முன்னோக்கு

சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அக்டோபர் 24, செவ்வாய் அன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் பின்வரும் விரிவுரையை வழங்கினார்.

“லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற தலைப்பில் இன்றிரவு விரிவுரை நடைபெறுகிறது. லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பு அணி 1923 அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் தொடர்ச்சியான நிகழ்வுகளின் ஒரு பகுதி இதுவாகும். ஸ்ராலினிச ஆட்சியின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் அரசின் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராகவும், 1917 அக்டோபர் புரட்சியை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளை காட்டிக்கொடுப்பதற்கு எதிராகவும் லியோன் ட்ரொட்ஸ்கியால் வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது.

இது மிகவும் பின்விளைவாக தொடர்கின்ற போராட்டம் என்று நான் சொல்லும்போது, இதை நான் இப்படிச் சொல்கிறேன். அந்தப் போராட்டத்தின் முடிவு வேறுவிதமாக இருந்திருந்தால், அது ட்ரொட்ஸ்கிச பிரிவின் வெற்றியுடனும் ஸ்ராலினிசத்தின் தோல்வியுடனும் முடிவடைந்திருந்தால், 20 ஆம் நூற்றாண்டு உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியை உறுதி செய்த நூற்றாண்டாக இருந்திருக்கும். 1990 களின் பிற்பகுதியில் நான் உரையாற்றிய ஒரு விரிவுரையில், ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடு எதுவும் இல்லை, ரஷ்யப் புரட்சி ஆரம்பத்திலிருந்தே அழிக்கப்பட்டது என்ற கூற்றுக்கு நான் பதிலளித்தேன். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் 60 ஆண்டுகள் பணியாற்றிய புகழ்பெற்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான எரிக் ஹாப்ஸ்பாம் செய்த மதிப்பீடு அதுவாகும். ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீட்டின் சாத்தியத்தை மறுப்பதில் அவர் ஒரு சுயநலமான அரசியல் மற்றும் அறிவுஜீவித ஆர்வத்தைக் கொண்டிருந்தார். இது அவரது சொந்த அரசியலை நியாயப்படுத்துவதற்கான ஒரு வழியாக இருந்தது.

ஆனால், அந்த நிகழ்வு அப்படி இருக்கவில்லை. 1920 களிலும் 1930 களிலும் போராடிய பிரச்சினைகள் கடந்த நூற்றாண்டின் போக்கின் பாதையிலும், அதன் விளைவாக நாம் தற்போது வாழும் சூழ்நிலைகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கியின் தோல்வி, ஸ்ராலினிசத்தின் வெற்றி, ஜேர்மனியில் வர்க்கப் போராட்டத்தின் விளைவுகளில் பேரழிவுகரமான விளைவைக் கொண்டிருந்தது. ஜேர்மனியில் ஸ்ராலினிச கட்சி பின்பற்றிய கொள்கைகள் குறித்து ட்ரொட்ஸ்கி முன்வைத்த விமர்சனங்களான பாசிசத்தின் ஆபத்து பற்றிய அவரது எச்சரிக்கைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிதீவிர-இடது கொள்கைகள் மீதான அவரது விமர்சனங்கள் சரியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ட்ரொட்ஸ்கி ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் இரண்டு வெகுஜனக் கட்சிகளான சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஐக்கிய முன்னணியை ஆதரித்தார். ஹிட்லரின் தோல்வியை விட முக்கியமானது எதுவுமில்லை என்று எழுதிய அவர், தொழிலாள வர்க்கத்தின் தோல்வியும் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதும் கற்பனை செய்ய முடியாத பரிமாணங்களின் உலகளாவிய பேரழிவாக இருக்கும் என்று எச்சரித்தார். அந்த பேரழிவுகளில் ஒன்று ஐரோப்பிய யூத இனத்தை அழிப்பதாகும் என்றும் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

அந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஹிட்லர் பயங்கரமான விளைவுகளுடன் ஆட்சிக்கு வந்தார். இது இன்று நாம் அனுபவிக்கும் அரசியல் சூழலில் தொடர்ந்தும் இயங்குகின்ற நிகழ்வுகளின் தொடராக அமைந்துள்ளது. ஹிட்லரின் வெற்றி இல்லாமல், பாசிசத்தின் வெற்றியின்றி, ஒரு வெகுஜன சியோனிச இயக்கம் இருந்திருக்காது, பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்திருக்க மாட்டார்கள். நாம் இப்போது வெறுமனே காணும் அதிகரித்து வரும் நெருக்கடியின் முக்கிய காரணிகளில் ஒன்று இருந்திருக்காது.

ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி, ஐரோப்பாவில் மிகவும் முன்னேறிய தொழில்மயமான நாட்டில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவது, சந்தேகத்திற்கிடமின்றி உலகெங்கிலும் சோசலிசத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்திருக்கும்.

இந்த விரிவுரையின் ஆரம்பத் திட்டமானது இடது எதிர்ப்பு அணியை ஸ்தாபிக்க வழிவகுத்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகளை மீளாய்வு செய்வதும், தற்போதைய உலக நிலைமையைப் புரிந்துகொள்வதற்கும் சமகால உலகில் ஒரு புரட்சிகர சோசலிச மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இந்த வரலாற்றின் படிப்பினைகளை உள்வாங்குவது ஏன் முக்கியமானது என்பதை விளக்குவதாகும்.

ஆனால், நீங்கள் அனைவரும் இதைப் பாராட்டலாம் என்று நான் நினைக்கிறேன், விரிவடையும் நிகழ்வுகளுக்கு இன்றிரவின் விளக்கவுரையின் கட்டமைப்பை ஓரளவு மாற்றம் செய்ய வேண்டும். நான் நிலைமையைப் பற்றிய ஒரு விவாதத்துடன் தொடங்கி, ஸ்ராலினிசத்திற்கு எதிராக இடது எதிர்ப்பு அணி நடத்திய போராட்டத்தின் மையமாக இருந்த மார்க்சிச தத்துவம், அரசியல் முன்னோக்கு மற்றும் சோசலிச வேலைத்திட்டம் ஆகியவற்றின் முக்கியமான பிரச்சினைகளுடன் அதன் தொடர்பை நிரூபிக்க அங்கிருந்து தொடர்வேன்.

டேவிட் நோர்த் அக்டோபர் 24, 2023 அன்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய சர்வதேச நெருக்கடியை நாம் இப்போது காண்கிறோம். உக்ரேன் மற்றும் காஸாவில் இரண்டு போர்கள் நடந்து வருகின்றன. உண்மையில், இவைகள் இரண்டும் வேகமாக உக்கிரமடைந்து வரும் மூன்றாம் உலகப் போரின் போர்முனைகள் என்று கூறுவது மிகவும் சரியானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தால் நிறுத்தப்படாவிட்டால், அதன் அளவும் கொடூரமும், முதலாம் உலகப் போர் (1914-1918) மற்றும் இரண்டாம் உலகப் போர் (1939-1945) ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும். நாம் இங்கு கூடியிருக்கும் போதே, அமெரிக்கா மத்திய தரைக்கடலில் இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களால் வழிநடத்தப்படும் ஒரு பாரிய இராணுவத் தாக்குதல் படையை அணிதிரட்டி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்தால் தலையிடுவோம் என்று பைடென் நிர்வாகம் அச்சுறுத்துகிறது. இது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போருக்கு வழிவகுக்கும்.

ஜனாதிபதி பைடென், கடந்த வாரம் இஸ்ரேலில் இருந்து திரும்பியதும் ஆற்றிய உரையில், உக்ரேன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களை வெளிப்படையாக தொடர்புபடுத்தினார். 2023 க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 1 டிரில்லியன் டாலர்களுக்கு மேல், கூடுதலாக 105 பில்லியன் டாலர்கள் இராணுவ செலவினங்களைக் கோரிய அவர், இரண்டு போர்களும் அமெரிக்காவின் “தேசிய பாதுகாப்பிற்கு” இன்றியமையாதவை என்று வலியுறுத்தினார், இதன் மூலம் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள புவிசார்-அரசியல் நலன்களைக் குறிக்கிறார்.

அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணிகளும் அதன் உக்ரேனிய பினாமிகளைப் பயன்படுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக ஒரு ஏகாதிபத்திய போரை தூண்டிவிட்டு நடத்தி வருகின்றனர், அதன் நோக்கமானது ஆட்சி மாற்றம், நாட்டை உடைப்பது, அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் நேட்டோ சக்திகளிடையே அதன் துண்டுகளை மறுபங்கீடு செய்வது மற்றும் அதன் பரந்த வளங்களை சூறையாடுவதாகும்.

ஈரானுடன் நெருங்கி வரும் மோதல் தெளிவாக்குவது போல், காஸாவில் சிறைபடுத்தப்பட்டுள்ள மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் உலகளாவிய போரின் விரிவாக்கமாகும். இனப்படுகொலை பரிமாணங்களை எடுத்துள்ள காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதல், சியோனிச ஆட்சிக்கு எதிரான பாலஸ்தீன எதிர்ப்பு போராட்டத்தை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவமும் அழித்தொழிப்புக்கான மொழி மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதால், இந்தப் போரை பாலஸ்தீனிய பிரச்சினைக்கான சியோனிச ஆட்சியின் “இறுதித் தீர்வு” (“Final Solution”) என்று விவரிப்பது முற்றிலும் பொருத்தமானது.

இந்த அழித்தொழிப்புப் போரை அனைத்து முக்கிய ஏகாதிபத்திய அரசாங்கங்களும் ஆதரிக்கின்றன. காஸா மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதற்கு மத்தியில், ஏகாதிபத்திய தலைவர்கள் இஸ்ரேலுடன் தங்கள் ஒற்றுமையை பிரகடனம் செய்கின்றனர். இது ஒரு கட்டாய அரசியல் சடங்காக மாறியுள்ள நிலையில், ஜனாதிபதி பைடன், பிரிட்டிஷ் பிரதம மந்திரி சுனாக் மற்றும் ஜேர்மன் அதிபர் ஷோல்ஸ் ஆகியோர் இஸ்ரேலுக்கு தங்கள் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று அதிகாலை அங்கு வந்து சேர்ந்துள்ளார்.

இந்தத் தலைவர்கள் யூத மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்துவதோடு, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக நாஜி கூட்டு இனப்படுகொலையை (Holocaust) பயன்படுத்துகின்றனர். இத்தகைய அறிவிப்புகளிலுள்ள வஞ்சகம் மற்றும் பாசாங்குத்தனத்தின் அளவு அளவிட முடியாததாகும். இவர்கள் அனைவரும் 1939 மற்றும் 1945 க்கு இடையில் யூதர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் பாரிய வெகுஜன படுகொலைகளை ஒழுங்கமைத்த, ஒத்துழைத்த அல்லது புறக்கணித்த அரசாங்கங்களின் அரசியல் வாரிசுகள் ஆவார்கள். ஜேர்மனிய ஆளும் வர்க்கம் யூதர்களை அழித்தொழித்தது, அதிகாரத்தையும் அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அடால்ஃப் ஹிட்லரிடம் ஒப்படைத்த ஆண்டுகளில், முதலாளித்துவ சமூகத்தின் அழுகிய சிதைவின் ஒரு பயங்கரமான மைல்கல்லை அது குறித்தது: அதாவது மில்லியன் கணக்கான மனிதர்களை ஒன்றுகுவித்து, நாடு கடத்தி அழைத்துச் சென்று மற்றும் கொன்றழிக்கும் செயல்முறைக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைப்பைப் பயன்படுத்தியது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம் இந்த நிகழ்முறைக்கு நாஜி ஆட்சியுடன் ஒத்துழைத்தது. பிரான்சின் யூதக் குடிமக்களில் சுமார் 25 சதவீதம் பேர் நாஜிக்களால் அழித்தொழிக்கப்பட நாஜிக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆஷ்விட்ஸ் அழித்தொழிப்பு முகாமுக்கு வரும் ஹங்கேரிய யூதர்கள் [Photo: Anonymous Auschwitz photographer]

பெரிய பிரித்தானியா நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை, அதன் ஒப்பீட்டளவில் சிறிய யூத மக்கள் அழிவின் கொடூரங்களிலிருந்து தப்பித்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தில் பரவலாக இருந்த யூத எதிர்ப்பு, நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவிலிருந்து வந்த யூத அகதிகளை கொடூரமாக நடத்தியதில் வெளிப்பட்டது.

பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற 20,000 க்கும் மேற்பட்ட ஜேர்மானிய யூதர்கள் “எதிரி வேற்றுகிரகவாசிகள்” (“enemy aliens”) என வகைப்படுத்தப்பட்டு, ஐரிஷ் கடலிலுள்ள மேன் தீவில் (Isle of Man) அமைந்துள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். ஹட்சின்சன் கேம்ப் (Hutchinson Camp) என்று அழைக்கப்படும் இந்த இடைத்தங்கல் தடுப்புத் தளங்களில் ஒன்று 1,200 அகதிகளை சிறையில் அடைத்தது, அவர்களில் முன்னணி கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளும் உள்ளடங்கியிருந்தனர். நாஜிசத்திலிருந்து யூத அகதிகளை பாரியளவில் தடுத்துவைக்கும் பிரிட்டிஷ் கொள்கை பற்றிய விரிவான விவரிப்பு பத்திரிகையாளர் சைமன் பார்கின் (Simon Parkin) எழுதிய அசாதாரண கைதிகளின் தீவு (The Island of Extraordinary Captives) என்ற புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் ஒருபோதும் யூத அகதிகளை தவறாக நடத்தியதற்காக மன்னிப்புக் கோரவுமில்லை, ஒப்புக் கொண்டதுமில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, யூதர்களின் தலைவிதிக்கு ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் அலட்சியம் மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும். அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், காப்பாற்றப்பட்டிருக்கக்கூடிய நூறாயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் நாஜி எரிவாயு அறைகளில் கொல்லப்பட்டனர். 1939 ஆம் ஆண்டில், எம்.எஸ். செயின்ட் லூயிஸ் கப்பலில் இருந்து 900 யூத அகதிகளை இறங்க அமெரிக்கா மறுத்தது. அதனால் அவர்கள் ஐரோப்பாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் வந்த நூற்றுக்கணக்கான அகதிகள் பின்னர் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். நாஜி ஜேர்மனி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான யூதர்களை விஷவாயுவால் தாக்கிக் கொன்று வருகிறது என்பது நன்கு அறியப்பட்ட பிறகும், யூதர்களை நிர்மூல அழித்தொழிப்பு முகாம்களுக்கு கொண்டு செல்வதை சீர்குலைக்க எடுக்கப்பட்டிருக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், அதாவது ஆஷ்விட்ஸுக்குச் செல்லும் இரயில் பாதைகள் மீது குண்டுவீச்சு நடத்துவது போன்றவைகள் விரைவாகவும் தயக்கமின்றியும் நிராகரிக்கப்பட்டன.

இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்க வழிவகுத்த ஹிட்லர்-நாஜி இனப்படுகொலையிலிருந்து யூதர்களைக் காப்பாற்றத் தவறியதற்காக அது தாமதமாக வருத்தப்பட்டதா? ஜனாதிபதி ஹரி ட்ரூமனின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா, 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அதை அங்கீகரித்த முதல் நாடு என்று பைடென் கடந்த வாரம் பெருமையடித்துக் கொண்டார். ஆனால் ட்ரூமனின் முடிவு யூத மக்கள் மீதான தனிப்பட்ட அனுதாபத்தால் உந்துதல் பெறவில்லை.

அவரது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட யூத விரோத மதவெறி இருந்தபோதிலும், ட்ரூமனின் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறந்த நலன்களுக்கு உகந்தது என்று அவர் கருதுவதன் மூலம் தீர்மானிக்கப்பட்டது: முதலாவதாக, மத்திய கிழக்கில் பிரதான ஏகாதிபத்திய சக்தியாக பிரிட்டன் இருப்பதை இடம்பெயர்ப்பது, இறுதியில், இஸ்ரேலை வாஷிங்டனின் முக்கிய பிராந்திய தாக்குதல் நாயாக பயன்படுத்துவது ஆகியவையாகும். கிட்டத்தட்ட அதன் 75 ஆண்டுகால வரலாற்றில் அது ஆற்றிய பங்கு இதுதான். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பைடென் ஆற்றிய உரையில் குறிப்பிடத்தகுந்த உறுதியுடன் மீண்டும் வலியுறுத்தினார்: “இஸ்ரேல் இல்லையென்றால், நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன்.” அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு வாடிக்கையாளர் அரசு என்ற முறையில், இஸ்ரேலின் சேவைகள் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்யும் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானவையாகும்.

இஸ்ரேலுக்கான சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதரவானது உக்ரேனிலுள்ள ஆட்சியுடன் ஏகாதிபத்திய சக்திகளின் வெளிப்படையான கூட்டணியுடன் தொடர்கிறது என்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது, அதன் முக்கிய தேசிய நாயகன் ஸ்டீபன் பண்டேரா ஒரு வக்கிரமான பாசிசவாதியாகவும் யூத எதிர்ப்பாளராகவும் இருந்தார். உக்ரேனிய யூதர்களை அழித்தொழிப்பதில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த உக்ரேனிய தேசியவாத அமைப்பின் (OUN) தலைவரும் ஆவார்.

பெனிட்டோ முசோலினியுடன் தனது அரசியல் வம்சாவளியைக் கண்டுபிடிக்கும் இத்தாலியின் பாசிச பிரதம மந்திரி ஜோர்ஜியா மெலோனியும் இஸ்ரேலுக்குச் சென்று, நெதன்யாகுவுடன் சேர்ந்து நின்று சியோனிச ஆட்சிக்கு தனது ஒற்றுமையை அறிவித்தார்.

கடந்த மாதம், கனேடிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஜேர்மன் தூதரும் எழுந்து நின்று மரியாதை வணக்கம் செலுத்தி, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரில் நாஜிக்களின் கூட்டாளியாக வாஃபென் எஸ்.எஸ். (Waffen SS) இல் பணியாற்றிய உக்ரேனிய பாசிசவாதியான யாரோஸ்லாவ் ஹங்காவைப் பாராட்டினர்.

வாஃபென்-எஸ்.எஸ். இன் முன்னாள் உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹுங்காவை கனடாவின் நாடாளுமன்றம் மரியாதை செலுத்தியது. கனடாவின் பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் வெய்ன் ஐர் இடதுபுறத்தில் உள்ளார்.

உக்ரேனிய பாசிசவாதிகளுடன் ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான ஒத்துழைப்பானது, குறிப்பாக ஜேர்மனியில், நாஜி ஆட்சியின் குற்றங்களை ஒப்பீடு செய்வதற்கும் நியாயப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, பாலஸ்தீனிய ஜனநாயக உரிமைகள் மீதான இஸ்ரேலின் மிருகத்தனமான மீறலை அம்பலப்படுத்தவோ, கண்டிக்கவோ அல்லது கேள்வி எழுப்பவோ செய்யும் அனைவருக்கும் எதிராக “யூத எதிர்ப்பு” என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதில் இருந்து அமெரிக்காவையும் அதன் நேட்டோ நட்பு நாடுகளையும், நிச்சயமாக சியோனிச ஆட்சியையும் தடுக்கவில்லை.

புகழ்பெற்ற இசைக்கலைஞரான ரோஜர் வாட்டர்ஸ் சமீபத்திய உலக சுற்றுப்பயணத்தின் போது, அவர் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளானார் மற்றும் பாலஸ்தீனிய மக்களைப் பாதுகாக்கும் தைரியம் அவருக்கு இருந்ததால் யூத எதிர்ப்பாளர் என்று குற்றம் சாட்டப்பட்டார். ரோஜர் வாட்டர்ஸின் படைப்புகளை அறிந்த ஒவ்வொருவரும் அவர் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியிலுள்ள மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவர் என்பதையும், இஸ்ரேலிய ஆட்சியின் கொள்கைகளை அவர் எதிர்ப்பதற்கும் யூத எதிர்ப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் நன்கு அறிவார்கள்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வியன்னாவில் மயோர் கார்ல் லூகரின் (Mayor Karl Lueger) கீழ் ஒரு சக்திவாய்ந்த பிற்போக்கு இயக்கமாக உருவெடுத்ததிலிருந்து, யூத எதிர்ப்பு (antisemitism) என்பது வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச இயக்கத்திற்கு எதிரான, அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டத்தின் ஆயுதமாக புரிந்து கொள்ளப்பட்டது. யூதர்கள் மீதான யூத எதிர்ப்பு வெறுப்பு மற்றும் சோசலிசம் மற்றும் தொழிலாளர் இயக்கம் மீதான அவரது வெறுப்பு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நயவஞ்சகமான தொடர்பு அடால்ஃப் ஹிட்லரின் உலக கண்ணோட்டத்திலும் அரசியலிலும் அதன் மிக மோசமான வெளிப்பாட்டைக் கண்டது. ஹிட்லரின் எனது போராட்டம் (மெய்ன் காம்ஃபை - Mein Kampf) என்ற புத்தகத்தை கவனமாக படித்ததன் அடிப்படையில், ஹிட்லரின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பத்திரிகையாளர் கொன்ராட் ஹைடன் (Konrad Heiden), நாஜி தலைவரின் வன்முறையான யூத எதிர்ப்பின் ஆதாரம் யூதர்களை தொழிலாள வர்க்கத்துடனும் சோசலிசத்துடனும் அடையாளம் காண்பதுதான் என்று விளக்கினார். ஹெய்டன் பின்வருமாறு எழுதினார்:

பெரிய ஒளி அவர் மீது விழுந்தது; திடீரென்று “யூதர்களின் கேள்வி” தெளிவாகியது... தொழிலாளர் இயக்கம் யூதர்களை வழிநடத்தியதால் அவருக்கு வெறுப்பு ஏற்படுத்தவில்லை; யூதர்கள் தொழிலாளர் இயக்கத்தை வழிநடத்தியதால் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. ... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: அடால்ஃப் ஹிட்லரின் யூத-எதிர்ப்புவாதத்தைத் தூண்டிவிட்டவர் முதலாளியான ரோத்ஸ்சைல்டு அல்ல, ஆனால் சோசலிஸ்ட் கார்ல் மார்க்ஸ் ஆவார்.

தொழிலாளர் இயக்கத்தைக் குறித்து என்ன அம்சங்கள் ஹிட்லரின் வெறுப்பைத் தூண்டியது? எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து மக்களிற்கும் சமத்துவத்திற்கான வேண்டுகோள்களை அவர் வெறுத்தார். ஹெய்டன் கீழ்வருமாறு எழுதியது போல:

தொழிலாளர் இயக்கத்தின் மீது ஹிட்லரின் மிகவும் தனித்துவமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஆஸ்திரியாவில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எஜமானர் இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அனைவருக்கும் சம உரிமைகளுக்காக அது போராடியதாகும்.

ஆனால் இப்போது, ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக, யூத எதிர்ப்பு முற்றிலும் புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது. ஜனநாயக உரிமைகள், மனித சமத்துவம் மற்றும் நிச்சயமாக, சோசலிசத்திற்காகப் போராடுபவர்களைக் கண்டிக்கவும் இழிவுபடுத்தவும் இது ஒரு சத்திய வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை சட்டப்பூர்வமாக்குவதில் இப்போது முக்கிய பங்கு வகிக்கும் பிரச்சாரத்தின் மற்றொரு கூறு உள்ளது. அக்டோபர் 7 அன்று ஹமாஸால் வழிநடத்தப்பட்டு, சுமார் 1,500 இஸ்ரேலியர்களின் இறப்புக்கு வழிவகுத்த காஸா வெடிப்பானது, ஒரு கொடூரமான குற்றவியல் செயலைத் தவிர வேறொன்றுமில்லை என்று சித்தரிக்கப்படுகிறது. இது பைடென் பல சந்தர்ப்பங்களில் “தூய கலப்படமற்ற அக்கிரமம்” என்று விவரித்ததன் வெளிப்பாடாகும்.

பல அப்பாவி மக்கள் உயிரிழந்தது ஒரு துயரகரமான சம்பவமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய நிகழ்வை தவிர்க்க முடியாததாக ஆக்கிய புறநிலை வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிலைமைகளில் இந்தத் துன்பியல் சம்பவம் வேரூன்றியுள்ளது. எப்போதும் போலவே, ஆளும் வர்க்கங்கள் பாலஸ்தீன எழுச்சிக்கான காரணங்கள் குறித்த அனைத்து குறிப்புகளையும் எதிர்க்கின்றன. அவர்களின் சொந்த படுகொலைகளும், அவர்கள் ஈவிரக்கமின்றி தலைமை தாங்கும் ஒட்டுமொத்த இரத்தக்களரி ஒடுக்குமுறை அமைப்புமுறையும் குறிப்பிடப்படாமல் செல்ல வேண்டும்.

பல தசாப்தங்களாக நடந்த சியோனிச ஆட்சியின் அடக்குமுறைகள் ஒரு உக்கிரமான கோப வெடிப்புக்கு வழிவகுத்தது என்று எவரும் ஏன் ஆச்சரியப்பட வேண்டும் ? இது கடந்த காலத்தில் நடந்திருந்தது, மனிதர்கள் ஒடுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் வரை, அது எதிர்காலத்திலும் நடக்கும். அடக்குமுறையை அனுபவிப்பவர்கள், ஒரு விரக்தியான கிளர்ச்சியின் போது, தங்கள் சொந்த வாழ்க்கை சமநிலையில் ஆபத்தான நிலைக்கு விடப்படும்போது, தங்களைத் துன்புறுத்துபவர்களை மென்மையான மரியாதையுடன் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கிளர்ச்சிகள் பெரும்பாலும் கொடூரமான மற்றும் இரத்தம் தோய்ந்த பழிவாங்கும் செயல்களால் குறிக்கப்படுகின்றன.

பல உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன: இந்தியாவில் சிப்பாய் கலகம், குடியேற்றக்காரர்களுக்கு எதிராக டகோட்டா செவ் இந்தியர்களின் கிளர்ச்சி, சீனாவில் பாக்ஸர்களின் கிளர்ச்சி, தென்மேற்கு ஆபிரிக்காவில் ஹெரோரோஸ்களின் (Hereros) கிளர்ச்சி மற்றும் சமீபத்திய காலங்களில், கென்யாவில் மாவ் மாவ் எழுச்சி ஆகியவைகளாகும். இந்த நிகழ்வுகள் அனைத்திலும், கிளர்ச்சியாளர்கள் இதயமற்ற கொலைகாரர்கள் மற்றும் அரக்கர்கள் என்று கண்டனம் செய்யப்பட்டு, கொடூரமான பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்களாக அவர்கள் கௌரவிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தசாப்தங்கள் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

1901 ஆம் ஆண்டில் தியான்ஜின் அருகே அமெரிக்காவின் 6 வது குதிரைப்படையால் கைப்பற்றப்பட்ட “போக்ஸர்கள்”. அவர்கள் வெறும் பார்வையாளர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். [Photo by ralph repo / CC BY 2.0]

700,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் காரணங்களை விளக்கும்போது, லிங்கன் 250 ஆண்டுகால அடிமைத்தனத்தின் விளைவாக ஏற்பட்ட துன்பவியலைப் பற்றி பேசினார், மேலும் மத்தேயுவின் வார்த்தைகளை இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “குற்றங்கள் நிமித்தம் உலகத்திற்கு ஐயோ கேடு, ஏனெனில் குற்றங்கள் வந்தே தீரும், ஆனால் யாரால் குற்றங்கள் நடக்கிறதோ அதற்கு காரணமாய் இருப்பவருக்கு ஐயோ கேடு.” பாலஸ்தீனியர்கள் மற்றும் காஸா மக்களைப் பொறுத்தவரை, குற்றம் சியோனிச அரசு மற்றும் அதன் ஏகாதிபத்திய புரவலர்களிடமிருந்து வந்துள்ளது.

பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச படுகொலைகளின் நீண்ட வரலாறு இல்லாமல் இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டிருக்க முடியாது, அது ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர்கள் போன்று கண்டிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் தங்கள் எல்லையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சமீபத்திய நிகழ்வுகள் கூட ஊடக விவரிப்புகளிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன.

இன்றுதான், பைடன் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, அமெரிக்கா போர் நிறுத்தத்தை எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார். பல பொதுமக்கள் இறப்பார்கள் என்பதை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அது அப்படித்தான் நடக்கும் என்று கூறினார். அவ்வாறு செய்ததன் மூலம், ஹமாஸைக் கண்டித்ததன் முழு அடிப்படையையும் அவரே குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். “ஆமாம், ஒரு இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் இறக்கிறார்கள், ஆனால் அந்த குடிமக்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டால் பரவாயில்லை. பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு மத்தியில் பொதுமக்கள் இறந்தால் அது தூய கலப்படமற்ற அக்கிரமத்திற்கு” ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

அக்டோபர் 7 வன்முறைக்கு ஹமாஸை ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று எங்களிடம் கேட்கப்பட்டது. ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைக் கண்டிக்கும் அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் அவ்வப்போது மேற்கொள்ளும் வன்முறைக்கும் ஒடுக்குமுறையாளரின் மிகப் பெரிய, இடைவிடாத மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கும் இடையே ஒரு சமமான அடையாளத்தை ஈர்க்கும் பிற்போக்குத்தன சிடுமூஞ்சித்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தில் நாம் பங்கேற்க மாட்டோம் அல்லது எந்த சட்டபூர்வமான தன்மையையும் வழங்க மாட்டோம் என்பதே எனது பதிலாகும்.

இஸ்ரேல் நாட்டை நிறுவியவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக குண்டுத்தாக்குதல்களை ஏற்பாடு செய்வதிலும் கொலைகளை நடத்துவதிலும் எந்த தயக்கமும் இல்லாத பயங்கரவாதிகளையும் உள்ளடக்கியிருந்தனர் என்ற உண்மை இந்த பாசாங்குத்தனத்தை மேலும் அதிகரிக்கிறது.

1960 ஆம் ஆண்டில் இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட எக்ஸோடஸ் (Exodus) திரைப்படத்தில், முக்கிய நபர்களில் ஒருவர், மற்றும் விசித்திரமான முறையில், மிகவும் நேர்மையானவர்களில் ஒருவர், சியோனிஸ்டுகளின் பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருக்கிறார். பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை அவர் மிக அப்பட்டமாக விளக்குகிறார் மற்றும் நியாயப்படுத்துகிறார். அந்த மனிதர் ஒருவேளை தவறாக வழிநடத்தப்பட்டவராகவும், ஆனால் இன்னும் கதாநாயக நபராகவும் படத்தில் சித்தரிக்கப்படுகிறார்.  ஸ்டெர்ன் கேங் என்றும் அழைக்கப்படும் லேஹி என்ற பிரபலமான சியோனிச பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒரு உண்மையான வரலாற்று நபரை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கதாபாத்திரமாகும். இந்த அமைப்பு அவ்ரஹாம் ஸ்டெர்ன் என்பவரால் நிறுவப்பட்டது, அவர் அவர்களின் குறிக்கோள்கள் குறித்து இவ்வாறு எழுதினார்:

வலிமை எப்போதும் தேசங்களின் தலைவிதியை உருவாக்குகிறது ... இஸ்ரேல் நிலத்தின் தலைவிதி எப்போதுமே வாளால் தீர்மானிக்கப்பட்டது, இராஜதந்திரத்தால் அல்ல. உலகில் உள்ள ஒரே நீதி வலிமை, உலகின் மிகப் பெரிய சொத்து சுதந்திரம். வாழ்வதற்கான உரிமை வலிமையானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, அதிகாரம், சட்டரீதியாக வழங்கப்படாவிட்டால், சட்டவிரோதமாக எடுக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்ன் கேங் (Stern Gang- ஒரு யூத பயங்கரவாதக் குழுவாகும்) இன் செயற்பாட்டுத் தலைவர் யிட்சாக் ஷமீர் ஆவார், அவர் 1948 இல் இஸ்ரேலிய அரசின் பிரகடனத்தைத் தொடர்ந்து போருக்கு ஒரு தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தரான கவுண்ட் ஃபோல்க் பெர்னடோட்டை (Count Folke Bernadotte) படுகொலை செய்ய உத்தரவிட்டார். ஐ.நா. மத்தியஸ்தரைக் கொன்றதற்காக ஷமீருக்கு என்ன தண்டனை கிடைத்தது? இஸ்ரேலிய சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், அவர் அரசின் இரகசிய உளவுத்துறையான மொசாட்டில் ஒரு உயர் மட்ட பதவியை வகித்தார். 1983 ஆம் ஆண்டில், ஷமீர் இஸ்ரேலின் பிரதமரானார். இவரது முதல் பதவிக்காலம் 1984ல் முடிவடைந்தது. ஆனால் 1986-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 1992-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில் தனது 96 வது வயதில் அவர் இறந்தார், இஸ்ரேலிய அரசின் அனைத்து தலைவர்களும் அந்த இரக்கமற்ற பயங்கரவாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஹமாஸ் மீதான நமது விமர்சனங்கள் அரசியல் ரீதியானவையே தவிர பாசாங்குத்தனமான தார்மீகத் தன்மை கொண்டவை அல்ல. இது ஒரு முதலாளித்துவ தேசிய இயக்கமாகும், அக்டோபர் 7 அன்று மேற்கொள்ளப்பட்டது போன்ற ஒரு இராணுவ நடவடிக்கை உட்பட, அது கையாளும் முறைகள், சியோனிச ஆட்சியை தோற்கடிப்பதற்கும் பாலஸ்தீனிய மக்களின் விடுதலைக்கும் வழிவகுக்க முடியாது. அனைத்திற்கும் மேலாக, மத்திய கிழக்கில் ஏதாவது ஒரு முதலாளித்துவ ஆட்சியின் ஆதரவில் ஹமாஸ் தங்கியிருக்கும் அளவிற்கு, சியோனிச அரசுக்கு எதிரான அதன் போராட்டம் எப்போதும் பிராந்தியத்தின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கும், மற்றும் ஆகவே, இஸ்ரேலிய ஆட்சி மற்றும் உலக ஏகாதிபத்தியத்துடனான அவர்களின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளுக்கும் அடிபணியும்.

இறுதிப் பகுப்பாய்வில், சியோனிச ஆட்சிக்கு எதிராக மட்டுமல்ல, துரோக அரபு மற்றும் ஈரானிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராகவும், அரபு மற்றும் யூதர்கள் இரண்டையும் உள்ளடக்கிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே பாலஸ்தீனிய மக்களின் விடுதலையை அடைய முடியும். இந்த ஐக்கியப்பட்ட போராட்டமானது மத்திய கிழக்கு முழுவதிலும், உண்மையில் உலகம் முழுவதிலும் பரவியதாக சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தால் பதிலீடு செய்வதற்கு இட்டுச் செல்ல வேண்டும்.

அக்டோபர் 20, 2023 அன்று ஏமன் தலைநகர் சனாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் செய்கின்றனர் [Photo: QudsNewsNetwork]

இது மிகப் பெரிய பணியாக இருக்கிறது. ஆனால் உலக வரலாற்றின் தற்போதைய கட்டமானது, உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடி மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியல் பற்றிய சரியான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரே முன்னோக்கு இது மட்டுமேயாகும். காஸாவிலும் உக்ரேனிலும் நடக்கும் போர்கள் ஒரு வரலாற்று சகாப்தத்தில் தேசிய வேலைத்திட்டங்களின் பேரழிவுகரமான பாத்திரம் மற்றும் விளைவுகளின் துன்பவியலான எடுத்துக்காட்டுகளாகும், அதன் இன்றியமையாத மற்றும் வரையறுக்கும் பண்புகளாக இருப்பது உலகப் பொருளாதாரத்தின் முதன்மைத்தன்மையும், முதலாளித்துவத்தின் உற்பத்தி சக்திகளின் உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட தன்மையுமாகும், எனவே தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை ஒரு சர்வதேச மூலோபாயத்தின் மீது அடித்தளமிட வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த முன்னோக்கு இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கும் குறைந்த செல்லுபடியாகும் தன்மை கொண்டதில்லை. தற்போதைய சூழ்நிலையில், பாலஸ்தீன எதிர்ப்பு போராட்டத்தை நசுக்குவதற்கு சியோனிச அரசின் இராணுவ சக்தி பயன்படுத்தப்படும் போது, மற்றும் சரியாகவே, இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

ஆனால், சியோனிச அரசு நிறுவப்பட்டது பாலஸ்தீனியர்களுக்கு ஒரு துன்பவியல் மட்டுமல்ல ஆனால் இது யூத மக்களுக்கும் ஒரு துன்பவியலாகும் என்ற உண்மையைப் புறக்கணிப்பது ஒரு அரசியல் தவறாகும். யூத மக்கள் மீதான வரலாற்று ஒடுக்குமுறைக்கும் துன்புறுத்தலுக்கும் சியோனிசம் ஒருபோதும் தீர்வாக இருந்ததில்லை, இன்றும் இல்லை. அதன் தோற்றத்திலிருந்து, சியோனிச திட்டம் ஒரு பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் ஒரு வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அது யூத எதிர்ப்பின் மூலாதாரத்தைப் பற்றிய ஒரு தவறான பகுப்பாய்வை முன்வைத்தது— அது ஒரு நிரந்தரமான மற்றும் வரலாற்றுக்கு மேலான தன்மையைக் கொண்டிருந்தது என்ற பகுப்பாய்வு— எனவே, நவீன அரசியல் யூத எதிர்ப்பின் ஆதாரமாக இருந்த முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறவுகளை தூக்கியெறிவதை அது ஒருபோதும் முயற்சிக்கவில்லை- உண்மையில் எதிர்த்ததுமில்லை..

நவீன சியோனிசத்தை நிறுவிய தியோடர் ஹெர்சில் (Theodore Herzl) தொடங்கி, யூத அரசு என்ற கருத்தாக்கம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வெகுஜன யூத தொழிலாளர்கள் மத்தியில் சீராக வலுப்பெற்று வந்த சோசலிச வேலைத்திட்டத்திற்கு எதிராக இயக்கப்பட்டது. யூதர்களின் விடுதலைக்கான பாதையாக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை எதிர்த்த சியோனிசம், ஒன்று அல்லது மற்றொரு பிற்போக்கு சக்தியுடனான ஒரு கூட்டணியில் தனது எதிர்காலத்தை பணயம் வைத்தது. 1944ல் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் மாநாட்டிற்கு அனுப்பிய ஒரு பகிரங்கக் கடிதத்தில், பாலஸ்தீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பின்வருமாறு விளக்கினர்:

அதன் முழு வரலாற்றிலும் சியோனிசம் எப்போதும் உலகின் பிற்போக்குத்தனமான சக்திகளை ஆதரித்துள்ளது. சியோனிசத்தின் நிறுவனர் டாக்டர் ஹெர்சில், சியோனிச இயக்கம் யூத சோசலிஸ்டுகளுக்கு எதிராக ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விளைவை ஏற்படுத்துவதற்காக ஜாரிச மந்திரி பிளெஹேவுடன் (கிஷினேவின் யூதர்களுக்கு எதிரான படுகொலையின் ஒழுங்கமைப்பாளர்) ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார், அதற்கு ஈடாக பிளெஹேவ் பாலஸ்தீனத்தில் சியோனிசத்திற்கான சாசனத்தைப் பெற [துருக்கிய] சுல்தானுடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்துவார்.

நவீன அரசியல் சியோனிசத்தின் தந்தை தியோடர் ஹெர்சில் [Photo: Carl Pietzner]

20 ஆம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில், இஸ்ரேல் அரசு நிறுவப்படுவதற்கு முன்பு, சியோனிச தலைவர்களின் மூலோபாயம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனான ஒரு கூட்டணியை மையமாகக் கொண்டிருந்தது. பாலஸ்தீனத்தில் ஒரு யூத தாயகத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த வெளியுறவு அமைச்சர் பால்ஃபோரின் 1917 பிரகடனம், சியோனிஸ்டுகளால் தங்கள் திட்டத்தின் சட்டபூர்வத்தன்மையின் அதி உயர்ந்த மற்றும் மீளமுடியாத வெளிப்பாடாக முழங்கப்பட்டது. நிச்சயமாக, இது பாலஸ்தீனியர்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை, இந்த விடயத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை.

அரபு அல்லாத யூத அரசை ஸ்தாபிப்பது, ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்யும் அளவிற்கு மட்டுமே தங்கள் திட்டம் சாத்தியமானது என்பதை நன்கு புரிந்து கொண்ட சியோனிஸ்டுகளுக்கு இது கவலையளிக்கவில்லை. இதை சியோனிச இயக்கத்தின் பாசிசப் பிரிவின் தலைவரும் எதிர்கால இஸ்ரேலிய பிரதம மந்திரி மெனாஷெம் பெகினின் வழிகாட்டியுமான விளாடிமிர் ஜபோடின்ஸ்கி குறிப்பிடத்தகுந்த தெளிவுடன் கூறினார். ஜபோடின்ஸ்கி இவ்வாறு எழுதினார்:

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களின் கண்ணோட்டத்தில் பாலஸ்தீனத்தின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் நன்கு அறியப்பட்ட உண்மைத்தன்மை குறித்து நான் கவனம் செலுத்த வேண்டியதில்லை. அதன் செல்லுபடியாகும் தன்மை ஒரு முக்கிய நிபந்தனையைப் பொறுத்தது என்பதை மட்டுமே நான் சேர்க்க விரும்புகிறேன்: அதாவது பாலஸ்தீனம் ஒரு அரபு நாடாக இருப்பதை கைவிட வேண்டும். மத்திய தரைக்கடலில் உள்ள இங்கிலாந்தின் “கோட்டைகள்” அனைத்தின் குறைபாடுகள் உண்மையில் (சிறிய மால்டாவைத் தவிர) இந்தப் பகுதிகள் அனைத்து மக்கள்தொகையின் தாயகமாகும், அவர்களின் முதன்மை தேசிய இணைப்புகள் வேறு இடங்களில் உள்ளன, அவைகள் மையவிலக்கு போக்குகளுக்கு இயல்பாகவும் நிரந்தரமாகவும் சாய்ந்துள்ளன. இங்கிலாந்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களை ஆட்சி செய்கிறது, மேலும் இது நவீன நிலைமைகளின் கீழ் ஒரு ஆபத்தான பிடிப்பாகும். ... பாலஸ்தீனம் அரபு நாடாக இருந்தால், பாலஸ்தீனம் அரபு நோக்கங்களின் சுற்றுப்பாதையைப் பின்பற்றும்- அதாவது பிரிவினை, அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய செல்வாக்கின் அனைத்து தடயங்களையும் அகற்றுதலாக இருக்கும். ஆனால் பாலஸ்தீனம் யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு யூத நாடாக, அரபு நாடுகளால் சூழப்பட்டு, அதன் சொந்த பாதுகாப்பு நலன்களுக்காக, அரபு அல்லாத மற்றும் முகமதியர் அல்லாத ஒரு சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தின் மீது எப்போதும் சாய்ந்து கொள்ள முயற்சிக்கும். இது இங்கிலாந்துக்கும் யூத (ஆனால் யூதர்கள் மட்டுமே) பாலஸ்தீனத்திற்கும் இடையே ஒரு நிரந்தர கூட்டணிக்கு கிட்டத்தட்ட ஒரு அடிப்படை ஆகும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனான சியோனிச கூட்டணி இரண்டாம் உலகப் போரின் அணுகுமுறை மற்றும் வெடிப்பால் கீழறுக்கப்பட்டது, இது லண்டனிலுள்ள அரசாங்கத்தை மத்திய கிழக்கில் அதன் கொள்கைகளை சரிசெய்ய கட்டாயப்படுத்தியதனால், பாலஸ்தீனத்திற்குள் யூத குடியேற்றத்தை மட்டுப்படுத்தியது. சியோனிச இயக்கத்தின் சில பிரிவுகள் பிரிட்டிஷ் தளங்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தின, இதில் இரண்டு பிரிட்டிஷ் சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்டது மற்றும் கிங் டேவிட் ஹோட்டல் மீது குண்டுவீச்சு ஆகியவையும் அடங்கும். ஆனால் ஏகாதிபத்தியத்துடனான கூட்டணி தொடர்ந்தது. இஸ்ரேல், 1948 இல் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரேபிய தேசியவாதத்தின் எழுச்சி அலைக்கு எதிரான பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போராட்டத்தின் இன்றியமையாத கூட்டாளியாக செயற்பட்டது. 1956 ஆம் ஆண்டில், நாசர் தலைமையிலான தேசியவாத ஆட்சியைத் தூக்கியெறிந்து சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்ட எகிப்து மீதான படையெடுப்பில் இஸ்ரேலானது பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்தது. எவ்வாறெனினும், போரை முடிவுக்குக் கொண்டு வந்து எகிப்திலிருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொள்ளுமாறு பிரிட்டனையும் பிரான்சையும் அமெரிக்கா நிர்பந்தித்த பின்னர், இஸ்ரேல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் உறவுக்கு முன்னுரிமை அளித்தது.

ஒரு யூத இனவெறி அரசைப் பேணுவது, பாலஸ்தீன மக்களை வன்முறையாக ஒடுக்குவது, அதே நேரத்தில் இஸ்ரேலுக்குள்ளேயே பாசிச திசையை நோக்கிச் செல்வது, மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக அதன் பாத்திரத்துடன் பிரிக்கவியலாத வகையில் இஸ்ரேல் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரிய ஆயுதமேந்திய காவற்படை என்ற வகையில், அது வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட அனைத்து போர்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும், இறுதியில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

1938 டிசம்பரில், பாசிசத்தின் பரவலும், இரண்டாம் ஏகாதிபத்திய உலகப் போர் வெடிப்பதும் யூத மக்களுக்கு இருத்தலியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். “எதிர்கால உலகப் போர் வெடிக்கும் நேரத்தில் யூதர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை சிரமமின்றி கற்பனை செய்து பார்க்க முடியும்” என்று அவர் எழுதினார். ஆனால் போர் இல்லாமல் கூட உலக பிற்போக்குத்தனத்தின் அடுத்த வளர்ச்சி யூதர்களின் உயிர்களை பூண்டோடழிப்பதை உறுதியாகக் குறிக்கிறது.” இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஒரு வருடம் கழித்து, ஜூலை 1940ல், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு அறிவித்தார்: “யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு இடம்பெயர்வதன் மூலம் யூதப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி இப்போது யூத மக்களை ஒரு துயரகரமான வெற்றுச்செயலாக பார்க்க முடியும். ... யூத மக்களின் மீட்சி என்பது முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவதோடு பிரிக்கவியலாத வகையில் பிணைந்துள்ளது என்பது இன்று போல ஒருபோதும் தெளிவாக இருந்ததில்லை.”

லியோன் ட்ரொட்ஸ்கி

இரண்டாம் உலகப் போரின் விளைவாக 6 மில்லியன் யூதர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். ஆனால் அந்தப் பேரழிவுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி எச்சரித்த “யூத மக்களின் துயரகரமான வெற்றுச்செயல்” வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குமுறையாளர்களாக மாற்றுவதில் உணரப்பட்டுள்ளது. நிச்சயமாக, இஸ்ரேல் உட்பட உலகெங்கிலும் உள்ள யூத மக்களில் ஒரு பரந்த பகுதியினர் அத்தகைய அடையாளத்திலிருந்து பின்வாங்குகிறார்கள். அவர்கள் யாரையும் ஒடுக்க விரும்பவில்லை. ஆனால் அரசியல் வேலைத்திட்டங்கள்—தேசியவாத வேலைத்திட்டம்—வெறுமனே அகநிலை நோக்கங்களால் தீர்மானிக்கப்படாத விளைவுகளைக் கொண்டுள்ளன.

சியோனிச அரசின் உருவாக்கம் 1920கள் மற்றும் 1930களில் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புகள் காரணமாக தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளின் நேரடி விளைவாகும். மாபெரும் இடம்பெயர்ந்த மக்கள், நாஜி வதைமுகாம்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள், மற்றும் சோசலிச முன்னோக்கின் மீதான அரசியல் விரக்தி மற்றும் நம்பிக்கை இழப்பு இல்லாமல் இருந்திருந்தால், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாத போரை நடத்துவதற்கும், அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வெளியேற்றுவதற்கும் மற்றும் அடிப்படையில் குற்றவியல் வழிமுறைகள் மூலம், ஒரு யூத தேசிய அரசை உருவாக்க தேவையான அளவு மக்களின் எண்ணிக்கை சியோனிச தலைவர்களிடம் இருந்திருக்காது.

ஆனால் இப்போது, 75 ஆண்டுகளுக்குப் பிறகு, சியோனிசத்தை ஒரு “துயரகரமான வெற்றுச்செயல்” என்று ட்ரொட்ஸ்கியின் தொலைநோக்கு மதிப்பீடு உறுதிப்படுத்தப்படுகிறது. வரலாற்றின் ஒரு கட்டத்தில், முற்போக்கான சமூக வளர்ச்சிக்கு இந்த வகையான அரசியல் அமைப்பு ஏற்கனவே பிரதான தடையாக மாறியிருந்த நிலையில், தேசிய அரசைத் தழுவிக் கொண்டதுதான் அந்தத் துயரத்தின் சாராம்சம். “யூதரல்லாத யூதரின் செய்தி” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஈசக் டொய்ச்சர் (Isaac Deutscher), இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதை “யூத துயரத்தின் முரண்பாடான நிறைவேற்றம்” என்று விவரித்தார். இது முரண்பாடாக இருக்கிறது, ஏனென்றால் இஸ்ரேலின் தேசிய-அரசு மட்டுமல்ல, ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற தேசிய அரசுகளும் வேகமாக ஒரு காலாவதியாக மாறி வரும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம். அவைகள் அனைத்தும் தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.” மனிதனின் சமூக, பொருளாதார, கலாச்சார வளர்ச்சியில் தேசிய அரசுகள் முற்போக்கான காரணியாக இருந்த வரலாற்றுக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. பழைய நிறுவப்பட்ட தேசிய அரசுகளுக்கும் இது பொருந்தும் என்பது போலவே, இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய அரசுகளுக்கும் இது இரட்டை உண்மையாகும்.

டொய்ச்சர் பின்வருமாறு எழுதினார்:

இந்தியா, பர்மா, கானா மற்றும் காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ மக்கள் விடுதலைக்காக நடத்திய அவசியமான மற்றும் முற்போக்கான போராட்டத்தின் விளைவாக உருவான இளம் தேசிய அரசுகள் கூட, என் பார்வையில், அவற்றின் முற்போக்கான தன்மையை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியாது. அவைகள் சில மக்களின் வரலாற்றில் அவசியமான கட்டத்தை உருவாக்குகின்றன; ஆனால், அந்த மக்களும் தங்கள் இருப்புக்கான பரந்த கட்டமைப்பைக் கண்டுபிடிப்பதற்கு கடக்க வேண்டிய ஒரு கட்டம் இதுவாகும். நமது சகாப்தத்தில், எந்தவொரு புதிய தேசிய அரசும், அதன் அரசியலமைப்பிற்குப் பிறகு, இந்த வகையான அரசியல் அமைப்பின் பொதுவான வீழ்ச்சியால் பாதிக்கப்படத் தொடங்குகிறது; இது ஏற்கனவே இந்தியா, கானா மற்றும் இஸ்ரேலின் குறுகிய அனுபவத்தில் தன்னைக் காட்டுகிறது. யூதர்கள் தேசிய அரசை அரவணைத்து, அதை தமது பெருமையாகவும், நம்பிக்கையாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உலகம் நிர்பந்தித்துள்ளது. இதற்காக யூதர்களை குறை சொல்ல முடியாது; நீங்கள் உலகத்தை குற்றம் சாட்ட வேண்டும். ஆனால் யூதர்கள் குறைந்தபட்சம் இந்த முரண்பாட்டை அறிந்திருக்க வேண்டும் மற்றும் “தேசிய இறையாண்மை” மீதான அவர்களின் தீவிர ஆர்வம் வரலாற்று ரீதியாக காலாவதியானது என்பதை உணர வேண்டும். மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான ஊடகமாகவும், வரலாற்றில் ஒரு பெரிய புரட்சிகர மற்றும் ஒன்றிணைக்கும் காரணியாகவும் இருந்த அந்த நூற்றாண்டுகளில் தேசிய அரசின் நன்மைகளிலிருந்து அவர்கள் பயனடையவில்லை. ஐக்கியமின்மை மற்றும் சமூகச் சிதைவுக்கான காரணியாக மாறிய பின்னரே அவர்கள் அதை உடையதாகப் பெற்றிருக்கிறார்கள்.

கார்ல் மார்க்ஸ் (1818-1883)

ஸ்பினோசா, மார்க்ஸ், ஹெய்ன், ட்ரொட்ஸ்கி மற்றும் லக்சம்பேர்க் ஆகியோரின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, டொய்ச்சர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி தனது கட்டுரையை இவ்வாறு முடித்தார்:

மற்றய நாடுகளுடன் சேர்ந்து, யூதர்கள் இறுதியில் தேசிய அரசின் போதாமையைப் பற்றிய விழிப்புடன் இருப்பார்கள் அல்லது விழிப்புணர்வை மீண்டும் பெறுவார்கள், யூத இனத்திற்கு அப்பால் சென்ற யூதர்களின் மேதைமை நமக்கு விட்டுச் சென்ற தார்மீக மற்றும் அரசியல் பாரம்பரியத்திற்குத் திரும்புவார்கள்- அதுதான் உலகளாவிய மனித விடுதலையின் செய்தியாகும்.

இந்தப் புள்ளியில்தான் தற்போதைய உலக நெருக்கடியின் பின்னணியில் ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு முக்கியத்துவத்திற்கு நாம் திரும்ப முடியும். அக்டோபர் 15, 1923 அன்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட “46 பிரகடனத்தில்” இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிப்பதற்கு வழிவகுத்த குறிப்பிட்ட பிரச்சினைகள், சோவியத் ஒன்றியத்தை எதிர்கொண்ட ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சோவியத் அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டிலும் அதிகரித்து வரும் அதிகாரத்துவத்தின் சுமையின் விளைவாக உட்கட்சி ஜனநாயகத்தின் சீரழிவு ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும்.

இந்தப் பிரகடனத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் அடுத்தடுத்த வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் போராட்டம் விரிவடைந்தபோது, அரசியல் மோதலின் அடிப்படைக் காரணம் 1917 அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று சகாப்தத்தின் தன்மை பற்றிய சமரசமற்ற இரண்டு முரண்பட்ட கருத்தாக்கங்களாக இருந்தன.

ரஷ்யாவில் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு முதலாவது தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமையானது, சர்வதேச சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முடிவு வெறுமனே ரஷ்ய நிலைமைகளை மதிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, 1914ல் முதலாம் உலகப் போர் வெடித்ததில் வெளிப்படுத்தப்பட்ட உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டதாகும். உலகப் போருக்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவில் வெடித்த புரட்சிக்கும் இன்றியமையாத காரணம், உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடாகும்.

இந்த முரண்பாட்டிற்கான முதலாளித்துவ-ஏகாதிபத்திய தீர்வானது ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவது, நிலப்பரப்பைக் கைப்பற்றுவது, காலனிகளை மறுபகிர்வு செய்வது—அதாவது, உலகினை மறுபங்கீடு செய்வதாகும். இந்த நெருக்கடிக்கான சோசலிசத் தீர்வானது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், முதலாளித்துவத்தை ஒழிப்பதும், தேசிய-அரசு அமைப்புமுறையைக் கலைப்பதும் ஆகும். இந்த “தீர்வு” ஒரு கற்பனாவாத திட்டம் அல்ல. உலகப் போருக்கு இட்டுச் சென்ற அதே உலகளாவிய முரண்பாடுகளில் இருந்துதான், உலக சோசலிசப் புரட்சி வளர்ச்சியடைந்தது. முந்தைய தசாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் விரிவுபடுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் செல்வாக்கின் கீழ், 1917 இல் லெனினால் பின்பற்றப்பட்ட மூலோபாயமானது, இந்த பூகோள மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டது. போல்ஷிவிக்குகள் மூலோபாயத்தை உருவாக்குவதில் தீர்க்கமான காரணி, ரஷ்யா, ஒரு தேசிய அமைப்பு என்ற முறையில், சோசலிசத்திற்குத் தயாராக உள்ளதா என்பதல்ல— அதாவது, சோசலிச மாற்றத்திற்கு அதன் தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டம் போதுமானதா என்பதுதான் காரணியாகும். உண்மையில், அக்காலத்தின் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்த ரஷ்யா சோசலிசத்திற்கு “தயாராக” இருக்கவில்லை. ஆனால், உலக நெருக்கடியின் பின்னணியில், ரஷ்யா எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்திப் பிரச்சினைகள், முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கியெறிவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதன் மூலமும், சோசலிச சொத்து உறவுகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கமைப்பதன் மூலமும் தீர்க்கப்பட முடியாது.

வி. ஐ. லெனின்

எவ்வாறெனினும், சோவியத் அரசு சோசலிச மாற்றத்தை முற்றிலும் தேசிய மூலோபாயத்துடன் அடைய முடியாது. 1917 அக்டோபரில் ஒரு மார்க்சிசக் கட்சியின் தலைமையில், ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் அரசின் தலைவிதி, ரஷ்யாவின் எல்லைகளுக்கு அப்பால் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முன்னேறிய முதலாளித்துவ மையங்களுக்கு புரட்சியை விரிவுபடுத்துவதில் தங்கியிருந்தது.

லெனின் போல்ஷிவிக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரை இந்தக் கருத்தாக்கம் மேலோங்கியிருந்தது. 1919 இல் கம்யூனிச அகிலத்தை (Communist International) ஸ்தாபிப்பதில் அது அதன் மிக முன்னேறிய வெளிப்பாட்டைக் கண்டது. அதன் முதல் நான்கு வருடாந்திர மாநாடுகள் அதிகாரத்தை வென்று உலகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்ட தேசிய பிரிவுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திற்காக உலகெங்கிலும் இருந்து புரட்சியாளர்களை ஒன்றுதிரட்டியது. ஆனால் 1922 இல் லெனினின் உடல்நிலை மோசமடைந்தது, மார்ச் 1923 இல் பக்கவாதத்தின் விளைவாக அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார். மற்றும் ஜனவரி 1924 இல் அவரது மரணம் ஆகியவைகள் போல்ஷிவிக் தலைமைக்குள் தேசியவாத போக்குகளின் மறுமலர்ச்சி எளிதாக்கப்பட்டது மற்றும் உதவியது.

சோவியத் ஒன்றியத்தில் பொருளாதார அபிவிருத்தியின் பிரச்சினைகள் சர்வதேச சொற்களில் அல்லாமல் தேசிய அளவில் விளக்கப்பட்டன. இந்தப் போக்கு கட்சி மற்றும் அரசு அதிகாரத்துவத்தின் வளர்ந்து வரும் எடை மற்றும் செல்வாக்கோடு நெருக்கமாக தொடர்புடையது. இதன் வெளிப்பாடுதான் ஜோசப் ஸ்டாலின் அதிகாரத்திற்கு உயர்ந்தது. கன்னைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியால் கட்சி ஆட்சி மீதான விமர்சனத்தின் மீதான அதிகாரத்துவத்தின் சீற்றத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. ஆனால் போராட்டம் 1924 வரை தொடர்ந்தபோது, அத்தியாவசிய மற்றும் அடிப்படை வேலைத்திட்ட வேறுபாடுகள் வெளிப்பட்டன. ட்ரொட்ஸ்கி மீதான அதிகாரத்துவத்தின் தாக்குதல் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டில் கவனம் செலுத்தியது. அதாவது, சோவியத் ஒன்றியத்தின் தலைவிதிக்கும் உலகப் புரட்சியின் வெற்றிக்கும் இடையிலான இன்றியமையாத தொடர்பை அவர் வலியுறுத்தினார்.

1924 முழுவதிலும், போல்ஷிவிக் தலைமைத்துவத்தில் ட்ரொட்ஸ்கியின் எதிர்ப்பாளர்கள் —கிரிகோரி ஜினோவியேவ், லெவ் காமனேவ் மற்றும் ஸ்ராலின் ஆகியோரைக் கொண்ட கொள்கையற்ற பிரிவால் வழிநடத்தப்பட்டவர்கள்— ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு லெனினிசத்திற்கு எதிரானது என்று கூறி, சோசலிசத்திற்கான ரஷ்ய விவசாயிகளின் உறுதிப்பாட்டில் நம்பிக்கையின்மையை ட்ரொட்ஸ்கி வெளிப்படுத்தியதாக அவரை இழிவுபடுத்த முனைந்தனர். 1924 டிசம்பர் 17 அன்று, ஸ்ராலின் முதன்முறையாக “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தியபோது, சோசலிசப் புரட்சியை உலக முதலாளித்துவத்தின் முன்னேறிய மையங்களுக்கு விரிவுபடுத்தாமல், ரஷ்ய வளங்களின் அடிப்படையில் சோசலிச மாற்றத்திற்கான சாத்தியத்தை வெளிப்படையாக முன்வைத்தார்.

ஸ்டாலின், ரைகோவ், காமனேவ் மற்றும் ஜினோவியேவ்

ஸ்ராலினின் உரையானது ரஷ்ய மற்றும் உலக சோசலிச புரட்சிக்கு இடையிலான தொடர்பை துண்டித்த ஒரு தேசியவாத வேலைத்திட்டத்தை சட்டபூர்வமாக்கியது. அது ஸ்ராலினிச ஆட்சியின் உள் கொள்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. உலக சோசலிசப் புரட்சியை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியில் இருந்து, சோவியத் வெளியுறவுக் கொள்கையின் துணை முகமையாக மாற்றப்பட்ட கம்யூனிச அகிலத்தின் தன்மையை அது அடிப்படையில் மாற்றியது. புரட்சிகர அரசியல் மூலோபாயத்தை, ஒரு தேசிய அரசாக சோவியத் ஒன்றியத்தின் நடைமுறைவாத ரீதியாக கருதத்தக்க நலன்களுக்கு அடிபணியச் செய்தது. ஆரம்பத்தில், சோவியத் ஆட்சியின் தேசியவாத கொள்கை, கம்யூனிச அகிலத்தின் பிரிவுகளின் திசைதிருப்பலுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக பிரிட்டன், சீனா மற்றும் ஜேர்மனியில் தொழிலாள வர்க்கத்தின் பெரும் தோல்விகள் ஏற்பட்டன.

1930 களின் நடுப்பகுதியில், நாஜிக்களின் வெற்றி மற்றும் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் முற்றிலுமாக நசுக்கப்பட்ட பின்னர், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் அகிலத்தின் கொள்கைகள் நனவுடன் எதிர்ப்புரட்சிகர தன்மையைப் பெற்றன. 1936 மாஸ்கோ விசாரணைகளுடன் தொடங்கிய பயங்கரத்தின் போது சோவியத் ஒன்றியத்தில் சோசலிஸ்டுகள் அழித்தொழிக்கப்பட்டது, ஸ்பானியப் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புடன் சேர்ந்து, இது இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கான பாதையைத் தெளிவாக்கியது.

இடது எதிர்ப்பு அணியின் போராட்டமானது, முதலாவதாகவும் முக்கியமாகவும், சோசலிச சர்வதேசியவாதத்தையும் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தையும் பாதுகாப்பதாக இருந்தது. 1930ல், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சோவியத் ஒன்றியத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர், ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் இன்றியமையாத கருத்துருக்களை மீண்டும் வலியுறுத்தினார். அவர் பின்வருமாறு எழுதினார்:

தேசிய எல்லைகளுக்குள் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அது உருவாக்கிய உற்பத்தி சக்திகளை இனியும் தேசிய அரசின் கட்டமைப்போடு சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதே ஆகும். இதிலிருந்து ஒருபுறம் ஏகாதிபத்தியப் போர்கள், மறுபுறம் ஐரோப்பாவின் முதலாளித்துவ ஐக்கிய அரசுகளின் கற்பனாவாதம் ஆகும். சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்கி, சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சி ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது. நமது முழுக் கிரகத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது முழுமையடைகிறது.

உலகப் புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் தர்க்கத்தைப் பின்பற்றி, இடது எதிர்ப்பின் பணி சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளைத் தாண்டியது. 1928ல், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாட்டின் போது, ட்ரொட்ஸ்கி மத்திய ஆசியாவில் அல்மா அட்டாவில் தனது தற்காலிக நாடுகடத்தப்பட்ட இடத்திலிருந்து எழுதிய வரைவுத் வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம் தற்செயலாக அமெரிக்கப் புரட்சியாளர் ஜேம்ஸ் பி. கனன் மற்றும் கனடியப் புரட்சியாளர் மாரிஸ் ஸ்பெக்டர் ஆகியோரின் வசம் வந்தது. அவர்கள் அந்த ஆவணத்தை சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே கடத்தினார்கள், ட்ரொட்ஸ்கியின் சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்காக அவர்கள் தொடங்கிய போராட்டம் சர்வதேச இடது எதிர்ப்பின் தொடக்கத்தைக் குறித்தது.

1928 இல் நாடுகடத்தப்பட்ட இடது எதிர்ப்பு உறுப்பினர்கள். இடமிருந்து வலமாக அமர்ந்திருக்கும் எல்.செரெப்ரியாகோவ், கே.ராடெக், ட்ரொட்ஸ்கி, எம்.பொகஸ்லாவ்ஸ்கி, ஈ. பிரியோபிரசென்ஸ்கி; இடமிருந்து வலமாக நின்றுகொண்டிருக்கும், சி. ரகோவ்ஸ்கி, ஒய். டிராப்னிஸ், ஏ. பெலோபோரோடோவ், செஸ்னோவ்ஸ்கி

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஜூலை 1933ல், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பு மற்றும் ஹிட்லரின் வெற்றிக்கு விடையிறுப்பாக, ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க அழைப்பு விடுத்தார். 1938 செப்டம்பரில் அதன் ஸ்தாபக மாநாடு நடைபெற்றது.

நாம் இப்போது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நூற்றாண்டை குறித்துக் கொள்ளுகிறோம். இந்த இயக்கத்தின் நீடித்த நிலைப்பாடு இத்தகைய நீண்ட காலத்திற்கு மாபெரும் புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தனிமனிதர்களின் தனிப்பட்ட தியாகத்தின் விளைவு என்று இதை விளக்க முடியாது. இந்த இயக்கத்தை நிறுவியவர்கள் எப்போதோ மறைந்து விட்டனர். இந்த இயக்கம் சர்வதேச அளவில், பொதுவாக மிகவும் கடினமான சூழ்நிலைகளில் செயற்பட்டுள்ளது. தொழிலாளர் இயக்கத்தில் அது ஒரு சிறுபான்மையாக, ஒரு சிறிய சிறுபான்மையினராக இருந்தது, அது ஒரு இருப்பைக் கொண்டிருந்தால், பிறகு எவ்வாறு அது தொடர்ந்து நீடிக்க முடிந்தது?

1970 இலையுதிர்காலத்தில் நான் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்தபோது, உலகெங்கிலும் பெரும் மாணவர் தீவிரமயமாக்கல் மற்றும் வெகுஜன இயக்கங்கள் இருந்த காலகட்டத்தில், தீவிர அரசியலில் இன்னும் ஸ்ராலினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள், காஸ்ட்ரோவாதிகளால் ஆதிக்கம் செலுத்திய காலமாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் வெகுஜன இயக்கங்களாக இருந்தன. அலெண்டே போன்றவர்கள் அந்தக் காலத்தின் கதாநாயகர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற மரபு என்ன? அவர்கள் அனைவரும் காட்சியிலிருந்து காணாமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ட்ரொட்ஸ்கி தனது காலத்தில் ஸ்ராலினிச மற்றும் திருத்தல்வாத இயக்கங்களைப் பற்றி பேசுகையில், “இந்த காலாவதியான அமைப்புகளில், ஒரு கல் கூட மற்றொன்றின் மீது விடப்படாது” என்றார். ஏன்? ஏனெனில் அவர்களின் வேலைத்திட்டம் சகாப்தத்தின் புறநிலை பண்புகளுடன் பொருந்தவில்லை. அவைகளின் தவறான கொள்கைகள், பெரும்பாலும் தேசியவாதக் கொள்கைகள், சீர்திருத்தக் கொள்கைகள் ஆகியவற்றைத் திணிக்கும் முயற்சிகளாக இருந்தன, அவைகள் புறநிலை நெருக்கடியின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியவில்லை.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்த நிலைத்திருப்பானது அதன் பகுப்பாய்வு சகாப்தத்தின் தன்மையுடன், கடந்து செல்லாத ஒரு சகாப்தத்துடன் ஒத்துப்போகிறது என்ற உண்மையால் மட்டுமே இதை விளக்கப்படுத்த முடியும். ட்ரொட்ஸ்கி கடந்து சென்ற ஏகாதிபத்திய நெருக்கடி மற்றும் சிதைவின் சகாப்தத்தில், அதன் இருப்பின் மிகவும் முன்னேறிய மற்றும் இறுதிக் கட்டத்தில் இருந்தபோதிலும், நாம் அதே வரலாற்று சகாப்தத்தில் வாழ்கிறோம். அதற்கு முந்தைய உலகப் போர், ஏகாதிபத்திய சகாப்தத்தின் தோற்றத்தின் விளைபொருள் ரஷ்யப் புரட்சியாகும். அதையும் தாண்டி நாம் கடந்து செல்லவில்லை. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட நமது இன்றைய நாளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளை இது காட்டுகிறது. நாம் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஒரே கலைச்சொற்களாகும், மேலும் தற்போதைய பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய அணுகுமுறையைப் புரிந்துகொள்வதில் அது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

சமூக உற்பத்தி நிகழ்முறைக்கும், உற்பத்தி சக்திகளின் தனியார் முதலாளித்துவ உடைமைக்கும் இடையிலான முரண்பாட்டிலிருந்து எழும் பொருளாதார நெருக்கடிகள், மிகவும் ஆழமாக ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரம் மற்றும் காலாவதியான தேசிய அரசு அமைப்புமுறையின் இணக்கமின்மையால் தோற்றிவிக்கப்பட்ட புவிசார் அரசியல் மோதல்களும், முன்னேறிய வெகுஜன சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தனிப்பட்ட செல்வக் குவிப்புக்கு அடிபணியச் செய்வதன் அழிவுகரமான விளைவுகளும், முதலாளித்துவ வர்க்கத்தின் உழைப்புச் சுரண்டலால் தோற்றுவிக்கப்பட்ட சமூக பதட்டங்கள் அதிகரித்து வருவதும், பெருந்திரளான வெகுஜன மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும்போது கூட அதிர்ச்சியூட்டும் செல்வத்தை மனமின்றி குவிப்பதுமேதான் உலக சோசலிசப் புரட்சியை அரசியல் நிகழ்ச்சி நிரலில் வைத்துள்ள நிலைமைகள் ஆகும்.

உண்மையில், உலகெங்கிலும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி அலையை நாம் காண்கிறோம். இது உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு பரிமாணங்களை எடுக்கும். கடந்த பல வாரங்களின் நிகழ்வுகள் சமூக நனவு எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதையும், அவர்கள் எதிர்பார்க்காத நிகழ்வுகளால் மக்கள் எவ்வளவு விரைவாக தீவிரமயமாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளின் கூறுகளில் ஒன்று, குறிப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட அக்கறையின்மை, மனச்சோர்வு, நம்பிக்கையின்மை உணர்வு, தனிமனிதருக்குள் பின்வாங்குதல், தனிப்பட்டதை நோக்கிய, தனிப்பட்ட அடையாளத்தின் கேள்விகளில் கவனம் செலுத்துதல் மற்றும் கவனத்தை ஒன்றுகுவித்தல், வாழ்க்கை முறை (ஒரு நபர் அல்லது மக்கள் குழு வாழும் விதம், அவர்களின் பழக்கவழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தேர்வுகள் உட்பட), உடற்பயிற்சிக் கூடங்களில் அதிக நேரம் செலவிடுதல், ஒருவரின் உருவத்தை மேம்படுத்துதல், ஒருவரின் எடையைக் கண்காணித்தல், ஒருவரின் தனிப்பட்ட சிறிய செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்காணித்தல் போன்ற கேள்விகளில் கவனம் அதிக செலுத்துதலாக இருந்தனர், அதே நேரத்தில் சுற்றிலும் நிகழும் பெரிய நிகழ்வுகளைப் புறக்கணித்தனர். திடீரென்று, உலகம் முழுவதும் நடைபெறும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நாம் காணலாம், ஒரு மாற்றம் தொடங்கியிருக்கிறது.

பிற்போக்குத்தன காலங்களில், அறியாமை அதன் பற்களைக் காட்டுகிறது (சமூகம் பின்னோக்கிச் செல்லும்போது, மக்களின் அறிவு மற்றும் புரிதலின் பற்றாக்குறை இன்னும் தெளிவாகிறது) என்று ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதினார். ஆனால் பின்னர் வாழ்க்கை மாறுகிறது, நிகழ்வுகள் தடையை உடைத்து வருகின்றன, நீண்ட காலத்திற்குப் பிறகு, பல அனுபவங்களுக்குப் பிறகு, உலகம் மாறிவிட்டது என்ற அங்கீகாரம் வெளிப்படுகிறது. ஊடகங்களையும் அதன் பிரச்சாரத்தையும் யாரும் நம்புவதில்லை. அனைத்து அரசியல் கட்சிகளின் திவால்நிலை தெளிவாகிறது. ஜனாதிபதி ஒரு பலவீனமான, வயதான முரட்டுத்தனமான புறக்கணிப்பாளரைப் போன்றவராக இருக்கிறார். குடியரசுக் கட்சியானது குண்டர்களின் கூட்டமாக இருக்கிறது. இந்த சக்திகளில் யாருக்கும் சொல்வதற்கு எதுவும் இல்லை, பின்நவீனத்துவத்தின் அடிவருடிகளான குட்டி-முதலாளித்துவ தீவிரவாதிகள், தனிப்பட்ட அடையாளம் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சினையில் மூழ்கி, முடிவில்லாமல் காழ்ப்புணர்ச்சிகள் மற்றும் புகார்கள், ஏதேனும் ஒரு தனிப்பட்ட தவறுகளுக்கான கண்டனங்கள், நிகழ்வுகளின் வெளிச்சத்தில் அவர்கள் முக்கியமற்றவர்களாகி விடுகிறார்கள்.

உலகப் போரின் ஆபத்து, அப்பாவி மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பயன்பாடு, வறுமை, சுற்றுச்சூழலின் அழிவு, மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் ஒரு பெரிய பெருந்தொற்று நோய், இதற்கு எந்த அரசாங்கமும் பதிலளிக்கவில்லை. மக்கள் நோய்வாய்ப்படுவதை விட முகக்கவசம் அணியுமாறு கேட்பது போன்ற எளிதான ஒன்று கூட இல்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வது தனிப்பட்ட செல்வத்தையும் இலாபத்தையும் குவிப்பதற்கு இடையூறாக இருக்கும். ஆனால், உண்மையில் உற்சாகமூட்டும் மற்றும் மாறிவரும் உலக நிலைமைகள் என்னவென்றால், அனைத்து சமூக சக்திகளிலும் மிக அடிப்படையான மற்றும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சக்தியாக திடீரென மீளெழுந்துள்ளது.

உங்கள் இளம் வாழ்க்கையின் பெரும்பகுதியில், வேலைநிறுத்தங்களைப் பற்றி, தொழிலாள வர்க்க நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டதில்லை. உண்மையில், பின்நவீனத்துவக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாக்கங்களில் ஒன்று, வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசத்தை மையமாகக் கொண்ட பழைய வரலாற்றுக் கதையாடல்கள் இனியும் பொருத்தமானவை அல்ல என்பதாகும். ஆனால் இன்று, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அரவணைத்து, எல்லா இடங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன. வர்க்கப் போராட்டமே சமூக அபிவிருத்தியின் உந்து சக்தி என்பது நிச்சயமாக தெளிவாகி வருகிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எளிதில் தீர்க்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல. அழுகிய தலைமையுடனும், தங்களைக் காட்டிக்கொடுக்கும் அமைப்புகளுடனும், வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றைப் பற்றிய புரிதல் இல்லாமலும், தங்கள் சொந்த நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அவர்கள் போராட்டங்களில் நுழைகிறார்கள்.

கூட்ட நிகழ்வைத் தொடர்ந்து இலக்கிய மேசையில் பார்வையாளர்கள்

இதில்தான் நான்காம் அகிலத்தின் மாபெரும் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. எங்கள் கட்சி ஒரு முழு சகாப்தத்திலும் வர்க்கத்தின் முழு வரலாற்று அனுபவத்தின் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாகும். 25 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தவறாமல் வெளியிடப்பட்டு வரும் உலக சோசலிச வலைத் தளம், நிகழ்வுகளை மதிப்பிடுவதில் இவ்வளவு அசாதாரணமான துல்லியத்தையும் முன் கணித்தலையும் வெளிப்படுத்தியது எப்படி சாத்தியம் என்று எங்களிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஒரு மாபெரும் வரலாற்று அனுபவத்தில் இருந்து செயல்படவும், நிகழ்காலத்தை கடந்த கால அனுபவத்துடன் தொடர்புபடுத்தவும், நிகழ்காலத்தை வெறுமனே நடந்த சம்பவத்தின் மறுபதிப்பாகப் பார்க்காமல், அரசியல் வளர்ச்சியின் அடிப்படையான மற்றும் அத்தியாவசிய உந்து சக்திகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும் ஒரு நோக்குநிலையைக் கொண்டிருப்பதன் அனுகூலம் எங்களுக்கு உள்ளது.

நான் ஏற்கனவே கூறியது போல, நாம் இப்போது ஒரு பெரும் அரசியல் தீவிரமயமாக்கலைக் காண்கிறோம். இந்த இயக்கத்திற்குள் அதன் இன்றியமையாத பணிகளைப் பற்றிய புரிதலை வளர்க்க உதவும் ஒரு முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் கொண்டு செல்வதே எங்கள் பணியாகும்.

போராட்டப் பாதைக்குள் நுழையும் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் கடந்த நூற்றாண்டின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும், நீங்கள் போராட்டத்தில் அதைச் செய்ய வேண்டும். மேலும், இப்போது நடந்து கொண்டிருக்கும் விடயங்களிலிருந்து முடிவுகளை எடுத்து, சோசலிசத்திற்கான போராட்டத்தில் சுறுசுறுப்பாக இயங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். சோசலிச சமத்துவக் கட்சியில் சேருவதன் மூலம் அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

Loading