சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Commonwealth summit heightens Western pressure on Rajapakse government

பொதுநலவாய மாநாடு இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான மேற்கத்தைய சக்திகளின் அழுத்தத்தை உக்கிரமாக்கியுள்ளது

By Deepal Jayasekera
18 November 2013

Use this version to printSend feedback

கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடந்த பொதுநலவாய அரசுகளின் தலைவர்களின் மாநாடு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது மேற்கத்தைய சக்திகள் திணிக்கும் அழுத்தத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது. 2009ல் அரசாங்கம் தமிழ் பொது மக்களை கொன்றமை மற்றும் தற்போதைய அடிப்படை ஜனநயாக உரிமை மீறல்கள் தொடர்பாகவே வெளிப்படையாக இந்த அழுத்தங்கள் திணிக்கப்படுகின்றன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது, அது நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட சீனாவிடம் இருந்து தானாகவே தூர விலகுமாறு வலியுறுத்துவதன் பேரில், மனித உரிமை மீறல் விவகாரத்தை சுரண்டிக்கொள்வதற்காக வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் அதேபோல் இந்தியாவும் முன்னெடுக்கும் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்காக பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்திக்கொள்ள இராஜபக்ஷ விரும்பினார்.

மாநாட்டின் போது எந்தவொரு எதிர்ப்பையும் தவிர்க்கும் முயற்சியில், இராஜபக்ஷ அரசாங்கம் சகல அரசாங்க-விரோத ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்தது. யுத்தத்தில் நாசமாக்கப்பட்ட தீவின் வடக்குக்கு செல்வதற்கு பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்கள் முயற்சித்தபோது, அரசாங்க சார்பு குண்டர்கள் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் வைத்து ரயிலை மறித்ததோடு ரயில் கிளிநொச்சிவரை செல்லாமல் தடுத்தனர்.

எவ்வாறெனினும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் மாநாட்டை பகிஷ்கரித்தமை இராஜபக்ஷவின் முயற்சிகளுக்கு ஒரு பெரும் அடியாகும். மொரிஸியஸ் பிரதமர் நவின் ராம்கூலாம் இந்த பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டமை இதை இன்னும் பலமாக்கியது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் மாநாட்டுக்கு வந்தபோதும், தனது பங்குபற்றலை அவர் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்ற விவகாரங்களை எழுப்புவதற்காக பயன்படுத்திக்கொண்டார்.

ஹார்ப்பர், ராம்கூலாம் ஆகிய இருவரும், தமது பகிஷ்கரிப்புகளுக்கான காரணமாக, குறிப்பாக தமிழர்கள் தொடர்பான இராஜபக்ஷ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை மேற்கோள் காட்டினார். இராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதிய சிங், தாம் குறிப்பாக சுட்டிக் காட்டமுடியாத “பல்வேறு காரணங்களால்” தன்னால் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற முடியாமையை பற்றி வருத்தம் தெரிவித்தார். எனினும், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளையும் மற்றும் தனது சொந்த காங்கிரஸ் கட்சியின் சில அமைச்சர்களையும் சாந்தப்படுத்துவதற்கே அவர் இந்த தீர்மானத்தை எடுத்தார். கொழும்பின் யுத்தக் குற்றங்களையும் மற்றும் இலங்கையின் வடக்கில் தமிழ் தட்டுக்களுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள அது தவறியமையையும் சுட்டிக் காட்டிய தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்ட கட்சிகள், இந்தியா பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கோரின.

பிராந்தியத்திலும் சர்வதேச ரீதியிலும் தனது தோற்றத்தை ஊதிப் பெரிதாக்குவதன் பேரில், பிராதன பிராந்திய சக்தியின் தலைவர் என்றவகையில் சிங்கின் பங்குபற்றலுக்காக இராஜபக்ஷ அரசாங்கம் ஏங்கியது. தமிழர்களை அது நடத்திய முறை தொடர்பான மேற்கத்தைய விமர்சனங்களை எதிர்ப்பதற்கு சிங்கின் வருகை உதவும் என அரசாங்கம் கணக்கிட்டது.

சிங், ஹார்ப்பர், ராம்கூலாம் மற்றும் கமெரோனின் நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை எதிர்ப்பதற்காக இந்து-பசுபிக்கிற்கு “மீண்டும் திரும்பும்” ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையின் பாகமாக, இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மனித உரிமைகள் விவகாரத்தை சுரண்டிக்கொள்ளும் அமெரிக்காவுடன் அணிசேர்வதற்கு ஹார்ப்பர் தீர்மானித்தார். கனடாவில் உள்ள பிரமாண்டமான புலம்பெயர் தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் தனது அரசாங்கத்துக்கு தேர்தல் ஆதரவை பெரிதாக்கிக்கொள்ள ஹார்ப்பர் எதிர்பார்கின்றார்.

இதே போன்ற அமெரிக்க-சார்பு மூலோபாய அக்கறையினால் உந்தப்பெற்ற கமெரோனின் தலையீடு, கொழும்பு அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினைகளை எற்படுத்தியது. வெள்ளிக்கிழமை பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வை அடுத்து, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தின் தலைநகரமான யாழ்ப்பாணத்துக்கு கமெரோன் பயணித்தார். அங்கு அவரை சூழ்ந்துகொண்ட சுமார் 250 தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை அதிகாரிகளால் தமது உறவுகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில், கமெரோன் தமிழ் நாளிதழான உதயனின் அலுவலகத்துக்துச் சென்றார். உதயன், அரசாங்க-சார்பு குண்டர்களால் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அலுவலகத்துக்கு தீ மூட்டப்பட்டதும் ஊழியர்கள் கொல்லப்பட்டதும் அடங்கும். பின்னர் அவர், பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார். கமெரோன் சனல் 4, பிபிசி மற்றும் ஐடீவி உட்பட பிரித்தானிய ஊடகங்களின் நிருபர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவங்கள் இழைத்த யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தி சனல் 4 ஊடகம் மூன்று விவரணத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. பொதுநலவாய மாநாடு நெருங்கிய போது, இந்த தொலைக் காட்சி அதன் கடைசி திரைப்படத்தை வெளியிட்டிருந்தது. 40,000 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறும் அது, புலிகளின் தொலைக் காட்சி சேவையின் ஒரு உயர்மட்ட பெண் அறிவிப்பாளரான இசைப்பிரியா என்றழைக்கப்படும் ஷோபாவை இராணுவம் கொன்றதாக விவரிதித்துள்ளது. அவர் உடற் காயங்கள் இன்றி உயிருடன் பிடிக்கப்படுவதை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

பாதுகாப்பு வலயம் என்ற விவரணம், “நடுங்கச் செய்கின்றது” என கமெரோன் குறிப்பிட்டார். மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் கட்டளையின் கீழ் இயங்கிய இலங்கை இராணுவம் நடத்திய “தாக்குதலின்” போது, புலிகளின் 31 தலைவர்களுடன் ஷோபாவும் கொல்லப்பட்டார் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் கூறப்பட்டிருப்பதும் பொய் என்பதை அது அம்பலப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை நிருபர்கள் மாநாட்டில் உரையாற்றிய கமெரோன், “[யுத்தக் குற்றங்களை] குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நம்பகமான முறைமை வேண்டும்” எனக் கோரியதோடு, அடுத்த மார்ச் மாதமளவில் இலங்கை பதலிறுக்காவிட்டால், “ஒரு சர்வதேச விசாரணையை” முன்னெடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தனது அதிகாரத்தை பிரிட்டன் பயன்படுத்தும் என்றும் எச்சரித்தார். “குறித்த இந்த விவகாரம் தூர விலகும் என நான் நினைக்கவில்லை, அது இப்போது சர்வதேச விடயங்களில் உள்ளது” என தான் இராஜபக்ஷவுக்கு தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த இராஜபக்ஷ, முடிவில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியதாவது: “தான் விரும்பிய எதையும் அவர் கூறலாம். கண்ணாடி பெட்டிக்குள் இருப்பவர்கள் மற்றவர் மீது கல் எறியக் கூடாது.” கமெரோன் இலங்கை மீது அழுத்தங்களை திணிக்கின்றார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜபக்ஷ பிரகடனப்படுத்தியதாவது: “அழுத்தங்கள் எதையும் செய்யப்போவதில்லை... கோரிக்கை அல்லது கட்டளைகளை விடுப்பதை விட காத்திருப்பது மிகவும் சிறந்தது.”

உண்மையான ஆதரங்கள் நேர்மாறாக இருந்தபோதிலும், யுத்தத்தின்போது எந்தவொரு பொது மகனும் கொல்லப்படவில்லை என கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருவதோடு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்றழைக்கப்படுவதன் கீழ் தனது சொந்த வெட்கங்கெட்ட விசாரணையை நடத்தியது.

கொழும்பின் நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பகிரங்கமாக ஆதரித்தார். அவர் தனது மாநாட்டு உரையில் இராஜபக்ஷ அரசாங்கத்தை பாராட்டி கூறியதாவது: “இலங்கை இந்த பொதுநலவாய மாநாட்டை நடத்த விரும்பியமை, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக பன்மைத்துவம் மற்றும் சுதந்திரத்துக்கான அதன் அர்ப்பணிப்பை காட்டுவதோடு, நேற்றை விட இன்றும் மற்றும் இன்றைவிட நாளையும் சிறப்பாக இருக்கும் என அதன் சகல பிரஜைகளுக்கும் உறுதியளிக்கும் முயற்சியையும் காட்டுகின்றது.”

இலங்கை பாதுகாப்பு படையினரின் சித்திரவதைகள் பற்றிய செய்திகள் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த அபோட், சித்திரவதைகளை முழுமையாக அலட்சியம் செய்ததோடு, தனது அரசாங்கம் “சித்திரவதைகளைப் பயன்படுத்துவதை கண்டனம் செய்யும்போது, சில சமயம் கடினமான சூழ்நிலைகளில் கடினமான விடயங்கள் நடப்பதுண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்” என நிருபர்களிடம் அவர் கூறினார். தனது கடைசி ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜபக்ஷ அபோட்டின் ஆதரவுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.

அபோட்டின் பாராட்டுக்கள், ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். படகுகளில் ஆஸ்திரேலியாவை சென்றடைய முயற்சிக்கும் இலங்கை புகலிடம் கோருவோரை நிறுத்துவதற்கு கன்பரா இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றது. தான் “சிறந்த மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை” பலப்படுத்த விரும்பவதாக அபோட் தெரிவித்தார். மாநாட்டின் கடைசி நாளில், ஆஸ்திரேலியா இலங்கைக்கு இரு கடப்படை ரோந்துப்படகுகளை வழங்குவதாகவும் “ஆள் கடத்தல்களை” தடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னைய ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கத்தினால் செய்துகொள்ளப்பட்ட இதேபோன்ற உடன்படிக்கையை அடுத்து வந்துள்ள இந்த நகர்வு, இராஜபக்ஷ அராங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிச் செல்ல முயலும் தமிழர்கள் மற்றும் ஏனைய இலங்கையர்களை கைது செய்வதற்கு மேலும் உதவி செய்வதையே குறிக்கின்றது.

இதேபோல், மாநாட்டில் பங்குபற்றிய நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் மௌரி மெக்குளி, தனது நாட்டின் பால் தொழிற்துறையின் நலன்களை முன்வைத்தார். யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஒரு சுயாதீன விசாரணைக்கு நியூசிலாந்து ஆதரவளிக்காது என அவர் கூறினார். தீவின் வடக்குக்கு விஜயம் செய்தபோது, அவர் முல்லைத் தீவில் பால் குளிரூட்டும் நிலையமொன்றுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 2 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஒரு பால் உற்பத்தி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார்.

இரு அமெரிக்க பங்காளிகளின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைத்தாலும், அதன் போலிஸ்-அரச முறையிலான அரசியல் மற்றும் ஊடக அடக்குமுறை, அதேபோல் யுத்தக் குற்றங்கள் பற்றிய அதன் திட்டமிட்ட மூடி மறைப்புக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய பொதுநலவாய மாநாடு, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சறுக்கலாகும்.