பிரெஞ்சு-உக்ரேனிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாராளுமன்றம் விவாதிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மார்ச் 12, செவ்வாயன்று, பாராளுமன்றம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ள பிரெஞ்சு-உக்ரேனிய இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை மீது விவாதித்து வாக்களித்து வருகிறது. இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதற்கான மக்ரோனின் முடிவானது, முதலில் பாராளுமன்றத்தை, அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்வதன் மூலமாக ரஷ்யாவுக்கு எதிரான ஒரு இராணுவ விரிவாக்கத்துக்கு தலைமை கொடுக்கும் அவரது பொறுப்பற்ற முன்மொழிவுக்கு ஒரு போலி-ஜனநாயக மூடுதிரையை வழங்க நோக்கம் கொண்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நடந்த இந்த விவாதம் வெற்றுத்தனமானது, ஏனெனில் ஆவணத்தின் முடிவில் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட தேதியில், அதாவது பெப்ருவரி 16 அன்று நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் என்ற சாக்குபோக்கைப் பயன்படுத்துவதன் மூலமாக, மக்ரோன் உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட நேட்டோ துருப்புகள் அனுப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுக்கும், ஒரு அணுஆயுத போராக மாறுவதற்கான சாத்தியக்கூறுக்கும் பொதுமக்களைப் பழக்கப்படுத்த முனைந்து வருகிறார்.

அமெரிக்காவில், நியூயோர்க் டைம்ஸ் டேவிட் சாங்கர் எழுதிய ஒரு கட்டுரையை பிரசுரித்தது. அதில் “உக்ரேனிய படைகள் ரஷ்ய பாதுகாப்பு நிலைகளை அழித்து, கிரிமியாவை மீண்டும் கைப்பற்ற முயற்சிப்பதாகத் தோன்றும் ஒரு ஒற்றை சூழ்நிலையில், —இந்த இலையுதிர்காலத்தில் கற்பனை செய்யக் கூடியதாக தோன்றிய ஒரு சாத்தியக்கூறு— அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்,” என்று சிஐஏ பைடெனிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகள் உக்ரேனிய போர் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான பேரழிவு தரும் பின்னடைவுகளுக்குப் பின் வந்துள்ளன. இவை உக்ரேனிய கைப்பாவை ஆட்சி நேரடி நேட்டோ தலையீடு இல்லாமல் இராணுவச் சரிவைக் கொடுக்கும் சாத்தியக்கூறை எழுப்பியுள்ளன. நேட்டோவின் இந்த நிலைப்பாடு ரஷ்யாவை நேட்டோ பிராந்தியத்தைத் தாக்கவோ அல்லது அணுவாயுதங்களைப் பயன்படுத்தவோ அச்சுறுத்தும் நிலைக்குத் தள்ளுகிறது.

பிரெஞ்சு-உக்ரேனிய ஒப்பந்தம் “உக்ரேனின் பாதுகாப்பு யூரோ-அட்லாண்டிக் மற்றும் உலகளாவிய பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்பதை உறுதிப்படுத்துகிறது. நேட்டோவில் உக்ரேன் எதிர்காலத்தில் இணைவது ஐரோப்பாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு பயனுள்ள பங்களிப்பாக இருக்கும் என்பதை பிரான்ஸ் உறுதிப்படுத்துகிறது. நேட்டோவில் உக்ரேன் இணைவதற்கு ஆதரவளிக்கும் கூட்டு முயற்சிகளை பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைத்து வலுப்படுத்துவார்கள்.” ஆனால் உக்ரேன் நேட்டோவின் பாகமாக இருந்தால், அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் 5வது விதி பிரான்சை போரில் தலையிட கட்டாயப்படுத்தும்.

இந்த உடன்படிக்கையானது, பிரான்ஸ் உக்ரேனிய ஆட்சிக்கு “பாதுகாப்பு உதவி மற்றும் நவீன இராணுவ தளவாடங்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு கோருகிறது.... அவை, வான் பாதுகாப்பு, பீரங்கிகள், நீண்டதூர தாக்குதல் தகைமை, கவச வாகனங்கள், விமானப்படை தகைமைகள் மற்றும் ஏனைய முக்கிய தகைமைகளுக்கு முன்னுரிமை அளித்தல், ஆனால் இவை மட்டும் அல்ல.”

ரஷ்ய பிராந்தியத்தை இலக்கில் வைக்கும் தகைமை கொண்ட அதிநவீன ஆயுதங்களை பிரான்ஸ் விநியோகிப்பதற்கு, ரஷ்யாவிடம் இருந்து ஓர் இராணுவ விடையிறுப்புக்கு அழைப்பு விடுக்கிறது. உக்ரேனுக்கு நேட்டோ டாரஸ் ஏவுகணைகளை வழங்குவது குறித்து எச்சரித்த புட்டின், “எங்களிடமும் உங்கள் பிராந்தியத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் உள்ளன. ஆனால் இந்த தலையீடுகளின் விளைவுகள் மிகவும் சோகமானதாக இருக்கும். மேற்கத்திய அச்சுறுத்தல்கள் மோதலுக்கான உண்மையான அபாயத்தை உருவாக்குகின்றன.” அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது “நாகரீகத்தை அழிப்பதை அர்த்தப்படுத்துகிறது” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

“தடுத்து நிறுத்துதல்” என்ற வார்த்தை ஆவணத்தில் பல முறை தெளிவற்ற விதத்தில் திரும்பத் திரும்ப வருகிறது. ஒரு பத்தியில் அது எழுதப்பட்டுள்ளது: அதாவது “இந்த உடன்படிக்கையின் கீழ் உக்ரேனுக்கான பிரான்சின் நீண்டகால பாதுகாப்பு கடமைப்பாடுகளின் பிரதான கூறுகள் தடுப்பு, செயலூக்கமான தடுத்து நிறுத்துதல் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் எந்தவொரு மேலதிக ஆக்கிரமிப்பையும் முகங்கொடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவையாகும்.” 

இருப்பினும், இந்த வார்த்தை பொதுவாக அணு ஆயுதங்கள் பற்றிய விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது ஒப்பந்தத்தில் வெளிப்படையாக இருக்கவில்லை. ஒரு கேள்வி கேட்கப்பட்டாக வேண்டும்: அதாவது ரஷ்யாவுக்கு எதிராக அணுவாயுதங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் தயாராக இருப்பதாக மக்ரோன் ஜெலென்ஸ்கிக்கு வாக்குறுதி அளித்தாரா?

ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது மட்டுமே நேட்டோ நாடுகளால் திட்டமிடப்படும் போர் விரிவாக்கத்திற்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டை வழங்குகிறது. மக்ரோன் முன்மொழிந்த போர் திட்டத்திற்கு நமது சமரசமற்ற எதிர்ப்பு என்பது, மக்ரோனின் கருத்துக்களை வார்த்தைகளில் விமர்சிக்கின்ற நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் சக்திகளுக்கு எந்த ஆதரவும் அளிப்பது என்று அர்த்தமல்ல.

மக்ரோன் “யுத்தப் பிரபுவாக செயல்படுகிறார்” என்று மரின் லு பென் குற்றஞ்சாட்டுகிறார். நம் நாட்டில் அமைதி அல்லது போர் பணயத்தில் உள்ளது.” ஜோர்டான் பார்டெல்லா அவரது பங்கிற்கு, மக்ரோன் “அவரது பொறுமையை இழந்து வருகிறார்” என்று குறிப்பிட்டார். அரசாங்கமானது தேசிய பேரணி (RN) கட்சியின் வேலைத்திட்டத்தின் அதிகரித்தளவில் மற்றும் பரந்த கூறுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது ஆனால் RN ஐ ரஷ்யாவின் கைப்பாவை என்று பிரதமர் அட்டல் கண்டனம் செய்தார்.

அதிவலது தேசிய பேரணியை, ரஷ்யாவின் நண்பன் என்ற கருத்து பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வரலாற்றில் முரண்பட்ட ஒரு பொய்யாகும். இரண்டாம் உலகப் போரின் போது, போல்விஷ்சத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு தன்னார்வலர்களை 33வது SS சார்லமேன் பிரிவில் சேர அனுப்பியது. அவர்கள் சோவியத் இராணுவத்தை சானோக் மற்றும் மிலெக் மற்றும் “ஹேமர்ஸ்டீன் சண்டையில்” எதிர்த்துப் போரிட்டனர்.

உண்மையில், தற்போதைய உக்ரேன் போருக்கு லு பென்னின் எதிர்ப்பானது ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கங்களிடையே ஒரு பரந்த விவாதத்தின் ஒரு பிரதிபலிப்பாகும். இது பெரும்பாலும் வாஷிங்டனில், ரஷ்யாவுடனான ஒரு முழுவீச்சிலான போருக்கான பைடெனின் ஆதரவாளர்களுக்கும், மற்றும் சீனாவுடனான ஒரு போரை நோக்கி அதிக நோக்குநிலை கொண்ட பெரும்பாலான ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே நடந்து வருகிறது. லு பென் ஏற்கனவே ட்ரம்புக்கு தனது அனுதாபங்களை அறிவித்துள்ளார்.

உக்ரேன் “சாத்தியமான அளவுக்கு” நினைவுகூரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி பிரதிநிதிகளின் தலைவரான மதில்டே பனோட் அந்த அழைப்புக்கு எதிர்வினையாற்றினார்: அதாவது “குடியரசின் ஜனாதிபதியின் இந்த பொறுப்பற்ற அறிக்கைகள் மீது ஒரு வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஒரு விவாதத்தை அவசரமாக ஒழுங்கமைக்க நான் பிரதம மந்திரிக்கு எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டார். சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளரான ஒலிவியே பௌரே விடயத்திலும் இதுவே உண்மையாகும், அவர் ஒரு “அறிவொளிமிக்க மூலோபாய விவாதத்திற்கு” அழைப்புவிடுத்தார்.

அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தைச் சுற்றி ஒருங்குவிந்திருக்க வேண்டுமென அடிபணியா பிரான்ஸ் கட்சி அழைப்பு விடுக்கிறது. உண்மையில் இது தொழிலாளர்களை தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதற்கும் போருக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரள்வதைத் தடுப்பதற்குமான ஒரு முயற்சியாகும்.

2024 இல் ஒரு அணுஆயுத போர் வெடிப்பதற்கு எதிரான போராட்டத்திற்கு 2023 இல் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார். சென்ற ஆண்டு, ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் காட்டிய எதிர்ப்பை அவர் காலில் போட்டு மிதித்து நசுக்கினார். இந்த ஆண்டு போருக்கு எதிரான பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பிலும் அதையே செய்ய அவர் உத்தேசித்துள்ளார். அடிபணியா பிரான்ஸ் கட்சியின் நாடாளுமன்ற நடவடிக்கைகள், அவர்கள் ஓய்வூதிய சீர்திருத்தத்தை நிறுத்தியதைப் போலவே, அணுஆயுத போர் அளவுக்குக் கூட தீவிரப்படுவதைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை.

மூன்றாம் உலகப் போர் நம்மைச் சுற்றி தொடங்குகிறது. நிலைமையின் தீவிரம் குறித்தும், போருக்கான போட்டியை நிறுத்த அணிதிரள்வதன் அவசியம் குறித்தும் தொழிலாளர்களை விழிப்படையச் செய்வதற்காக, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை சாத்தியமான அளவுக்கு பரந்தளவில் அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதற்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

Loading