World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan corporate profits soar as workers face poverty

தொழிலாளர்கள் வறுமையை எதிர்கொள்கின்ற நிலையில் இலங்கை கூட்டுத்தாபன இலாபங்கள் அதிகரிக்கின்றன

By Saman Gunadasa
25 April 2013

Back to screen version

இலங்கையின் கூட்டுத்தாபனத் துறை வெளியிட்டுள்ள, 2013 மார்ச்சில் முடிவடையும் நிதியாண்டுக்கான இலாப பெறுபேறுகள், கையளவு எண்ணிக்கையிலான பெரும் வர்த்தகர்கள் நாட்டின் செல்வத்தை சட்டைப் பைக்குள் நிரப்புவதை அம்பலப்படுத்துகின்ற அதே வேளை, உழைக்கும் மக்கள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை தாங்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளியான NDB பங்குத் தரகர் அறிக்கையின் படி, இலாபங்கள் பெருந்தோட்டங்களில் 375 வீதமும், சுகாதாரத் துறையில் 153 வீதமும், மின் மற்றும் எரிசக்தியில் 81 வீதமும், வங்கி மற்றும் நிதியில் 40 வீதமும், ஹோட்டல் மற்றும் பிரயாணத்தில் 28 வீதமும், மதுபாணம், உணவு மற்றும் புகையிலையில் 18 வீதமும் மற்றும் தொலைத் தொடர்பில் 7 வீதமும் பெருகியுள்ளன.

தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி கொடூரமாக சுரண்டப்படுவது பெருந்தோட்டத் துறையில் ஒளிவுமறைவின்றி வெளிப்பட்டுள்ளது. கம்பனி இலாபங்கள் கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ள அதே வேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் ஆகக் குறைந்த சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர்.  

தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகங்களுக்கும் இடையில் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் இந்த மாதம் கைச்சாத்திடப்பட்ட இரகசிய சம்பள உடன்படிக்கையின் கீழ், நாள் சம்பளம் வெறும் 70 ரூபாவால் (55 அமெரிக்க சதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதோடு உற்பத்தி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிதியாண்டின் கடைசி கால் பகுதியின் போது, ஹொரணை பெருந்தோட்டக் கம்பனி தனது இலாபத்தை மும்மடங்காக 100 மில்லியன் ரூபா வரை அதிகரித்துக்கொண்டுள்ள அதே வேளை, பொகவந்தலாவை தேயிலைத் தோட்ட கம்பனிகளின் மொத்த இலாபம் ஐந்து மடங்குக்கும் மேலாக 170 மில்லியன் ரூபாய்களை விழுங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்ட ரூபாயின் கனிசமான மதிப்பிறக்கமும், தேயிலையின் அதிகரித்த சர்வதேச விலையும் பெருந்தோட்ட இலாபங்களை அதிகரிக்கச் செய்த பிரதான காரணிகளாகும்.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லத் தள்ளப்பட்டு, அடிக்கடி தமது சேமிப்புகளை செலவளிக்கவும் மற்றும் சொத்துக்களைக் கூட விற்றுத்தள்ளவும் அவர்கள் நெருக்கப்படுவதால், மருத்துவத் துறை இலாபங்கள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம், இலங்கை அரசாங்கம் இலவச சுகாதார பராமரிப்பு முறைமையை தீவிரமாக சீரழித்துவருவதே ஆகும்.

இதே போல், அரசாங்கத்துக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபைக்கு (இ.மி.ச.) மின்சக்தியை விற்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், மிகப்பெறும் நட்டத்தை எதிர்கொண்டு திறைசேரி நிதியில் தங்கியிருக்கின்ற இ.மி.ச.யின் செலவில் பிரமாண்டமான இலாபத்தைப் பெற்றுள்ளன. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்கக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையை அமுல்படுத்துவதன் பேரில், அரசாங்கம் வீட்டு மின் பாவனை கட்டணத்தை திகைப்படையும் வகையில் 68 வீதத்தால் அதிகரித்துள்ளது. எனினும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களின் இலாபத்தில் கைவைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு கிடையாது.

எல்லாமாக, இந்த நிதியாண்டு காலத்தில், கூட்டுத்தாபன இலாபங்கள் சராசரியாக 10 வீதத்தால் அதிகரித்துள்ளன. என்.டி.பி. அறிக்கை தெரிவிப்பதாவது: பங்குச் சந்தையின் மொத்த மூலதனத்தில் 77 சதவீதத்துக்கு பங்களிப்புச் செய்யும், சந்தையை பிரதிநிதித்துவம் செய்பவையாக கருதப்படும், மாதிரியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட 93 கம்பனிகளின் மொத்த இலாபம், ஆண்டாண்டு காலமாக 10 வீதத்தால் அதிகரித்துள்ளன.

அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்த வர்த்தக மற்றும் நிதிய கும்பலின் பகுதியினரால் பங்குச் சந்தைகளே தந்திரமாக இயக்கப்படுவதனால், சிறிய முதலீட்டாளர்களின் செலவில் பெரிய முதலீட்டாளர்கள் பிரமாண்டமான இலாபத்தை ஈட்டுகின்றனர். தொழிலாளர்களின் ஓய்வூதியங்களும் அரச வங்கிகளில் உள்ள வைப்புக்களும் இத்தகைய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

வங்கித் துறை, மிகவும் இலாபகரமான தொழிற்துறைகளில் ஒன்றாகி உள்ளது. 2012 மத்திய வங்கி அறிக்கை தெரிவிப்பதாவது: 2011ல் அறிவிக்கப்பட்ட, வரி செலுத்திய பின்னர் கிடைத்த 66 பில்லியன் ரூபா இலாபத்துடன் ஒப்பிடும் போது, 2012ல் வரி செலுத்திய பின்னர் 82 பில்லியன் ரூபா உயர்ந்த இலாபத்தை வங்கித் துறை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பத் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற உள்நாட்டு வங்கிகள், முறையே 5 பில்லியன் மற்றும் அரை பில்லியன் ரூபா வரை 50 வீதத்துக்கும் அதிகமான இலாபத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், காப்புறுதி நிறுவனங்களில், செலிங்கோ காப்புறுதி 1.65 பில்லியன் வரை 24 வீதமும் மற்றும் யூனியன் அசுரன்ஸ் 921 மில்லியன் ரூபா வரை 33 வீதமும் தூய இலாபம் பெற்றுள்ளன.

வங்கி இலாபங்கள், பிரதானமாக உயர்ந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கும் அதே வேளை, வைப்பீடுகளுக்கான வட்டியை குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதிலேயே பெருகுகின்றன. அதே போல், ரூபாயின் மதிப்பிறக்கத்திலும் வங்கிகள் நன்மையடைகின்றன.

வங்கிகளின் சூறையாடும் வட்டி வீதங்கள், வியாபாரங்களில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இலங்கை சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை சபையின் தலைவர் அலொய் ஜயவர்தன, 18 வீதம் வரை அதிகரித்துள்ள கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் உட்பட, கலைப்பு ஏற்படுத்துகின்ற நிதியச் சிரமங்களின் மத்தியில்,கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பூராவும் நாட்டின் சிறிய தொழிற்துறையில் சுமார் கால் பகுதி பொறிந்து போய்விட்டதாக, அண்மையில் தெரிவித்தார். 

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும், அதிகபட்ச கூட்டுத்தாபன வரியை வெறும் 28 சதவீதமாக வைத்திருப்பதன் மூலம் இலாபங்களை ஊதிப் பெருக்க உதவுகிறது. அதே சமயம், நிதியமைச்சராகவும் இருக்கும் இராஜபக்ஷ, இறுக்கமான ஊதிய உயர்வு தடை, மானிய வெட்டுக்கள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள், எரிசக்தி மற்றும் ஏனைய அத்தியாவசியங்கள் மீதும் வரிகளை அதிகரிப்பதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை திணிக்கின்றார்.

நாளுக்கு நாள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து வருகின்றன. கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மத்திய வங்கியானது உற்பத்தி திறன் முன்னேற்றம் என சொல்லப்படுவது இல்லாமல் சம்பளத்தை அதிகரிப்பது, ஊதியத்தால் தோற்றுவிக்கப்படும் பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அவ்வாறு அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரித்தது. வேலை நேரம் அதிகரிப்பு, உற்பத்தி வேக அதிகரிப்பு மற்றும் கனமான வேலைச் சுமைகள் ஊடாக தொழிலாளர்களை சுரண்டுவதை உக்கிரமாக்குவதே உற்பத்தித் திறன் முன்னேற்றம் என்பதன் அர்த்தமாகும்.

சமூக சமத்துவமின்மை மிகவும் வெளிப்படையாக உள்ளது. அண்மையில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பொருளியல் பேராசிரியர் ஏ.வி.டி.எஸ் இந்திராரட்ன தெரிவித்ததாவது: இலங்கை 60 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான சிறிய பொருளாதாரத்தை கொண்டது. 20 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், தலா வருமானம் 2,920 அமெரிக்க டொலர் ஆகும். ஆயினும் இந்த ஜனத்தொகையில் 2/5 பேர் அல்லது 40 வீதமானவர்கள் இந்த தொகையில் கால்வாசியையே தலா வருமானமாகப் பெறுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு நாளுக்கு 2 டொலருக்கும் குறைவான வருமானத்தைப் பெறுகின்றனர்.

அண்மைய உத்தியோகபூர்வ இல்லத்தோர் வருமானம் மற்றும் செலவு ஆய்வு, 2009-10ம் ஆண்டில் ஜனத்தொகையில் மிக வறிய 20 வீதமானவர்கள், மொத்த இல்லத்தோர் வருமானத்தில் 4.5 வீதத்தை மட்டுமே பெற்றுள்ள அதே வேளை, பெரும் பணக்காரர்களில் 20 வீதமானவர்கள் 54.1 வீதத்தை பெற்றுள்ளனர். சராசரி இல்லத்தோரின் வருமானத்தின் கிட்டத்தட்ட அரைப் பங்கு உணவுக்கே செலவாகிறது என ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது.

இந்த ஆய்வின்படி, நான்குபேர் அடங்கிய ஒரு குடும்பத்துக்குத் தேவையான குறைந்தபட்ச மாத வருமானம், 32,000 ரூபாயாக (252 டொலர்) இருக்கும். இருப்பினும், உயர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவையும், பெரும்பாலான தொழிலாள வர்க்க இல்லத்தவர்கள் இதில் அரைவாசிக்கும் குறைவான தொகையில் உயிர் பிழைக்கப் போராடிக்கொண்டிருப்பதையும் இந்த புள்ளி விபரங்கள் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டன. இதன் விளைவாக, தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரங்களை பொறுப்பெடுப்பதுடன், விடுமுறை நாட்களையும் அர்ப்பணிப்பதோடு முதுகெழும்பு முறியுமளவு வேகமாக வேலை செய்கின்றனர்.

2013 மார்ச்சில், அரசாங்கத்தின் தேசிய வறுமைக் கோடு, மாதம் 3,659 ரூபாயாக, அல்லது நாளொன்றுக்கு 121 ரூபாயாக (95 அமெரிக்க சதம்) இருந்தது. இது ஒரு தனிமனிதனுக்கு சோறு உணவுப் பொட்டலம் ஒன்றை வாங்குவதற்கும் போதுமானதல்ல. இந்த அளவீடுகளின் மூலம் கூட, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் அத்தகைய வறுமையால் நசுங்கிக்கொண்டிருக்கின்றனர்.