ஜி-20 உச்சி மாநாடு ஒருங்கிணைந்த உதவிப்பொதி திட்டத்தை
நிராகரிக்கிறது
By Nick Beams
29 February 2016
Back
to screen
version
இவ்வாரயிறுதியில் ஷங்காய் இல் நடத்தப்பட்ட ஜி-20 நாடுகளது
நிதி மந்திரிமார்கள் மற்றும் மத்திய வங்கியாளர்களின் கூட்டம், உலகளாவிய
பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கான நிதி உதவிப்பொதி மீது எந்தவொரு
ஒருங்கிணைந்த திட்டத்தையும் ஏற்க தவறியது. பிரதான பொருளாதார சக்திகளுக்கு
இடையே ஆழமடைந்து வரும் பிளவுகளால், உண்மையில் அதுபோன்றவொரு திட்டம்
பரிசீலிக்கப்படக் கூட இல்லை.
நிலையற்ற மூலதன ஓட்டங்கள் மற்றும் பண்டங்களின் பெரும் விலை
வீழ்ச்சி ஆகியவற்றிற்கு இடையே, உலகளாவிய பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய
அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அக்கூட்டம் வெளியிட்ட அறிக்கை
குறிப்பிட்டது, ஆனாலும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த நிதிச்
செலவு கொள்கைகளைத் (fiscal policies) தொடங்க எதுவும் செய்யப்படவில்லை.
இந்த திசையில் ஒரு நகர்வை மேற்கொள்ள, அக்கூட்டத்திற்கு முன்னதாக சர்வதேச
நாணய நிதியம் (IMF) மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கும் மற்றும்
அபிவிருத்திக்குமான அமைப்பிடம் (OECD) இருந்து அழைப்பு
விடுக்கப்பட்டிருந்ததற்கு இடையிலும் இவ்வாறு நடந்துள்ளது.
அதற்கு நெருக்கமாக வந்தது என்னவென்றால், “நிதிக்
கொள்கை (monetary policy) மட்டுமே சமநிலைப்பட்ட வளர்ச்சியை கொண்டு வர
முடியாது,” என்பதை அந்த அறிக்கையில் ஒப்புக் கொண்டது தான்.
ஒவ்வொரு பிரதான சக்திகளும் மற்றவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென
வலியுறுத்திய நிலையில், அதற்கு அதிகமான எந்தவொரு விடயமும்
நிராகரிக்கப்பட்டது.
பிரெஞ்சு நிதி மந்திரி மிஷேல் சப்பான் இன் வார்த்தைகளில்:
“நிச்சயமாக ஓர் உலகளாவிய நிதிய உதவிப்பொதி குறித்து நாங்கள்
பேசுவதாக இல்லை. பிரான்ஸில் இதை செய்வதற்கான ஆற்றல் இன்னும் எங்களுக்கு
கிடையாது. பிற நாடுகள் நிறைய ஆற்றலுடன் இருக்கின்றன, உலகளாவிய வளர்ச்சியை
ஆதரிக்க அவர்களால் வேண்டுமானால் தொடர்ந்து அவர்களது இந்த சக்தியைப்
பயன்படுத்த முடியும்.”
ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள,
அக்கூட்டத்திற்கு முன்னதாக பேசுகையில், நிதிக் கொள்கையைப்
பயன்படுத்துவதற்கான காலகட்டம் முடிந்து விட்டது மற்றும் வளர்ச்சிக்கு நிதி
வழங்கக் கடன்களைப் பயன்படுத்துவது வெறுமனே "பலவீனமான" நிறுவனங்களுக்கு
தான் செல்கிறது என்று தெரிவித்தார். “கூடுதல் ஊக்கப்பொதி
குறித்த பேச்சுக்கள் வெறுமனே கை மேல் இருக்கும் நிஜமான வேலைகளைச்
சிதறடிக்கிறது,” என்றார். "சிலர் வாதிடுவதைப் போல, ஒருவேளை
நோக்கம் நிறைவேறாமல் போகும் அபாயமிருப்பதால், ஜி-20 நிதிய ஊக்கப்பொதிக்கு"
ஜேர்மனியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் உடன்படவில்லை.
எண்ணெய் விலை வீழ்ச்சியானது தேவைக்கான "பெரும்"
ஊக்கப்பொதியை வழங்கி உள்ளது, பரந்தளவிலான நிதிச் செலவுக் கொள்கைகள்
எதிர்கால நெருக்கடி ஒன்றுக்கு அடித்தளத்தை அமைத்துவிடும் என்றவர்
தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனோபாவம் சான்சிலர் ஜோர்ஜ்
ஓஸ்போர்ன் ஆல் எடுத்துக்காட்டப்பட்டது. உலகளாவிய பொருளாதார கண்ணோட்டம்
மோசமடைந்து வருகையில் செலவுகளை அதிகரிப்பதற்கு மாறாக, 2015 இன் கடந்த
காலாண்டில் பிரிட்டிஷ் பொருளாதாரம் வெறும் 0.5 சதவீதம் அளவுக்கு
வளர்ந்திருப்பதை எடுத்துக்காட்டிய புள்ளிவிபரங்கள் வெளியானதை தொடர்ந்து,
கேமரூன் அரசாங்கம் இன்னும் கூடுதலாக செலவின வெட்டுக்களை ஆலோசித்து
வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
“உலக பொருளாதாரத்தில் தெளிவாக புயல் மேகங்கள்
சூழ்ந்து வருகின்றன, அது பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்கு கடுமையான
விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்றார். பிரிட்டனில் பொருளாதார
விரிவாக்கம் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்குப் பெரிதாக இல்லை என்பதை
சமீபத்திய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டி இருந்தன, “ஆகவே
செலவினங்களில் நாம் இன்னும் கூடுதலான குறைப்புகளைச் செய்ய
வேண்டியிருக்கும் ஏனென்றால் இந்நாடு எந்தளவுக்குத் தாங்க முடியுமோ
அந்தளவுக்குத் தான் தாங்கும் மற்றும் அதை நாம் வரவுசெலவு திட்டத்தில்
கவனித்துக்கொள்வோம்,” என்றார்.
அந்த மாநாட்டைக் குறித்து தொகுத்துரைக்கையில், அமெரிக்க
கருவூலத்துறையில் இருந்த சீனா விடயத்தில் ஒரு சிறப்பு வல்லுனரான நிதியியல்
பகுப்பாய்வாளர் டேவிட் லொய்வின்ஜெர், Bloomberg க்குக் கூறுகையில்,
“ஒருங்கிணைந்த கொள்கை நடவடிக்கைகள் மீதான நம்பிக்கைகள்
முற்றிலும் கற்பனை என்பது நிரூபணமாகிவிட்டது. ஒவ்வொரு நாடும் தத்தமது
விடங்களை கவனிக்கின்றன,” என்றார்.
ஜி-20 முன்னணி அங்கத்தவர்கள் இடையிலான ஆழ்ந்த பிளவுகளுக்கு
முன்னால், அந்த அறிக்கையை வரைந்தவர்கள் உலக பொருளாதாரம்
எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலைமையைக் கடந்து செல்ல முடியாதென
முடிவெடுத்ததாக தெரிகிறது.
பல தொடர்ச்சியான அபாயங்களைக் குறிப்பிட்ட பின்னர், அந்த
அறிக்கை குறிப்பிட்டது: “இத்தகைய சவால்களை ஒப்புக்கொள்கின்ற
அதேவேளையில், சமீபத்திய சந்தை கொந்தளிப்பின் அளவு உலகளாவிய
பொருளாதாரத்தின் அடியிலிருக்கும் அடிப்படைகளை பிரதிபலிக்கவில்லை என்று
நாங்கள் முடிவுக்கு மட்டும் வரவில்லை.
பெரும்பாலான முன்னேறிய பொருளாதாரங்களில் மிதமான வேகத்தில்
விரிவாக்கும் நடவடிக்கை தொடர்ந்து இருக்குமென நாங்கள்
எதிர்ப்பார்க்கிறோம், எழுச்சி பெற்றுவரும் முக்கிய சந்தைகளில் வளர்ச்சி
பலமாக உள்ளது.”
உண்மையில் அக்கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட
புள்ளிவிபரங்கள் "அடியிலிருக்கும் அடிப்படைகள்" மோசமடைந்து வருவதைச்
சுட்டிக்காட்டுகின்றன.
நெதர்லாந்தின் பொருளாதார கொள்கை பகுப்பாய்வு ஆணையத்தால் தொகுக்கப்பட்ட,
உலக வர்த்தக கண்காணிப்பு அமைப்பின் தகவல்படி, உலக வர்த்தகத்தின் மதிப்பு
2015 இல் 13.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது, இது 2009 நிதியியல்
நெருக்கடியின் ஆழங்களுக்கு பிந்தைய முதல் சுருக்கமாகும், இந்த ஆண்டு
நிலைமை இன்னும் மோசமடையும் என்பதற்கான அறிகுறிகளும் இத்துடன்
காட்டப்பட்டிருந்தன.
மொத்த பண்டங்களின் உலகளாவிய வர்த்தகத்தை அளவிடும் Baltic
Dry குறியீடு, அதன் வரலாற்று வீழ்ச்சிகளை எட்டியுள்ளது. உலகின் ஒன்பதாவது
மிகப் பெரிய பொருளாதாரமான பிரேசிலுக்குக் சீனாவிலிருந்து செல்லும்
கொள்கலன் ஏற்றுமதிகளில் கடந்த ஆண்டு 60 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது
மிகவும் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய கப்பல்
போக்குவரத்து நிறுவனமான Maersk Line, பிரேசிலின் கொள்கலன்கள் இறக்குமதிகள்
கடந்த ஆண்டு பாதியாக குறைந்திருப்பதை அறிவித்தது.
உலகளாவிய வர்த்தக வளர்ச்சி ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு 2.5 சதவீதமாக
இருந்தது. இது 3.1 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் குறைவு
என்பதுடன், 2008 க்கு முன்னர் மேலோங்கி இருந்த நிலைமைக்குத் தலைகீழாக
உள்ளது, அப்போது வர்த்தகம் உலகளாவிய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை விட
இரண்டு மடங்கிற்கும் அதிகமாக விரிவடைந்திருந்தது.
முக்கிய எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் வளர்ச்சி "பலமாக
உள்ளது" என்ற கூற்றைப் பொறுத்த வரையில், சீனப் பொருளாதாரத்தின் நிஜமான
வளர்ச்சி விகிதம் அந்த அரசாங்கம் கூறிய 6.5 சதவீதத்தை விட குறைவாக 4
சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்கிறது என்ற தகவல்களுடன், அது வளர்ச்சிக்
குறைந்து வருகிறது மற்றும் பிரேசில் கடுமையான ஒரு மந்தநிலையில் உள்ளது.
சீனா தவிர்த்து, எழுச்சிப் பெற்றுவரும் சந்தைகள், சர்வதேச
நாணய நிதியத்தின் தகவல்படி, கடந்த ஆண்டு 1.92 சதவீதம் மட்டுமே வளர்ச்சி
அடைந்துள்ளன. இது 1.98 சதவீத அளவிற்கு விரிவடைந்த முன்னேறிய
பொருளாதாரங்களின் விகிதத்தை விட குறைவாகும்.
சிட்டி குழுமத்தின் எழுச்சி பெற்றுவரும் சந்தைகளுக்கான
ஆய்வுத்துறை தலைவர், Guillermo Mondino, பைனான்சியல் டைம்ஸிற்குக்
கூறுகையில், எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் வளர்ச்சி குறைவானது
"குறிப்பாக கவலைக்குரிய விடயமாகும்", மேலும் எண்ணெய் விலைகள் மிகவும்
செங்குத்தாக வீழ்ச்சி அடைந்திருக்கையில், இந்த நாடுகளுக்கான மூலதன
ஓட்டங்கள் "பொறிந்து போகும் நிலையில் உள்ளன.”
அதே நேரத்தில் உலகளாவிய நிதியியல் ஒழுங்குமுறை,
அதிகரித்தளவில் ஸ்திரமின்றி மாறி வருகிறது. 2003 இல் இருந்து 2013 வரையில்
பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநராக இருந்த மெர்வின் கிங், மற்றொரு
நிதியியல் நெருக்கடி "நிச்சயமானது" என்பதுடன், அது "வெகு காலம் தள்ளி அல்ல
வெகு விரைவிலேயே" வரும் என்று எச்சரித்தார். 2008 பொறிவுக்கு பேராசை
பிடித்த வங்கியாளர்களும் மற்றும் தகுதியற்ற கொள்கை வகுப்பாளர்களும்
பங்களிப்பு செய்திருந்தாலும், “இந்த நெருக்கடி ஒரு
அமைப்புமுறையின் தோல்வியாகும்,” என்றவர் சமீபத்தில்-பிரசுரித்த
நூலில் குறிப்பிட்டிருந்தார்.
உலகளாவிய பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய வீழ்ச்சி தான்
பிரதான பொருளாதார சக்திகளிடையே அதிகரித்து வரும் பிணக்குகளை உந்தி
வருகிறது. அவை ஒவ்வொன்றும் போருக்கான தயாரிப்புகளை ஊக்குவிப்பதால், பணம்
செலவிக்கப்பட்டு வரும் ஒரே பகுதி இராணுவம் மட்டுமே ஆகும்.
நிதியியல் நெருக்கடியை அடுத்து உடனடியாக, ஏப்ரல் 2009 இன்
தொடக்கத்தில் இலண்டனில் நடத்தப்பட்ட ஜி-20 மாநாடு, 1930 களின்
படிப்பினைகளில் இருந்து பாடம் பெற்றிருப்பதாகவும், பெரு மந்தநிலைமையைக்
கொண்டு வந்ததைப் போன்ற மோதல்கள் திரும்பவும் இருக்காது என்றும் கூறி
பொருளாதார கொள்கைகளில் ஒத்துழைக்க வார்த்தையளவில் உறுதிமொழிகளைக் கண்டது.
இப்போதோ அது மாதிரியான வார்த்தைகள் கூட இல்லை.
உலக சோசலிச வலைத் தளம் அந்நேரம் விளங்கப்படுத்துகையில்,
“இம்மாநாடு முழுவதிலும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான
விரோதங்கள் வெளிப்பட்டன, பொருளாதார நெருக்கடி மோசமடைகையில் இது
தவிர்க்கவியலாது கூர்மையடையும்” மேலும் அது, “உலக
முதலாளித்துவத்தை மீட்பதற்கான ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த திட்டத்தை
உருவாக்குவதிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும், இந்த இலண்டன் மாநாடு
உலகளாவிய ஒருங்கிணைந்த பொருளாதாரத்திற்கும் மற்றும் தேசிய-அரசு முறைக்கும்
இடையிலான சமரசமற்ற முரண்பாடுகளை, மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகள் இந்த
நெருக்கடிக்கு ஓர் உண்மையான சர்வதேச அணுகுமுறையை ஏற்பதற்கு இலாயகற்று
இருப்பதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது,” என்று குறிப்பிட்டது.
அந்த பகுப்பாய்வு கடந்த ஏழு ஆண்டுகளில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கூட்டத்தை முன்னோட்டமிட்ட ஒரு கட்டுரையில் நியூ
யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், இலண்டன் கூட்டத்திற்குப் பின்னர் ஜி-20
நாடுகளது கூட்டங்கள் "பெரிதும் பொது விடயங்கள் மீது உடன்படுவது, வெகுசில
மாற்றங்களைச் செய்வது என இவற்றிற்காக அறியப்படுகிறது, கடந்த ஆண்டு
துருக்கியில் நடந்த ஆக்கபூர்வமற்ற தொடர்ச்சியான கூட்டங்கள் அதன்
உச்சக்கட்டமாக இருந்தன,” என்று குறிப்பிட்டது. பிரபல சர்வதேச
பொருளாதார நிபுணர் கென் கோர்டிஸ் இதை குறித்து கூறுகையில்,
“துருக்கிய தலைமையில் அமைந்த ஜி-20 கூட்டம் எந்த விதத்திலும்
முற்போக்காக இல்லை,” என்றார்.
பிரதான சக்திகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த நலன்களுக்கு
அழுத்தமளிக்கின்றன. பிரிட்டனின் வெளியேற்றம் குறித்த ஒரு குறிப்பை
பிரிட்டனால் அந்த அறிக்கையில் பெற முடிந்திருந்தது, ஐரோப்பிய
ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து எவ்வாறேனும் வெளியேறினால் அது உலகளாவிய
பொருளாதாரத்திற்கான கீழ் நோக்கிய அபாயங்களுக்கு பங்களிப்பளிக்கும் ஒரு
காரணியாக இருக்கும் என்று அந்த அறிக்கை கவலை வெளியிட்டது.
செலாவணி மதிப்பிறக்க போட்டியில் ஈடுபடுவதில்லை மற்றும்
"போட்டியிடும் நோக்கங்களுக்காக" செலாவணி விகிதங்கள் இலக்கில் வைக்கப்படாது
என்ற முந்தைய உறுதிமொழிகளை அந்த அறிக்கை மீண்டும் அறிவித்தது. இருந்த
போதினும், கடந்த ஆண்டு சீன ரென்மின்பியின் மதிப்பிறக்கம் மற்றும் அது
கூடுதலாக வீழ்ச்சி அடையும் என்ற அச்சங்கள், மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான்
எதிர்மறை வட்டி விகிதங்களுக்கு சென்றமை ஆகியவற்றைத் தொடர்ந்து, "செலாவணி
சந்தைகள் பற்றி நாம் நெருக்கமாக கலந்தாலோசிப்போம்" என்ற வார்த்தையை அது
சேர்த்திருந்தது.
அதிகரித்து வரும் பதட்டங்களைக் குறிப்பிட்டு, யூரோ குழும
தலைமை அதிகாரி ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம் கூறுகையில் ரென்மின்பி மட்டுமே
கவலைக்குரிய ஒரேயொரு காரணம் அல்ல என்றார். “நேர்மையாக
கூறுவதானால், ஜப்பான் குறித்த விவாதமும் இருந்தது—நாம்
போட்டியிட்டு மதிப்பிறக்கம் செய்யும் ஒரு சூழ்நிலைக்குள் செல்லக்கூடும்
என்ற சில கவலைகளும் அங்கே இருந்தது", மேலும் ஒரு நாடு ஒருமுறை
மதிப்பிறக்கம் செய்தாலும் "அதை மற்றொன்றும் பின்தொடரும், நாம் மதிப்பிறக்க
போட்டியில் நுழைந்துவிடும் மிகவும் பெரிய அபாயம் உள்ளது.”
எவ்வாறிருப்பினும், அவர், “ஒரு பெரிய
திட்டத்திற்கான ஏதேனும் அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை, அங்கே
நெருக்கடி கிடையாது,” என்று கூறி, ஒருங்கிணைந்த நிதிய
கொள்கைகளுக்கான முன்மொழிவுகளை அவர் உதறித் தள்ளினார்.
உலக பொருளாதாரம் குறித்து எதிர்மறை புள்ளிவிபரங்கள்
தொடர்ந்து வந்து கொண்டிருப்பது, எந்தவொரு திடமான நடவடிக்கைகள் மீதும்
உடன்பாடு எட்டப்படாமல் போவது, நிதியியல் அமைப்புமுறையில் அதிகரித்துவரும்
ஸ்திரமின்மை மற்றும் பிரதான சக்திகளுக்கு இடையே ஆழமடைந்து வரும் மோதல்கள்
ஆகியவை அதுபோன்ற வலியுறுத்தல்களைப் பொய் ஆக்குகின்றன.
|