மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின ஆன்லைன் பேரணியில் இவான் பிளேக் வழங்கிய அறிக்கையை நாங்கள் இங்கு வெளியிடுகிறோம். பிளேக் WSWS இன் எழுத்தாளர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். அனைத்து உரைகளையும் wsws.org/mayday இல் பார்வையிடவும்.
கோவிட்-19 பெருந்தொற்றின் கீழ் இது நாம் சந்திக்கும் மூன்றாவது மே தினம் ஆகும்.
உத்தியோகபூர்வ உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 6,260,000 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பாலான இடங்களில் பரிசோதனையோ, புள்ளிவிபர சேகரிப்புகளோ, விபர வெளியீடுகளோ போதுமானளவுக்கு இல்லாததால், வல்லுநர்கள் உண்மையான இறப்பு எண்ணிக்கை இந்த எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்றும், இப்போது இது உலகம் முழுவதும் 20 மில்லியனில் இருக்குமென்றும் நம்புகின்றனர்.
இந்த மரணங்களில் பெரும் பெரும்பான்மையைத் தடுத்திருக்கலாம். அவை தடுக்கப்படாததற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் அதனதன் ஆளும் வர்க்கங்களின் சார்பாக செயல்படும் உலக அரசாங்கங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளைத் தனிநபர் இலாபத்திற்கு அடிபணிய செய்வதை நனவுப்பூர்வமாக தேர்ந்தெடுத்ததுடன், இந்த பெருந்தொற்றைத் தடுக்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செயல்பட மறுத்தன.
இந்த பெருந்தொற்றில் இருந்து இலாபமீட்டியவர்கள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்துள்ளனர். இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, ஒவ்வொரு 26 மணி நேரத்திற்கும் ஒரு புதிய பில்லியனர் உருவெடுத்திருப்பதாக இந்தாண்டின் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை குறிப்பிடுகிறது. உலகின் 10 மிகப் பெரிய பணக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் 160 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வறுமைக்ககுள் தள்ளப்பட்டுள்ளனர்.
முதலாளித்துவ அமைப்புமுறை அதன் மக்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது என்பதை இதைவிட தெளிவாக எதுவும் எடுத்துக்காட்ட முடியாது.
கடந்த ஆண்டில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த மில்லியன் கணக்கான இறப்புகள் மிகவும் சோகமானவை, ஏனென்றால் முதலில் உயிர்காக்கும் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் இவை ஏற்பட்டன.
மருத்துவத்துறை ஏகபோகங்களின் தனிச்சொத்துடைமையும் மற்றும் தடுப்பூசி தேசியவாதத்தின் வேட்கையும், இன்று உலக மக்களில் வெறும் 59 சதவிகிதத்தினர் மட்டுமே முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்ற சூழலை உருவாக்கியுள்ளன.
குற்றகரமாக, குறைந்த வருவாய் நாடுகளின் மொத்த மக்களில் 0.6 சதவீதத்தினர் மட்டுமே மற்றும் ஆபிரிக்கர்களில் வெறும் 1.5 சதவீதத்தினர் மட்டுமே தேவையான பூஸ்டர் ஊசியைப் பெற்றுள்ளனர்.
2020 மற்றும் 2021 இல் உலக மக்களின் ஆயுட்கால வயது ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது. இது, 1950 இல் ஐநா இதைக் கண்காணிக்கத் தொடங்கிய பின்னர், இந்த எண்ணிக்கையின் ஏற்பட்டுள்ள முதல் வருடாந்திர சரிவாகும்.
தனிநபர் அடிப்படையில், உலகிலேயே பெரு நாடு தான் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இருந்து உள்ளது. பெருவின் 230,000 மக்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர், அல்லது அந்நாட்டின் ஒவ்வொரு 143 பேரில் ஒருவர் இதனால் உயிரிழந்துள்ளார்.
உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில், 1.1 மில்லியன் பேர் இந்த வைரஸால் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு, ஆயுட்காலம் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக குறைந்துள்ளது.
ரஷ்யாவில், 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கோவிட் ஆல் கொல்லப்பட்டுள்ளனர், இது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட சுமார் 4 மடங்கு அதிகம் என்பதுடன், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தனிநபர் இறப்பு விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில், 5.9 மில்லியன் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை விட சுமார் 11 மடங்கு அதிகமாகும்.
வயதானவர்களும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களும் தான் இந்த பெருந்தொற்றுக்கு முதலில் பலியாகி உள்ளனர், என்றாலும் வேலை செய்யும் வயதுடைய மில்லியன் கணக்கான பருவ வயதடைந்தவர்களும் பத்தாயிரக் கணக்கான குழந்தைகளும் உலகெங்கிலும் இறந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் உலகளவில் 5.2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 க்கு பெற்றோரில் ஒருவரையோ அல்லது முதன்மை பராமரிப்பாளரையோ இழந்துள்ளதாக பெப்ரவரியில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது. இத்தகைய மரணங்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி, அவற்றின் அன்புக்குரியவர்களில் ஒருவர் இல்லாத வாழ்நாளை முகங்கொடுக்கின்றன.
தவிர்த்திருக்கக்கூடிய 20 மில்லியன் மரணங்கள் இந்த பெருந்தொற்றின் மிகவும் துயரகரமான விளைவாகும். ஆனால் உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கானவர்கள் இப்போது நீண்ட கால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்தினருக்கு, 3 மாதங்கள் அல்லது அதற்குப் பின்னரும் காலங்கடந்து அறிகுறிகள் ஏற்படுவதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நோய்தொற்று ஏற்பட்டு ஓராண்டுக்குப் பின்னர்
ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்த அறிகுறிகள் ஏறக்குறைய உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கலாம், மேலும் கோவிட்-19 நோய்தொற்று இப்போது இதய நோய், மூளை பாதிப்பு, நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு, ஒழுங்கற்ற நோயெதிர்ப்பு அமைப்பு, இன்னும் இதர பிற என அதிக அபாயகரமாக எந்த காரணங்களால் ஏற்படும் மரணத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இந்த பெருந்தொற்றின் ஆரம்ப கட்டங்களிலேயே, SARS-CoV-2 கட்டுப்பாடின்றி பரவுவதால் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான விளைவுகளைப் பற்றி எச்சரித்தது மட்டுமல்ல. இந்த பெருந்தொற்றைத் தடுப்பதற்கான ஒரு மூலோபாயத்தையும் நாங்கள் முன்னெடுத்தோம். பெப்ரவரி 28, 2020 இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளக்கியது:
'கொரோனா வைரஸிற்கான விடையிறுப்பை ஒரு தேச மட்டத்தில் தேசம் தேசமாக ஒருங்கிணைக்க முடியாது. இந்த வைரஸ், எல்லைகளையோ அல்லது நுழைவனுமதி சீட்டையோ அல்லது குடிவரவு கட்டுப்பாடுகளையோ மதிக்காது… தீர்வு உலகளாவியதாக இருக்க வேண்டும். உலகெங்கிலுமான விஞ்ஞானிகள், 'தேசிய நலன்கள்' மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் இடர்பாடுகளுக்கு உள்ளாகாமல், அவர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும், அவ்வாறான தடங்கல்கள் இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மற்றும் இறுதியில் முற்றறிலும் இல்லாது ஒழிக்கவும் பயனுள்ள எதிர் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதைத் தாமதப்படுத்த மட்டுமே சேவையாற்றும்.”
இந்த பெருந்தொற்றைத் தடுக்க அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும், மிகப்பெரும் சுகாதார நிறுவனங்களைப் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றவும், அனைத்து தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் நேரடி நிதி உதவியை வழங்கவும் அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
2020 இன் போக்கில் வெளியிடப்பட்ட எண்ணற்ற அறிக்கைகளில், நாம் இந்தத் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்து, பள்ளிகள் மற்றும் பணியிடங்களைக் கட்டாயமாக மீண்டும் திறப்பதை அடிப்படையாக கொண்ட கொலைபாதக 'நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' உத்தியை நிறுத்துமாறு கோரினோம். சுவீடன், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் முன்னோடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றகரமான கொள்கை, இந்த பெருந்தொற்றின் முதல் ஆண்டிலேயே பாரிய பெரும்பான்மை இறப்புகளுக்கு வழிவகுத்தது.
ஆகஸ்ட் 20, 2021 இல் WSWS பின்வருமாறு எச்சரித்தது:
'இந்த வைரஸ் பரவும் வரை, அது மனிதகுலம் அனைவரையும் அச்சுறுத்தும் புதிய, அதிகளவில் தொற்றக்கூடிய, கொடிய மற்றும் தடுப்பூசியையே எதிர்க்கும் வகைகளாக தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும். இதை உலகளவில் முற்றிலும் ஒழிக்காத வரையில், கோவிட்-19 இன் எரிகல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் என்பதோடு, இந்த வைரஸ் புதிய வெடிப்புகளுக்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
இதை அகற்றி-முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயம் மட்டுமே இந்த பெருந்தொற்றைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழிமுறை என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்தியது. நாம் பின்வருமாறு விவரித்தோம்:
'இந்த வைரஸை ஒரேயடியில் மொத்தமாக ஒழித்துக் கட்ட, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளில் உள்ள ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகளவில் ஒருங்கிணைந்து பயன்படுத்துவதை, முற்றிலும் ஒழிக்கும் முறை உள்ளடக்கி உள்ளது.
ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில், இந்த மூலோபாயத்தை விரிவுபடுத்துவதற்காக நாம் உலகெங்கிலும் இருந்து முன்னணி விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து இணையவழி கலந்துரையாடல்கள் நடத்தினோம். இந்த நிகழ்வுகளை 100 க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பார்வையிட்டனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் மற்றும் குழுக்களும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் பிரிட்டனைச் சேர்ந்த பெற்றோர் லீசா டயஸ் அழைப்பு விடுத்த தொடர்ச்சியான உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க உதவின. இந்த அகற்றும் மூலோபாயத்திற்காக போராட நாம் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதில் உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு உதவினோம்.
உலகெங்கிலும் இந்த கொலைபாதக பெருந்தொற்று கொள்கைகளை நிறைவேற்ற உதவியுள்ள பொய்கள் மற்றும் தவறான தகவல்களை அம்பலப்படுத்த, நவம்பர் பிற்பகுதியில், கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணையை WSWS தொடங்கியது.
இந்த விசாரணையானது சர்வதேச அளவில் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுனர்களிடம் இருந்து சாட்சியங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது, அவர்களில் சிலர் இங்கே காட்டப்படுகிறார்கள். இந்த விசாரணை பணிகள் தொடர்கின்றன என்றாலும், ஆரம்ப கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாரிய சமூகக் குற்றத்தின் உணர்வை ஏற்கனவே வழங்கி உள்ளன.
காற்றுவழி பரவுவதைக் குறித்த விஞ்ஞானத்தை மூடிமறைத்தமை மற்றும் அதைத் தொடர்ந்து விஞ்ஞானபூர்வமின்றி முகக்கவசம் அணிவதை நீக்கும் கொள்கைகளை ஊக்குவித்தமை என இவற்றை நாம் ஆவணப்படுத்தி உள்ளோம். சுவீடன், பிரேசில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடைமுறைப்படுத்தப்பட்ட 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகள் குறித்து நிபுணர்களுடனும், இந்த வைரஸை அகற்றுவதற்காக போராடியுள்ள ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளின் விஞ்ஞானிகளுடனும் நாம் பேசி உள்ளோம்.
செவிலியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், இசைக்கலைஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் இன்னும் பலர் உட்பட, உலகெங்கிலும் பல்வேறு தொழில்துறைகளில் தொழிலாளர்களின் நிஜமான வாழ்க்கை அனுபவங்களை நாம் ஆவணப்படுத்தியுள்ளோம்.
இந்த விசாரணையைத் தொடங்கியமை எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் விதத்தில், அதற்கு வெறும் நான்கு நாட்களுக்குப் பின்னர், அதிகமாக பரவக்கூடிய மற்றும் தடுப்பூசியையே-எதிர்த்து நிற்கும் ஓமிக்ரோன் வகை தென்னாபிரிக்கா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக செய்தி வெளியானது.
ஓமிக்ரோன் 'மிதமானது' என்ற அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் பொய்களுக்கு நேர்மாறாக, ஜனவரியின் பிற்பகுதியில் உலகளவில் அதிகப்படியான இறப்புகள் ஒரு நாளைக்கு சுமார் 40,000 ஐ எட்டின, இது முன்னர் பதிவு செய்ததிலேயே இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும், 2022 இல் இதுவரை உலகளவில் 3.3 மில்லியன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓமிக்ரோன் அதிகரிப்பின் போது, முழுமையாக 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை ஏற்று 'தணிப்பு' அணுகுமுறையைப் பின்பற்றிய ஒவ்வொரு நாடும் இப்போது, கோவிட்-19 “பருவகால பகுதிசார் தொற்றுநோயாக' மாறிவருகிறது என்ற பொய்யை அடிப்படையாக கொண்டுள்ளன. இந்த நிகழ்வுபோக்கில், அவை புள்ளிவிபர கண்காணிப்பு மற்றும் அறிவிப்பை முறையாக கலைத்து விட்டதுடன், கட்டாய முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிட்டு, பரிசோதனைகளையும் கூட குறைத்துள்ளன.
உலக ஆளும் வர்க்கங்கள் இந்த புதிய தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தன. மருத்துவ விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதார அபிவிருத்தி மூலமாக வழித்தப்பட்ட நூற்றாண்டுகளாக மனித நாகரீக வளர்ச்சி உதறிவிடப்பட்டுள்ளன.
அதிவலது வேண்டுமென்றே பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, தடுப்பூசிகளின் செயல்திறனை மறுத்த அதேவேளையில், பாசாங்குத்தனமான தாராளவாதக் கட்சிகள் பொது சுகாதாரம் மீதான கடுமையான தாக்குதலில் இணைந்தன. இடைக்காலத்தில் இருந்து இருந்து வரும், தனிமைப்படுத்தல் மற்றும் ஒதுக்கி வைக்கும் மிகவும் அடிப்படை நடவடிக்கைகளும் கூட, கைவிடப்பட்டுள்ளன.
இத்தகைய கண்மூடித்தனமான கொள்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில், உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்தது. ஜனவரியில், அமெரிக்கா எங்கிலும் குறைந்தபட்சம் 15 நகரங்களிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகளிலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விஷயங்களை அவர்கள் கரங்களில் எடுத்து, வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகளை மூட நிர்பந்தித்தனர்.
பெப்ரவரி பிற்பகுதியில் உக்ரேனில் போர் வெடித்தது, பின்னர் இந்த பெருந்தொற்றைப் பற்றிய எல்லா செய்திகளையும் நிறுத்துவதற்கும் மற்றும் தரவு மூடிமறைப்பில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் மற்றும் எல்லா பொது சுகாதார நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவும் சாதகமாக்கிக் கொள்ளப்பட்டது.
ஓமிக்ரோன் BA.1, BA.2 மற்றும் இப்போதைய கூடுதலான துணை மாறுபாடுகளின் அதிகரிப்பைத் தடுக்க எதுவும் செய்யாத அதேவேளையில், இந்த ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் ஊடகங்களும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைப் பேணுவதற்காக சீனாவைத் தொடர்ந்து கண்டிக்கின்றன.
பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை மேற்கத்திய ஊடகங்கள் துயரகரமாக சித்தரிப்பதற்கு நேர்மாறாக, சீனத் தொழிலாள வர்க்கத்தில் இந்த கொள்கைக்கு அளப்பரிய மக்கள் ஆதரவு உள்ளது. சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் செயல்திறன், இந்த வைரஸை அகற்றும் மூலோபாயமே இந்த பெருந்தொற்றைத் தடுப்பதற்கு ஒரே நம்பகமான மூலோபாயமாக இருப்பதற்கு நடைமுறைரீதியிலான ஆதாரமாக உள்ளது.
சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் அடிப்படை வரம்பானது, அக்கொள்கை சீனாவின் தேசிய எல்லைகளுக்குள் மட்டுப்பட்டுள்ளது என்ற உண்மையிலிருந்து எழுகிறது. சீனாவில் செயல்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சீனாவுக்கு வெளியே விஞ்ஞானிகள் கூறிய காற்றுவழி பரவல் தணிப்பு நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், இந்த பெருந்தொற்றை உலகளவில் ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
சீனாவின் அனுபவமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கோடிட்டுக் காட்டிய மூலோபாயமும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இழந்த 20 மில்லியன் உயிர்களில் பெரும் பெரும்பான்மையைக் காப்பாற்றியிருக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த பெருந்தொற்று, பாரிய மரணங்கள் மீது ஆளும் உயரடுக்கின் முற்றிலுமான அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் இப்போது மனிதகுலத்தைக் கட்டுப்பாட்டை மீறி அணுஆயுத போருக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்தி வரும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடித்துள்ளனர். இந்த பெருந்தொற்றின் கொடூரத்தன்மை, மனிதகுலத்தையே நிர்மூலமாக்க இட்டுச் செல்லக்கூடிய ஒரு போரை நடத்த அவர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்தி உள்ளது.
இதே போல, பல தசாப்தங்களாக முதலாளித்துவவாதிகளும் அவர்களின் அரசியல்வாதிகளும் நனவுபூர்வமாக ஆண்டுக்கு ஆண்டு காலநிலை மாற்றம் மோசமடைய அனுமதித்துள்ளனர், இது வரவிருக்கும் தசாப்தங்களில் உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லவும் மற்றும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தவும் அச்சுறுத்தி வருகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக பெருந்தொற்றுக்களை ஏற்படுத்தும் படர்ந்து பரவும் எதிர்கால நிகழ்வுகளின் அபாயத்தைக் காலநிலை மாற்றம் மிகப்பெரியளவில் அதிகரிக்கும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது.
உலகம் முழுவதும், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இந்த பெருந்தொற்றைக் குறித்து ஆய்வு செய்துள்ளதுடன், அதன் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளனர், மற்றும் உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு கொள்கையை மாற்றப் போராடி உள்ளனர். அவர்களின் பணியால் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தத் துணிச்சலான தன்னலமற்ற முயற்சிகளை முதலாளித்துவ அரசாங்கங்கள் நாசப்படுத்தி உள்ளன.
ஆனால் மற்றொரு சமூக சக்தியும் இருக்கிறது, அதன் புறநிலை நலன்கள் பொது சுகாதாரக் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன: அது தான் சர்வதேச தொழிலாள வர்க்கம். இந்த சக்திவாய்ந்த முற்போக்கான வர்க்கத்தை நோக்கி விஞ்ஞானிகள் திரும்ப வேண்டும்.
இந்த பெருந்தொற்றின் போக்கில், ஒரு நினைவுகூரத்தக்க சமூக படுகொலைக் குற்றம் நடத்தப்பட்டுள்ளது. இது கணக்கில் கொண்டு வரப்படும், இதற்கு பொறுப்பானவர்கள் கணக்கில் கொண்டு வரப்படுவார்கள்.
தொழிலாளர்களும், இளைஞர்களும், விஞ்ஞானிகளும், நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கான அடுக்குகளும் இந்த அனுபவத்திலிருந்து அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும். உலக முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் தார்மீக திவால்நிலையை இந்த பெருந்தொற்று அம்பலப்படுத்தியுள்ளது, அது தூக்கியெறியப்பட வேண்டும்.
இன்றைய மே தினக் கூட்டத்தில் பங்கெடுத்து வரும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் பின்வரும் அழைப்புகளை விடுக்கிறோம்:
உலகளவில் இந்த வைரஸை அகற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்! இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஓர் உலகளாவிய மக்கள் இயக்கம் இல்லாத வரையில், அனேகமாக வரக்கூடிய ஆண்டுகளில், பாரிய நோய்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் ஓர் அலை மாற்றி ஓர் அலை உருவாகிக் கொண்டே இருக்கும்.
உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணையில் பங்கெடுங்கள்! இது ஒவ்வொரு நாட்டிலும் விரிவாக்கப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆளும் உயரடுக்குகளும் ஊடகங்களும் இந்த பெருந்தொற்று முடிந்துவிட்டதாக அறிவிக்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு நாளும் நடந்துள்ள மற்றும் ஆழமடைந்து வரும் எல்லா குற்றங்களையும் நாம் ஆழமாக தோண்டி எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, உலகப் போர் முனைவை நிறுத்தவும், கோவிட்-19 க்கு எதிராக ஓர் உலகளாவிய போராட்டத்தைத் தொடங்கவும் மற்றும் உலக சோசலிசப் புரட்சிக்காக போராடுவதற்கும், ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கத்திலும் ஒரு ட்ரொட்ஸ்கிச புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது மிக முக்கியமான பணியாகும்.
நன்றி.