World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France deploys 10,000 troops in wake of Charlie Hebdo attack சார்லி ஹெப்டோ தாக்குதலை அடுத்து பிரான்ஸ் 10,000 துருப்புகளை நிலைநிறுத்துகிறது
By Chris Marsden பிரான்ஸ் அதிகளவில் ஒரு பொலிஸ் அரசை ஒத்திருக்கிறது. சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகங்களின் மீதான கடந்த வார தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சுற்றி வளைப்புகளுக்குப் பின்னர், பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் 10,000 துருப்புகளை வீதிகளில் ஒன்றுதிரட்டியுள்ளது. கேலிச்சித்திர ஓவியர்கள் மற்றும் சார்லி ஹெப்டோ அலுவலக பணியாளர்களைப் படுகொலை செய்த சாய்த் மற்றும் செரிப் கௌச்சி, பின்னர் Dammartin-en-Goëleஇன் ஒரு தொழில்துறை கட்டிடத்தில் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். கிழக்கு பாரீஸில் Porte de Vincennes என்னும் இடத்தில் ஒரு கோஷர் மளிகைக்கடையில் மற்றொரு சுற்றிவளைப்பு, அமெடி குலிபாலியின் மரணத்தில் போய் முடிந்தது. கோஷர் மளிகைக்கடையில் இறந்த நான்கு பேர்—22 வயதான யோஹன் கௌஹென், 21 வயதான யுஹவ் ஹாட்டப், 40களில் இருக்கலாம் என்று கூறப்படும் பிலிப் ப்ரஹாம், மற்றும் வயது 60களில் இருக்கலாம் என்று செய்திகளில் தெரிவிக்கப்பட்ட பிரான்சுவா மைக்கேல் சாதா ஆகியோர் உட்பட—சாய்த் மற்றும் செரிப் கௌச்சி மற்றும் குலிபாலியால் பதினேழு பேர் கொல்லப்பட்டனர். குலிபாலி முன்னதாக 27 வயது நிரம்பிய புதிதாக பயிற்சியளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியான கிளரிஸ்சா ஜோன்-பிலிப்பைச் சுட்டுக் கொன்றார். புதனன்று பாரீஸில் ஓட்டப்பயிற்சியில் இருந்த ஒருவர் மீதான குலிபாலியுடன் தொடர்புபட்ட வேறொரு தாக்குதலில், அவர் "வாழ்வா சாவா" நிலைமையில் இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. திங்களன்று உயர்மட்ட இராணுவ, பொலிஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடனான ஒரு நெருக்கடிகால கூட்டத்தில் ஹோலாண்ட் பிரான்ஸ் எங்கிலும் பாரியளவில் துருப்புகளை நிலைநிறுத்த உத்தரவிட்டார். உள்துறை மந்திரி பேர்னார்ட் கசெனேவ் கூறுகையில் பாதுகாப்பு படைகளின் சுமார் 5,000 பேர் அடுத்த இரண்டு நாட்களில் பிரான்ஸின் 717 யூத பாடசாலைகளைப் பாதுகாக்க அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்தார். செவ்வாயன்று மாலையில் இருந்து பதட்டமான பகுதிகளில் கூடுதல் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவார்கள் என்றும், "ஒன்றுதிரட்டல் இன்று காலையே தொடங்கிவிட்டது" என்றும் பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் தெரிவித்தார். லு திரியோன் தொடர்ந்தார்: "நமது துருப்புகள் இந்தளவுக்கு நமது சொந்த மண்ணில் ஒன்றுதிரட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன என்பதுடன் அவர்களிடமிருந்து நம்மைநாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது. இதுவொரு உள்நாட்டு நடவடிக்கையாகும், இதில் நமது வெளிநாட்டு நடவடிக்கைகளில் உள்ளவர்களும் ஏறத்தாழ எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேர் அணிதிரட்டப்படுவார்கள்," என்றார். யூத வழிபாட்டுத்தலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும், அத்துடன் மசூதிகளுக்கும் தான், அவற்றில் சில ஏற்கனவே பழிவாங்கும் நடவடிக்கைகளால் தாக்கப்பட்டுள்ளன என்று பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் தெரிவித்தார். மின்னணு கண்காணிப்பையும், பாடசாலைகள் மற்றும் சிறைக்கூடங்களில் பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கூடுதலாக பலப்படுத்துவது உட்பட ஏனைய முறைமைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன அல்லது நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. "மூன்று அல்லது நான்கு மாதங்களில்" நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ள கண்காணிப்பு அதிகாரங்களை விரிவாக்கும் புதிய சட்டத்தைக் குறித்து வால்ஸ் பேசினார். கசெனேவ் ஞாயிறன்று கூறுகையில், பயங்கரவாத மற்றும் நாசகர நடவடிக்கைகளுக்கு ஆதரவான நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக, ஹோலாண்ட் அரசாங்கம் இணைய கண்காணிப்பின் மீது கூடுதல் அதிகாரத்தைப் பெற முயலுமென தெரிவித்தார். இதற்கும் கூடுதலாக, CNN மேற்கோளிட்டு காட்டியிருந்த ஒரு பொலிஸ் ஆதாரநபரின் கருத்துப்படி "பயங்கரவாத இரகசிய பிரிவுகள்" (terror sleeper cells) செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பதால் பிரான்சின் சட்டம் ஒழுங்குத்துறை அதிகாரிகள் எப்போதும் ஆயுதங்களுடன் இருக்குமாறும் மற்றும் அவர்களது சமூக ஊடக பிரசன்னத்தை அழித்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். பிரான்சின் பொலிஸ் அதிகாரிகளை இலக்கில் வைத்து, குலிபாலி பல தொலைபேசி அழைப்புக்களை செய்திருந்ததாக அந்த ஆதாரநபர் குறிப்பிட்டார். அத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த அச்சுறுத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களே ஆவர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியாக குறைந்தபட்சம் ஒரு உடந்தையாளரும், அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், அத்துடன் குலிபாலியின் நண்பி ஹயாத் பூமெடியனும் இருந்ததாக அவர்கள் நம்புவதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பூமெடியன் அந்த தாக்குதல்களுக்கு முன்னரே பிரான்சிலிருந்து வெளியேறிவிட்டதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. அப்பெண்மணி சிரியாவிற்கு புறப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 2இல் ஸ்பெயினின் மாட்ரிட் வழியாக துருக்கிக்கு வந்ததாக துருக்கிய வெளியுறவுத்துறை மந்திரி அஹ்மெட் தாவ்டோக் கூறியுள்ளார். அப்பெண்மணியுடன் ஒரு வட ஆபிரிக்க ஆண் மெஹ்டி சாப்ரி பெல்லூசின் உடன் இருந்ததை இஸ்தான்புல் விமான நிலைய கேமிரா பதிவுகள் காட்டுகின்றன. பாரீஸ் வழக்கறிஞர் பிரான்சுவா மொலான் அளித்த தகவலின்படி, 2014இல் செயிப் கௌச்சியின் மனைவிக்கும் பூமெடியனுக்கும் இடையே 500 முறை தொலைபேசி அழைப்பு பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. ஞாயிறன்று பாரீஸ் பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த இஸ்ரேலிய தலைவர் பென்ஜமின் நெத்தெனியாகு, ஹோலாண்ட் அரசாங்கத்துடன் அவர் சமரசமின்றி இருப்பதாக காட்டிக்கொள்ளும் அளவுக்கு, தாக்குதல்களின் மீது ஒரு அச்சத்தின் சூழலை முடுக்கிவிடுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். நெத்தெனியாகு கோஷர் மளிகைக்கடையில் ஒரு பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு இருந்த செலின் ஷெரெக்கி உடன் தொலைபேசியில் உரையாற்றியதாக ஓர் அறிக்கையில் தெரிவித்தார். அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: "செலின் மற்றும் அனைத்து பிரெஞ்சு யூதர்களுக்கும், மற்றும் அனைத்து ஐரோப்பிய யூதர்களுக்கும், நான் கூற விரும்புகிறேன்: இஸ்ரேல் அரசு வெறுமனே நீங்கள் வழிபடுவதற்கு வரும் இடம் மட்டுமல்ல. அது உங்களின் தாயகமும் ஆகும்," என்றார். கனரக ஆயுதமேந்திய பாதுகாவலர்களால் சூழப்பட்ட நெத்தெனியாகு அந்த பல்பொருள் அங்காடிக்கும் விஜயம் செய்தார். அரை மில்லியன் யூதர்களின் தாயகமாக விளங்கும் பிரான்சிலிருந்து வருபவர்களிடம் புலம்பெயர்வு சரிபார்ப்பு சோதனைகளை அதிகரிக்கவும் மற்றும் தயாரிப்புகளை மேற்பார்வையிடவும் ஒரு சிறப்பு கேபினெட் கமிட்டி அமைத்து வருவதாக அவர் தெரிவித்தார். சனியன்று பாதுகாப்பு மந்திரி மோஷே யாலொன் கூறுகையில் யூதர்கள் "பிரான்சில் இருப்பவர்கள் மட்டுமின்றி, [மாறாக] பெல்ஜியம் மற்றும் ஏனைய இடங்களில், ஸ்வீடனில் உள்ளவர்களும்" "ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய, யூத-விரோத தாக்குதலின் கீழ்," மேலும் "யூதர்களுக்கான பாதுகாப்பான இடம் யூதர்களின் தேசிய தாயகமாகும்," என்றார். 2014இல் சுமார் 7,000 புதிய புலம்பெயர்ந்தோருடன், பிரான்சிலிருந்து யூதர்களின் புலம்பெயர்வு கடந்த ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் (Knesset) புலம்பெயர்வு, ஒன்றுசேர்ப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் கமிட்டி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யோடெல் ராஜ்வொஜோவ், ஐரோப்பிய யூதர்களை உள்ளெடுத்துக் கொள்வதற்கு தயாரிப்பு செய்யும் வகையில் ஒரு அவசரகால அமர்வை கூட்ட உள்ளார். பிரெஞ்சு தேசிய ஒற்றுமை சேதியிலிருந்து கவனம் திசைதிரும்பிவிடும் என்ற கவலையால், சார்லி ஹெப்டோ மீதான இந்த வாரயிறுதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென நெத்தெனியாகுவிற்கு ஹோலாண்ட் முறையீடு செய்திருந்ததாக Ha’aretz அறிவித்தது. பின்னர் நெத்தெனியாகுவிற்கு சமபலத்தை வழங்க பாலஸ்தீன ஆணைய தலைவர் மௌஹ்மத் அப்பாஸிற்கு அழைப்புவிடுக்க பிரான்சின் தேசிய பாதுகாப்பு முகமை தீர்மானித்தது. ஒரு வீடியோவில் குலிபாலி, கௌச்சி சகோதரர்களுடன் வேலை செய்து வருவதாக தெரிவித்திருந்தார், அவர்கள் அவர்களது பங்கிற்கு, அல் கொய்தாவின் யேமன் பிரிவின் (அரேபிய தீபகற்பத்தின் அல் கொய்தா - AQAP) சார்பாக வேலை செய்து வருவதாக தெரிவித்திருந்தனர். பகுதியாக, ஒரு மூன்றாம் நபரால் தெளிவாக பதிவு செய்யப்பட்ட அந்த காணொளி தான், அந்த மூன்று துப்பாக்கிதாரிகளுடன் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய உடந்தையாளர்களைக் கண்டறிய பொலிஸிற்கு அடித்தளமாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரைக் குறித்து உத்தியோகபூர்வமாக கிடைத்திருக்கும் விபரங்களின் அளவிற்கும் மேற்கொண்டு கூடுதலாக, பிரெஞ்சு அரசே சாத்தியமான அளவிற்கு சம்பந்தப்பட்டிருப்பதற்கு அதிகளவிலான சந்தேகங்கள் கூடுதலாக பலப்படுகின்றன. கௌச்சி சகோதரர்கள் இருவருமே பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்று இருந்தனர் மற்றும் குலிபாலி முன்னதாக சிறையிலிருந்து ஒரு இஸ்லாமிய போராளியை விடுவிக்க சதி திட்டம் தீட்டியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். குலிபாலி, செரிப் கௌச்சியை சிறையில் தான் சந்தித்தார். சாய்த் கௌச்சி நவம்பர் 2011இல் பிரான்சால் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் எந்தவித விளக்கமும் இல்லாமல் அவர் இனியும் அபாயத்திற்குரியவராக இல்லை என்று கருதி ஜூன் 2014இல் அவர் மீதான கண்காணிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறதென்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தெரிவித்துள்ளன. செரிப் கௌச்சியின் கண்காணிப்பு 2013இன் இறுதியில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. CNN செய்தியின்படி, சாய்த் கௌச்சி 2011இல் மூன்று அல்லது அதற்கதிகமான மாதங்களுக்கு யேமனுக்கு பயணித்தார், அங்கே அவர் AQAP உடன் பயிற்சி பெற்றார் என்று நம்பப்படுகிறது. CNNக்கு கூறிய அமெரிக்க மற்றும் யேமனின் உளவுத்துறை ஆதாரநபர்களின் கருத்துப்படி, "2011இல்" மற்றும் மீண்டும் 2012இல் "ஒரு குறுகிய காலத்திற்கு செரிப் கௌச்சியும் யேமனுக்கு பயணித்திருப்பதற்கு வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்." சார்லி ஹெப்டோ துப்பாக்கிசூட்டில் ஒரு மூன்றாவது சந்தேகத்திற்குரிய நபராக தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட 18 வயது மூராட் ஹமீட், வெள்ளியன்று இரவு எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் சத்தமில்லாமல் விடுவிக்கப்பட்டார். அவரது பள்ளியின் சக மாணவர்கள் அந்நாளில் அவர் அவரது வகுப்பறையில் இருந்ததாக வலியுறுத்தி இருந்தனர். ஞாயிறன்று போக்கேய்ர் (Beaucaire) நகரில் பாசிச தேசிய முன்னணியின் (FN) ஒரு ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் அதிகம் இல்லாதவாறு 1,000கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். கட்சி தலைவர் மரீன் லு பென்னை நோக்கி பார்வையாளர்களிடமிருந்து வெறுப்பு மிகுந்த கூச்சலும், கோபமான கேள்விகளும் வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
|