தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Tsipras petitions EU for new austerity deal சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புதிய சிக்கன உடன்படிக்கையை முன்மொழிகின்றார்
By Joseph Kishore Use this version to print| Send feedback ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கோரிக்கைகள் மீதான கிரேக்க வெகுஜன வாக்கெடுப்பில் ஞாயிறன்று பிரமாண்டமான "வேண்டாமென்ற" வாக்குகள் வந்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஒரு புதிய சிக்கன உடன்பாட்டை எட்டுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சிப்ராஸ் நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஓர் உரையில் பேசுகையில் அவர் எதை கிரீஸ் நெருக்கடிக்கான ஒரு "நியாயமான மற்றும் சாத்தியமான தீர்வுக்கான" “நம்பகமான சீர்திருத்தங்கள்" என்று குறிப்பிட்டாரே அதை ஐரோப்பிய "அமைப்புகள்" உடனான இன்றைய ஒரு கூட்டத்தில் முன்வைக்க உள்ளார். இது ஐரோப்பிய அமைப்புகளுக்கு ஏற்புடைய ஓர் உடன்படிக்கையாக கருதப்படுகிறது. அவை மேற்கொண்டு எந்தவொரு பிணையெடுப்பு நிதிகளுக்குப் பிரதியீடாகவும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கோரி வருகின்றன. சிப்ராஸ் உரையாற்றிக்கொண்டிருந்த போதே, சிரிசாவின் புதிய நிதி மந்திரி ஏக்குளிட்ஸ் சக்காலோட்டோஸ், “நிதி பேணும் தகைமை, நிதியியல் ஸ்திரப்பாடு, மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் நடைமுறைப்படுத்துவதற்குரிய சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளின் ஒரு பரந்த தொகுப்பை" “உடனடியாக" திணிப்பதற்குச் சூளுரைத்து ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம், விபரமாக குறிப்பிடப்படாத "வரி சீர்திருத்தம் சம்பந்தமான முறைமைகள்" மற்றும் "ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட முறைமைகளான" அதாவது பின்னோக்கிய விற்பனை வரி (regressive sales taxes) உயர்வுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகளில் வெட்டுக்களை கொண்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட பெருமளவிலான "வேண்டாம்" என்ற வாக்குகளது தீர்ப்பிற்கிணங்க செயல்படுவதிலிருந்து விலகி, சிப்ராஸ் அவரது சிரிசா தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அதன் முதல் நாளிலிருந்து தொடங்கிய அதே பின்வாங்கல் மற்றும் மண்டியிடும் கொள்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கோரிக்கைகள் மீது கிரேக்க மக்கள் "ஆம்" என்ற வாக்களித்திருந்தால் என்ன செய்ய வேண்டி இருந்திருக்குமோ அதற்கு மாறுபட்ட விதத்தில் எதையேனும் அந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதே கடினமாகும். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகளவில் சாதகமான நிலைமைகளை உருவாக்கும் நோக்கில், அந்த வெகுஜன வாக்கெடுப்பே ஓர் அரசியல் தந்திரமாகும் என்பதையே அரசாங்கத்தின் விடையிறுப்பு எடுத்துக்காட்டுகிறது. "வேண்டாமென" வாக்களிக்குமாறு சிரிசா அதிகாரிகளின் பெயரளவிற்கான அழைப்பிற்கு இடையே, வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதன் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஊடகங்களின் மிரட்டல் பிரச்சாரம் உள்ளடங்கலாக அந்த வெகுஜன வாக்கெடுப்பின் போது நிலவிய நிலைமைகள், மேற்கொண்டு ஐரோப்பிய வங்கிகளிடம் சிரிசா அடிபணிவதற்கு கிரேக்க மக்களையே பொறுப்பாக்கும் வகையில், “வேண்டும்" எனும் வாக்குகளை உருவாக்குமென நம்பியிருந்தனர். அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, “சிரிசா அதிகாரிகளின் பேச்சைக் கேட்கும் ஒருவர், அவர்கள் ஒரு தோல்வியை மட்டும் எதிர்நோக்கவில்லை, அவர்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தோல்வியை வரவேற்கிறார்கள் என்று தான் தீர்மானிக்க முடியும்.” புதனன்று பிரிட்டனின் Daily Telegraph இல் வெளியான ஒரு கட்டுரை இந்த பகுப்பாய்வைக் கூடுதலாக நிரூபணம் செய்கிறது. அந்த பத்திரிகையின் நன்கறியப்பட்ட விமர்சகரும் மற்றும் சர்வதேச வணிகப்பிரிவு பதிப்பாசிரியருமான Ambrose Evans-Pritchard ஆல் எழுதப்பட்ட அந்த கட்டுரை, வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக கிரேக்க அரசாங்கத்திற்குள் நடந்த விவாதங்களைக் குறித்து குறிப்பிடத்தக்க கணக்கெடுப்பை வழங்குகிறது. “கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், வெளிநாட்டு கட்டுப்பாட்டுக்கு எதிராக ஒரு பிரமாண்ட தேசிய கிளர்ச்சிக்குத் தலைமை தாங்குவது ஒருபுறம் இருக்கட்டும், அவர் EMU இன் [பொருளாதார மற்றும் நாணய ஒன்றியத்தின்] பிணையெடுப்பு நிபந்தனைகள் மீதான ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று கூட ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,” என்று Evans-Pritchard கிரேக்க மந்திரி சபையை சேர்ந்த ஆதாரங்களை அடித்தளமாக்கொண்டு எழுதுகிறார். “தோற்கும் உள்நோக்கத்தில் அந்த திடீர் வாக்கெடுப்பிற்கு அவர் அழைப்புவிடுத்தார். ஒரு சீறிய மோதலைக் கைவிட்டு, கௌரவமான விதத்தில் தோல்வியை ஏற்றுகொண்டு, [ஐரோப்பிய அமைப்புகளின்] ஜூன் 25 'இறுதிகெடுவை' நடைமுறைப்படுத்துவதை மற்றும் மானக்கேட்டை அனுபவிப்பதை மற்றவர்கள் மீது சாட்டிவிட்டு, கிரேக்க பிரதம மந்திரி அலுவலக அரியாசனத்தின் அதிகார செங்கோலை ஒப்படைத்துவிடுவதே திட்டமாக இருந்தது.” ஏற்கனவே சிரிசாவினால் நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு இன்னும் கூடுதலானவற்றைக் கோரி ஐரோப்பிய ஒன்றியம் சிரிசாவின் கோரிக்கைகளை முன்வைத்த போது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் ஏற்பாட்டை எட்டுவதற்கான சிரிசாவின் முயற்சிகள் தகர்ந்துபோன பின்னர் தான், அந்த மூலோபாயம் ஆலோசிக்கப்பட்டது. “[புதிய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான] இறுதிக்கெடு கிரேக்க மந்திரிசபைக்கு ஓர் அதிர்ச்சியாக வந்தது,” என்று Evans-Pritchard எழுதினார். “அந்த உடன்படிக்கை படுமோசமாக இருந்ததால், அது அவர்களைக் கத்திமுனையில் நிறுத்தி இருந்ததாக உணர்ந்தனர்”. வெகுஜன வாக்கெடுப்பின் முடிவைக் குறித்து Evans-Pritchard எழுதுகிறார்: “2015 கிரேக்க கலகத்தைத் தூண்டிவிடுமோ என்ற அவர்களின் பதைபதைப்பான அச்சத்துடன் அவர்கள் அதை வென்றார்கள்… ஞாயிறன்று இரவு கொண்டாட்டமாக இருக்க வேண்டியது மரணத்தின் விளிம்பாக மாறியது. திரு. சிப்ராஸ் தளர்வடைந்துபோய் இருந்தார், ஜனவரியில் சிரிசா பதவியேற்றது முதற்கொண்டு அது செய்துள்ள எல்லா பிழைகளையும் பற்றி அதிகாலைவரை உரையாற்றிக்கொண்டிருந்தார்.” பேங்க் ஆஃப் கிரீஸை "கையகப்படுத்திக்கொள்ளல்" மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியிடமிருக்கும் கிரேக்க பத்திரங்கள் மீதான கடனை ஒருதலைபட்சமாக "கடன்களை வெட்டிவிடல்" ஆகியவை உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் இணங்காமைக்கு விடையிறுப்பாக அரசாங்கம் எடுக்க வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்து, வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, கிரேக்க மந்திரிசபைக்குள் நடந்த விவாதங்களை Evans-Pritchard எழுதுகிறார். இத்தகைய பரிந்துரைகள் அனைத்தும் சிப்ராஸால் நிராகரிக்கப்பட்டன. கிரேக்க ஆளும் வர்க்கம் மற்றும் சர்வதேச கடன்வழங்குனர்களினால் அந்நாட்டிற்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பான நடவடிக்கைகளை எதிர்ப்பதை சிப்ராஸினது அரசாங்கம் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சிரிசாவைப் பொறுத்த வரையில், "வேண்டாம்" என்ற வாக்குகளின் பிரதான பின்விளைவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான கட்சிகளுக்கு சுலபமாக அதிகாரத்தை சிப்ராஸ் விட்டுகொடுத்துவிட முடியாது என்ற தீர்மானமேயாகும். ஆனால், சிப்ராஸ் அதே திசையிலேயே வேகமாக நடவடிக்கைகளை எடுத்தார். சிரிசா உடனடியாக, PASOK, புதிய ஜனநாயகம் மற்றும் To Potami ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான பிரதான கட்சிகளது தலைவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, ஒரு புதிய சிக்கன பொதியின் அடித்தளத்தில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளித்து ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார். இந்நகர்வு ஒரு "தேசிய ஐக்கிய" அரசாங்கத்தை நோக்கிய ஒரு படி என்று அர்த்தப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பகிரங்கமான ஆதரவிலிருந்த கட்சிகளுடன் உடன்பாடு கொண்டிருப்பது சிரிசாவினுள் ஒரு பிளவுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. புதனன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ், ஒரு புதிய பிணையெடுப்பு உடன்படிக்கைக்கு எதிராக வந்துள்ள எரிசக்தித்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறையின் மந்திரி Panayotis Lafazanis இன் விடயத்தை மேற்கோளிட்டு, சிரிசாவிற்குள் "இடது" கன்னைகளின் வீழ்ச்சியடைந்துவரும் செல்வாக்கைக் குறிப்பிட்டு எழுதியது. “வேண்டாம்" எனும் வாக்குகளைத் தொடர்ந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு Lafazanisஇன் வாயளவிலான எதிர்ப்பு, “அனைத்து 28 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் வாரயிறுதி கூட்டத்தில் ஓர் உடன்படிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டால், அவரது கட்சியில் ஏறத்தாழ நிச்சயமாக திரு. சிப்ராஸ் ஓர் உடைவை முகங்கொடுப்பார்,” என்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியது. “ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பு கட்சிக்குள் சிப்ராஸிற்கு ஒரு பலமான இடத்தை அளித்துள்ளதுடன், அவர் எதிர்ப்பாளர்களையும் ஒருங்கிணைத்துள்ளார் என்ற உண்மை, நாடாளுமன்றத்தின் மூலமாக உடன்படிக்கையை நிறைவேற்றுவது என்று வரும்போது, அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது,” என்று எழுதியது. சிக்கன திட்டத்திற்கு ஆதரவான PASOK மற்றும் புதிய ஜனநாயக கட்சிகளுடனான ஒரு கூட்டணி மீது அது மிக பகிரங்கமாக தங்கியிருக்கும் வகையில் அரசாங்கத்தை மறுசீரமைப்பதற்குரிய ஒரு முயற்சியே, மக்களின் சிக்கன நடவடிக்கை நிராகரிப்புக்கு சிப்ராஸ் காட்டும் விடையிறுப்பாக உள்ளது. இது சிக்கன திட்டத்திற்கு ஒரு முக்கிய எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டு, சிப்ராஸிடம் இருந்து தன்னைத்தானே விலக்கிக் கொள்ளவும் சிரிசாவின் ஒரு பிரிவை அனுமதிக்கிறது. இத்தகைய தந்திரங்களில் சிரிசா வெற்றி பெற்று கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு புதிய சுற்று தாக்குதல்கள் மீது உடன்படிக்கையை எட்டுகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த அரசாங்கம் இன்று விரிவான முன்மொழிவுகளைச் சமர்பிக்கும், யூரோ மண்டல நிதியியல் மந்திரிமார்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் மேற்கொண்டு ஒரு பிணையெடுப்புக்கு ஒப்புதல் வழங்குவதா அல்லது கிரீஸை யூரோ மண்டலத்திலிருந்து வெளியே நிர்பந்திப்பதா என்பதை முடிவுசெய்ய இந்த வாரயிறுதியில் சந்திப்பார்கள். |
|
|