World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை US announces shift on Sri Lankan war crimes investigation இலங்கை யுத்தக் குற்ற விசாரணைகள் சம்பந்தமாக அமெரிக்கா மாற்றங்களை அறிவிக்கின்றது
By K. Ratnayake அடுத்த மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) கூட்டத் தொடரில், போர் குற்றங்கள் எனப்படுவது பற்றி இலங்கை அரசாங்கம் நடத்தும் விசாரணைக்கு ஆதரவான ஒரு தீர்மானத்திற்கு வாஷிங்டன் அனுசரணையளிக்கப் போவதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால், 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடத்திய இராணுவத் தாக்குதல்களின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் எனப்படுவது பற்றி, ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி வாஷிங்டனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இருந்து ஒரு பெரிய மாற்றத்தினை அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறிக்கின்றது. ஐ.நா. புள்ளிவிபரங்களின் படி, இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டு மற்றும் செல் தாக்குதல்களில் சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிஸ்வாலின் இரண்டு நாட்களுக்கான இலங்கை விஜயம், கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி தலமையிலான கூட்டணியின் வெற்றிக்கு வாஷிங்டனின் ஆதரவைத் தெரிவிப்பதாக இருந்தது. அவருடன் மனித மற்றும் தொழிலாளர் உரிமைக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலினோவ்ஸ்கியுடன் வந்திருந்தார். அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்தனர். அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்துடனும் ஏனைய பங்காளிகளுடனும் இணைந்து, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத்தில், ஒரு இணைத் தீர்மானத்தினைக் கொண்டுவரப்போவதாக, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பிஸ்வால் தெரிவித்தார். யுத்தக் குற்றச் சாட்டுகள் மீதான சர்வதேச விசாரணைக்கு தனது ஆதரவினைக் கைவிடும் அமெரிக்காவின் முடிவினை பிஸ்வால் பின்வருமாறு நியாயப்படுத்தினார்: “(தமிழ் கட்சிகளுடன்) முன்னேற்றமான நல்லிணத்துக்காக முயற்சிக்கின்ற ஒரு வேறுபட்ட சந்தர்ப்பம் இன்று வந்துள்ளதை நாங்கள் கண்டுள்ளோம்.” “மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் பற்றிய கவலைகளை அனுகுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதோடு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு உள்நாட்டுப் பொறி முறை ஒன்று” அமைக்கப்படும், என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார். அந்தப் பொறிமுறையின் தன்மை பற்றி அவர் விளக்கவில்லை. சர்வதேச விசாரணையை விட ஒரு உள்ளக விசாரணையானது இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பான தற்பொழுது அதிகாரத்தில் இருப்பவர்களை மூடி மறைப்பதற்கான இயலுமையை அரசாங்கத்துக்கு வழங்கும். ஜனாதிபதி சிறிசேன, யுத்தக் குற்றங்கள் நடந்தபோது, இராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒரு முன்னணி அங்கத்தவராக இருந்தார். உத்தேச யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. யு.என்.எச்.ஆர்.சி.யினால் நிமிக்கப்பட்ட ஒரு குழு, அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கவுள்ள அறிக்கையை அடுத்தே தீர்மானம் ஒழுங்குபடுத்தப்படும் என பிஸ்வால் கூறினார். மனித உரிமை மீறல் விசாரணையில் ஒபமா நிர்வாகம் கரனம் அடித்தமை ஆச்சரியம் மிக்கது அல்ல. சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ச்சியாக தெளிவுபடுத்தி வந்தது போல், இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டுவரப்படும் தீர்மானமானங்களுக்கும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, மாறாக அவை, வாஷிங்டனின் பரந்த பூகோள மூலோபாய நலன்களுடன் பிணைந்துள்ளது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களின் இனவாத யுத்தத்துக்கு இறுதிவரை ஆதரவளித்து வந்த அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும், 2006ல் இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் கடும் இராணுவத் தாக்குதலை ஆரம்பிக்க ஊக்கம் கொடுத்தன. (பார்க்க; “இலங்கையின் யுத்தக் குற்றங்களும் மற்றும் அமெரிக்க “மனித உரிமை” போலித்தனமும்”). வாஷிங்டன், இலங்கை யுத்தத்தின் இறுதி மாதங்களில் மட்டுமே மனித உரிமை மீறல் பிரச்சினையை தூக்கிப் பிடித்தது. சீனா, நிதி மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்கி இலங்கை அரசாங்கத்தின் முதன்மை ஆதரவாளராகத் தலைநீட்டியது. யுத்தத்தின் பின்னர், சீனா இலங்கையில் பெருமளவு முதலீடுகளை செய்துள்ளது. ஒபமா நிர்வாகத்தின் -சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்துவதற்கும் இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதற்குமான – “ஆசியாவில் முன்நிலை” திட்டத்தின் வழியில், பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகளுக்கு குழிபறிக்க முன்நகர்ந்த வாஷிங்டன், ஆசிய–பசுபிக் பிராந்தியத்தில், மூலோபாய கூட்டணி வலையமைப்பிற்குள் கொழும்பை உறுதியாக உள்வாங்கிக்கொண்டது. இராஜபக்ஷவை பெய்ஜிங்கில் இருந்து தூர விலக்குவதற்கு நெருக்குவதற்காகவே அமெரிக்கா யுத்தக் குற்றச் சாட்டு அச்சுறுத்தலை பயன்படுத்திக்கொண்டது. அந்த திட்டம் தோல்வியடைந்தபோது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவினதும் ஆதரவைப் பெற்ற வாஷிங்டன், இலங்கைக்குள் ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கையை திட்டமிட்டது. ஜனவரி 8 நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை அகற்றிவிட்டு, சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தியது. ஆகஸ்ட் 17 பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றமையும் பிரதமராவதில் இராஜபக்ஷ தோல்வி கண்டமையும் இலங்கைக்குள் தனது நிலையை பலப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கணக்கிடுகின்றது. இதுவே பிஸ்வால் குறிப்பிடும் “வேறுபட்ட களம்” ஆகும். நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க), ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க) போன்ற போலி- இடது அமைப்புக்களும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் ஏனைய மத்தியதர – வர்க்க குழுக்களும் அமெரிக்காவின் போலி “மனித உரிமைகள்” பிரச்சாரத்துடன் அணிசேர்ந்துகொண்டு, அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு நேரடியாகவோ அல்லது வேறுவழியிலோ ஆதரவளித்தன. வாஷிங்டனின் சூழ்ச்சித்திட்டங்களுக்கும் “மனித உரிமைகளுக்கும்” எந்த தொடர்பும் கிடையாது, மாறாக, அவை அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்குச் சேவையாற்றுமா என்பதைப் பொறுத்தே அந்த விடயங்கள் மூடப்படுவதும் அல்லது திறக்கப்படுவதும் இடம்பெறுகின்றது. வாஷிங்டன் முன்னர், மியன்மாரையும் அதன் இராணுவ ஆட்சியையும் ஒரு தீண்டதகாத அரசாக முத்திரை குத்தி வைத்திருந்தது. ஆனால், இராணுவ ஆட்சி பெய்ஜிங்கிடம் இருந்து தூர விலகி, வாஷிங்டனை நோக்கித் திரும்பியதை அடுத்து, அந்த நாடு ஜனநாயகத்துக்கு மாற்றப்பட்ட அரசாக மறு வரையறை செய்யப்பட்டது. தனது இரண்டு நாட்கள் விஜத்தில் ஐ.தே.க.வை அதன் தேர்தல் வெற்றிக்காக ஆர்வத்துடன் பாராட்டிய பிஸ்வால், திங்களன்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சில் அறிவித்ததாவது: “உண்மையில் ஜனநாயகம், நல்லாட்சி, சமாதானம் மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் இலங்கைக்கு அமெரிக்காவின் பலமான ஆதரவை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் மிக முக்கியமான நேரத்தில் இங்கு இருக்கின்றோம்.” வாஷிங்டன் சிறிசேன, விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளது, என அவர் கூறினார். இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கான வாஷிங்டனின் வெளிப்படையான ஆதரவு, இலங்கையில் தனது நிகழ்சி நிரலைக் குழப்பும் எந்தவிதமான முயற்சிகளையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்ற தெளிவான செய்தியை இராஜபக்ஷவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சொல்லியுள்ளது. அமெரிக்கா, சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதை முன்நகர்த்துகின்றது என்ற சமிக்ஞையையும் அது பெய்ஜிங்குக்கு காட்டியுள்ளது. கொழும்பின் யுத்தக் குற்றங்களை விசாரிக்குமாறும் சர்வதேச விசாரணைகளை நடத்துமாறும் வாஷிங்டனுக்குப் பின்னால் அடிமைத்தனமாக ஓடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ குழுக்களும், இலங்கையில் தமிழ் முதலாளித்துவ கும்பலுக்கு ஒரு அதிகாரப் பரவாலாக்கல் ஒழுங்குக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தன. எவ்வாறாயினும், பிஸ்வால் நேற்று ஊடகங்களுடன் பேசும்போது, தான் தமிழ் கூட்டமைப்புடன் யுத்தக் குற்ற விடயங்கள் பற்றிப் பேசியதாகவும், புதிய அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். இது அமெரிக்க மனித உரிமைகளுக்கான உதவிச் செயலாளர் ரொம் மலினோவ்ஸ்கியினால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. “இந்த செயல்பாட்டுக்கு காலமெடுக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம், யாரும் அதிசயத்தினை எதிர்பாக்க முடியாது,” என அவர் கூறினார். சீனாவுக்கு எதிரான அதன் யுத்த திட்டங்களுக்குள் தீவை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்கள் மீது சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கனத் திட்டங்களை அமுல்படுத்தவும், இலங்கையில் அமெரிக்கச்-சார்பு அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதையே ஒபாமா நிர்வாகம் விரும்புகிறது. |
|