World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German government increases defence budget by €8 billion ஜேர்மன் அரசாங்கம் 8 பில்லியன் யூரோ அளவிற்கு பாதுகாப்பு வரவு-செலவு கணக்கை அதிகரிக்கிறதுBy
Johannes Stern ஜேர்மன் மந்திரிசபையால் செவ்வாயன்று ஒப்புதல் வழங்கப்பட்ட 2016 வரவு-செலவு கணக்கு மற்றும் நிதித்திட்டத்தின் முக்கிய புள்ளிகளின்படி, ஜேர்மனி 2019 வரையில் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கும் மற்றும் பாரியளவில் திறன் உயர்த்தும். அடுத்த நான்காண்டுகளில் முன்னதாக திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக இராணுவத்திற்கு சுமார் 8 பில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மாத தொடக்கத்தில், நிதி மந்திரி வொல்ஃகாங் சொய்பிள அறிவிக்கையில் 2017 வரையில் இராணுவ வரவு-செலவு கணக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என்று கூறியிருந்தார். வெறும் வெகுசில நாட்களுக்குப் பின்னர், இப்போது, அந்த வரவு-செலவு திட்டக் கணக்கு இயன்றளவில் அடுத்த ஆண்டிற்கு முன்னதாகவே 1.2 பில்லியன் யூரோ அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளது. உண்மையில் அந்த வரவு-செலவு திட்டக் கணக்கில் சுமார் 500 மில்லியன் யூரோ அளவிற்கு குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர்வானது முன்னதாக திட்டமிடப்பட்டதை விட 1.7 பில்லியன் யூரோ அதிகமாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. பின்னர் பாதுகாப்பு செலவினங்கள் 2019 வாக்கில் 35 பில்லியன் யூரோவை விட அதிகமாக படிப்படியாக அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 6.2 சதவீதத்திற்கு கூடுதலான ஓர் உயர்வாக கணக்கிடப்படும் இந்த இராணுவ செலவினங்களின் வேகமாக அதிகரிப்பு, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவில் ஒரு புதிய கட்டத்தை முன்னறிவிக்கிறது. இராணுவத்தை மேற்கொண்டு அன்னியநாடுகளில் நிலைநிறுத்துவது மற்றும் திறன் உயர்த்துவது ஆகியவற்றிற்கு அழைப்புவிடுத்து மாதக்கணக்கில் ஊடக பிரச்சாரங்கள் நடத்திய பின்னர், அந்த அரசாங்கம் செயல்படுவதற்குரிய சந்தர்ப்பத்தைக் கைப்பற்றியுள்ளது. ஊடகங்களுக்கு கசிந்த முக்கிய பிரச்சினைகள் குறித்த ஆவணங்களின்படி, கூடுதல் செலவினங்கள், ஏனையவற்றோடு சேர்ந்து, "நேட்டோ ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக" வழங்கப்படுகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்ட, கிழக்கு ஐரோப்பிய நேட்டோ கட்டமைப்பில் ஜேர்மனி முன்னணி பாத்திரம் வகித்து வருகிறது. 48 மணி நேரத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வகையில், 2,700 சிப்பாய்களுடன் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட மிக உயர் ஆயத்த கூட்டு அதிரடிப் படையில் (Very High Readiness Joint Task Force) அது பங்கு வகிக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து துரித விடையிறுப்பு படையின் (NRF) தலைமை, முன்ஸ்டரில் உள்ள ஒரு ஜேர்மன்-நெதர்லாந்து படைப்பிரிவுடன் தங்கியுள்ளது. ஜேர்மன் இராணுவத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளத்தின் படி, NRFக்கு பொறுப்பேற்றுள்ள 4,000 ஜேர்மன் சிப்பாய்கள் "தாக்குதலுக்குத் தயாராக" இருப்பதாக கடந்த ஆண்டு சான்றிடப்பட்டார்கள். NRF இல் உள்ள ஜேர்மன் துருப்புகளின் மையத்தில் உள்ள மரீன்பேர்கின் கவச தரைப்படைப்பிரிவு 371, 2013 இன் இறுதியில் இருந்து "உடன்படிக்கைக்கு கடமைப்பட்ட நிலைநிறுத்தலுக்காக" தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய நிதிகளுடன், கிழக்கு ஐரோப்பிய நேட்டோ கட்டமைப்பு மட்டுமே நிதியுதவி வழங்கப்பட உள்ள ஒரேயொரு திட்டமல்ல. ஜேர்மன் மேற்தட்டு உலகெங்கிலும் அவர்களது புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க கூடிய ஓர் இராணுவத்தைக் கட்டமைத்து வருகிறது. அந்த முக்கிய பிரச்சினைகள் மீதான ஆவணத்தில் உள்ள மற்றொரு புள்ளி, “நமது எதிர்காலத்தில் உலகளவில் முதலீடு செய்வதற்கு கூடுதல் செலவுகளுக்கு" நாசூக்காக அழைப்புவிடுத்ததுடன், ஆண்டுக்கு கூடுதலாக 300 மில்லியன் யூரோ செலவாகுமென மதிப்பிட்டது. அதன் சமீபத்திய பதிப்பில், வாராந்திர ஜேர்மன் பத்திரிகை Die Zeit, நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்த, வெற்றிகரமான பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தின் இப்போதைய உயர்வை "நிதியியல் கொள்கையின் ஒரு புதிய சகாப்தம்" என்று அழைத்தது. அதாவது: “அனைத்திற்கும் மேலாக அந்த ஆதாரவளங்கள் 'எதிர்கால பணிகளுக்கு' பொருத்தமான துறைகளுக்குள் செல்ல வேண்டும். நிதி அமைச்சகத்தை பொறுத்த வரையில், புவிசார் அரசியல் சவால்கள், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டு-ஒத்துழைப்பு ஆகியவற்றின் வெளிச்சத்தில்—இவை தான் கல்வி, போக்குவரத்து. மறுபுறம், அவசியப்படும் போது, சமூக செலவினங்களையும் ஒதுக்கி அளிக்க வேண்டும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: இராணுவவாதத்திற்கான செலவை இரண்டு விதத்தில் தொழிலாள வர்க்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். போருக்கான "எதிர்கால பணிகளுக்காக" அவர்கள் தான் வெடிமருந்தாக இருக்க போகிறவர்கள். மேலும் இராணுவ கட்டமைப்பிற்கு நிதியளிக்க சமூக செலவினங்களில் மேற்கொண்டு வெட்டுக்களையும் அவர்களே சகித்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், பெரும்பான்மை மக்களின் பெரும் எதிர்ப்பை முகங்கொடுக்கையில் சமூகத்தை இராணுவமயப்படுத்துவதற்காக அரசு எந்திரத்தின் ஒடுக்குமுறையும் கட்டமைக்கப்படும். இராணுவத்திற்கு மேலதிகமாக, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளும் விரிவாக்கப்படும். பொலிஸ் படை, மத்திய குற்றவியல் அலுவலகம், அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் (ஜேர்மன் உளவுத்துறை அமைப்பு) ஆகியவை 2016இல் இருந்து 2019 வரையில் ஒருங்கிணைந்து 750 புதிய பதவிகள் மற்றும் 328 மில்லியன் யூரோ பெற உள்ளன. உள்துறைக்கான ஒதுக்கீடு அடுத்த ஆண்டு 6.7 சதவீத அளவிற்கு 6.6 பில்லியன் யூரோவிற்கு உயரும். 200 மில்லியனுக்கும் அதிகமான யூரோ நேரடியாக அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் பொலிஸ் தேவைகளுக்குள் செல்லும். உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கான உயர்வுகள் மிக மிக பரந்த கட்டமைப்பின் தொடக்கம் மட்டுமே ஆகும். ஜேர்மன் மேற்தட்டு 2016 வெள்ளையறிக்கை என்றழைக்கப்படுவதன் அனுசரணையின் கீழ், தற்போது ஒரு புதிய, ஆக்ரோஷமான அன்னிய நாட்டு கொள்கை மூலோபாயத்தின் மீது வேலை செய்து வருகிறது. அதில் ஜேர்மன் இராணுவத்தின் தலையீடுகள் ஒரு மைய பாத்திரம் வகிக்கின்றன. "இராணுவ முன்னோக்குகள்" என்ற அதிரடி படையின் இந்த முதல் கூட்டம், விடயங்கள் எந்த திசையில் முன்செலுத்தப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியது. அக்குழுவின் தலைவரான இதழாளர் தோமாஸ் வீகோல்ட், இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியில் கூறுகையில், “இராணுவத்திற்கு என்ன மாதிரியான நீண்டகால தகைமைகள் அவசியப்படுகின்றன அல்லது … எவ்வாறு இந்த அதீதபலத்தைத் தடத்தில் பிரயோகிப்பது" என்பது குறித்த பரிந்துரைகளை அவர்கள் வழங்கவிருப்பதாக தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும் "நமக்கு இன்று இத்தனை டாங்கிகள், இத்தனை ராக்கெட்டுகள், இத்தனை புதிய திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் ஒரு பட்டியல் ஏற்கனவே நம்மிடையே இருப்பதாக" கருதவில்லை என்றவர் தெரிவித்தார். ஜேர்மன் இராணுவ அமைப்பின் (Bundeswehr Association) தலைவர் ஆந்திரே வூஸ்ட்னார், பாதுகாப்பு வரவு-செலவு திட்டக் கணக்கில் செய்யப்பட்ட உயர்வை "ஜேர்மனிக்கான மிக நல்ல காலம்" என்று பாராட்டினார். முன்னதாக முனீச் பாதுகாப்பு மாநாட்டிற்கு பின்னர், அவர், ஜேர்மன் படைகள் "செயல்பாட்டுக்குரிய முழு தயார்நிலையை" அடைய வேண்டும் மற்றும் "போருக்கு தயாராக இருக்க வேண்டும்" என்று முறையிட்டார். வூஸ்ட்னார் தெரிவிக்கையில், அவருக்கு “காலத்தின் சமிக்ஞைகளை அரசாங்கம் கண்டு கொண்டது குறித்தும், இப்போது அது குறிப்பிடத்தக்க சீரமைப்புகளைச் செய்யும் என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியே. நம்முடைய காலத்தின் பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பு, உக்ரேன், வடக்கு ஈராக்கின் மற்றும் சிரியாவின் நெருக்கடி, உடனடி முதலீட்டைக் கோருகின்றன. அது உள்கட்டமைப்பின் அவசியமான மறுஒழுங்கமைப்புக்கும், அத்துடன் மிக அவசியமான சாதனங்களை வாங்குவதற்கும் செல்கின்றன” என்றார். ஒருமுனைப்பு “பெரும் பாதுகாப்பு திட்டங்களில்" மட்டும் இருக்கக் கூடாது என்பதையும் வூஸ்ட்னார் சேர்த்துக் கொண்டார். ஜேர்மன் இராணுவ அமைப்பின் பத்திரிகை குறிப்பின்படி, “செயல்பாட்டிற்குரிய தயாரிப்புகளை எட்டுவதற்கு முக்கியமாக உள்ள பயிற்சி அளித்தல், ஒத்திகை மற்றும் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே உரிய சிறிய கொள்முதல் நடவடிக்கைகளும்" முக்கியமானவையாகும். பாதுகாப்பு வரவு-செலவு திட்டக் கணக்கு அதிகரிப்பு, அவர்களுக்கு போதுமானளவிற்கு போதியதாக இல்லை. இராணுவ விரிவாக்கமும் அவசியமாகிறது. வூஸ்ட்னார் இன் கருத்துப்படி, தற்காலிக சிப்பாய்களின் மற்றும் படையில் சேர்க்கப்பட்ட சிப்பாய்களின் தற்போதைய பிரிவுடன் குறைந்தபட்சம் 5,000 புதிய பதவிகள் சேர்க்கப்பட வேண்டியதிருக்கும். |
|