சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Saudi Arabia executes young Sri Lankan housemaid

சவுதி அரேபியா இலங்கையைச் சேர்ந்த இளம் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது

By Vilani Peiris
11 January 2013

use this version to print | Send feedback

ஜனவரி 9 அன்று சவுதி அரேபிய அதிகாரிகள் 24 வயதான இலங்கை பணிப்பெண் ரிஸானா நஃபீக்கின் தலையைத் துண்டித்தனர். அவர் தனது எஜமானரின் குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். நஃபீக் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார். நஃபீக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவுமுள்ள மனித உரிமைகள் குழுக்கள் பரவலாக கண்டனம் செய்திருந்தன.

இந்த மரணதண்டனை, சவுதி ஆட்சியின் பிற்போக்கு தன்மையை மட்டுமன்றி, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலட்சக் கணக்கான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் தலைவிதியை பற்றி இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அலட்சியமான அணுகுமுறையும் அம்பலப்படுத்துகிறது.

இலங்கை வெளியுறவு அமைச்சு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சார்பில் ஒரு அடையாள கண்டனத்தை வெளியிட்டது: "அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட போதிலும் மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ரிஸானா நஃபீக்குக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைப் பற்றி வருந்துகிறோம்," என அது தெரிவித்தது. பாராளுமன்றம் புதனன்று ஒரு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர், அடுத்த நடவடிக்கைக்கு சென்றது.

உண்மையில், இராஜபக்ஷ அரசாங்கம், நஃபீக்குக்கின் சட்டரீதியான பாதுகாப்புக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சவுதி நீதிமன்றம் 2007ல் அவருக்கு மரண தண்டனை விதித்த பின்னரும் கூட, அரசாங்கம் மேல் முறையீடு செய்வதற்கு நிதி உதவி வழங்க மறுத்துவிட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் கெஹேலியே ரம்புக்வெல்ல, "சவுதி அரேபியாவின் உள்நாட்டு சட்டங்களை மீறாமல் இருப்பது முக்கியம்," என்று அறிவித்தார். சவுதி ஆட்சியுடன் நல்லுறவைப் பேணுவதற்கும் மற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தக்கவைத்துக்கொள்வதற்குமே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது.

நஃபீக், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 2005ல் தனது 17 வயதில் அவர் மத்திய கிழக்கிற்கு பயணமானார். அதற்காக தொழில் முகவர் ஒருவர், வேலை தகுதியின் பொருட்டு வயதை திருத்துமாறு நஃபீக்குக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். அவருக்கு சவுதி அரேபியாவில் ஒரு வீட்டு பணிப்பெண் வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், அவர் எந்த அனுபவமோ அல்லது பயிற்சியோ இல்லாமல் ஒரு குழந்தையை பராமரிக்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டார். சில வாரங்களில், அவர் போத்தலில் பால் ஊட்டிக்கொண்டிருந்த போது, குழந்தை இறந்து விட்டது. இதன் பின்னர் அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு சவுதி நீதிமன்றம், போலீசாரால் எடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்றழைக்கப்படுவதன் அடிப்படையில், அவரை குற்றவாளியாகக் கண்டது. ஒரு வழக்கறிஞர் அல்லது ஒரு தொழில்சார் மொழிபெயர்ப்பாளரின் உதவி இன்றி நீதிமன்ற விசாரணையை அவர் எதிர்கொள்ளத் தள்ளப்பட்டார். சவுதி உச்ச நீதிமன்றத்திற்கு அவர் முன்வைத்த மேன் முறையீட்டிற்கு, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நிதியுதவி செய்திருந்தது. தனது முறையீட்டில், தனது ஒப்புதல் வாக்குமூலம் பலாத்காரமாக எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார். அவர் குழந்தைக்கு பால் ஊட்டும் போது மூச்சடைக்கத் தொடங்கியதால் அவரால் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது.  உச்ச நீதிமன்றம் அவரது வேண்டுகோளை நிராகரித்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. அந்த சம்பவம் நடந்த போது அவருக்கு 17 வயது என்ற உண்மையை அலட்சியம் செய்தது.

நஃபீக்குக்கு உதவ இராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த "முயற்சிகள்", சவுதி அரேபியாவுக்கு அமைச்சுப் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் பயணம் செய்வது, சிறையில் உள்ள தமது மகளைக் காண அவரது பெற்றோருக்கு பயண ஏற்பாடுகள் செய்வது மற்றும் சவுதி மன்னருக்கு இராஜபக்ஷ வேண்டுகோள் விடுப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், நஃபீக்கின் மரண தண்டனை சம்பந்தமாக கொழும்பில் பெருகிவந்த விமர்சனங்களை மற்றும் எதிர்ப்புக்களை தணிப்பதேயாகும்.

கடைசி நிமிடம் வரை, சவுதி அதிகாரிகளுடனான அதன் பேச்சுவார்த்தைகளின் விளைவாக நஃபீக்குக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று இலங்கை அரசாங்கம் போலியாக கூறிவந்தது. ஜனவரி 5 அன்று, அரசுக்கு சொந்தமான டெயிலி நியூஸ், இலங்கையில் உள்ள சவுதி தூதரின் படி, நஃபீக் மன்னிப்பு பெறக் கூடும்" என்று செய்தி வெளியிட்டிருந்தது. நஃபீக்கின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்த இளம் பெண்ணுக்கு மன்னிப்பு பெற ஜனாதிபதி இராஜபக்ஷவும் அரசாங்கமும் சாத்தியமான அனைத்தையும் செய்தனர் என இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

 ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை அரசாங்கத்தை குற்றம் சாட்டியது. அப்பாவி இலங்கை இளம் பெண்ணின் மரணத்திற்கு இலங்கையின் ஜனாதிபதி திரு. மஹிந்த இராஜபக்ஷவே ஒரே பொறுப்பாளி என திட்டவட்டமாகத் தெரிவித்த அது, "அவர் தலைமையிலான அவரது அலுவலகமும் அரசாங்கமும் வெட்கமின்றி இந்த அப்பாவி இலங்கை இளம் பெண்ணின் வாழ்க்கையை அலட்சியம் செய்துவிட்டன, என மேலும் கூறியது. தலையீடு செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களை இலங்கை அரசாங்கம் புறக்கணித்ததோடு இந்த வழக்கு சம்பந்தமாக பயனற்ற அறிக்கைகளை விடுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என அந்த ஆணைக்குழு அறிவித்தது.

 அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (HRW) ஒரு மூத்த ஆய்வாளரான நிஷா வரியா, ஒரு அறிக்கையில் கூறியதாவது: "குழந்தை இறந்த சமயத்தில் ரிஸானாவே ஒரு பிள்ளையாகத்தான் இருந்தார்... உலகின் ஏனைய இடங்களில் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதைப் போல், எந்தவொரு சிறுவர் குற்றவாளியும் எப்போதும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படக் கூடாது, என்பதை சவுதி அரேபியா அங்கீகரிக்க வேண்டும்.”

18 வயதிற்கு முன்னர் செய்த குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதைத் தடைசெய்யும், சிறுவர்கள் உரிமைகள் குறித்த உடன்படிக்கையின் விதிகளை சவுதி அரேபியா மீறியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையை சவுதி அரேபியா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டிருந்தாலும், அது இஸ்லாமிய சட்டத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் போது விதிவிலக்குகளுக்கு  கதவைத் திறந்த விட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் படி, சவுதி அதிகாரிகள் கடந்த ஆண்டு குறைந்தது 69 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களில் பாதி பேர், வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை தெரிவிக்கின்றது.

மில்லியன் கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தெற்காசியாவில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கு சவுதி சட்டத்தின் கீழ் ஒரு சில உரிமைகளே இருப்பதோடு பெரும்பாலும் கேவலமாக நடத்தப்படுவதுடன் ஒழுங்காக ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. வீட்டுப் பணிப்பெண்களாக இருப்பவர்கள், அடிமைகளை விட சற்றே அதிகமாக மரியாதையுடன் நடத்தப்படுபவர்கள். அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்யத் தள்ளப்படுவதோடு, உளவியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தாலும் பாதிக்கப்படுகின்றனர். எனினும், தென் ஆசிய அரசாங்கங்கள், சவுதி ஆட்சியுடன் ஒரு நல்ல உறவை உறுதி செய்துகொள்வதற்காகவும் தொழிலாளர்களின் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு வருவாயை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் இவை பற்றி கண்டும் காணதது போல் இருக்கின்றன.

சென்மதி நிலுவை நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை அரசாங்கம், நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் ஈட்டும் உயர்மட்ட துறையில் ஒன்றான இந்த வெளிநாட்டு வருவாயில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. டெய்லி நியூஸ், புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் 2012 இறுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, ஜனவரி 2 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில், 3.9 பில்லியன் டொலர்களாக இருந்தது என்றும், இது "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2 சதவீதத்துக்கு சமமானதும் மொத்த அரசாங்க வருமானத்தில் 25 சதவீதமும் மற்றும் மொத்த அந்நிய செலாவணி வருவாயில் 35 சதவீதமும் ஆகும்," என்றும் அது தெரிவித்துள்ளது.