முன்னோக்கு

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்

பகுதி ஒன்று

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

( முழு அறிக்கையையும் pdf ஆக பதிவிறக்கவும்)

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

1. 2024 புத்தாண்டானது தீவிரமடைந்து வரும் சர்வதேச நெருக்கடி நிலைமைகளின் கீழ் தொடங்குகிறது. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் நல்லெண்ணம் மற்றும் “ஒற்றைத் துருவ” ஆட்சியின் கீழ், உலக முதலாளித்துவம், உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பின் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறது என்று நம்பிக்கையான கணிப்புகள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன், “குறுகிய இருபதாம் நூற்றாண்டின்” பிசாசுகள் எனப்பட்டவையான அதாவது எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்சியம் மற்றும் சோசலிசப் புரட்சியின் பேயுருக்கள் நிரந்தரமாக புதைக்கப்பட்டன. வோல் ஸ்ட்ரீட் உலகை நோக்கிக் கூக்குரலிட்டது: அதாவது “எனது பெயர் முதலாளித்துவம், ராஜாக்களின் ராஜா, எனது சாதனைகளைப் பாருங்கள், வலிமையானவர்களே, பிரமித்துப் போங்கள்!” ஆனால் அந்த ஆணவப் பெருமிதத்தை ஒரு மாபெரும் சிதைவில் கரைப்பதற்கு கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலமே ஆனது. வெற்றிகரமான முதலாளித்துவத்தின் புதிய நூற்றாண்டு எல்லாவற்றிலும் குறுகியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் போர்கள் மற்றும் புரட்சிகளை உருவாக்கிய உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை மற்றும் உலகெங்கிலும் பரவி வரும் தீவிரமடைந்து வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளின் உந்து சக்திகளாக உள்ளன.

2. கடந்த நூற்றாண்டின் பேரழிவுகளால் ஏற்பட்ட பயங்கரங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன. இனப்படுகொலை என்பது அரச கொள்கையின் ஒரு கருவியாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. காஸாவில் பாலஸ்தீனிய மக்களை அழிப்பதற்கான இஸ்ரேலிய ஆட்சியின் முயற்சி, அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டணிகளின் வெளிப்படையான ஒப்புதலுடன் தொடர்கிறது, அவைகள் போர்நிறுத்தத்திற்கு தங்கள் எதிர்ப்பை மீண்டும் மீண்டும் பிரகடனம் செய்துள்ளன. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதி இரக்கமற்ற குண்டுவீச்சுக்கு உட்படுத்தப்படுகிறது, இது போரின் முதல் 10 வாரங்களுக்குள் 25,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது, அவர்கள் பெரும்பாலும் பெண்களும் மற்றும் குழந்தைகளும் ஆவார்கள்.

3. இஸ்ரேலின் பாசிச பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தனது புத்தாண்டுச் செய்தியில், தாக்குதல் 2024 முழுவதும் தொடரும் என்று அறிவித்தார். அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ சக குற்றவாளிகளின் வரம்பற்ற நிதி மற்றும் இராணுவ ஆதரவு இல்லாமல், இஸ்ரேல் இன்னும் ஒரு வாரம், ஒரு வருடம் இதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, போரைத் தொடர முடியாது. அமெரிக்க ஜனாதிபதி, வெளிவிவகாரச் செயலாளர், எண்ணற்ற ஏனைய உயர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பென்டகனின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் வாஷிங்டனுக்கும் டெல் அவிவிற்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணித்து, இஸ்ரேலிய நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு, குண்டுவீச்சு இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் பங்கெடுத்தனர். அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் காஸாவிற்குள் களத்தில் கொலைகார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது பகிரங்கமான இரகசியமாகும்.

காஸா பகுதியில் ரஃபாவிலுள்ள மனித புதைகுழியில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்களை புல்டோசர் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 26, 2023 அன்று இறக்குகிறது. [AP Photo/Fatima Shbair]

4. ஏகாதிபத்திய சக்திகள் தமது மனித உரிமை மீறல்களை வழமையாக மீறுவதை விட இனப்படுகொலைக்கு அனுமதியளித்தல் மற்றும் பங்கெடுத்தல் என்பவற்றையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. காஸா இனப்படுகொலையானது, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், முதலாம் உலகப் போரின் மத்தியில் லெனினால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒரு போக்கை உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்துகிறது. அவர் 1916 இல் பின்வருமாறு எழுதினார், “ஜனநாயக-குடியரசுவாதிகளுக்கும் மற்றும் பிற்போக்கு-முடியாட்சி ஏகாதிபத்திய பூர்சுவா வர்க்கத்திற்கும் இடையிலான வேறுபாடு அழிக்கப்படுகிறது, ஏனெனில் அவைகள் இரண்டும் உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன...” “பிற்போக்கு-முடியாட்சிவாதிகளுக்கு” “பாசிசம்” என்ற சொல்லை பதிலீடு செய்வதும் லெனினின் பகுப்பாய்வும், தற்போதைய ஏகாதிபத்திய ஆட்சிகளைக் குறித்து விளக்குவதற்கு முற்றிலும் செல்லுபடியாகுவதாக இருக்கிறது.

5. காஸா இனப்படுகொலையானது ஒரு தனித்துவமான அத்தியாயம் அல்ல. அது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுடன் தொடர்புடைய விதிவிலக்கான நிலைமைகளின் விளைவு எனவும், சியோனிச திட்டத்தின் உள்ளார்ந்த பிற்போக்கு தன்மையினதும் அதன் இனவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத-தேசியவாத நம்பிக்கைகளில் மூழ்கியுள்ள அதன் சித்தாந்தத்தின் விளைவு எனவும் மிகவும் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. பிந்தைய கூறுகள் நிச்சயமாக, இஸ்ரேலிய ஆட்சியின் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கின்றன. ஆனால், அதன் ஏகாதிபத்திய நிதியாளர்கள் மற்றும் ஆயுத விநியோகஸ்தர்களின் முழு ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தற்போதைய போரின் கட்டுப்பாடற்ற மூர்க்கத்தனத்தை, உலக ஏகாதிபத்திய மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் முறிவின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ளவும் தெளிவுபடுத்தவும் முடியும்.

6. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளின் அடிப்படைத் “தவறு” என்னவென்றால், இந்த நிகழ்வு முற்றிலும் கருத்தியல் சொற்களில், அதாவது சோசலிசத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றி என்று விளக்கப்பட்டது. ஆனால் ஸ்ராலினிசத்தை சோசலிசத்துடன் தவறாக அடையாளப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இந்த விளக்கமானது, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்கான உண்மையான காரணத்தையும் அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் எதிர்கால வளர்ச்சியில் அதன் தாக்கங்களையும் மறைத்தது.

7. அதன் துயரகரமான விளைவுகள் இருந்தபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ஸ்ராலினிச கொள்கையான “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” குறித்த இன்றியமையாத மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தை உறுதிப்படுத்தியது. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச அரசு என்ற பிற்போக்கு தேசியவாத கற்பனையானது, ட்ரொட்ஸ்கி முன்கணித்ததைப் போல, உலகப் பொருளாதாரத்தின் யதார்த்தத்திற்கு பலியானது.

8. சோவியத் ஒன்றியத்தின் முடிவானது அமெரிக்காவுக்கு அதன் போட்டியாளர்களை விட ஒரு குறுகிய கால அனுகூலத்தை வழங்கியது, அதை அதன் பிரச்சாரகர்கள் “ஒற்றை துருவ தருணம்” (“unipolar moment”) என்று அழைத்தனர். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற அடிப்படை முரண்பாடான மிகவும் ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தின் புறநிலை யதார்த்தத்திற்கும் காலாவதியான தேசிய அரசு அமைப்புமுறையின் நிலைப்புத்தன்மைக்கும் இடையிலான மோதலானது கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் துணை ஆட்சிகளின் வீழ்ச்சியால் தீர்க்கப்படவில்லை.

9. நாஜி ஜேர்மனியின் தோல்வியில் சோவியத் ஒன்றியம் வகித்த தீர்க்கமான பாத்திரம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலனித்துவ எதிர்ப்பு வெகுஜன இயக்கங்களின் அலையின் விளைவாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய மேலாதிக்கத்தை அடைய அமெரிக்கா தனது புவிசார் அரசியல் அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது. வாஷிங்டன் இறுதியாக தனது இராணுவ பலத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் மறுசீரமைக்க முடியும் என்று நம்பியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபிமான பண்டிதரான நியூயோர்க் டைம்ஸின் தாமஸ் ஃப்ரீட்மன், “சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பங்களுக்காக, உலகை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய மறைந்திருக்கும் முஷ்டியே, அமெரிக்க இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் படையெடுப்பு சிறப்புப் படைகள் (Marine Corps) என்று அழைக்கப்படுகிறது...” என்று 1999 இல் பிரகடனம் செய்தார்.

மார்ச் 21, 2003 ஆண்டு வெளிவந்த இந்தக் கோப்புப் படத்தில், அமெரிக்க தலைமையிலான படைகள் ஈராக்கின் பாக்தாத் மீது கடுமையான குண்டுவீச்சின் போது ஒரு அரசாங்க கட்டிடம் எரிக்கப்படுகிறது. [AP Photo/Jerome Delay]

10. பால்கன்கள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட முடிவற்ற தொடர்ச்சியான போர்கள், அதன் ஒட்டுமொத்த பொருளாதார சரிவு இருந்தபோதிலும், இராணுவ நடவடிக்கைகள் மூலம் அதன் மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு தீவிர முயற்சியாகும். அனைத்துலகக் குழுவானது 2003 ஈராக் மீதான படையெடுப்பிற்கான உந்துதலை விளக்கியதுடன், அதன் அடித்தள மேலாதிக்கத் திட்டத்தின் தோல்வியை இவ்வாறு முன்னறிவித்தது:

ஈராக்கிற்கு எதிரான ஒரு ஆக்கிரோஷமான போரை ஆரம்பிப்பது, ஏகாதிபத்தியத்தின் அடிப்படையில், உற்பத்தி சக்திகளின் உலகளாவிய தன்மைக்கும் காலாவதியான தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டின் உலக வரலாற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு இறுதியான, தீவிரமான முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலகின் தலைவிதியின் இறுதி நடுவராகச் செயல்பட்டு, மாபெரும் பங்கை தனக்காகக் கைப்பற்றிய பிறகு, உலகின் வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம், அமெரிக்கா தன்னை ஒரு அதிஉயர் தேசிய-அரசாக நிறுவுவதன் மூலம் பிரச்சினையை வெற்றிகொள்ள முன்மொழிகிறது. ஆனால் 1914ல் முற்றிலும் பிற்போக்கு உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளுக்கான இந்த வகையான ஏகாதிபத்திய தீர்வு எதுவும் காலப்போக்கில் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. உண்மையில், இருபதாம் நூற்றாண்டின் போக்கில் உலகப் பொருளாதார வளர்ச்சியின் அபரிமிதமான அளவு அத்தகைய ஏகாதிபத்தியத் திட்டத்திற்கு பைத்தியக்காரத்தனமான ஒரு அம்சத்தை வழங்குகிறது. ஒரு தேசிய அரசின் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பின் அசாதாரண மட்டத்துடன் பொருந்தாது. அத்தகைய ஒரு திட்டத்தின் ஆழமான பிற்போக்கு தன்மையானது, அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளில் வெளிப்படுத்தப்படுகிறது.

11. வாஷிங்டனின் “விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட” ஏகாதிபத்திய ஒழுங்குடன் முரண்படும் சீனா மற்றும் எதிர்க்கும் தேசிய அரசுகளால் தங்கள் மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட சவாலை எதிர்கொள்வதில் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணிகளும் தங்கள் மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்ள மேற்கொண்டு வரும் விரக்தியான மற்றும் சவாலான முயற்சியிலிருந்து எழும் “காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை” காஸா இனப்படுகொலை எடுத்துக்காட்டுகிறது. பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலையானது ரஷ்யாவிற்கு எதிரான இரத்தம் தோய்ந்த அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு மத்தியில் கட்டவிழ்ந்து வருகிறது, இது 2022 பெப்ரவரியில் வெடித்ததில் இருந்து தோராயமாக அரை மில்லியன் உக்ரேனிய மற்றும், குறைந்தபட்சம் 100,000 ரஷ்ய உயிர்களை இழந்துள்ளது.

12. காஸாவில் போரானது இனப்படுகொலையை ஏகாதிபத்திய கொள்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருவியாக இயல்பாக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் இடைவிடாத விரிவாக்கமானது, இந்த மோதல் தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் ஒரு உயர்ந்த மட்டத்திலான சாத்தியத்தையும், வாய்ப்பையும் கூட நடைமுறையில் ஏற்றுக்கொள்வதுடன் சேர்ந்துள்ளது. பைடென் நிர்வாகம் அடிக்கடி பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது மற்றும் ரஷ்ய சொத்துக்கள் மற்றும் பிரதேசங்கள் மீது இராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறது. அணுஆயுத பதிலடியைத் தூண்டும் அபாயத்தால் பனிப்போரின் போது ஏற்றுக்கொள்ள முடியாததாக இத்தகைய நடவடிக்கைகள் கருதப்பட்டது. “சிவப்புக் கோடுகளை” மீண்டும் மீண்டும் கடக்கும் பைடென் நிர்வாகமும் அதன் கூட்டணி நேட்டோ அரசாங்கங்களும், தாங்கள் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் அணுஆயுதப் போர் அச்சுறுத்தலால் கட்டுப்படுத்தப்படாது என்று வலியுறுத்தியுள்ளன.

புதன்கிழமை, ஏப்ரல் 26, 2023 அன்று உக்ரேனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்திலுள்ள பக்முத்தின் இந்த வான்வழிக் காட்சியில் கட்டிடங்களிலிருந்து புகை எழுகிறது. [AP Photo/Libkos]

13. உக்ரேனுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்ட போதிலும், அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியம் இதுவரை போர்க்களத்தில் வெற்றியை அடையத் தவறிவிட்டது. 2023 நடுப்பகுதியில் அதன் “வசந்தகால தாக்குதல்” ஒரு தோல்வியில் முடிந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதி நாட்களில், உக்ரேனிய ஆட்சியானது ரஷ்ய மண்ணில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கி, பெல்கோரோட் நகரில் குறைந்தது 22 பேரைக் கொன்றதன் மூலம் போரின் குறிப்பிடத்தக்க தீவிரத்தை மேற்கொண்டது. உக்ரேன் மீதான ஏவுகணைத் தாக்குதல்களின் ஒரு புதிய அலை மூலம் ரஷ்யா இதற்கு விடையிறுக்கிறது, பினாமி போருக்கு வரம்பற்ற நிதியைத் தொடர வேண்டும் என்ற அதன் கோரிக்கைகளை வலியுறுத்த பைடென் நிர்வாகம் இதைப் பயன்படுத்துகிறது.

14. இறுதிப் பகுப்பாய்வில், ரஷ்யாவுக்கு எதிரான போரின் அமெரிக்க-நேட்டோ தூண்டுதல், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரின் ஆரம்ப கட்டங்களைத் தவிர வேறொன்றையும் குறிக்கவில்லை, இது உலகின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு மண்டலமாக மாற்றுகிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2006ல், அனைத்துலகக் குழுவானது அமெரிக்காவின் உலகளாவிய கொள்கைகள் தொடர்பான தொடர்ச்சியான கேள்விகளை முன்வைத்தது, அவற்றுள் பின்வருவன அடங்கும்:

அமெரிக்கா தனது மேலாதிக்க அபிலாஷைகளில் இருந்து பின்வாங்கி, உலகளாவிய அதிகாரத்தை அரசுகளிடையே மிகவும் சமத்துவமாக பகிர்ந்தளிப்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்குமா? ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ பொருளாதார மற்றும் சாத்தியமான இராணுவப் போட்டியாளர்களுக்கு சமரசம் மற்றும் சலுகைகளின் அடிப்படையில் அடித்தளத்தை விட்டுக் கொடுக்க அது தயாராக இருக்குமா? அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை அமெரிக்கா கருணையுடனும், அமைதியாகவும் ஏற்றுக் கொள்ளுமா?

இக்கேள்விகளுக்கு பதிலளித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, ஆம் என்று பதிலளிப்பவர்கள் “வரலாற்றின் படிப்பினைகளுக்கு எதிராக பெரும் பந்தயங்களை வைக்கின்றனர்” என்று பதிலளித்தது.

15. இன்று இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஊகத் தன்மை கொண்டவை அல்ல. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் ஒரு சாத்தியமாக பார்க்கப்படவில்லை, மாறாக தவிர்க்க முடியாததாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்திற்குள் உள்ள இந்த ஒருமித்த கருத்தானது Foreign Affairs இதழின் புதிய ஜனவரி-பிப்ரவரி 2024 இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. “இந்தப் பெரிய ஒன்று (The Big One): சீனாவுடன் ஒரு நீண்ட போருக்குத் தயாரிப்பு” என்று அதன் தலைப்பு அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இதன் ஆசிரியர் முன்னணி ஏகாதிபத்திய சிந்தனைக் குழுவான ஹட்சன் இன்ஸ்டிடியூட்டின் மூத்த உறுப்பினரான ஆண்ட்ரூ ஜே. கிரெபினெவிச் (ஜூனியர்) ஆவார்.

16. அமெரிக்காவும் சீனாவும் போருக்குச் செல்லும் என்று இக்கட்டுரை கருதுகிறது. அதைப் பற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உண்மையான கேள்விகள் தைவான் நீரிணை, கொரிய தீபகற்பம், சீன-இந்திய எல்லையில் அல்லது தெற்காசியாவில் போர் எவ்வாறு, எங்கே தொடங்கும் என்பதோடு தொடர்புடையது, மேலும் போர் அணுஆயுதப் போராக நடக்குமா என்பது தொடர்பானது. கிரெபைன்விச் இவ்வாறு கூறுகிறார்:

ஒரு போர் வெடித்தவுடன், சீனாவும் அமெரிக்காவும் தங்கள் அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சமாதான காலத்தைப் போலவே, பேரழிவு அதிகரிப்பைத் தவிர்ப்பதில் இரு தரப்பினரும் ஒரு வலுவான ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்வார்கள். அப்படியிருந்தும், போரின் தீவிரத்தின் மத்தியில், அத்தகைய சாத்தியத்தை அகற்ற முடியாது. உகந்த சமநிலையைக் கண்டுபிடிப்பதற்கான சவாலை எதிர்கொள்வார்கள், அங்கு அவர்கள் நிலைமையை முழுப் பேராக அதிகரிக்காமல் ஒரு ஆதாயத்தைப் பெற பலத்தைப் பயன்படுத்தலாம். இதன் விளைவாக, இரு சக்திகளின் தலைவர்களும் அதிக அளவிலான சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

போரை மட்டுப்படுத்துவதற்கு, வாஷிங்டனும் பெய்ஜிங்கும் ஒருவருக்கொருவர் சிவப்புக் கோடுகளை அங்கீகரிக்க வேண்டும்— அதாவது குறிப்பிட்ட நடவடிக்கைகள் தீவிரமானவையாகக் கருதப்படுகின்ற போது, மேலும் அவைகள் எதிர்விளைவுகளைத் தூண்டக்கூடும்.

17. பங்கேற்பாளர்களின் தலைவிதியைச் சார்ந்திருக்கும் இருத்தலியல் மோதலுக்கு மத்தியில் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறனின் மீது அணுஆயுத பிரளயத்தை (nuclear Armageddon) தவிர்ப்பதற்கான ஒருவரின் நம்பிக்கையைப் பணயம் வைப்பது மாயையைத் தவிர வேறொன்றுமில்லை. எவ்வாறிருப்பினும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர், அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுஆயுத பதிலடி அச்சுறுத்தலால் தடுக்கப்படாது என்பதையும், அதன் நோக்கங்களை அடைவதற்காக ஒவ்வொரு “சிவப்புக் கோட்டையும்” தாண்டும் என்பதையும் ஏற்கனவே நிறுவியுள்ளது.

18. தவிர்க்கவியலாத அமெரிக்க-சீனப் போர், அணுஆயுதங்களைப் பயன்படுத்தாமல் கூட, மனிதகுலம் முழுவதற்கும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கிரெபினெவிச் ஒப்புக்கொள்கிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

இரு தரப்பினரும் அணுசக்திப் பேரழிவைத் தவிர்த்தாலும், அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய கூட்டணி பங்காளிகளின் தாயகங்கள் ஓரளவு தீண்டப்படாமல் விடப்பட்டாலும் கூட, அழிவின் அளவும் நோக்கமும் அமெரிக்க மக்களும் அதன் கூட்டணிகளும் அனுபவித்த எதையும் விட அதிகமாக இருக்கும்.

19. கிரெபினெவிச் வந்தடையும் முடிவு என்னவென்றால், இராணுவப் பேரழிவு எப்படியும் தடுக்கப்பட வேண்டும் என்பதல்ல, மாறாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் “போர் முயற்சிக்கு மக்கள் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனும், தியாகம் செய்வதற்கான விருப்பமும் அதன் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்” என்பதாகும்.

நிமிட்ஸ் வகை விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஜூலை 28, 2022 அன்று பசிபிக்கின் ரிம் இராணுவப் பயிற்சியின் போது உருவாக்கப்பட்ட உருவகம். [Photo: Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos]

20. தவிர்க்க முடியாத போரின் இந்தப் பயங்கரமான ஏகாதிபத்திய சூழ்நிலையை அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஏகாதிபத்திய மையங்களிலுள்ள தொழிலாளர்கள், அதிகார வெறி பிடித்த நிதிய-பெருநிறுவன ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தின் பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பதில் எந்த ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. ரஷ்யா, சீனா மற்றும் பிற முக்கிய முதலாளித்துவ பிராந்திய சக்திகளான பிரேசில், ஆர்ஜென்டினா, எகிப்து, வளைகுடா நாடுகள், துருக்கி, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா ஆகியவற்றின் தொழிலாளர்கள், பூகோள அரசியலை பல்துருவ முன்னோக்கின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பதற்கான பிற்போக்குத்தன முயற்சிகளுக்கு எந்தவொரு முற்போக்கான தன்மையையும் காரணம் காட்டக்கூடாது.

21. அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யா-உக்ரேன் போரை தூண்டியது என்ற உண்மையானது, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் கண்ணோட்டத்தில், உக்ரேன் மீது படையெடுக்கும் புட்டின் அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தவில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஆத்திரமூட்டல்களுக்கு புட்டின் அரசாங்கத்தின் விடையிறுப்பு சுருக்கமாக வரையறுக்கப்பட்ட “தேசிய பாதுகாப்பு” பற்றிய பரிசீலனைகளால் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக சோவியத் ஒன்றியத்தின் உடைவு மற்றும் அதன் தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களை தனியார்மயமாக்குதல் மற்றும் அப்பட்டமாக திருடுதல் ஆகியவற்றிலிருந்து தோன்றிய ஒட்டுண்ணி தன்னலக்குழு-முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்பட்டது.

22. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுகளில், ஆளும் அதிகாரத்துவ இயந்திரத்திற்குள் இருந்த அரசியல் மோதலானது, தேசிய மற்றும் இன அடிப்படையில் வளர்ந்தது. இந்தப் பிற்போக்குத்தனமான போக்கானது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தை ஸ்ராலின் நிராகரித்ததன் மூலமும், பேரினவாத சோவியத் தேசபக்தி என்ற போர்வையில் ரஷ்ய தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமும் தயாரிக்கப்பட்டு வசதியளிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர், ரஷ்ய மற்றும் உக்ரேனின் மிகவும் சக்திவாய்ந்த தேசியவாத அதிகாரத்துவக் குழுக்களுக்கு இடையே ஏற்கனவே இருந்த மோதல்கள், புதிய தேசிய முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கு இடையிலான மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் பிராந்திய அனுகூலங்களுக்கான ஒரு வெளிப்படையான போராட்டமாக விரைவாக பரிணமித்தன. 1991 அக்டோபரில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில், அனைத்துலகக் குழுவானது பின்வருமாறு எச்சரித்தது:

குடியரசுகளில், தேசியவாதிகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு புதிய “சுதந்திரமான” அரசுகளை உருவாக்குவதில் உள்ளது என்று பிரகடனம் செய்கிறார்கள். யாரிடமிருந்து சுதந்திரம் என்பதை எங்களைக் கேட்க அனுமதியுங்கள்? மாஸ்கோவில் இருந்து “சுதந்திரத்தை” பிரகடனப்படுத்தும் தேசியவாதிகள், தங்கள் புதிய அரசுகளின் எதிர்காலம் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கைகளில் வைப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.

23. தற்போதைய போர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துலகக் குழு விடுத்த எச்சரிக்கையை நிரூபிக்கின்றது. அமெரிக்க-நேட்டோ போருக்கு எதிரான போராட்டமானது புட்டின் ஆட்சிக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலம் நடத்தப்படக்கூடாது. மாறாக, அதன் பிற்போக்குத்தனமான தேசியவாத-முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு அசைக்க முடியாத எதிர்ப்பில் நடத்தப்பட வேண்டும். ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் போர்-எதிர்ப்புக் கொள்கையானது புதிய முதலாளித்துவ உயரடுக்குகளுக்கு எதிராக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளின் ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். முதலாம் உலகப் போரின் போது லெனின் மற்றும் போல்ஷிவிக்குகளால் ஆதரிக்கப்பட்ட சர்வதேசக் கொள்கை, அவர்களின் தேசிய முதலாளித்துவ அரசைப் பாதுகாப்பதில் சமரசமற்ற எதிர்ப்பு, ரஷ்யாவில் (புட்டின் ஆட்சிக்கு எதிராக) மற்றும் உக்ரேனில் (ஜெலின்ஸ்கி ஆட்சிக்கு எதிராக) இன்றைய தொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

லெனின் 1917 ரஷ்யப் புரட்சியின் போது ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார்

24. சோசலிச சர்வதேசியவாதத்தின் அதே அடிப்படைக் கோட்பாடுகளே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் குறித்த அனைத்துலகக் குழுவின் அணுகுமுறையை தீர்மானிக்கின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், முக்கியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான அதன் அணுகலைக் கட்டுப்படுத்தவும், அதன் உலகளாவிய செல்வாக்கின் விரிவாக்கத்தைத் தடுக்கவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. உலக வர்த்தகம் மற்றும் நிதியியல் பரிவர்த்தனைகளின் தூணாக அமெரிக்க டாலர் செயற்படுகின்ற நிலவும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் செலுத்தும் இடைவிடாத அழுத்தத்தை எதிர்கொள்ள சீனா முயற்சிக்கிறது. ஆனால், இந்த கொள்கையானது, ஒரு முற்போக்கான மற்றும் நற்பண்புடைய முகமூடியைக் கொடுக்கும் சீனாவின் முயற்சிகள் இருந்தபோதிலும், (எடுத்துக்காட்டாக “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை Belt and Road Initiative” ஊக்குவிப்பதன் மூலம்) முதலாளித்துவ அடிப்படையில்தான் இது வெளிவருகிறது மற்றும் தற்போதுள்ள உலகளாவிய அதிகார சமநிலையை மறுசீரமைப்பதைத் தவிர வேறு எதையும் இது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

25. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக முதலாளித்துவ அரசுகளின் ஒரு புதிய பல்துருவக் கூட்டணியை (a new multi-polar coalition) முன்னிறுத்துவதன் மூலம் போர் வெடிப்பதைத் தடுக்க முடியாது. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமானது தேசிய அரசு அமைப்புமுறையை மறுசீரமைப்பதன் மூலம் அடைய முடியாது, ஆனால் அதன் அழிவின் அடிப்படையில் மட்டுமே அதை அடையப்பட வேண்டும். முதலாம் உலகப் போருக்கு முன்னதாக ரோசா லக்சம்பேர்க் பின்வருமாறு வலியுறுத்தியதைப் போல, “ஏகாதிபத்தியம், போர், நாடுகளைச் சூறையாடுதல், மக்கள் மீது பேரம் பேசுதல், சட்டத்தை மீறுதல் மற்றும் வன்முறைக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம், உலகளாவிய இனப்படுகொலைக்கு எதிராக சமூகப் புரட்சியை அமைப்பதன் மூலம் மட்டுமே போராட முடியும் என்ற முடிவுக்கு தொழிலாள வர்க்கம் வர வேண்டும்.”

Loading