சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Tens of thousands strike in Greece as military threatens to intervene against anti-austerity protests

சிக்கன நடவடிக்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இராணுவம் தலையீடு செய்ய அச்சுறுத்துகையில் கிரேக்கத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

By Robert Stevens
6 October 2011

use this version to print | Send feedback

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இளைஞர்கள் புதனன்று கிரேக்கம் முழுவதும் ஒரு 24 மணி நேர பொதுத்துறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்; இதற்கான அழைப்பை அரசப் பணித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (ADEDY) மற்றும் கிரேக்கப் பொதுத் தொழிலாளர்கள் கூட்டமைப்பால் (GSEE) விடுக்கப்பட்டு இருந்தன.

சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் இன்னும் கூடுதலான  சிக்கன நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து வந்த முதல் வேலைநிறுத்தம் இது ஆகும்; அந்த அறிவிப்பில் ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மற்றும் 30,000 அரச துறை ஊழியர்களுக்கு 40 சதவிகிதம் ஊதியம் குறைக்கப்பட்டது, ஒரு சொத்துவரிக்குப் பாராளுமன்றம் ஒப்புதல் கொடுத்தது, பயன்பாட்டுக் கட்டணத்துடன் அது சேர்க்கப்படுவது, அதையொட்டி 80 சதவிகித குடும்பங்கள் ஒன்றிற்கு 1000 முதல் 1,500 யூரோக்கள் வரை கூடுதலாக ஆண்டுக்குக் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுவர். பணம் கொடுக்கப்பட முடியாவிட்டால் மின்வசதி நிறுத்தப்படும் என்ற விளைவு வரும்.

பொதுப் போக்குவரத்துத் துறை, உள்ளூராட்சி, வரிவசூலிக்கும் துறை மற்றும் காப்பீட்டு அலுவலகங்களிலுள்ள ஊழியர்கள் அனைவரும் நாடு முழுவதும்  வேலைநிறுத்தம் செய்தனர். அரசாங்க மருத்துவமனைகள் நெருக்கடிக்கால ஊழியர்களுடன்தான் செயல்பட்டன; மேலும் அரச பள்ளிகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் நேரிட்டது. மேலும், முதல் தடவையாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ததை அடுத்து 400க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டுப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. ஏதென்ஸ் மெட்ரோ பாதிப்பு இல்லாமல் செயல்பட்டாலும்கூட, படகுப் பயணங்களும் தடைக்கு உட்பட்டன, முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

தனியார்மயமாக்குப்படுவதற்குக் குறிப்பிடப்பட்டுள்ள பல அரச நிறுவனங்களின் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்தனர்; இதில் மின்சார உற்பத்தி ஆலைகள், லாட்டரித்துறை மற்றும் Piraeus, Thessaloniki உள்ள துறைமுக அமைப்புக்கள் ஆகியவையும் அடங்கும்.

புதன்கிழமை வேலைநிறுத்தத்தை அடுத்து வெள்ளியன்று நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் PASOK அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து பாதுகாப்பு அமைச்சரகத்தை முற்றுகையிட்டது தொடர்ந்தது. நெருக்கடியில் இராணுவத்தின் பிரிவுகள் சமீபத்தில் குறுக்கிட்டதில் மிக வியத்தகு நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஏதென்ஸில் புதன்கிழமை கிட்டத்தட்ட 20,000 மக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே முக்கிய சின்டகமாச் சதுக்கத்தில் “கடனைத் தகர்க்கவும்”, “செல்வந்தர்கள் கடனைத் தீர்க்க வேண்டும்” என்று எழுதியிருந்த பதாகைகளைத் தூக்கிய வண்ணம் ஆர்ப்பரித்தனர்; அதே நேரத்தில் செப்டம்பர் மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸ் கலகப் பிரிவினருக்கும் இடையே பெரும் மோதல்கள் நடந்த இடமான வடக்கு நகரமான தெசலோனிகியில்10,000 பேர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தலைநகரில் 1,000 பொலிசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்; சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸால் கைத்தடிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் கையெறி குண்டுகள் மூலம் தாக்கப்பட்டனர். பலரைப் பொலிஸார் காவலில் வைத்தனர்; மக்கள் பலர் காயமுற்றனர்.

சமீபத்திய நாட்களில் ஐரோப்பிய ஒன்றியம் (EU),  சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகிய “முக்கூட்டு” என அறியப்படுபவற்றின் அதிகாரிகள், பரிசோதகர்களின் பணியைத் தடைக்கு உட்படுத்தி பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. செவ்வாய் காலை கிட்டத்தட்ட 50 எதிர்ப்பாளர்கள் தொழில்துறை மந்திரி ஜியோர்ஜோஸ் கௌட்ரௌமனிஸ் உடைய அலுவலகத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். எதிர்ப்பாளர்கள் நிதி அமைச்சரகத்திலும் ஒரு உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர்.

PASOK அரசாங்கத்திற்கும் முக்கூட்டிற்கும் இடையே ஏற்கனவே உடன்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதைச் சரியாகச் செய்கிறதா என்பதை உறுதிபார்க்கும் வகையில் ஏதென்ஸிற்குச் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர் என்பது மட்டுமில்லாமல், இன்னும் மிருகத்தனமான வெட்டுக்களுக்கு உத்தரவாதம் கோரியும் வந்துள்ளனர். EU, IMF மற்றும் ECB ஆகியவை கடந்த ஆண்டு மொத்த 110 பில்லியன் யூரோக்கடன் தொகையில் 6ம் தவணையை—8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிற்கு—இந்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் பெற முடியும் என்று முக்கூட்டு வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய் அன்று நிதி மந்திரி எவாஞ்சலோஸ் வெனிஜெலோஸ் நவம்பர் நடுப்பகுதியை ஒட்டி கிரேக்கத்திடம் பணம் இருக்காது என்றார். குறிப்பிட்ட காலத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவிகிதம் என்று  2011 க்கான வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை நிதியை பூர்த்தி செய்வதற்குத் தன்னால் இயலாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

யூரோப் பகுதியின் தலைவரான Jean- Claude Junker அக்டோபர் 13ம் தேதி முதலில் திட்டமிட்டுக் கொடுக்கப்படுவதாக இருந்த கிரேக்கத்திற்கான கூடுதல் கடன் பற்றிய முடிவு இப்பொழுது நவம்பர் நடுவில்தான் முடிவெடுக்கப்பட முடியும் என்ற கூறியுள்ளார். கிரேக்கப் பொருளாதாரம் பற்றித் தன் அறிக்கையை முடிவு செய்வதற்கு முக்கூட்டிற்குக் கூடுதல் அவகாசம் தேவை என்று ஜங்கர் கூறினார்.  இந்த முடிவை முகங்கொடுக்கும் வகையில் ஏதென்ஸின் பங்குச் சந்தை கிரேக்கம் தன்னுடைய  330 பில்லியன் கடனைக் கொடுப்பதில் தவிர்க்கமுடியாமல் தவறு ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கு இடையே, 18 ஆண்டுகள் காணப்படாத சரிவைக் கண்டது.

PASOK மற்றும் முக்கூட்டு இரண்டிற்கும் சிக்கன நடவடிக்கைகள் நாட்டை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துகின்றன என்பது நன்கு தெரியும். சமீபத்திய புள்ளிவிபரங்கள் கிரேக்கப் பொருளாதாரம் இந்த ஆண்டு இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 5.5 சதவிகிதம் சுருங்கும் என்று தெரிவிக்கின்றன.

ஆயினும்கூட, அவைகள் இரண்டும் தொழிலாளர்களின் வேலைகள் மீதான தொலைதூரப் பாதிப்புக் கொடுக்கும் தாக்குதல்கள் நடத்துவதற்கு பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி இன்னும் கடுமையான வெட்டுக்கள் செய்யப்பட வேண்டும் என்று ஒருமனதாக வலியுறுத்துகின்றன. இத்துடன் அரசாங்கமானது அரசாங்கச் சொத்துக்களை மொத்தமாகத் தனியார்மயமாக்குவதை விரைவாகச் செய்யவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இணைந்துள்ளது; அடிமட்ட விலைக்கு விலைமதிப்பற்றச் சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் உடைய சர்வதேச வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இக்கொள்கை ஊக்குவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள பல வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டும் நோக்கத்தைக் கொண்டவை அல்ல; மாறாக PASOK யிடம் உள்ள பரந்த விரோதப்பாங்கைக் கட்டுப்படுத்திச் சிதற அடிக்கும் நோக்கத்தைத்தான் அவை கொண்டுள்ளன.

அனைத்துத் தொழிற்சங்கங்களின் முக்கிய நபர்களும் PASOK இன் நீண்ட கால உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆவார்கள். ஒவ்வொரு சிக்கனப் பொதியைத் தொடர்ந்து மற்றொரு இன்னும் மோசமான சிக்கனப்பொதி செயல்படுத்தப்படும் வகையில் 2 ஆண்டுகள் கழிந்தாலும்கூட, அவர்கள் PASOK மற்றும் முக்கூட்டு ஆகியவை குறைந்தப்பட்ச வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்கள் மூலம் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கூறுகின்றனர். புதன்கிழமை நடவடிக்கை பற்றி GSEE செய்தித் தொடர்பாளர் Stathis Anestis ராய்ட்டர்ஸிடம் கூறினார்: “இந்த வேலைநிறுத்தம் மூலம், அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் IMF ஆகியவை இத்தகைய பேரழிவு தரும் கொள்கையை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்திற்கு உட்படுவர்.”

உண்மையில் நேற்றைய ஆர்ப்பாட்டங்கள் தலைநகரிலும் மற்ற இடங்களிலும் நடைபெற்ற முந்தைய ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடும்போது சிறிய அளவில்தான் இருந்தன; இந்தப் பெயரளவு நடவடிக்கைகளினால் தொழிலாளர்களும், இளைஞர்களும் ஏமாற்றத்திகைப்பு அடைந்துள்ளனர் என்பதைத்தான் இது குறிக்கிறது. PASOK மற்றும் அதன் சர்வதேச ஆதரவாளர்கள் மக்கள் உணர்விற்கு முற்றிலும் பொருட்படுத்தாத் தன்மையைத்தான் கொண்டுள்ளனர் என்ற விழிப்பு ஏற்பட்டுவிட்டது—இந்த உண்மை முக்கூட்டின் சமீபத்திய வலியுறுத்தலான தனியார் துறையில் கூட்டு தொழிலாளர் உடன்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் மீது நடத்தப்படும், அரசியல் அளவில் அவர்களை ஆயுதமற்றவர்களாக ஆக்கும் இத்தாக்குதலுக்கு தொழிற்சங்கங்களும் அவற்றிற்கு வக்காலத்து வாங்கும் ஸ்ராலினிச, முன்னாள் இடது குட்டி முதலாளித்துவக் குழுக்களும் இணைந்து செயல்படுகையில், ஆளும் உயரடுக்கு மில்லியன் கணக்கான மக்களின் சமூக நிலைமைகள் மீது நடத்தப்படும் இத்தாக்குதல் ஜனநாயக வழிவகையில் இயலாது என்பதை நன்கு அறியும்.

இதுதான் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தின் சில பிரிவுகள் குறுக்கிடும் பெருகிய அச்சுறுத்தல்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்புக்களை நசுக்குதல் என்ற அச்சுறுத்தல்களின் முக்கியத்துவம் ஆகும். கடந்த வெள்ளி நிகழ்வுகள் பற்றி விவரிக்கையில் EUObserver  வலைத்தளம் எழுதியது: “2,000 அதிகாரிகளின் பரந்த எதிர்ப்பிற்கு இடையே, கிட்டத்தட்ட 300 பேர் [பாதுகாப்பு அமைச்சரகக்] கட்டிடங்களைச் சூழ்ந்தனர்; கூட்டம் “PASOK ஆட்சிக் குழு வீழ்க” என்று அப்பொழுது உரக்கக் கூவியது—இது ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியைப் பற்றிய குறிப்பு ஆகும்.”

இந்த அதிகாரிகள் கட்டிடத்தை விட்டு அகலுமாறு இராணுவத்தின் தலைமை அதிகாரியால் கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் பாதுகாப்பு மந்திரி Panos Beglitis, “இவ்வகையில் நாட்டின் ஜனநாயக முறையிலான அரசாங்கத்திற்கு எதிரான மிரட்டல் மற்றும் ஜனநாயக விரோத நடத்தை என்பது ஒரு அவமதிப்பு ஆகும், இது உடனடியாக அடக்கப்படும்” என்று குறைகூறினார்.

இது ஞாயிறன்று இராணுவத்தைப் பதிலடி கொடுப்பதற்குத்தான் ஊக்கம் அளித்தது. இராணுவத்தின் தொழில்முறை முழுநேர ஊழியர்களின் சங்கமான The Association of Support and Cooperation of the State Armed Forces, அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டது; இது ஆயுதப் படைகள் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. “கிரேக்க ஆயுதப் படைகளின் நிர்வாகிகள் தாங்கள் ஓய்வு பெற்றபின் உள்ள தேவைகள் தொடர்பான பிரச்சினைகளைக் குறித்த சமீபத்திய போக்குகளைப் பெருகிய கவலையுடன் கண்காணித்துவருகின்றனர்” என்று எச்சரித்தது.

“அரசாங்கம் அவர்களுக்கு உதவுதல் என்பது பற்றிய விருப்பங்கள் குறித்து ஆயுதப்படைகளின் சீருடைப் பணியாளர்களின் நம்பிக்கை அதிர்விற்கு உட்பட்டுள்ளது... வன்முறையிலான அடக்குமுறை என்பது மூத்த அதிகாரிகளின் உளப்பாங்கிற்குத் தீவிரமான அடியாகும். நம் பிராந்தியத்தின் தற்பொழுதைய புவிசார் அரசியல் வளர்ச்சியில் இந்த அடி மிகவும் முக்கியமானது” என்று கடிதம் குறிப்பிடுகிறது.

தீய விளைவுகள் வருமோ என்ற வகையில் கடிதம் இன்னும் கூறியது: “தன்னைக் காத்துக் கொள்வதற்கு இராணுவம் ஒவ்வொரு வகை அறநெறி மற்றும் சட்டத் தளத்தைக் கொண்டுள்ளது, அனைத்துச் சட்ட வகைகளைப் பயன்படுத்தியும் அது அவ்வாறு செய்யும்.”

பாதுகாப்பு அமைச்சரகத்தின் செயற்பாடு மற்றும் பகிரங்கக் கடிதம் இரண்டுமே பாதுகாப்பு மந்திரி Beglitis “ஐரோப்பாவிற்கும் கிரேக்கத்திற்கு ஒரு சகாப்தத்தின் முடிவை சமீபத்திய நாட்களின் சம்பவம் வரையறுக்கிறது. உடனடியாக நாம் ஒரு ஒழுங்கான, முழு உணர்வுடன் கூடிய தியாகங்கள் செய்வதற்குத் தயாராக இல்லை என்றால், உள்நாட்டுப் பூசல்களுக்கான பாதை திறந்துவிடும்” என்று கூறினார்.

கிரேக்க அரசியல் வாழ்வில் இராணுவத்தின் தலையீடு—இந்நாடு 1967ல் இருந்து 1974 வரை ஒரு இராணுவ ஆட்சிக்குழுவனால் ஆளப்பட்டது—தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை என உணரப்பட வேண்டும். இராணுவ ஆட்சிக் குழுவின் கடைசித் தப்பிப் பிழைத்துள்ள அதிகாரியான பிரிகேடியர் ஸ்டைலியனோஸ் பட்டக்கோஸ் கடந்த ஆண்டு கூறினார். “எங்கள் காலத்தில் கடன் ஏதும் இல்லை. ஒரு ட்ரஷ்மா கூட தேவையில்லாமல் செலவழிக்கப்படவில்லை. ஜேர்மனியர்கள் அல்லது பிரிட்டிஷார் போல் கிரேக்கர்களிடையே கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் மீது எவரேனும் அதிகாரம் செலுத்த வேண்டும்.”

தளபதிகளின் “ஜனநாயக விரோத நடத்தை” பற்றி பெகலிடிஸ் எவ்வளவு புகார்கள் கூறினாலும், PASOK தான் இராணுவத்தின் நேரடித் தலையீட்டிற்குத் தயாரிப்பை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அரசாங்கம் டிரக் டிரைவர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தியபோது, இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இயற்றப்பட்டிருந்த ஒரு சட்டத்தை அது பயன்படுத்தியது. இப்பொழுது அதைப் பயன்படுத்தலாமா என்று PASOK தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இன்னும் கூடுதலான சான்றுகள் உள்ளன.

அரசாங்கம் ஏற்கனவே “ ஒழுங்கைப் பாதுகாக்க இராணுவத்தை நிலைநிறுத்தும் அளவிற்குச் செல்லாது” என்று முன்பு வலியுறுத்தியதைக் குறிப்பிட்டு, EU Observer,  மேலும் கூறுகிறது: “ஆனால் இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி, ஏதென்ஸ் செய்தி அமைப்பின் கூற்றுப்படி, ஹெலனிக் இராணுவம் சிக்கன-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஒரு போலி மோதலை நடத்தியது.”