துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களால் ஐரோப்பாவை மூழ்கடிக்கும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ரஷ்யாவுடன் நடந்து வரும் போருக்கும் சீனாவுடனான மோதலை அதிகரிப்பதற்கும் கண்டத்தை இராணுவமயமாக்கும் நேட்டோவின் திட்டத்தின் ஒரு பாகமாக ஐரோப்பாவிற்கு அமெரிக்க துருப்புக்களை அதிக அளவில் அதிகரிப்பதாக அறிவித்தார்.

நேட்டோ உச்சிமாநாடு சுவீடன் மற்றும் ஃபின்லாந்தை கூட்டணியில் சேர முறையாக அழைத்தது, ரஷ்யாவுடனான நேட்டோவின் நில எல்லையை திறம்பட இரட்டிப்பாக்கியது மற்றும் இராணுவ கூட்டணியின் பல தசாப்த கால கிழக்கு பகுதி விரிவாக்கத்தை நிறைவு செய்தது.

புதனன்று பேசிய பைடென், 'நடுநிலை மற்றும் நடுநிலைமையின் பாரம்பரியத்திலிருந்து விலகிச் செல்லும்' சுவீடன் மற்றும் ஃபின்லாந்து அரசாங்கங்களின் முடிவைப் பாராட்டினார்.

அமெரிக்கா மேலும் 20,000 துருப்புக்களை ஐரோப்பாவிற்கு அனுப்பும் என்று பைடென் அறிவித்தார், அங்கு அதன் மொத்த துருப்பு நிலைப்படுத்தல் 100,000 ஆக உள்ளது.

ஸ்பெயினின் கடற்படை நிலையமான ரோட்டாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை அழிக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரிக்க அவர் உறுதியளித்தார்.

முன்னாள் வார்சோ ஒப்பந்த நாட்டிற்குள் முன்னோடியில்லாத வகையில் அமெரிக்க இராணுவம் நுழைந்ததைக் குறிக்கும் வகையில், போலந்தில் நிரந்தர அமெரிக்க இராணுவத் தலைமையகம் அமைப்பதையும் அவர் அறிவித்தார்.

ருமேனியாவை தலைமையிடமாகக் கொண்ட 5,000 பணியாளர்களின் கூடுதல் 'சுழற்சி படைப்பிரிவையும்' அறிவித்தார், அத்துடன் இரண்டு கூடுதல் எஃப் -35 போர் படையணி பிரிவுகளை இங்கிலாந்துக்கு அனுப்பினார் மற்றும் ஜேர்மனியிலும் இத்தாலியிலும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளின் நிலைநிறுத்தல்களையும் அறிவித்தார்.

பைடென் அறிவித்தார்: 'நிலம், காற்று மற்றும் கடல்: நேட்டோ அனைத்து திசைகளிலிருந்தும், ஒவ்வொரு களத்திலும் அச்சுறுத்தல்களைச் சந்திக்கத் தயாராக உள்ளது.'

இந்த அறிவிப்பு பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் மிகப்பெரிய இராணுவ விரிவாக்கம் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்து தெரிவித்துள்ளது.

விமர்சன ரீதியாக, உச்சிமாநாடு ஒரு புதிய நேட்டோ 'மூலோபாயக் கருத்தை' வெளியிடுவதாக அறிவித்தது, ரஷ்யாவை 'நேச நாடுகளின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான மற்றும் நேரடி அச்சுறுத்தல்' என்று வரையறுக்கிறது. நேட்டோவின் 2010 மூலோபாய ஆவணத்தில் ரஷ்யா முன்பு 'மூலோபாய பங்குதாரர்' என வகைப்படுத்தப்பட்டிருந்தது.

முதன்முறையாக, நேட்டோ மூலோபாயக் கருத்து சீனாவையும் குறிவைத்தது, இது கூட்டணிக்கு ஒரு 'சவாலை' ஏற்படுத்தியதாக அறிவித்தது.

தனிப்பட்ட நேட்டோ உறுப்பினர்கள் போர் முயற்சிக்கு வரம்பற்ற ஆதரவை உறுதியளித்துள்ளனர், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் “உக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவைப்படும் வரை” தீவிர ஆயுதங்களை வழங்கும் என்று அறிவித்தார்.

ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இது 'தலைமுறைகள் நீடிக்கும் போரின் கோடுகள் வரையப்பட்டு வருகின்றன' என்று வெளியுறவு அலுவலகம் அறிவிக்க வழிவகுத்தது.

எஸ்தோனியாவில் நிலைகொண்டுள்ள தனது படைகளை இங்கிலாந்து 1,000 முதல் 1,700 வரை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டியன் குறிப்பிட்டது, 'எஸ்தோனியாவிலிருந்து பல்கேரியா வரையிலான எட்டு முன்னணி நேட்டோ போர்க்குழுக்கள், முதல்முறை சிறிய ஆரம்ப பாதுகாப்புப் படையாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை 3,000 முதல் 5,000 துருப்புக்கள் கொண்ட ஒரு படைப்பிரிவு மட்டத்திற்கு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'

போர் முயற்சியில் பைடெனின் கூடுதல் அர்ப்பணிப்புக்கு அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பாரிய எதிர்வினை உற்சாகமான ஆதரவாக இருந்தது.

நேட்டோவின் போர்ப் படைகளை ஏழு மடங்காக விரிவுபடுத்தும் திட்டங்களைப் பாராட்டிய வாஷிங்டன் போஸ்ட், 'உக்ரேனின் உறுதியான எதிர்ப்பும் மேற்கின் உறுதியான நிலைப்பாடும்' தொடர்ந்தால், 'வெற்றி தொடரும்' என அறிவித்தது.

நியூ யோர்க் டைம்ஸ், அதன் பங்கிற்கு, அமெரிக்க இராணுவ செலவினங்களை விரிவாக்குவதற்கான சர்வாதிகாரி டொனால்ட் ட்ரம்பின் அழைப்புகளை பாராட்டியது, ஒரு தலையங்கத்தில், ஐரோப்பா தனது இராணுவத்திற்கு அதிக செலவு செய்ய ட்ரம்ப் அழைப்பு விடுப்பது 'தவறல்ல' என்று அறிவித்தது. டைம்ஸ் முடித்தது, 'இந்த துரதிஷ்டமான தருணத்தில், நேட்டோ ரஷ்யாவைத் தடுப்பதில் மட்டுமல்லாமல், தன்னையும், அதன் நோக்கத்தையும், மற்றும் உண்மையில் அந்தச் சுமையை பகிர்ந்து கொள்வதற்கான அதன் தயார்நிலையையும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.'

நேட்டோ உச்சிமாநாடு சீனாவை மிகவும் ஆக்ரோஷமாக குறிவைக்க, உக்ரேன் போரைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்தது. புதன்கிழமை, ரஷ்ய போர் முயற்சிக்கு உதவியதாகக் கூறப்படும் ஐந்து சீன நிறுவனங்களை வெள்ளை மாளிகை ஒரு தடுப்புப்பட்டியலில் சேர்த்தது.

இந்த நிறுவனங்கள், 'பட்டியலில் உள்ள ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன' என்று வணிகத் துறை வலியுறுத்தியது.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்த தொழில் மற்றும் பாதுகாப்புக்கான வர்த்தக துணைச் செயலாளர் ஆலன் எஸ்டீவ்ஸின், 'இன்றைய நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது, அவர்கள் ரஷ்யாவை ஆதரிக்க முற்பட்டால், அமெரிக்காவும் அவர்களை துண்டித்துவிடும்.”

ஒரு முக்கியமான ஒப்புதலில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பல ஆண்டுகளாக ரஷ்யாவுடன் மோதலுக்கான தயாரிப்பில் நேட்டோ தனது படைகளை விரிவுபடுத்தியதை ஒப்புக் கொண்டார், 'உண்மை என்னவென்றால், 2014 முதல் நாங்கள் இதற்கு தயாராகி வருகிறோம். ... கூட்டணியின் கிழக்குப் பகுதியில் நாங்கள் எங்கள் இருப்பை அதிகரித்ததற்கு இதுவே காரணம், நேட்டோ நட்பு நாடுகள் ஏன் பாதுகாப்பில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன, நாங்கள் ஏன் [எங்கள்] தயார்நிலையை அதிகரித்துள்ளோம்.”

உண்மையில், நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பினர்கள் கனடாவுடன் இணைந்து 2014 ஆம் ஆண்டு கியேவில் அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியை கவிழ்த்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளனர்.

உக்ரேனில் போர் வெடித்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் மையப் போர் இலக்குகள் தெளிவாகி வருகின்றன. கடந்த வார இறுதியில் CNN க்கு அளித்த பேட்டியில், மதிப்பீட்டாளர் ஜேக் டேப்பர் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனிடம், நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளை ரஷ்யா 'கையகப்படுத்துகிறதா' எனக் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிளிங்கென் உக்ரேன் தனது பிரதேசத்தின் முழு சுவடுகளையும் இழந்ததன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு, 'தந்திரோபாயத்தை மூலோபாயத்துடன் குழப்ப வேண்டாம்” என அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'புட்டின் அடைய முயற்சித்தவற்றில் வெற்றிபெற மாட்டார் என்ற மூலோபாய முன்மொழிவு மிகவும் முக்கியமானது. ... அவர் நேட்டோவைப் பிரிக்கவும் முயன்றார். நாங்கள் ஒரு நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் செல்ல உள்ளோம், அங்கு கூட்டணி எனது நினைவில் உள்ளவற்றை விட அதிக ஒற்றுமையையும், அதிக வலிமையையும் காண்பிக்கும்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யாவை தூண்டுவதில் அமெரிக்காவின் 'மூலோபாய' இலக்கு, அமெரிக்க பாதுகாப்பின் கீழ் ஐரோப்பாவை ஒரு பாரிய மறுஆயுதமயப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குவதாகும்.

இந்த மறுஆயுதமயத்தின் உடனடி இலக்குகள் ரஷ்யா மற்றும் சீனாவாக இருக்கும், ஆனால் அணிதிரட்டப்படும் பாரிய தரைப்படைகள் வெளிநாட்டை விட குறைவில்லாமல் உள்நாட்டிலும் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க

Loading