சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த்தின் ஆரம்ப அறிக்கையான, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” ஆகஸ்ட் 7 இல் வெளியிடப்பட்டது.

இரண்டாவது விரிவுரையான, “நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்” ஆகஸ்ட் 14 இல் வெளியிடப்பட்டது.

மூன்றாவது விரிவுரையான, “பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றமும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்” ஆகஸ்ட் 18 இல் பிரசுரிக்கப்பட்டது.

நான்காவது விரிவுரையான, “கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்” என்பது ஆகஸ்ட் 25 இல் பிரசுரிக்கப்பட்டது.

ஐந்தாவது விரிவுரையான “சிலோனில் ’மாபெரும் காட்டிக்கொடுப்பும்’, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிதமும்” என்பது ஆகஸ்ட் 30 இல் பிரசுரிக்கப்பட்டது.

ஆறாவது விரிவுரை, “பப்லோவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டமும், OCI இன் மத்தியவாதமும், ICFI க்கு உள்ளே எழுந்த நெருக்கடியும்” செப்டம்பர் 6 இல் வெளியிடப்பட்டது.

ஏழாவது விரிவுரை, “ஏர்னெஸ்ட் மண்டேலின் “நவ-முதலாளித்துவத்தை” ICFI அம்பலப்படுத்துவதும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி மீதான பகுப்பாய்வும்: 1967-1971” செப்டம்பர் 8 இல் வெளியிடப்பட்டது.

எட்டாவது விரிவுரையான, “வொல்ஃபோர்த்தின் விலகலும், வேர்க்கர்ஸ் லீக்கில் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் புதுப்பிப்பும், தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திருப்பமும்” என்பது செப்டம்பர் 13 இல் பிரசுரிக்கப்பட்டது.

அனைத்து விரிவுரைகளும் உலக சோசலிச வலைத் தளத்தில் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்படும்.

அனைத்துலகக் குழுவின் ஐந்தாம் மாநாடும், 1974 இளவேனிற்காலமும்

1974 வசந்த காலத்தில், வேர்க்கர்ஸ் லீக்கின் அப்போதைய தேசிய செயலாளராக இருந்த ரிம் வொல்ஃபோர்த், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஐந்தாம் உலக மாநாட்டுக்காக இங்கிலாந்திற்கு பயணித்தார். அந்த மாநாட்டிற்கு அகிலத்தின் ஏனைய பிரிவுகளினதும், ஆதரவுக் குழுக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் சிலர், இராணுவ சர்வாதிகாரம் நிலவிய நாடுகளில் இருந்து வந்திருந்தனர். புரட்சிகர நடவடிக்கைக்கு மரண தண்டனை விதிக்கக் கூடிய பிராங்கோவின் ஸ்பெயினில் இருந்தும் கூட வந்திருந்தனர்.

வொல்ஃபோர்த், அதற்கு சமீபத்தில் தான், வேர்க்கர்ஸ் லீக்கின் இளம் உறுப்பினரான நான்சி ஃபீல்ட்ஸ் உடன் தொடர்புகளை ஆரம்பித்திருந்தார். நான்சி ஃபீல்ட்ஸிற்கு அரசியல் அனுபவமும் மார்க்சிசத்தில் ஆர்வமும் இல்லாத போதும் கூட, அவரை அம்மாநாட்டுக்கு அழைத்து செல்வதென வொல்ஃபோர்த் தீர்மானித்தார். நான்சி ஃபீல்ட்ஸிற்கு மத்திய புலனாய்வு துறை (சிஐஏ) முன்னணி அதிகாரிகளுடன் நெருக்கமான குடும்ப உறவுகள் இருந்தது அப்போதே அவருக்குத் தெரியும் என்பதை வொல்ஃபோர்த் ஆரம்பத்தில் மறுத்த போதும், விரைவிலேயே பின்னர் அவர் அதை ஒப்புக் கொண்டார். நான்சி ஃபீல்ட்ஸின் இந்த தொடர்புகளைக் குறித்து அனைத்துலகக் குழு உறுப்பினர்களுக்கு அவர் இலண்டன் மாநாட்டுக்கு முன்னர் தெரிவித்திருக்கவில்லை என்பதோடு, அப்பெண்மணி அதில் கலந்து கொள்வதற்கான பாதுகாப்பு அனுமதியை பெறவும் அவர் முயலவில்லை.

ரிம் வொல்ஃபோர்த்தும் நான்சி ஃபீல்ட்ஸூம்

கட்சிக்கும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஓர் அசாதாரண அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 1974 இல், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ஒரு வேலைநிறுத்தத்தை தொடங்கி இருந்தனர். எட்வார்ட் ஹீத்தின் டோரி அரசாங்கம், “யார் பிரிட்டனை ஆள்கிறார்கள்?” என்ற முழக்கத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு நேரடியாக அழைப்புவிட்டதன் அடிப்படையில் அதே மாதம் ஒரு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஹரோல்ட் வில்சனும் தொழிற் கட்சியும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர். வில்சனால் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்ற அச்சத்தில், விரைவிலேயே பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடக்கலாம் என்று கருதி அதற்குத் தயாரிப்பாக, “Clockwork Orange” என்று அழைக்கப்பட்ட நடவடிக்கைக்கான தயாரிப்புகளை உடனடியாகத் தொடங்கின. ஹீத்ரோ விமான நிலையத்தைக் கைப்பற்ற துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டதுடன், வில்சன் ஒரு சோவியத் உளவாளி என்று கூறி ஒரு தவறான பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. [1]

இலண்டன் மாநாட்டுக்கு வொல்ஃபோர்த்துடன் ஃபீல்ட்ஸ் பயணித்த அந்நேரத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) பலத்த கண்காணிப்பின் கீழ் இருந்தது. பிரிட்டனின் இரகசிய பொலிஸ் துறையின் விசாரணை மூலமாக வெளியிடப்பட்ட MI5 இனதும் பெருநகர பொலிஸினதும் அப்போதைய அறிக்கைகள், கட்சி அலுவலங்களில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததையும், WRP இன் நடவடிக்கைகளைக் குறித்து தெரியப்படுத்த கட்சி முழுவதும் பொலிஸ் உளவாளிகள் இருத்தப்பட்டு இருந்ததையும் காட்டுகின்றன.

1973, 1974 மற்றும் 1975 இல் தேசிய பொது ஒழுங்கு புலனாய்வுப் பிரிவின் சிறப்பு கண்காணிப்பு படையின் (Special Demonstration Squad) அறிக்கைகளில் WRP குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், கட்சி உறுப்பினர்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உள்விவகார பிரச்சினைகள், பிரச்சாரங்கள் மற்றும் முன்முயற்சி திட்டங்கள், அப்போதைய மற்ற பல கட்சி விவகாரங்கள் ஆகியவைக் குறித்து பல பொலிஸ் உளவாளிகள் விரிவான தகவல்களை வழங்கி வந்ததாகவும், பிற தகவல் வழங்குபவர்களிடம் இருந்து, வெளிப்படையாகவே WRP தலைமைப் பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்தும், அரசியல் குழுக் கூட்டங்களின் உள்ளடக்கத்தைப் பொலிஸ் பெற்று வந்ததாகவும் புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. [2]

“தொழிலாளர் புரட்சிக் கட்சியின் லிட்டில் இல்ஃபோர்ட் (Little Ilford) நகர கிளைச் செயலாளருக்கு நடக்கவிருந்த திருமணம் பற்றிய அறிக்கை,” “தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஹாக்னி (Hackney) கிளையின் ஹைபரி (Highbury) பிரிவின் கூட்டம் தொடர்பான அறிக்கை,” “தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இளம் சோசலிஸ்ட் பிரிவின் தேசிய பெண் ஒழுங்கமைப்பாளரின் கருத்தரிப்பு பற்றிய விபரங்கள் குறித்த அறிக்கை,” மற்றும் இன்னும் இதர பிற அறிக்கைகளும், சாமானியக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக பொலிஸ் அறிக்கைகள் கொண்டிருந்த தலைப்புக்குள்ளான சில உதாரணங்களாகும்.

இந்த நிலைமைகளின் கீழ், வொல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸூம் பிரிட்டனுக்குப் பயணித்து, சிஐஏ உடனான ஃபீல்ட்ஸின் தொடர்புகளை யாருக்கும் தெரிவிக்காமலேயே அனைத்துலகக் குழுவின் மாநாட்டில் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

1974 முழுவதும், வொல்ஃபோர்த்தின் ஆதரவுடன் ஃபீல்ட்ஸ், வேர்க்கர்ஸ் லீக்கில் ஒரு சீர்குலைக்கும் பாத்திரத்தை வகித்து வந்தார். அமைப்பில் தன்னை ஒரு திறமைசாலியாகக் காட்டிக் கொண்ட மிகவும் அகநிலைவாதியான ஃபீல்ட்ஸ், தேசிய செயலாளருடனான அவரின் தனிப்பட்ட தொடர்பின் காரணமாக வேகமாக அரசியல் தலைமைக்கு உயர்த்தப்பட்டார். அவரும் வொல்ஃபோர்த்தும் கட்சிப் பணத்தில் ஒரு பந்தயக் காரில் (sports car) நாடெங்கிலும் பயணித்து, கட்சி உறுப்பினர்களுக்கு கடுமையான உத்தரவுகளை வழங்கி, அவர்களை வெளியேற நிர்பந்தித்தனர். காரியளார்களை நோக்கிய அப்பெண்மணியின் மனோபாவத்தைக் குறித்து வேர்க்கர்ஸ் லீக்கின் ஓர் உறுப்பினர் கூறுகையில், “அவர் எங்களை நாய்களைப் போல நடத்தினார்” என்றார்.

கட்சி கடுமையான நெருக்கடியில் இருந்தது. 1973 இல் இருந்து 1974 நடுப்பகுதி வரை, தேசியக் குழு மற்றும் அரசியல் குழுவில் இருந்த பாதிப் பேர் உட்பட, 100 க்கும் அதிகமானவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறி இருந்ததை ஹீலியிடம் வொல்ஃபோர்த் ஒப்புக் கொண்டார்.

அவர் ஜூலை 19, 1974 இல் ஹீலிக்கு எழுதினார், “நிச்சயமாக, பல பகுதிகளில் மிக மிகச் சிலரால் மிகவும் சிறந்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும், நம் இயக்கம் இந்த நாட்களில் மிகவும் வெற்றுக்கூடாக ஆகி உள்ளது. புத்திஜீவிகளைப் பொறுத்த வரையில் ஏறக்குறைய ஒன்றுமில்லாமல் போய்விட்டோம். இது மிகப் பெரிய மோசமான விட்டோடல் ஆகும். இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை நான்சியோடு சேர்ந்து நான் செய்தாக வேண்டும்.”

ஆகஸ்ட் 30-31, 1974, வேர்க்கர்ஸ் லீக்கின் கோடைப் பள்ளி முகாம்

வேர்க்கர்ஸ் லீக்கின் நெருக்கடி மிகவும் தீவிரமாக அதிகரித்துடன், ஆகஸ்டில் நடத்தப்பட்ட வேர்க்கர்ஸ் லீக் கோடைப் பள்ளி முகாமில் அது வெடித்து வெளிப்பட்டது. அந்தப் பள்ளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், வேர்க்கர்ஸ் லீக் நெருக்கடி குறித்து கலந்துரையாட வொல்ஃபோர்த் இங்கிலாந்துக்குப் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். இதற்குள், ஃபீல்ட்ஸின் அதீத அகநிலையான மற்றும் விரோதமான அணுகுமுறை பற்றிய அறிக்கைகள் அனைத்துலகக் குழுவின் தலைமையை எட்டியிருந்தன.

ஆகஸ்ட் 18, 1974 இல் WRP அரசியல் குழு கூட்டத்தில், ஃபீல்ட்ஸ் வெகுவிரைவாக பதவிக்கு உயர்த்தப்பட்டதைக் குறித்து ஹீலி வொல்ஃபோர்த்திடம் கேட்டார். மேலும் மத்திய புலனாய்வு அமைப்புடன் (சிஐஏ) அப்பெண்மணிக்குத் தொடர்பு இருக்கலாம் என்று அவரைச் சந்தேகிக்க வொல்ஃபோர்த்திற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்றும் ஹீலி கேள்வி எழுப்பினார். அந்த வசந்த காலத்தில் அனைத்துலகக் குழுவின் ஐந்தாம் மாநாட்டில் அப்பெண்மணி கலந்து கொள்வதைக் குறிப்பிட்டு ஹீலி கவலையை வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் அவரின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால், ஃபீல்ட் அம்மாநாட்டில் கலந்து கொள்வது அரசியல்ரீதியில் ஏற்புடையதாக இருக்கவில்லை. அது COINTELPRO காலகட்டமாக இருந்ததுடன், FBI மற்றும் பிற உள்நாட்டு உளவு அமைப்புகளின் உளவாளிகள் அவர்கள் இலக்குவைத்த அமைப்புகளுக்குள் ஊடுருவி அவற்றை சீர்குலைப்பதற்கான பொறுப்பில் இருந்த நிலையில், அவர்கள் இடதுசாரி மற்றும் போர்-எதிர்ப்பு குழுக்களுக்குள் புகுந்திருந்தார்கள் என்பது பொதுவாகவே தெரிந்த விஷயமாக இருந்தது.

சிஐஏ உடன் ஃபீல்ட்ஸிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க அவருக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை என்று வொல்ஃபோர்த் பதிலளித்தார்.

ஆனால் அவருக்கு அத்தகைய தொடர்புகள் இருந்தன என்ற தகவல், இரண்டே வாரங்களுக்குள் அனைத்துலகக் குழுவுக்கு கிடைக்ககூடியதாக இருந்தது. அவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே, அவருடைய மாமா ஆல்பேர்ட் மோரீஸின் நிதியுதவியினால் வளர்க்கப்பட்டிருந்தார். மத்திய புலனாய்வு அமைப்பின் IBM கணினி பிரிவுக்குப் பொறுப்பாளராகவும், அதன் உயர்மட்ட நிர்வாகியாகவும் இருந்த மோரீஸின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற சிஐஏ இயக்குனர் ரிச்சார்ட் ஹெல்மிஸின் தனிப்பட்ட நெருங்கிய நண்பராவார், அங்கேதான் ஃபீல்ட்ஸ் வளர்ந்து வந்தார். [3]

துல்லியமாக இந்த நேரத்தில், 10,000 க்கும் அதிகமான சோசலிஸ்டுகள், இடதுசாரி செயல்பாட்டாளர்கள் மற்றும் போர்-எதிர்ப்பு நடவடிக்கையாளர்களுக்கு எதிரான ஒரு மிகப் பெரிய உள்நாட்டு உளவுத் திட்டத்தில் ஹெல்ம்ஸ் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டிருந்தார். நியூ யோர்க் டைம்ஸில் சீமோர் ஹெர்ஷின் டிசம்பர் 1974 அறிக்கையின்படி:

ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியிலும் மற்றும் ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின் ஆரம்பத்திலும் அதிருப்தியான அமெரிக்கர்களுக்கு எதிரான சிஐஏ இன் முயற்சியாகக் கூறப்பட்ட நடவடிக்கையின் பாகமாக, போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் மற்றும் பிற ஆர்ப்பாட்டங்களிலும் பங்கெடுப்பவர்களைப் பின்தொடரவும் புகைப்படம் எடுக்கவும் சிஐஏ அதன் முகவர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. உளவாளிகளின் ஒரு வலையமைப்பையும் அமைத்திருந்த சிஐஏ, போர்-எதிர்ப்பு குழுக்களுக்குள் ஊடுருவ அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. [4]

வேர்க்கர்ஸ் லீக்கின் கோடை கால முகாம் ஆகஸ்ட் மாத இறுதியில் கனடாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வொல்ஃபோர்த் நடைமுறையளவில் அதற்கான எந்தத் தயாரிப்பும் செய்திருக்கவில்லை என்பது விரைவிலேயே தெளிவானது. அந்த முகாம் தொடங்கியதில் இருந்தே அங்கே இருந்த கிளிஃவ் சுலோட்டர், இந்த நெருக்கடியைச் சமாளிக்க உடனடியாக அங்கே வருமாறு ஹீலிக்கு முறையிட்டார். வேர்க்கர்ஸ் லீக் உடைவின் விளிம்பில் இருந்தது. அந்தக் கோடைப் பள்ளியில், ஃபீல்ட்ஸ் சம்பந்தமான விவகாரத்தை எதிர்கொண்ட வொல்ஃபோர்த், சிஐஏ உடன் ஃபீல்ட்ஸ் குடும்பத்திற்கு தொடர்பிருந்ததைக் குறித்து அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும் அவை “முக்கியத்துவம் இல்லாதவை” என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

அவர் அதை அலட்சியப்படுத்தியதற்கும் கட்சிக்குள் உருவாகி வந்த நெருக்கடிக்கும் இடையிலான உறவு தெளிவாகிக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 31, 1974 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழு வொல்ஃபோர்த்தை தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கவும், ஃபீல்ட்ஸை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் வாக்களித்தது. ஃபீல்ட்ஸின் குடும்ப உறவுகள் தொடர்பாக விசாரிக்கும் ஒரு கட்டுப்பாட்டு விசாரணைக் குழுவின் விசாரணை முடிவும் நிலுவையில் இருந்தது. வொல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸும் ஆதரவாக வாக்களித்த நிலையில் ஏகமனதான அதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்த வேர்க்கர்ஸ் லீக் இரண்டு நபர்களை கொண்ட கட்டுப்பாட்டு விசாரணைக் குழுவை அமைத்த நிலையில், அந்த விசாரணையின் பாகமாக வொல்ஃபோர்த் மற்றும் ஃபீல்ட்ஸ் இரண்டு பேரையும் விசாரணை செய்ய அக்குழு திட்டமிட்டது.

நேர்காணல் செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரித்தும், சிஐஏ உடனான ஃபீல்ட்ஸின் தொடர்புகள் குறித்து எழுத்துபூர்வ விளக்கங்களை வழங்காமலும், அவர்கள் இருவருமே அடுத்தடுத்து எந்த விதத்திலும் அந்தக் கட்டுப்பாட்டு விசாரணைக் குழுவில் பங்கெடுக்க மறுத்தனர். ஒரு மாதம் கழித்து, செப்டம்பர் இறுதியில், இயக்கத்தில் இருந்து வொல்ஃபோர்த் வெளியேறினார். செப்டம்பர் 29, 1974 அவருடைய இராஜினாமா கடிதத்தில், அவர் திடீரென பின்வருமாறு அறிவித்தார்:

அனைத்துலகக் குழுவின் தோழர்களின் வேண்டுகோளின் பேரில் நமது ஆகஸ்ட் 31 முகாமில் நடத்தப்பட்ட மத்தியக் குழு கூட்டத்தின் நடைமுறைகள் மற்றும் தீர்மானங்களை நான் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் எதிர்க்கிறேன். இந்தக் கூட்டம், அமெரிக்காவில் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலும் மற்றும் உலகளவில் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலும் ஒரு கடுமையான பின்னடைவைப் பிரதிநிதித்துவம் செய்வதாக நான் கருதுகிறேன்.

வொல்ஃபோர்த் தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார்:

முற்றிலும் வெறித்தனமான நிலைமைகளின் கீழ் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், அரசியல் குழுவிலோ, மத்தியக் குழுவிலோ மற்றும் ஒட்டுமொத்தக் கட்சியிலோ அந்தப் பிரச்சினைகள் குறித்து முன்னதாக எந்த கலந்துரையாடலும் இல்லாமல், முற்றிலும் எந்த விவாதமும் நடத்தப்படாமல், ஒரு முகாமில் நள்ளிரவில், முற்றிலும் அவதூறு தன்மையிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நான் தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். [5]

ஃபீல்ட்ஸிற்கு சிஐஏ உடன் இருந்த தொடர்புகள் குறித்து அது வரையில் வொல்ஃபோர்த் மூடிமறைத்து வந்ததால், அந்த முகாமுக்கு முன்னதாக ஃபீல்ட்ஸ் குறித்து அங்கே முற்றிலும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்ற காரணத்தை வொல்ஃபோர்த் ஒப்புக் கொள்ளவில்லை. சிஐஏ உடனான அப்பெண்மணியின் தொடர்புகள் மீதான கவலைகளை, “ஆதாரமற்றவை, நகைப்புக்குரியவை மற்றும் அபத்தமானவை” என்று குறிப்பிட்ட அவர், “இந்த விவகாரத்தில் நடைமுறை மிகவும் கொடூரமாக இருப்பதாகவும், இதுபோன்றவொரு குற்றச்சாட்டைச் சுமத்தி ஒரு தோழரின் நன்மதிப்பை எப்போதைக்கும் சீர்செய்ய முடியாதளவுக்கு சேதப்படுத்தி இருப்பதாகவும்…” தெரிவித்தார். [6]

ஃபீல்ட்ஸ் மீதான எந்தவொரு விசாரணையும் “பழிசுமத்தலாகவும்” (inquisition) “சூனியவேட்டையாகவும்” (witch-hunt) இருக்கும் என்று அறிவித்த வொல்ஃபோர்த், பின்னர் கூறுகையில், “வேர்க்கர்ஸ் லீக்கில் உள்ள முகவர்களை அடையாளம் காணுவதற்கான இடம், இந்த அவதூறுக்கு ஆளானவர்கள் மத்தியில் இல்லை, லீக் தலைவர்களுக்கு எதிராக மோசடியைப் பரப்புபவர்கள் மத்தியில் உள்ளது என்று நான் பரிந்துரைக்கிறேன். ட்ரொட்ஸ்கியின் கீழ் நான்காம் அகிலத்தின் நாட்களிலும் இப்படித் தான் இருந்தது” என்றார். [7] நாம் மீளாய்வு செய்ய இருப்பதைப் போல, அவரது இந்த வாதம் 100 சதவீதம் தவறானதாகும்.

அனைத்துலகக் குழுவின் பிரதிபலிப்பும், விசாணைக் குழுவின் கண்டுபிடிப்புகளும்

அனைத்துலகக் குழுவின் சார்பாக எழுதிய கிளிஃவ் சுலோட்டர், அக்டோபர் 6, 1974 தேதியிட்ட கடிதத்தில் வொல்ஃபோர்த்துக்குப் பதிலளித்தார். வொல்ஃபோர்த்தின் இராஜினாமாக்கான காரணங்களை “நம் இயக்கத்தில் முற்றிலும் ஏற்றுக் கொள்ளவியலாதது. ஆகஸ்ட் 30 மற்றும் 31 இல் வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழு நடைமுறைகளை அவை முற்றிலுமாகத் தவறாக விளக்கமளிக்கிறது,” என சுலோட்டர் எழுதினார். [8]

கிளிஃவ் சுலோட்டர்

சுலோட்டர் விளக்கினார், “நீங்கள் உங்களின் சொந்த மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டீர்கள். … ஏப்ரல் 1974 இல் [மூலப்பிரதியில் உள்ளது] நடந்த அனைத்துலகக் குழு மாநாட்டில் நீங்கள் நடந்து கொண்ட விதம் தான், இந்தத் தீர்மானத்திற்கான காரணமாக இருந்தது. தோழர்கள் தலைமறைவாக செயலாற்றி வந்த நாடுகளில் இருந்தும் வந்து அதில் பங்குப்பற்றி இருந்த நிலையில், நான்சி ஃபீல்ட்ஸிற்கு சிஐஏ உடன் மிகவும் நெருக்கமான குடும்பத் தொடர்புகள் இருந்திருப்பதைக் குறித்து நீங்கள் அறிந்திருந்த போதும், உங்கள் பிரதிநிதி குழுவில் ஒருவராக அவரை முன்நிறுத்தி, மாநாடு அதன் வேலைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் அனுமதித்தீர்கள். இந்தப் பிரச்சினையை விசாரித்து தெளிவுபடுத்துவதற்கு, நீங்களோ அவரோ இந்தப் பிரச்சினையைக் குழுவுக்கு முன்னால் கொண்டு வரவில்லை.” [9]

அந்த விசாரணைக் குழு ஃபீல்ட்ஸிற்கு எதிரான ஆதாரத்தைத் “தோண்டி எடுப்பதற்காக” அமைக்கப்பட்ட ஒரு “பழிவாங்கும் அமைப்பு” என்ற அவர் வாதத்தை வொல்ஃபோர்த் திரும்பப் பெற வேண்டுமென சுலோட்டர் கோரினார். “அனைத்துலகக் குழுவின் தலையீட்டின் காரணமாக மட்டுமே” நான்சி ஃபீல்ட்ஸை இடைநீக்கம் செய்ய வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழு வாக்களித்தது என்ற இரண்டாவது புகாருக்காகவும் அவர் வொல்ஃபோர்த்தைக் கவனத்திற்கு எடுத்தார்.

அவர் எழுதினார்:

கனனினதும் ஹான்சனினதும் சர்வதேசியவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு எதிராகவும், பின்னர் ரோபர்ட்சனுக்கு எதிராகவும் போராடிய ஒரு தோழராக, நீங்கள் இந்த வார்த்தையை மீண்டும் வாசிக்கும் போது நிச்சயமாக நீங்களே அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும். …இந்த முறையீட்டை வைத்து பார்த்தால், நீங்களே உங்களின் சொந்த கடந்தகாலப் போராட்டங்களை மறுக்கிறீர்கள் என்பதோடு, இயக்கத்தைச் சுற்றி உள்ள மிக மோசமான பிரிவினருக்கு அழைப்புவிடுகின்றீர்கள். அதுவும் குறிப்பாக இயக்கத்தைத் தாக்கி அழிக்க காத்திருக்கும் விரோதக் குழுக்களுக்கு அழைப்புவிடுகின்றீர்கள். ஒவ்வொரு படுமோசமான குட்டி-முதலாளித்துவ திருத்தல்வாதியும் அனைத்துலகக் குழுவின் கூறப்படும் எதேச்சதிகாரத்தின் மீது தாக்குதலைக் குவித்து தனது தேசிய சுயாதீனத்தைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். [10]

இந்தக் கடைசி நேரத்தில், தோழர் வொல்ஃபோர்த், உங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இன்னும் நேரம் கடந்து விடவில்லை. நீங்கள் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலகக் குழுவின் தலைமைப் பொறுப்புகளை மீண்டும் உடனடியாக ஏற்கவும், இந்த விசாரணைப் பணிக்கு ஒத்துழைக்குமாறும் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். … இந்த வழியில் மட்டுமே தலைமைத்துவத்தில் உங்கள் பொறுப்புக்களை மீண்டும் தொடர நீங்கள் தயாராக முடியும். [11]

நவம்பர் 9 இல், அந்த விசாரணைக் குழு அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. வொல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸூம் “அனுமதிக்க முடியாத ஒரு நிலைப்பாடாக, கட்சியின் தீர்மானங்களை விட அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து, இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர்,” என்று அந்த அறிக்கை விவரித்தது.

ரிம் வொல்ஃபோர்த் “அனைத்துலகக் குழுவுக்கும் மற்றும் அதன் 1974 மாநாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமான தகவல்களை மறைத்திருந்தார்,” என்று அந்த விசாரணைக் குழு முடிவு செய்தது. 22 உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்டிருந்ததாக விளக்கமளித்த அது, அதன் அடிப்படையில் பின்வருமாறு விவரித்தது:

12 வயதில் இருந்து பல்கலைக்கழக கல்வி முடிக்கும் வரை, நான்சி ஃபீல்ட்ஸை அவருடைய அத்தையும் மாமாவும் ஆன ஆல்பேர்ட் மற்றும் கிக்ஸ் மோரீஸ், வளர்த்து, படிக்க வைத்து, நிதியுதவிகள் செய்து வந்தனர் என்பது இந்த விசாரணையில் நிறுவப்பட்டது. ஆல்பேர்ட் மோரீஸ் வாஷிங்டனில் உள்ள சிஐஏ இன் IBM கணினி செயல்பாட்டுத் துறை தலைவராகவும், IBM இல் ஒரு மிகப் பெரிய பங்குதாரராகவும் உள்ளார். சிஐஏ இன் முன்னோடி அமைப்பான OSS இன் உறுப்பினராகவும் இருந்த அவர், போலாந்தில் ஏகாதிபத்தியத்தின் ஓர் உளவாளியாக பணியாற்றினார். 1960 களின் போது, சிஐஏ இன் முன்னாள் இயக்குனரும் இப்போது ஈரானுக்கான அமெரிக்க தூதராகவும் உள்ள ரிச்சார்ட் ஹெல்ம்ஸ், மைன் நகரில் (Maine) உள்ள அவர்களது வீட்டிற்கு விருந்தாளியாக அடிக்கடி வந்து சென்றிருந்தார். [12]

நான்சி ஃபீல்ட்ஸ்

நான்சி ஃபீல்ட்ஸைக் குறித்து, அந்த விசாரணைக் குழு பின்வருமாறு விவரித்தது:

கட்சியில் நான்சி ஃபீல்ட்ஸின் முன்வரலாறு, நடுத்தர வர்க்க தீவிரக் கொள்கைவாதத்தின் சந்தர்ப்பவாத அணுகுமுறையில் இருந்து ஒருபோதும் முறித்துக் கொள்ளாத, பெரிதும் ஸ்திரமற்ற ஒரு நபராக இருந்ததைக் கண்டோம். அரசியல் பிரச்சினைகளைக் கையாள்வதில் அவர் நிர்வாக அணுகுமுறை மற்றும் முற்றிலும் அகநிலையான அணுகுமுறைகளை ஏற்றிருந்தார். இந்த அணுகுமுறைகள், முக்கியமாக தலைமையைக் கட்டியெழுப்பும் மிகவும் தீர்க்கமான பகுதியில் முற்றிலும் அழிவுகரமாக இருந்தன. இந்த உறுதியற்ற தன்மையை ரிம் வொல்ஃபோர்த் முழுமையாக அறிந்திருந்தார் என்பதோடு, நான்சி ஃபீல்ட்ஸைத் தலைமைக்குக் கொண்டு வந்ததிலும் பொறுப்பாகிறார். இறுதியில் நான்சி ஃபீல்ட்ஸிற்கு முன்னதாக சிஐஏ உடன் தொடர்புகள் இருந்தன என்பதைத் அவர் அனைத்துலகக் குழுவிடம் இருந்து மறைத்தபோது ரிம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் விடப்பட்டதாக கண்டார். தெளிவாக இதற்கு அவரே அரசியல் பொறுப்பாகிறார். [13]

பின்னர் அந்த விசாரணைக் குழு பின்வருமாறு குறிப்பிட்டது:

நேர்காணல் செய்து மற்றும் கிடைத்த அனைத்து ஆவணங்களையும் விசாரித்த பின்னர், நான்சி ஃபீல்ட்ஸூம் ரிம் வொல்ஃபோர்த்தும் எந்த விதத்திலும் சிஐஏ இன் வேலைகளோடோ அல்லது வேறு எந்த அரசு முகமைகளின் வேலைகளோடோ தொடர்புபட்டிருந்தார்கள் என்பதைக் கூறுவதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை. கட்சிக்காகவும் அனைத்துலகக் குழுவுக்காகவும், அதுவும் பெரும்பாலும் மிகவும் கடினமான நிலைமைகளின் கீழ், ரிம் வொல்ஃபோர்த் பல ஆண்டுகள் போராடி இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவரின் தனிநபர்வாத மற்றும் நடைமுறைவாத தவறுகளைத் திருத்திக் கொண்டு, கட்சிக்கு மீண்டும் திரும்புமாறு அவரை இந்த விசாரணை வலியுறுத்துகிறது.

வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து ரிம் வொல்ஃபோர்த் அவரது இராஜினாமாவைத் திரும்பப் பெற்றதும், அவர் முன்னணி குழுக்களுக்கும் மற்றும் புல்லட்டின் பத்திரிகையின் அவரது பணிகளுக்கும் திரும்புமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம், மேலும் 1975 இன் தொடக்கத்தில் வரவிருக்கும் தேசிய மாநாட்டில், தேசிய செயலாளர் பதவி உட்பட எந்தப் பதவிக்கும் போட்டியிட அவருக்கு உரிமை உள்ளது.

நான்சி ஃபீல்ட் இரண்டு ஆண்டுகளுக்கு வேர்க்கர்ஸ் லீக்கின் எந்தப் பதவியிலும் இருக்க அனுமதிக்கமுடியாது என்ற நிபந்தனையோடு, அவரின் இடைநீக்கத்தை உடனடியாக நீக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். [14]

அந்த விசாரணைக் குழு பின்வருமாறு முடிவு செய்தது:

பாதுகாப்பு விஷயங்களில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை, இந்த விசாரணை அவசரமாக எல்லா பிரிவுகளின் கவனத்திற்கும் கொண்டு வருகிறது. உலக முதலாளித்துவ நெருக்கடியால் முன்னெப்போதும் இல்லாதளவில் வர்க்கப் போராட்டங்கள் வெடிக்க இருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் நம் இயக்கம் வளர்வதற்கான மிகப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு எதிராக சிஐஏ மற்றும் எல்லா ஏகாதிபத்திய முகமைகளின் எதிர்புரட்சிகர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் இந்த சூழ்நிலை அர்த்தப்படுத்துகிறது. புரட்சிகரக் கட்சிகளை கட்டியெழுப்புவதற்காக பெருந்திரளான மக்களை நோக்கி திரும்புவதன் பாகமாக, இத்தகைய பாதுகாப்பு விஷயங்களில் தொடர்ந்து விரிவாக கவனம் செலுத்துவதும் ஓர் அடிப்படை புரட்சிகரக் கடமையாகும். [15]

இவ்விசாரணை பற்றிய திருத்தல்வாத மற்றும் பப்லோவாத அமைப்புகளின் பதிலைப் பற்றி பேசுவதற்கு முன்னர், கட்டுப்பாட்டு விசாரணைக் குழுவைக் குறித்தே ஒரு சில விபரங்களைக் கூறுவது முதலில் அவசியமாகிறது. “விஷமத்தனத்திற்காக” வேர்க்கர்ஸ் லீக்கின் மீதானதும் மற்றும் அனைத்துலகக் குழுவின் மீதான எல்லா தாக்குதல்களையும் பொறுத்த வரையில், கட்டுப்பாட்டு விசாரணைக் குழு பொறுப்பாகவும், எந்தவித பதட்டமும் இல்லாமலும் அதன் வேலைகளைச் செய்திருந்தது. ட்ரொட்ஸ்கி படுகொலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் SWP அமைத்த கட்டுப்பாட்டு விசாரணைகளைப் போலில்லாமல், இது உண்மையை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தது. இது வொல்ஃபோர்த் மற்றும் ஃபீல்ட்ஸ் இருவரும் விசாரணையில் பங்கேற்கவும், விசாரணை முடிந்த பின்னர் இயக்கத்தில் மீண்டும் இணையவும் வாய்ப்பு வழங்கியது. எதிர்வரும் காலத்தில் வொல்ஃபோர்த் தேசிய செயலாளர் பதவிக்கும் போட்டியிடலாம் என்றும் கூட குறிப்பிட்டு, தலைமைப் பதவிகளைப் பெறுவதில் இருந்து இது அவரைத் தடுக்கவில்லை. தலைமைப் பதவியைப் பெறுவதில் இருந்து ஃபீல்ட்ஸ் இரண்டு ஆண்டுகளுக்கு தடுக்கப்பட்டார், என்றாலும் தொடர்ந்து பணியாற்ற அவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. வேர்க்கர்ஸ் லீக் அவர்களை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கவில்லை, அவர்கள் தாமாகவே வெளியேறினார்கள்.

இது எதுவுமே திருத்தல்வாத குழுக்களுக்கு முக்கியமாகப் படவில்லை, அவை கட்சியை இழிவுபடுத்தி அழிக்கும் நோக்கில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக, அனைத்துலகக் குழு மற்றும் வேர்க்கர்ஸ் லீக் மீதான வொல்ஃபோர்த் மற்றும் ஃபீல்ட்ஸின் தாக்குதலைப் பயன்படுத்தின. ஒரு சில மாதங்களுக்குள், 1964 இல் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை நிறுவ உதவிய வேர்க்கர்ஸ் லீக்கின் அந்த தேசிய செயலாளர், ஏறக்குறைய ஒரே இரவில் மீண்டும் பப்லோவாத இயக்கத்தில் இணைவதாக அறிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் அவரும் ஃபீல்ட்ஸூம் இருவரும் வெளிப்படுத்திய அகநிலைவாதத்தின் ஆழம், இந்த இயக்கத்திற்கு ஒரு கசப்பான பாடமாக உள்ளது. தொழிலாள வர்க்க நலன்களை விட தனிப்பட்ட நலன்களை மேலுயர்த்துவதன் அடிப்படையிலான அரசியல் அகநிலைவாதம், புரட்சிகர சோசலிச அரசியலுடன் முற்றிலும் பொருந்தாது. அத்தகைய ஓர் அணுகுமுறையை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. நம்முடைய கட்சி, பிழைப்புவாதிகளுக்கும், சுய-தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களுக்குமான கட்சி அல்ல. இவர்கள் தனிப்பட்ட உறவுகளை பயன்படுத்தி குழுக்களை உருவாக்குகின்றார்கள், இதைத் தான் ட்ரொட்ஸ்கி “உனக்கு நான், எனக்கு நீ, சகவாச வட்டம்” என்று வகைப்படுத்தினார். சாக்ட்மன், அபெர்ன் மற்றும் பேர்ன்ஹாம் ஆகியோர் உடனான 1939-40 உடைவைக் குறித்து ஜேம்ஸ் பி. கனன், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சிக்கான போராட்டம் என்பதில் எழுதுகையில் அவர் பின்வருமாறு எழுதினார்:

ஜேம்ஸ் பி. கனன்

தொழிலாளர் இயக்கத்தில் பங்கேற்காமல், அதற்கு கற்பிக்கவும் வழிகாட்டவும் விரும்பும் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவி, அதனுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்வதுடன், எப்போதும் அதற்கு எதிராக முழுவதும் “புகார்களை” கூறுகிறார். அவரது கால் விரல்கள் மிதிக்கப்படும் தருணத்திலோ, அல்லது அவர் நிராகரிக்கப்படும் தருணத்திலோ, அவர் முழுமையாக இயக்கத்தின் நலன்களை மறந்து விட்டு, அவரது உணர்வுகள் காயப்படுத்தப்பட்டது என்பதை மட்டுமே நினைவில் கொள்கிறார்; புரட்சி முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் ஒரு குட்டி-முதலாளித்துவ புத்திஜீவியின் காயப்படுத்தப்பட்ட தனிப்பட்ட உணர்வு அவருக்கு மிகவும் முக்கியமாகி விடுகிறது. [16]

வேர்க்கர்ஸ் லீக்கை வொல்ஃபோர்த் கைவிட்டதற்கு சோசலிசத் தொழிலாளர் கட்சி பதிலளிக்கிறது

வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து வெளியேறுவதென்ற வொல்ஃபோர்த்தின் முடிவை, பிப்ரவரி, மார்ச் 1975 இல் ஜோசப் ஹான்சன் பாராட்டியதுடன், SWP இன் வாராந்தர பத்திரிகையான Intercontinental Press, வொல்ஃபோர்த் வழங்கிய இயக்கத்தின் மீதான கண்டனங்களைப் பிரசுரித்தது.

கட்சி மீதான வொல்ஃபோர்த்தின் தாக்குதல்களுக்கு வேர்க்கர்ஸ் லீக் மார்ச் 22, 1975 இல் பதிலளித்தது. அது எழுதியது:

சிஐஏ என்பது நம் இயக்கத்திற்கு ஒரு தற்செயலான கேள்வி அல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளில் இருந்து வரும் தவிர்க்கவியலாத பணிகளைப் பற்றிய ஒரு கேள்வியாகும். சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதை ஏறக்குறைய முற்றிலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தவறும் ஒருவரால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப் புரட்சிகரத் திட்டங்களின் சர்வதேச மையமான சிஐஏ க்கு எதிரான பாதுகாப்பு பற்றிய கேள்வியை நிராகரிக்க முடியும். [17]

ஜோசப் ஹன்சன்

மார்ச் 31, 1975 இல், ஜோசப் ஹான்சன் அனைத்துலகக் குழு மீதான அவரின் இழிந்த கண்டனங்களையும், 14 ஆண்டுகளாக அவரின் அரசியல் எதிர்ப்பாளராக இருந்தவரும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் SWP இல் இருந்து யாரை வெளியேற்றுவதற்கு உதவியிருந்தாரோ அதே வொல்ஃபோர்த்துக்கான அவரின் பாதுகாப்பையும் வெளியிட்டார். வொல்ஃபோர்த்தின் “நேர்மை மறுக்க முடியாதது என்பதோடு, ஒருவர் அவரின் அடுத்த முயற்சிக்கு நல்ல அதிர்ஷ்டத்தை மட்டுமே விரும்ப முடியும்,” என்று ஹான்சன் எழுதினார். ஜெர்ரி ஹீலியைத் தாக்கி ஹான்சன் பின்வருமாறு எழுதினார்:

வொல்ஃபோர்த் ஹீலியின் செயல்பாட்டை “பைத்தியக்காரத்தனம்” என்று விவரிக்கிறார். அனேகமாக மிகத் துல்லியமாக, “சித்தப்பிரமை” (paranoia) போன்ற நவீன வார்த்தையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாக இருக்கும் அல்லவா?

இந்த வார்த்தை சரியாகப் பொருந்துகிறது என்றால், சிஐஏ முகவர்கள், பொலிஸ் முகவர்கள் மற்றும் அவரைக் கொல்வதற்கான சதிகள், அத்துடன் அவருடைய சீற்றங்கள், “அதீத பிற்போக்குத்தனங்கள்,” மற்றும் விசித்திரமான இயங்கியல் விளக்கங்கள் குறித்த ஹீலியின் ஆவேசங்களுக்கான உண்மையான விளக்கத்தை, அவருடைய அரசியலில் இருந்தோ, மெய்யியல் அணுகுமுறையில் இருந்தோ, பப்லோ அல்லது கனன் போன்ற முன்மாதிரி நபர்களிடம் இருந்தோ அல்ல, மாறாக மூளையின் செயற்பாடுகள் குறித்து சிறப்பாக புரிந்து வைத்துள்ள மனநல மருத்துவர்களினாலேயே புரிந்து கொள்ளலாம். [18]

இந்த அறிக்கையும், பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துலகக் குழு மீதான ஒருங்கிணைந்த தாக்குதலும், ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன என்பதை அனைத்துலகக் குழு உடனடியாகப் புரிந்து கொண்டது. கொயோகானில் ஜோசப் ஹான்சன் தான் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 20, 1940 படுகொலை சம்பவத்தின் போது அவர் அங்கே இருந்தார், ஸ்ராலினின் ஜிபியு (GPU) அமெரிக்காவில் SWP இனுள்ளும், ட்ரொட்ஸ்கியின் வளாகத்திற்குள்ளும் ஊடுருவியதன் விளைவாக அது நடத்தப்பட்டது. 1975 இல், பாரிஸில் லெவ் செடோவின் வலது கையாக விளங்கிய மார்க் ஸ்பொரோவ்ஸ்கி (Mark Zborowski), இயக்கத்திற்குள் ஊடுருவி ட்ரொட்ஸ்கி மற்றும் செடோவ் படுகொலைகளில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார் என்பதும், ஜிபியு விலிருந்து விட்டுவிலகிய இக்னாஸ் றைஸ் (Ignatz Reiss), எர்வின் வொல்ஃப் (Erwin Wolf) மற்றும் நான்காம் அகிலத்தின் செயலாளர் ருடோல்ப் கிளெமென்ட் (Rudolph Klement) ஆகியோரினது கொலைகளிலும் கூட முக்கிய பாத்திரம் வகித்திருந்தார் என்பதும் பொதுவாகவே அனைவரும் அறிந்த விஷயமாகும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மோசமாக சீர்குலைந்திருந்த அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த எந்தவொரு புரட்சியாளரும், பாதுகாப்பு குறித்த கவலைகளை “சித்தபிரமை” என்று குறிப்பிடமாட்டார். புரட்சிகர இயக்கத்தை நோக்குநிலைப் பிறழச் செய்து, அனைத்துலகக் குழுவுக்குள் வன்முறையான விரோதச் சூழலை உருவாக்குவதற்காக, ஹான்சனின் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்பதை அனைத்துலகக் குழு புரிந்து கொண்டது.

அனைத்துலகக் குழு ஹான்சனுக்குப் பதிலளிக்கிறது, ஏப்ரல் 1975

அனைத்துலகக் குழு ஏப்ரல் 1975 இல் பிரசுரித்த ஓர் அறிக்கையில் ஹான்சனுக்குப் பதிலளித்தது.

ஒரு புரட்சிகரக் கட்சி என்றால் என்ன என்பதன் மிக அத்தியாவசியமான சாராம்சத்தை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது:

பாதுகாப்பு என்பது அருவமான அல்லது இரண்டாம்பட்சமான கேள்வி அல்ல. தனது சொந்த அணியை புரட்சிகர ஒழுக்கத்தின் மீது கட்டமைக்காத ஒரு கட்சி, முதலாளித்துவ அரசு எந்திரத்தை எதிர்கொள்வதற்கும், அதைத் தூக்கியெறிவதற்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுக்காகக் கட்டளையிட முடியாது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது, வேர்க்கர்ஸ் லீக்கின் மீதும் அனைத்துலகக் குழுவின் மீதுமான ஹான்சனின் தாக்குதல், “ட்ரொட்ஸ்கிச வரலாற்றின் முக்கிய பக்கங்களை மீண்டும் திறக்க நமக்கு உதவுகிறது.”

அது குறிப்பிட்டது: “நம் இயக்கம் அதன் அணிகளில் பாதுகாப்பு பயற்சிகளைப் புறக்கணித்து உதாசீனப்படுத்திய போது, கடந்த காலத்தில் அது பயங்கரமான விலை கொடுத்துள்ளதால், இந்த வரலாற்றை அதன் வடுக்களுடனும் மற்றும் முற்றாக முன்வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.”

அனைத்துலகக் குழு “திருத்தல்வாதிகளின் கூச்சல்களுக்கும் அலறல்களுக்கும் பயப்படப் போவதில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அவர்கள் மூச்சுமுட்ட நம்மை “குறுங்குழுவாதிகள்” என்றும் “சித்தப்பிரமை பிடித்தவர்கள்” என்றும் கூறலாம். உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் இந்த அடைமொழிப் பெயர்களை பயன்படுத்துவதன் மூலம், கொள்கைகளுக்கான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தையும், நம் அணிகளில் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு மீது அது கவனம் செலுத்துவதையும் அவர்கள் தாக்குகிறார்கள். நாம் ஹான்சனின் சர்வதேச குழுவாக்கத்தினது பிரத்தியேக அடையாளமான நடுத்தர வர்க்க ஊர்சுற்றிகளுக்கும் சாகச விரும்பிகளுக்குமான சூதாட்டக் கூடத்தைக் கட்டவில்லை. அத்தகைய பாதை மத்திய புலனாய்வு அமைப்பையும் (CIA) பொலிஸ் ஊடுருவலையும் வெளிப்படையாக வரவேற்பதாக இருக்கும், ஏனென்றால் துல்லியமாக இது போன்ற கூறுபாடுகள் மத்தியில் தான் பொலிஸ் முகமைகள் மிகவும் சுலபமாகச் செயல்படுகின்றன. பாதுகாப்பு விவகாரம் சம்பந்தமான கேள்வியை ஹான்சன் மறைக்க விரும்புகிறார்; நாம் நம்முடைய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் பயிற்சி அளிப்பதிலும் அதை பாதுகாக்க விரும்புகிறோம். ஆகவே தான் வொல்ஃபோர்த்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதன் பின்னணியை விளக்கவும், மற்றும் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மீண்டும் அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை விளக்கவும் ட்ரொட்ஸ்கிச வரலாற்றின் பக்கங்களை மீண்டும் திறக்க வேண்டியது அவசியமென்று நாம் உணர்கிறோம். [19]

இந்த வரலாற்றுப் பக்கங்களை மீண்டும் திறக்க, முதலும் முக்கியமுமாக, ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்கு வழிவகுத்த சம்பவங்களை எடுத்துரைப்பது அவசியமாகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை

லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை 20 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திய அரசியல் படுகொலையாகும். அது பல ஆண்டுகளாக பல கண்டங்கள் சம்பந்தப்பட்ட ஜிபியு சதியின் உச்சபட்ச குற்றமாக இருந்தது, எண்ணற்ற முகவர்களும் எண்ணற்ற ஆதார நபர்களும் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். அது பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச எதிர்புரட்சிகர தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடாக இருந்தது.

இது பெரும் பயங்கரத்தின் (Great Terror) விளைபொருளாக இருந்தது, அந்த முன்கூட்டிசெய்யப்பட்ட உள்நாட்டு போரின் மூலமாக ஸ்ராலினும் அதிகாரத்துவ சாதியும், பல தலைமுறை சோசலிசவாதிகளையும் மற்றும் முன்னணி பிரமுகர்களையும் புத்திஜீவித, விஞ்ஞானபூர்வ மற்றும் கலாச்சார வாழ்வில் இருந்து இல்லாதொழித்து விட்டனர். அந்த ஆட்சிக்கு எதிரான நூறாயிரக் கணக்கான எதிர்ப்பாளர்களும் இடது எதிர்ப்பின் அனுதாபிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட பழைய போல்ஷிவிக்குகள் அனைவரும் உள்ளடங்கலாக, சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர். செம்படையின் தலைவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் கொல்லப்பட்டனர். ஸ்ராலினிஸ்டுகள் ஸ்பெயினில் புரட்சியைத் மூச்சுத்திணறச் செய்து பிராங்கோ அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்த நிலையில், அங்கே புரட்சியாளர்கள் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். ஜிபியு இன் தலைமையகமான லூபியன்காவின் (Lubianka) ஒட்டுமொத்த பிரிவும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையைத் திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டது. அந்த பெரும் பயங்கரத்தின் கலாச்சார மற்றும் அரசியல் பாதிப்பு இன்று வரையில் உணரப்படுகிறது.

1975 இல் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு வெறும் 35 ஆண்டுகளே ஆகி இருந்தன. லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை: ஸ்ராலினின் குற்றத்திற்கான ஆதாரங்கள் என்ற ட்ரொட்ஸ்கிச வழக்குரைஞர் ஆல்பேர்ட் கோல்ட்மனின் பிரசு ரத்தை, ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் SWP பிரசுரித்திருந்தாலும், ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொன்றது என்பது பற்றி 1975 காலப்பகுதியில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

அந்தக் கொலையாளி கைது செய்யப்பட்ட போது, ஃபிராங்க் ஜாக்சன் என்ற பெயரை அவர் பயன்படுத்தினார். ரமோன் மெர்காடர் என்ற அவருடைய உண்மையான பெயர், இறுதியில் மெக்சிகன் குற்ற விசாரணை நிபுணர் அல்ஃபொன்ஸோ கிய்ரோஸ் குவாரோனின் (Alfonzo Quiroz Cuaron) ஆய்வுகள் மூலமாக 1950 இல் தான் பகிரங்கப்படுத்தப்பட்டது. பின்னர் தொடங்கப்பட இருந்த அனைத்துலகக் குழு விசாரணையின் பாகமாக அல்ஃபொன்ஸோவை டேவிட் நோர்த் பேட்டி கண்டார்.

கோல்ட்மனின் பிரசுரத்திற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கியின் படுகொலையைச் சுற்றி இருந்த உண்மைகளை வெளிக் கொணர வெகு சில முயற்சிகளே செய்யப்பட்டிருந்தன, ஏனென்றால் மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்த கட்சியான அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) பெரிதும் அதில் முக்கிய பாத்திரம் வகித்திருந்தது. அதன் விளைவாக, மார்க் ஸ்பொரோவ்ஸ்கி (Mark Zborowski) மற்றும் சில்வியா காலன் (Sylvia Callen) போன்ற நபர்கள் பல ஆண்டுகளாக இயக்கத்தினுள் செயல்பட்டு வந்ததுடன், ஜேம்ஸ் பி கனனின் மேசைக்கு வந்த ஒவ்வொரு தகவலையும் ஜிபியு க்கு அனுப்பி வந்தனர். சில்வியா காலனும் பின்னர் சில்வியா அகலோஃப் (Sylvia Ageloff) அரசியலில் இருந்து விலகி, வெகு காலம் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.

அனைத்துலகக் குழுவின் ஆறாம் மாநாடு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையைத் தொடங்க வாக்களிக்கிறது. அனைத்துலகக் குழு ஐக்கிய செயலகத்துடன் இணை ஆணையத்தை அமைக்க முன்மொழிகிறது

மே 1975 இறுதியில் நடந்த அனைத்துலகக் குழுவின் ஆறாம் மாநாட்டில், அனைத்துலகக் குழு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையைத் தொடங்கியது. மே 29 இல், மாநாடு ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் உடனடியாக, தொழிலாளர் இயக்கத்தில் அரசு ஊடுருவுலைக் குறித்து விசாரிப்பதற்காக ஒரு இணை கட்டுப்பாட்டு ஆணையத்தை அமைப்பதைக் குறித்து பப்லோவாத ஐக்கிய செயலகத்திற்கு முன்மொழிந்து, கிளிஃவ் சுலோட்டர் ஹான்சனுக்குக் கடிதம் எழுதினார். SWP இந்த பப்லோவாத ஐக்கிய செயலகத்துடன் இணைந்திருந்தது. இந்த முன்மொழிவு, பப்லோவாதிகளுக்கும் அனைத்துலகக் குழுவுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளைப் பூசிமொழுகும் நிலைப்பாட்டில் இருந்து முன்வைக்கப்படவில்லை, அது மறுஐக்கியத்திற்கான ஒரு படியாகவும் இருக்கவில்லை. மாறாக, குறிப்பாக அரசு கண்காணிப்பு குறித்த அண்மைய வெளிப்படுத்தல்களின் வெளிச்சத்தில், எந்தவொரு சோசலிசவாதியும் விசாரணைக்கு அவசியமான விவகாரமாக அங்கீகரிக்கக் கூடிய பிரச்சினைகளான கட்சி வரலாறு மற்றும் கட்சி பாதுகாப்பு மீதான விசாரணைக் கேள்விகள் என்ற பொதுவான அடித்தளத்தில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஜூன் 5, 1975 கடிதத்தில் ஹான்சன் உடனடியாக இந்த முன்மொழிவை நிராகரித்தார். இது அவரது வேலையின் சிடுமூஞ்சித்தனத்தை எடுத்துக்காட்டியது. இணை ஆணையத்தை முன்மொழிந்த அந்தக் கடிதத்தில் சுலோட்டர் இணைத்திருந்த கையெழுத்தை ஹான்சன் ஏளனம் செய்து, சுலோட்டரே ஒரு முகவர் என்பதை அது சுட்டிக் காட்டுவதாக எள்ளி நகையாடினார்.

ஹான்சன் எழுதினார், “இது போன்ற விஷயங்களில் உங்கள் மத்திய குழுவின் நிபுணத்துவத்தைப் பார்க்கையில், இது போன்ற முக்கியத்துவமற்ற தடயங்கள் கிடைத்ததும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அது ஆமோதிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிஐஏ அல்லது பொலிஸால் அமைப்புக்குள் விதைக்கப்பட்ட ஓர் உளவாளியை அடையாளம் காண அவை வழிவகுக்கலாம். … எழுதியவரே பொலிஸ் உளவாளி என்று கண்டறியவும் அனேகமாக இது உங்களுக்கு உதவக்கூடும்.” [20]

இதே போன்ற ஒரு அனுமானத்தை முன்வைத்து, வொல்ஃபோர்த் அவருடைய செப்டம்பர் 29, 1974 அறிக்கையை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள், ஆகஸ்ட்-செப்டம்பர் 1975

அனைத்துலகக் குழு, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளை, 1975 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், தொடர்ச்சியாக 19 கட்டுரைகளாக WRP இன் பிரசுரமான வேர்க்கர்ஸ் பிரஸில் வெளியிட்டது.

இதற்கிடையே ஜிபியு முகவர்களின் பங்கை எப்படி SWP திட்டமிட்டு மூடிமறைத்தது என்பதை அந்தக் கண்டுபிடிப்புகள் ஆவணப்படுத்தின. ட்ரொட்ஸ்கி இறந்து சில நாட்களுக்குப் பின்னர் இருந்து ஜோசப் ஹான்சன் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் FBI உடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார் என்பதைக் காட்டும், தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவணங்களை வெளியிட்டதும் அதில் உள்ளடங்கும்.

அமெரிக்க அரசாங்கத்துடனான ஹான்சனின் சந்திப்புகள் தொடர்பாகப் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை பிரசுரித்த அனைத்து ஆவணங்களையும் இங்கே நாம் சுருக்கமாக மட்டுமே தொகுத்தளிக்க முடியும். ஹான்சனின் அந்த சந்திப்புகள், FBI இயக்குனர் ஜே. எட்கார் ஹூவர் (J. Edgar Hoover) உட்பட அரசின் உயர் மட்ட அதிகாரிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. ஜோர்ஜ் பி. ஷா, ரோபர்ட் மக்கிரேக்கர் மற்றும் பி.ஈ. சாக்கெட் போன்ற முன்னணி நபர்கள் ஹான்சனின் தொடர்பு பட்டியலில் இருந்தனர்.

ஹான்சன் அவரின் முதல் சந்திப்பின் போது, ட்ரொட்ஸ்கியின் படுகொலை தொடர்பான தகவல்களை அரசுக்கு வழங்கினார். 1938 இல் ஸ்ராலினின் இரகசிய பொலிஸ் முகவர்கள் தன்னைச் சந்தித்ததாக ஹான்சன் அமெரிக்க அரசுக்கு அந்நேரத்தில் தெரிவித்தார். “ஜிபியு இன் ஒரு முகவர் அவரை அணுகியதாகவும், நான்காம் அகிலத்தை விட்டு வெளியேறி மூன்றாவது அகிலத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டதாகவும்” ஹான்சன் கூறியதாக ஆகஸ்ட் 31, 1940 சந்திப்பைக் குறித்த மக்கிரேக்கரின் அறிக்கை குறிப்பிடுகிறது. நியூ யோர்க்கில் ஜிபியு உளவுப்பிரிவு தலைவர் “ஜோன்” என்கின்ற டாக்டர். கிரிகொரி ரபினொவிட்ச் என்ற ஜிபியு கையாளை ஹான்சன் சந்தித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. [21]

மெக்சிகோ கோயொகானில் ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் மனைவியுடன் ஜோசப் ஹான்சன் (இடதுபுறம்)

ட்ரொட்ஸ்கியின் பிரசுரிக்கப்படாத எழுத்துக்களின் நகல்களையும், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் விட்டேக்கர் சாம்பர்ஸிடம் இருந்து SWP பெற்ற GPU முகவர்களின் பெயர் பட்டியலான “W” புரிந்துணர்வின் ஒரு நகலையும் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படுகொலை மீது SWP இன் கட்சி உள்விசாரணை தொடர்பான தகவல்களையும் ஹான்சன் அமெரிக்க அரசுக்கு வழங்கினார்.

செப்டெம்பர் 25, 1940 இல் மெக்சிக்கோவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் பி. ஷா, அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரி ரேமண்ட் ஈ. மர்பிக்கு எழுதுகையில் ஜோசப் ஹான்சன் “சட்ட விலக்கீட்டுரிமையுடன்… இரகசிய தகவல்களை” வழங்குவதற்காக “யாராவது ஒருவரை தொடர்பில் வைக்க வேண்டுமென விரும்புகிறார்” என்று குறிப்பிட்டதாக பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை வெளிப்படுத்த இருந்தது. FBI இயக்குனர் ஜே. எட்கர் ஹூவர் சாதகமாகப் பதிலளித்து, ஹான்சனைக் கவனத்தில் கொள்ளுமாறு அவர் தனது ஆட்களை ஊக்கப்படுத்தியதோடு, அக்டோபர் 1 இல் எழுதுகையில், “ஹான்சனை நியூயோர்க் அலுவலகத்திற்கு அழைத்தால், அவரை சாதுர்யமாகக் கையாள வேண்டும், இந்த விசாரணையில் அவரால் வழங்க முடிந்த எல்லா தகவல்களையும் மற்றும் அவர் உதவிகளையும் அவரிடம் இருந்து பெற்றாக வேண்டும்,” என்று குறிப்பிட்டார். [22]

மெக்சிகோ நகர அமெரிக்க தூதரான ஜோர்ஜ் ஷாவுக்கு வெளியுறவுத் துறையின் உயரதிகாரி ரேமண்ட் இ. மர்பி அனுப்பிய கடிதம், “திரு. பி.இ. சாக்கெட்டுடன் தொடர்பு கொள்ளுமாறு” (வலதுபுறம் இருப்பவர்) கூற ஷாவை அறிவுறுத்தியது. அவர் தான், “மத்தியப் புலனாய்வுத் துறையின் நியூ யோர்க் மாவட்ட பொறுப்பாளர்” என்று செப்டம்பர் 28, 1940 தேதியிட்ட அந்தக் கடிதம் குறிப்பிட்டது.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணை பின்னர் நிறுவ இருந்தவாறு, இது எதுவுமே SWP இன் எந்த முன்னணி உறுப்பினருக்கும் தெரியாது. FBI மற்றும் GPU உடனான அவரின் சந்திப்புகளைக் குறித்து அவரின் நியாயப்பாடுகளும் பொய்யானவை என்பது வெளிப்பட்டன. 1941 இல் தேசத் துரோக குற்றத்திற்காக ரூஸ்வெல்ட் நிர்வாகம் மரண தண்டனை விதித்த 29 SWP தலைவர்களின் பட்டியலில் ஹான்சன் இல்லை என்பதற்கு அரசுடன் அவர் தொடங்கி இருந்த தொடர்பு மட்டுமே விளக்கமளிக்கிறது. மெக்சிகோவில் SWP ட்ரொட்ஸ்கிக்கு நெருக்கமாக இருந்தது என்பதன் அடிப்படையில் வழக்குத்தொடுனர்கள் அவர்களின் வழக்கை அமைத்திருந்தார்கள் என்பதையும், கோயொகானில் SWP நெருக்கமாக இருந்ததைக் காட்டும் விதத்தில் அவர்கள் கரங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு ஆதாரத் துணுக்கையும் எடுத்துக்காட்டி இருந்தார்கள் என்பதையும் பின்னர் அனைத்துலகக் குழு நிறுவிக் காட்டியது.

மூன்று வருடங்கள் அங்கிருந்த ஹான்சன், இந்தத் தொடர்பை நிறுவுவதற்கு முக்கியமானவராக இருந்திருக்கலாம். ஆனால், இந்த விசாரணையின் போது தன் முகவர்கள் அம்பலப்படுவார்களோ என்று முக்கியமாக ஹூவர் கவலை அடைந்தார். இந்த விசாரணையின் ஒரு கட்டத்தில், ஹான்சனை வழக்குத்தொடுநர் “ஜோ” (Joe) என்று குறிப்பிட்டார்.

“ஜோசப் ஹான்சன்: GPU இன் உடந்தையாளர்”

அனைத்துலகக் குழு அதன் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையைத் தொடங்கிய போது, ஹான்சனை ஒரு முகவராக குற்றஞ்சாட்டவில்லை. அதற்கு மாறாக, “ட்ரொட்ஸ்கி மரணத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகவும், நான்காம் அகிலத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட புரட்சிகர பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும்,” ஹான்சனும் SWP உம் “குற்றகரமான அலட்சியத்துடன்” இருந்ததாக அனைத்துலகக் குழு குற்றஞ்சாட்டியது. ஹான்சனும் ஜோர்ஜ் நோவாக்கும் “ட்ரொட்ஸ்கி படுகொலையைச் சுற்றி நிலவிய சூழ்நிலைகளை மூடிமறைத்துள்ளனர்” என்று அனைத்துலகக் குழு எழுதியது. “அவர்களின் சொந்த அணிகளுக்குள் ஊடுருவிய ஸ்ராலினிச முகவர்கள் குறித்து அவர்கள் மௌனமாக இருந்துள்ளனர். இது கவனக்குறைவால் நடந்துவிட்ட விஷயமல்ல. இது நனவுபூர்வமான திட்டமிட்ட கொள்கையாகும்.” [23]

ட்ரொட்ஸ்கி படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்த ஸ்ராலினிச முகவர்கள். மேல் இடபுறம் இருந்து கடிகார நகர்வு திசையில்: மார்க் ஸ்பொரோவ்ஸ்கி; சில்வியா காலன்; சோப்லெவிசியோஸ் சகோதரர்கள், ஜாக் மற்றும் ரோபர்ட்; தோமஸ் எல். பிளாக்; சில்வியா அகலோஃப்; ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட்.

GPU மற்றும் FBI உடனான அவரின் தொடர்புகளை ஹான்சன் மூடிமறைத்ததற்காக மட்டுமல்ல, மாறாக நான்காம் அகிலத்திற்குள் செயல்பட்டு வந்த வேறு GPU முகவர்களை மறைத்ததற்கும் அவர் பொறுப்பாகிறார். அவர்களில் உள்ளடங்குபவர்கள்:

(1) மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, 1958 இல் இவரின் பொய் சாட்சி கூறல் மீதான வழக்கு விசாரணை குறித்து மிலிட்டன் பத்திரிகையில் SWP எழுதவில்லை.

(2) சில்வியா காலன் (கோல்ட்வெல் அல்லது ஃபிராங்க்ளின்), இவர் கனனின் செயலாளராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் ஜிபியு முகவர் என்று முதலில் 1947 இலும் பின்னர் மிகவும் வெளிப்படையாக 1950 இலும் லூயிஸ் புடென்ஸால் அறிவிக்கப்பட்டார். மக்ஸ் சாக்ட்மன் மற்றும் ஆல்பேர்ட் குளோட்சரிடம் இருந்து கிடைத்த குறிப்புகளின் அடிப்படையில், மார்ச் 1947 இல் அவர் வகித்த பாத்திரம் மீது SWP சர்ச்சைக்கிடமின்றி ஆதாரத்தை வழங்கிய போதும், மே மாதம் நடத்தப்பட்ட ஒரு கண்துடைப்பு கட்டுப்பாட்டு விசாரணைக் குழுவில் அவர் வகித்த பாத்திரத்தை அது மூடிமறைத்தது.

(3) முதலில் 1930 களின் முற்பகுதியில், செனின் மற்றும் வெல் என்ற பெயரில், ஜேர்மனியின் இடது எதிர்ப்புக்குள் முகவர்களாக சேவையாற்றிய பின்னர், சோப்லெவிசியோஸ் சகோதரர்களான (Soblevicius brothers), ஜேக் சோபல் மற்றும் ரோபர்ட் சோப்லன் ஆகியோர் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை உளவு பார்த்தார்கள். 1960 இல் ரோபர்ட் சோப்லன் மீது அணு ஆயுதம் சார்ந்த உளவுபார்ப்புகளுக்காக வழக்குத் தொடுக்கப்பட்ட போது, அப்போது சில்வியா காலனும் குற்றஞ்சாட்டப்படாத இணை சதிகாரராகப் பெயரிடப்பட்டிருந்தார். மீண்டும், ஹான்சனும் SWP உம் சோப்லனின் வழக்கை வெளிப்படுத்த மறுத்தனர். அந்த வழக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அவர் உளவு பார்த்ததை உறுதிப்படுத்தியதோடு, 1961 இல் அவருக்கு தண்டனை வழங்கியதுடன் முடிவுக்கு வந்தது.

(4) ஃபுளோய்ட் கிளீவ்லாண்ட் மில்லெர், ஒரு முக்கிய முன்னாள்-SWP உறுப்பினரான இவரும், சோலன் வழக்கில் குற்றஞ்சாட்டப்படாத ஜிபியு இணை-சதிகாரராகப் பட்டியலிடப்பட்டிருந்தார். மேலும் சோவியத் ஒன்றியத்திற்கு செல்லும் கப்பல்களில் இருந்த வணிகக் கப்பல் ட்ரொட்ஸ்கிச சிப்பந்திகளைக் குறித்து ஜிபியு க்கு தகவல்கள் வழங்கியதாக அவரே சாட்சி அளித்தார்.

(5) 1956 இல் செனட் குழுவின் முன் சாட்சியளித்த ஸ்ராலினிச முகவரான தோமஸ் பிளாக், மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியின் வீட்டில் பல ஜிபியு முகவர்கள் செயல்பட்டு வந்ததை அம்பலப்படுத்தினார். பிளாக்கின் இந்த சாட்சியம் மீது SWP ஒருபோதும் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

(6) ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட், பின்னர் வெனோனா ஆவணங்களில் (Venona Papers) ஒரு ஜிபியு முகவராக வெளிப்படுத்தப்பட்டார். இவர், மே 24, 1940 இல் டேவிட் அல்ஃபாரோ சிக்கேய்ரோஸ் (David Alfaro Siqueiros) தலைமையிலான படுகொலைக் குழுவை ட்ரொட்ஸ்கியின் வளாகத்திற்குள் நுழைய அனுமதித்த காவலாளி ஆவார். இவர் இதுபற்றி பேசுவதைத் தடுப்பதற்காக ஜிபியு ஆல் கொல்லப்பட்டார்

(7) 1975 இல் முன்னிறுத்தப்படவில்லை என்றாலும், சில்வியா அகலோஃப்பையும் இப்போது இந்தப் பட்டியலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். அமெரிக்காவுக்காக அல்லாத நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதி சபை குழுவின் முன்னால் 1950 இல் அகலோஃப்பின் பகிரங்கமான சாட்சியமும், SWP பத்திரிகையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. “அப்பாவி சில்வியா” (poor Sylvia) என்ற கட்டுக்கதையை நிறுவ உதவியாக, ஹான்சன் பிப்ரவரி 15, 1941 இல் மிலிட்டன் இல் எழுதிய ஒரு கட்டுரையில், அகெலோஃப் “பல ஆண்டுகளாக விசுவாசமானவராகவும் நம்பத்தகுந்தவராகவும் ட்ரொட்ஸ்கியின் நண்பர்களால் அறியப்பட்டு” வந்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ரோபர்ட் சோப்லன் விசாரணையின் போது, ஜிபியு இன் தலைமை உளவாளி ஜேக் சோப்லே (Jack Soble) சாட்சியம் அளிக்கையில், அவரது கட்டுப்பாட்டின் கீழ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் 10 உளவாளிகள் செயல்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். இதில் ஆறு பேரின் பெயர்கள் வெளிப்படையாகக் கூறப்பட்டன, மற்ற நான்கு பேர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை. அந்த மற்ற முகவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க SWP தலைமை சிறிதளவிலும் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் ஹான்சனே அவர்களில் ஒருவராக இருந்தார்.

தோழர் நோர்த் ஆகஸ்ட் 1975 இல், சான் பிரான்சிஸ்கோவில் ஸ்பொரோவ்ஸ்கியை அவர் வீட்டுக் வெளியே கண்டறிந்தார். UC பேர்க்லியின் மானுடவியல் துறையில் பேராசிரியர் பதவியைப் பெற்று, அவர் சௌகரியமாக அந்த வீட்டில் அரை ஓய்வு கால வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

மார்க் ஸ்போரோவ்ஸ்கியும் அவர் மனைவி ரெஜினாவும், 1975 இல் அனைத்துலகக் குழு சான் பிரான்சிஸ்கோவில் எடுத்த புகைப்படம்

ஸ்போரோவ்ஸ்கியையும் அவர் மனைவி ரெஜினாவையும் நோர்த் புகைப்படம் எடுத்தார். ஸ்போரோவ்ஸ்கி நோர்த்தைத் தாக்கிய நிலையில், “இந்தப் புகைப்படங்களை வைத்து எதுவும் செய்யாமல் இருப்பது தான், உங்களுக்கு நல்லது,” என்று ரெஜினா மிரட்டினார். ஸ்போரோவ்ஸ்கி மீதான விசாரணையை ஒரு “வரண்ட கிணறு” (dry well) என்று ஹான்சன் குறிப்பிட்டார். [24]

ஹான்சனும் நோவாக்கும் GPU முகவர்களைப் பாதுகாக்கின்றனர்

ஆனால் ஒரு இணை ஆணையத்திற்கான (parity commission) அழைப்புக்கு ஹான்சன் காட்டிய விடையிறுப்பு, அவர் வகித்த பாத்திரத்தைக் குறித்து கூடுதலாக கேள்விகளை எழுப்பியது. ட்ரொட்ஸ்கியின் படுகொலையைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளையும் பாதுகாப்பையும் விசாரிப்பதற்கான ஒரு இணை ஆணையத்திற்கான அழைப்பை நவம்பர் 24, 1975 இல் Intercontinental Press பதிப்பில் ஹான்சன் மீண்டும் நிராகரித்தார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை “சேறடித்தல்” (geyser of mud) என்று கண்டித்ததுடன், சில்வியா காலன், ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் மற்றும் சில்வியா அகலோஃப்பை ஆணவத்துடன் பாதுகாத்தார்.

ஃபிராங்க்ளின்-கோல்ட்வெல்-காலனைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்: “சில்வியா கோல்ட்வெல், (இது கட்சிக்காக அவர் வைத்துக் கொண்ட பெயர்), சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அலுவலகத்தை நிர்வகிக்கும் கடினமான பணிகளில் மிகவும் கடுமையாக உழைத்தார், ஒரு செயலாளருக்கான திறமையுடன் கனனுக்கு உதவுவதும் இதில் உள்ளடங்கி இருந்தன. உண்மையில் இக்கட்டான வேலைகளை அவருடன் பகிர்ந்து கொண்ட தோழர்கள் அனைவரும் அவரை முன்னுதாரணமாகக் கருதினார்கள். புடென்ஸ் (Bundez) பரப்பிய பொய் அவதூறுகளை அவர் ஒதுக்கித் தள்ளியதைப் போலவே, அவர்களும் அதை ஒதுக்கித் தள்ளினர்.” [25]

ஹார்ட் மோசமான அவதூறு தாக்குதலுக்கு இலக்கானவர் என்றும், ஒரு ஜிபியு முகவர் என்ற குற்றச்சாட்டுகளில் அவர் அப்பாவி என்றும் ஹார்ட்டை அவர் பாதுகாத்தார். ஆனால் இப்போது இது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அகலோஃப்பையும் பாதிக்கப்பட்ட ஓர் அப்பாவியாக ஹான்சன் காட்டினார்.

“ஹார்ட்டுக்கு எதிரான ஜிபியு இன் பழைய அவதூறுகளின் துர்நாற்றம், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையகத்தில் இன்னும் நீடிப்பதை நாம் காண்கிறோம்,” என்றவர் எழுதினார். “சில்வியா அகலோஃப் பாதிக்கப்பட்ட அதே விதத்தில் ஜாக்சனால் ஹார்ட்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கு எதுவும் இல்லை. ஜாக்சனைக் காதலித்த அகலோஃப், அவரது காதல் இருதரப்பினரதும் மனதொத்தது என்று நம்பி ஏமாந்தார் என்பது போல, ஜாக்சனை நம்பகமான நண்பனாக ஏற்றுக் கொள்வதில் ஹார்ட் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. [26]

“ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு நம்பத்தகுந்த உறுப்பினரான அவரின் நிஜமான அடையாளம் குறித்து அவருக்குத் துளிகூட யோசனை இல்லை” [27] என்று ஹான்சன் அகலோஃப் குறித்து குறிப்பிட்டு, 1941 இல் அவர் முதன்முதலில் வெளியிட்ட அதே கூற்றை மீண்டும் கூறினார். அவ்வாறு செய்து, அவர் “அப்பாவி சில்வியா” கட்டுக்கதையை உறுதிப்படுத்த உதவினார். இது அவரைப் பாதுகாக்கவும், அவருக்கும் மெர்காடருக்கும் பின்னால் இருந்த ஜிபியு வலையமைப்பை மறைக்கவும் உருவாக்கப்பட்ட சதி என்பதை இப்போது நாம் நிறுவிக் காட்டியுள்ளோம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஸ்போரோவ்ஸ்கி அமெரிக்காவினுள் நுழைய உதவியவரும், 30 ஆண்டுகளாக இந்த உண்மையை மூடிமறைத்தவரும், SWP இன் முன்னணி உறுப்பினருமான ஜோர்ஜ் நோவாக், டிசம்பர் 8, 1975 இன் Intercontinental Press பதிப்பில், “ஜோசப் ஹான்சனையும் அவரது சகாக்களையும் சுற்றி ஒரு சந்தேக வலையைச் சித்தரிப்பதற்கு அவர் [ஹீலி] ஏதோ வெறித்தனமான முயற்சிகள் செய்கிறார்” என்று எழுதி, “கனனின் செயலாளர் சில்வியா கோல்ட்வெல்லுக்கு” எதிரான ஹீலியின் “பொறுப்பற்றதும் கண்மூடித்தனமானதுமான குற்றச்சாட்டுக்களை” தாக்கினார்.

ட்ரொட்ஸ்கியின் முன்னாள் பாதுகாவலர் SWP ஐ சேர்ந்த ஹரோல்ட் ரோபின்ஸ், டிசம்பர் 23, 1975 இல், SWP இன் தேசியக் குழுவுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டார். ட்ரொட்ஸ்கியைக் கொன்ற தாக்குதல்களை மீளஉருவமைப்பதற்காக இரண்டு முறை தோழர் நோர்த்துடன் மெக்சிகோவுக்கு உடன் சென்றிருந்த ரோபின்ஸ், ஹான்சனின் நவம்பர் 24, 1975 கட்டுரையைத் திரும்பப் பெற வேண்டுமென கோரினார். அவர் SWP க்கு பின்வருமாறு எழுதினார்:

தொழிலாளர் இயக்கங்களுக்குள் உளவாளிகள் நிலைநிறுத்தப்படுவதும், தொழிற்சங்கப் போராளிகள் மீது போலி வழக்குகள் தொடுப்பதும், முதலாளித்துவத்திலும் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலையில் உள்ள அரசுகளின் முதலாளித்துவத்திற்கு எதிரான சமூக எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுவதும் வர்க்க சமூகத்தின் முழுப்பாதையிலும் நெடுங்காலந்தொட்டு நடந்து வருகின்றன. “பாதுகாப்பின்” அவசியம் பற்றிய கேள்வி எப்போதுமே, எந்த விதிவிலக்கும் இல்லாமல், கிளர்ச்சியாளர்கள் மற்றும் புரட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்து வந்துள்ளது. தோழர் ஹான்சனின் கண்ணோட்டங்கள் நேரெதிர் விதமான “நிலைப்பாட்டை” எடுக்கின்றன. அந்தக் கொள்கையோடு நீங்கள் தொடர்ந்து செல்ல முடியுமா? [29]

இந்தக் கடிதத்திற்கு SWP பதிலளிக்கவில்லை. ஜனவரி 1976 இல், அனைத்துலகக் குழு ஹான்சனை “ஜிபியு க்கு உடந்தையாளர்” என்று கூறி, அவர் மீது பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டது. அதற்கு சிறிது காலத்திற்குப் பின்னர், ஆகஸ்ட் 1974 இல் உயிரிழந்த ஜேம்ஸ் பி. கனனின் வாழ்வை நினைவுகூர்ந்து, 1976 இன் தொடக்கத்தில், SWP ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டது, அதில் ஜோசப் ஹான்சனின் மனைவி ரெபா ஹான்சன், சில்வியா காலனை குறித்து குறிப்பிடுகையில், “இயக்கத்திற்கு [சில்வியாவின்] அர்ப்பணிப்பும் மற்றும் நீண்ட நேரம் கடுமையாக உழைக்க அவர் தயாராக இருந்ததும் எங்கள் அனைவரையும் ஈர்த்தது. சில்வியாவும் நானும் நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என்பதோடு, தனிப்பட்டரீதியிலும் நல்ல நண்பிகளாக இருந்தோம். அவர் ஒரு நல்ல அன்பான பெண்மணி,” என அவர் குறிப்பிட்டார். [30]

ஒரு இணை ஆணையத்திற்கான அழைப்பை SWP நிராகரித்ததோடு மட்டுமின்றி, அது அனைத்துலகக் குழுவுக்கு எதிராக உலகளாவிய பப்லோவாத இயக்கத்தை அணிதிரட்டியது. ஹான்சன் மற்றும் நோவாக்கைக் குற்றமற்றவர்களாக அறிவித்து, செப்டம்பர் 1976 இல், அவர்கள் ஒரு பொய்யான “தீர்ப்பையும்” வெளியிட்டார்கள்.

டிசம்பர் 1976 இல், SWP “ஹீலியின் பெரும் பொய்” என்ற தலைப்பில் ஒரு துண்டறிக்கையைப் பிரசுரித்தது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையானது, “நான்சி ஃபீல்ட்ஸை ஒரு ‘சிஐஏ முகவர்’ என்று குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக ஹீலி தொடங்கிய வினோதமான வேட்டையாடல் என்றும், ஹீலியின் மிரட்டலை ஃபீல்ட்ஸ் எதிர்த்து நின்றபோது, நான் அவரை ஆதரித்தபோது, எங்களை அவர்கள் விஷமத்தனமான வார்த்தைகளால் கண்டனம் செய்தனர்” என்றும் குறிப்பிட்ட வொல்ஃபோர்த்தின் அறிமுக உரையுடன் அந்த துண்டறிக்கை தொடங்கியது. [31] இது, நிச்சயமாக, அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறிய விதத்தைக் குறித்த முழுமையான பொய்மைப்படுத்தலாகும்.

வொல்ஃபோர்த்தும், ஹான்சனும், அவமானத்தின் அரங்கமும்

SWP பத்திரிகையில், வொல்ஃபோர்த் ஹான்சனைப் பாராட்டியதோடு, அனைத்துலகக் குழு மீதான அவரது தாக்குதல்களை ஆழப்படுத்தினார். அவர் எழுதினார், “ஏற்கனவே பல அரசியல் கேள்விகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி உள்ள நிலையில், நான்சி ஃபீல்ட்ஸூம் நானும் ஹான்சனின் மதிப்பீட்டால் ஈர்க்கப்பட்டோம். இது 1976 இன் தொடக்கத்தில் சோசலிச தொழிலாளர் கட்சியில் சேர வழிவகுத்த ஒரு கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் செயல்முறையைத் திறந்தது.” “ஹீலியின் அணுகுமுறைகளுக்கும் மாஸ்கோவில் ஸ்ராலினின் அணுகுமுறைகளுக்கும் இடையிலான ஒற்றுமை வியப்பூட்டுகிறது,” என்றவர் நிறைவு செய்தார். அவர் ஹான்சனை “சுயநலமில்லா புரட்சியாளராக” குறிப்பிட்டார். [32]

வொல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸூம் SWP இல் விரைவாக உள்நுழைந்தமை, ஃபீல்ட்ஸின் கடந்த கால அரசியலைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அவர் Black Panthers கட்சிக்கு நெருக்கமாக இருந்ததாகப் பெருமையாக பேசினார் என்பதோடு, கிளீவ்லாந்தில் உள்ள வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் அவர் பயின்று கொண்டிருந்த போது, “YSA உறுப்பினர் ஜோன் மெக்கான் அந்த வளாகத்தில் வழங்கிய சில வகுப்புகளில் கலந்து” கொண்டிருந்ததாக மிலிட்டனுக்கு கூறினார். மே 7, 1976 இல் பிரசுரிக்கப்பட்ட அந்த நேர்காணலில் அவர் கூறுகையில், வேர்க்கர்ஸ் லீக்கில் அவர் இருந்த காலம் முழுவதும், SWP இன் 1968 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருந்த “ஃபிரெட் ஹால்ஸ்டெட்டை எப்போதும்” விரும்பியதாகவும், “லிண்டா ஜென்னெஸ் பிரச்சாரத்தை முக்கியமாக கருதியதாகவும்” அவர் தெரிவித்தார். [33] ஜென்னெஸ் 1972 இல் SWP இன் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருந்தார்.

நான்சி வொல்ஃபோர்த் பின்னர் AFL-CIO நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், ஜனநாயகக் கட்சியின் தீவிர பிரச்சாரகராகவும் ஆனார்.

“ஹீலியின் பெரும் பொய்” வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய பப்லோவாத இயக்கம் ஜனவரி 14, 1977 இல் இலண்டன் நண்பர்கள் அரங்கில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதை அனைத்துலகக் குழு அவமானத்தின் அரங்கம் (Platform of Shame) என்று பெயரிட்டது. உலகளாவிய பப்லோவாத இயக்கத்தின் தலைவர்கள் விஷமத்தனமான வார்த்தைகளில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையைக் கண்டனம் செய்ய அங்கே ஒன்று கூடினர். அதில் வொல்ஃபோர்த் சிறப்பு பேச்சாளராக இருந்தார். WRP தலைவர் ஜெர்ரி ஹீலி அந்த கூட்டத்தின் முடிவில் அவருக்கும் இயக்கத்திற்கும் எதிராக கூறப்பட்ட அவதூறுகளுக்குப் பதிலளிக்க, தனது கரத்தை உயர்த்திய போது, அவருக்குப் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஒரு முன்னணி பப்லோவாதியான தாரிக் அலி கூட்டத்தை ஒரு முழக்கமிடச்செய்ய இட்டுச்செ ன்று அவரின் குரலை மேல் எழாதிருக்க முயன்றார்.

ஜனவரி 14, 1977 இன் அவமானத்தின் அரங்கில் ஜெர்ரி ஹீலி பேச முயல்கிறார்

அந்த பப்லோவாதக் கூட்டத்தின் வெட்கக்கேடான தன்மையை முதலாளித்துவப் பத்திரிகைகளே கூட ஒப்புக் கொண்டன. Sunday Observer பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: “அவர் கருத்தை அனேகமாக எந்த வார்த்தைகளும் செய்திருக்கக் கூடியதை விட மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விட்ட உணர்வோடு, திரு. ஹீலி மீண்டும் அமைதியாக அமர்ந்தார்.” [34] தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நியூஸ்லைன் பின்வருமாறு எழுதியது: “எல்லா முக்கிய பிரச்சினைகளையும் விட்டுவிட்டு, இந்தக் கூட்டம் அவர்களின் நெருக்கடியை மட்டுமே தீவிரப்படுத்தியது. அது எதையும் தீர்க்கவில்லை.” [35]

அவமானத்தின் அரங்கின் நிகழ்வு குறித்து அனைத்துலகக் குழு பின்வருமாறு எழுதியது:

திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், “தொழிலாளர் ஜனநாயகம்” என்ற போலி பதாகையின் கீழ் ஜிபியு இனதும், அவர்களது கூட்டாளிகளினதும் குற்றச்செயல்களைப் பாதுகாக்கும் அமைப்புகளின் நிர்வாகிகளின் மீது வெறுப்பைக்காட்டுவதற்கான தன்னியல்பான விருப்பத்தை ஒடுக்குவதற்கு சிரமப்படுவர். … ஸ்ராலினிச குற்றங்களையும் மற்றும் இந்தக் குற்றங்களை மூடிமறைப்பதில் திருத்தல்வாதிகள் உடந்தையாய் இருப்பதையும் அம்பலப்படுத்துவது, புதிய காரியாளர்களைப் புரட்சியாளர்களாக தயாரிப்பு செய்வதில் மத்திய பணியாகும். எந்த வடிவத்தில் இருந்தாலும் இந்தப் பணியை எதிர்ப்பவர்கள் எதிர்புரட்சிகர ஸ்ராலினிசத்தின் நலன்களுக்குச் சேவையாற்றுகிறார்கள். எங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. [36]

சில்வியா ஃபிராங்க்ளின்-கோல்ட்வெல்-காலென்-டொக்ஸீ இன் இருப்பிடத்தை அனைத்துலகக் குழு கண்டுபிடிக்கிறது.

அனைத்துலகக் குழு தனது விசாரணையைத் தொடர்ந்தது. மே 1977 இல், டேவிட் நோர்த் மற்றும் அலெக்ஸ் மிட்செல் ஆகியோர் சில்வியா காலனை இல்லினோய், வீட்டனில் (Wheaton) கண்டுபிடித்தனர்.

அவரது அரசியல் கடந்த காலத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது, கனனின் செயலாளராக பணிபுரிந்ததை காலன் ஒப்புக்கொண்டார். ஆனால் SWP இல் இருந்த தனது ஆண்டுகளை அவரது வாழ்க்கையில் ஒரு சிறிய அத்தியாயமாக ஒதுக்கித் தள்ள முயன்றார். மே 31, 1977 அன்று சில்வியா காலன் கூறியதாக வேர்க்கர்ஸ் லீக்கின் செய்தித்தாள் புல்லட்டின் செய்தி வெளியிட்டிருந்தது: “அது ஏன் முக்கியமானது என்று எனக்குத் தெரியவில்லை. நான் உண்மையில் அரசியலில் இருந்ததில்லை. நான் வாசித்ததில்லை. நான் அதை புரிந்து கொள்ளவே இல்லை. நான் ஒரு முதிர்ச்சியடையாத குழந்தையாக இருந்தேன். நான் சொல்லக்கூடியது அவ்வளவுதான் ... என் வாழ்க்கையின் அந்தக் காலம் முழுவதையும் மறந்துவிட்டேன் போலுள்ளது.[37]

சில்வியா பிராங்க்ளின், அனைத்துலகக் குழுவால் எடுக்கப்பட்ட புகைப்படம் 1977

கனனைப் பற்றி, காலன் கூறினார், 'என் கருத்துப்படி அவர் ஒரு முக்கியமான மனிதர் அல்ல. முக்கியமானவரா? உலகில் அவர் என்ன பங்கு வகித்தார்? ஜிபியு உளவு வளையத்தில் இணை சதிகாரர் என்று ஏன் குற்றஞ்சாட்டப்பட்டீர்கள் என்று தோழர் நோர்த் கேட்டபோது, காலன் தனக்கு அதுபற்றி நினைவில் இல்லை என்று கூறினார்.[38]

அந்த கோடையில், 1941 ஆம் ஆண்டின் ஸ்மித் சட்ட விசாரணையைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 18 SWP உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் SWP தேசியக் குழு உறுப்பினர் ஃபீலிக்ஸ் மோரோவையும் நோர்த் பேட்டி கண்டார். ட்ரொட்ஸ்கியின் படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தை அணுகுவதற்கு கட்சித் தலைமையால் உத்தியோகபூர்வ முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என மோரோ நோர்த்திற்கு தெரிவித்தார். 'எதுவுமில்லை,' என்று மோரோ நோர்த்திடம் கூறினார். 'அவர்கள் எந்த வகையிலும் ஈடுபட்டிருக்கவில்லை.' [39] வெளியுறவுத் துறை மற்றும் FBI உடனான ஹான்சனின் தகவல்தொடர்புகள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இருந்தன, அவை SWP தலைமையின் முதுகுக்குப் பின்னால் இரகசியமாக நடந்தன.

பின்னர், கெல்ஃபான்ட் வழக்கில் நீதிபதியால் உத்தரவிடப்பட்ட வாக்குமூலத்தில், SWP தலைவர்கள் ஃபாரெல் டொப்ஸ் மற்றும் மொரிஸ் லெவிட் ஆகியோர் FBI உடனான ஹான்சனின் சந்திப்புகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஹான்சனின் கட்டுக்கதைகள் உடைந்து விழுந்து கொண்டிருந்தது.

மே 31, 1977 அன்று காலனுடனான நேர்காணல் வெளியான பின்னர், ஹான்சன் ஜூன் 20, 1977 அன்று, 'ஹீலிவாதிகள் ட்ரொட்ஸ்கிசத் தலைவர்களின் மீது போலி வழக்கை தீவிரப்படுத்துகின்றனர்' என்ற தலைப்பில் Intercontinental Press கட்டுரையில் ஹான்சன் பதிலளித்தார். கட்டுரையில் ஹான்சன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 'சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமை மீது தங்கள் அவதூறுகளை அதிகரித்துள்ளதாகக் கூறி, அவர் காலனுடனான நேர்காணலை 'சோடிக்கப்பட்டது' என்று கூறி சந்தேகம் எழுப்ப முயன்றார்.” [40]

காலன் ஒரு முகவர் என்ற கூற்றை கேலி செய்வதன் மூலம் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையை ஹான்சன் தாக்கினார். ஜூன் 20, 1977 கட்டுரையில், ஹான்சன் எழுதினார்: “சூனிய-வேட்டைக்காரர்களின் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் [அதாவது, ICFI] தாங்கள் கோல்ட்வெல் [காலன்] பற்றி பரவிய வதந்திகளை ஆராய்வதற்காக 1947 இல் சோசலிச தொழிலாளர் கட்சியால் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையம் ‘மோசடியானது’ என முன்பு சூசகமாக சுட்டிக்காட்டிய ஒரு அவதூறை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.” [41]

2018 இன் WSWS தொடர் கட்டுரைகள் திட்டவட்டமாக நிறுவிக்காட்டியதுபோல மே-ஜூன் 1947 SWP இன் கட்டுப்பாட்டு ஆணையம் மோசடியானது. சில்வியா காலன் ஒரு ஜிபியு முகவர் என்று SWP க்கு வழங்கப்பட்ட பேரழிவு தரும் தகவல்களை அந்த கட்டுப்பாட்டு ஆணையம் விசாரித்தது. குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்குப் பதிலாக, ஆணையம் ஒரு முகவராக இயங்கிய காலனின் பங்கை மூடி மறைத்து, அங்கிருந்தவர்களை இரகசியத்தைக் பாதுகாக்க சத்தியப்பிரமாணம் செய்வித்தது.

ஹான்சன் மேலும் எழுதினார்: 'ஹீலிவாதிகள் தொழிலாளர் இயக்கத்தின் பிற பகுதியினருக்கு எதிராக உடல் ரீதியான வன்முறைக்கு முன்முயற்சி செய்யும் திறன் பெற்றவர்கள்.' அவர் அனைத்துலகக் குழுவை அச்சுறுத்தி, இந்த விசாரணை 'கொடிய விளைவுகளை' ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.” [42]

தோழர் ரொம் ஹீனெஹன் படுகொலை

அக்டோபர் 16, 1977 அதிகாலை நேரத்தில், ஹான்சனின் அச்சுறுத்தல் யதார்த்தமாக மாறியது. தோழர் ரொம் ஹீனெஹன் நியூயோர்க் நகரில் Ponce Social Club இல் ஒரு சமூக நிகழ்வை மேற்பார்வையிடும் போது இரண்டு தொழில்முறை கூலிக்கொலைகாரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரொம்முக்கு அப்போது 26 வயது.

ரொம் ஹீனெஹன், ஜூன் 1977

இரண்டு கொலையாளிகளையும் கைது செய்யவும், மேலும் இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தவும் கோரி வேர்க்கர்ஸ் லீக் உடனடியாக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. கொலையாளிகள் எட்வின் செக்கீனோட் மற்றும் அஞ்சலோ தோரஸ் என விரைவில் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் நியூ யோர்க் நகர போலீசார் அவர்களை கைது செய்ய மறுத்துவிட்டனர். பத்திரிகைகள் உடனடியாக அதை 'பிரயோசனமற்ற கொலை' என குறிப்பிட்டன. துப்பறியும் போலீஸ் ஜோன் மோல், டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் இடம், 'யார் அதைச் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்' எனக் கூறினார்.

கொலையாளிகள் கைது செய்யப்படுவதற்கு தொழிலாளர் இயக்கத்தை அணிதிரட்ட மூன்று வருட பிரச்சாரம் செய்யப்பட்டது. புரூக்ளின் மாவட்ட அரசு வழக்குத்தொடுனர் யூஜின் கோல்ட் கொலையாளிகளைக் கைது செய்து படுகொலையை விசாரிக்க வேண்டும் என வேர்க்கர்ஸ் லீக் கோரியது. அது தொழிலாள வர்க்கத்திலும் தொழிற்சங்கங்களிடையேயும் பிரச்சாரம் செய்து கையொப்பங்களை சேகரித்தது மற்றும் மாவட்ட அரசு வழக்கறிஞர் கோல்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆதரவுக்கடிதங்களை சேகரித்து அனுப்பியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. கையொப்பமிட்டவர்களில் அந்தோனி மஸ்ஸோச்சி, வில்லியம் வின்பிசிங்கர், கேரி டைலர், எட் அஸ்னர் மற்றும் ACLU, IRA, PLO மற்றும் அமெரிக்க இந்திய இயக்கத்தின் பிரதிநிதிகள் அடங்குவர். அக்டோபர் 1980 இல், பொலிசார் இறுதியாக வளர்ந்து வரும் அழுத்தத்திற்கு பணிந்து தோரஸ் மற்றும் செக்கீனோட்டை கைது செய்தனர். அவர்கள் 1981 இல் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர், ஆனால் அவர்களின் செயல்களுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது குறித்து சாட்சியமளிக்கப்படவில்லை. அவர்களின் வழக்கறிஞர் 'வெளியில் உள்ள வதந்தி என்னவென்றால், இது ஒரு வெற்றி' எனக் கட்சியிடம் கூறினார்.

கார்ல்டன் பன்னிரண்டு

துரதிர்ஷ்டவசமாக, தோழர் ஹீனெஹனின் படுகொலையைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரத்தை மறுபரிசீலனை செய்யவோ அல்லது அடுத்த ஆண்டுகளில் பப்லோவாத இயக்கத்திற்கு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் பற்றிய விசாரணை கொடுத்த ஒவ்வொரு தாக்கத்தையும் போதுமானளவு விவரமாக விவரிக்கவோ இங்கே போதிய நேரம் இல்லை. 1979ஆம் ஆண்டில், SWP இன் கிட்டத்தட்ட முழு தலைமையும் மினசோட்டாவின் சிறுநகரப்புற நோர்த்ஃபீல்டில் உள்ள ஒரு சிறிய தனியார் பள்ளியான கார்ல்டன் கல்லூரியில் பட்டம் பெற்றது என்ற உண்மையை அனைத்துலகக் குழு அம்பலப்படுத்தியது.

SEP (US) வரலாற்று ஆவணம் கூறுவது போல்:

பாதுகாப்பு விசாரணையின் ஒரு துணை விளைபொருளாக மற்றுமொரு விந்தையான உண்மைகளின் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் அதன் அரசியல் குழுவின் பெரும்பான்மையினர் உள்ளிட்ட ஏறக்குறைய ஒட்டுமொத்த தலைமையுமே மிட்வெஸ்டில் உள்ள ஒரு சிறு தாராளவாத கலைப் பள்ளியான கார்ல்டன் கல்லூரியில் பயின்றிருந்தனர் என்பதே அதுவாகும். 1960 முதல் 1964 வரையான காலத்தில், ஜக் பார்ன்ஸ் உள்ளிட்ட அதன் பல மாணவர்கள் கட்சிக்குள் நுழைந்து துரிதமாக அதன் தலைமை நிலைக்கு உயர்த்தப்பட்ட காலத்தில், கார்ல்டன் வளாகத்தில் SWP திட்டமிட்ட பணிகளை நடத்தியதாக எந்த பதிவும் இருக்கவில்லை. பழமைவாத மிட்வெஸ்ட் மாணவர்கள் (ஜக் பார்ன்ஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவராக இருந்தார்) ஒரு புரட்சிகர தோற்றம் கொண்ட அமைப்பின் தலைவர்களாக மாறுவதற்கான ஊடகமாக Fair Play For Cuba Committee எனும் FBI ஏஜென்டுகளால் கையாளப்பட்ட மற்றும் ஊடுருவப்பட்ட ஒரு அமைப்பு இருந்தது. கார்ல்டன் கல்லூரி நிகழ்வு குறித்து எந்த நம்பகமான விளக்கமும் SWP தலைமையால் வழங்கப்படவில்லை. [43]

கெல்ஃபான்ட் வழக்கு

விசாரணையின் மற்றொரு மைல்கல், கெல்ஃபான்ட் வழக்கு ஆகும், 1979ல் அப்போதைய SWP உறுப்பினர் அலன் கெல்ஃபான்ட் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் பற்றிய கேள்விகளை எழுப்பியதற்காக SWP இலிருந்து வெளியேற்றப்பட்டார். கெல்ஃபான்ட் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் பல முன்னணி SWP உறுப்பினர்களின் வாக்குமூலங்களை வழங்க நிர்ப்பந்திப்பதில் வெற்றி பெற்றனர். இது இந்த அமைப்பினுள்ளான பரந்த ஊடுருவலுக்கான ஆதாரங்களை சேர்த்தது.

முந்தைய ஆண்டு, டிசம்பர் 1978 இல், கெல்ஃபான்ட் COINTELPRO மூலம் இயக்கத்தை FBI கண்காணிப்பது தொடர்பான SWP இன் வழக்கிற்கு ஆதரவாக ஒரு சுயாதீன தகவல் வழங்கும் (amicus curiae) கடிதத்தை வழங்க அனுமதிக்குமாறு தாக்கல் செய்திருந்தார். SWP ஆல் முதன்மையாக நிதி திரட்டும் நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கு, கட்சிக்குள் இருக்கும் கடந்தகால அல்லது இன்னும் செயலில் உள்ள முகவர்களை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படவில்லை. உண்மையில், அமெரிக்க அரசாங்கம் கட்சிக்குள் புகுத்திய ஒரு முகவரைக் கூட அடையாளம் காட்டாமல், இறுதியில் SWP நூறாயிரக்கணக்கான டாலர்களை பெற்றுக்கொண்டதன் மூலம் வழக்கை முடித்துக் கொண்டது. விசாரணையின் போது, 1960 மற்றும் 1976 க்கு இடையில் 300 தகவல் கொடுப்பவர்கள் SWP இன் உறுப்பினர்களாக பணியாற்றியதாக FBI ஒப்புக்கொண்டது.

வழக்கில் கெல்ஃபான்டின் அரசாங்க முகவர்களால் நடத்தப்படும் ஒரு கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டபோது அவரது முதல் கட்சி அமைப்பு உரிமைகள் சட்டத்தின் படி மீறப்பட்டதாக வாதிட்டார். இது சில்வியா காலனின் பெரும் நடுவர் மன்ற வாக்குமூலத்தை (grand jury) வெளியிடுவதில் வெற்றி பெற்றது. அதில் அவர் ஒரு ஜிபியு முகவராக இருந்ததை ஒப்புக்கொண்டார். நீதிபதி Pfaelzer, நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர், இறுதியாக கெல்ஃபான்டின் வழக்கறிஞர் ஜோன் பேர்ட்டனுக்கு SWP ஒரு ஜிபியு முகவரை மூடிமறைத்து வருகிறது என்ற உறுதியான தகவலை அளித்தார். மேலும் அதன் பொய்களும் அல்லது அரை-உண்மைகளை சிதைப்பதற்கான அதன் முயற்சிகள் அனைத்தும் இந்த மூடிமறைப்பிற்காகத்தான். அனைத்துலகக் குழுவின் குற்றச்சாட்டுகள் காரணமாக, சில்வியா காலென் அனுபவித்த அனைத்திற்குமாக அவர் தனது 'போற்றுதலுக்குரியவர்' என்று SWP தலைவர் ஜாக் பார்ன்ஸ் நீதிமன்றத்தில் கூறிய சிறிது நேரத்திலேயே நீதிபதி இந்த பெரும் ஜூரியின் வாக்குமூலத்தை வெளிப்படுத்தினார். இந்த நேரத்தில், SWP ஒரு ஜிபியு முகவரைப் பாதுகாத்து வந்தது.

ஜூன் 9, 1976 இல் வெளிவந்த வோன் ரி. ஓ'பிரையனின் கடிதம்

சில்வியா காலனின் பெரும் நடுவர் மன்ற வாக்குமூலம் வெளியிடப்பட்டதும், உட்டாவைச் சேர்ந்த ஹான்சனின் பால்ய நண்பரான வான் டி. ஓ'பிரையன் ஜூன் 8, 1976 அன்று ஹேன்சனுக்கு எழுதிய கடிதம் முழுவதாக வெளியிடப்பட்டதும் ஒரேநேரத்தில் நடந்தது, ட்ரொட்ஸ்கி எழுதிய ஸ்ராலினின் வாழ்க்கை வரலாறு பிரதிக்கு 25,000 டாலர் செலுத்துமாறு ஜிபியு ஐ தூண்டுவதற்காக ட்ரொட்ஸ்கியின் அறிவுறுத்தலின் கீழ் அவை மேற்கொள்ளப்பட்டதாக முதலில் பொய்யாகக் கூறி, ஜிபியு உடனான தனது முந்தைய சந்திப்புகளை நியாயப்படுத்தும் முயற்சியில் ஹான்சன், இன்டர்காண்டினென்டல் பிரஸ்ஸில் கடிதத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டியிருந்தார்.

ஓ'பிரையனின் முழு கடிதத்தையும் ஹான்சன் மேற்கோள் காட்டவில்லை. மேலும் கெல்ஃபான்ட் வழக்கின் உதவியால், அதற்கான காரணம் என்னவென்பது இப்போது நமக்குத் தெரியும். நீதிபதி Pfaelzer ஆல் வெளியிடப்பட்ட கடிதத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு இருந்தது. ஹான்சனால் பகிரங்கமாக மேற்கோள் காட்டப்படாத கடிதத்தின் ஒரு பகுதியில், ஓ'பிரையன் 1940களின் பிற்பகுதியில் அல்லது 1950களின் முற்பகுதியில் சந்தித்த ஒரு சந்திப்பை ஹான்சனுக்கு நினைவுபடுத்தினார். இது SWP இன் கட்டுப்பாட்டு ஆணையம் சில்வியா காலனைப்பற்றி மூடிமறைத்ததும் மற்றும் லூயிஸ் புடென்ஸ் (Louis Budenz) இன் புத்தகம் காலனை ஒரு முகவராக அடையாளப்படுத்திய காலகட்டமாகும். O'Brien உடனான சந்திப்பு A.J. Muste இன் அமெரிக்க தொழிலாளர் கட்சியின் முன்னாள் உறுப்பினரான Pearl Kluger உடன் நடந்தது. A.J. Muste இனை புடென்ஸ் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார். ஓ'பிரையன் எழுதினார், 'கணிசமான காலத்திற்கு நான் Pearl இனை சந்தித்திருக்கவில்லை. ஆனால் அவர் உடனடியாக, 'உங்கள் நண்பர் ஜோ ஹான்சன் ஜிபியு உடன் இயங்குவதாக புடென்ஸ் கூறினார்'.[44]

ஹான்சனும் SWPயும் காலனைப் பாதுகாக்க வேண்டியிருந்தது என்பதை இது வெளிப்படுத்தியது. ஏனெனில் முதலில் காலனை வெளிப்படுத்தியது புடென்ஸ் தான். மேலும் அவரது எச்சரிக்கைகள் சரியாக இருந்திருந்தால், ஜிபியு முகவராக ஹான்சனின் பங்கிற்கு இதுவும் கூடுதலான சான்றாக இருந்திருக்கும். ஹான்சனை பாதுகாப்பதற்காக, பார்ன்ஸ் மற்றும் SWP உம் காலனை அவர்களின் 'முன்மாதிரியான தோழர்' என்று பாதுகாத்தனர். காலனைப் பற்றிய தகவல்களை புடென்ஸ் பகிரங்கப்படுத்திய போதிலும், அந்நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகவராக மாறிய ஹான்சனைப் பற்றி அவருக்கு தெரிந்திருந்ததை அவர் வெளியிடவில்லை.

கெல்ஃபான்ட் வழக்கு SWP இன் மாற்றத்தின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் அம்பலப்படுத்துதலையும் உள்ளடக்கியது. விசாரணையின் போது, மார்க் ஸ்போரோவ்ஸ்கியை வாக்குமூலம் கொடுக்கச்செய்வதில் கெல்ஃபான்ட் வெற்றி பெற்றார். ஆனால் SWP ஸ்போரோவ்ஸ்கியின் வக்கீல்களுக்கு அவரது subpoena இனை (நீதி மன்றத்தில் ஆஜராவதற்கான அழைப்பாணையை) இரத்து செய்ய ஒரு கோரிக்கையை தாக்கல் செய்ய உதவியது. மற்றும் ஜாக் பார்ன்ஸ், ஸ்போரோவ்ஸ்கிக்கு நீதிமன்றத்தில் எதுவும் கூறாமல் இருப்பதற்கான ஜனநாயக உரிமை இருப்பதாக கூறினார். இதன் விளைவாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான குற்றங்களுக்கு ஸ்போரோவ்ஸ்கி முதல் முறையாக பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து SWP தடுத்தது.

ஸ்போரோவ்ஸ்கியை சாட்சியமளிப்பதை தடுக்கவும் மற்ற முகவர்கள் பற்றிய உண்மை விசாரணையின் மூலம் வெளிவருவதைத் தடுக்கவும் சிஐஏ, விரும்பியது. ஜூன் 11, 1982 அன்று மத்திய புலனாய்வு அமைப்பின் பொது ஆலோசகர் ஸ்ரான்லி ஸ்போர்கின் சிஐஏ இயக்குனர் வில்லியம் ஜே. கேசிக்கு அனுப்பிய ஒரு குறிப்பாணையில் கெல்ஃபான்ட் வழக்கை CIA க்கு 'முக்கிய ஆர்வமுள்ள விடயம்' என மேற்கோள் காட்டினார். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட CIA குறிப்பேடு பின்வருமாறு கூறுகிறது:

அரசு வழக்குத்தொடுனர், மத்திய உளவுத்துறை இயக்குனர் (DCI), மற்றும் பலருக்கு எதிரான கெல்ஃபான்டின் வழக்கில், சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) உள்ள CIA மற்றும் FBI முகவர்கள் எனக் கூறப்பட்டவர்கள் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக கெல்ஃபான்ட் கூறுகிறார். விசாரணைக்கு முந்தைய கண்டுபிடிப்பில், பெயரிடப்பட்ட 19 உறுப்பினர்கள் அல்லது CIA முகவர்கள் மற்றும் ஒருவர் சோவியத் உளவுத்துறை முகவர் என்று CIA நம்புகிறதா என மத்திய உளவுத்துறை இயக்குனரிடம் கெல்ஃபான்ட் கேள்விகளை சமர்ப்பித்தார். [45]

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையின் பங்கு

கெல்ஃபான்ட் வழக்கு மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகள் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாமல் போய்விட்டது. 1983 இன் முற்பகுதியில் வழக்கு முடிவடையும் நேரத்தில், WRP பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணைகள் மீது கவனம் செலுத்துவதை பெருமளவில் நிறுத்திக் கொண்டது. விசாரணையை மேலும் முன்னெடுப்பதில் அதன் பங்கு நிறுத்தப்பட்டது. இது பிளவுக்கு முன்பிருந்த பப்லோவாத தேசியவாத அரசியலுக்கு WRP அதிகரித்தளவில் அடிபணிந்துபோவதுடன் ஒத்துப்போனது.

1985 இன் பிற்பகுதியில், WRP க்குள் நெருக்கடி வெடித்ததால், பண்டா மற்றும் சுலோட்டர் தலைமையிலான WRP தலைமையின் பிரிவு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணைகளை வெளிப்படையாகத் தாக்கியது. அவர்களே இந்த விசாரணையைத் தொடங்க வாக்களித்ததுடன் மற்றும் 1970 களின் நடுப்பகுதியில் தீவிரமாக பங்கேற்றனர்.

நவம்பர் 26, 1985 அன்று, அந்த நேரத்தில் அவர் ஒரு அங்கத்தவராக இருந்த அனைத்துலகக் குழுவுடன் எந்த விவாதமும் இல்லாமல், கிளிஃவ் சுலோட்டர் பப்லோவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டத்தில் தோன்றி, முக்கிய ஸ்ராலினிசவாதியான மொன்டி ஜோன்ஸ்டோனுடன் கைகுலுக்குவதற்கு முன்பு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை கண்டித்தார். அதற்கு சில வாரங்களுக்கு முன்னர், வேர்க்கஸ் லீக் அரசியல் குழுவின் கூட்டத்தில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை சுலோட்டர் பாதுகாத்தார்.

டிசம்பர் 11, 1985 அன்று, வேர்க்கர்ஸ் லீக், WRP இன் மத்திய குழுவிற்கு எழுதியது:

நண்பர்கள் மண்டபத்தில் (Friends Hall) நடந்தது கூட்டம் அல்ல; அது ஒரு முன்னோக்காகும். இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்னவெனில், SWP ஒரு காலத்தில் 'மறுகுழுவாக்கம்' என்று அழைத்ததை நோக்கிய நகர்வு ஆகும். அதாவது, தீவிரத்தன்மை கொண்டோர், திருத்தல்வாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடனான கொள்கையற்ற கூட்டணிகளுக்கு ஆதரவாக ட்ரொட்ஸ்கிசத்தை கைவிடுவதாகும். [46]

அவர்கள் ட்ரொட்ஸ்கிசத்தை வெளிப்படையாக கைவிடுவதை நோக்கி நகர்ந்தபோது, சுலோட்டரும் பண்டாவும் அனைத்துலகக் குழுவையும் தோழர் நோர்த்தையும் கண்டனம் செய்தனர், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை 'திருத்தவாதத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தில் இருந்து விலகுவதை' குறிப்பதாகக் கூறினர். சுலோட்டரும் பண்டாவும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை அவர்களின் 'சமமான சீரழிவு' என்ற கோட்பாட்டின் மைய ஆதாரமாக முன்வைத்தனர். அது, முழு சர்வதேச இயக்கமும் அதன் அனைத்துப் பிரிவுகளும் WRP போலவே அழுகியவை என்று வலியுறுத்தியது.

1985 டிசம்பரில், WRP மத்திய குழு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் மீதான விசாரணைக்கு அழைப்பு விடுத்தது மற்றும் 'ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசு ஊடுருவல் குறித்த சர்வதேச விசாரணைக் குழுவை பகிரங்கமாக' கோரியது. அனைத்துலக் குழுவையும் மற்றும் அதன் அனைத்து பிரிவுகளையும் விசாரிக்க வேண்டும் என்ற இந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையானது, SWP க்குள்ளான ஊடுருவல் குறித்து விசாரணை ஆணையத்திற்காக மே 1975 இல் அனைத்துலக்குழு எழுப்பிய கோரிக்கையை (இது பண்டா மற்றும் சுலோட்டரால் ஆதரிக்கப்பட்டது) சிதைத்து, அதை அனைத்துலக் குழுவிற்கு எதிராக திருப்புவதற்கான ஒரு இழிந்த முயற்சியாகும்.

சுலோட்டரும் பண்டாவும் SWP உடன் இணைகின்றனர்

இப்போது நாம் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் வேர்களுக்குத் திரும்புகிறோம். 1986 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுலோட்டர் மற்றும் பண்டா இருவரும் ரிம் வொல்ஃபோர்த்துடனான அனுபவத்தை மறுமதிப்பீடு செய்ய அழைப்பு விடுத்தனர், சுலோட்டர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றார் மற்றும் பண்டா தனது '27 காரணங்களில்' 'வொல்ஃபோர்த்துடனான நெருக்கடியை ஹீலி தனது சித்தப்பிரமையால் செயற்கையாக மிகைப்படுத்தினார்' என்றும் பாதுகாப்பு மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கின் முன்னோக்கு மற்றும் கொள்கை பிரச்சனைகளை கையாள்வதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்தார் என்றும் அறிவித்தார். நான்சி ஃபீல்ட்ஸ் பிரச்சினை அனைத்து விகிதாசாரத்திற்கும் அப்பால் மிகைப்படுத்தப்பட்டு உருத்திரிக்கப்பட்டது” என எழுதினார். [47]

ஜனவரி 26, 1986 இல் வெளியிடப்பட்ட WRP மத்திய குழுவின் பிரபலமற்ற தீர்மானம் 1 இல் WRP, அனைத்துலக் குழுவைக் கண்டித்து, 'திருத்தல்வாதத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்திற்கும் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் ஒரு பதிலீடாக இருந்தது. முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும், முடிவுகளும் அமெரிக்க SWP அல்லது இந்த கேள்வி பற்றி வேறு யாராலும் வெளியிடப்பட்ட பத்திரங்களுடன் ஒன்றாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டது [48]

பிப்ரவரி 2, 1986 இல், தோழர் நோர்த் WRP உறுப்பினர்களுக்கு 'பாதுகாப்பையும், நான்காம் அகிலத்தையும் பாதுகாக்க' என்ற தலைப்பில் ஒரு கடிதத்துடன் பதிலளித்தார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் மீதான WRP தலைமையின் தாக்குதல்கள் 'அனைத்துலகக் குழுவின் முழு வரலாற்றின் மீதான ஒரு பரந்த தாக்குதலின் ஒரு பகுதி' என்றும், கன்னை நோக்கங்களுக்காகவும், 'திருத்தல்வாதிகளுடன் ஒரு நல்லுறவுக்கு ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனை' என்றும் அந்தக் கடிதம் கண்டனம் செய்தது. [49]

பிப்ரவரி 7, 1986 அன்று, பண்டா தனது '27 காரணங்களை' வெளியிட்டார். அதன் முடிவில் பின்வருமாறு கூறியது: 'அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணை என்பது ஹீலியிசத்தின் மிகவும் மோசமான மற்றும் பிற்போக்குத்தனமான வெளிப்பாட்டை உள்ளடக்கியிருக்கவில்லை என்றால், அனைத்துலகக் குழுவின் எந்தவொரு விசாரணையும் முழுமையானதாகவோ அல்லது நேர்மையாகப் புறநிலைரீதியானதாகவோ இருக்காது.'

அவர், பாதுகாப்பு விசாரணையை 'சித்தப்பிரமை பிடித்த நோர்த் மற்றும் அனைத்துலகக் குழுவில் உள்ள அவரது அடிவருடிகள்' தலைமையிலான 'மோசமான சோடிப்பு' என அழைத்தார்.” [50]

ட்ரொட்ஸ்கிசத்துடனான வொல்ஃபோர்த்தின் முறிவுக்குப் பின்னர் SWP அவருக்கு செய்ததைப் போலவே, சுலோட்டரும் பண்டாவும் அனைத்துலக் குழுவுடன் முறித்துக்கொண்டதையும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை அவர்கள் கண்டித்ததையும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றது. இன்டர்காண்டினென்டல் பிரஸ்ஸின் மார்ச் 10, 1986 பதிப்பில், SWP, நியூஸ் லைன் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தது, கார்ல்டன் கல்லூரிப் பட்டதாரி டக் ஜென்னஸ், WRP ஓடுகாலிகளால் தொடங்கப்பட்ட தாக்குதலால் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணைக்கு ஒரு “அதிர்ச்சியூட்டும் அடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று எழுதினார். SWP எழுதியது, 'ஹீலிவாத முகவர்-ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை கைவிடுவதன் மூலம், இந்த WRP தலைவர்கள் இன்று புரட்சியாளர்களிடையே நிகழும் அரசியல் விவாதங்களின் நியாயமான பகுதியாக தங்கள் கருத்துக்களை முக்கியமானதாக எடுத்துக் கொள்வதற்கான முதல் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.' [51]

அவர்களின் சமீபத்திய முன்னாள் எதிரிகளின் கொண்டாட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தோழர் நோர்த் 'SWP க்கு எதிரான போராட்டம் — உண்மைகள் எதனைக் காட்டுகின்றன' என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதினார், இது மார்ச் 11 முதல் 18 வரை 1986 புல்லட்டின் இல் தொடர்ச்சியாக வந்தது. நோர்த் எழுதினார்:

பண்டாவின் கட்டுரை ஒரு அரசியல் விதியை உறுதிப்படுத்துகிறது: ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொள்ளும் அனைவரும் உடனடியாக ஹான்சனுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்த ஓடுகாலிகளுக்கு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை கண்டனம் செய்வது ஒரு கட்டாய சடங்குமுறையாகும். [52]

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை கட்சியின் முன்னணி காரியாளரின், குறிப்பாக தோழர் நோர்த்தின் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பகுதியாக இருந்தது. இது மகத்தான வரலாற்றுத் தகவல்களைத் திரட்டியது. இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் செய்தித்தாள்கள் கட்சி உறுப்பினர்களால் ஆராயப்பட்டு கவனமாகவும் மிகுந்த ஆர்வத்துடனும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. முழு கட்சி உறுப்பினர்களும் 1974-1975 முதல் 1983 வரையிலான ஆண்டுகளில் போராட்டத்தின் தாக்கத்தை புரிந்துகொள்வது அவசியம். இது பப்லோயிசத்திற்கு எதிரான போராட்டத்திலும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாற்று உள்ளடக்கத்தையும் முன்னோக்கி கொண்டுவருவதற்கான கட்டமைப்பிற்குள்ளும் உறுப்பினர்கள் தங்கள் அன்றாட அரசியல் நடவடிக்கைகளை நங்கூரமிட அனுமதித்தது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை பிரதியீடு செய்வதற்கு பதிலாக, அதை இலகுவாக்கி, ஆழப்படுத்தியுள்ளது.

இந்த காலகட்டம் இயக்கத்தின் வரலாற்றில் இரண்டு மைல்கல் நிகழ்வுகளான வொல்ஃபோர்த்துடனான பிளவும் ஒரு புதிய அரசியல் தலைமைக்கு மாறுதலும் மற்றும் 1982 இல் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் WRP இடையே வேறுபாடுகள் தோன்றுதல்களுக்கு இடையே ஒரு பாலமாக இருப்பது தற்செயலானது அல்ல. இந்த வேறுபாடுகள் பின்னர் வேர்க்கர்ஸ் லீக்கின் உறுப்பினர்களின் முழு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, WRP இன் சந்தர்ப்பவாதம் பற்றிய தோழர் நோர்த்தின் விமர்சனங்களை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளல், அதன் ஒரு பகுதியாக, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை உறுப்பினர்களின் நனவில் ஏற்படுத்திய தாக்கத்தால் தயாரிக்கப்பட்டது.

கெல்ஃபான்ட் வழக்கை கிளிஃவ் சுலோட்டர் கண்டித்ததற்கு பதிலளிக்கும் 1987 பகிரங்க கடிதத்தில், தோழர் நோர்த் எழுதினார்:

வேர்க்கர்ஸ் லீக்கின் தற்போதைய தலைமையானது வொல்ஃபோர்த்துக்கு எதிரான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தில் உருவாக்கப்பட்டது. அவரது விட்டோடலுக்கு எதிராக கட்சியின் மரபியத்தையும் வேலைத்திட்டத்தையும் பாதுகாத்தது, வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சியை உருவாக்கியது. அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டமைக்க அனைத்துலகக் குழுவின் கடந்தகாலப் போராட்டங்களின் அனைத்துப் படிப்பினைகளையும் மீண்டும் உள்ளீர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அதன் காரியாளர்கள் அரசியல் அர்த்தத்தில் வொல்ஃபோர்த்தை தோற்கடிக்க முடியும்.

மிக உயர்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளத்தில் வொல்ஃபோர்த்துக்கு எதிரான போராட்டத்தை வேர்க்கர்ஸ் லீக் வழிநடத்தியதால்தான், ட்ரொட்ஸ்கிசத்திற்கான சர்வதேசப் போராட்டத்தின் வரலாற்று உள்ளடக்கத்தில், ஃபீல்ட்ஸைச் சுற்றி எழுந்த பாதுகாப்புப் பிரச்சினைகளைக் பார்த்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமை ... இந்த கோட்பாடு அடித்தளத்தில்தான் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் உள்ளிளுக்கப்பட்டது. வேர்க்கர்ஸ் லீக் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை ஒரு தடயவியல் பயிற்சியாக பார்த்ததில்லை. விசாரணைகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இது விசாரணைகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த அளவிற்கு, வரலாற்று அனுபவங்களை தெளிவுபடுத்துவதற்கும், கடந்த காலத்தின் கசப்பான படிப்பினைகளை எதிர்கொண்டு உலக இயக்கத்தின் காரியாளர்களை மீண்டும் ஆயுதபாணியாக்குவதற்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக அவ்வாறு செய்தது. [53]

வேர்க்கர்ஸ் லீக் அதன் 1978 ஆம் ஆண்டு முன்னோக்கு ஆவணத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பின்வரும் சுருக்கத்தை உருவாக்க முடிந்தது என்பது இந்த நிகழ்ச்சிபோக்கிற்கு ஒரு சான்றாகும்:

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையானது, போல்ஷிவிசத்தின் முழு வரலாற்று தொடர்ச்சியையும் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சி மற்றும் பொய்மைப்படுத்தலின் தீய பிடியில் இருந்து நான்காம் அகிலம் மற்றும் அனைத்துலகக் குழுவின் மூலம் மீட்டெடுப்பதை தவிர வேறெதையும் பிரதிபலிக்கவில்லை. அக்டோபர் உலகத்திற்கான போராட்டத்தின் அரசியல் உருவகமான ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராக, ஸ்ராலினிசம் செய்த அனைத்து பொய்களுக்கும், திரிபுகளுக்கும், குற்றங்களுக்கும், அக்டோபர் புரட்சியின் உண்மையான வரலாறு மற்றும் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றி தொழிலாளர்களின் தலைமுறைகளை குழப்புவதற்கும், திசைதிருப்புவதற்கும் உறுதியளிக்கப்பட்ட அனைத்து கொடூரமான செயல்களுக்கும் ஒரு பாரிய அடி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஸ்ராலினிசமும் ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் அனைத்து முகமைகளும் ஒருபோதும் மீளமுடியாது. [54]

பதிலளிக்க முடியாதது: பாதுகாப்பும் நான்காம் அகிலமும் இன்று

இன்று, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை தாக்குபவர்கள் தங்களை சங்கடத்துக்கு உள்ளாகுகிறார்கள். ஆதாரங்கள் மிகப்பாரியளவில் உள்ளன. ஹான்சனை பாதுகாத்தபோதும், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை கண்டனம் செய்தபோதும், கெல்ஃபான்ட் வழக்கின் போது ஸ்போரோவ்ஸ்கி கெல்ஃபான்டின் வழக்கறிஞர்களை 'சுற்றிவளைத்து மோதினார்' என பிரகடனம் செய்தபோதும், தோழர் நோர்த்தின் கடிதத்திற்கு சுஸான் வைஸ்மனால் பதிலளிக்க முடியவில்லை. அப்பெண்மணியின் நீண்ட மௌனத்திற்காக நினைவில் இருப்பார்.

பாரிய NSA கண்காணிப்பு, காவல்துறையை இராணுவமயமாக்கல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான முடிவில்லாத தாக்குதல்களின் காலத்தில் வளர்ந்த சோசலிஸ்டுகளின் ஒரு புதிய தலைமுறை, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் புரட்சிகர பாதுகாப்பு விடயங்கள் பற்றிக் கற்பிக்கப்படுவார்கள். இந்த தலைமுறையினருக்கு, அரசின் ஊடுருவலில் இருந்து இயக்கத்தின் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகள் அபத்தமாகத் தோன்றும். ஆனால் துல்லியமாக இந்த காரணத்திற்காகவே, ஒரு புதிய சந்தர்ப்பவாதிகள் குழு ஒன்று அரசின் ஊடுருவலைப் பற்றி கவலைப்படுவது அபத்தமானது என்ற SWP இன் கூற்றுக்களை மீண்டும் கூற முயற்சிக்கிறது. இதனால்தான் மொரேனோவாத Left Voice இன் நத்தானியல் ஃபிளாங்கின் ஜூன் 23, 2022 கட்டுரையில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை ஒரு 'கேவலமான சதி கோட்பாடு' என்று எழுதினார். இது 'மிகவும் நகைப்புக்குரிய சூழல்களின் ஆதாரங்களைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை”என்றார். [55]

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் வெளிக்கொணரப்பட்ட எந்த ஒரு ஆதாரத்தையும் பிளாங்கினால் சவால் செய்ய முடியவில்லை. பப்லோவாதிகள் சில்வியா ஃபிராங்க்ளினை பாதுகாத்த அதே காரணத்திற்காக, அவர் ஜிபியு முகவர் என்று ஒப்புக்கொண்டதற்கான பகிரங்கமாக வெளியிடப்பட்ட ஆதாரங்கள் இருந்தபோதிலும், அதனை பொருட்படுத்தாமல், அரசின் முகவர்களிடமிருந்து புரட்சிகர இயக்கத்தின் அமைப்புரீதியான சுதந்திரத்தைப் பேணுவதை 'நகைப்புக்குரிய' முயற்சிகளாக முன்வைப்பதே அவரது குறிக்கோளாகும். அவர்களின் இயக்கங்கள் முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ அரசையும் அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை என்பதால் அவர்கள் தங்கள் இயக்கங்களில் அரசு ஊடுருவலையும் எதிர்க்கவில்லை. ட்ரொட்ஸ்கியைக் கொல்வதற்கான ஜிபியு வின் சதித்திட்டத்தில் சில்வியா அகெலோஃப் ஒரு ஜிபியு முகவரும் ஒரு அச்சாணியும் என்று உலக சோசலிச வலைத் தளம் நிறுவிக்காட்டிய ஒரு வருடத்திற்குப் பின்னர், ஜிபியு ஊடுருவல் பற்றிய எமது 'நகைப்புக்குரிய' ஆதாரங்களைத் தாக்கி, பிளாங்கின் தனது கட்டுரையை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவரால் பதிலளிக்கவும் முடியவில்லை. எவராலும் முடியாது.

ஜிபியு எப்படி ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தது என்ற நூலின் அறிமுகத்தில் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை அனைத்துலக்குழு விளக்கிய விதத்துடன் அவர்களின் அணுகுமுறையை ஒப்பிடுவோமானால்:

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் ஒரு 'விசாரணை' என்று குறிப்பிடுகையில், இந்த வார்த்தை கடந்த ஆறு ஆண்டுகளில் அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்தின் முழு அரசியல் மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தை பகுதிளவு மட்டுமே வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 1936-38 இன் மாஸ்கோ போலிவிசாரணைக் கட்டமைப்பை ட்ரொட்ஸ்கி அம்பலப்படுத்தியதைப் போலவே, இதுவும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அனைத்து நிறுவனங்களுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இயக்கத்தின் மிக உயர்ந்த நனவான வெளிப்பாடாகும். … உலக சோசலிசப் புரட்சியின் முழு தலைவிதியும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் பொதிந்துள்ள போராட்டத்தின் முடிவை சார்ந்துள்ளது என்பதை இந்த மேலதிக விசாரணை நிறுவியுள்ளது…

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் கண்டுபிடிப்புகள் மார்க்சிச காரியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஒரு இன்றியமையாத அடித்தளமாகவும், உலகப் புரட்சியின் சக்திவாய்ந்த கையிலிருக்கும் ஆயுதமாகவும் உள்ளது. இந்த ஆயுதம் ஏற்கனவே அம்பலப்படுத்திய முகவர்களும், இறுதியில் அரசியல்ரீதியாக அழிக்கப்போகும் முகவர்களும் எதிர்ப்புரட்சியின் முன்னணியை கட்டியெழுப்புகின்றனர். இந்த உண்மையை ஒவ்வொரு வர்க்க நனவுள்ள தொழிலாளியும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும்: சுய பாதுகாப்பிற்கான முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாற்றுரீதியாக திரட்டப்பட்ட உள்ளுணர்வும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையை அழிப்பதற்கான அதன் மூலோபாயத்தை வகுப்பதில் அதன் மிக உயர்ந்த மட்ட நனவின் வெளிப்பாட்டைக் காண்கிறது. [56]

புரட்சிகர இயக்கத்தில் ஜிபியு மற்றும் ஏகாதிபத்திய ஊடுருவல் பற்றிய இந்த விமர்சன ரீதியான பரிசீலனையை பாதுகாக்கும் ஒரே அமைப்பு அனைத்துலகக் குழு மட்டுமே. ஏனெனில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கருதும் ஒரே அமைப்பு நாங்கள் மட்டுமே. நமது இருப்பு என்பது, அரசின் முகவர்கள் மற்றும் போலி-இடதுகளின் அரசியல் கூட்டாளிகளுக்கு எதிராக போல்ஷிவிசத்தின் அரசியல் தொடர்ச்சிக்கான ஒரு திட்டமிட்ட, மிகுந்த நனவான போராட்டத்தின் விளைபொருளாகும். வொல்ஃபோர்த்துடனான பிளவின் அரசியல் சாராம்சமும் அதுதான். அதுதான் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையை வரையறுத்ததுடன், WRP உடனான உடைவில் அனைத்துலக் குழுவிற்கு வழிகாட்டியதுடன், இன்று சோசலிசத்திற்கான போராட்டத்தின் முதுகெலும்பாகவும் விளங்குகிறது.

குறிப்புகள்:

[1] https://en.wikipedia.org/wiki/Clockwork_Orange_(plot)#

[2] https://www.ucpi.org.uk/search-results/?fwp_search=Workers+Revolutionary+Part

[3] See David North, The Heritage We Defend, (Oak Park, MI: Mehring Books, 2018), Chapter 32.

[4] Seymour Hersh, New York Times, December 22, 1974. Available: https://timesmachine.nytimes.com/timesmachine/1974/12/22/432151792.html

[5] Tim Wohlforth’s Letter of Resignation from the Workers League, Trotskyism versus Revisionism, Volume Seven, “The Fourth International and the Renegade Wohlforth” (Detroit: Labor Publications, 1984), pp. 250–51.

[6] Ibid., p. 252.

[7] Ibid.

[8] From Cliff Slaughter to Tim Wohlforth, ibid., p. 258.

[9] Ibid.

[10] Ibid., p. 262.

[11] Ibid., p. 264.

[12] Findings of the Commission of Inquiry, ibid., pp. 269–70.

[13] Ibid., p. 271.

[14] Ibid., pp. 271-72.

[15] Ibid.

[16] James P. Cannon, The Struggle for a Proletarian Party (New York: Pathfinder Press, 1972), p. 41.

[17] “An answer to the slanders of Robertson and Wohlforth,” How the GPU Murdered Trotsky, ePub edition (Oak Park, MI: Mehring Books, 2015), p. 49.

[18] Joseph Hansen, “Healy’s Big Lie,” Socialist Workers Party Education for Socialists, December 1976, p. 5.

[19] “A reply to Joseph Hansen’s ‘The Secret of Healy‘s Dialectics,’” How the GPU Murdered Trotsky, ePub edition, pp. 60–62.

[20] Letter from Joseph Hansen to Cliff Slaughter, June 5, 1975, Security and the Fourth International (New York: Labor Publications, 1975), p. 136.

[21] The Gelfand Case Vol. 1 (Detroit: Labor Publications, 1985), p. 8.

[22] Ibid., pp. 29–30.

[23] “We charge Joseph Hansen,” How the GPU Murdered Trotsky, ePub edition, p.374.

[24] “Healy’s Big Lie,” p. 11.

[25] Ibid., p. 9.

[26] Ibid., p. 11.

[27] Ibid.

[28] Ibid., p. 19.

[29] Letter from Harold Robins to the SWP National Committee, How the GPU Murdered Trotsky, ePub edition, p. 395.

[30] James P. Cannon as We Knew Him (New York: Pathfinder Press, 1976) pp. 232–33.

[31] “Healy’s Big Lie,” p. 2.

[32] Ibid.

[33] Militant, May 7, 1976, p. 17.

[34] The Observer, Sunday, January 16, 1977, p. 1.

[35] Newsline, Monday, January 17, 1977.

[36] David North, “The case against the SWP—What the facts show,” Fourth International, Vol. 13 no. 2, p. 173.

[37] Eric London, AGENTS, The FBI and GPU Infiltration of the Trotskyist Movement (Oak Park, MI: Mehring Books, 2018), p. 91.

[38] Ibid., pp. 91–92.

[39] Interview with Felix Morrow by David North, June 2, 1977 (Reprinted in AGENTS, pp. 38–39).

[40] Joseph Hansen, “Healyites Escalate Frame-up of Trotskyist Leaders,” Intercontinental Press, June 20, 1977, Vol. 15 no. 23, p. 700.

[41] Ibid.

[42] Ibid., p. 701.

[43] Socialist Equality Party, Historical and International Foundations of the Socialist Equality Party (Oak Park, MI: Mehring Books, 2008), p. 106.

[44] The Gelfand Case Vol. 2, p. 651.

[45] June 11, 1982 memorandum from Central Intelligence Agency General Counsel Stanley Sporkin to CIA Director William J. Casey.

[46] David North, “A Comment on the Gelfand Open Letter,” Fourth International, Vol. 14 no. 2, June 1987, p. 73.

[47] David North, The Heritage We Defend, p. 439.

[48] Resolution 1 of the Central Committee of the Workers Revolutionary Party, January 26, 1986, Fourth International, Vol. 13 no. 2, Autumn 1986, p. 118.

[49] David North, “In Defense of Security and the Fourth International,” ibid, p. 139.

[50] “A Comment on the Gelfand Open Letter,” pp. 73–74.

[51] Doug Jenness, “Giant blow to agent-baiting campaign,” Intercontinental Press, Vol. 24 no. 5, March 10, 1986, p. 147; p. 150.

[52] “The case against the SWP—What the facts show,” Fourth International, Vol. 13 no. 2, p. 174.

[53] “A Comment on the Gelfand Open Letter,” Fourth International, Vol. 14 no. 2, p. 81.

[54] The World Economic-Political Crisis and the Death Agony of US Imperialism: Draft Resolution on the Perspectives and Tasks of the Workers League, 1978, p. 38.

[55] Nathaniel Flakin, “The Strange Story of Trotskyism in the Alps,” Left Voice, June 23, 2022, available: https://www.leftvoice.org/the-strange-story-of-trotskyism-in-the-alps/

[56] How the GPU Murdered Trotsky, ePub edition, pp. 13–14.

Loading