World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பா : ஜேர்மனி

German government restricts democratic rights

ஜேர்மன் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது

By Elizabeth Zimmermann
22 September 2001

Back to screen version

நியூயோர்க், வாஷிங்டனில் செப்டம்பர் 11ம் திகதி நிகழ்ந்த துயரமான சம்பவத்தின் பின்னர் ஜேர்மனியில் பொதுவாக ஜனநாயக உரிமைகளை மட்டுப்படுத்தல் பற்றியும், குறிப்பாக பொதுவாக அதனை வெளிநாட்டவர்களுக்கு எதிராக மோசமாக்குதல் பற்றியும் பிரத்தியேகமாக விவாதம் நடக்கின்றது.

கடந்த புதன் கிழமை தேசிய பாராளுமன்றம் உள்நாட்டு பாதுகாப்பினை பலப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை பக்கபலமாக சேர்க்கவுள்ளது. இதில் முக்கிய சட்டமான 129a குற்றச்சட்டத்தை விரிவாக்கவுள்ளது. இது பயங்கரவாத குழுவினை கட்டியெழுப்புதல் அல்லது அதற்கு ஆதரவு அளித்தல் போனறவற்றை சட்டவிரோதமானது என குறிப்பிடுகின்றது.

129 a சட்டமானது 1976ல் RAF (செம்படை அமைப்பு) ஜேர்மனியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டு, அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான கண்காணிப்புக்கு சாதகமாக பாவிக்கப்பட்டது. இது எண்ணுக்கணக்கற்ற பிழையான குற்றச்சாட்டினையும், ஐயுறவினையும் அரசியல் ரீதியாக வித்தியாசமாக சிந்திப்பவர்களின் மேல் சுமத்தியது.

சில நாட்களுக்கு முன்னர் பசுமைக்கட்சி (GRUNEN) இச்சட்டத்தை இல்லாமல் செய்யக்கோருவதற்கு மாறாக இச்சட்டத்திற்கு மேலும்129 B எனும் பிரிவை இணைக்க கோரியுள்ளது. இது வெளிநாட்டு இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் ஜேர்மனியில் வாழுபவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும். நீதியமைச்சு இதற்காக வரைவு ஒன்றை ஏற்கனவே பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்காவில் நடந்த தாக்குதலை அடுத்து ஜேர்மன் அரசாங்கம் சட்டத்தினையும், ஒழுங்கினையும் பேண தீவிரமான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள விமான நிலையத்தின் நிர்வாகத்தினை நிர்ப்பந்தித்துள்ளது. இதில் சில நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க சம்பவத்திற்கு முன்னரே சமூக ஜனநாயக் கட்சியாலும், பசுமைக்கட்சியாலும் உடன்பாடுகாணப்பட்டது. மேலும் பல ஒழுங்கு நடவடிக்கைகள் இதனை தொடரவுள்ளது.

மேலும் இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதற்காக சமய அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை விரைவாக இல்லாது ஒழிக்க பாராளுமன்றம் தீர்மானித்திருக்கின்றது. 1964 இன் சட்டத்தின்படி சமய அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட உலக நோக்கத்தை கொண்ட அமைப்புகளுக்கு அரச தலையீட்டிலிருந்து கூடியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

உள்நாட்டுப் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் 3மில்லியன் மார்க் (DM) மேலதிக ஒதுக்கீட்டினை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்தப் பணத்தினை புகையிலை, மற்றும் காப்புறுதி வைப்புக்கள் மீதான வரியை அதிகரித்தல் மூலம் பெறுவதாக முடிவு செய்துள்ளது.

சமூக ஜனாயக் கட்சி (SPD), கிறிஸ்தவ ஜனாயக கட்சி, கிறிஸ்தவ சமூக கட்சி (CDU/CSU) அரசியல் வாதிகள் ஜனநாயக உரிமைகளை அழித்தொழிப்பதற்கும், அரசின் கண்காணிப்பை நீடிப்பதற்கும் என்ன விலைகொடுத்தாவது அரசினை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பல விண்ணப்பங்களை வைத்துள்ளன. பயங்கரவாத தாக்குதலை சாட்டாகப்பயன்படுத்தி முடிந்தமட்டும் மாற்றங்களை கொண்டுவந்து, வெளியில் இருந்துவரும் எல்லா விமர்சனங்களுக்கும் வாய்ப்பூட்டு போடவும், ''வித்தியாசமாக'' தோற்றமளிப்பவர்களுக்கு எதிரான ஐயுறவையும், வெறுப்பையும் உள்ள சூழ்நிலையை உருவாக்க முனைகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் Otto Schily (சமூக ஜனாயக் கட்சி- 1970 களில் செம்படை அமைப்பின் வழக்கறிஞராக இருந்தவர்) கைவிரல் பதிவுசெய்வதில் இருந்து இராணுவத்தை உள்நாட்டில் தலையிட செய்யும் கோரிக்கைகளை முன்மொழிந்துள்ளார். இன்றுவரை இராணுவம் நெருக்கடியான நிலையிலேயே தலையிட முடியும் என சட்டம் உள்ளது. நீதியமைப்பு, பொலிஸ், மற்றும் வெளிநாட்டவர் காரியாலையம் ஆகியவற்றை இணைந்து செயற்பட அழைப்புவிடப்பட்டுள்ளது. அவர் மேலும் தகவல்களை பாதுகாக்கும் உரிமையை கட்டுப்படுத்தவதையும் அல்லது அவை ''பயங்கரவாதிகளை பாதுகாத்தால்'' அவற்றை இல்லாதொழிக்கவும் அறிவித்துள்ளார். Otto Schily இன் பேச்சாளரான Rainer Lingenthal சாட்சியங்களுக்காக கணனித் தகவல் வலையை விரிவாக்குவதும் ''கவனிக்கப்படவேண்டிய விடயங்களில் உள்ளது'' என தெரிவித்தார்.

"இரகசிய தேடல்" அதாவது தொலைபேசி ஒட்டுக்கேட்பது, வீடுகளிலும் பொது இடங்களிலும் வீடியோ கண்காணிப்பு போன்றவை எல்லையற்று நடைமுறைப்படுத்தல் வேண்டும். இணைய ஊடகம், மின்னஞ்சல் எல்லாமே கண்காணிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாக தகவல் சேகரிப்பு நிலையங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ''அபாயம் உள்ளடங்கியிருப்பின்'' நீதித்துறையின் அனுமதியில்லாமலே தொலைபேசி ஒட்டுக்கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பாதுகாப்பு குழுவின் தலைவர் Helmut Wieczorek (சமூக ஜனாயக் கட்சி) எல்லைப் பாதுகாப்பு படையும் தேசிய இராணுவமும் இணைந்த ஒரு தேசிய பாதுகாப்பு படையை உருவாக்கவேண்டும் என அழைப்புவிட்டுள்ளார். கிறிஸ்தவ ஜனாயக கட்சி, கிறிஸ்தவ சமூக கட்சி அரசியல்வாதிகள் அரச சாட்சிகளை மாற்றவும், குற்றச்செயல்களுக்கு எதிராக பொலிசாரின் இரகசிய கையாட்களை பாவிப்பதையும், இப்படியானவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவர்களை தண்டனைக்குள்ளாக்காது விடுவதையும் சட்டபூர்வமாக்கவும் கோரியுள்ளனர்.

Bayarn மாநில முதல்வர் Edmund Stoiber (கிறிஸ்தவ சமூக கட்சி) ஒரு தேசியபாதுகாப்பு சபையை நிறுவும் தேவைப்படின் ஒரு அவசரகால அரசு ஒன்றை உருவாக்கவும் கோரிக்கைவிடுத்துள்ளார். அத்துடன் தேசிய இராணுவத்தையும் எல்லைப்பாதுகாப்பு பொலிசாரையும் விமான நிலையங்கள், மாடிக் கட்டிடங்கள், சட்ட நிலையங்கள், மற்றும் உயர் பணி கட்டிடங்கள் (பொலிஸ், இராணுவம்) போன்றவற்றை கண்காணிக்கவும், இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் மேலதிக நிதி ஒதுக்கவும், இரகசிய பிரிவிற்கு மேலதிகமான ஆட்களை திரட்டவும் கோரியுள்ளார். மேலும் எமது திறந்த எல்லைகளில் தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்ய செயற்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விமானத்தை கடத்தியவர்களில் மூன்று பேர்கள் ஜேர்மனியில் கல்விகற்றவர்கள் என்ற எந்தவித ஆதாரம்மற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டு OTTO Schuly மற்றும் வேறுசில சமூக ஜனாயக் கட்சியினதும், கிறிஸ்தவ ஜனாயக கட்சி, கிறிஸ்தவ சமூக கட்சி அரசியல்வாதிகளும் இதைச்சாட்டாக கொண்டு வெளிநாட்டவர் இங்குவருவதற்கு மேலும் பல தடைச்சட்டங்களை இயற்றுவதை சாதகமாக்க முடிவு செய்துள்ளனர்.

உள்ளநாட்டு அமைச்சரான Otto Schily மீண்டும் மீண்டும் இங்கு குடியேறுவதற்கான இப்புதிய சட்டத்தில் ஏற்கனவே அரசகட்டுப்பாடும், பாதுகாப்பு சாதகங்களையும் கொண்டதாக இருப்பதாக வலியுறுத்தினார். உதாரணமாக வெளிநாட்டவர் ஜேர்மன் குடியரசுக்கோ அல்லது ஜேர்மன் மக்களுக்கோ அபாயத்தை உருவாக்குகின்றார் என "முக்கிய காரணத்திற்கான" கருதப்பட்டால் அவ் வெளிநாட்டவருக்கு ஜெனிவா அகதிகள் சட்டத்தின் பிரகாரமான அந்தஸ்த்து நிராகரிப்பதை 60ஆம் பிரிவு வழிவகுக்கின்றது என்பதை அவர் குறிப்பிட்டு காட்டினார். இவர்கள் சொந்த நாட்டில் அரசியல் பிரச்சினையால் தாக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களை உடனடியாக நாடுகடத்தல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க சம்பவத்தின் பின்னர், அவர் தனது புதிய சட்டத்திருத்தங்கள் இன்னும் மாற்றத்திற்கு உள்ளாகலாம் என்பதை நிராகரிக்கவில்லை. கடந்த ஞாயிறு மாலை ARD தொலைக் காட்சியின் விவாத மேடையில் Bavarian மாநில உள்நாட்டு அமைச்சர் Gunther Beckstein (கிறிஸ்தவ சமூக கட்சி) முன்மொழிந்த குடியேறுபவர்கள் மீது இரகசியப் பொலிசார் ஒழுங்கான விசாரணையை செய்வதை அமுல்ப்படுத்தவேண்டும் என்ற கருத்தோடு தான் முழுமனே உடன்படுவதாகவும், எல்லா அரசியல் தஞ்சம் கோருவோரிடமும், நாட்டினுள் புகுவதற்காக விண்ணப்பிப்பவர்களிடமிருந்தும் பொதுவாக கைவிரல்பதிவு அடையாளம் கட்டாயமாக பெறப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved