பிரிட்டன்: கோர்பின் மற்றும் மெக்டொனெல் ஆகியோர் தங்கள் ஆசீர்வாதத்தை வழங்குகையில், RMT அதிகாரிகள் தேசிய இரயில் வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாகவே டோரிகளிடம் சரணடைகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் (RMT) பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், ஜூன் 15 அன்று போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் இற்கு ஒரு மன்றாடும் கடிதத்தை எழுதி கன்சர்வேடிவ் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுத்தார். ஷாப்ஸ் ஏற்றுக்கொண்டிருந்தால், RMT ஒரு மோசமான காட்டிக்கொடுப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் இடம்பெற இருக்கையில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இது உள்கட்டமைப்பு நிறுவனமான Network Rail மற்றும் 13 இரயில் நிறுவனங்களின் தொழிலாளர்களின் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க, ஷாப்ஸ் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் உடன் 'எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல்' ஒரு 'அவசர சந்திப்புக்கு' அழைப்பு விடுத்தது.

மிக் லிஞ்ச் (WSWS Media)

முதலாளிகளுடன் இரயில் தொழில் மீட்புக் குழுவில் (RIRG) பங்கேற்பதன் மூலம், 'சமீப வாரங்களில் தொழிற்சங்கம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அரசாங்கம் இடமளிக்கவில்லை' என்று லிஞ்ச் மேலும் கூறினார்.

'முன்நிபந்தனைகள் இல்லாமல்' பேச்சுவார்த்தைகளுக்கான RMT இன் கோரிக்கை சரணடைவதற்கு சமமாகும். கையாள்வதற்கான அதிகபட்ச இடத்தை வழங்குவது என்பதன் நோக்கம், நிறுவனங்களின் நிலைமையை காரணம் காட்டி பணிநீக்கங்களை தவிர்ப்பது மற்றும் ஊதியம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் போன்ற போலிச்சலுகைகளை அரசாங்கம் வழங்க அனுமதிப்பதன் மூலம் தொழிற்சங்கம் வேலைநிறுத்தங்களை இடைநிறுத்த அனுமதிப்பதாகும்.

வாடகை நிறுவனங்களின் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தை உடைக்கும் படையாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ஜூன் 13 அன்று ஷாப்ஸின் அச்சுறுத்தலுக்கான லிஞ்ச் இன் முந்தைய பிரதிபலிப்பைத் தொடர்ந்து இக்கடிதம் வருகிறது. அரசாங்கம் 'இரயில் இயக்க நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும், அதனால் அவர்கள் இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்' என்று லிஞ்ச் வலியுறுத்தினார்.

டோரிகள் தொழிற்சங்கத்தின் இந்த வேண்டுகோளை நிராகரித்ததே இதுவரை RMT இனால் வேலைநிறுத்தங்கள் காட்டிக்கொடுப்பதை தடுத்துள்ள ஒரே விடயமாகும். RMT போராட விரும்பவில்லை, அதேசமயம் ஜோன்சன் அரசாங்கம், தாட்சர் சுரங்கத் தொழிலாளர்களை கையாண்டதைப் போல், இரயில் தொழிலாளர்கள் மீதான அதன் வெற்றியை முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக ஒரு தாக்குதல் முறையாகப் பயன்படுத்த விரும்புகிறது.

1984-85 இல், சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மற்றும் தொழிற் கட்சியால் தனிமைப்படுத்தப்பட்டதால் தமது மோதலில் தோற்கடிக்கப்பட்டனர். இன்று, லிஞ்ச் உம் அவரது கூட்டாளிகளும் அரசாங்கத்தின் கிரேட் பிரிட்டிஷ் இரயில்வே தனியார்மயமாக்கல் திட்டத்தை தோற்கடிக்க அனைத்து முழு அணிதிரட்டலையும் எதிர்க்கிறார்கள் மற்றும் அரசாங்கத்தை வீழ்த்த அச்சுறுத்தும் எதையும் செய்ய மாட்டார்கள் என்பதை ஜோன்சன் மற்றும் ஷாப்ஸ் அறிவார்கள்.

23, 2019 அன்று இங்கிலாந்தின் பிரைட்டனில் உள்ள பிரைட்டன் மையத்தில் நடந்த தொழிற் கட்சி மாநாட்டில் அப்போதைய தொழிற் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் (வலது) நிழல் அதிபர் ஜோன் மெக்டோனலைத் தழுவினார் [AP Photo/Kirsty Wigglesworth] [AP Photo/Kirsty Wigglesworth]

முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் அவரது மறைந்து வரும் 'இடது' தொழிற் கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்கள் கும்பலுக்கும் இதுவே பொருந்தும். இவர்களை டோரிகளுக்கு எதிரான இரயில்வே தொழிலாளர்களின் நண்பர்களாக RMT காட்ட முனைகின்றது. அவர்களால் ஏதாவது செய்யமுடியுமானால், திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கோர்பினும் அவரது முன்னாள்-நிழல் அதிபர் ஜோன் மெக்டொனலும் லிஞ்சை விட தாழ்ந்தமுறையில் அதனை முடிவிற்கு கொண்டுவருவர். RMT இன் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பு ஒரு உயிர் காக்கும் கயிறு போல் இருந்தது. இது சமாதானம் செய்பவர்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ற இயல்பான பாத்திரத்தை அவர்கள் ஏற்க அனுமதித்தது.

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, தொழிற் கட்சியின் இருக்கைகள் பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தன. தொழிற் கட்சியின் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் உட்பட பலர் கலந்து கொள்ளவில்லை.

அவர்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டு, கோர்பின்வாதிகள் இழிவாக நடந்து கொண்டனர். கோர்பின் வேலைநிறுத்தத்தைப் பற்றிக்கூட குறிப்பிடவில்லை. 'இரயில் துறையில் பணிபுரியும் பலரின் ஆத்திரத்தை உணர்வதாக மட்டும் குறிப்பிட்டு, அடிப்ப்படையாக இரயில் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான இலாபம் பாய்கையில் ஊதிய வெட்டையும் மற்றும் நிறுவனங்களின் நிலைமையை காரணம் காட்டி பணிநீக்கங்களை ஏற்றுக்கொள்ளுமாறே கூறினர்…”

மெக்டொனால்டின் அறிக்கைகள் மிகவும் விரிவானவை மற்றும் மிகவும் மோசமானவை. 'எந்த முன்நிபந்தனையும் இல்லாமல்' கூட்டத்திற்கு லிஞ்ச் விடுத்த அழைப்பைக் கவனத்தில் கொண்டு, அவர் ஷாப்ஸிடம் 'நாங்கள் இந்த விடயத்தைத் தீர்க்க முயற்சிக்கிறோம். மிக் லிஞ்சிற்கு அவர் உடனடியாக சாதகமாகப் பதிலளித்து அவர் இப்போது தொழிற்சங்கத்தை சந்திப்பாரா? என்று முறையிட்டார்.

RMT இனது காட்டிக்கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ளும் விருப்பத்தை மேற்கோள்காட்டி, அத்தகைய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தின் சிறப்பான நலன்களுக்காக இருக்கும் என்று அவர் வாதிட்டார். RMT இன் 'முதல் கோரிக்கை கட்டாய பணிநீக்கங்கள் இல்லை - கட்டாயம் என்பது முக்கிய வார்த்தை. RMT வேலை இழப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாத காலம் இருந்ததே கிடையாது. ஆனால் அவை கட்டாயமான வேலை இழப்பாக இருக்கக்கூடாது என்ற கொள்கை எப்போதும் இருந்து வருகிறது. பொப் குரோ ஒருபோதும் ஒரு மோதலை இழக்கவில்லை என்பதை நான் நினைவில் கொள்கிறேன். மேலும் மிக் லிஞ்சும் இழக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் ஈடுபட்டுள்ள மோதல்களின் தன்மையைப் பற்றி நன்கு அறிவார்கள்”.

டோரி ஹூ மெர்ரிமேன் குறுக்கிட்டு, மெக்டொனெல் தன்னை நம்பவைப்பதாகக் கூறினார். 'அவர் ஒரு நல்ல கருத்தைச் சொல்கிறார். 'சரி, நாங்கள் உங்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம், நீங்கள் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது' என்று சற்று விட்டுக்கொடுக்கும்வகையில், கட்டாய பணிநீக்கங்கள் இருக்காது என்பதை RMT கேட்க விரும்புகின்றது. ஏனென்றால் தற்போது பணியாளர்கள் வேலைசெய்யும் விதத்தில், அவர்கள் தாமாகவே பணிநீக்கங்களை பெற்றுக்கொண்டு செல்வார்கள் போல் இருப்பதால், பின்னர் அது இயல்பாகவே நடைபெறும் ஒன்றாக இருக்கும்”.

டோரிகளின் டெய்லி டெலிகிராப் செவ்வாய்க்கிழமை புகழ்ந்தபடி, இதுதான் துல்லியமாக தாமாகவே பணிநீக்கம் பெற்றுச்செல்லும் நிகழ்வாகும். தகவல் சுதந்திரம் (FOI) கோரிக்கையின் மூலம், மேலாளர்களிடமிருந்து பணிநீக்கத்திற்கான 2,949 விண்ணப்பங்கள் இரயில் நிறுவனங்களால் கடந்த இலையுதிர்காலத்தில் பெறப்பட்டதாகவும், Network Rail இல் இருந்து கூடுதலாக 2,159 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. Network Rail இன் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ஹெய்ன்ஸ், 'Network Rail இற்குள் மக்கள் வெளியேறுவதற்கும் வேறுவேலைகளுக்கு செல்வதற்கும் பெரும் மறைவான கோரிக்கை இருப்பதை நாங்கள் அறிவோம்… மேலும் அது தொழிற்சங்கங்களால் ஊக்குவிக்கப்படலாம்' என்று முடித்தார்.

மெக்டொனெல், மெர்ரிமனின் ஆதரவால் உற்சாகமடைந்து, தொழிலாள வர்க்கத்திற்கு துரோகம் செய்வதில் தனது சொந்த பங்கு மற்றும் தொழிற்சங்கங்களின் பாத்திரத்திற்கு மெருகேற்றினார். “மாண்புமிகு. பெருமகனுக்கு இந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பது தெரியும்,” என்று மெக்டோனல் நம்பிக்கை தெரிவித்தார்.' கடந்த 50 ஆண்டுகளாக ஒரு தொழிற்சங்கவாதியாக இருக்கும் நான் சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்கம், பின்னர் TUC மற்றும் பலவற்றில் எனது பின்னணியில் ஒவ்வொரு விதமான பேச்சுவார்த்தைகளிலும், முக்கிய பிரச்சினை அவற்றை எவ்வாறு கதவைத் தாண்டி செல்வது என்பதாக இருந்தது. நாங்கள் அந்தக் கதவைத் தாண்டி, நேருக்கு நேர் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், எதுவும் நடக்கலாம்”.

தொழிற்சங்க அதிகாரத்துவம் தங்கள் உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாதபடி டோரிகள் செய்து வருவதாக அவர் எச்சரித்தார். 'நான் பல்வேறு தொழிற்சங்க மாநாடுகளில் பேசி வருகிறேன். நான் நேற்று Unison இலும் மற்றும் ஏனையவற்றிலும் இருந்தேன். அங்கு 1980களுக்கு நாங்கள் திரும்பிச் செல்கிறோம் என்ற கவலை உள்ளது. 1980 களில் என்ன நடந்தது என்பதை நான் பார்த்தேன். எனது கெளரவத்தற்குரிய நண்பர் வான்ஸ்பெக்கின் உறுப்பினர் (இயன் லாவரி), அந்த நேரத்தில் சுரங்கத் தொழிலாளியாக இருந்தார். நான் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்க தலைமை அலுவலகத்தில் உறுப்பினராக இருந்தேன்.

'அப்போது என்ன நடந்தது என்றால், தொழிற்சங்க இயக்கத்திற்கு எதிராக எப்படியாவது எதிர்த்துப்போராட ஒரு அரசாங்கம் இருந்தது. மேலும் நாங்கள் 'உள்ளேயுள்ள எதிரி' என்று வர்ணிக்கப்பட்டோம். இந்த சூழ்நிலையில் RMT யை உள்ளேயுள்ள எதிரியாகக் கருதத் தொடங்குவது அரசியல்ரீதியாக தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று யாராவது நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள். ஏனென்றால் இது RMT இனை பற்றியது மட்டுமல்ல”.

தொழிற்சங்க மாநாடுகளில், 'குறைந்தபட்ச சேவைகள், கூடுதல் வேலைநேரத் தடைகள் மற்றும் மற்ற அனைத்தும்' என்ற டோரியின் அச்சுறுத்தல்கள் 'நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கும் போது எரிச்சலூட்டும்'.

எந்த தொழிற்சங்கத் தலைவரும் விரும்பாத ஒன்றை, தொழிலாள வர்க்கத்தின் பொது எழுச்சியை டோரிகள் தூண்டிவிட முடியும். “இப்போது Unite இற்கு 100 சர்ச்சைகள் உள்ளன. Unison இன் பொதுச் செயலாளர் முதன்முறையாக நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத ஒன்றான Unison உறுப்பினர்களிடம், 'உங்கள் கிளைகளுக்குத் திரும்பிச் சென்று நடவடிக்கைக்குத் தயாராகுங்கள் எனக் கூறியுள்ளார். PCS [அரசு ஊழியர்கள் சங்கம்] மோதலில் உள்ளது... கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் இது பற்றி உரக்கப் பேசுவதற்கான நேரம் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; இது பரிசீலனைக்கான நேரம் மற்றும் இந்த விவாதத்தில் ஒரு பொறுப்பு தொடர்பான விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டும்”.

டோரிகளுக்கு மெக்டொனெல் இன் செய்தி, “RMT உடன் பேசுங்கள். வேலைநிறுத்தத்தைத் தடுங்கள் இல்லையேல் வெள்ளக் கதவுகளைத் திறக்கலாம்!' துரதிர்ஷ்டவசமாக அவருக்கு, டோரிகள் எதையும் விரும்பவில்லை. அடுத்த நாள், ஷாப்ஸ் வடக்கு லண்டனில் உள்ள Hornsey இல் உள்ள ஒரு இரயில் பண்டகசாலையில் ஒரு எரியூட்டும் உரையில் தொழிலாளர்களுக்கு “தமது வேலையை இழப்பதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம்” என்று எச்சரித்தார். முகவர்கள் மூலமான தொழிலாளர்களால் வேலைநிறுத்தங்களை முறிக்கவும், 1,000 பயணச்சீட்டு அலுவலகங்களை மூடவும், ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதை கட்டாயமாக்கவும் இந்த கோடையில் அரசாங்கம் சட்டத்தை மாற்றும். அவர் RMT உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார், ஏனெனில் 'அது முதலாளிகளின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்...'

தொழிலாள வர்க்கம் இந்த பழமைவாத அரசாங்கத்துடன் மோதல் போக்கில் உள்ளது. வெற்றிபெற வேண்டுமானால், தொழிலாளர்கள் தங்கள் போராட்டம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் நாசமாக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெக்டோனல் மற்றும் நிறுவனம் அஞ்சும் வேலைநிறுத்தங்களை ஒன்றிணைக்கவும், வெறுக்கப்பட்ட ஜோன்சன் அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய, தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் சக்திவாய்ந்த சாமானிய தொழிலாளர் அமைப்புக்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.பிரிட்டிஷ் இரயில்வே வேலைநிறுத்தம்: ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்!” என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையைப் படிக்குமாறு இரயில் தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading