World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Greek central bank warns of “uncontrollable crisis” கிரேக்க மத்திய வங்கி "கட்டுப்படுத்தவியலா நெருக்கடி" குறித்து எச்சரிக்கிறது
By Robert Stevens யூரோ மண்டல நிதியியல் மந்திரிமார்களின் கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், நிகழவிருக்கும் உடனடியான ஒரு பொருளாதார பொறிவை அந்நாடு முகங்கொடுத்திருப்பதாக பேங்க் ஆஃப் கிரீஸ் எச்சரித்தது. சிரிசா தலைமையிலான அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் சர்வதேச கடன்வழங்குனர்களான ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றிற்கு இடையே மாதக்கணக்கில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தின் நிபந்தனைகளின் மீது கசப்புணர்வோடு வாரயிறுதியில் முறிந்துபோனது. பெப்ரவரியில் இருந்து நடந்துவரும் அந்த பேச்சுவார்த்தைகள், சிரிசா மேலதிகமாக வெட்டுக்களைத் திணிக்க உடன்பட்டால் அந்த அமைப்புகளிடமிருந்து கிரீஸ் 7.2 பில்லியன் யூரோவைப் பெறுமா என்பதன் மீது மையமிட்டிருந்தது. ஜூன் 30 அன்று, இப்போதைய வேலைத்திட்டம் காலாவதியாகிறது, அதனுடன் ஏதென்ஸ் சர்வதேச நாணய நிதியத்திற்கு 1.6 பில்லியன் யூரோ செலுத்த வேண்டி உள்ளது. அதற்குப்பின்னர் சில வாரங்களிலேயே ஏதென்ஸ் திவால்நிலைமைக்குள் தள்ளப்படலாம். புதனன்று சிரிசாவின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் Euclid Tsakalotos அப்பட்டமாக அறிவிக்கையில், சிரிசா பதவிக்கு வந்ததிலிருந்து 13 பில்லியன் யூரோவிற்கும் கூடுதலாக ஏற்கனவே திரும்ப செலுத்தி உள்ளபோதினும், “எங்களுக்கு இதுவரையில் பணம் கிடைக்கவில்லை” என்றார். எவ்வாறிருந்த போதினும் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் கூறுகையில், அவரது அரசாங்கம் இன்றைய யூரோ குழும கூட்டத்தில் எந்த புதிய பரிந்துரைகளையும் முன்வைக்காது என்றார். “ஓர் உடன்படிக்கை எட்டப்படாமல் போனால்… ஆரம்பத்தில் கிரேக்க திவால்நிலைமைக்கு இட்டுச் சென்று, இறுதியில் அந்நாடு யூரோ பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும், பெரும்பாலும் அனேகமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே வெளியேறுவதற்கும் இட்டுச் செல்லும் ஒரு வலிநிறைந்த போக்கு தொடங்குவதைக் குறிக்கிறது,” என்று கிரீஸின் மத்திய வங்கி அதன் வழமையான மாதாந்திர அறிக்கையில் அப்பட்டமாக எச்சரித்தது. ஓர் உடன்படிக்கை எட்டப்படாமல், ஒரு “நிர்வகிக்கக்கூடிய கடன் நெருக்கடியானது… வங்கியியல் அமைப்புமுறை மற்றும் நிதியியல் ஸ்திரப்பாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல்களுடன் ஒரு கட்டுப்படுத்தவியலா நெருக்கடிக்குள் தள்ளும். யூரோவிலிருந்து வெளியேறுவது என்பது ஏற்கனவே பாதகமாக உள்ள சூழ்நிலையை இன்னும் சிக்கலாக்க மட்டுமே செய்யும் என்பதுடன், அதற்கடுத்து ஏற்படும் கூர்மையான செலாவணி விகித நெருக்கடி பணவீக்க அதிகரிப்பையே வழங்கும்,” என்று அந்த அறிக்கை கடுமையான மொழியில் எச்சரித்தது. அந்த வங்கி தொடர்ந்து குறிப்பிட்டது, “இவை அனைத்தும் ஆழ்ந்த மந்தநிலை, வருவாய் மட்டங்களில் கடுமையான வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மையில் பரந்த அதிகரிப்பு மற்றும் கிரேக்க பொருளாதாரம் இதுவரையிலான ஆண்டுகளில் அதன் ஐரோப்பிய ஒன்றிய, மற்றும் குறிப்பாக அதன் யூரோ பகுதி அங்கத்துவத்திலிருந்து எட்டிய எல்லா ஆதாயங்களும் பொறிந்து போவதையும் மறைமுகமாக உள்ளடக்கி உள்ளது. ஐரோப்பாவின் ஒரு முக்கிய அங்கத்துவ நாடாக அதன் இடத்திலிருந்து, கிரீஸ் ஐரோப்பாவின் தெற்கில் உள்ள ஒரு வறிய நாடாக தரமிறங்குவதைக் கிரீஸ் காணும்.” “1981 இல் ஜனநாயகத்திற்குத் திரும்பிய பின்னர் உடனடியாக ஏதென்ஸ் இணைந்து கொண்ட அந்த 28 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து அந்நாடு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து முதல்முறையாக பகிரங்கமாக கிரேக்க அதிகாரிகள் பேசியிருப்பது" இந்த அறிக்கையில் தான் என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. மத்திய வங்கியின் தலையீடு , அரசியல்ரீதியில் சிரிசாவிற்கு எதிராக திரும்பி இருந்தது, அதன் தலைவர் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதற்கு முன்னால் அவற்றில் சிலவற்றை நீக்குமாறு கோரி வருகிறார். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் தீவிரமான கோரிக்கைகளுக்கு மண்டியிடும் ஒரு கொள்கைக்கு, கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளிடையே இருக்கும் ஆதரவை சுட்டிக்காட்டுகிறது. கிரேக்க மத்திய வங்கியின் தலைவர் Yannis Stournaras பழமைவாத புதிய ஜனநாயகம் (ND) அரசாங்கத்தில் நிதி மந்திரியாக இருந்தபோது (2012 இல் இருந்து 2014 வரையில்) ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தலைமை வகித்தவராவார். அவர் "அவரது நிறுவனத்தில் வகிக்கும் பாத்திரத்தின் எல்லையைக் கடந்து மட்டும் செல்லவில்லை, அவர் நடவடிக்கைகளில் மற்றும் கிரேக்க அரசாங்கத்தின் பேரம்பேசும் திறமைகளில் ஒரு மூச்சுத்திணறடிக்கும் கட்டமைப்பை உருவாக்க பங்களிப்பு செய்து வருகிறார்,” என்று Stournaras ஐ குற்றஞ்சாட்டி சிரிசா ஓர் அறிக்கையை வெளியிட்டது. (யூரோ மண்டலத்திலிருந்து) “கிரீஸ் வெளியேறுவதன்" (Grexit) மீது தீவிரமடைந்துவரும் அச்சங்களால் எரியூட்டப்பட்ட ஏதென்ஸ் பங்குச்சந்தை மீண்டும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தது. அது முடிவுறுகையில், அது 3.15 சதவீதம் வீழ்ந்தது, வெறும் கடந்த நான்கு அமர்வுகளிலேயே 17.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஐரோப்பிய மத்திய வங்கியால் பல மாதங்களுக்கு முன்னரே சர்வதேச பணச்சந்தைகளில் இருந்து ஒதுக்கப்பட்டு மற்றும் வைப்பீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், கிரேக்க வங்கிகள் மேற்கொண்டும் 1.38 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அவர்களின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த வாரத்தில் 27 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு சிரிசா கையெழுத்திட்டால் அது எல்லா நம்பகத்தன்மையையும் இழந்துவிடுமென அஞ்சுகின்ற போலி-இடது அமைப்புகளின் ஒரு கலவையாக உள்ள சிரிசாவின் இடது பிளாட்பார்ம் (Left Platform), தலைவர்கள், புதனன்று மாலை முக்கூட்டிற்கு எதிராக நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுத்தனர். Guardian உடன் பேசுகையில், சிரிசாவின் மத்திய கமிட்டியில் உள்ள இடது ப்ளாட்பார்ம் உறுப்பினர் Stathis Kouvelakis, கூறுகையில், “ஒன்று சிப்ராஸ் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு அரசியல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது அவர் உறுதியாக 'முடியாது' என்று கூற வேண்டும்,” என்றார். சிரிசாவின் அழைப்பில் அக்கறை கொண்டு ஆயிரக் கணக்கானவர்கள் ஏதென்ஸில் கிரேக்க நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தார்கள். ஆனால் இது, கிரேக்க தொழிலாள வர்க்கத்திடையே இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு எனினும், ஒரு மங்கலான வெளிப்பாடு மட்டுமே ஆகும். முன்னர் இது, முந்தைய ND அரசாங்கத்தை வாக்களித்து வெளியேற்றியதற்கும், கிரீஸின் நீண்டகால சமூக ஜனநாயக கட்சியான PASOK இன் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. முன்னதாக மற்றொரு இடது ப்ளாட்பார்ம் தலைவர் Stathis Leoutsakos ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்த ஆயுதமேந்திய படைகளை ஒன்றுதிரட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்தினார். அவர் கூறுகையில், “கடன் வழங்குனர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை டாங்கிகளைக் கொண்டு மட்டுமே நிறைவேற்ற முடியும், ஆகவே கடன்வழங்குனர்கள் அவற்றை நிறைவேற்ற விரும்பினால் அவர்கள் டாங்கிகளைக் காண வேண்டியிருக்கும்,” என்றார். ஆனால் அவர் பின்வருமாறு கூறி உடனடியாக பின்வாங்கினார்: “நான் டாங்கிகள் என்பதை அந்த வார்த்தையின் பாரம்பரிய அர்த்தத்தில் கூறவில்லை. இன்று டாங்கிகள் என்பவை, யூரோ மண்டலத்தில் பெரும் திறமையுடன் விளையாடுவதற்குரிய ஒரு தகவல் தொடர்பு விளையாட்டைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ளன” என்றார். அக்கண்டம் முழுவதும் பொருளாதார குழப்பத்தின் அச்சுறுத்தலுடன் கிரீஸ் திவால்நிலைமைக்குள் அருகில் நகர்கையில், மொத்தத்தையும் சூழும் ஒரு நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பதன் மீது ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்குள் பிளவுகள் மேல்புறம் வருகின்றன. கிரேக்க பிரதம மந்திரியும் சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸூம் நேற்று ஆஸ்திரிய சான்சிலர் Werner Faymann இன் விஜயத்தை வரவேற்றனர். சிப்ராஸிற்கு ஒரு சில சிறிய விட்டுக்கொடுப்புகளை வழங்கக்கூடிய, அதை கொண்டு அவர் மக்களிடையே அதை கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு சிக்கன உடன்படிக்கையை இறுதி செய்ய விரும்பும் ஆளும் வட்டாரங்களுக்குள் உள்ள ஒருசிலரின் சார்பாக Faymann பேசுகிறார். ஆனால் மொத்த சிக்கன நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். அவர் "ஒரு பேரழிவைத் தவிர்க்க" விரும்புவதாக கூறி Faymann அவரது விஜயத்தை முன்னிலைப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் கிரீஸிடம் வைத்திருக்கும் கோரிக்கைகளை பொறுத்த வரையில் அவர் கூறுகையில், “அங்கே, அந்த அமைப்புகளிடமிருந்தும் கூட, பல பரிந்துரைகள் உள்ளன என்பதை நான் அறிவேன், அவை ஒழுங்குமுறையில் இருப்பதாக நான் காணவில்லை,” என்றார். மூர்க்கமான வெட்டுக்களை நிறுத்திவிடமுடியாது என்பதை அந்த அமைப்புகள் குறிப்பிட்டு வருகின்றன, ஆனால் கிரீஸில் அங்கே "உயர்ந்தளவிலான வேலையின்மை, 30-40 சதவீதம் மருத்துவ காப்பீடின்மை, அத்துடன் மருந்து பொருட்களின் மீது அதிகரித்துவரும் மதிப்பு கூட்டு வரி" நிலவுகிறது. இத்தகைய சிக்கலான சூழலில் மக்களால் அதை புரிந்து கொள்ள முடியாது.” “ஐரோப்பா பலமாக இருக்க வேண்டுமானால், அது ஐக்கியத்தைக் காட்ட வேண்டும், அது எந்தவொரு நாட்டிற்கு தேவைப்பட்டாலும் ஆதரிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி, ஏதென்ஸில், அவர் பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டுக் கொண்டார். Faymann இன் தலையீட்டை, Guardian, யூரோ குழும கூட்டத்திற்கு முன்னதாக "சர்வதேச கடன்வழங்குனர்களுடனான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு இறுதிக்கட்ட முயற்சி" என்று வர்ணித்தது. பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், கட்டுரையாளர் மார்டின் வோல்ஃப் பின்வருமாறு எச்சரித்தார், “யூரோவிலிருந்து அவர்கள் வெளியேறினாலும் கிரேக்கர்களும் சரி அவர்களின் பங்காளிகளும் சரி முழுமையான முறிவை கற்பனை செய்ய முடியாது.” கடந்த ஐந்தாண்டுகாலத்தில் கிரீஸின் பொருளாதார உடைவு மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை விளைவுகளை எடுத்துக்காட்டி, “அதுபோன்ற மூர்க்கமான மாற்றியமைப்புகள் எந்தவொரு நாட்டின் அரசியலையும் சின்னாபின்னமாக்கிவிடும். இந்த பேரிடரைத்தான் ஐரோப்பியர்கள் இப்போது சிரிசாவுடன் கையாண்டு வருகிறார்கள்.” ஓர் உடன்படிக்கை எட்டப்படுவது என்பது "இப்போது முன்பினும் கூடுதலாக சாத்தியமில்லை என தெரிகிறது,” என்று எச்சரித்த வோல்ஃப், “ஆனால் அதுவே அக்கதையின் முடிவாக இருக்காது. ஐரோப்பியர்களால் விலகி தனியாக நடைபோட முடியாது. கிரீஸ் யூரோவிற்குள் இருந்தாலும் சரி அதை விட்டு வெளியேறினாலும் சரி, அதேபோன்ற சவால்கள் எழும். ஐரோப்பியர்கள் அவர்களின் பணத்தில் பெரும்பகுதியைத் திரும்ப பெற முடியாது என்பதை இப்போது ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்; அவர்கள் ஒரு கிரீஸ் பொறிவைத் தவிர்க்க உதவ வேண்டியுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். Faymann, வோல்ஃப் மற்றும் பலரும், சிரிசாவின் ஒரு அவமானகரமான முழு சரணடைவைக் கோரிவரும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் ஏனைய பிரிவுகளுடன் கடுமையாக உள்ளனர், இவர்களில் மிகவும் சக்திவாய்ந்த பேச்சாளர்கள் ஜேர்மன் ஆளும் உயரடுக்கிற்குள் கூறுபாடுகளாக உள்ளனர். சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் சகோத்தரத்துவ கட்சியான ஜேர்மன் கிறிஸ்துவ சமூக யூனியனின் பொது செயலாளர் Andreas Scheuer கூறுகையில், “கிரேக்க அரசாங்கம் மிகத் தெளிவாக நிலைமையின் தீவிரத்தன்மையை இன்னும் உணரவில்லை. அடுத்த வகுப்பிற்கு செல்ல தேர்ச்சிபெற முடியாது போகும் என்று எல்லா தரப்பிலிருந்தும் வெளிப்படையான எச்சரிக்கைகளை பெற்றுள்ள போதினும், அவர்கள் வகுப்புகளின் கடைசியில் உட்கார்ந்திருக்கும் மரமண்டைகளைப் போல நடந்து கொள்கிறார்கள்,” என்றார். இறுதி வாரத்தில் யூரோவிலிருந்து கிரேக்கம் வெளியேறுவது உட்பட பல்வேறு சூழல்களைக் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் விவாதங்களை தொடங்கியிருப்பது வெளியானது. இன்றைய கூட்டத்திலிருந்து எந்த உடன்பாடும் எதிர்பார்க்க முடியாது என்ற நிலையில், ஞாயிறன்று யூரோ மண்டல அரசாங்க தலைவர்களின் மற்றொரு கூட்டத்திற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை மேற்கோளிட்டுக்காட்டிய பைனான்சியல் டைம்ஸின் செய்தியின்படி, இதற்கான தயாரிப்புகள் "ஏறத்தாழ இறுதி செய்யப்பட்டுவிட்டது,” "கிரீஸின் நிதியியல் துறையின் ஒரு உருகுதலைத் தடுக்க மூலதன கட்டுப்பாடுகளை வகுப்பதும்" இதில் உள்ளடங்கும். |
|