World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan Currency falls sharply இலங்கை நாணயம் தீவிரமாக விழ்ச்சியடைகிறது
By Saman Gunadasa செப்டம்பர் 4 அன்று அரசாங்க கொள்கைக்கு ஏற்ப மத்திய வங்கி இலங்கை நாணயத்தை மிதக்கவிட்டதால், ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்னும் 4 சதவீதம் தீவிரமாக சரிந்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் டாலருக்கு 137 ஆக இருந்த ரூபா வெள்ளியன்று 143 ஆனது. மதிப்பை குறைப்பதற்காக நாணயத்தை மிதக்கவிட்டமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் "தேசிய ஐக்கிய அரசாங்கம்" எடுத்த முதல் முக்கிய சிக்கன நடவடிக்கை ஆகும். கடந்த வாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரசாங்கம் "நீண்ட காலம் எடுப்பதற்கு முன் அதை [ரூபாவை] ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு மீட்பதை உறுதி செய்யும்" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அவர் கருதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு எதுவென்று சொல்லவில்லை. எனினும், ராய்ட்டர்ஸ் கூறியதாவது: "மத்திய வங்கி வட்டி விகிதங்களை இறுக்க தவறினால் அல்லது நாட்டிற்கு வலிமையான அந்நிய நேரடி முதலீடு விரைவில் கிடைக்கவில்லை என்றால், நாணயம் குறுகிய காலத்தில் மேலும் வீழ்ச்சியடைவதையே சந்தை எதிர்பார்க்கிறது.” ஜனவரி முதல், இலங்கை ரூபாய் 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது." வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே அதிக இலாபம் நாடி வேறு இடங்களுக்கு வெளியேறுகிறார்கள். கொழும்பு பங்கு சந்தை ஏழாவது வாரமாக வீழ்ச்சியை கண்டுள்ளது. "அமெரிக்கா தலைமையிலான அநேகமான உலக முதலீட்டாளர்கள், இலங்கை போன்ற நாடுகளில் உள்ளவை உட்பட சந்தைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்ற பலவீனமான சந்தைகளில் இருந்து வெளியேறி, அமெரிக்கா போன்ற தமது சொந்த நாட்டில் தங்கள் சொத்துக்களை மறு முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு சமிக்ஞை செய்யும்," என்று முதல் மூலதன சமபங்கு ஆய்வாளர் ரொஷான் விஜேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாட்டின் வரவு-செலவு திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்த ஒரு சர்வதேச நாணய நிதியம் (IMF) குழு, தனது நீண்டகால கோரிக்கையான ரூபாயை மிதக்க விடுவதை பாராட்டினார். கடந்த வெள்ளியன்று ஒரு அறிக்கை அறிவித்ததாவது: "ரூபாயின் மதிப்பை அன்றாடம் தீர்மானிப்பதை நிறுத்தி, நாணய மாற்று விகிதத்தை நிர்ணயிப்பதில் சந்தை சக்திகள் முக்கிய பங்கு வகிக்க அனுமதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அண்மையில் எடுத்த முடிவை இந்தக் குழு வரவேற்கிறது." 2015 முதல் பாதியில், ரூபாயின் மதிப்பிறக்கம் விலைவாசியை உயர்த்துவதோடு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்திக்கு எரியூட்டும் என்று அஞ்சியதால், அரசாங்கம் ரூபாயை பாதுகாக்க அதன் இருப்புக்களில் இருந்து 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்தது. நாட்டின் இருப்பு இப்போது 7.5 பில்லியன் டாலர்களாகும். நாணய மாற்று ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 1.5 பில்லியன் டாலர் இந்திய கடனும் இதில் அடங்கும். ஏனைய எழுச்சி பெறும் பொருளாதாரங்கள் போலவே, மிக அண்மையில் ஆகஸ்ட்டில் சீனாவின் யுவானின் கூர்மையான மதிப்பிறக்கம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்களின் வளர்ச்சியின் தாக்கம் பற்றிய கவலையினாலும் தூண்டிவிடப்பட்ட சர்வதேச நாணய கொந்தளிப்பால் இலங்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வட்டி விகித உயர்வை ஒட்டி அதேவேளை, இலங்கை நாணயம் அழுத்தத்தின் கீழ் இருந்தது. 2015ல் 7 சதவிகித வளர்ச்சி என்ற அரசாங்கத்தின் மதிப்பீட்டை விட கணிசமானவு குறைவான 5 முதல் 5.5 சதவீத வளர்ச்சி விகிதமே முன்கணிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் மொத்த கடன் 8.2 ட்ரில்லியன் ரூபாய்களாக (58.7 பில்லியன் டாலர்) ஊதிப் பெருத்துள்ளது, இதில் கிட்டத்தட்ட பாதி வெளிநாட்டுக் கடன்களாகும். அரசாங்கத்தின் ஆண்டு கடன் சேவைக்கான செலவு இப்பொழுது அரசாங்கத்தின் மொத்த வருமானத்தை தாண்டி விட்டது. இது நாட்டின் அந்நிய செலாவணி பிரச்சினைகளை உக்கிரமாக்கும். வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4 பில்லியன் டாலர்களாக 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சரக்குகளின் விலை வீழ்ச்சி காரணமாக தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகின்றது. ரூபாய் மதிப்பு சரிவதானது விலைவாசியை உயர்திவிடவுள்ள நிலையில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு அது பெரும் அடியாக இருக்கும். இலங்கையில் வெளிவரும் சண்டே டைம்ஸ் படி, மொத்த வியாபாரிகள் சங்கம் தங்களால் உறுதியான விலைகளை பராமரிக்க முடியவில்லை என்று நிதி அமைச்சர் கருணாநாயக்கவிடம் புகார் செய்துள்ளது. பண வசதியில்லாத அரசாங்கம் செப்டம்பர் 9 அன்று உருளைக் கிழங்கு மற்றும் சீனி மீது கிலோவுக்கு முறையே 10 மற்றும் 12 ரூபாய் பண்ட வரியை அதிகரிப்பதாக அறிவித்தது உருளைக்கிழங்கு விலை உடனடியாக 10 ரூபா அதிகரித்த போதிலும், சீனி வியாபாரிகள் விலையை உயர்த்த வேண்டாம் என அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளது. எவ்வாறெனினும், சர்வதேச விலைகள் மாறிக்கொண்டே இருக்கும் நிலைமையிலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியினாலும் சர்க்கரை விலையை தக்க வைக்க முடியாது என இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர். செப்டம்பர் 12, வெளிநாட்டு நாணய கையிருப்புக்கு முட்டுக் கொடுக்கும் மற்றொரு முயற்சியாக, மத்திய வங்கியானது இறக்குமதியை மெதுவாக்கும் பிரயத்தனத்தில், வாகனங்கள் மீதான குத்தகை ஏற்பாட்டை அவற்றின் மதிப்பின் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக கீழிறக்கியது. அந்நிய செலாவணி நெருக்கடியை தவிர்ப்பதற்காக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இன்னும் 4 பில்லியன் டாலர் கடனை எதிர்பார்க்கிறது. 2014 வரவு செலவு பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாக குறைக்கத் தவறியமைக்காக மார்ச் மாதம் இதே கோரிக்கையை நாணய நிதியம் முழுமையாக நிராகரித்தது. அரசாங்கம் இந்த ஆண்டு பற்றாக்குறையை 4.4 சதவீதமாக கட்டுப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய குழு பரந்த சந்தைச் சார்புடைய சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்தது. "எரிபொருள் மற்றும் மின்சார விலை, மானியங்கள், வர்த்தக கொள்கை, காரணி சந்தைகளில் தாராளமயமாக்கல், மற்றும் முதலீட்டு சூழலை ஏற்படுத்துதல்", போன்றவையும் இதில் அடங்கும். “அரசாங்க நிறுவனங்களை சந்தையை அடிப்படையாகக் கொண்ட நிதியத் தீர்மானங்களை எடுக்க அனுமதிக்கும் மற்றும் அவற்றை உயர்ந்த நிதிய ஒழுக்கத்துக்கு கீழ்படுத்தும் வகையில் அவற்றை வணிகத் தளத்துக்குள் கொண்டுவருமாறும்” அது பரிந்துரைத்துள்ளது. இத்தகைய "சீர்திருத்தங்கள்" தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ளன. மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர்வழங்கல் சபை மற்றும் துறைமுகங்கள் போன்ற முக்கிய அரசாங்க நிறுவனங்களின் தனியார்மயமாக்கம் அல்லது கூட்டுத்தாபனமயமாக்கம், மேலும் விலையுயர்வு மற்றும் வேலை இழப்புக்களுக்கு மட்டுமே வழிவகுக்கும். சர்வதேச
நாணய
நிதியத்தின்
கோரிக்கைகளை
வலியுறுத்தும்
விதத்தில்,
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
செப்டம்பர்
15 வெளியிட்ட ஒரு
கட்டுரையில்
அறிவுரை
கூறியுள்ளது:
"பெரும்
பொருளாதார
ஸ்திரத்தன்மை
மிகவும்
அவசரமானதாகும்.
இலங்கையின்
கடன்
அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாது மற்றும்
நாடு
மற்றொரு
அந்நிய செலாவணி
நெருக்கடியை நோக்கி நகர்கின்றது.
அது
வளர்ந்து
வரும்
சந்தைகளில்
மூலதனப் பாய்ச்சல் பலவீனமாக உள்ள
ஒரு
நேரத்திலே
அயல்நாடுகளிடம் பெறும்
வர்த்தகக்
கடன்களை
அபாயகரமான முறையில்
நம்பியுள்ளது.
மேலும்
பொது
கடன்
குவிப்பைத் தடுக்கவும்
கடன்
நிதியளிப்பை
இன்னும்
நிலையானதாகச் செய்யவும் வரி
மற்றும்
செலவில்
தீவிர திருத்தம் செய்ய
வேண்டும்.
அச்சக நடவடிக்கைகள்
நிறுத்தப்பட
வேண்டும்.
" கொழும்பில் உள்ள புதிய "தேசிய ஐக்கிய" அரசாங்கம், இந்த சிக்கன திட்டங்களை செயல்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் இரக்கமற்ற முறையில் ஒடுக்கவுமே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. |
|