விட்டது என்கிற ஸ்ராலினிச வார்த்தைகளுக்கு பதிலாக, நாம் அவர்களுக்கு லெனினின் வார்த்தைகளைக் கூற வேண்டும்:

"நாம் நமது அவநம்பிக்கைகள் மற்றும் வார்த்தைஜாலங்களை அகற்றி விட்டால்; பல்லை இறுக்க கடித்துக் கொண்டு, நமது அத்தனை உறுதியையும் திரட்டி, நமது ஒவ்வொரு நரம்புகளையும் தசைகளையும் வருத்தினால்; நாம் நுழைந்திருக்கின்ற சர்வதேச சோசலிசப் புரட்சியின் பாதையின் வழியில் மட்டுமே தீர்வு சாத்தியம் என்பதை புரிந்து கொண்டால், ரஷ்யா (வறுமையின் தேசம்) இத்தகையதொரு தேசமாக (செல்வம் கொழிக்கும் தேசம்) உருமாறும்." [43]

கம்யூனிச அகிலத்தின் முக்கிய தலைவர்களிடம் இருந்து நாம் இதுபோன்றதொரு வாதத்தை கேட்க வேண்டியிருந்தது: தனி ஒரு நாட்டில் சோசலிச தத்துவமானது, நிச்சயமாக, ஆதாரமற்றதே, ஆனால் இது ரஷ்ய தொழிலாளர்களுக்கு அவர்கள் உழைக்கும் கடினமான நிலைமைகளில் ஒரு முன்னோக்கை வழங்குகிறது மற்றும் இந்தவகையில் அவர்களுக்கு தைரியத்தையும் வழங்குகிறது. ஒரு வேலைத்திட்டத்தில் தங்களது வர்க்க நோக்குநிலைக்கான விஞ்ஞான அடிப்படையை தேடாமல், அறநெறி வகையில் தேற்றிக்கொள்வதற்காக நாடுபவர்களின் தத்துவார்த்த சீர்குலைவின் ஆழத்தை அளப்பது என்பது கடினமானதாகும். உண்மைக்கு முரண்பாடாக இருக்கும் ஆறுதல்படுத்தும் தத்துவங்கள், மத வட்டத்திற்கு உரியதே அன்றி அறிவியல் வட்டத்திற்குரியது அல்ல; மற்றும் மதம் மக்களுக்கு அபின் ஆகும்.

எமது கட்சியானது தனது வெற்றிகரமான காலத்தை முழுக்கவும் சர்வதேச புரட்சியை நோக்குநிலை கொண்டதொரு வேலைத்திட்டத்தால் கடந்திருக்கிறதே அன்றி ஒரு நாட்டில் சோசலிசம் என்பதின் மூலம் அல்ல. பின்தங்கிய ரஷ்யா மட்டுமே, தனது சொந்த சக்திகளைக் கொண்டு, சோசலிசத்தை கட்டமைக்காது என்று பொறிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்ட பதாகையின் கீழ், கம்யூனிச இளைஞர் அமைப்பு (YCL) ஆனது உள்நாட்டு யுத்தம், பசி, குளிர், கடுமையான சனி, ஞாயிறு வேலை, தொற்றுநோய்கள், பட்டினி பங்கீடுகள் மீதான ஆய்வுகள், இன்னும் ஒவ்வொரு முன்னோக்கிய அடி எடுத்து வைக்கும்போதும் செய்யப்பட்ட எண்ணுக்கணக்கற்ற தியாகங்கள் இவற்றின் மிகவும் கடுமையான வருடங்களை கடந்து வந்திருக்கிறது. கட்சி மற்றும் கம்யூனிச இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னணியில் நின்று போரிட்டார்கள் அல்லது ரயில்வே நிலையங்களுக்கு மரக்கட்டைகளை சுமந்து சென்றார்கள் என்றால், அவர்கள் இந்த கட்டைகளைக் கொண்டு தேசிய சோசலிசத்தை கட்டமைக்கும் நம்பிக்கை கொண்டிருந்ததால் அல்ல, மாறாக அவர்கள் சர்வதேச புரட்சிக்கே சேவை செய்தனர். அதற்கு சோவியத்தின் கோட்டை உறுதியாக இருக்க வேண்டும், சோவியத் கோட்டைக்கு ஒவ்வொரு கூடுதல் மரக்கட்டையும் முக்கியம் என்பதாலாகும். இப்படித் தான் இந்த கேள்வியை நாங்கள் அணுகிக் கொண்டிருந்தோம். காலங்கள் மாறியிருக்கின்றன, விஷயங்கள் மாறியிருக்கின்றன (இருப்பினும், அவ்வளவு முற்றிலும் தீவிரமாக அல்ல), ஆனால் கொள்கைரீதியான அணுகுமுறையானது தனது செல்தகமையை இன்னமும் முழுமையாகவே கொண்டுள்ளது. தொழிலாளர், ஏழை விவசாயி, கட்சிக்காரர், மற்றும் இளம் கம்யூனிஸ்ட், அனைவருமே 1925ல் புதிய அருள்வாக்கானது முதன்முறையாக பாலிக்கப்படும்வரை தங்களது முழு நடத்தைகளின் மூலம், தங்களுக்கு அது அவசியமில்லை என்பதையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் இது தேவையாய் இருப்பதெல்லாம் மக்களை மேலிருந்து பார்க்கும் நிர்வாகி, இடையூறு செய்யப்படுவதை விரும்பாத சில்லறை நிர்வாகி, அனைத்தையும்-பாதுகாக்கும் மற்றும் ஆறுதலானதொரு சூத்திரத்தை இரகசியமாக அதிகாரம் செலுத்த விரும்பும் ஒரு சாதன பயன்படுத்துனர் ஆகிய இவர்களுக்குத்தான். இவர்கள் தான், அறியாமையுள்ள மக்களுக்கு "நற்செய்தி" அவசியம் என்றும், ஆறுதல் தத்துவங்கள் இன்றி மக்களுடன் எந்த உறவும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். இந்த சூத்திரத்திற்காக இவர்கள்தான் "90 சதவீதம் சோசலிசம்" குறித்த போலியான வார்த்தைகளை பிடித்துக் கொள்கிறார்கள், ஏனென்றால் இந்த சூத்திரம் தான், அவர்களது சலுகைமிக்க நிலைக்கு, அதிகாரம் செய்வதற்கும் கட்டளையிடுவதற்குமான அவர்களது உரிமைக்கு, "ஐயுறவு வாதிகள்" மற்றும் "குறைந்த விசுவாசம்" கொண்ட மனிதர்கள் பக்கத்திலிருந்துவரும் விமர்சனங்களிலிருந்து விடுபடுவதற்கான அவர்களின் தேவைக்கு ஒப்புதல் அளிக்கும்..

தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதானது, புத்துணர்ச்சியை மட்டுப்படுத்தி மற்றும் உற்சாகத்தை கொன்று விடுகிறது என்கிற வகையிலான புகார்களும் குற்றச்சாட்டுகளும், அவை தோற்றுவித்த முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகள் இருந்தாலும், புரட்சியாளர்கள் மீது எப்போதுமே சீர்திருத்தவாதிகள் வீசும் அக்குற்றச்சாட்டுகளுடன் தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் மனோவியல் ரீதியாகவும் நெருக்கமாக தொடர்புடையதாக இருக்கிறது. சீர்திருத்தவாதிகள் கூறினார்கள்: "முதலாளித்துவ சமுதாயத்தின் கட்டமைப்புக்குள்ளாக அவர்கள் தங்களது வாழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியாது என்று நீங்கள் தொழிலாளர்களிடம் கூறுகிறீர்கள்; இதன் மூலம் மட்டுமே கூட, நீங்கள் அவர்களின் போரிடும் உத்வேகத்தை சாகடிக்கிறீர்கள்". உண்மையில், புரட்சியாளர்களின் தலைமைகளின் கீழ் தான், தொழிலாளர்கள் பொருளாதார ஆதாயங்களுக்காகவும் மற்றும் பாராளுமன்ற சீர்திருத்தங்களுக்காகவும் போராடினார்கள்.

உலக முதலாளித்துவ நரகத்தில் பாலைவனப் பசுந்திடலை ஒத்த ஒரு சோசலிச சுவர்க்கத்தை கட்டுவது சாத்தியமில்லை என்பதையும், சோவியத் குடியரசின் தலைவிதி மற்றும் இதன் வழி தனது சொந்த தலைவிதியும் சர்வதேச புரட்சியையே முழுக்கவும் சார்ந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளும் தொழிலாளியே, நாம் ஏற்கனவே 90% என அனுமானிக்கத்தக்க சோசலிசத்தை கொண்டிருக்கிறோம் என்று கற்பிக்கப்படும் தொழிலாளியை விட அதிக உத்வேகத்தோடு சோவியத் யூனியனை நோக்கிய தனது கடமைகளை நிறைவேற்றுவான். "அப்படியென்றால், சோசலிசத்தை நோக்கிய கடின முயற்சி அவசியம் தானா?" இங்கேயும் சீர்திருத்தவாத நோக்குநிலையானது எப்போதும்போல புரட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல் சீர்திருத்தத்திற்கும் எதிராகவே செயல்படுகிறது.

ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் முழக்கத்தை கையாண்டு, 1915ம் ஆண்டு எழுதப்பட்ட, நாம் ஏற்கனவே மேற்கோள் காட்டியிருக்கின்ற, கட்டுரையில் நாம் எழுதினோம்:

"சமூக புரட்சியின் வாய்ப்புக்களை தேசிய எல்லைகளுக்குள்ளாக அணுகுவது என்பது சமூக-தேசப்பற்றுவாதத்தின் கருவாக இருக்கும் அதே தேசிய குறுகிய எண்ணத்திற்கு பலியாவதாகும். வய்லன்ட் (Vaillant) தான் இறக்கும் காலம் வரையில், பிரான்சை சமூக புரட்சிக்கான புகழப்பட்ட நாடாக கருதினார்; துல்லியமாக இந்த நிலைப்பாட்டில் இருந்துதான் அவர் இறுதிவரை தேசியப் பாதுகாப்பின் பக்கம் நின்றார். ஜேர்மனியின் தோல்வியானது எல்லாவற்றுக்கும் முதலில் சமூக புரட்சி அடிப்படையின் சிதைவைக் குறிப்பதாக லென்ஸ்க் (Lensch) மற்றும் அவரது கூட்டாளிகளும் (சிலர் வெளிவேஷமாகவும் மற்றவர்கள் உண்மையாகவும்) கருதுகிறார்கள் ... பொதுவாக, சமூக-தேசப்பற்றுவாதத்தில், மிக அநாகரீகமான சீர்திருத்தவாதத்துடன் சேர்த்து, தனது சொந்த தேசிய அரசானது, தனது தொழில்துறை நிலையினாலோ அல்லது தனது 'ஜனநாயக' வடிவம் மற்றும் புரட்சிகர வெற்றிகளாலோ, மனித சமுதாயத்தை சோசலிசம் அல்லது 'ஜனநாயகத்தை' நோக்கி அழைத்துச் செல்ல அழைக்கப்பட்டதாக கருதிக் கொள்ளக் கூடிய ஒரு தேசிய புரட்சிகர கற்பனைவாதமும் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. இந்த வெற்றிகர புரட்சியானது இன்னுமொரு வளர்ச்சியடைந்த நாட்டின் எல்லைகளுக்குள் உண்மையில் சிந்திக்கத்தக்கது என்பதானால், தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்துடனான இந்த கற்பனாவாதத்தில் ஏதோ கொஞ்சம் வரலாற்று ரீதியான நியாயமாவது இருந்திருக்கும். ஆனால், உண்மையில் பார்க்கையில், இது சிந்திக்கவியலாதது. புரட்சியின் தேசிய அடிப்படையை பாதுகாக்க, பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசத் தொடர்புகளை பலவீனப்படுத்துவது போன்ற வழிமுறைகள் மூலம் போராடுவது என்பது உண்மையில் புரட்சியையே பலவீனப்படுத்துவது ஆகும், இது ஒரு தேசிய அடிப்படையில் தொடங்க முடியும், ஆனால் தற்போதைய போரைப் போல் முன்னெப்போதும் இவ்வளவு வலிவுடன் வெளிப்பட்டிராத, ஐரோப்பிய அரசுகளின் நடப்பு பொருளாதார, இராணுவ, மற்றும் அரசியல் ரீதியாக ஒன்றையொன்று சார்ந்த நிலையின் கீழ், தேசிய அடிப்படையிலேயே நிறைவு பெற்று விட முடியாது. புரட்சியில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட நடவடிக்கையினை நேரடியாகவும் உடனடியாகவும் பக்குவப்படுத்தக் கூடிய இந்த ஒன்றையொன்று சார்ந்த நிலை ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் முழக்கம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.." [44]

1915ம் ஆண்டு சர்ச்சையின் போலியான பொருள் விளக்கத்தில் இருந்து தொடங்கி, "தேசிய குறுகிய மனப்பான்மை" என்பதின் கீழ் நான் லெனினைத்தான் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக காட்டுவதற்கு ஸ்ராலின் பலமுறை முயன்றிருக்கிறார். இதை விட பொருத்தமற்ற ஒன்றை கற்பனை செய்யக்கூட முடியாது. லெனினுடனான எனது விவாதத்தின் போது நான் எப்போதுமே வெளிப்படையாகவே எனது வாதங்களை எடுத்து வைத்திருக்கிறேன் ஏனென்றால் நான் சித்தாந்தரீதியான கருத்துக்களின் மூலம் மட்டுமே வழிநடத்தப்பட்டிருக்கிறேன். கூறிய விவகாரத்தை பொறுத்தவரை லெனின் சம்பந்தப்படவே இல்லை. இந்த குற்றச்சாட்டுகள் யாருக்கு எதிராகக் கூறப்பட்டன என்பதை கட்டுரை பெயர் சொல்லியே குறிப்பிடுகிறது - வய்லன்ட், லென்ஸ்க், மற்றும் பிறர். சமூக-தேசப்பற்று கூத்துக் களியாட்டம், அதனை எதிர்த்த நமது போராட்டத்தின் உச்சகட்டம் இவற்றின் ஆண்டாக 1915 இருந்தது என்பதை ஒவ்வொருவரும் கட்டாயம் நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் இது தான் எங்களது உரைகல்லாக இருந்தது.

முந்தைய பத்தியில் எழுப்பப்பட்ட அடிப்படையான கேள்வியானது சந்தேகத்திற்கிடமின்றி சரியாகச் சூத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது: தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைக்கும் எண்ணக்கரு ஒரு சமூக-தேசப்பற்றுவாத எண்ணக்கருவாகும்.

ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகளின் தேசப்பற்றுவாதம், இரண்டாம் அகிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த கட்சியான, தங்களது சொந்த கட்சிக்கான சட்டரீதியான தேசப்பற்றுவாதமாகத்தான் தொடங்கியது. மிகவும் முன்னேறிய ஜேர்மனிய தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் மக்களின் உயர்நிலையிலான ஒழுங்கமைப்பு தகுதிகளின் அடிப்படையில், ஜேர்மன் சமூக ஜனநாயகம் தனது "சொந்த" சோசலிச சமுதாயத்தை கட்டமைக்க தயாரானது. கொடூரமான அதிகாரத்துவத்தினர், பிழைப்புவாதிகள், பாராளுமன்ற சுரண்டல்வாதிகள், மற்றும் அரசியல் போக்கிரிகள் பொதுவாக இவர்களை எல்லாம் விட்டுவிட்டால், சாமானிய சமூக ஜனநாயகவாதியின் சமூக-தேசப்பற்றுவாதமானது துல்லியமாக ஜேர்மன் சோசலிசத்தை கட்டமைக்கும் நம்பிக்கையில் இருந்துதான் தருவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சாமானிய சமூக ஜனநாயகவாதிகள் (இலட்சக்கணக்கான சாமானிய தொழிலாளர்கள் இல்லாமல்) ஹொகன்ஸொலர்ன்ஸ் அல்லது பூர்சுவாக்களை பாதுகாக்க விரும்பினர் என்று சிந்திப்பது சாத்தியமில்லாதது. இல்லை. அவர்கள் ஜேர்மனியின் தொழில்துறையை, ஜேர்மனியின் ரயில்வேயை மற்றும் நெடுஞ்சாலைகளை, ஜேர்மன் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தை, மற்றும் குறிப்பாக ஜேர்மனிய உழைக்கும் வர்க்கத்தின் அமைப்புக்களையே சோசலிசத்திற்கான "தேவையான மற்றும் போதுமான" தேசிய முன்நிபந்தனைகளாக பாதுகாக்க விரும்பினர்.

இதே போன்றதொரு நடைமுறை பிரான்சிலும் நிகழ்ந்தது. Guesde, Vaillant, மற்றும் அவர்களுடன் ஆயிரக்கணக்கான சிறந்த சாமானிய கட்சி உறுப்பினர்களும், மற்றும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சாதாரண தொழிலாளர்களும், துல்லியமாக பிரான்ஸ் நாடு தான், அதன் புரட்சிகர மரபுகளுடன், அதன் வீரமிக்க பாட்டாளி வர்க்கத்துடன், அதன் மிக உயர்ந்த கலாச்சாரம் மிகுந்த, இயைந்துபோகும் தன்மை கொண்ட, மற்றும் திறன் வாய்ந்த மக்களுடனும், சோசலிசத்திற்காக புகழப்பட்ட நாடு என்று நம்பினார்கள். வயதான Guesde மற்றும் கம்யூனார்ட் Vaillant, மற்றும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விசுவாசமான தொழிலாளர்களும், வங்கியாளர்கள் அல்லது வட்டிக்காரர்களை பாதுகாப்பதற்கு போராடவில்லை. வருங்கால சோசலிச சமுதாயத்தின் மண்ணையும் படைப்புத் திறனையும் தாங்கள் பாதுகாக்கிறோம் என்று அவர்கள் விசுவாசத்துடன் நம்பினார்கள். அவர்கள் முழுக்கவும் தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்னும் தத்துவத்தில் இருந்து தொடர்ந்தார்கள் மற்றும் இந்த சிந்தனையின் பேரில் அவர்கள் இந்த தியாகம் "தற்காலிகமானதே" என்கிற நம்பிக்கையில் சர்வதேச ஒற்றுமை என்பதை தியாகம் செய்தார்கள்.

சமூக-தேசபற்றாளர்களுடனான இந்த ஒப்பீட்டுக்கு, இயல்பாகவே, சோவியத் அரசுக்கு தேசப்பற்றுடன் இருப்பது ஒரு புரட்சிகர கடமையாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு பூர்சுவா அரசுக்கு தேசப்பற்றுடன் இருப்பது துரோகம் என்ற வாதத்தின் மூலம் பதிலளிக்கப்படும். மிகவும் உண்மையே. முதிர்ச்சியுற்ற புரட்சியாளர்களுக்கிடையே இந்த கேள்வியில் மாற்றுக் கருத்துகள் இருக்க இயலுமா? ஆனால், நாம் தொடர்கையில், இந்த மறுக்கவியலா வாதமானது தெரிந்தே செய்யப்படும் ஒரு தவறை மறைப்பதற்கான புலமைவாத திரையாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்படுகிறது.

புரட்சிகர தேசப்பற்றுவாதம் ஒரு வர்க்க குணாம்சத்தை மட்டுமே கொண்டிருக்க முடியும். இது, கட்சி அமைப்புக்கு, தொழிற் சங்கத்திற்கு பற்றுவாதமாக ஆரம்பிக்கிறது, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும்போது அரசு பற்றுவாதமாக எழுச்சி பெறுகிறது. எப்போதெல்லாம் தொழிலாளர்கள் கையில் அதிகாரம் உள்ளதோ, அப்போதெல்லாம் தேசப்பற்றுவாதம் ஒரு புரட்சிகர கடமையாக உள்ளது. ஆனால், இந்த தேசப்பற்றுவாதமானது புரட்சிகர சர்வதேசியத்தின் ஒரு பிரிக்கவியலா பாகமாக இருக்க வேண்டும். சம்பள உயர்வு மற்றும் குறைவான பணிநேரத்திற்கான தொழிலாளர்களின் போராட்டம் கூட ஒரு சர்வதேசரீதியான போராட்டமாக மேற்கொள்ளப்படா விட்டால் வெற்றிபெற முடியாது என்று மார்க்சிசம் எப்போதுமே தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்து வந்துள்ளது. இப்போதோ திடீரென்று சோசலிச சமுதாயத்தின் இலட்சியமானது தேசிய சக்திகளை மட்டுமே கொண்டு சாதிக்கப்பட முடியும் என்று தோன்றுகிறது. இது சர்வதேசியத்திற்கான ஒரு மரண அடியாகும்.

அடிப்படையான வர்க்க இலக்கானது, அரைகுறை குறிக்கோள்களை விட மிக அதிகமாகவே, தேசிய வழிவகைகளாலோ அல்லது தேசிய எல்லைகளுக்குள்ளோ அடையப்பட முடியாது, என்கின்ற வெல்லமுடியாத உறுதிதான் புரட்சிகர சர்வதேசியத்தின் இதயம் போன்ற மையப் பகுதியாகவே இருக்கிறது. இருந்தாலும், இறுதி இலக்கானது தேசிய பாட்டாளி வர்க்கத்தின் முயற்சிகளால் தேசிய எல்லைகளுக்குள் நனவாக முடியுமென்றால், சர்வதேசியத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டிருக்கிறது என்பது பொருள். ஒரு நாட்டில் சோசலிசம் நனவாகும் சாத்தியம் பற்றிய தத்துவமானது வெற்றி வாகை சூடும் பாட்டாளி வர்க்கத்தின் பற்றுவாதத்திற்கும் பூர்சுவா நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வி மனப்பான்மைக்கும் இடையிலுள்ள உள் தொடர்பினை சிதைக்கின்றது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கமானது தொடர்ந்து அதிகாரத்துக்கான பாதையில் பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றது. எவ்வாறு எந்த வகையில் அதன் பயணம் இருக்கிறது என்பது, சோசலிச சமுதாயத்தை கட்டுவதான பணியை அது ஒரு தேசிய பணியாக கருதுகிறதா அல்லது சர்வதேச பணியாக கருதுகிறதா என்பதையே முழுக்கவும் சார்ந்து இருக்கிறது.

ஒரு நாட்டில் சோசலிசம் நனவாவது சாத்தியந்தான் என்றால், அந்த தத்துவத்தை ஒருவர் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தான் என்றில்லை அதற்கு முன்னதாகவே நம்ப முடியும். பின்தங்கிய ரஷ்யாவின் தேசிய எல்லைகளுக்குள்ளாக சோசலிசம் நனவாக முடியுமென்றால், முன்னேறிய ஜேர்மனியிலும் இது நனவாக முடியும் என்று நம்புவதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. நாளை ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இந்த தத்துவத்தை முன்மொழிய எடுத்துக் கொள்ளலாம். வரைவு வேலைத்திட்டமானது அதற்கு அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது. நாளை மறுநாள் பிரெஞ்சு கட்சியின் முறையாக இருக்கும். சமூக-தேசப்பற்றுவாதத்தின் பாதையில் கம்யூனிச அகிலத்தின் சிதைவுறலின் தொடக்கமாக இது இருக்கும். ஒரு "முழுமையான சோசலிச சமுதாயத்தை" சுதந்திரமாக கட்டமைப்பதற்கு "தேவையான மற்றும் போதுமான" முன்நிபந்தனைகளை தனது நாடு கொண்டிருப்பதான சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் எந்த ஒரு முதலாளித்துவ நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு நொஸ்கே (Noske) உடன் தொடங்கியது மட்டுமன்றி, ஆகஸ்ட் 4, 1914 இல் முழுமையாக தடுமாறி விழுந்ததுமான புரட்சிகர சமூக ஜனநாயகத்துடன், இந்த கேள்வியில் குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடவில்லை.

சோவியத் ரஷ்யாவின் இருப்பே சமூக-பற்றுவாதத்திற்கு எதிரான உறுதிதான் ஏனென்றால் தொழிலாளர்கள் குடியரசை பொறுத்தவரை தேசப்பற்றுவாதம் ஒரு புரட்சிகரக் கடமையாகும் என்ற ஒரு கூற்று தெரிவிக்கப்படும்போது, ஒரு சரியான சிந்தனையின் ஒரு பக்கமான இந்த பயன்பாட்டிலேயே தேசிய குறுகிய மனப்பான்மையானது வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறுபவர்கள், ஒட்டு மொத்த உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு தங்களது கண்களை மூடிக் கொண்டு சோவியத் ரஷ்யாவை மட்டுமே மனதில் கொள்கின்றனர். இந்த மையக் கேள்வியில் வேலைத்திட்டத்தில் ஒரு சர்வதேச நோக்குநிலையின் மூலமும், இன்னமும் முகமூடி கொண்டதாக இருந்தாலும் லெனினின் சர்வதேச வேலைத்திட்டத்தில் தனக்கென்று ஒரு தத்துவக் கூட்டினை கட்டிக் கொண்டிருக்க கூடிய சமூக-பற்றுவாத கள்ளவணிகத்தினை இரக்கமின்றி நிராகரிப்பதன் மூலமும், பூர்சுவா அரசினை பொறுத்தவரை பாட்டாளி வர்க்கத்தினை தோல்வி மனப்பான்மை வாதத்திற்கு இட்டுச் செல்வது சாத்தியமே.

மார்க்ஸ், லெனினின் பாதைக்கு திரும்புவதற்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை. இவ்வாறு திரும்புவதே முன்னோக்கி செல்வதற்கான ஒரே சிந்திக்கக் கூடிய பாதையை திறந்து விடுகிறது. தீர்வு அமைந்திருக்கும் இந்த திருப்பத்தை அடைவதை சாத்தியமாக்கும் பொருட்டு வரைவு வேலைத்திட்டம் பற்றிய இந்த விமர்சனத்தை நாங்கள் கம்யூனிச அகிலத்தின் ஆறாவது பேரவை மாநாட்டில் பேசுகிறோம்.