World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Police violently break up protests following suicide in Athens

ஏதென்ஸ் தற்கொலையை தொடர்ந்த எதிர்ப்புக்களை போலிஸ் வன்முறையுடன் ஒடுக்குகின்றது

By Christoph Dreier 
7 April 2012
Back to screen version

புதன் அன்று 77 வயது டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸ் தற்கொலையை அடுத்து ஏதென்ஸ் தெருக்களில், ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள், ஆர்ப்பாட்டம் செய்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளின்பேரில் செயல்படுத்தப்படுகின்ற அரசாங்கத்தின் கடுமையான சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவ்வார்ப்பாட்டங்களை போலிசார் வன்முறையுடன் எதிர்கொண்டனர்.

சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான மிருத்தன வெட்டுக்களை இயற்றிய கிரேக்கப் பாராளுமன்றத்திற்கு முன் ஏதென்ஸில் மத்திய சின்டகமா சதுக்கத்தில் கிறிஸ்ரோலாஸ் தன்னை ஒரு கைத்துப்பாக்கியால் சுட்டு இறந்து போனார். குப்பைத் தொட்டியில் உணவைப் பொறுக்குதல் என்று முடியும் அவலத்தை விட, கௌரவமாக இறந்து போவதைத் தான் விரும்புவதாக அவர் தான் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றில் குறிப்பட்டுள்ளார். இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எழுச்சி செய்யவேண்டும் என்றும், இந்த ஆட்சி இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஆக்கிரமிப்பின்கீழ் இருந்த கைப்பாவை அரசாங்கம் போல் உள்ளது என்றும் அவர் ஒப்பிட்டுள்ளார்.

கிறிஸ்ரோலாஸின் மரண அறிவிப்பைத் தொடர்ந்து, சின்டகமா சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடினர். நடந்துள்ளது தற்கொலை அல்ல என்றும் மாறாக அரசாங்கம் நடத்தியுள்ள கொலை என்றும் பலர் கோஷமிட்டனர்.

பல எதிர்ப்பாளர்கள் கிறிஸ்ரோலாஸ் கொலை செய்து கொண்ட மரத்தின்கீழ் கடிதங்களையும் மலர்களையும் வைத்தனர். ஒரு குறிப்பில், கடன்கொடுத்தவர்களின் சர்வாதிகாரத்தால் கொலை செய்யப்பட்டவர்என்று எழுதப்பட்டு இருந்தது. மற்றொன்று, அடுத்த பலி யார்? என்ற வினாவை எழுப்பியது.

அரசாங்கமும் அரச சக்திகளும் எதிர்ப்புக்களுக்கு மிகத் தீவிர முறையில் இந்த தன்னியல்பான எதிர்ப்புக்களை எதிர்கொண்டன. சில சிறு மோதல்களை காரணமாக காட்டி தடியடிகளைப் பிரயோகிக்கவும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலிஸ் வீசியது. புதன் அன்று பத்து பேர் கைது செய்யப்பட்டனர், பலர் காயமுற்றனர்.

வியாழனன்று பாராளுமன்றச் சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்க்காரர்கள் பொலிசால் உடனடியாக அகற்றப்பட்டனர்.

கிடைத்துள்ள தகவல்கள்படி, பாதுகாப்புப் படைகள் வேண்டுமென்றே செய்தியாளர்களுக்கு எதிராக நடந்து கொண்டனர்: இது அரசாங்கத்தின் வன்முறை அடக்குமுறை பற்றி அதிகம் விமர்சிப்பதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. புதன் அன்று, ஆன்டனா தனியார் தொலைக்காட்சி நிலைய நிருபர் ஒருவர் பொலிஸ் தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெட் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தான் ஒரு செய்தியாளர் என்ற அடையாளத்தைக் காட்டியும் பொலிசால் தாக்கப்பட்டதாகக் கூறினார். நடைபாதையில் இருந்து நான் சாலையில் விழுந்தேன், அதிருஷ்டவசமாக, என் சக ஊழியரைப் போல் இன்றி, காயம் ஏதும் எனக்குப் படவில்லை என்றார் ஜோர்ஜியோஸ் ஜேரபென்டிஸ்.

வெள்ளியன்று செய்திப் புகைப்படக் கலைஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதன் உறுப்பினர்கள் காட்டுமிராண்டித்தன, ஆத்திரமூட்டப்படாத தாக்குலை எதிர் கொண்டனர் என்று கூறியுள்ளனர். சங்கத்தின் தலைவரான மரியோஸ் லோலோஸும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அவர் பலமுறை தடியடியை எதிர்கொண்டார் என்று சாட்சிகள் கூறினர்.

தொழிற்சங்கத்தின் அறிக்கை கூறுவதாவது: தங்கள் கடமையைச் செய்யும் செய்தியாளர்கள்மீது  முறையான, மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவது ஆகும். இது எப்பொழுதாவது நடக்கும் செயல் என்று கூறமுடியாது. ஒரு அப்பாவி நபர் கூட இவை செய்தி ஊடகத்தின் வாயைக் கட்டும் செயல் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸின் மகள் எமி கிறிஸ்ரோலாஸ் தன் தந்தை பற்றிக் கூறினார்: என் தந்தையிடம் இருந்து வந்துள்ள பிரியாவிடைக்கடிதம் எவ்வாறான தவறான விளக்கத்திற்கும் இடம் கொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர் ஓர் இடதுசாரிப் போராளி ஆவார்; தன்னலமற்ற பணியாளர். இவருடைய கடைசிச்செயல் அவர் நம்பியது, செய்தது ஆகியவற்றுடன் இணைந்த முழு உணர்மைமிக்க செயலாகும்.

கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்ரோலாஸ் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார். அவருடைய அண்டை வீட்டார் தகவல்படி அவர் தன்னுடைய வீட்டு பலகணியில் இருந்து நான் விலை செலுத்தமாட்டேன்என்ற கோஷமிட்ட பதாகையை தொங்கவிட்டிருந்தார். அதாவது, வரி அதிகரிப்புக்களுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில். அவருடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறினார்: தன் தற்கொலை மூலம் ஓர் அரசியல் அறிக்கையை அவர் விட விரும்பினார்....அவர் மிகவும் தீவிரமாக அரசியல் ஈடுபாட்டைக் கொண்டிருந்தார், சீற்றமும் நிறைந்தவர்.

கடந்த கோடையில் இந்த ஓய்வூதியம் பெற்று வாழ்ந்தவர் ஆத்திரமுற்ற குடிமக்கள்என்னும் இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார்; அவர்கள் சின்டகமா சதுக்கத்தைப் பல வாரங்கள் ஆக்கிரமித்திருந்தனர். அவருடைய முன்னாள் சக ஊழியர்களில் ஒருவரான நிக்கோலஸ் போடோபோலுஸ் கார்டியனிடம் அவரைத் தான் நன்கு அறிந்திருந்ததாகக் கூறினார். அந்த மரத்தின்கீழ் கிறிஸ்ரோலாஸ் தன்னைக் கொன்று கொண்டார், ஏனெனில், கடந்த கோடையில் அங்குத்தான் அவர் தன்னுடைய கூடாரத்தை அமைத்திருந்தார், சீற்றமுற்றவர்கள் சதுக்கத்தை அப்பொழுது ஆக்கிரமித்திருந்தனர்.அவர் தொடர்ந்து கூறியது: தன் இறப்பின் மூலம் ஒரு கருத்தை அவர் தெரிவிக்க விரும்பினார் என்பது உறுதி. கிளர்ந்தெழுங்கள், ஆயுதங்களை எடுங்கள், எதையும் ஏற்காதீர்கள்! என்றதே அது.

கிறிஸ்ரோலாஸின் தற்கொலை எந்த அளவிற்கு ஓய்வூதியம் பெறுவோர் மட்டும் அல்லாது, கிரேக்கத்தில் பல தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அவநம்பிக்கையான நிலை எதிர்கொண்டுள்ளது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இவருடைய இறப்பு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க அரசாங்கத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டு ஆகும். அவைதான் நெருக்கமாக ஒத்துழைத்து ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சமூகநலத்திட்டங்கள் ஆகியவற்றை அழிக்கச் செயல்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் தற்கொலை விகிதம் 40% அதிகரித்துவிட்டது. கடன் நெருக்கடி வெடித்ததில் இருந்து 1,500 பேருக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓய்வூதியம் பெற்று வந்தவர் தன்னையே மாய்த்துக் கொள்ளுதல் என்று எடுத்த சோகம் ததும்பிய முடிவு தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிகளால் அழைப்பவிடப்பட்ட கணக்கிலடங்கா ஆர்ப்பாட்டங்களின் மீது ஏற்பட்டுள்ள பரந்த, ஆழ்ந்த ஏமாற்றம் இவற்றின் வெளிப்பாடும் ஆகும். இவற்றின் நோக்கம் மக்கள் சீற்றத்தை தீமையற்ற திசையில் திருப்பி, இதனால் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏதும் உருவாகாமல் பாதுகாப்பதாகும்.

எதிர்ப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள்மீது எடுக்கும் பொலிஸ் நடவடிக்கைகளின் மிருகத்தனமான தன்மை கிரேக்கத்தில் வளர்ச்சியுறும் சர்வதாதிகார ஆட்சியின் பெருகிய வடிவமைப்புக்களின் வெளிப்பாடுதான். ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் சமூக எதிர்ப்புரட்சி மற்றும் தேர்ந்தெடுக்கப்படாமல் பதவியில் இருத்தப்பட்டுள்ள லுகாஸ் பாப்படெமோஸின் ஜனநாயகமற்ற அரசாங்கம் செயல்படுத்தும் விதம் ஆகியவை அடிப்படை ஜனநாயக உரிமைகளுடன் இயைந்து இருக்கமுடியாது.

உண்மையான வேலையின்மையின் அளவை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கும் சமீபத்திய யூரோஸ்டாட் புள்ளிவிபரங்கள் 25 வயதிற்குட்பட்டோரில் மிகச் சிறிய அளவினரே வேலையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வேலையில் இருப்பவர்களும் சமீபத்திய மாதங்களில் பெரும் ஊதியக் குறைப்புக்களுக்கு உட்பட்டுள்ளனர். மாதம் ஒன்றிற்கு 600 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை விட சற்று அதிகமாகத்தான் பெறுகின்றனர். தொழிற்சங்கங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வராத எத்தகைய எதிர்ப்புக்களையும் வர்க்க அழுத்தங்கள் முறியும் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பெரும் வன்முறையைக் கையாண்டு நசுக்குகிறது.

கிரேக்க அரசாங்கத்தின் பெருகிய முறையிலான சர்வாதிகாரத் தன்மை சமூக ஜனநாயக கட்சி மந்திரி மிக்காலிஸ் கிறைசௌஷௌடிஸ் ஆரம்பித்து வைத்த முழுத் துடைப்பு” (“clean sweep”) என்பதில் பிரதிபலிப்பாகிறது. கிறிஸ்ரோலாஸ் தற்கொலை செய்து கொண்ட அதே நாளில், நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் குண்டு துளைக்காத கவசங்களுடனும் நாய்கள் பின்தொடர ஏதென்ஸ் தெருக்களில் வசிக்கும் உரிமம் இல்லாதவர்களைத் தேடிச் சுற்றி வந்தனர். வெளிநாட்டார் போல் தோற்றமளித்த பாதசாரிகள் அனைவரும் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்னர். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் அரசாங்கம் நாடு முழுவதும் அமைக்கவுள்ள KEPY எனப்படும் 30 சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை வரவேற்கும் மையங்களில் ஒன்றில் தங்க வைக்கப்படுவர். அங்கிருந்து அவர்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். 40 ஆண்டுகளுக்கு முன்புதான் இதேபோன்ற முகாம்கள் கிரேக்கத்தில் அரசியல் எதிர்ப்பாளர்களைக் காவலில் வைப்பதற்கு இராணுவச் சர்வாதிகாரத்தால் நிறுவப்பட்டிருந்தன.