சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளியில், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் ஜோசப் கிஷோர் வழங்கிய விரிவுரையாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற ஆரம்ப அறிக்கை ஆகஸ்ட் 7 இல் பிரசுரிக்கப்பட்டது. “நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்” என்ற இரண்டாவது விரிவுரை ஆகஸ்ட் 14 இல் பிரசுரிக்கப்பட்டது. அனைத்து விரிவுரைகளையும் WSWS வரும் வாரங்களில் வெளியிடும்.

ஜோசப் கிஷோரின் விரிவுரை: பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்

அறிமுகம்

எதிர்வரும் நவம்பர் மாதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகளைக் குறிக்கிறது. ஜேம்ஸ் பி. கனனின் “உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குப் பகிரங்க கடிதம்” வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர், அதன் அரசியல் அடித்தளத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நவம்பர் 23, 1953 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டு 100 ஆண்டுகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு கால்வாசி பகுதி, WSWS தொடங்கப்பட்டதில் இருந்தும், கிட்டத்தட்ட முக்கால்வாசி பகுதி அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழும் இருந்துள்ளது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரதான தலைவரும் முன்மொழிவாளருமான மிஷேல் பப்லோவுக்குப் பின்னர், பப்லோவாதம் எனப்படும் திருத்தல்வாத, சந்தர்ப்பவாத வடிவத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பாதுகாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் என்ற ஆவணத்தில் நாம் குறிப்பிடுகையில், “நான்காம் அகிலம் எதன் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த இன்றியமையாத அரசியல் கொள்கைகளும், ஒரு சுயாதீனமான புரட்சிகர அமைப்பாக அதன் உயிர்வாழ்வும்,” “ஆபத்தில் இருப்பதாக” நாம் எழுதினோம். [1]

பப்லோவாதம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுத்தது. அமெரிக்காவில் பப்லோவின் ஆதரவாளர்கள் கம்யூனிச-விரோத தொழிற்சங்க எந்திரத்திற்கு அவர்கள் அடிபணிந்திருந்ததை நியாயப்படுத்த அவருடைய கருத்துருக்களைப் பயன்படுத்திய போதினும், ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தைத் தழுவியதே அதன் ஒரு மைய அம்சமாக இருந்தது. நாம் காக்கும் மரபியத்தில் டேவிட் நோர்த் விவரிப்பதைப் போல, அதன் சாராம்சத்தில், “பப்லோவாதம் ஒவ்வொரு விஷயத்திலும் கலைப்புவாதமாக இருந்தது, (இருக்கிறது): அதாவது, சோசலிசப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாளுமையையும் மற்றும் நான்காம் அகிலத்தின் உண்மையான சுயாதீனமான இருப்பை, தொழிலாள வர்க்கம் வகிக்கும் வரலாற்று பாத்திரத்தின் நனவான வெளிப்பாடாகவும் அங்கீகரிக்க அது மறுத்தது…” [2]

மேற்கோள் குறிப்பிடுவதைப் போல, நாம் வெறுமனே கடந்த கால அரசியல் போக்குகளை மட்டும் கையாளவில்லை. “அரசு முதலாளித்துவ” அமைப்புகள் தொடர்பான விவகாரங்களோடு சம்பந்தப்பட்ட பல விஷயங்களில், 1939-1940 இல் SWP க்குள் ஏற்பட்ட பிளவுகளின் தோற்றுவாய்களில் அவற்றின் மூலங்களைக் கொண்டிருந்த, பப்லோவாத போக்குகளும் மற்றும் அவற்றின் வழித்தோன்றல்களும், இன்றும் கூட ரஷ்யாவுக்கு எதிரான இந்த அமெரிக்க-நேட்டோ போரின் தீவிர ஆதரவாளர்களாகவும் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கான முக்கியமான ஆதரவான அமைப்புக்களாகவோ அல்லது சில விஷயங்களில் புட்டினின் பிற்போக்குத் தேசியவாதத்தை ஆதரிப்பவர்களாகவோ செயல்படுகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்ததில் உச்சத்தை எட்டிய, பப்லோவாத்தின் தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தியைக் குறித்து நான் இந்த விரிவுரையில் மீளாய்வு செய்யவிருக்கிறேன். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் 2019 கோடைப் பள்ளியில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட நான்காம் அகிலத்தின் வரலாற்று காலகட்டங்களின் வகைப்படுத்தலில், இது, 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் தொடங்கிய இரண்டாம் காலகட்டம் என்று நாம் குறிப்பிட்டதன் இறுதிப்பகுதியையும், பகிரங்கக் கடிதத்தின் வெளியீடு மற்றும் ICFI இன் ஸ்தாபிதத்துடன் தொடங்கிய மூன்றாம் காலகட்டத்தின் ஆரம்பத்தையும் இது குறிக்கிறது.

ஆனால் இந்த வரலாற்றை மீளாய்வு செய்வதற்கு முன்னர், நம் இயக்கத்திலும் அல்லது வேறு இடங்களிலும் தோன்றிய பப்லோவாதம் மீதான மிகவும் விரிவார்ந்த பகுப்பாய்வான, மற்றும் நான் எடுக்கவிருக்கும் முதன்மை ஆதாரமான, நாம் காக்கும் மரபியத்தில் இருந்து ஒரு புள்ளியைக் குறிப்பிட விரும்புகிறேன். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான, வேர்க்கர்ஸ் லீக்கின் (Workers League) பிரசுரமான Bulletin பத்திரிகையில், ஏப்ரல் 1986 க்கும் பிப்ரவரி 1987 க்கும் இடையே நாம் காக்கும் மரபியத்தை தோழர் நோர்த் 35 தொடராக எழுதினார்.

நாம் காக்கும் மரபியம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசிய சந்தர்ப்பவாதிகளுடனான பிளவுக்குப் பின்னர், “அனைத்துலகக் குழு ஏன் உடனடியாகக் கலைக்கப்பட்டு, நான்காம் அகிலம் கட்டப்பட வேண்டும் என்பதற்கு 27 காரணங்கள்” என்ற தலைப்பில் WRP தலைவர்களில் ஒருவரான மைக்கல் பண்டா முன்வைத்த ஆவணத்திற்கு விடையிறுப்பாக, நாம் காக்கும் மரபியம் பிரசுரிக்கப்பட்டது. பிப்ரவரி 7, 1986 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட பண்டாவின் அந்த ஆவணம், அதற்கடுத்த நாள் நடத்தப்பட்ட WRP இன் “எட்டாவது காங்கிரஸில்” அங்கீகரிக்கப்பட்டது. WRP க்குள் இருந்த ICFI இன் ஆதரவாளர்கள் அனைவரும், அந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து, பண்டா மற்றும் சுலோட்டரால் இலண்டன் பொலிஸாரின் உதவியால் தடுக்கப்பட்டார்கள்.

நாம் காக்கும் மரபியத்தின் கணிசமான பகுதி, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மீளாய்வு செய்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “நான்காம் அகிலமும் யூகோஸ்லாவியப் புரட்சியும்” முதல் “ஜேம்ஸ் பி. கனனின் பகிரங்கக் கடிதம்” வரையிலான ஏழு அத்தியாயங்களும், அதைத் தொடர்ந்து “பிளவுக்குப் பின்னர்” முதல் “இலங்கையில் வரலாற்றுக் காட்டிக்கொடுப்பு” வரையிலான 11 அத்தியாயங்களும் உள்ளன. இவை 1963 இல் பப்லோவாதிகளுடன் SWP மறுஐக்கியம் கொள்வதற்கான மாநாட்டிலும், சிலோனில் (இலங்கையில்) ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) நுழைந்ததிலும் உச்சத்தை எட்டிய, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) அரசியல் சீரழிவின் மீது ஒருமுனைப்பட்டிருந்தன. மொத்தத்தில், இந்த அத்தியாயங்களே நாம் காக்கும் மரபியத்தில் பாதிக்கும் மேலாக உள்ளன.

நாம் காக்கும் மரபியத்தில் பப்லோவதம் மீது இவ்வாறு விரிவாக ஒருமுகப்பட்டதற்கான காரணம், WRP உடனான மோதலில், ஒட்டுமொத்த மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபியத்தின் பாதுகாப்பும் பணயத்தில் இருந்ததுதான். உண்மையில் இது, ஹீலியினது “அறிகைக்கான நடைமுறை” (practice of cognition) மீது நோர்த் வழங்கிய விமர்சனம் முதல், மார்க்சிசத்தின் தோற்றுவாய்கள் வரையில் பின்னோக்கி நீண்டிருந்தது. ஆனால் குறிப்பாக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையாக அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமை மற்றும் அதன் இன்றியமையாத அரசியல் அடித்தளங்கள் என இரண்டையும் பாதுகாப்பது மிக முக்கியமானதாக இருந்தது.

இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட விஷயம், அக்டோபர் 25, 1985 தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டது. அது, “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை வெளிப்படையாக அங்கீகரிப்பதன் அடிப்படையில், WRP இன் உறுப்பினர்களை மறுபதிவு செய்ய” அழைப்பு விடுத்தது. அனைத்துலக இயக்கத்தின் ஆளுமையை ஏற்க WRP தலைமை மறுத்தமை, அதன் தேசிய சந்தர்ப்பவாத அரசியலுடனும், மற்றும் ஜனவரி 23, 1984 இல் மைக் பண்டாவுக்கு தோழர் நோர்த் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தவாறு, “தீர்மானங்களும் அணுகுமுறையும், இரண்டுமே, வரலாற்று ரீதியில் நாம் பப்லோவாதத்துடன் தொடர்புபடுத்திக் காட்டியவர்களின் அதேபோன்ற நிலைப்பாடுகளை நோக்கி” பின்னோக்கி திரும்புவதுடன் பிரிக்கவியலாதவாறு தொடர்புபட்டிருந்தது. [3]

இவ்விதத்தில், பண்டாவுக்குப் பதிலளிக்கும் போதும் மற்றும் ICFI இன் அரசியல் அடித்தளங்களை மீளப்பலப்படுத்தும் போதும், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றை விரிவாக மறுபரிசீலனை செய்வது அவசியமாக இருந்தது. 1982 மற்றும் 1986 க்கு இடையே அனைத்துலகக் குழுவுக்குள் அபிவிருத்தி அடைந்த மோதலின் போது, வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையைப் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கல்வியூட்டுவது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. 1974 இல் வொல்ஃபோர்த் விலகிய பின்னர் கட்சிக்குத் தலைமை தாங்கிய தோழர்கள், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் அந்தப் போராட்டத்தின் ஆவணங்களை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தியதன் அடிப்படையிலும் கட்சிக்குள் வென்றெடுக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் சொல்லப் போனால், வொல்ஃபோர்த்தால் அவரது கட்டுப்பாடற்ற அகநிலைவாதத்திற்கும் மற்றும் SWP தலைவர் ஜோசப் ஹான்சனின் கரங்களில் அவர் சென்று சேர்ந்ததற்கும் அவரால் ஏன் எந்த ஆதரவையும் வென்றெடுக்க முடியவில்லை என்பதை இது விவரிக்கிறது.

பப்லோவாதத்தின் தோற்றுவாய்கள் மீது ஒருமுனைப்பட்டிருந்த நாம் காக்கும் மரபியத்தில் மற்றொரு முக்கிய அம்சமும் உள்ளது. அது 1980 களின் போது கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளில் தீவிரமடைந்து வந்த நெருக்கடியுடன் தொடர்புடையதாகும். ஆரம்ப அறிமுக உரையில் தோழர் நோர்த் குறிப்பிட்டதைப் போல, நவம்பர் 1953 இந்தப் பிளவு, அதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ராலினின் மரணத்தாலும் மற்றும் ஸ்ராலினின் மரணத்தால் ஸ்ராலினிசத்திற்குள் ஏற்பட்ட நெருக்கடியாலும் விரைவுபடுத்தப்பட்டு இருந்தது. அதற்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் WRP உடனான பிளவு, ஸ்ராலினிச எந்திரத்தின் சிதைவின் இறுதிக் கட்டத்தின் போதும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இறுதிக் கலைப்புக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னரும் ஏற்பட்டது.

ஸ்ராலினிசம் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதே 1950 களில் பப்லோவாதம் முன்னெடுத்த நிலைப்பாடாகும். ICFI உடனான பிளவுக்குச் சற்று முன்னதாக பண்டா அறிவிக்கையில், சோவியத் ஒன்றியத்தின் இருப்பு “தீர்க்கப்பட்டுவிட்ட கேள்வி” என்று அறிவித்தார். பண்டா அவரது “27 காரணங்கள்” ஆவணத்தில் அனைத்துலகக் குழுவுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் மரபியத்தைப் பாதுகாப்பதாக வாதிட்டிருந்த நிலையில், அதை எழுதி ஓராண்டுக்கும் குறைந்தக் காலத்திற்குள், அவர் ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்து, வெளிப்படையாக ஸ்ராலினிசத்தைத் தழுவினார். நாம் காக்கும் மரபியத்தின் கடைசி மூன்று அத்தியாயங்களில் மீளாய்வு செய்யப்பட்டதைப் போல, அரசு சொத்துறவுகளின் எந்தவொரு கலைப்பும் “அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டத்திற்குச் செல்லும் வளர்ச்சியின்” இயங்கியல் விதியை மீறுவதாக இருக்கும் என்பதால், அது சாத்தியமற்றது என்று பண்டா வலியுறுத்தினார். [4]

கிழக்கு ஐரோப்பிய அரசுகள் மற்றும் ஸ்ராலினிசம் மீதான பப்லோவாத நிலைப்பாடுகளைக் குறித்து நாம் காக்கும் மரபியத்தின் விரிவான பகுப்பாய்வு, WRP உடனான பிளவுக்கு முன்னர் ஏற்பட்ட கொந்தளிப்பான அரசியல் சம்பவங்களைப் புரிந்து கொள்ளவும் மற்றும் விடையிறுக்கவும் ICFI இன் காரியாளர்களைத் தயார் செய்தது. பப்லோவாதத்தின் நவ-ஸ்ராலினிச கற்பனைகள் அரசியல் யதார்த்தத்தின் முன்னால் நொருங்கியதுடன், அடுத்தடுத்த சம்பவங்களால் அவை தீர்க்கமாக மறுத்தளிக்கப்பட்டன. நாம் பலமுறை வலியுறுத்தி இருப்பதைப் போல, WRP இன் தேசிய சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக அனைத்துலகக் குழுவின் வெற்றி, தத்துவார்த்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஆழ்ந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளுடன் இணைந்திருந்தன. அவை WRP உடனான உடைவுக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கின.

பப்லோவாதத்தின் முன்னோடிகள்: இரண்டாம் உலகப் போரின் போது நான்காம் அகிலத்திற்குள் நடந்த மோதல்கள்

இது, 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் எழுந்த அரசியல் மோதல்கள் பற்றிய விரிவுரை அல்ல. எனினும், ட்ரொட்ஸ்கி படுகொலைக்குச் செய்யப்படுவதற்கு முன்னர் 1939-1940 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள் குட்டி-முதலாளித்துவ எதிர்ப்புடனான மோதலில் எழுந்த அரசியல் பிரச்சினைகளும், ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் SWP இல் இருந்த பின்னோக்கர்களுக்கு (Retrogressionists) எதிரான மற்றும் மோரோ-கோல்ட்மன் அணிக்கு எதிரான போராட்டமும் குறிப்பாக பப்லோவாதத்துடனான பிந்தைய மோதலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், அவற்றைக் குறித்து சில குறிப்புகளை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகர் லியோன் ட்ரொட்ஸ்கி

1939 செப்டம்பரில் SWP இல் இருந்த பேர்ன்ஹாம்-சாக்ட்மன்-ஏபெர்ன் (Burnham-Shachtman-Abern) அணி உடனான மோதலுக்கு மத்தியில் பிரசுரிக்கப்பட்ட “சோவியத் ஒன்றியம் போரில்” (The USSR in War) என்ற அவரது கட்டுரையில், ட்ரொட்ஸ்கி, அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கையானது, சோவியத் ஒன்றியத்தின் வர்க்கத் தன்மையை அடிப்படையில் இருந்து மறுமதிப்பீடு செய்ய கோருகிறது என்று வலியுறுத்தியவர்களின் நிலைப்பாட்டைக் கவனத்திற்கு எடுத்திருந்தார். அதை இனி ஒரு “தொழிலாளர் அரசாக” வரையறுக்க முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். ஜேர்மன் “இடது கம்யூனிஸ்ட்” ஹ்யூகோ உர்பான்ஸ் (Hugo Urbahns) அறிவுறுத்திய “அரசு முதலாளித்துவம்”, அல்லது இத்தாலிய “இடது கம்யூனிஸ்ட்” புருனோ ரிஸ்ஸி (Bruno Rizzi) மற்றும் ஜேம்ஸ் பேர்ன்ஹாம் (James Burnham) முன்மொழிந்த “அதிகாரத்துவக் கூட்டுழைப்பு” (bureaucratic collectivism) போல, ஒரு புதிய வரையறை தேவைப்படுவதாக அறிவித்தார்கள். இந்த வார்த்தைப் பிரயோகரீதியிலான கருத்து முரண்பாடுகளுக்கு அடித்தளத்தில், இந்த சகாப்தத்தின் இயல்பையும் மற்றும் தொழிலாள வர்க்கம் வகித்த பாத்திரத்தையும் அடிப்படையிலேயே மறுமதிப்பீடு செய்வது தங்கியிருந்ததாக ட்ரொட்ஸ்கி விவரித்தார். அவர் பின்வருமாறு எழுதினார்:

விஞ்ஞான ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் —இது வெறுமனே வார்த்தைப் பிரயோகரீதியிலானதல்ல.— இந்த கேள்வி பின்வருமாறு தன்னை முன்னிறுத்துகிறது: அதிகாரத்துவம், ஒரு சமூக அமைப்புமுறையாக தற்காலிக வளர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறதா, அல்லது இந்த வளர்ச்சி ஏற்கனவே வரலாற்று ரீதியாக இன்றியமையாத அமைப்பாக மாறியுள்ளதா? சமூக விகார வளர்ச்சி (Social excrescences), வரலாற்றுச் சூழல்களை உள்ளடக்கிய ஒரு “தற்செயலான” (அதாவது தற்காலிகமான மற்றும் அசாதாரணமான) விளைபொருளாகவே இருக்க முடியும். ஒரு சமூக அமைப்பு (சுரண்டும் வர்க்கம் உட்பட ஒவ்வொரு வர்க்கமும் போன்றவை) உற்பத்தியில் ஆழமாக வேரூன்றிய உள்தேவைகளின் விளைவாக மட்டுமே வடிவம் பெறமுடியும். இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிக்காவிட்டால், பின் இந்த முழு சர்ச்சையும் வார்த்தைகளால் மலடாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு விடும். [5]

அதாவது, சோவியத் ஒன்றியத்தின் வரையறை பற்றிய கேள்வியானது, ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு “தற்காலிக வளர்ச்சியா,” ஒரு “விகாரமா”, முதலாளித்துவச் சொத்து உறவுகளை மீண்டும் கொண்டு வர வழி வகுக்குமா அல்லது தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஓர் அரசியல் புரட்சியில் தூக்கியெறியப்படுமா அல்லது அது “உற்பத்தியின் உள் தேவைகளில்” வேரூன்றியதா, ஆகவே அதற்கு ஒரு முற்போக்கான வரலாற்றுப் பாத்திரம் உள்ளதா என்ற மிகவும் அடிப்படையான பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டிருந்தது. இந்த சகாப்தத்தின் தன்மையைக் குறித்தும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் குறித்தும், இந்த புறநிலை சக்தியின் தலைமையாக நான்காம் அகிலம் வகிக்கும் பாத்திரம் மீதுமான ஒரு மதிப்பீடு இந்த கேள்வியுடன் பிணைந்திருந்தது.

செப்டம்பர் 12, 1939 இல் ட்ரொட்ஸ்கி கனனுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்துகையில், “சோவியத் ஒன்றியம் பற்றிய கேள்வியை,” “நம் காலத்தின் ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் இருந்து ஒதுக்கி விட முடியாது. ஒன்று, ஸ்ராலின் அரசு ஓர் தோன்றிமறையும் உருவாக்கமாக உள்ளது, ஒரு பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் தொழிலாளர்களின் உருக்குலைந்த அரசாக உள்ளது, அல்லது ‘அதிகாரத்துவக் கூட்டுழைப்பு’ (bureaucratic collectivism - Bruno R. La Bureaucratisation du Monde, Paris 1939) ஒரு புதிய சமூக உருவாக்கமாக உள்ளது, உலகெங்கிலும் முதலாளித்துவத்தை (ஸ்ராலினிசம், பாசிசம், புதிய உடன்படிக்கைகள், இன்னும் பலவற்றை) பிரதியீடு செய்கிறது. தொழிலாளர்களின் அரசா, தொழிலாளர்களின் அரசு இல்லையா; வர்க்கமா, வர்க்கம் இல்லையா என இன்னும் பிற வார்த்தைப்பிரயோக பரிசோதனைகள் இந்த வரலாற்று அம்சத்தின் கீழ் மட்டுமே ஓர் அர்த்தத்தைப் பெறுகின்றன. மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது மாற்றீட்டைத் தேர்ந்தெடுப்பவர், பகிரங்கமாகவோ அல்லது மௌனமாகவோ, உலக பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து புரட்சிகர சாத்தியக்கூறுகளும் தீர்ந்து விட்டதாகவும், சோசலிச இயக்கம் திவாலாகி விட்டதாகவும், பழைய முதலாளித்துவம் ஒரு புதிய சுரண்டும் வர்க்கமாக தன்னை ‘அதிகாரத்துவக் கூட்டுழைப்புக்குள்’ (bureaucratic collectivism) மாற்றி வருகிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்,” என்று வலியுறுத்தினார். [6] (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

“அரசு முதலாளித்துவத்தின்” பல்வேறு வடிவங்கள், சோவியத் ஒன்றியம் ஒரு தொழிலாளர் அரசு என்ற வரையறையை நிராகரித்து ஏகாதிபத்தியத்தை தழுவுவதில் வேரூன்றி இருந்தபோதும் கூட, அதிகாரத்துவம் ஒரு சுயாதீனமான பாத்திரம் வகிக்க இருக்கின்றது என்ற 1950களில் எழவிருந்த பப்லோவாதத்தின் அடிப்படை நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டன. சாக்ட்மன், பேர்ன்ஹாம், ஏபெர்ன் மற்றும் இன்னும் பலரின் வார்த்தை கண்டுபிடிப்புகள் அவநம்பிக்கையானவை என்பதோடு, அவை 1930 களின் அரசியல் தோல்விகளுக்கு நடுத்தர வர்க்க புத்திஜீவித அடுக்குகளின் விரக்தியைப் பிரதிபலித்தன.

சாக்ட்மன், பேர்ன்ஹாம், ஏபெர்ன் அணியுடனான மோதலின் போது, தேசியமாயக்கல்களைக் குறித்த ஒரு மதிப்பீடு செய்ய வேண்டியதும் அவசியமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிரதேசங்களில் இத்தகைய தேசியமயமாக்கல்களை மேற்கொண்டு வந்தது. இந்த நடவடிக்கைகளைக் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, ஸ்ராலினிச ஆட்சியின் அதிகாரத்துவ நடவடிக்கைகளை ஸ்ராலினிசம் ஒட்டுமொத்தமாக வகித்த சர்வதேச எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தின் உள்ளடக்கத்தில் நிறுத்தியது. “சோவியத் ஒன்றியம் போரில்,” என்ற கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதினார்:

அதன் தன்மையில் புரட்சிகரமாக உள்ள இந்த நடவடிக்கை [அதாவது, போலந்தில் தேசியமயமாக்கல்] “அபகரிப்பாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்வது” இந்த விஷயத்தில் ஓர் இராணுவ அதிகாரத்துவ வகையில் அடையப்படுகிறது. புதிதாக வந்த பிரதேசங்களில் வெகுஜனங்களின் சுயாதீனமான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்காமல், ஒரு புதிய ஆட்சியை அமைப்பது அவ்வாறான அழைப்பு இன்று சாத்தியமற்றது என முழு எச்சரிக்கையோடு கூறினாலும் கூட, விழித்தெழும் இந்தப் புரட்சிகர மக்கள் மீது அதிகாரத்துவத்தின் அதிகாரப்பிடியை உறுதிப்படுத்தி வைப்பதற்காக, சந்தேகத்திற்கிடமின்றி அது ஈவிரக்கமற்ற பொலிஸ் நடவடிக்கைகளால் ஒடுக்கப்படும். இது இந்த விவகாரத்தின் ஒரு பக்கம் தான். ஆனால் மற்றொரு பக்கமும் உள்ளது. ஹிட்லர் உடனான இராணுவக் கூட்டணி மூலம் போலந்தை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறைப் பெற, கிரெம்ளின் சோவியத் ஒன்றிய மக்களையும் ஒட்டுமொத்த உலக மக்களையும் நீண்ட காலமாக ஏமாற்றியது, தொடர்ந்து ஏமாற்றுகிறது. இதன் மூலம் கம்யூனிச அகிலத்தில் உள்ள அதன் சொந்த உறுப்பினர்களை முழுமையாக கலைத்து விடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஏதாவது ஒரு பகுதியில் சொத்துறவுகளை மாற்றுவது எவ்வளவு தான் முக்கியமாக இருந்தாலும், நமது பிரதான அரசியல் நோக்கம் அதுவல்ல, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவையும் ஒழுங்கமைப்பையும் மாற்றி, முந்தைய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் புதிய வெற்றிகளை அடைவதற்குமான அவர்களின் ஆற்றலை உயர்த்துவதே நமது நோக்கமாகும். ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், இதிலிருந்து தான், மாஸ்கோவின் ஒரே தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு, மொத்தத்தில் அவற்றின் பிற்போக்குத்தன்மையைக் கொண்டுள்ளது என்பதுடன், உலகப் புரட்சிக்கான பாதையில் அது பிரதான முட்டுக்கட்டையாக அமைகிறது. [7]

சாக்ட்மனினதும் பேர்ன்ஹாமினதும் பரிணாமம், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வையும் மற்றும் ஜேம்ஸ் பி. கனன் தலைமையில் SWP இன் பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டையும் சரியாக நிரூபித்துக் காட்டியது. ஏப்ரல் 1940 இல் SWP இல் இருந்து பிரிந்த பின்னர், சாக்ட்மனும் பேர்ன்ஹாமும் “தொழிலாளர் கட்சியை” (Workers Party) உருவாக்குவதில் ஒருமித்து செயல்பட்டனர். ஒரு மாதத்திற்குள், பேர்ன்ஹாம், இனி அவர் ஒரு மார்க்சிஸ்ட் இல்லை என்றும், “மேலும் ‘சோசலிசம் தவிர்க்கவியலாதது’ என்று கூறுவது அர்த்தமற்றது என்பதோடு, சோலிசம் ‘மட்டுமே முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்றீடு’ என்பது தவறு என்றும் அறிவித்து, தொழிலாளர் கட்சியில் இருந்து இராஜினாமா செய்தார். 1950 களின் போது, பழமைவாத இயக்கத்திற்கு ஒரு முன்னணி சித்தாந்தவாதியாக எழுந்த பேர்ன்ஹாமுக்கு 1983 இல் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சுதந்திர விருது (Medal of Freedom) வழங்கினார்.

மக்ஸ் சாக்ட்மன் (1904-1971) (credit: Marxists.org) [Photo: Marxists.org]

சாக்ட்மன், 1949 இல் “சுதந்திர சோசலிஸ்ட் லீக்கை” (Independent Socialist League - ISL) உருவாக்கினார். 1950 களின் போது, ISL, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளை ஆதரித்தும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள் தன்னை ஒருங்கிணைத்தும், கூர்மையாக வலதை நோக்கி நகர்ந்தது. 1958 இல், அது, ஜனநாயகக் கட்சியின் பிற்போக்குத்தனமான பனிப்போர் அணியின் கருவியாகச் செயல்பட்டு வந்த சோசலிஸ்ட் கட்சிக்குள் தன்னை ஒருங்கிணைத்து, அதன் தலைமைக்கு வந்தது.

1940 ஆகஸ்டில் ஒரு GPU முகவரால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், SWP மற்றும் நான்காம் அகிலத்திற்குள் வெளிப்பட்ட பல எதிர்ப்புப் போக்குகள், பல வடிவங்களில், குட்டி-முதலாளித்துவ எதிர்ப்பின் அடிப்படை முன்னோக்கை எடுத்தன. சர்வதேச ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் (Internationale Kommunisten Deutschlands - IKD) அமைப்பின் ஜோசப் வேபர் தலைமையில் “மூன்று கருத்துருக்கள்” குழுவும் (“பின்னோக்கர்கள்” – Retrogressionists), 1944 மற்றும் 1946 இடையே SWP க்குள் இருந்த மோரோ-கோல்ட்மன் கன்னையும் இதில் உள்ளடங்கும். இந்த போக்குகளின் அரசியலை மீளாய்வு செய்வதற்கான இன்றியமையாத ஆதாரமாக மீண்டும் நாம் காக்கும் மரபியம் அமைகிறது. குறிப்பாக அத்தியாயம் 8 (“பின்னோக்கர்களின் மூன்று கருத்துருக்கள் குழு” மற்றும் அத்தியாயம் 9 (“மோரோ-கோல்ட்மன் கன்னை”) ஆகியவையும், அத்துடன் 30 ஆம் நினைவாண்டு பதிப்புக்கான முன்னுரையும் இன்றியமையாதவையாக உள்ளன. இவற்றில் இவ்விரு போக்குகளின் நிலைப்பாடுகளும், டானியல் கைடோ (Daniel Gaido) மற்றும் வெலியா லூப்பரெல்லோவுக்கு (Velia Luparello) எதிரான ஓர் எதிர்விவாத வகையில் கையாளப்படுகின்றன.

ஐரோப்பாவில் பாசிசம் ஜெயித்து விட்டது என்ற அடிப்படையில், எதிர்காலத்திற்கு வெகு தொலைவு வரை சோசலிசப் புரட்சி பின்தள்ளப்பட்டு விட்டது என்று 1940 களின் முற்பகுதியில் பின்னோக்கர்கள் தீர்மானித்தனர். அவர்கள் எழுதினார்கள், “எவ்வாறாயினும், அடிப்படையில் ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு நிகரான ஓர் இடைநிலை படிநிலை (intermediate stage) இல்லாமல், பாசிசத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவது ஒரு கற்பனாவாதமாக இருப்பதை ஒருவர் காண்கிறார்.” [8] இந்த நிலைப்பாடு, 1943 இல் வெளியிடப்பட்ட “முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா அல்லது சோசலிசமா” என்பதில் விவரிக்கப்பட்டது: “தொழில்துறை முதலாளித்துவத்தின் மற்றும் விஞ்ஞான சோசலிசத்தின் வசந்த காலத்தில் நிலவிய நூற்றாண்டு காலப் பழமையான பிரச்சினை — அதாவது, அரசியல் சுதந்திரத்தைக் கைப்பற்றுவதற்கும், (ரஷ்யாவிற்கும் சேர்த்து) ஜனநாயகத்தை நிறுவுவதற்கும், தேசிய விடுதலையும் தொழிலாளர் இயக்கத்தை நிறுவுவதும் தவிர்க்கவியலாத முன்நிபந்தனையாகும் என்பதே அதிமுக்கிய அரசியல் பிரச்சனையாக உள்ளது.” [9] வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த சகாப்தத்தை சர்வதேச சோசலிசப் புரட்சியின் சகாப்தமாக கருத முடியாது, மாறாக தலைகீழாக (பின்னோக்கி) முதலாளித்துவ ஜனநாயக தேசியப் புரட்சியின் காலகட்டத்திற்கு திரும்புவதாக உள்ளது என்று கூறப்பட்டது.

மோரோ-கோல்ட்மன் கன்னை 1940 களின் மத்தியில் இருந்து இந்த நிலைப்பாடுகளை ஏற்று, “ஒரு புரட்சிகர கட்சி இல்லை” அதனால் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை என்று அது முடிவு செய்தது. 1946 இல் மோரோ எழுதினார்: “’புரட்சிகர கட்சி மட்டுமே இல்லை’ என்று கூறுவதற்குப் பதிலாக,” “குறைந்தபட்சம் நமக்கு நாமேயாவது, ‘புரட்சிகரக் கட்சி இல்லாததே, கிளர்ச்சிகளை வைத்து பார்க்கையில், மிகவும் அடிப்படையான கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்குரிய புரட்சிகரமான நிலைமைகளை மாற்றி உள்ளது’ என்று நாம் கூறிக் கொள்ள வேண்டும்,” என்றார். [10]

அவர்களின் நியாயப்படுத்தல்கள் மற்றும் அரசியல் நோக்குநிலைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், (பேர்ன்ஹாம்-சாக்ட்மன் அணி, மூன்று கருத்துருக்கள் குழு மற்றும் மோரோ-கோல்ட்மன் அணியினது) திருத்தல்வாதத்தின் ஆரம்ப வடிவங்கள் 1950 களின் முற்பகுதியில் அபிவிருத்தியான பப்லோவாதத்துடன் நிறைய பொதுவான அம்சங்களைப் பகிர்ந்திருந்தன. நாம் காக்கும் மரபியத்தின் 30 ஆம் நினைவாண்டு பதிப்பின் முன்னுரையில் தோழர் நோர்த் எழுதுவதைப் போல, “தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலை நிராகரிப்பதே” அவர்கள் அனைவரையும் இணைத்த இன்றியமையாத அரசியல் தொடர்பாக இருந்தது.

1940 களின் பிற்பகுதியில் எழுந்த, பப்லோ மற்றும் மண்டேலின் திருத்தல்கள், அவர்கள் ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிடுவதை மேலோட்டமான இடதுசாரி வாய்வீச்சினால் மூடிமறைத்தது. ஆனால் அவர்களின் முன்னோக்கில், சோசலிசத்தை ஸ்தாபிப்பதில் முன்னணி சக்தியாக தொழிலாள வர்க்கம் இருக்கவில்லை மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் இருந்தது. பப்லோவாத கோட்பாடு, சாக்ட்மனின் கோட்பாட்டின் ஒரு விசித்திரமான தலைகீழ் வடிவமாக இருந்தது. சாக்ட்மன்வாதிகள், சமூகச் சுரண்டலின் ஒரு புதிய வடிவத்திற்கு முன்னோடியாக ஸ்ராலினிச ஆட்சியின் “அதிகாரத்துவ கூட்டுழைப்புவாதத்தை” கண்டித்த நிலையில், பப்லோவாதப் போக்கோ இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நிறுவப்பட்ட அதிகாரத்துவ ஸ்ராலினிச ஆட்சிகள், முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கான வரலாற்று மாற்றத்தின் அவசியமான வடிவமாக இருக்கப் போகிறது என்று அறிவித்தது. இந்த போக்குகள் அனைத்தும், ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வழியில், தொழிலாள வர்க்கம் தீர்மானகரமான புரட்சிகரமற்ற பாத்திரம் வகிக்கின்றது. வரலாற்றின் நிகழ்ச்சிப்போக்கில் அது ஒரு தீர்க்ககரமான, செயற்திறனுள்ள பாத்திரத்தை வகிக்கவில்லை என்ற அரசியல் முன்னோக்கில் அடித்தளத்தை கொண்டிருந்தன. [11] (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

போருக்குப் பிந்தைய நான்காம் அகிலமும், பப்லோவாதத்தின் தோற்றுவாய்களும்

நான்காம் அகிலத்திற்குள் பப்லோவாதம் எழுந்ததை, போருக்குப் பிந்தைய காலத்தில் நிலவிய முரண்பாடான அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இது, ஒருபுறம் ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் அதன் குற்றங்களால் சாத்தியமாக்கப்பட்ட ஒரு பொருளாதார மறுஸ்திரப்பாட்டிலும், மறுபுறம், காலனித்துவ-எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தின் மேலெழுச்சியாலும் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது.

“போருக்குப் பிந்தைய” அமைப்புமுறையின் கட்டமைப்பானது, போரின் இறுதி ஆண்டுகளில் இருந்தே உருவெடுக்கத் தொடங்கியது. சர்வதேச நாணய நிதியத்தைத் (IMF) தோற்றுவித்த ஜூலை 1944 பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம், மற்றும் தங்கத்துடன் இணைக்கப்பட்ட அமெரிக்க டாலர் அடிப்படையிலான சர்வதேச நாணய முறை ஏற்படுத்தப்பட்டமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். பின்னர், நாஜி ஆட்சியின் இறுதித் தோல்வியோடு 1945 மே மாதம் அது நிபந்தனையின்றி சரணடைவதற்கு முன்னர் மற்றும் ஜூலை-ஆகஸ்ட் 1945 இல் பொட்ஸ்டாம் மாநாட்டுக்கு முன்னரே, பிப்ரவரி 1945 இல் நடந்த யால்டா மாநாட்டில், ஐரோப்பாவைப் பங்கிட்டுக் கொள்வதன் மீதும் மற்றும் போர் முடிந்ததும் வெளிப்பட்ட புரட்சிகர மேலெழுச்சிகளை ஒடுக்குவதன் மீதும் ஸ்ராலின் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன் ஓர் உடன்பாட்டை எட்டினார்.

யால்டாவில் சேர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ஸ்ராலின்

முக்கியமாக ஐரோப்பாவில் ஏற்படும் சோசலிசப் புரட்சி, சோவியத் தொழிலாள வர்க்கத்தை உத்வேகப்படுத்தி, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியை ஆபத்துக்குட்படுத்தும் என்பதால், ஸ்ராலினிச ஆட்சி அது குறித்து அஞ்சியது. யால்டா மாநாடும் பொட்ஸ்டாம் மாநாடும் கிழக்கு ஐரோப்பாவில் பல “இடைத்தடை அரசுகள்” (buffer states) மீது கிரேம்ளின் அதன் கட்டுப்பாட்டை நிறுவ அதற்குக் கட்டமைப்பை உருவாக்கின. இதற்குக் கைமாறாக ஸ்ராலினிச கட்சிகள் மேற்கு ஐரோப்பாவிலும் கிரேக்கத்திலும் இருந்த முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க ஆதரவளித்தன. எதிர்புரட்சியின் முகவர்களாக செயல்பட்ட ஸ்ராலினிஸ்டுகள், பாசிசத்தின் தோல்விக்குப் பின், முதலாளித்துவ அரசாங்கங்கள் சிதைந்து போன நிலைமைகளின் கீழ், இத்தாலியிலும் பிரான்சிலும் வளர்ந்த வெகுஜன இயக்கங்களை நிராயுதபாணியாக்கச் செயல்பட்டதுடன், முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் இணைந்தனர். ஜப்பானில், இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு ஜப்பானிய பேரரசு சரணடைந்த பின்னர், அங்கே ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் தலைமையிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் “ஜனநாயகப் புரட்சியை” நடத்தி வந்ததாகவும், இரண்டு-கட்ட புரட்சிக்கு அவசியமான முதல் கட்டமாக அதை ஆதரிக்க வேண்டுமென்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டது.

1948 இல் கொண்டு வரப்பட்ட மார்ஷல் திட்டத்தின் கீழ், அமெரிக்க முதலாளித்துவம், போரால் சீரழிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய பொருளாதாரங்களை மறுகட்டுமானம் செய்ய 13.3 பில்லியன் டாலர்களைப் பாய்ச்சிய நிலையில், ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்புகள், அந்த திட்டத்தின் கட்டமைப்புக்குள் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு ஐரோப்பாவை ஸ்திரப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கின.

இந்தப் பொதுவான மறுஸ்திரப்பாட்டுக்கு மத்தியில், போருக்குப் பிந்தைய காலகட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு மகத்தான எழுச்சியைக் கண்டது, இவற்றைத் தடம் புரளச் செய்ய ஸ்ராலினிஸ்டுகள் செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் “இரண்டு-கட்ட” தத்துவத்தின் ஆதரவுடன், காந்தி மற்றும் நேருவின் முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் படுமோசமான ஒரு காட்டிக்கொடுப்பாக, 1947 இல், காலனித்துவ இந்தியா, பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் இந்தியாவாகவும், பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 1949 இல், வெகுஜனங்களின் புரட்சிகர மேலெழுச்சி நிலைமைகளின் கீழ் அதிகாரத்திற்கு வந்தது. அந்தப் புரட்சிகர மேலெழுச்சியானது, மாவோவின் ஸ்ராலினிச அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை விட அந்நாட்டில் ஜப்பானிய பேரரசின் தோல்வியால் ஏற்பட்ட நிலைமைகளோடு சம்பந்தப்பட்டிருந்தது. அதற்கு ஓராண்டுக்கும் குறைவான காலத்தில், காலனித்துவ மேலெழுச்சிகளுக்குப் பிந்தைய காலகட்டம், ஜூன் 1950 இல் கொரிய போர் வெடிப்பில் அதன் மிகவும் வெடிப்பார்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. கிழக்கு ஐரோப்பாவின் யூகோஸ்லாவியாவில் டிட்டோ (Tito) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தமை மற்றும் 1948 இல் டிட்டோ-ஸ்ராலின் உடைவு ஆகியவை இருந்தன. இவை நாம் காக்கும் மரபியத்தின் அத்தியாயம் 12 இல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், உலக முதலாளித்துவம் ஒட்டுமொத்தமாக மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட்டமை, நாம் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்களில் எழுதுவதைப் போல, “இந்தப் போராட்டங்களின் தலைமைக்கு வந்த முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள், ஸ்ராலினிஸ்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் பல்வேறு குட்டி முதலாளித்துவப் போக்குகளுக்குச் செயல்பாட்டுக் களத்தைப் பரந்தளவில் விரிவுபடுத்தியது. இந்த இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் புறநிலை செயல்பாடு, ஏதோவொரு வடிவத்தில், உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையைப் பேணி பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த பிரிவுகளுக்குள் ஓர் ஆதரவு அடித்தளத்தை அமைப்பதாக இருந்தது.” [12]

இத்தகைய சிக்கலான அனுபவங்கள் ஒவ்வொன்றையும் என்னால் விரிவாக மீளாய்வு செய்ய முடியாது. ஆனால், போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தின் பொதுவான கட்டமைப்பு, ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தைக் குறித்த ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை முழுமையாக உறுதிபடுத்தியது, அதுவும் குறிப்பாக, “சோவியத் ஒன்றியம் போரில்,” (The USSR in War) என்ற கட்டுரையில் அவர் வைத்த மதிப்பீட்டை, அதாவது குறிப்பிட்டுக் கூறுவதானால், அந்த எந்திரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒரு நாட்டிலோ அல்லது மற்றொரு நாட்டிலோ சொத்துறவுகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அது “உலகப் புரட்சிக்கான பாதையில் முக்கிய முட்டுக்கட்டையாக” இருந்தது என்ற மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது.

நான்காம் அகிலத்தின் ஆரம்ப விடையிறுப்பு, இந்த முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நவம்பர் 1946 இல் நான்காம் அகிலம் சஞ்சிகை வெளியிட்ட ஓர் அறிக்கை கிழக்கு ஐரோப்பாவின் வளர்ச்சிகள் தொடர்பாக விவரித்தது:

அற்பமான கொள்ளையடிப்புக்காக, இழப்பீடுகளுக்கான சிறிய தொகைகளுக்காக (இவை சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார தேவைகளைத் தீர்ப்பதைப் பொறுத்த வரை முற்றிலும் அர்த்தமற்றது என்னும் நிலையில்) கிரெம்ளின் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலும் தனக்கு எதிராக வெறுப்பின் சுவரை எழுப்பி உள்ளது. வறுமையில் சிக்கிய, திவாலான பால்கன் நாடுகள் மீது இராணுவக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, கிரெம்ளின் ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அந்தப் புரட்சியை நசுக்குவதற்கு உதவி மற்றும் சிதைந்து வரும் முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுத்துள்ளது. [13]

ஏப்ரல் 1949 இல், நான்காம் அகிலத்தின் சர்வதேச நிறைவற்றுக் குழுவின் ஏழாவது பேரவை (IEC) வலியுறுத்துகையில், “ஸ்ராலினிசம் மீதான ஒரு மதிப்பீட்டை, அதன் கொள்கையின் தனித்தனியான விளைவுகளின் அடிப்படையில் செய்ய முடியாது, மாறாக அதன் நடவடிக்கைகளில் உலகளவிலான முழுமைத்தன்மையில் இருந்து முன்நகர வேண்டும். போர் முடிந்து நான்காண்டுகளுக்குப் பின்னர், இன்று நமக்கு முதலாளித்துவம் முன்நிறுத்தும் இந்த சீரழிவுகரமான நிலையை நாம் பரிசீலிக்கும் போது கூட, மற்றும் 1943-45 இல் நிலைத்திருந்த நிலைமையைப் பரிசீலிக்கும் போதும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவ ஒழுங்கு ஒரே நேரத்தில் திடீரென முறிவதைத் தடுப்பதில், ஸ்ராலினிசம் உலகளவில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” [14]

ஆனால், 1949 இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில், பப்லோவும் அவர் ஆதரவாளர்களும் கிழக்கு ஐரோப்பாவின் அபிவிருத்திகளைக் குறித்து மிகவும் மாறுபட்ட விளக்கங்களை முன்வைக்கத் தொடங்கினர், அதனுடன் சர்வதேச அளவில் ஸ்ராலினிசம் வகித்த பாத்திரம் பிணைந்திருந்தது.

ஏர்னெஸ்ட் மண்டெல் உடன் மிஷேல் பப்லோ (வலதுபுறம் இருப்பவர்)

முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவதில், இந்த “ஊனமுற்ற” தொழிலாளர்கள் அரசுகள் (“deformed” workers states) தசாப்தங்களுக்கும், நூற்றாண்டுகளுக்கும் கூட, ஆதிக்கம் செலுத்தும் என்ற தத்துவத்தை பப்லோ முதன்முதலில் செப்டம்பர் 1949 இல் முன்வைத்தார்.

பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த மற்றும் அரசியல் இயக்கமாகவும் அத்துடன் ஒரு சமூக அமைப்புமுறையாகவும், சோசலிசம், இயல்பிலேயே சர்வதேச தன்மையானது, பிரித்துப் பார்க்க முடியாதது… ஆனால் இதை கருத்தில் கொண்டிருந்தாலும், முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறும் ஒட்டுமொத்த வரலாற்று காலகட்டத்தில், பல நூற்றாண்டுகளுக்கு நீளக் கூடிய ஒரு காலகட்டத்தில், நம்முடைய ஆசான்கள் எதிர்நோக்கியதை விடவும் புரட்சியின் மிகவும் கொடுமையான மற்றும் சிக்கலான அபிவிருத்தியை நாம் எதிர் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையும் தங்கியுள்ளது. மேலும் தொழிலாளர்களின் அரசுகள் இயல்பானவையாக இல்லை, மாறாக அவை அவசியத்திற்கேற்ப முற்றிலும் ஊனமுற்றுள்ளன. [15]

இத்தகைய நிலைப்பாடுகளின் தாக்கங்கள் என்ன? காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியிலும் மற்றும் குட்டி-முதலாளித்துவ எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்திலும் ட்ரொட்ஸ்கி பகுப்பாய்வு செய்திருந்தவாறு, ஸ்ராலினிசம் ஒரு வரலாற்று “விகாரமாகவோ” அல்லது “தற்காலிக வளர்ச்சியாகவோ” இருக்கவில்லை என்றால் அது ஒரு சுதந்திரமான மற்றும் சொல்லப் போனால் “அவசியமான” சமூக உருவாக்கமாக ஆகியுள்ளது என்றே அர்த்தப்படுகின்றது. இது ஸ்ராலினிசக் கட்சிகள் தலைமையில், “அவசியத்திற்கேற்ப முற்றிலும் ஊனமுற்ற” அந்த “தொழிலாளர்களின் அரசுகளால்” குணாம்சப்பட்ட, நீண்ட “இடைமருவு காலக்கட்டம்” (transition period) நூற்றாண்டுகளுக்கு நீடித்தால், ஓர் ஆழ்ந்த வரலாற்று அர்த்தத்தில், ஸ்ராலினிசம் ஒரு முற்போக்கான பாத்திரம் வகிக்கும் என்பதை மட்டுமே இது அர்த்தப்படுத்தும். “அதிகாரத்துவம் ஒரு தற்காலிக வளர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறதா அல்லது ஒரு சமூக அமைப்புமுறையை பிரதிநிதித்துவம் செய்கிறதா, அல்லது இந்த வளர்ச்சி ஏற்கனவே வரலாற்று ரீதியில் தவிர்க்கவியலாத ஓர் அமைப்பாக மாறி உள்ளதா?” என்ற ட்ரொட்ஸ்கியின் கேள்விக்கு பப்லோ பதிலளிக்கையில், “இது வரலாற்று ரீதியில் தவிர்க்கவியலாத அமைப்பாக” இருப்பதாக அவர் கூறுகிறார்.

பப்லோ, அதே கட்டுரையில், நான்காம் அகிலம் வகிக்கும் பாத்திரத்தையே திருத்தியமைக்கும் சூத்திரங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். அவர் எழுதினார், “நம் சகாப்தத்தில்,” “தனியொரு நாட்டில் நிறுவப்பட்ட பாட்டாளி வர்க்க அதிகாரம் தவிர்க்க முடியாமல் மற்றும் விரைவாக அதிகாரத்துவமயப்படும். … இந்த ஆபத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, உலக அமைப்பான அகிலத்தின் மீது சுமையேற்றுவதைத் தவிர வேறு தீர்வு இல்லை. அது மட்டுமே, அதிகாரத்தில் உள்ள கட்சி மோசமாக தேசியளவில் தனிமைப்படும் நிலைமையை எதிர்சமநிலைப்படுத்தத் தகைமை கொண்டது.” [16] அதாவது, நான்காம் அகிலத்தைத் தவிர்த்து எந்தவொரு நாட்டிலும் அதிகாரத்துவமயப்பட உள்ள, “அதிகாரத்தில் உள்ள கட்சியின்” “தவிர்க்கவியலாமல் மற்றும் விரைவான” போக்கை “எதிர்சமநிலைப்படுத்த” சேவையாற்றுவதே நான்காம் அகிலம் வகிக்கும் பாத்திரம் என்றாகிறது. “நீண்ட கால ஓட்டத்தில்”,“ஏனைய நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன்” மூலம், நான்காம் அகிலத்தின் “முக்கியத்துவமும் செயல்திறனும்” “வெளிப்படுத்தப்படும்.”

யூகோஸ்லாவியாவையும் கிழக்கு ஐரோப்பாவின் இடைத்தடை அரசுகளையும் (buffer states) எவ்வாறு சரியாக வரையறுப்பது என்ற பிரச்சினை, நான்காம் அகிலத்திற்குள் தீவிர விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது, இதில் நான்காம் அகிலத்தின் முன்னோக்கின் விளைவுகளும் மற்றும் முக்கியமான அணுகுமுறை சிக்கல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. நான்காம் அகிலத்திற்குள்ளும் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளும் வெவ்வேறு தலைவர்கள் முன்வைத்த இன்றியமையாத நிலைப்பாடுகள், நாம் காக்கும் மரபியத்தின் “பப்லோவாதத்தின் தோற்றுவாய்கள்” என்ற அத்தியாயம் 13 இல் மற்றும் “தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் மீதான மாறாநிலைவாதம்” என்ற அத்தியாயம் 14 இல் மீளாய்வு செய்யப்படுகின்றன.

சோசலிச தொழிலாளர் கட்சியில் கனன், மொரிஸ் ஸ்ரைன், ஜோன் ஜி. ரைட், மற்றும் ஆரம்பத்தில் சர்வதேச செயலகத்தின் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோர், சொத்துறவுகளைத் தேசியமயப்படுத்துவது தானாகவே ஒரு தொழிலாளர்கள் அரசின் இருப்புக்குச் சமமானது என்று ஒரு மேலோட்டமான முடிவிற்கு எதிராக வாதிட்டனர். அதேவேளையில் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) ஜோசப் ஹான்சனும் பேர்ட் கொக்ரானும் (Bert Cochran) பப்லோவின் நிலைப்பாட்டினை ஆதரித்தனர்.

பின்னர் பப்லோவின் நெருங்கிய கூட்டாளியான மண்டேல், 1949 அக்டோபரில் வாதிடுகையில், யூகோஸ்லாவியா மற்றும் இடைத்தடை அரசுகளை “தொழிலாளர்களின் அரசுகளாக” உடனடியாக முத்திரை குத்துபவர்கள் (பப்லோவின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் மறைமுகமாக இருந்தது) “இத்தகைய தேசியமயமாக்கல்களின் இயல்பை மதிப்பிடுகையில், இவற்றை யார் நடைமுறைப்படுத்துகிறார்கள், எப்போது, யாருடைய நலனுக்காக, என்ன நிலைமைகளின் கீழ் என்ற தீர்க்கமான காரணிகளைச் சுருக்கி” விடுகிறார்கள். அவர்கள் ஒரு வரலாற்று காரணியை அதன் உள்ளடக்கத்தில் இருந்து பிரித்து விட்டு, ஓர் ஆழ்ந்த வரலாற்று பகுப்பாய்வாக இருக்க வேண்டியதை ஓர் எளிய தர்க்க முடிவாகக் (syllogism) குறைக்கிறார்கள், ஒரே வார்த்தைகளை வேறு வடிவத்தில் வலியுறுத்தி, கேள்விக்குரியதாக்கி விடுகிறார்கள்” என்றார். [17]

பெப்ரவரி 1950 இல், SWP தேசியக் குழுவின் ஒரு பேரவை அமர்வில், ஸ்ரைன் ஹான்சனின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாதிட்டார். உற்பத்தியை அரசுடைமைப்படுத்துவது ஒரு தொழிலாளர்களின் அரசுக்கு நிகரானது என்று ஹான்சன் ஆரம்ப கட்டத்தில் ஏற்கனவே வாதிட்டிருந்தார். ஸ்ரைன், குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட அரசின் வர்க்கத் தன்மையைத் தீர்மானிப்பதில் அதன் வரலாற்று தோற்றுவாய்களை வலியுறுத்தினார். “முன்னர் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் நிறுவப்பட்ட ஒரு தொழிலாளர் அரசின் சீரழிவைக் குறித்த விவாதித்ததில் இருந்தே, அது தொழிலாளர்களின் அரசாக இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதை நிறுவுவதற்கான பொருளாதார ரீதியான காரணிகள் நம் இயக்கத்திற்குள் கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் வாதிட்டார்.

“சமூகப் புரட்சியின் மிக முக்கியமான கூறுபாடே, தொழிலாள வர்க்கக் கட்சியினது முன்னணிப் படையின் கொள்கையில் வெளிப்படும், தொழிலாள வர்க்கத்தின் நனவு மற்றும் சுய-நடவடிக்கையாகும்,” என்று ஸ்ரைன் வலியுறுத்தினார்.

“தேசியமயமாக்கல் தொழிலாளர் அரசுக்கு நிகரானது என்ற முன்மொழிவுக்கு, சாராம்சத்தில், தன்னைக் குறைத்துக் கொள்ளும் எளிமையான அணுகுமுறை, நம் இயக்கத்தை நோக்குநிலைப் பிறழ மட்டுமே செய்யும். அது மார்க்சிசத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது. அது, உயிர்ப்பான வர்க்க சக்திகள் மற்றும் சமூகத்திற்குள் அவற்றின் ஒப்பீட்டளவிலான நிலைமையைக் குறித்த ஓர் உண்மையான பகுப்பாய்வை, அதிகாரத்துவ தேசியமயமாக்கல் ஆணைகளைக் கொண்டு பிரதியீடு செய்கிறது. இத்தகைய ஒரு அணுகுமுறை, இடைத்தடை நாடுகளில் நடக்கும் சம்பவங்களைப் புரிந்து கொள்ளவோ அல்லது அவற்றை நோக்கிய நம் கொள்கையை வடிவமைக்க உதவுவதிலோ நமக்கு சாதகமான ஓர் அணுகுமுறையாகக் கருத முடியாது. [18]

நான்காம் அகிலம் ஏப்ரல் 1950 இல் IEC இன் எட்டாவது பேரவையில், யூகோஸ்லாவியாவை ஒரு “ஊனமுற்ற தொழிலாளர் அரசு” என்று குறிப்பிடும் தீர்மானத்திற்கு வந்தது. பின்னர் இது கிழக்கு ஐரோப்பாவின் இடைத்தடை அரசுகளுக்கும் பிரயோகிக்கப்பட்டது.

நான்காம் அகிலம் ஏப்ரல் 1950 இல் ச ர்வதேச நிறைவேற்றுக் குழுவின் (IEC) எட்டாவது பேரவையில், யூகோஸ்லாவியாவை 'ஊனமுற்ற தொழிலாளர் அரசாக' வரையறுக்கும் முடிவிற்கு வந்தது. இது பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இடைத்தடை நாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.

நாம் காக்கும் மரபியம் விவாதத்தில் உள்ள சிக்கல்களை சுருக்கமாக தொகுக்கிறது, மேலும் 'தேசியமயமாக்கப்பட்ட சொத்தின் மாறாநிலைவாதம்' என்ற மிக முக்கியமான அத்தியாயத்திலிருந்து விரிவாக மேற்கோள் காட்டுவது மதிப்புடையதாக இருக்கும்.’

மண்டேல் மற்றும் ஸ்ரைனின் வாதங்களின் முக்கியத்துவம் என்னவென்றால், சோவியத் அதிகாரத்துவம் மற்றும் அதன் குறுகியகால “வெற்றிகளுக்கு” சந்தர்ப்பவாதரீதியாய் தகவமைத்துக் கொள்கின்ற ஒரு வளர்ந்துவந்த போக்கிற்கு எதிராக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு வரலாற்று முன்னோக்கின் மீது அவர்கள் முக்கியமான வலியுறுத்தலை சரியான விதத்தில் வைத்தனர் என்பதில் அடங்கியிருந்தது. எவ்வாறாயினும், யூகோஸ்லாவியாவிலும் கிழக்கு ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளிலும் “ஊனமுற்ற” (deformed) தொழிலாளர் அரசுகள் நிலவியதாக ஒப்புக்கொள்ள இறுதியாக வந்தடைந்த முடிவு தவறானது என இது அர்த்தமளிக்கவில்லை. முறையாக புரிந்துகொள்ளப்பட்டு முறையாக பயன்படுத்தப்படுகின்ற போது, இந்த புதிய வரையறையானது ஒரு அத்தியாவசியமான தத்துவார்த்த மற்றும் அரசியல் செயல்பாட்டை பூர்த்திசெய்தது. எனினும் அனைத்து இயங்கியல் கருத்தாக்கங்களிலும் போலவே, ஒரு “ஊனமுற்ற தொழிலாளர் அரசு” என்பதும், கொடுக்கப்பட்டதொரு வரலாற்று மற்றும் அரசியல் “வரம்புகளுக்குள்” மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதும், அதனது செல்லுபடியானதுமாகும்.

அதாவது, போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பிரத்தியேகமானதும் தனித்துவமானதுமான நிலைமைகளின் கீழ் உருப்பெற்றிருந்த “கலப்பு” (“hybrid”) அரசுகளை வரையறை செய்வதற்கும், அத்துடன் அவற்றின் மூலங்களது திரிந்திருந்த மற்றும் அசாதாரணமான தன்மையின் மீது வலியுறுத்துவதற்குமான ஒரு வழிவகையாக, ஊனமுற்ற தொழிலாளர்’ அரசு கருத்தாக்கமானது, ஏகாதிபத்திய தலையீட்டிற்கு எதிராக இந்த அரசுகளை பாதுகாப்பதற்கான அவசியத்தை உறுதிப்படுத்துவதற்கும், அதேசமயத்தில் இந்த நாடுகளுக்குள்ளே தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அரசியல் கடமைகளை தெளிவுற சுட்டிக்காட்டுவதற்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தனக்கு அடித்தளமாகக் கொள்கின்ற கோட்பாட்டு ரீதியான அடிப்படையை ஸ்தாபிக்கிறது.

ஊனமுற்ற எனும் வார்த்தையின் பயன்பாடு, 1917 அக்டோபரில் முதலாளித்துவ அரசு தூக்கிவீசப்பட்டதற்கும் 1940களில் கிழக்கு ஐரோப்பாவில் நடந்த கவிழ்ப்புகளுக்கும் இடையிலமைந்திருந்த வரையறுக்கப்பட்ட ஒரு வரலாற்று வித்தியாசத்தின் மீது முக்கிய அழுத்தத்தை கொடுத்தது: அதாவது, ஒரு போல்ஷிவிக் வகையான கட்சியால் தலைமை கொடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்க அதிகாரத்தின் வெகுஜன அமைப்புகளான சோவியத்துகள் அங்கு இல்லாதிருந்தது. மேலும், ஊனமுற்ற எனும் அந்த வார்த்தையே அதனளவில், அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் தமது பிறப்பில் உருத்திரிந்ததும் வழமைக்குமாறானதுமான தன்மையின் அடையாளத்தை தாங்கியுள்ளதும், கேள்விக்குரிய வரலாற்று செல்தகைமையுள்ள தற்காலிக உயிர்வாழ்வைக்கொண்ட அரசு ஆட்சிகளை அர்த்தப்படுத்துகின்றது.

இவ்வாறாக, ஊனமுற்ற எனும் அடைமொழியானது, இத்தகைய ஆட்சிகளை புதிய வரலாற்று முன்னோக்குடன் தொடர்புபடுத்துவதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஸ்ராலினிசத்தின் வரலாற்றுத் திவால்நிலையை அடிக்கோடுட்டுக் காட்டுவதுடன், ஒரு உண்மையான மார்க்சிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு அரசியல் புரட்சியினால் ஆளும் அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும், உண்மையான தொழிலாளர்’ அதிகார அங்கங்களை உருவாக்குவதற்கும், மற்றும் அரசு கட்டமைப்புக்குள்ளும் பொருளாதாரத்திற்குள்ளும் உயிர்தப்பியுள்ள எண்ணற்ற முன்னைய முதலாளித்துவ உறவுகளை ஒழிப்பதற்குமான அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.[19]

எவ்வாறாயினும், பப்லோவின் ஆதரவாளர்கள் 'ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்' என்ற வரையறையை தோழர் நோர்த் குறிப்பிடுவதுபோல் 'ஊனமுற்ற' என்பது 'ஏதோ ஒரு வகையான அர்த்தமற்ற பெயரடை என்பதற்கு மேலான ஒன்றுமில்லை” என்பதைப் போல அணுகப்பட்டது. யூகோஸ்லாவியா பற்றிய தனது முந்தைய கட்டுரையில் பப்லோ ஏற்கனவே குறிப்பிட்டது போல, சோசலிசத்தை அடைய வேண்டிய அவசியமான வழிமுறையானது இத்தகைய 'ஊனமுற்ற' அரசுகள் மூலமாகத்தான் இருக்கும் என்ற கருத்தாக்கத்தை அவர் ஊக்குவித்து வந்தார். நான்காம் அகிலத்திற்குள்ளேயே இந்தக் கருத்தாக்கங்களை எதிர்த்தவர்கள் மீது யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதை விட, இந்த 'தூய வடிவத்துடன்' ஈர்க்கப்பட்டதாகக் கூறி அவர்கள் மீதான அவதூறுகளும் சேர்ந்துகொண்டன.

பப்லோவாத கலைப்புவாதமும் புறநிலைவாதமும்

யூகோஸ்லாவியா மற்றும் இடைத்தடை நாடுகளின் தன்மை குறித்த விவாதம் முக்கியமானது என்றாலும், அதற்கு அடிப்படையானது முன்னோக்கு தொடர்பான மிகவும் அடிப்படைப் பிரச்சினைகளாகும். இந்த சகாப்தத்தின் தன்மை என்ன? எந்த வகையில் சோசலிசம் அடையப்படும்? நான்காம் அகிலத்தின் பங்கு என்ன?

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நான் முன்பு மேற்கோள் காட்டியது போல், பப்லோவாதத்தின் முக்கியமான பண்பு தெளிவாக வெளிப்பட்டது:

ஒவ்வொரு விடையத்திலும் பப்லோவாதம் கலைப்புவாதமாக இருந்தது (மற்றும் இருக்கிறது): அதாவது, சோசலிசப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை நனவாக வெளிப்படுத்துகின்ற நான்காம் அகிலத்தின் உண்மையான சுயாதீன இருப்பையும் நிராகரிப்பதுமாகும். [20]

நாம் காக்கும் மரபியத்தின் 15 ஆம் அத்தியாயம் (“பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் தன்மை”), ஆகஸ்ட்-செப்டம்பரில் நடைபெற்ற மூன்றாம் உலக காங்கிரஸின் ஆண்டான 1951 இன் போக்கில் பப்லோவாதத்தின் பரிணாமத்தை விவரிக்கிறது. மீண்டும், அந்த நூலில் மதிப்பாய்வு செய்யப்பட்ட மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே என்னால் குறிப்பிட முடியும்.

பப்லோ ஜனவரி 1951 இல், 'நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?' என்ற தனது கட்டுரையை எழுதினார். இது IEC இன் ஒன்பதாவது பேரவையை தொடர்ந்து மற்றும் மூன்றாம் உலக மாநாட்டுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்டது. அதில் அவர் யூகோஸ்லாவியா பற்றிய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, விரிவுபடுத்தினார். பப்லோ எழுதினார், 'ஸ்ராலினிசம் இன்னும் நிலைத்து நிற்பதாலும் மற்றும் வெற்றிகளை கூட அடைவதாலும் மனிதகுலத்தின் தலைவிதியை பற்றி அவநம்பிக்கை கொண்டவர்கள்' சோசலிசம் 'தங்கள் குறுகிய வாழ்நாளில் நிறைவேற்றப்பட வேண்டும்' என்ற அகநிலை விருப்பத்தால் தூண்டப்படுகிறார்கள். அதற்குப் பதிலாக, அவர் வலியுறுத்தினார், 'இந்த மாற்றம் பல நூற்றாண்டுகளின் முழு வரலாற்றுக் காலத்தையும் எடுப்பதுடன், இதற்கிடையில் முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்ட மாறக்கூடிய வடிவங்கள் மற்றும் ஆட்சிகளால் நிரப்பப்படும். மேலும் 'தூய' வடிவங்கள் மற்றும் விதிமுறைகளிலிருந்து அவசியம் விலகியிருக்கலாம்.' [21] (அழுத்தம் சேர்க்கப்பட்டது).

'புறநிலை யதார்த்தத்தில் புதிய முன்னேற்றங்கள்' என்ற மறைப்பின் கீழ், சகாப்தத்தின் தன்மை மற்றும் அதற்குள் அதன் சொந்த பங்கு பற்றிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புரிதலில் அடிப்படையான திருத்தங்களை பப்லோ அறிமுகப்படுத்தத் தொடங்கினார். பப்லோ எழுதினார், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, 'கடந்த காலத்தில் நாம் அறிந்த எல்லாவற்றிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்ட ஒரு காலகட்டத்தில் நாம் நுழைந்துள்ளோம்' என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். அதற்கு 'முழு மலர்ச்சியில் உள்ள ஒரு புதிய யதார்த்தத்தின் எல்லையற்ற செழுமையான உள்ளடக்கத்தை முழுமையாக உள்ளடக்கி, பகுப்பாய்வு செய்ய மற்றும் புரிந்துகொள்ள முடியாத அனைத்துக் கோட்பாடுகளையும் மற்றும் ஒவ்வொரு வகையான சிந்தனையையும்' இயக்கம் கடக்க வேண்டியுள்ளது. [22]

இந்த 'புதிய யதார்த்தம்', அதன் 'எல்லையற்ற செழுமையான உள்ளடக்கம்' என்ன? என்று பப்லோ அதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்:

“நமது இயக்கத்தைப் பொறுத்தவரை புறநிலை சமூக யதார்த்தமானது, அடிப்படையாக முதலாளித்துவ ஆட்சியையும் ஸ்ராலினிச உலகத்தையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த இரண்டு கூறுகள் தான் பெருமளவுக்கு புறநிலை சமூக யதார்த்தத்தை உள்ளடக்கியதாக இருக்கின்றன. ஏனெனில் முதலாளித்துவத்திற்கு எதிரான சக்திகளில் அறுதிப் பெரும்பான்மையினர் சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழ் அல்லது அதன் செல்வாக்கின் கீழ் தான் இப்போது காணக்கூடியவர்களாக இருக்கின்றனர்.”

'புறநிலை சமூக யதார்த்தம், முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஸ்ராலினிச உலகத்தை அடிப்படையாக கொண்டுள்ளது' என்று பப்லோ கூறுகிறார். அவர் இந்த விஷயத்தில் மிகவும் வலியுறுத்தினார், அவர் அதை இரண்டு முறை செய்தார். 'மேலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த இரண்டு கூறுகள் தான் பெருமளவுக்கு புறநிலை சமூக யதார்த்தத்தை உள்ளடக்கியதாக இருக்கின்றன.' இதற்கு 'மேலதிகமாக' வேறொன்றும் இல்லை. ஏனெனில் பப்லோ இப்போது கூறப்பட்டதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். 'நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்' என்பதை மட்டும் அதனுடன் இணைத்துள்ளார். அதாவது, நான்காம் அகிலம் எதை விரும்பினாலும் அல்லது என்ன செய்தாலும், அதன் காரியாளர்கள் அகநிலை ரீதியாக எதை விரும்பினாலும், 'புறநிலை சமூக யதார்த்தம்' என்பது ஸ்ராலினிச உலகத்தையும் முதலாளித்துவ ஆட்சியையும் கொண்டுள்ளது. ஏன்? ஏனெனில் 'முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்திகளில் அறுதிப் பெரும்பான்மையினர் சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழ் அல்லது அதன் செல்வாக்கின் கீழ் தான் இப்போது காணக்கூடியவர்களாக இருக்கின்றனர்.' (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

தொழிலாள வர்க்கத்தின் முதலாளித்துவ-எதிர்ப்பு முயற்சிகள், சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமை அல்லது செல்வாக்கின் கீழ் 'இப்போது' உள்ளன என்ற பிந்தைய கூற்றை உண்மையாகக் கருதினால், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு இது புரட்சிகர தலைமையின் அத்தியாவசியப் பிரச்சனையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் மீது ஸ்ராலினிசத்தின் அரசியல் செல்வாக்கை எவ்வாறு உடைப்பது என்பதாகும். மேலும், இது ஒரு தற்காலிக அரசியல் 'கட்ட வளர்ச்சி' என்று கருதுவதை விடுத்து, மீண்டும் 'ஸ்ராலினிச ஆட்சியை' வரலாற்று ரீதியாக அவசியமான சமூக செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்ற திறனை கொடுக்கிறது. 'ஸ்ராலினிச ஆட்சி', 'புறநிலை சமூக யதார்த்தத்தில்' வேரூன்றியுள்ளது என்று கூறுவது, ஒரு வகையில், ஸ்ராலினிசம் ஒரு புதிய சமூக வர்க்கம் என்ற அரசு முதலாளித்துவத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதோடு, அந்த நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றுவதாகும்.

'போர்-புரட்சி' என்ற பப்லோவின் தத்துவம் இந்த கலைப்புவாத நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டது. இது நான்காம் அகிலம் அரசியல் தலைமையை வெல்ல போராடும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பதிலாக, ஒரு பேரழிவு தரும் உலகப் போரை, சோசலிசத்தை அடையும் பொறிமுறையாக மாற்றியது. 'அத்தகைய போர் ஆனது, ஆரம்பத்தில் இருந்தே, குறிப்பாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஒரு சர்வதேச, உள்நாட்டுப் போரின் தன்மையைப் பெறும். இந்த கண்டங்கள் சோவியத் அதிகாரத்துவத்தின், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அல்லது புரட்சிகர வெகுஜனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் விரைவாக செல்லும்…' என்று பப்லோ எழுதினார்.

புரட்சி மற்றும் போர் குறித்த இந்த இரண்டு கருத்தாக்கங்கள், எதிரெதிரானவையாகவோ அல்லது அபிவிருத்தியின் இரண்டு கணிசமான வேறுபாட்டைக் கொண்ட கட்டங்களாக வேறுபடுத்தப்படுவதற்கோ அப்பாற்பட்டு, ஒன்றுக்கொன்று மிக நெருங்கி வருகின்றன என்பதுடன் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மற்றும் குறிப்பிட்ட காலங்களில் கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாதளவுக்கு மிகவும் ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பு கொண்டவையாகவும் ஆகின்றன. அவற்றின் இடத்தில், புரட்சி- போர் குறித்த, போர்-புரட்சி குறித்த கருத்தாக்கம் எழுந்து கொண்டிருக்கிறது; நமது சகாப்தத்தின் புரட்சிகர மார்க்சிஸ்டுகளது முன்னோக்குகளும் நோக்குநிலையும் அவற்றின் மீதே தங்கியிருக்க வேண்டும். [23]

'போர்-புரட்சி' என்ற பப்லோவின் கோட்பாடு, பின்னர் இலத்தீன் அமெரிக்காவில் பப்லோவின் ஆதரவாளரான ஜுவான் போசாடாஸால் மேலும் மேம்படுத்தப்பட்டது, இது போர் பற்றிய பாரம்பரிய மார்க்சிச கருத்தாக்கத்தை தலைகீழாக்கியது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கும் ஏகாதிபத்திய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் புறநிலை அடிப்படையாக இருப்பதற்கு பதிலாக, ஏகாதிபத்தியப் போர், புரட்சியின் மருத்துவச்சியாக மாறியது. பப்லோவின் 'புரட்சிகர' கற்பனைகளில், அத்தகைய போர் 'விரைவாக' ஸ்ராலினிசக் கட்சிகள் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதையும் கட்டுப்பாட்டை எடுக்க இட்டுச்செல்லும் மற்றும் இது உலகின் பெரும்பகுதியில் முதலாளித்துவ சொத்து உறவுகளை கவிழ்ப்பதில் முற்போக்கான பாத்திரத்தை அதிகாரத்துவத்திற்கு வழங்கியதோடு, இரண்டாம் உலகப் போரின் போதும், அதையடுத்தும் ஏகாதிபத்தியத்தின் கட்டளையின் பேரில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் புரட்சியை அடக்குவதில் ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்னர் ஸ்ராலினிசம் வகித்த பங்கை நிராகரித்தது.

நான் போர்-புரட்சி என்ற பிரச்சினைக்கு திரும்புவேன், ஆனால் முதலில், ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான பப்லோவின் திருத்தத்தில் சம்பந்தப்பட்ட வழிமுறை பிரச்சினைகள் குறித்து நாம் காக்கும் மரபியத்தில் இருந்து ஒரு நீண்ட பத்தியை மீண்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவை நமது சொந்த அரசியல் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதில் நீடித்த பொருத்தத்தைக் கொண்டுள்ளன. அது புறநிலைவாதம் தொடர்பான கேள்வியாகும்.

'அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் ஸ்ராலினிச முகவர்களுக்கும் தங்களைத் தகவமைத்துக் கொண்டதாலும், தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வெல்வதற்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் திறனை நம்புவதை நிறுத்தியதாலும், பப்லோவும் அவரது கூட்டாளிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு வெளியே உள்ள சக்திகளுக்கும், நான்காம் அகிலத்தைத் தவிர வேறு அரசியல் போக்குகளுக்கும் சரணடைந்த ஒரு அரசியல் முன்னோக்குக்கு முற்றிலும் பொருத்தமான ஒரு புறநிலைவாத வழிமுறையை ஏற்றுக்கொண்டனர்” என தோழர் நோர்த் எழுதுகிறார்.

புரட்சிகரமான நடைமுறை செயல்பாட்டைக் காட்டிலும் சிந்தனையோட்டமே அதிகமாயிருப்பதும், போராட்டத்தைக் காட்டிலும் அவதானிப்பே அதிகமாய் இருப்பதுமே புறநிலைவாதத்தில் நிலைப்பாடாக இருப்பதாகும்; என்ன செய்யப்பட வேண்டும் என்று விளக்குவதைக் காட்டிலும் நடந்து கொண்டிருப்பதை நியாயப்படுத்துகிற வேலையையே அது செய்கிறது. ட்ரொட்ஸ்கிசமானது அதிகாரத்தைக் கைப்பற்றி வரலாற்றின் பாதையை மாற்றுவதற்கு உறுதிபூண்டதொரு கட்சியின் நடைமுறை செயல்பாடுகளை வழிநடத்துகின்ற சித்தாந்தமாக பார்க்கப்படாமல், அதற்கு மாறாய், நான்காம் அகிலத்திற்குக் குரோதமான பாட்டாளி வர்க்கமற்ற சக்திகளது தலைமையின் கீழ் சோசலிசம் இறுதியில் அடையப்படப்படுகிறதான ஒரு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கினது பொதுவானதொரு பொருள்விளக்கமாக பார்க்கப்படுகிற ஒரு முன்னோக்கிற்கு தத்துவார்த்த அடித்தளத்தை இந்த வழிமுறை வழங்கியது. நிகழ்வுகளின் பாதையில் ட்ரொட்ஸ்கிசம் வகிப்பதற்கென்று ஏதேனும் நேரடி பாத்திரம் அதற்குக் கொடுக்கப்பட வேண்டியிருந்ததைப் பொறுத்தமட்டில், ஸ்ராலினிஸ்டுகள், நவ-ஸ்ராலினிஸ்டுகள், அரை-ஸ்ராலினிஸ்டுகள், மற்றும், ஏதேனும் ஒரு வகை குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோரது நடவடிக்கைகளை நோக்கித்திருப்பும் நனவற்ற ஆழ்மன நிகழ்ச்சிப்போக்கின் ஒன்றாக இருக்கும் பாத்திரம் அதற்கு வழங்கப்பட்டது.

இந்த அர்த்தத்தில், பப்லோவாதமானது, பிழையான மதிப்பீடுகள், தவறான வளர்ச்சிக்கணிப்புகள் மற்றும் வேலைத்திட்ட திருத்தல்களின் ஒரு வரிசையையும் தாண்டி வெகுதூரம் சென்றது. விஞ்ஞான சோசலிசத்தின் ஒட்டுமொத்த அடித்தளத்தின் மீதும் அது தாக்குதல் நடத்தியதோடு ஒரு முழு நூற்றாண்டு காலத்து வர்க்கப் போராட்ட அபிவிருத்தியில் இருந்து மார்க்சிஸ்டுகளால் தேற்றம் செய்யப்பட்டிருந்த மையப் படிப்பினைகளை மறுதலித்தது. கட்சி குறித்த லெனினிச கருத்தாக்கம் என்ற இருபதாம் நூற்றாண்டில் மார்க்சிசத் தத்துவத்தின் மாபெரும் வெற்றியானது பலவீனப்படுத்தப்பட்டது, ஏனென்றால் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திலும் வரலாற்றுரீதியாக பாட்டாளி வர்க்க தலைமையை அடைவதிலும் நனவான கூறினால் அதன் அவசியத்தையே பப்லோ கேள்விக்குட்படுத்தினார். பப்லோ மற்றும் அவரது சீடர்களைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்திற்கு தத்துவார்த்தரீதியாக கல்வியூட்டுவதற்கோ அதன் வரலாற்றுக் கடமைகளைக் குறித்து அதனை நனவூட்டுவதற்கோ அங்கே எந்த அவசியமும் இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான இயக்கத்தின் மீது முதலாளித்துவ சித்தாந்தம் மேலாதிக்கம் செலுத்துவதற்கு எதிராக மார்க்சிசத்திற்கான ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு அங்கே எந்த அவசியமும் இருக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இவ்வாறாக, தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையானது வெகுஜனங்களிடமான தமது அங்கீகரிப்பை நிலைநாட்டுவதற்கும் அவர்களை சோசலிசப் புரட்சிக்கு பயிற்றுவித்து ஒழுங்கமைப்பதற்கும் தேவையான ஒரு செயலூக்கமிக்க அரசியல் மற்றும் தத்துவார்த்த ஆயுதமாக இருப்பதில் இருந்து மார்க்சிசம் நீக்கப்பட்டது. மாறாக, எந்தவித அரசியல் போக்குகளாயிருந்தாலும் பரவாயில்லை, அவை புறநிலையாக தமக்கு அடித்தளமாகக் கொண்டிருக்கக் கூடிய வர்க்க சக்திகள் எதுவாயினும் பரவாயில்லை அவற்றின் கடந்த காலம் எத்தனை மதிப்பிழந்ததாக இருந்தாலும் அல்லது அவற்றின் வேலைத்திட்டங்கள் எத்தனை பிற்போக்கானவையாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைக் கொண்டு பாதி-தானியங்கு விதத்தில் இயங்கக் கூடியதாய் இருக்கும் “வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு” என்றழைக்கப்படும் ஒரு அரூபத்தேற்றத்தின் மூலமாக அது வெறுமனே “ஊர்ஜிதம் செய்யப்பட்டது”. [24]

புறநிலைவாதத்திற்கு எதிரான போராட்டம் மார்க்சிச இயக்கத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. லெனினின் ஆரம்பக் கட்டுரையான 'நரோதிசத்தின் பொருளாதார உள்ளடக்கம்' என்பதிலிருந்து நாம் காக்கும் மரபியத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. ட்ரொட்ஸ்கியின் இறுதிக் கட்டுரைகளில் ஒன்றான 'வர்க்கம், கட்சி மற்றும் தலைமை', தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துபவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களின் துரோகத்தால் ஏற்படும் தோல்விகளுக்கு 'புறநிலை காரணங்களே' பொறுப்பு என்பவர்களை அம்பலப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 'வரலாற்று திருப்பங்களின் முக்கியமான தருணங்களில் அரசியல் தலைமை என்பது, போரின் முக்கியமான தருணங்களில் தலைமை கட்டளையிடுபவரின் பங்கைப் போலவே தீர்க்கமான காரணியாக மாறும்' என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். “வரலாறு என்பது ஒரு தானியங்கி செயல்முறை அல்ல. இல்லையென்றால் தலைவர்கள் எதற்கு? ஏன் கட்சிகள்? ஏன் வேலைத்திட்டங்கள்? ஏன் தத்துவார்த்தப் போராட்டங்கள்?' 1960 களின் முற்பகுதியில் சோசலிச தொழிலாளர் கழகம் மறுஇணைப்புக்கான எதிர்ப்பில், ஹான்சன் மற்றும் SWP இன் புறநிலைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை எடுத்துக் கொண்டது, அடுத்த விரிவுரையில் மதிப்பாய்வு செய்யப்படும்.

பிராங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதுகளின் அரசியல்

எவ்வாறாயினும், பிராங்ஃபேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதுகளின் அரசியல் என்ற நூலில் உள்ள 'மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு' என்பது பற்றி நான் குறிப்பாக தோழர்களுக்கு சுட்டிக்காட்டுவேன், அங்கு ஸ்ரைனர் மற்றும் பிரென்னர் இருவரின் பிரச்சினையின் தவறான எடுத்துக்காட்டலுக்கு (குறிப்பாக பிரிவுகள் 6 மற்றும் 15) எதிராக புறநிலைவாதத்தின் சரியான புரிதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புறநிலைவாதம் என்பது, வரலாறு என்பது ஒரு விதியால் ஆளப்படும் நிகழ்ச்சிப்போக்கு என்ற புரிதலைக் குறிக்காது, அதை நாங்கள் வலியுறுத்துகிறோம், அதை ஸ்ரைனரும் பிரென்னரும் நிராகரித்தனர். மாறாக, முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் புறநிலை வளர்ச்சியானது, புரட்சிகர தலைமையின் அடிப்படைப் பிரச்சனையான 'அகநிலைக் காரணி'யைத் தீர்க்கும் என்ற நிலைப்பாடே இதுவாகும்.

மார்க்சிஸ்ட்டுகளை பொறுத்தவரையில் சோசலிச நனவுக்கான போராட்டமானது முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தும்படி பரந்த வெகுஜன தொழிலாளர்களை நம்பவைப்பதை கொண்டிருக்கவில்லை. பதிலாக, முதலாளித்துவ அமைப்பின் ஆழமுறும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் உக்கிரமாக்கப்படும் உபரி மதிப்பை கறந்தெடுக்கும் புறநிலையான சுரண்டும் நிகழ்ச்சிப்போக்கிலிருந்து எழுகின்ற அத்தகைய போராட்டங்களின் தவிர்க்க முடியாத தன்மையை அங்கீகரிப்பதில் இருந்து தொடங்கும். மார்க்சிச இயக்கமானது, தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளாக, வரலாற்றை விதி ஆளுமை செய்யும் ஒரு நிகழ்ச்சிப்போக்காக காணும் ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை விருத்தி செய்ய முயற்சிக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அது தோற்றுவிக்கும் சமூக உறவுகள் குறித்த அறிவு மற்றும் நடப்பு நெருக்கடியின் உண்மைத் தன்மை மற்றும் அதன் உலக வரலாற்றுரீதியான தாக்கங்கள் ஆகியவற்றில் உள்ளார்ந்த பார்வை ஆகியவற்றை அபிவிருத்தி செய்யப் பாடுபடுகிறது. இது நனவற்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக மாற்றுவது பற்றிய விஷயமாகும், உலக முதலாளித்துவ நெருக்கடி உக்கிரப்படுத்தல்களின் விளைவுகளை எதிர்பார்ப்பது மற்றும் அதற்காக தயார் செய்வது பற்றிய விஷயமாகும், சம்பவங்களின் காரணகாரியத்தை தோலுரித்துக் காண்பிப்பது, மற்றும் பொருத்தமான அரசியல் பதிலிறுப்பை மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் சூத்திரப்படுத்துவது பற்றிய விஷயமாகும்.[25]

அல்லது பின்னர் ஹீலியால் திரித்து பொய்யாக்கப்பட்ட ஒரு சொற்றொடரில் லெனின் கூறியது போல், “மனிதகுலத்தின் மிக உயர்ந்த பணியானது, பொருளாதார பரிணாம வளர்ச்சியின் (சமூக வாழ்க்கையின் பரிணாமம்) புறநிலை தர்க்கத்தை அதன் பொதுவான மற்றும் அடிப்படை அம்சங்களில் புரிந்துகொள்வதாகும். இதனால் ஒருவரின் சமூக நனவையும், அனைத்து முதலாளித்துவ நாடுகளின் மேம்பட்ட வர்க்கங்களின் நனவையும் முடிந்தவரை திட்டவட்டமான, தெளிவான மற்றும் முக்கியமான ஒரு வடிவத்தில் மாற்றியமைக்க முடியும்.”[26]

பப்லோவாதத்திற்கு திரும்புவோமாயின், 'போர்-புரட்சி' என்ற தத்துவம் உண்மையில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி வெளிப்படையாக வெளிப்படுத்திய நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டமை, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைப் பற்றிய நமது சொந்த பகுப்பாய்விற்கும் பொருத்தமாக உள்ளது. தோழர் நோர்த்தினால் அறிமுகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 1937ல் டுவி ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியத்தில், ட்ரொட்ஸ்கி 'GPU வின் நண்பர்களால் சு ற்றுக்கு விடப்பட்ட 'போர் பெரும்பாலும் புரட்சியை உருவாக்குகிறது' என்பதால் ட்ரொட்ஸ்கிச இயக்கம் போரை விரைவுபடுத்துவதற்கு ஆதரவாக உள்ளது என்ற கற்பனைமிக்க கோட்பாட்டை' குறிப்பிட்டார்.

லியோன் ட்ரொட்ஸ்கி, மெக்சிகோவில் உள்ள கோயோகானில் டுவி ஆணைய விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் ஆல்பர்ட் கோல்ட்மனுடன் கலந்தாலோசிக்கிறார். அவரது மனைவி நத்தாலியா அவருக்கு இடதுபுறம் இருக்கிறார்.

'உண்மையில் போர் பெரும்பாலும் புரட்சியை துரிதப்படுத்தியுள்ளது' என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

ஆனால் துல்லியமாக அந்த காரணத்திற்காக, இது பெரும்பாலும் கருச்சிதைவான முடிவுகளுக்கும் வழிவகுத்தது. போர் சமூக முரண்பாடுகளையும் வெகுஜன அதிருப்தியையும் கூர்மைப்படுத்துகிறது. ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிக்கு அது போதாது. வெகுஜனங்களில் வேரூன்றிய ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாவிடின், புரட்சிகர சூழ்நிலை மிகவும் கொடூரமான தோல்விகளுக்கு வழிவகுக்கிறது. இதற்காக எமது பணி போரை 'விரைவுபடுத்துவது' அல்ல. இதற்காக, துரதிர்ஷ்டவசமாக, அனைத்து நாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளும் வெற்றியடையாமல் செயல்படுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இன்னும் உழைக்கும் மக்களுக்கு விட்டிருக்கும் நேரத்தை ஒரு புரட்சிகரக் கட்சி மற்றும் புரட்சிகர தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்துவதே பணியாகும்….

போரும் புரட்சியும் மனித வரலாற்றில் மிக மோசமான மற்றும் சோகமான நிகழ்வுப்போக்குகளாகும். நீங்கள் அவற்றுடன் கேலி செய்ய முடியாது. அவை மேலோட்டமானவற்றை பொறுத்துக்கொள்ளாது. போருக்கும் புரட்சிக்கும் இடையிலுள்ள தொடர்பை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். விருப்பத்தின் படி தூண்டப்பட முடியாத புறநிலை புரட்சிகரக் காரணிகளின் தொடர்பு மற்றும் புரட்சியின் அகநிலை காரணியான பாட்டாளி வர்க்கத்தின் நனவான முன்னணிப் படையான அதன் கட்சியை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்சியை மிக உயர்ந்த ஆற்றலுடன் தயார் செய்வது அவசியம். [27]

பப்லோ இந்த புரிதலை தலைகீழாக மாற்றினார். 'போருக்கு முன்னர் புரட்சி நிகழும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், ஒருவேளை போரை சாத்தியமற்றதாக்குவதற்கும்' 'புரட்சியின் அகநிலை காரணியை' தீர்க்க வேண்டிய அவசியத்தை விட, பப்லோவிற்குப் போர் அகநிலை காரணியைத் தீர்க்காமலே புரட்சியை உணர்ந்து கொள்வதற்கான பொறிமுறையாக மாறியது. போரின் உதவியுடன், முதலாளித்துவ சொத்து உறவுகளை முறியடிப்பது 'வேகமாக' மற்றும் எதிர் புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழ் நடக்கும் என்றார்.

'நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?,” என்பதில், 'இருப்பினும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் சரியான நோக்குநிலைக்கு, இறுதிப் பகுப்பாய்வில், ஒரு அகநிலை ஒழுங்கின் அனைத்துத் தடைகளையும் முறியடித்து, புறநிலை நிகழ்ச்சிப்போக்கே ஒரே தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்பதை மனதில் கொள்வது அவசியம் மட்டுமன்றி, ஸ்ராலினிசமே ஒரு புறம் முரண்பாடுகளின் நிகழ்வுப்போக்காகவும், மறுபுறம் சுய-முரண்பாடான நிகழ்வுப்போக்காகவும் உள்ளது' என பப்லோ எழுதினார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

ஆனால் 'புறநிலை நிகழ்ச்சிப்போக்கே' 'ஒரே தீர்மானிக்கும் காரணி' என்றால், கட்சியின் பங்கு என்ன? புரட்சியின் இயக்கவியல் மற்றும் கட்சியின், தலைமையின் தீர்க்கமான பாத்திரம் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதிய அனைத்தையும் இந்த அறிக்கை தூக்கியெறிந்தது. புரட்சியின் ஒரு காலகட்டத்தில் இந்தக் காரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. 'ஆனால் புறநிலை முன்நிபந்தனைகள் முதிர்ச்சியடைந்தவுடன், முழு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் திறவுகோலும் அகநிலை காரணியின் கைகளுக்கு, அதாவது கட்சிக்கு செல்கிறது' என்று ட்ரொட்ஸ்கி 1928 இல் எழுதினார். 'கடந்த கால சகாப்தத்தின் [அதாவது, முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலம்] உத்வேகத்தின் மீது நனவுடனோ அல்லது நனவற்றோ செழித்து வளரும் சந்தர்ப்பவாதம், எப்போதும் அகநிலை காரணியின் அதாவது கட்சியின் முக்கியத்துவம் மற்றும் புரட்சிகர தலைமையின் பங்கை குறைத்து மதிப்பிட முனைகிறது.” [28]

மூன்றாம் உலக காங்கிரசிற்காக தயாரிக்கப்பட்ட தீர்மானங்களும் காங்கிரஸுக்கு பப்லோவின் அறிக்கையும் ('வெகுஜனங்களை நோக்கிய பாதை'), வெகுஜன இயக்கங்கள் எங்கிருந்தாலும் அவை எந்த வடிவத்தை எடுத்தாலும் அவற்றுள் 'உண்மையாக ஒன்றிணைந்துகொள்ளல்' என்ற முன்னோக்கு, கலைப்புவாத கருத்தாக்கங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது.

பப்லோ தனது அறிக்கையில், 'எமது இயக்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக, குறிப்பாக இரண்டாம் உலக காங்கிரஸுக்குப் பின்னர், எமது காரியாளர்களின் முதிர்ச்சி, ஒவ்வொரு நாட்டிலும் வெகுஜனங்களின் உண்மையான இயக்கம் எடுத்துள்ள பாதையின் விட்டுக்கொடுக்காத, திட்டமிட்டரீதியான ஆய்வு மற்றும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் வடிவங்களும் அமைப்புகளும் மற்றும் இந்தப் பாதையில் எமது உறுதியான மற்றும் நடைமுறை நடவடிக்கைகளால் எடுத்துக்காட்டப்படுகின்றது.'

பப்லோவின் 'வெகுஜனங்களை நோக்கிய பாதை' என்பது சோசலிசப் புரட்சிக்கான உலகளாவிய முன்னோக்கைக் காட்டிலும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய கருத்துப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. 'வெகுஜனங்களின் உண்மையான இயக்கத்தைப் புரிந்துகொள்வது என்பது முதலில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல் சூழ்நிலைகள், அதன் தனித்தன்மைகள், அதன் இயக்க ஆற்றல் ஆகியவற்றை சரியாகப் பகுப்பாய்வு செய்து, வெகுஜனங்களை அடைவதற்கு மிகவும் பொருத்தமான தந்திரோபாயங்களை வரையறுப்பதாகும்.'

மார்க்சிச இயக்கத்தில் பாரம்பரியமாக தந்திரோபாய கேள்விகளாகக் கருதப்படும், ஏற்கனவே உள்ள தலைமைகளிலிருந்து தொழிலாளர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் வெற்றிகொள்வது என்பதை, அரசியல் முன்னோக்கின் மிகமுக்கிய கேள்வியாக பப்லோ எழுப்பினார், அதன் முக்கிய அர்த்தம் இப்போது மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டது என்றார். 'எங்கள் இயக்கத்தின் வரலாற்றிலும் பொதுவாக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றிலும் முதல்முறையாக நாம் புரிந்துகொண்டிருப்பது என்னவெனில் முதன்முறையாக முழுமையான முறையில் மற்றும் மிகப் பெரிய அளவில் வெகுஜன இயக்கத்தில், நம் இடத்தைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே. அது எங்கெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, மேலும் அது அதன் சொந்த அனுபவத்தின் மூலம் உயர் மட்டங்களுக்கு உயர உதவவேண்டும்…”

இப்போது ஒரு தனித்த ட்ரொட்ஸ்கிச அமைப்புக் கூட முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ, ஒவ்வொரு நாட்டிலும் தன்னை வெளிப்படுத்தும் வெகுஜன இயக்கத்தில் உண்மையான ஒருங்கிணைப்புக்கு, அல்லது அந்த இயக்கத்தின் முக்கியமான நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பதற்கு இது செல்வாக்கு செலுத்தலாம் என்பதற்காக பொதுவாக சுயாதீனமாகவோ அல்லது வேறுவகையிலோ அனைத்து அமைப்பரீதியான கருத்தாய்வுகளையும் அடிபணியச் செய்வதன் அவசியத்தை தீவிரமாக, ஆழமாக, உறுதியாகப் புரிந்து கொள்ளவில்லை. [29]

இலத்தீன் அமெரிக்காவின் அரசியல் நிலைமை குறித்து காங்கிரஸ் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதில் பொலிவியாவில் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கம் குட்டி-முதலாளித்துவ MNR ஐ நோக்கி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பு உள்ளடங்கியிருந்தது. இது கண்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கலைப்புவாத கொள்கையின் ஆரம்பமாக இருந்தது. இது அடுத்த விரிவுரையில் மதிப்பாய்வு செய்யப்படும்.

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கனன் மேற்கொள்ளலும், பகிரங்கக் கடிதத்தை வெளியிடலும்

1952 இல் தொடங்கி, பப்லோவாதத்திற்கு எதிராக கனன் மேற்கொண்ட போராட்டம், நவம்பர் 1953 இல் பகிரங்கக் கடிதத்தை வெளியிடுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த வரலாற்றை நாம் காக்கும் மரபியத்தின் 16 ஆம் 17 ஆம் அத்தியாயங்களில், மதிப்பாய்வு செய்யும் போது, பண்டா தனது '27 காரணங்களில்' முன்வைத்த பொய்யான பப்லோவாதத்தை எதிர்ப்பதிலும், அனைத்துலகக் குழுவை ஸ்தாபிப்பதிலும் கனன் (பண்டாவின் கூற்றுப்படி அதே போல் ஹீலியும்) ஏதோ ஒருவித நடைமுறைச் சூழ்ச்சிக்கையாளலில் அல்லது அதைவிட மோசமானதில் ஈடுபட்டனர் என்பதை தோழர் நோர்த் அம்பலப்படுத்தி எதிர்க்கிறார். பண்டாவின் கூற்றுப்படி, 1953 இல் ஏற்பட்ட பிளவு 'பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உள்ளவர்களுக்கு (உதாரணத்திற்கு, கனன் மற்றும் ஹீலிக்கு) தொழிற் கட்சி, சீர்திருத்தவாத அதிகாரத்துவங்கள் மற்றும் அரசை நோக்கிய விரைவாக நோக்குநிலை கொண்டவர்களுக்கும், அத்தோடு இத்தாலி மற்றும் பிரான்சில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்துபோன மேற்கு ஐரோப்பாவிலுள்ளவர்களுக்கும் இடையேயான மோதலாகும். [30]

தோழர் நோர்த் குறிப்பிடுவது போல், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபகமானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிவதன் அடிப்படையில் அமைந்திருந்தது என்ற 1953 பற்றிய இந்த விளக்கம் உண்மையாக இருந்தால், அந்த நேரத்தில் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பப்லோவை விமர்சன ரீதியாக ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருப்பார்கள். நாம் காக்கும் மரபியம் முழுமையாக நிரூபிப்பது போல, பண்டாவின் “பகுப்பாய்வு” ஒரு முழுமையான புனைகதையாகும்.

ஜேம்ஸ் பி. கனன், மத்தியில், மக்ஸ் ஈஸ்ட்மன், இடது மற்றும் பில் ஹேவுட் மாஸ்கோவில், 1922.

1953 ஆம் ஆண்டில் கனனின் பங்கை இழிவுபடுத்தியது (இது பண்டாவால் ஹீலி மீதும் நடாத்தப்பட்டது) WRP இன் முந்தைய நிலைப்பாடுகளில் வேர்களைக் கொண்டிருந்தது. அதன் தேசியவாத சீரழிவின் போக்கில் WRP பப்லோவுடனான கனனின் முறிவு வெறுமனே ஒரு கொள்கையற்ற சூழ்ச்சிக்கையாளல் என்ற நிலைப்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கியது. 1974 இல் வெளியிடப்பட்ட ட்ரொட்ஸ்கிசம் Trotskyism vs. Revisionism, Volume 1 க்கான முன்னுரையில் 'இந்த இயக்கத்திற்குப் புதியவர்கள் பலர், இந்த கலந்துரையாடலில் SWP திருத்தல்வாத-எதிர்ப்பு மற்றும் மார்க்சிச நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினர் மற்றும் அவர்களின் தற்போதைய [1970களில்] துரோகத்தனம் என்பது ஐம்பதுகளின் 'மரபுவழி'யோடு தொடர்பில்லாத ஒருவித பிறழ்வு ஆகும் என்ற முடிவிற்கு வர முனையலாம் என விவாதிக்கின்றது. மாறாக, ICFI ஆனது, பப்லோவாதம் மற்றும் 'கனன்-டொப்ஸ்-ஹான்சன் போக்கின் நடைமுறைவாதம் மற்றும் இயந்திரரீதியான நிர்ணயவாதம் (mechanical determinism)' ஆகிய இரண்டிற்கும் எதிராக அதன் முன்னோக்கை விரிவுபடுத்தியது. அது மேலும் கூறுகிறது, 'கனனும் SWP தலைமையின் பெரும்பான்மையினரும் பப்லோவை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராட முடியவில்லை, ஏனெனில் அவர்களும் அதே நேர்மறைவாத முறையைப் பகிர்ந்து கொண்டனர்.' [31]

ஹீலியின் இரங்கல் செய்தியில், உண்மையில் 1960களின் பிற்பகுதியில் தொடங்கிய இவ்வாறான கனனின் பாத்திரத்தை குறைத்துக்காட்டல், 'சர்வதேச இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சியில் அதன் தீர்க்கமான பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்காக முன்னேறியது' என்று தோழர் நோர்த் சுட்டிக்காட்டுகிறார்.'

பின்னோக்கிப் பார்த்தால், பப்லோவாதம் தோன்றிய ஆரம்ப வருடங்களில் பிரெஞ்சுப் பிரிவின் பெரும்பான்மையினருக்கு எதிரான பப்லோவின் அதிகாரத்துவ நகர்வுகளில் உள்ள அரசியல் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளத் தவறியது, மூன்றாம் உலக காங்கிரஸின் தீர்மானங்களில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளின் தொலைநோக்கு முக்கியத்துவம் உட்பட கனனின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது நிச்சயமாக சாத்தியமாகும். பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டவுடன் கனன் இந்த தவறுகளை ஒப்புக்கொண்டார். ஆனால் இதிலிருந்து பப்லோவுக்கு எதிரான கனனின் போராட்டம் வெறும் சூழ்ச்சிக்கையாளல் என்றும், கனனால் 'அரசியல் ரீதியாக பப்லோவை எதிர்த்துப் போராட முடியவில்லை' என்றும் முடிவெடுப்பது வரலாற்றுப் பதிவை சிதைப்பதாகும். அவரது பின்னரான அரசியல் சீரழிவு இருந்தபோதிலும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் அது கனனின் சொந்த நிலைப்பாட்டை பொய்மைப்படுத்தியது. அந்த நேரத்தில் ஹீலி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கனனின் பகிரங்கக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அடித்தளத்தையே அது குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.

முதலில் SWP இனுள் கொக்ரான்-கிளார்க் போக்குக்கு எதிரான போராட்டத்திலும் பின்னர் ஒட்டுமொத்தமாக பப்லோவாதத்திற்கும் எதிராக கட்சியின் வரலாற்றினை பாதுகாக்க கனன் எடுத்த போராட்டம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.

அமெரிக்காவில், பேர்ட் கொக்ரான் தலைமையிலான பப்லோவின் ஆதரவாளர்கள், 'பழைய ட்ரொட்ஸ்கிசத்தை குப்பையில் தள்ளுங்கள்' என்ற கோரிக்கையின் கீழ், இயக்கத்தின் வரலாற்று மரபுகளை மொத்தமாக கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சோசலிச தொழிலாளர் கட்சி தன்னை 'ட்ரொட்ஸ்கிஸ்ட்' என்று குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று வாதிட்ட கொக்ரான், ஏப்ரல் 1951 இல் கூறினார், “இந்த பெயர் குறிப்பிடலானது சராசரியான அரசியல் ஆர்வமற்ற அமெரிக்கருக்கு, அதாவது நாம் மிகவும் அணுகஆர்வம் காட்டுகிற மனிதருக்கு[!] ஒரு குறுங்குழுவாத இயக்கமாக, ஏதோவொரு தனிமனிதரை, அதிலும் ஒரு ரஷ்யரை பின்பற்றி நடப்பவர்கள் என்ற பிம்பத்தை உண்டாக்குவதாக நான் உணர்கிறேன்.” [32]

கட்சியின் வரலாற்றின் மீதான கட்டுப்பாடற்ற விரோதம் கொண்ட அனைத்து திருத்தல்வாதப் போக்குகளின் குணாதிசயமான மனநிலையை கொக்ரான் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஜூலை-ஆகஸ்ட் 1951 இல் நாம் 'கடந்த காலத்திலோ அல்லது நம் சொந்த உருவாக்கத்திலான கற்பனை உலகத்திலோ நாம் வாழ முடியாது' என அவர் அறிவித்தார்.

எவ்வித கற்பனையுலகியல் சார்ந்த தன்மையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. குவிக்சாட்டிசத்திற்கும் (நடை முறைக்கு ஒவ்வாத கற்பனை எண்ணம்) நமக்கு வசதியில்லை. நமது வேலைத்திட்டமானது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்ற அதேவேளையில், ட்ரொட்ஸ்கி உடனடியான மிக நேரடியான அர்த்தத்தில் நமது இயக்கத்தின் ஆசிரியராகவும் தலைவராகவும் இருந்தார் என்ற அதேவேளையில், அதற்காக இந்த இரண்டு முன்மொழிவுகளில் இருந்தும், இப்போது வரலாற்றிற்கு உரியதாகிவிட்ட ஸ்ராலின்-ட்ரொட்ஸ்கி மோதலில் சரி மற்றும் தவறுகளை எடுத்துரைத்து தொழிலாளர்களை சரியான வழிக்குக் கொண்டுவர முயலுவதன் மூலமாக நமது பதாகையின் கீழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் நாம் அதிகம் வெற்றி கண்டுவிடுவோம் என்றோ அல்லது அவ்வாறு செய்ய முயலுவது தான் நமது புரட்சிகரக் கடமை என்றோ முடிவு பிறப்பதில்லை. [33]

இது ஒரு அசாதாரண அறிக்கையாகும். 'ஸ்ராலின்-ட்ரொட்ஸ்கி' மோதலை —இது தனிநபர்களுக்கிடையேயான முரண்பாட்டைப் பற்றியது, உலக சோசலிச இயக்கத்திற்கான வாழ்வா சாவா பிரச்சினைகளைப் பற்றியது அல்ல— 'வரலாற்றில் கலந்துவிட்டது' என்பதாகக் கூறப்படுகின்றது. 1951 இல், ட்ரொட்ஸ்கி ஒரு GPU முகவரின் கைகளால் படுகொலை செய்யப்பட்ட 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இது கூறப்பட்டது. இது 2012 முதல் இன்று வரையிலான காலகட்டத்திற்கும் சமமானதாகும். அப்போது சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் மற்றும் சோசலிச தொழிலாளர்களும் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டும், பெரும் களையெடுப்பு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகியிருந்தது. ஆனால் ஸ்ராலின் இன்னும் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவ எந்திரத்திற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கையில் இந்த மோதலின் 'சரி, பிழைகள்' அவர்களால் தொலைதூர கடந்த காலத்திற்கு பின்தள்ளப்பட்டுவிட்டன.

கொக்ரானுக்கு எதிரான போராட்டமும், பின்னர் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமும், ஒரு சர்வதேச போக்காக அங்கத்தவர்களுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் சொத்தாக வேண்டும் என்பதை கனன் புரிந்து கொண்டார்

மே 24, 1953 அன்று, எதிர்ப்பின் முக்கிய தளமான நியூ யோர்க் கிளையின் உறுப்பினர் கூட்டத்திற்கு முன்பு கனன் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவின் ஒரு பகுதியை காட்ட விரும்புகிறேன். கனன் எதைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதையும், இயக்கத்தின் வரலாற்றில் அவர் எடுத்துக்கொண்ட அணுகுமுறையையும் இது உணர்த்துகிறது, இதில் தோழர்கள் இந்த பள்ளியின் நோக்கத்தை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கிளைக் கூட்டத்திலிருந்து ஜேம்ஸ் பி கனனின் உரையின் சில பகுதிகள்

இந்த உரையிலும், அந்தக் காலத்தைச் சேர்ந்த பிறவற்றிலும், கனன் எதிர்ப்பினரின் நிலைப்பாடுகளை புறநிலை நிலைமை மற்றும் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் வர்க்க உறவுகளில் மாற்றங்களுடன் தொடர்புபடுத்திக்காட்டினார். மே 11, 1953 அன்று கட்சியின் பெரும்பான்மை பிரிவினரின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தொழிற்சங்கங்களுக்குள் நடைபெற்று வரும் அடுக்கு முறை மற்றும் ஒரு பழமைவாத அடுக்கின் தோற்றம் ஆகிய மனநிலைகளும் கருத்தாக்கங்களும் கட்சிக்குள்ளேயே வெளிப்பாட்டைக் கண்டுள்ளன என்பதை, கட்சி இனி புறக்கணிக்க முடியாது என அவர் விளக்கினார்.

1953 ஆம் ஆண்டளவில், கொக்ரான் மற்றும் கிளார்க் [34] தலைமையிலான போக்கில் SWP எதிர்கொண்ட அரசியல் கருத்தாக்கங்கள் பப்லோவால் ஊக்குவிக்கப்பட்ட கலைப்புவாத நிலைப்பாட்டின் ஒரு பிரத்தியேகமான தேசிய வெளிப்பாடு என்ற புரிதலுக்கு கனனும் அவரது ஆதரவாளர்களும் வந்தனர். எனவே, இதனை சர்வதேசத்தின் மட்டத்தில் மட்டுமே முன்னெடுக்க முடியும். அக்டோபர் 25, 1953 அன்று ஹீலிக்கு எழுதிய இந்தக் கடிதத்தில் டொப்ஸ் விளக்கியது போல், “சர்வதேச இயக்கத்திற்கு நாம் செய்யக்கூடிய சிறந்த சேவை, பப்லோவாத சூழ்ச்சியின் வலையமைப்பு முழுவதையும் அவர்களின் திருத்தல்வாத-கலைப்புவாதக் கொள்கையின் வெளிப்படையான சவாலுடன் வெட்டுவதுதான் என்று நாங்கள் நினைக்கிறோம். நான்காம் அகிலத்தைக் காப்பாற்றவும், இந்த அபகரிக்கும் திருத்தல்வாதக் கும்பலைத் தூக்கி எறியவும் ஒன்றுபடுமாறு உலகின் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கிறோம்.

'இப்போது நாம் எதிர்கொள்ளும் போராட்டம், ஆரம்பகால ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள் அணிதிரண்டிருந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட மாபெரும் போராட்டங்களைப்போல் எதிர்காலத்திற்கு முக்கியமானதும் மற்றும் தீர்க்கரமானதுமாகும். இந்த அரசியல் நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ளும் போது, அற்பமான ஊழல்களும் அமைப்புரீதி கைப்புரட்டுகளும் முக்கியத்துவத்தை இழக்கின்றன. ஒரு சமரசமற்ற அரசியல் சவாலின் மூலம், இங்கிலாந்தின் எதிர்கால இயக்கமாக மாறும் ஒரு பிரிவாக உங்கள் பிரிவினரை விரைவாகப் பிணைப்பீர்கள்.' [35]

நவம்பர் தொடக்கத்தில், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு கட்சி நிகழ்வை புறக்கணிப்பதில் பங்கேற்ற கொக்ரான், கிளார்க் மற்றும் பலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கனன் ஒரு தேசிய குழுவின் அமர்விற்கு ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபத்தில் உள்ள மையப் பிரச்சினையான புரட்சிகர தலைமை பற்றிய கேள்வியையும் அதனுடன் பிணைக்கப்பட்ட சகாப்தத்தின் தன்மை பற்றிய புரிதலின் முக்கித்துவத்தையும் கோடிட்டுக் காட்டினார்:

பப்லோவாதத்துடனான நமது முறிவு —நாம் இப்போது தெளிவாகக் காண்கிறவாறாக— ஒரு புள்ளியை நோக்கி சென்று கட்சி குறித்த பிரச்சினையில் ஒன்றுகுவிகிறது. பப்லோவாதத்தின் வளர்ச்சியை செயலில் பார்த்திருப்பதால், அது இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கட்சி தொடர்பான கேள்வியில் தொகுத்துக்கூறப்பட்டுள்ளபடி, மனிதகுல நெருக்கடியானது தொழிலாளர் இயக்கத்தின் தலைமையிலான நெருக்கடியாகும் என்ற கருத்தாக்கத்தில் இன்று முக்கியமான பகுதியாகவுள்ள ட்ரொட்ஸ்கிசத்தின் பகுதியை தூக்கிவீசுவது தான் பப்லோவாத திருத்தல்வாதத்தின் சாரமாக இருக்கிறது. [36]

நவம்பர் 1953 இன் பகிரங்கக் கடிதம், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொள்கை ரீதியான அரசியல் மற்றும் அமைப்புரீதியான பிரச்சினைகளை சுருக்கமாகக் கூறியது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் கட்டமைக்கப்பட்ட அடிப்படையான 'ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டம்' என்பதன் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்ட பகுதிகளுடன் இது தொடங்குகிறது, இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபக ஆவணத்தில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள் காட்ட:

1. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலமானது, மோசமடைந்து வரும் பொருளாதார மந்தநிலை, உலக போர்கள் மற்றும் பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தன வெளிப்பாடுகள் மூலமாக மனித நாகரீகத்தையே அழிக்க அச்சுறுத்துகின்றது. இன்று அணுஆயுதங்களின் அதிகரிப்பானது இந்த சாத்தியமாகக்கூடிய அபாயத்தை மிகவும் அழுத்தம்மிக்க வகையில் எடுத்துக் காட்டுகின்றது.

2. சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கொண்டு உலகளவில் முதலாளித்துவத்தை பிரதியீடு செய்வதன் மூலமாக, அவ்விதத்தில் முதலாளித்துவத்தால் அதனது ஆரம்ப நாட்களில் தொடக்கிவைத்த முன்னேற்றத்திற்கான சுழற்சியை மீண்டும் தொடங்குவதன் மூலமாக மட்டுமே இந்த பேரழிவுக்குள் வீழ்வதைத் தடுக்க முடியும்.

3. இத்தகைய பணியானது சமூகத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே அடைய முடியும். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதையில் சமூக உற்பத்திகளின் உலகளாவிய உறவு இன்றிருப்பது போல் ஒருபோதும் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்ததில்லை என்றபோதிலும் கூட, தொழிலாள வர்க்கமே ஒரு தலைமை நெருக்கடியை எதிர்கொள்கின்றது.

4. இந்த உலகளாவிய-வரலாற்று சிறப்பு மிக்க குறிக்கோளை செயல்படுத்துவதற்காக அதனை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் லெனின் அபிவிருத்தி செய்த வடிவத்தில் ஒரு புரட்சிகர சோசலிச கட்சியைக் கட்டமைக்க வேண்டும்; அதாவது, முடிவெடுப்பதில் ஜனநாயகமும், அதை செயல்படுத்துவதில் மத்தியத்துவமும் கொண்ட, ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவத்தை இயங்கியல்ரீதியில் இணைக்க தகைமை கொண்டதும்; அடிமட்ட அங்கத்தவர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தலைமையும், எந்தவொரு நெருக்கடியான சூழலிலும் கட்டுப்பாட்டுடன் முன்னேறி செல்லக்கூடிய அங்கத்தவர்களையும் கொண்ட ஒரு போராடும் கட்சியைக் கட்டமைக்க வேண்டும்.

5. இதற்கு ஸ்ராலினிசம் பிரதான தடையாக உள்ளது. அது 1917 ரஷ்ய புரட்சியின் நன்மதிப்பை சுரண்டுவதன் மூலமாக தொழிலாளர்களை ஈர்த்து, அவர்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்து பின்னர் அவர்களை திரும்பவும் சமூக ஜனநாயகத்தின் கரங்களுக்குள்ளும், அல்லது முதலாளித்துவத்தின் மாயைக்குள்ளும் தள்ளுகின்றது. இத்தகைய காட்டிக்கொடுப்புகளுக்கு தண்டனையாக, பாசிசவாத அல்லது முடியாட்சி வகைப்பட்ட சக்திகள் பலப்படுவதன் வடிவத்திலும் மற்றும் முதலாளித்துவத்தால் தயாரிக்கப்பட்டு உருவெடுக்கும் புதிய போர் வெடிப்புகளின் வடிவத்திலும் உழைக்கும் மக்கள் விலை கொடுக்கச் செய்யப்படுகிறார்கள். நான்காம் அகிலம் அதன் ஆரம்பத்திலிருந்தே, சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளும் புறமும் ஸ்ராலினிசத்தை புரட்சிகரமான முறையில் தூக்கியெறிவதை அதன் பிரதான பணிகளில் ஒன்றாக வகுத்துக்கொண்டது.

6. நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும், மற்றும் அதன் வேலைத்திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளும் அல்லது குழுக்களும் வளைந்து கொடுக்கும் தந்திரோபாயங்களின் அவசியத்திற்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், இது ஸ்ராலினிசத்திற்கு அடிபணியாமல் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் அதன் சகல குட்டி-முதலாளித்துவ முகமைகளுக்கும் (தேசியவாத அமைப்புகள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்றவற்றிற்கு) எதிராக எவ்வாறு போராடுவது என்பதையும், ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் (இறுதி பகுப்பாய்வில் ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி-முதலாளித்துவ முகமையாக உள்ள) ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை தவிர்க்கவியலாத அத்தியாவசியமான ஒன்றாக ஆக்குகின்றது. [37]

முக்கியமான அரசியல் நிகழ்வுகளால் வெளிப்படுத்தப்பட்ட இந்த அடிப்படை கருத்தாக்கங்களை பப்லோ நிராகரித்ததை, பகிரங்க கடிதம் விரிவாக அம்பலப்படுத்தும் விதத்தை நாம் காக்கும் மரபியத்தின் 18வது அத்தியாயம் விவரிக்கிறது. மார்ச் 1953 இல் ஸ்ராலினின் மரணத்திற்கான பிரதிபலிப்பும் இதில் அடங்கும், பப்லோவாதப் பிரிவு அதிகாரத்துவத்தின் விட்டுக்கொடுப்புகளை ஒரு சூழ்ச்சியாக அல்லாமல், மாறாக தொழிலாள வர்க்கத்துடன் 'அதிகாரத்தைப் பகிர்வதை' நோக்கிய நகர்வுகளாக சித்தரிக்கிறது. ஜூன் 1953 இல் கிழக்கு ஜேர்மனியில் தொழிலாளர்களின் எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், ஸ்ராலினிச துருப்புக்களால் தொழிலாளர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறையை பப்லோவாதிகள் 'மேலும் அதிகமான மற்றும் உண்மையான சலுகைகளுக்கான பாதையின்' ஒரு பகுதியாக அலங்கரித்தனர். ஆகஸ்டில் பிரான்சில் நடந்த மாபெரும் பொது வேலைநிறுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையில், பிரெஞ்சு முதலாளித்துவத்தை வலுப்படுத்தும் அதன் கொள்கையை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை ரீதியான 'பற்றாக்குறை' இருப்பதாகக் கூறி, ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்புகளை பப்லோவாதிகள் மூடிமறைத்தனர்.

பப்லோயிசத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் ஒரு சர்வதேச எதிர்தாக்குதலுக்கான அழைப்போடு கடிதம் முடிகிறது:

பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான பிளவுகள் மிக ஆழமானதாக இருப்பதால் அரசியல் ரீதியாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ எந்தவிதமான சமரசத்திற்கும் அங்கு இடமில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை உண்மையில் பிரதிபலிக்கும் ஜனநாயக முறையிலான முடிவுகளை அடைய அனுமதிக்கபோவதில்லை என்பதை பப்லோ கன்னை நிரூபித்துள்ளது. தங்களது குற்றவியல் கொள்கைக்கு முழுமையாக அடிபணிய வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். நான்காம் அகிலத்திலிருந்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவரையும் விரட்டிவிட அல்லது வாய்மூடப்பண்ண மற்றும் கைவிலங்கிட அவர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாற்றத்திற்கான பண்புரீதியான தருணம் வந்துவிட்டது. அரசியல் கேள்விகள் சூழ்ச்சி நடவடிக்கைகளை தகர்த்துவிட்டிருக்கின்றன மற்றும் போராட்டம் இப்பொழுது ஒரு இறுதிச் சுற்றுக்கு வந்துவிட்டது.

முடிவுரை

நான் மூன்று புள்ளிகளுடன் முடிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, அனைத்துலகக் குழுவை அமைப்பதில், கனனும் ஹீலி உட்பட அவரது ஆதரவாளர்களும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கலைப்பதில் இருந்து பாதுகாத்தனர். இந்தப் போராட்டம் இல்லாவிட்டால், நான்காம் அகிலம் ஒரு புரட்சிகரப் போக்காக இருப்பது இல்லாமல் போயிருக்கும். அவரது அடுத்தகட்ட சீரழிவு இருந்தபோதிலும், இந்த பணி எவ்வளவு அவசரமானதும் அவசியமானதும் என்பதை கனன் புரிந்துகொண்டார். பெப்ரவரி 23, 1954 இல் லெஸ்லி குணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில், 'பழைய ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள் நீண்டநெடும் போராட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட தேட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்' என்று அவர் எழுதினார்.

அவர்கள் கொள்கைநெறியை சுமந்துசெல்பவர்களாய் உள்ளனர்; வெகுஜன இயக்கத்திற்குள்ளாக சோசலிச நனவின் கூறான நமது சித்தாந்தத்தை கொண்டுசெல்வதற்கு இப்போது இருக்கின்ற ஒரேயொரு மனித சாதனங்களாக உள்ளனர். பப்லோ பரிவாரமானது இந்தக் காரியாளர்களை, ஒவ்வொரு நாடாக, ஒருவர் பின் ஒருவராக திட்டமிட்டு சீர்குலைப்பதற்குக் புறப்பட்டுள்ளது. நாமும் —நீண்டதொரு தாமதத்திற்குப் பின்னர்— இந்த மோசடித் தாக்குதலுக்கு எதிராக காரியாளர்களைப் பாதுகாப்பதற்கு சளைக்காத திட்டமிடலுடன் ஆரம்பித்தோம். சர்வதேச இயக்கத்திற்கு நாம் கொண்டுள்ள பொறுப்புணர்ச்சி அவ்வாறு செய்வதை நமக்கு கட்டாயமாக்கியது. புரட்சிகரக் காரியாளர்கள் அழிக்கப்பட முடியாதவர்களல்லர். கோமின்டேர்னின் துன்பகரமான அனுபவம் நமக்கு அதைக் கற்பித்துள்ளது. [38]

WRP உடனான பிளவும் இதேபோன்ற தன்மையைக் கொண்டிருந்தது. இது நான்காம் அகிலத்தையே அழிக்க அச்சுறுத்திய ஒரு கலைப்புவாத, சந்தர்ப்பவாத போக்கிற்கு எதிராக இயக்கத்தின் முழு வரலாற்றையும் பாதுகாப்பதாக அது இருந்தது. வெவ்வேறு நிலைமைகளின் கீழ், இந்த கருத்துருக்களை நாங்கள் கட்சியின் பணிகளில் கொண்டு வருகிறோம். நாங்கள் இப்போது கட்சிக்குள் இருக்கும் சந்தர்ப்பவாதப் போக்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிவில்லை. ஆனால், புறநிலை சூழ்நிலையால் முன்வைக்கப்படும் பணிகளைப் பற்றிய புரிதலின் அடிப்படையில், 'நீண்டநெடும் போராட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட தேட்டங்களில்' முழுக் கட்சிக்கும் கல்வி கற்பிக்க முயற்சிக்கிறோம். இந்த அடிப்படையில்தான் நாம் மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலையில் கட்சியை நோக்குநிலைப்படுத்த முடியும், மேலும் கட்சியின் மூலம் தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சியில் நோக்குநிலைப்படுத்தவும் வழிநடத்தவும் முடியும்.

இரண்டாவதாக, இந்த மதிப்பாய்விலிருந்து தோழர்கள் எடுக்க வேண்டிய ஒரு முடிவு இருந்தால், நாம் காக்கும் மரபியம் உட்பட WRP உடனான பிளவு பற்றிய ஆவணங்களை நீங்கள் கவனமாகவும் விரிவாகவும் படிக்க வேண்டும். இந்த விரிவுரையின் உள்ளடக்கத்தினுள், பப்லோவாதத்தின் தோற்றம், பரிணாமம் மற்றும் அதன் முக்கியத்துவத்தின் முக்கிய புள்ளிகளை மட்டுமே என்னால் மதிப்பாய்வு செய்ய முடிந்தது. இந்த வார அனைத்து விரிவுரைகளையும் போலவே, இதுவும் கட்சி மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்களின் படிப்பிற்கான தொடக்க புள்ளியாக உள்ளது.

மூன்றாவதாக, 70 ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்த போராட்டம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஒரு 'உள்நாட்டுப் போர்' என நாம் விவரித்த 30 வருட காலப்பகுதியை ஆரம்பித்தது. இதில் ஹீலி மற்றும் SLL தலைமையால் நடத்தப்பட்ட கொள்கையற்ற மறு ஒருங்கிணைப்புக்கு எதிரான போராட்டம் உட்பட, மற்றும் WRP உடனான பிளவில் உச்சக்கட்டத்தை அடைந்ததும் உள்ளடங்கும். இதைத்தான் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் மூன்றாவது காலகட்டம் எனவும் இந்த வார விரிவுரைகளின் முக்கிய விடயம் என்று நாங்கள் அழைத்தோம்.

1953 இல் பப்லோவாத நிலைப்பாட்டை எடுத்த, பின்னர் 1963 ஆம் ஆண்டின் மறு ஒருங்கிணைப்பில் பங்கேற்று இன்றும் அதனுடன் இருக்கும் அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை இன்று இருந்தால், 'போலி-இடதுகளாக', ஏகாதிபத்திய ஆதரவாளர்களாக மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் பாதுகாவலர்கள் மத்தியிலேயே உள்ளன. பப்லோவாதத்தின் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் என்ற நிலைக்கு கூட உயர்ந்துள்ளனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே அதன் 70 ஆண்டுகால வரலாற்றிலும் அதன் தற்போதைய நடைமுறையிலும் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கைப் பாதுகாத்து நிலைநிறுத்துகிறது. இதுவே சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாகும்.

[1] The ‘Open Letter’ and the Formation of the International Committee,” Historical and International Foundations of the Socialist Equality Party (US), 2008. URL: https://www.wsws.org/en/special/library/foundations-us/17.html

[2] David North, The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International (Oak Park, MI: Mehring Books, 2018), p. 189.

[3] “Letter from David North to Mike Banda, January 23, 1984,” The ICFI Defends Trotskyism. URL: https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/05.html

[4] North, The Heritage We Defend, p. 486.

[5] Leon Trotsky, “The USSR in War,” In Defense of Marxism (London: New Park Publications, 1971), p. 7.

[6] “A Letter to James P. Cannon, Sept 12, 1939,” ibid., p. 1.

[7] “The USSR in War,” ibid., pp, 22-23.

[8] Quoted in The Heritage We Defend, p. 99.

[9] Quoted in ibid., p. 101.

[10] Quoted in ibid., p. 109.

[11] Ibid., p. xxxvi.

[12] Historical and International Foundations of the Socialist Equality Party, pp. 69-70.

[13] Quoted in ibid, p. 71.

[14] Quoted in ibid., pp. 71-72.

[15] Michel Pablo, “On the Class Nature of Yugoslavia,” Socialist Workers Party International Information Bulletin, December 1949.

[16] Ibid.

[17] Quoted in The Heritage We Defend, pp. 170-71.

[18] Quoted in ibid., p. 176.

[19] David North, ibid., pp. 176-77.

[20] David North, ibid., p. 189.

[21] Michel Pablo, “Where are we Going?,” (January 1951), SWP International Information Bulletin, March 1951.

[22] Ibid.

[23] Quoted in The Heritage We Defend, p. 185.

[24] Ibid., p. 187.

[25] David North, “Marxism, History and Socialist Consciousness,” The Frankfurt School, Postmodernism and the Politics of the Pseudo-Left (Oak Park, MI: Mehring Books, 2015), p. 91.

[26] V.I. Lenin, “How Bogdanov Corrects and ‘Develops’ Marx,” Materialism and Empirio-Criticism, Chapter 6.2, URL: https://www.marxists.org/archive/lenin/works/1908/mec/six2.htm

[27] Leon Trotsky, “Our position on war as nurturing revolution” Fourth International, No. 11, URL: https://www.marxists.org/history/etol/newspape/fi-is/no11/trotsky.htm

[28] Leon Trotsky, “The Draft Program of the Communist International: A Criticism of Fundamentals,” The Third International After Lenin (New York: Pathfinder Press, 1996), p. 101.

[29] Quoted in The Heritage We Defend, pp. 191-192.

[30] Quoted in The Heritage We Defend, p. 197.

[31] Trotskyism vs. Revisionism, Volume One: The Fight Against Pabloism in the Fourth International (London: New Park Publications, 1974), pp. xii; xvi.

[32] Quoted in The Heritage We Defend, p. 200.

[33] Quoted in The Heritage We Defend, p. 203.

[34] Bert Cochran and his principal supporter, George Clarke, went on to form the Socialist Union of America, based, as Cochran wrote in May 1954, on the conviction that “the revolutionary parties of tomorrow will not be Trotskyist, in the sense of necessarily accepting the tradition of our movement, our estimation of Trotsky’s place in the revolutionary hierarchy, or all of Trotsky’s specific evaluations and slogans.” (“Our Orientation”). The publication of the organization (The American Socialist) anticipated the positions to be developed by the movement for a “New Left” in the 1960s. “If the sixties are due to introduce a new decade of social tension and strife—and many signs point that way—it is vain to imagine that the surviving radical grouplets can start again where they left off twenty years ago… That play is finished. Leadership will inevitably come first from sources that currently sit astride the labor, liberal, and Negro movements, and command the attention, if not allegiance, of sizable segments of the nation.” (“The Next Generation of Radicals,” The American Socialist, June 1959).

[35] Quoted in The Heritage We Defend, p. 224.

[36] Quoted in ibid., p. 225.

[37] Quoted in ibid., pp. 229-30. The full letter is available here: https://www.wsws.org/en/articles/2008/10/open-o21.html

[38] Quoted in ibid., p. 243.

Loading