World Socialist Web Site www.wsws.org |
With US backing, France launches bombing campaign in Syria அமெரிக்க ஆதரவுடன், பிரான்ஸ் சிரியாவில் குண்டுவீச்சு நடவடிக்கையை தொடங்குகிறது
By Nick Beams உலக பொருளாதாரம் மீது பாதிப்பு ஏற்படுத்தும் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க, துருக்கியில் நடத்தப்பட்டுவரும் உலக அரசியல் தலைவர்களின் ஜி20 உச்சிமாநாடு, ஒரு போர் விவாதக்குழுவாக மாறியுள்ளது. வெள்ளியன்று இரவு நடந்த பாரீஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதான ஏகாதிபத்திய சக்திகள் சிரியாவில் அவர்களது இராணுவ தலையீட்டைத் துரிதமாக தீவிரப்படுத்த நகர்ந்து வருகின்றன. நேற்று மாலை பிரெஞ்சு போர் விமானங்கள் சிரியா மீது மிகப்பெரும் குண்டுவீச்சை நடத்தின. அதேநேரத்தில் அதனுடன் சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டானும் தாக்குதலைத் தொடங்கின, அவை சிரியாவின் ரக்கா நகரம் மீது 20 குண்டுகள் வீசின. ஓர் ஆயுதக்கிடங்கு மற்றும் ஒரு பயிற்சி மையம் மற்றும் ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) கட்டளை மையத்தை அவை குறிவைத்திருந்ததாக செய்திகள் அறிவித்தன. அந்நடவடிக்கை அமெரிக்க படைகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், “எதிர்வரும் நாட்களில் மற்றும் வாரங்களில்" அமெரிக்காவும் பிரான்ஸூம் "இத்தகைய பயங்கரவாதிகளுக்கு அங்கே பாதுகாப்பான இடங்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்த … [ISIS]க்கு எதிரான நமது தாக்குதல்களை தீவிரப்படுத்தும்" என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். NBCஇன் "பத்திரிகையாளர் சந்திப்பு" நிகழ்ச்சியில் பேசுகையில், அங்கே அமெரிக்க இராணுவ முயற்சிகளில் "தீவிரமயப்படுத்தல்-த்தன்மை-" இருக்கும், “இங்கே ஜி-20 இல் நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் அந்த முயற்சிக்கு துணையாக எங்களுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும் வகையில், எமது சில பங்காளிகளிடமிருந்து கூடுதல் பங்களிப்புகளைப் பெற முயன்று வருகிறோம்.” என ரோட்ஸ் கூறினார் அவ்வாறான விளைவுகளைக் குறித்து கவனத்திற்கொள்ளாது அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து, அமெரிக்க நடவடிக்கையின் மிகப்பெரும் தீவிரப்பாட்டுக்குக் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டெக்சாஸ் செனட்டர் டெட் குருஜ் கூறுகையில், அப்பாவி உயிர்களை பயங்கரவாதிகளே முற்றிலும் மதிக்காமல் இருக்கையில், பொதுமக்களுக்கு ஒருவித பாதிப்பும் ஏற்படக்கூடாதவகையிலான குறிவைக்கப்பட்ட தாக்குதல்களால் ISIS ஐ "பின்வாங்கச் செய்ய முடியாது" என்றார். ஏற்கனவே அமெரிக்க-தூண்டுதல் கொண்ட உள்நாட்டு போரில் சீரழிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள் மீதான விளைவுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், பாரியளவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை அதிகரிக்க அவர் விடுத்த அழைப்பை, செனட் உளவுத்துறை குழுவில் அமர்ந்துள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சி டேனி ஃபைன்ஸ்டைனும் எதிரொலித்தார். “மட்டுப்பட்ட விமான தாக்குதல்களும் ஈராக்கிய மற்றும் சிரிய எதிர்த்தரப்பாளர்களுக்கான ஆதரவும் நமது நாட்டையும் மற்றும் நமது கூட்டாளிகளையும் பாதுகாக்க போதுமானதல்ல என்பது தெளிவாகிறது,” என்று ஃபைன்ஸ்டைன் தெரிவித்தார். 2009 இல் இருந்து 2013 வரை ஐரோப்பாவில் நேட்டோவின் உயர்மட்ட தளபதியாக சேவையாற்றிய ஓய்வூபெற்ற கடற்படை அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ், சிரியா மற்றும் ஈராக்கில் நேரடி நேட்டோ தலையீடுக்கு அழைப்புவிடுத்தார். “மத்திய கிழக்கில் மென்மையான பலத்துடன், நீண்டகாலத்திற்கு விளையாடுவதும் அவசியப்படுகிறது தான், ஆனால் கடுமையான பலத்தை இரக்கமின்றி பிரயோகிப்பதற்கான காலமும் உண்டு. இது அதற்குரிய நேரம், நேட்டோ இஸ்லாமிய அரசுக்கு எதிராக இராணுவரீதியில் தீவிரமாக பிரதிபலிப்பைக் காட்ட வேண்டும்,” என்று ஸ்டாவ்ரிடிஸ் தெரிவித்தார். ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாள், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் 35 நிமிடங்கள் விவாதித்தார், அதை வெள்ளை மாளிகை "ஆக்கப்பூர்வமான" பேச்சுவார்த்தையாக வர்ணித்தது. அந்த கூட்டத்தைத் தொடர்ந்து, சிரியாவில் ஒரு போர்நிறுத்தத்தை நோக்கியும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் அங்கே தேர்தல்களை நடத்துவதை நோக்கியும் செயற்படுவது என்று சனியன்று வியன்னாவில் சர்வதேச சிரிய ஆதரவு குழுவின் 17 அங்கத்துவ வெளிநாட்டு மந்திரிமார்களின் கூட்டம் ஒன்றில் உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு குழுவில் ஐந்து நிரந்தர அங்கத்தவர்களை உள்ளடக்கிய குழு, முக்கிய பிரச்சினைகளில் ஒரு "பொதுவான புரிந்துணர்வு" எட்டப்பட வேண்டுமென ஓர் அறிக்கை வெளியிட்டது. அதற்கடுத்து ஜி20 இல் ஒபாமா மற்றும் புட்டினுக்கு இடையே நடந்த விவாதங்கள், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சிக்கு ரஷ்ய ஆதரவை முழுவதுமாக நீக்குவது குறித்து இல்லையென்றாலும், அதை நிறுத்திவைக்கும் அமெரிக்க நோக்கங்களின் பாகமாக நடந்தன. அந்த உடன்படிக்கையின் கீழ், ஒரு போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, “ஒருங்கிணைந்த மற்றும் இனக்குழுக்கள் சார்பற்ற" அரசு நிர்வாகத்தை ஸ்தாபிப்பது, புதிய அரசியலமைப்பு வரைவது மற்றும் ஐநா மேற்பார்வையின் கீழ் 18 மாதங்களுக்குள் தேர்தல்களை நடத்துவது ஆகியவற்றிற்கான ஒரு நிகழ்முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். எவ்வாறிருப்பினும் உறுதியான முக்கிய புள்ளி அசாத்தின் எதிர்காலத்தைக் குறித்ததாகும். ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஒரு நேர்காணலில், புட்டின் கூறுகையில் அசாத்தைப் பதவியிலிருந்து இறங்க கோர வேறு நாடுகளுக்கு உரிமையில்லை என்று தெரிவித்தார், மற்றும் "தங்களுக்கு விதிவிலக்கு இருப்பதாக நம்புபவர்கள் மட்டுந்தான் [இது அமெரிக்காவைக் குறித்த மிக பகிரங்கமான குறிப்பு] இதுபோன்ற நடவடிக்கைகளுக்கும் மற்றும் ஏனையவர்கள் மீது தங்களின் விருப்பத்தைத் திணிக்கவும் தங்களைத்தாங்களை அனுமதித்துக் கொள்கிறார்கள்,” என்றார். அமெரிக்கா மத்தியக் கிழக்கை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக அப்பிராந்தியத்தில் அதன் ஆட்சிமாற்ற நடவடிக்கைகளின் பாகமாக, அசாத் அரசாங்கத்தை மாற்றுவதற்கு 2011 இல் இருந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யா சிரியாவில் ஒரு கடற்படை தளம் உட்பட அப்பிராந்தியத்தில் அதன் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க அசாத்தை ஆதரிக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரையில் அசாத்தை வெளியேற்றாமல் அங்கே ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது என்பதை அது தெளிவாக்கி விட்டது — இந்த நிலைப்பாட்டை ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் திரும்ப எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், ஒரு "இடைமருவு ஆட்சியை" அதிகாரத்திற்குக் கொண்டு வர வேண்டும், “ஆனால் அசாத்தை அதிகாரத்தில் வைத்துக் கொண்டே அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை அனுமானிப்பதும் கடினமாக உள்ளது,” என்றார். இந்த கருத்துக்கள், அதிகரித்த இராணுவ தாக்குதல் ISIS எதிரான ஒரு "போர்" என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட்டு வந்தாலும், நிஜமான இலக்கு அசாத் ஆட்சியே என்பதைத் தெளிவுபடுத்துகின்றன, அந்த ஆட்சியை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இரண்டுமே கவிழ்க்க விரும்புகின்றன. ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் தலையிட தயாரிப்பு செய்து வருகின்றன. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரிட்டிஷ் படைகளை அனுப்ப நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரும் அவரது விருப்பத்தைச் சுட்டிக்காட்டினார். இங்கிலாந்து ஆகஸ்ட்-செப்டம்பர் 2013 இல் சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவின் திட்டங்களை ஆதரிக்க மறுத்திருந்தது, அது ஒபாமா பின்வாங்குவதற்கும் மற்றும் சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான ரஷ்யாவின் ஒரு தலையீட்டை ஏற்றுக் கொள்வதற்கும் காரணமாக அமைந்தது. “ISIS ஈராக்கில் இருந்தாலும் சரி அல்லது சிரியாவில் இருந்தாலும் சரி, அதை பலவீனப்படுத்தி இறுதியில் அழிப்பதைத் தான் நமது பாதுகாப்பும் அபாயமின்மையும் சார்ந்துள்ளது என்பது முன்பினும் அதிகமாக தெளிவாகிறது,” என்று கேமரூன் தெரிவித்தார். ஜி20 மாநாட்டில் ஒபாமா பேசியதை அடுத்து, புட்டினின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒரு சமரசம் குறித்து பேசுவது மிகவும் அவசரப்படுவதாக இருக்கும், அங்கே பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் "ஒற்றுமை" தேவைப்படுகிறது என்றார். இந்த கருத்து, பைனான்சியல் டைம்ஸ் எதை "மெல்லிய ஏளனமான மூடிமறைப்பு" என்று வர்ணித்ததோ, அது ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவர் டோனால்ட் டஸ்க் பாகத்திலிருந்து வந்த கருத்தை எதிர்கொண்டது. “நமக்கு கூடுதலான கூட்டு-ஒத்துழைப்பு மட்டுமே அவசியமில்லை மாறாக அதிக நல்லெண்ணமும் அவசியப்படுகிறது, அதுவும் குறிப்பாக சிரியா மண்ணில் ரஷ்ய நடவடிக்கைகளில். அது இஸ்லாமிய அரசின் மீது அதிகமாக ஒருமுகப்பட வேண்டுமே ஒழிய…. மிதவாத சிரிய எதிர்த்தரப்பிற்கு எதிராக அல்ல,” என்று தெரிவித்தார். “மிதவாத சிரிய எதிர்த்தரப்பு" என்பது ஏகாதிபத்திய அரசியல்வாதிகளாலும் அவர்களுக்கு உடந்தையான ஊடகங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை. அசாத் ஆட்சியை எதிர்க்கும் சக்திகள், அல் கொய்தா வளர்த்தெடுத்த அல் நுஸ்ரா போன்ற, இதிலிருந்து தான் ISIS அபிவிருத்தி அடைந்தது, குழுக்களால் நிரம்பியவை. இராணுவ பயிற்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்ட பின்னரும், அமெரிக்கா அந்த வகைப்பாடுக்குள் நான்கு அல்லது ஐந்து நபர்களை மட்டுமே காண முடிந்தது என்பது வெளியான போதே, இந்த “மிதவாதிகள்" என்றழைக்கப்படும் கற்பனை பாத்திரம் இந்தாண்டின் தொடக்கத்தில் அம்பலமானது. பாரீஸ் பயங்கரவாத தாக்குதல் மத்தியக் கிழக்கில் அமெரிக்க நடவடிக்கைகளின் ஒரு பயங்கர பின்விளைவாகும். ஏகாதிபத்திய உலக தலைவர்களிடமிருந்தும் மற்றும் ஜி20 விவாதங்களிலிருந்தும் வெளிவரும் அறிக்கைகள், நேற்றைய குற்றங்களிலிருந்து விளையும் பயங்கரவாத தாக்குதல்கள் புதிய ஒன்றை நடத்துவதற்குத் துரிதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையே தெளிவாக்குகின்றன. |
|