பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் பாரிய கோவிட்-19 நோய்தொற்றுகளுக்கு எதிரான ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை கலைக்க முயற்சிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கோவிட்-19 மீதான பாரிய தொற்றுக் கொள்கைகளுக்கு எதிராக பரவலாகப் பின்பற்றப்பட்ட நாடு தழுவிய ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தின் ஒரு வாரத்திற்குப் பின்னர், நேற்று பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் ஆசிரியர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஜனவரி 13 ஐ விட குறைவான ஆசிரியர்களை அணிதிரட்டியபோதிலும் இந்த வேலைநிறுத்தம், பிரான்சில் ஓமிக்ரோன் தொற்றுக்கள் வெடித்ததற்கு பரந்த மக்கள் எதிர்ப்பையும் கல்வி மந்திரி ஜோன்-மிஷேல் புளோங்கேர் (Jean-Michel Blanquer) இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதிபலித்தது.

ஜனவரி 13, 2022 வியாழன் அன்று, வடக்கு பிரான்சில் உள்ள லில்லி இல் நடந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் கூடினர். குழப்பமான விதிகளை கண்டித்தும் அழைப்பு விடுத்தும் பள்ளிகளில் வைரஸ் சூழ்நிலையை அரசாங்கம் கையாளும் விதத்தில் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரெஞ்சு ஆசிரியர்கள் வியாழக்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு வெளிநடப்பு செய்தனர். (AP Photo/Michel Spingler)

ஒரு பேரழிவுகரமான சுகாதார நிலைமைக்கு மத்தியில் வேலைநிறுத்தம் நடந்தது, பிரான்சில் மூன்று நாட்களுக்கு கிட்டத்தட்ட அரை மில்லியன் தினசரி நோய்த்தொற்றுகள் உள்ளன. பிரான்சில் தற்போது செயலில் உள்ள COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6 மில்லியனை நெருங்குகிறது, அல்லது பிரெஞ்சு மக்கள் தொகையில் 9 சதவீதம், குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அதே நேரத்தில், பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் ஆகியோர் கோவிட்-19 பரவுவதை மெதுவாக்கும் மீதமுள்ள அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் நீக்குவதாக அறிவித்து ஒரு உரையை நிகழ்த்தினர், இது வெகுஜன தொற்று கொள்கைக்கான அவர்களின் ஆதரவை தெளிவாக்கியது.

ஜனவரி 13 அன்று, தொழிற்சங்க புள்ளிவிவரங்களின்படி, 75 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர், பாதி பள்ளிகள் மூடப்பட்டன, மேலும் 78,500 ஆசிரியர்கள் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனவரி 20 அன்று, கல்வி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, வேலைநிறுத்தத்தில் 1.15 சதவீத ஆரம்ப மற்றும் 2.18 சதவீத இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே அணிதிரண்டனர். பாரிஸில் ஆசிரியர்களின் அணிவகுப்பை தொடர அனுமதிக்க மாட்டோம் என்று அச்சுறுத்திய பின்னர், பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரி டிடியே லால்லுமோன் (Didier Lallement) மனந்திரும்பி, அணிவகுப்பு 'பொறுத்துக்கொள்ளப்படும்' என தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தார்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பிரான்சிலோ அல்லது சர்வதேச அளவிலோ, வெகுஜன நோய்த்தொற்றுகள் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதைப் பிரதிபலிக்கவில்லை. உண்மையில், ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான கொடிய வைரஸின் புதிய தொற்றுகளுக்கு வழிவகுக்கும் ஒரு கொள்கைக்கு எதிராக அமெரிக்கா, கிரீஸ் மற்றும் அதற்கு அப்பால் வேலைநிறுத்தங்கள் மற்றும் பள்ளி எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. எவ்வாறாயினும், தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முன்னணி பிடியின் கீழ், வெகுஜன தொற்று கொள்கைகளுக்கு எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான சாத்தியமற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறது.

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஜனவரி 13 வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் ஆசிரியர்களின் மன உறுதியைக் குலைத்தது மட்டுமல்லாமல், வேலைநிறுத்தத்திற்கு புளோங்கேர் (Blanquer) இன் பதிலுக்கு உடனடியாக ஒப்புக்கொண்டது — மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 மில்லியன் N95 முகமூடிகள் மற்றும் மாற்று ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு கூடுதல் நிதி வழங்கப்படும். வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தாங்கள் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதில் பங்கேற்குமாறு ஆசிரியர்களை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர்கள் நேற்று உரத்த குரலில் அறிவித்தனர்.

கல்வித்துறையில் முதன்மை தொழிற்சங்கமான Snuipp-FSU இன் பொதுச் செயலாளர் Guislaine David, AFP இடம் கூறினார்: “இந்த நேரத்தில் ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்ய அழைப்பது இலக்கு அல்ல, ஏனெனில் ஒரு வார இடைவெளியில் இது சிக்கலானது. ஜனவரி 27 க்கு ஒரு புதிய வேலைநிறுத்த அழைப்பைத் தொடங்குவதற்கு முன், உள்ளூர் அணிதிரட்டல்களுடன் அழுத்தத்தைத் தொடர வேண்டும் என்பதே இன்றைய யோசனை.”

மார்சையில், FSU தொழிற்சங்கத்தின் அதிகாரி கரோலின் சாவெட் கூறினார்: “தற்போதைக்கு, நாம் பார்ப்பது பல்வேறு கல்வி நிறுவனங்களில் வெளிவரும் பல்வேறு முன்முயற்சிகள், ஒவ்வொன்றும் தங்களுக்கு ஏற்ற அளவில் செயல்படுகின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பேச வேண்டும். ஜனவரி 27-ம் தேதி வேலைநிறுத்தத்திற்கு ஒற்றுமையாக வருவதற்கு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டும் மனநிறைவான அணுகுமுறையானது, பிரான்சிலும் அதற்கு அப்பாலும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிற்சங்க எந்திரங்களின் அலட்சியத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு வாரமும், பிரான்சில் 1,000 க்கு மேற்பட்டவர்களும் ஐரோப்பாவில் 20,000 பேரும் COVID-19 ஆல் இறக்கின்றனர், அதே நேரத்தில் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதன் நீண்டகால உடல்நல பாதிப்புகள் இன்னும் நன்கு அறியப்படவில்லை. ஆயினும்கூட தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மக்ரோன் அரசாங்கத்தைப் போலவே COVID-19 பரவுவதில் அலட்சியமாக உள்ளன, தொற்றுநோயை தடுக்க வேண்டாம் என்று முன்மொழிகின்றன, ஆனால் ஆசிரியர்கள் 'தங்களுக்குள் கலந்துரையாடுகிறார்கள்.'

தொழிற்சங்கங்கள் பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு வெளியே பல்வேறு அரசியல் நாடகங்களை ஏற்பாடு செய்தன. நீச்சலுடை அணிந்த மற்றும் புளோங்கேரின் முகமூடிகளை அணிந்திருந்த சில டஜன் மக்கள் கல்வி அமைச்சின் முன் நடனமாடினர், 'சுகாதார நெறிமுறைகள் குறித்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது, சுகாதார அமைச்சரை தொந்தரவு செய்யாதீர்கள்' என்று ஒரு பலகையை வைத்திருந்தனர். கலக தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை அந்த பகுதியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

உண்மையில், இபிசா (Ibiza) வில் அமைச்சர் புளோங்கேரின் விடுமுறையைப் பற்றி மீடியாபார்ட்டின் வெளிப்படுத்தல்களுக்கு பின்னர், அது ஆசிரியர்களிடையே சீற்றத்தைத் தூண்டியது, அவர் அங்கிருந்து வகுப்புகள் தொடங்குவதற்கு முந்தைய இரவில் புத்தாண்டுக்கான சுகாதார வழிகாட்டுதல் நெறிமுறையை லு பாரிசியனுக்கு அளித்த பேட்டியில் வெளியிட்டார். புளோங்கேரின் செயலை மக்ரோன் 'மதிக்கவில்லை' என்றும், கல்வி மந்திரி பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் ஒரு அநாமதேய ஆதாரம் France Info இடம் தெரிவித்தது.

உண்மையில், புளோங்கேரின் தனது சொந்த வேலையின் மீதான அவமதிப்பு மற்றும் அவமரியாதை என்பது, முழு மக்ரோன் அரசாங்கமும் பிரெஞ்சு மக்களிடையே கொரோனா வைரஸை பெருமளவில் பரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை ஆர்வத்துடன் செயல்படுத்தியதன் குறிப்பாக அருவருப்பான வெளிப்பாடு மட்டுமே.

நேற்றிரவு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், காஸ்டெக்ஸ் மற்றும் வெரோன் ஆகியோர் மக்ரோன் அரசாங்கம் தொற்றுநோயைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறும் எந்தவொரு பொதுப் பாசாங்கையும் முடிவுக்குக் கொண்டுவரும் தீவிரமான நடவடிக்கைகளை அறிவித்தன.

திரையரங்குகள், அரங்கங்கள் மற்றும் விமானங்கள் மற்றும் இரயில்களில் பயணம் செய்வதற்கு தடுப்பூசி நிலையைச் சான்றளிக்கும் 'தடுப்பூசி பாஸ்' தேவைப்படும், மேலும் 12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு 3வது டோஸ் போடப்படும். இருப்பினும், முதலாளிகளுக்கு தொலைதூர வேலைமுறைகளை ஊக்குவிக்கும் அரசாங்க பரிந்துரைகளை நிறுத்தும்; மைதானங்கள், இரவு நடன விடுதிகள் மற்றும் திரையரங்குகளை கட்டுப்பாடுகள் இல்லாமல் மீண்டும் திறக்கவும்; மேலும் வெளிப்புறங்களில் முகக்கவச கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் முடிவுக்கு கொண்டு வரும். பள்ளிகளில் சுகாதார நெறிமுறைகளில் மேலும் தளர்வு, பிப்ரவரி அல்லது மார்ச் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அத்தகைய கொள்கையை எதிர்க்க முடியாது. அவர்களின் பங்கு அரசு மற்றும் வங்கிகளால் தீர்மானிக்கப்பட்ட கொள்கைகளை தொழிலாளர்களுக்கு விற்பதாகும், மேலும் அவர்களின் சொந்த வரவு-செலவுத் திட்டங்கள் பெரும்பாலும் பெருமுதலாளிகளின் நிதியுதவியால் ஆனவை, இது பிரெஞ்சு பெருநிறுவனங்களின் கணக்குகளுக்கு வரும் இலாபத்தை சார்ந்துள்ளது.. சமீப ஆண்டுகளில் அவர்கள் ஒழுங்கமைத்து பின்னர் காட்டிக் கொடுத்த வேலைநிறுத்தங்கள் ஏற்கனவே ஓய்வூதியங்கள், இரயில்வே தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தங்கள், மக்ரோனுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய வேலையின்மை காப்பீடு ஆகியவற்றின் மீதான தாக்குதல்களில் விளைந்துள்ளன.

இருப்பினும், இப்போது தொழிற்சங்கங்கள் கையொப்பமிடுவது, வாழ்க்கைத் தரம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உயிர் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளதுடன் தொடர்புபட்டது. குழந்தைகளை பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் சர்வதேச எதிர்ப்பு அலையால், மக்ரோனைப் போலவே தொழிற்சங்கங்களும் பீதியடைந்துள்ளன. அவர்களின் நோக்கம் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது அல்ல, மாறாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் வெளியேறும் போராட்டங்கள் வெடிப்பதைத் தடுப்பதாகும்.

தொற்றுநோயை நிறுத்தவும், வெகுஜன தொற்று கொள்கைகளை எதிர்க்கவும், தொழிலாளர்கள் போராட்டத்தை தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கைகளில் இருந்து எடுக்க வேண்டும். சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, நியூ யோர்க் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களிலும், கிரீஸிலும் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும் பெருகி வருகின்றன, அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள லிசா டியஸ் போன்ற பாதுகாப்பான பள்ளிகளுக்கான ஆதரவாளர்கள் பெருநிறுவன ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், வெகுஜன தொற்று மற்றும் பணவீக்கக் கொள்கைகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள பணியிடங்களில் வெடிக்கும் கோபம் அதிகரித்து வருகிறது.

முன்னோக்கி செல்லும் வழி, தொழிற்சங்க அதிகாரத்துவங்களை சாராமல், வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, விஞ்ஞான சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும், கொரோனா வைரஸின் பரவலை அகற்றவும், சாமானிய குழுக்களை உருவாக்குவதற்கான சர்வதேசப் போராட்டமாகும். இதற்கு கடுமையான பூட்டுதல் கொள்கை, நேருக்கு நேர் பள்ளிப் படிப்பை முடித்தல் மற்றும் பூஜ்ஜிய கோவிட் கொள்கையைப் பின்தொடர்வது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு நிதியுதவி தேவைப்படுகிறது.

இத்தகைய அமைப்புகளை தங்கள் நாடுகளில் கட்டமைக்க விரும்பும் ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்புகொண்டு, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பான சாமானிய குழுக்களைக் கட்டமைக்கப் போராட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) அழைப்பு விடுக்கிறது.

Loading