இங்கிலாந்து ரோயல் மெயில் தொழிலாளர்கள் 2 சதவீத ஊதிய உயர்வுக்கு எதிராக தேசிய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிக இலாபம் ஈட்டும் ரோயல் மெயில் குழுமத்தால் (Royal Mail Group) இந்த ஆண்டுக்கான 2 சதவீத ஊதிய அதிகரிப்பு வழங்கப்படுவதற்கு எதிராக தேசிய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு 115,000 தபால் ஊழியர்கள் வாக்களிக்கப்போவதாக தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் (Communication Workers Union - CWU) அறிவித்துள்ளது. ஜூன் 28ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி ஜூலை 19ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

ரோயல் மெயில் வண்டி, ஆக்ஸ்மின்ஸ்டர் தபால் நிலையத்திற்கு வெளியே (Image Credit: Wikipedia/Felix O) [Photo by Felix O / Wikimedia Commons / CC BY-SA 4.0]

தனியார்மயமாக்கப்பட்ட தபால் நிறுவனம், பணவீக்கம் தற்போது 11.7 சதவீதமாக இருக்கும் நிலையில், அதன் பணியாளர்களின் மீது பாரிய ஊதியக் குறைப்புக்கு ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்ட UK தொலைத்தொடர்பு நிறுவனமான BT Group இன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 58,000 பொதுத்துறை ஊழியர்களுக்கு 3 முதல் 8 சதவிகிதம் ஊதிய உயர்வுதான் அதன் இறுதிச் சலுகை என்று அறிவித்தது.

BT குழுமம் மற்றும் Openreach மற்றும் EE துணை நிறுவனங்கள் முழுவதும் அதன் 40,000 உறுப்பினர்களுக்கு ஜூன் 15 அன்று தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பைத் தொடங்கியது. பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தில் 1987 க்குப் பின்னர் முதல் தேசிய வேலைநிறுத்த நடவடிக்கையாக இது உருவாகிறது. தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் கடந்த ஆண்டு ஊதியத்தை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டது மற்றும் BT நிலையங்கள் பெருமளவில் மூடப்படுவதற்கு எதிராக தேசிய வேலைநிறுத்த நடவடிக்கையை நாசப்படுத்தியது.

தொலைத்தொடர்பு ஊழியர் சங்க உதவிப் பொதுச் செயலாளர் (அஞ்சல்) டெர்ரி புல்லிங்கர் கடந்த வாரம் புதன்கிழமையன்று இலண்டனில் உள்ள ஒரு காப்பி கடையில் ரோயல் மெயிலின் தலைமை நிர்வாகி மற்றும் மனிதவள இயக்குனருடன் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். அவர்கள் வியக்கத்தக்க வகையில் குறைந்த 2 சதவீத ஊதிய அதிகரிப்பு என்பது நிர்வாகத்தின் முடிவின் மூலம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தனர். புல்லிங்கரின் பதில், நிர்வாகத்தை எச்சரிக்கும் வகையில், அதன் ஊதிய அதிகரிப்பானது வேலைநிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் 'இந்த தொழிற்சங்கத்திற்கு ஒருபோதும் கிடைத்திராத மிகப் பெரிய ஆமோதிக்கும் வாக்குகளை' தூண்டிவிடும் அபாயம் உள்ளது என்பதாக இருந்தது.

ரோயல் மெயில் உடனான தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாண்மை அத்தகைய சர்வாதிகார முறையில் ரோயல் மெயிலைத் தொடர அனுமதித்துள்ளது. ரோயல் மெயில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுகட்டமைக்கக் கோரும் அதே வேளையில் பணவீக்கத்திற்குக் குறைவான ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தது.

ஏப்ரலில் நடந்த அதன் வருடாந்திர மாநாட்டில் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் இதற்கான பதில், தொழிற்சங்கமும் நிறுவனமும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேலைநிறுத்தத்தை தவிர்க்க மே மாத தொடக்கத்தில் மோதல்களைத் தீர்க்கும் நான்கு வார நடைமுறையான முரண்பாட்டை தீர்க்கும் செயல்முறையை முன்வைக்கும் என்று அறிவித்தது.

ரோயல் மெயில் முதலில் 5.5 சதவீத அதிகரிப்பு திட்டத்தை முன்வைத்ததது. அதில் வெறும் 2 சதவீத ஊதிய உயர்வும், கட்டாய ஞாயிறு வேலை, நோய்க்கால கொடுப்பனவில் குறைப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைத்தல், பணிமுடிக்கும் நேரங்கள் அல்லது மேலதிகவேலை நேரங்கள் இல்லாமல் நெகிழ்வான வேலை, மற்றும் குறைந்த ஊதியத்துடனும் நிபந்தனைகளுடனும் புதிதாக தொடங்குபவர்களுக்கான இரண்டு அடுக்கு பணியாளர்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் 1.5 சதவீத அதிகரிப்பும் உள்ளடங்கியிருந்தது. மீதமுள்ள 2 சதவீதம் கிடைப்பது கூடுதல் உற்பத்தி இலக்குகளில் தங்கியுள்ளது.

தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தை பொறுத்த வரையில், மோசமான சுரண்டல் உழைப்பு தொடர்பாக இந்த சாசனம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம். ஊதிய அதிகரிப்பு என்பது, தபால் ஊழியர்களின் கடந்தகால வெற்றிகளை குறிவைக்காமல் தனித்தனியாக கையாளப்பட வேண்டும் என்று மட்டுமே அது வாதிட்டது. மற்றும் மாற்றத்திற்கான பாதை மூலம் உற்பத்தித்திறன் மற்றும் திருத்தங்கள் பற்றிய மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியளித்துள்ளது.

தொழிற்சங்கம், தற்போதுள்ள நடைமுறை ஊதியக் குறைப்பை பேச்சுவார்த்தைகள் தொடர முன் அகற்றக் கூட நிர்வாகத்தை கோரவில்லை. மேலும் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விட்டுக்கொடுப்புகளுக்கான கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ரோயல் மெயில் தலைமை நிர்வாக அதிகாரி சைமன் தாம்சன் தனக்கு 143,000 பவுண்டுகள் மேலதிக கொடுப்பனவு வழங்கி, 2021-22 ஆம் ஆண்டிற்கான அவரது வருடாந்திர வருமானத்தை சுமார் 753,000 பவுண்டுகளாக கொண்டு வந்தமை தெரியவந்ததை அடுத்து புல்லிங்கர் சம்பளம் தொடர்பான நிறுவனத்தின் பிரசங்கத்தை கேட்க தயார் இல்லை என்றார்.

எவ்வாறாயினும், இந்த பெருநிறுவன சூறையாடலுக்கு முகங்கொடுத்து தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற ஊதிய அதிகரிப்பிற்கு தொழிற்சங்கம் தான் அர்ப்பணிப்பதாகக் கூறுகையில், ஊதிய அதிகரிப்பிற்கான கோரிக்கையைக் கூட அதனால் வரையறுக்க முடியவில்லை. வேலைநிறுத்தத்திற்கு ஆதரவான ஆணை கிடைத்தாலும், தொலைத்தொடர்பு ஊழியர் சங்க நடவடிக்கைக்கு உறுதியளிக்காது என்று புல்லிங்கர் வலியுறுத்தினார். வாக்குப்பதிவு முடிவுகள் தெரிந்த பின்னர், “அந்த நேரத்தில், நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்து, தொழில்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து முடிவெடுப்போம். மேலும் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றால் நாங்கள் அதற்கு பரிந்துரைப்போம்.”

ரோயல் மெயிலின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல், தொற்றுநோய்களின் போது நிறுவனத்துடனான தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் ஆழமான கூட்டுறவால் சாத்தியமானது.

2020 ஆம் ஆண்டில், ரோயல் மெயில் அஞ்சல் ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கம் கைவிட்டது. பரிசோதனைக் கருவிகளை வழங்குவதன் மூலம் தொற்றுநோய்க்கு எதிராகப்போராட உதவ கூடுதல் அவசர சேவையாக ஜோன்சன் அரசாங்கத்திற்கு தம்மை வழங்குவதாக அறிவித்தது.

தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் 2020-21 இல் அரசாங்கத்துடன் ஒரு தொழில்துறை ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டன. இது உயிர்களுக்கு மேலாக இலாபத்திற்கு முன்னுரிமை கொடுத்து மற்றும் ரோயல் மெயிலை தொற்றுநோயினால் இலாபம் ஈட்டுபவர்களில் ஒருவராக அதன் இடத்தைப் பிடிக்க உதவியது.

வெகுஜன வேலைநிறுத்தம் தடுக்கப்பட்டதன் மூலம், மார்ச் 2021 வரையிலான நிதியாண்டில் ரோயல் மெயிலின் இலாபம் நான்கு மடங்காக அதிகரித்தது. பூட்டுதல்கள் மற்றும் இணையம் மூலமான விற்பனைக்கு மாறியதன் மூலம் அதன் வரிக்கு முந்தைய இலாபத்தை £180 மில்லியனில் இருந்து £726 மில்லியனாக உயர்த்தியது.

தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, நிறுவனம் சாதனைமிக்க இலாபத்தை ஈட்டிக்கொண்டிருந்தது. ரோயல் மெயிலின் அலுவலகங்கள் கோவிட் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு உயிர்களை பலிகொண்டன. தொழிற்சங்கத்தின் உடந்தையின் அளவானது நாடு முழுவதும் உத்தியோகபூர்வமற்ற வெளிநடப்புகளுக்கு வழிவகுத்தது. ஏனெனில் அஞ்சல் ஊழியர்கள் பாதுகாப்பு விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

இந்த ஆண்டு ஜூலையில் இருந்து பங்குதாரர்களுக்கு 600 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் அதே வேளையில், தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் இன்னும் ரோயல் மெயில் குழுவை 'சிறந்த பொது சேவையாக' காட்டிக்கொள்கின்றது. கட்டாய ஞாயிறு வேலை மற்றும் முற்றுமுழுதான தொழிலாளர் நெகிழ்வுத்தன்மையின் அறிமுகம், குறிப்பாக அமசன் போன்றவற்றுடன் போட்டியிடும் வகையில் அதன் பொதி வினியோக செயல்பாடுகளை மோசமான ஊதியம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

போராட்டத்திற்கு இழுக்கப்படும் ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழிலாளர்களின் முக்கிய பிரிவினர், சுமார் 200,000 அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்களை அணிதிரட்டுவதுடன் சாமானிய தொழிலாளர் குழுக்களை நிறுவுவதற்கான போராட்டத்தின் மூலம் அதனைத் தொடர வேண்டும். சிறுகுழுக்களாக பிரிக்கும் தடைகளைத் தகர்த்தெறிந்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான அஞ்சல் அலுவலகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அஞ்சல் ஊழியர்களை அவர்களது கூட்டாளிகளுடன் ஒன்றிணைத்து இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

சுமார் 1,000 தபால் அலுவலக ஊழியர்கள் மே 3 அன்று ஒரு அற்பமான 2 சதவீத ஊதியம் மற்றும் இந்த ஆண்டுக்கான மொத்த தொகை £250க்கு எதிராக தேசிய வேலைநிறுத்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். ஆனால் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் இந்த நடவடிக்கையின் தரத்தை குறைத்தது. சமீபத்திய திருத்தி முன்வைக்கப்பட்ட சலுகை வெறும் 2.5 சதவீதம் மற்றும் மொத்த தொகை £500 ஆகும். மேலும் தேசிய வேலைநிறுத்தங்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்குவதை உள்ளடக்கியுள்ளது. பிரித்தானியா முழுவதும் உள்ள 114 Crown அலுவலகங்களில் உள்ள பரிவர்த்தனை ஊழியர்கள் ஜூன் 4 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் மற்றும் ஜூன் 6 அன்று பண சேகரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தபால் அலுவலக விநியோகச் சங்கிலியில் உள்ளவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தபால் அலுவலகம் தனியார் விநியோக நிறுவனமான G4S ஐ வேலை நிறுத்தத்தின் போது வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் சக்தியாகப் பயன்படுத்தியது. ஆனால் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் இந்தத் தாக்குதல் பற்றிய எந்தச் செய்தியையும் மறைத்துவிட்டது. தபால் அலுவலகத்திற்கான தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தேசிய அதிகாரியான ஆண்டி பியூரி, தொலைத்தொடர்பு ஊழியர் சங்க செய்திகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'அவர்களின் பல்வேறு 'சர்ச்சை-தணிப்பு' நடவடிக்கைகளுடன் சேர்ந்து, இந்த ஊதியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எங்களுடன் போராடுவதற்கு அவர்களுக்கு அதிக செலவாகும்' என்றார்.

வலதுசாரி ஊடகங்களின் கூற்றுகளுக்கு மாறாக, 'அதிருப்தியின் கோடைக்காலம்' என்பது 'தொழிற்சங்க தலைவர்களின்' விளைவு அல்ல. மாறாக அத்தகைய வளர்ச்சிக்கு எதிராக ஒரு அரணாக இவர்கள் செயல்பட்டதற்கு எதிராக கீழிருந்து வரும் அச்சுறுத்தும் இயக்கமாகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் வலதுசாரி மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் ஒரு கணக்குத்தீர்த்துக்கொள்ள தொழிலாள வர்க்கம் ஒரு கூட்டுப் போராட்டத்தை நோக்கி முன்னோக்கிசெல்ல போராடுகின்றது.

ஊதிய முடக்கம், பாரிய வேலை வெட்டுக்கள் மற்றும் நீண்டகாலமாக நிறுவப்பட்ட உரிமைகளை அழித்தொழித்த கொள்கைக்கு எதிராக இரயில் தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்துடன் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும். ஜோன்சன் அரசாங்கத்தின் மறுதனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை அப்படியே விட்டுவிடும் தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழிற் கட்சியின் ஆதரவுடன் RMT முன்வைக்கும் சரணடைதல் விதிமுறைகள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு எதிரான சட்டரீதியான எதிர்தாக்குதலால் இது அச்சுறுத்தப்படுகிறது.

Loading