World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Greece verges on default as creditors demand deeper austerity cuts கடன் வழங்கியவர்கள் ஆழ்ந்த சிக்கன வெட்டுக்களைக் கோருகின்ற நிலையில் கிரீஸ் திவால்நிலைமையின் விளிம்பில் உள்ளதுBy Robert Stevens கிரீஸின் சிரிசா தலைமையிலான அரசாங்கத்திற்கும் அதன் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், ஐந்து நாட்களுக்குப் பின்னர், புதனன்று எவ்வித உடன்பாடும் இல்லாமல் முடிவுற்றது. பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் சிக்கன நடவடிக்கைகள் அடங்கிய புதிய 26 பக்க ஆணவம் ஒன்றை நேற்று சமர்பித்தார், கடந்த வெள்ளியன்று சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகளின் முந்தைய பட்டியல் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இது "வரி, நிர்வாகம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களின் விரிவார்ந்த பட்டியலாக" சித்தரிக்கப்பட்டது. பில்லியன் கணக்கான கடன்களை, இவற்றின் இறுதி தேதி நெருங்கி வருகின்ற நிலையில், திருப்பி செலுத்துவதற்கு தேவைப்படும் நிலுவையில் உள்ள 7.2 பில்லியன் யூரோ உட்பட, மேற்கொண்டு எவ்வித கடன்களைப் பெறுவதற்கும் மற்றும் பெப்ரவரி 20 இல் அது கையெழுத்திட்ட நான்கு மாதகால சிக்கன நடவடிக்கை உடன்பாட்டை திருப்திகரமாக செயல்படுத்துவதற்குமான நிபந்தனைகளாக, இன்னும் கூடுதலாக விரிவாக்கப்பட்ட மற்றும் விபரமான சிக்கன நடவடிக்கை தொகுப்பை, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) ஒப்புதல் பெறக்கூடிய வகையில், கிரீஸ் கொண்டு வர வேண்டியுள்ளது. ராய்டர்ஸ் செய்தியின்படி, கிரீஸ் குறித்து யூரோ மண்டல துணை நிதி மந்திரிமார்களின் புதன்கிழமை தொலைதொடர்புவழி கலந்துரையாடலில் பரிசீலிக்க இயலாதவாறு, கிரீஸ் அந்த பட்டியலை வெகு தாமதமாக சமர்பித்திருந்தது. செய்திகளின்படி, அந்த முன்மொழிவுகள் மீதான யூரோ மண்டல அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீடு என்னவென்றால் அது தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீது இன்னும் கூடுதலான தாக்குதல்களைத் திணிக்க போதுமானளவிற்கு பாயவில்லை. சிரிசா அதன் முன்-அடையாள (token) சிக்கன விரோத சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த தேர்தல் திட்டத்தையும் புதைத்துவிட்டு, நிறுவனங்கள் தொழிலாளர்களைத் திரள்திரளாக நீக்குவதற்கும், அத்துடன் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதிய உரிமைகள் மீது மேற்கொண்டு தாக்குதல்களைத் தொடுப்பதற்கும் சௌகரியமான முறைமைகளைக் கொண்டு வரவேண்டும். யூரோ குழும சந்திப்பிற்கு சற்று முன்னதாக, நூற்றுக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய உயர்வு கோரி ஏதென்ஸில் பேரணி சென்றனர். அதேபோன்ற போராட்டங்கள் கிரீஸ் எங்கிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் நடத்தப்பட்டன. புதிய முறைமைகளும் "வெள்ளிக்கிழமையின் ஆரம்ப முயற்சிகளுக்கு ஒத்த விதத்திலேயே இருந்தன என்பதோடு, கிரேக்க ஓய்வூதிய முறையைச் செப்பனிடுவது மற்றும் தொழிலாளர் சந்தையில் பெரும் தாராளமயமாக்கம் உட்பட, பிணையெடுப்பு கண்காணிப்பாளர்கள் வலியுறுத்திய பல பிரச்சினைகளை அவை நிறைவு செய்ய தவறியிருந்ததாக பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. “உண்மையில் அந்த முன்மொழிவு அத்தகைய பல பகுதிகளில் சீர்திருத்தங்களைத் தலைகீழாக்குவதாக தெரிகிறது. அந்த ஆவணத்தில் இந்த ஆண்டு 1.1 பில்லியன் யூரோ புதிய செலவுகளும் உள்ளடங்கி உள்ளன...” என்று அது தொடர்ந்து குறிப்பிட்டது. ஒரு மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி FT உடன் பேசுகையில், புதிய முன்மொழிவுகள் போதுமானவையாக இல்லை, மேலும் ஏப்ரல் 24 இல் ரிகாவில் (Riga) நடைபெற உள்ள யூரோ மண்டல நிதி மந்திரிகளின் அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக கிரீஸூடன் "எந்தவித உடன்பாடும் எட்டுவதற்கு அங்கே வாய்ப்பே இல்லை" என்றார். ஏப்ரல் 12இல் வரவிருக்கின்ற கிரேக்க பாரம்பரிய ஈஸ்டர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக முன்மொழிவுகளின் ஒரு புதிய தொகுப்பு மீது உடன்பாடு எட்டப்படுமென அது நம்புவதாக சிப்ராஸ் அரசாங்கம் சுட்டிகாட்டி உள்ளது. ஆனால் இந்த இறுதிகெடுவும் நிச்சயமற்று உள்ளது. கிரீஸில் அரசாங்கம் மற்றும் வங்கிகளின் நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் அபாயகரமாக மாறி வருகின்ற நிலையில், அவை சர்வதேச பண சந்தைகளை அணுவதிலிருந்து முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன. யூரோ குழும (Eurogroup) கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், கிரேக்க அரசாங்கத்தின் ஒரு மூத்த பிரதிநிதியான உள்துறை மந்திரி நிக்கோஸ் வவுட்சிஸ், கூடுதல் பணம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திற்கு 450 மில்லியன் யூரோ கடனை ஏப்ரல் 9க்குள் திரும்பி செலுத்த இயலாது என்று ஜேர்மனியின் Spiegel செய்தியிதழுக்குத் தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டன. மற்றொரு 2.4 பில்லியன் யூரோ கடனும் ஏப்ரலில் செலுத்தி ஆக வேண்டும். வவுட்சிஸ் இன் அறிவிப்பை கிரேக்க அரசாங்கம் உடனடியாக மறுத்தது, ஆனால் நிதி சந்தைகள் அந்த செய்தியால் உடனடியாக வீழ்ச்சி அடைய தொடங்கின. செலாவணி பகுப்பாய்வாளர் ஒருவர், வவுட்சிஸிற்கு விடையிறுப்பாக, ஏப்ரலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு பணம் திரும்ப செலுத்தவியலாதென அனேகமாக கிரீஸ் முடிவெடுப்பதை, 2008 உலகளாவிய நிதியியல் பொறிவைத் தூண்டிவிட்ட அமெரிக்க வங்கி லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவுடன் ஒப்பிட்டார். “வதந்தி, இரகசிய அவதூறு மற்றும் திட்டமிட்ட கசிவுகளின் ஒரு பிரச்சாரம் எங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகிறது" என்று குறைப்பட்டு கொண்ட பெயரிட விரும்பாத ஒரு கிரேக்க அதிகாரியை The Guardian மேற்கோளிட்டு காட்டியது. அவர் மேற்கொண்டும் தெரிவித்திருந்தார், “வங்கியியல் அமைப்புமுறை அபாயத்தில் உள்ளது, பண வெளியேற்றம் அதிகரித்து வருகிறது, வாராக் கடன்கள் பெருகி வருகின்றன. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அது குற்றகரமானது. பெப்ரவரி 20 உடன்பாடு எங்களுக்கு நான்கு மாதகால நிதியியல் ஸ்திரப்பாட்டை வழங்கி இருக்க வேண்டும், ஆனால் அவர்களோ எங்களை திணறடிப்பதற்காக அதை பயன்படுத்தி வருகிறார்கள்,” என்றார். அதுபோன்ற வார்த்தைஜாலங்கள் இருந்தாலும் கூட, சிரிசா அரசாங்கம் கிரேக்க ஆளும் மேற்தட்டின் ஒரு பிரிவினது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்து வருவதோடு, தொழிலாளர் வர்க்கத்தை விலையாக கொடுத்து ஒரு முதலாளித்துவ-சார்பு ஆட்சி ஐரோப்பிய சக்திகளுடன் ஏதேனும் ஏற்பாட்டை செய்து கொள்ள முயற்சிப்பதைப் போல, ஒவ்வொரு கட்டத்திலும் அது விடையிறுத்து வருகிறது. அதன் புதிய ஆவணம், “இந்த ஹெலெனிக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமைமிக்க ஒரு நீங்கா உறுப்பினராக மற்றும் யூரோ மண்டலத்தின் ஒரு மாற்றமில்லா உறுப்பினராக தன்னேத்தானே காண்கிறது,” என்று குறிப்பட்டது. அந்த பேரம்பேசல்கள் நீண்டு கொண்டே போகும் இயல்பே, கிரீஸ் திவால்நிலைமைக்குள் தள்ளப்படுவதையும் மற்றும் யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறுவதையும் ஆதரிக்கும் ஆளும் வட்டார பிரபலங்களின் கரங்களைப் பலப்படுத்தி உள்ளது. செவ்வாயன்று பில்லினிய முதலீட்டாளர் வாரென் பஃபெட் CNBCக்கு கூறுகையில், “கிரேக்கர்கள் வெளியேறுவது என்றானால், அது யூரோவிற்கு ஒன்றும் மோசமான விடயமாக இருக்காது. விதிமுறைகளுக்கு சில அர்த்தங்கள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும், அவர்கள் நிதிய கொள்கையில் ஏனைய உறுப்பினர்களோடு பொதுவான உடன்பாட்டிற்கு வருகிறார்கள் என்றால், அல்லது ஏதோ அதுபோன்றவொன்றை எட்டுகிறார்கள் என்றால், அவர்கள் வியாபாரத்தை அர்த்தப்படுத்துகிறார்கள் என்றாகும், அதுவொரு நல்ல விடயமாகும்,” என்றார். அதே நாள் பழமைவாத பாவரிய கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) இன் துணை தலைவர் பீட்டர் கௌவெய்லர் (Peter Gauweiler), கிரீஸை ஒரு "திவாலான அரசாக" வர்ணித்ததுடன், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அதிகமாக அனுசரித்து செல்வதாக விமர்சித்து அவரது நாடாளுமன்ற பதவியையும் இராஜினாமா செய்தார். மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் சகோதரத்துவ கட்சியான CSU, அதன் கூட்டணி பங்காளிகளாக உள்ளது. “மேர்க்கெல் யூரோ-எதிர்ப்பு Alternative für Deutschland (ஜேர்மனிக்கான மாற்றீடு) கட்சியிடமிருந்து வரும் அழுத்தத்தின் கீழும் உள்ளது, அது அதிருப்தி கொண்ட CDU வாக்காளர்களை வென்றுள்ளதாக" பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. அப்பத்திரிகை Eurasia Group risk consultancy இன் பகுப்பாய்வாளர் முஸ்தபா ரஹ்மானின் கருத்துக்களை மேற்கோளிட்டு காட்டியது, அவர், “இந்த இராஜினாமா வெறுமனே AfD இடமிருந்து மட்டுமல்ல, மாறாக அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கூட மேர்க்கெல் மிகவும் வற்புறுத்தப்படுகிறார் என்பதை அர்த்தப்படுத்துகிறது. மேர்க்கெல் ஒரு கடுமையான போக்கை, அதாவது ஓய்வூதியங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது கிரீஸிடமிருந்து ஸ்தூலமான சீர்திருத்தம் இல்லாமல் பணம் கிடைக்காது என்ற போக்கை, எடுக்க வேண்டுமென இது அறிவுறுத்துகிறது,” என்றார். மேர்க்கெல், பேர்லினில் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டுடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் கருத்துரைக்கையில், கிரேக்க அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் "காலம் மிக முக்கியமாகும்" என்றார். கடன் வழங்குனர்களிடமிருந்து ஒரு நல்ல பேரத்தைப் பெறுவதற்கான சிரிசாவின் முயற்சிகள் பிரதான சக்திகளுக்கு இடையிலான விரோதத்தைச் சுரண்டும் முயற்சிகளின் மீது மையமிட்டுள்ளது. அப்பிராந்தியத்தில் புவிசார் மூலோபாய நலன்களைக் கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யா இரண்டினோடும் அது கிரீஸின் உறவுகளை ஆழப்படுத்த ஓர் ஒருமுகப்பட்ட முயற்சியை செய்துள்ளது. ஒரு மூலோபாய மையமான கிரேக்க பிரேயஸ் துறைமுகத்தின் மீது சீனா ஏற்கனவே அதன் பரந்த நலன்களைக் கொண்டுள்ள நிலையில், அங்கே வந்த பெய்ஜிங் ஆட்சி பிரதிநிதிகளைச் சமீபத்தில் சிப்ராஸ் வரவேற்றார். இந்த வாரம், ஏப்ரல் 8 இல் மாஸ்கோவிற்கான அவரது விஜயத்திற்கு முன்னதாக சிப்ராஸ் ரஷ்ய செய்தி நிறுவனம் ITAR–TASS உடன் உரையாற்றுகையில், அவரது அரசாங்கம் மாஸ்கோவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகளை எதிர்ப்பதாக தெரிவித்தார். “உங்களுக்கு தெரியுமா, உக்ரேனிய பதட்டங்களுக்கு இடையே இந்த அர்த்தமற்ற தடையாணைகளின் கொள்கையைத் தடுக்க என்ன செய்திருக்க வேண்டுமோ அதை முந்தைய கிரேக்க அரசாங்கங்கள் செய்யாததால் தான், முந்தைய ஆண்டுகளில் இவற்றின் [கிரேக்க-ரஷ்ய] உறவுகளில் அங்கே பலமான அடி விழுந்தது,” என்றவர் தெரிவித்தார். அவர், “ஐரோப்பாவில் பாதுகாப்பு கட்டமைப்பை நீங்கள் எவ்வாறு பரிசீலிக்கிறீர்கள் என்று எனக்கு கூறுங்கள்? ரஷ்யாவை நமக்கு எதிராக வைத்து பார்க்கிறீர்களா, அல்லது ரஷ்யாவை பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதலின் நிகழ்வுபோக்கில் வைத்து பார்க்கிறீர்களா?” என்று மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் அவர்களிடம் அவர் வினவியதாக சிப்ராஸ் தெரிவித்தார். “பலரிடமிருந்து பதில் வரவில்லை, ஆனால் ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு ரஷ்யாவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதே தெளிவான பதிலாக இருக்குமென நான் நம்புகிறேன்,” என்றவர் முடித்தார். சிரிசாவின் "இடது தளத்தின்" தலைவரும் எரிசக்தித்துறை மந்திரியுமான பனாஜியோதிஸ் லஃபாஸானிஸ் (Panagiotis Lafazanis), மாஸ்கோவிற்கான இரண்டு நாள் விஜயம் முடித்து செவ்வாயன்று திரும்பினார். சிப்ராஸ் விஜயத்திற்கான பாதையைத் தயார் செய்வதே அவரது நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. லஃபாஸானிஸ் ரஷ்ய எரிசக்தித்துறை மந்திரி அலெக்சாண்டர் நோவாக், மற்றும் காஜ்ப்ரோம் நிறுவன (Gazprom) தலைவர் அலெக்ஸி மில்லர் ஆகியோரைச் சந்தித்திருந்தார். கருங்கடல் வழியாக கிரீஸிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு, ரஷ்யா முன்மொழிந்த Turkish Stream குழாய்பாதையை அது விரிவாக்குவதை கிரீஸ் ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார். ரஷ்யாவை நோக்கிய கிரீஸின் நிலைநோக்கு நேரடியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நலன்களைக் குறுக்கே வெட்டுகிறது. “ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது ஒரு பிழையென்றும், பன்முக இயற்கை எரிவாயு குழாய்பாதை திட்டத்திலிருந்து ஐரோப்பா ஆதாயமடையுமென்றும்" லஃபாஸானிஸ் கருதியதாக To Vima நாளேடு குறிப்பிட்டது. பெரிய ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் அகழ்வதற்கும் மற்றும் மேற்கு கிரீஸின் கடற்கரையொட்டிய பகுதியில் ஏனைய படிம எரிபொருள்களை அகழ்ந்தெடுப்பதற்கும் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாகவும் மற்றும் அந்நாட்டிற்கும் விற்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையைக் குறைத்தளிக்க பரிசீலிக்க ஒப்புக் கொண்டதாகவும் லஃபாஸானிஸ் தெரிவித்தார். |
|