சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Free Bradley Manning!

பிராட்லெ மேனிங்கை விடுதலைசெய்!

4 March 2011
Patrick Martin

Use this version to print | Send feedback

இராணுவ சிப்பாய் பிராட்லெ மேனிங்கிற்கு எதிராக மேலும் கூடுதலாக 22 கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய (இதில் மரண தண்டனை அளிக்கும் குற்றச்சாட்டும் உள்ளடங்கும்), ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் முடிவு செய்திருப்பது, அமெரிக்க ஏகாதிபத்திய பழியுணர்ச்சிக்கு ஒரு கொடூர நிரூபணமாக உள்ளது. அமெரிக்க அரசாங்கம் இந்த தைரியமான இளைஞரைக் குறிவைக்கும் அதேவேளையில், பெருநிறுவனங்கள் மற்றும் நிதியியல் மேற்தட்டின் யுத்த கொள்கைகளுக்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்புகளையும் அச்சுறுத்தவும் முனைந்து வருகிறது.

மேனிங் செய்த குற்றம் தான் என்ன? ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்களையும், உலகம் முழுவதிலும் அதன் இராஜாங்கரீதியிலான தில்லுமுல்லு வேலைகளையும் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் வலைத் தளத்திற்கு சட்டவிரோதமாக ஆவணங்களை அளித்துள்ளார் என்பது தான்.

இராணுவ நீதித்துறை நெறிமுறை வழிமுறைகள் பிரிவு 104இன் கீழ் (Uniform Code of Military Justice), "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ" "எதிரிக்கு" தகவல்கள் அளித்து உதவியதாக, மேனிங்கிற்கு எதிராக மிக தீவிரமான புதிய குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டவிரோத "எதிரி" யார் என்பதை பெண்டகன் குறிப்பிடவில்லை. அரசு மற்றும் பெருநிறுவன இரகசியங்களை அம்பலப்படுத்துவதை சட்டப்பூர்வமாக நடத்திவரும் மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் பரந்த ஆதரவை வென்றிருக்கும் ஒரு பகிரங்க வலைத் தளமான விக்கிலீக்ஸையே அது குறிக்க சாத்தியமுள்ளது என்பதை பகிரங்க ஊகத்திற்கு விட்டுவிட்டது. விக்கிலீக்ஸை ஓர் அமெரிக்க "எதிரியாக" முத்திரை குத்துவது, விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் போன்ற தனிநபர்களுக்கு எதிராக மரணப்படைகளைப் பயன்படுத்துதல் மற்றும் இணைய-ஒடுக்குமுறை ஆகிய இரண்டினோடும் சேர்ந்து, விக்கிலீக்ஸிற்கு எதிரான ஓர் இராணுவ நடவடிக்கையும் இருக்கலாம் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க இராணுவ மற்றும் இராஜாங்கவிவகார இரகசிய ஆவணங்கள் இணையத்தில் பிரசுரமானதால், ஒருவேளை பயன் அடைந்திருக்கக் கூடியவையாக கருதப்படும் அல்கொய்தா மற்றும் தாலிபான் ஆகியவற்றை "எதிரி" என்ற இந்த சொல் குறிப்பிடுகிறதென்றால், அதன் தாக்கங்கள் இன்னும் அதிகமாக பரந்தளவிலானதாவும் மற்றும் பிற்போக்குதனமாகவும் இருக்கும். மேனிங் மட்டுமல்ல, விக்கிலீக்ஸ் மட்டுமல்ல, எந்த நாளிதழோ, வலைத் தளமோ, அல்லது வேறெந்த நாட்டைச் சேர்ந்த வேறெந்த பிரசுரமாக இருந்தாலும் கூட, விக்கிலீக்ஸ் வெளியீடுகள்மீது கருத்து தெரிவித்தாலோ அல்லது அவற்றை பிரசுரம் செய்தாலோ அல்லது மறுபதிப்பு செய்தாலோ அவையும் இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கும் பரவியிருக்கும் இணையத்தின் இயல்பை பொறுத்தவரையில், விக்கிலீக்ஸ் மட்டுமல்ல, இரகசிய தகவல்களை யார் எந்த ஊடக வெளியேறலுக்கு கசிய செய்தாலும், அவர் "எதிரிக்கு உதவும்" ஒரு குற்றச்சாட்டின் கீழ் வரவேண்டியதிருக்கும். 1971இல் டானியல் எல்ஸ்பேர்க், பெண்டகன் ஆவணங்களை நியூயோர்க் டைம்ஸிற்கும், வாஷிங்டன் போஸ்டிற்கும் கசிய செய்த போது, நிக்சன் நிர்வாகத்தால் துல்லியமாக இதே  நிலைப்பாடு தான் எடுக்கப்பட்டது.

பெண்டகன் ஆவணங்கள் வெளியாகி 40 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் அவற்றிடமிருந்த ஒருசில சுதந்திரத்தையும் இராணுவ/உளவுத்துறை அமைப்புகளிடம் கைவிட்டுள்ளன. பெண்டகன் மற்றும் CIA தணிக்கைகளிடம் அவர் அடிவருடிக் கொண்டிருப்பது குறித்து, டைம்ஸ் ஆசிரியர் வெளிப்படையாகவே எழுதுகிறார். மேலும் எவையெல்லாம் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் என்று அரசாங்கங்களால் பார்க்கப்படுகிறதோ, அவற்றை பிரசுரிக்காமல் இருப்பதற்கான "சுதந்திரம்" தான் பத்திரிக்கை சுதந்திரமாக உள்ளது என்று அவர் வெட்கமில்லாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார்.

இதேவிஷயங்களை வியட்நாம் யுத்தத்திற்குப் பொருத்திப் பார்த்தால், டானியல் எல்ஸ்பேர்க் மட்டுமல்ல, My Lai படுகொலைகளை அம்பலப்படுத்திய சேய்மோர் ஹெர்ஸ் (Seymour Hersh) மட்டுமல்ல, அமெரிக்க இராணுவத்தாலும், ஜோன்சன் மற்றும் நிக்சன் நிர்வாகங்களாலும் நடத்தப்பட்ட குற்றங்களைக் குறித்து எழுதிய எத்தனையோ இதழாளர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டியதாகப் போய்விடும்.

1971இல், பெண்டகன் ஆவணங்களைப் பிரசுரிக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்பதை நிலைப்படுத்த டைம்ஸூம், போஸ்டும்  நீதிமன்றம் சென்றன; உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பையும் வென்றன. இந்த தீர்ப்பு, இறுதியில் நிக்சன் நிர்வாகத்தால் எல்ஸ்பேர்க்கைத் தூக்கில் ஏற்றமுடியாமல் செய்தது. ஆனால் இன்று பிராட்லெ மேனிங்கின் இராணுவ வழக்கிற்கு உதவுவதில் அமெரிக்க ஊடகங்களின் ஒத்துழைப்பும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் அவருடைய கைது மற்றும் வழக்கை மட்டும் ஆதரிக்கவில்லை, மாறாக மேனிங் கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர்மீது இராணுவம் சுமத்தும் பழிகளில், இவை மொத்தமாக மௌனம் சாதித்து வருகின்றன. 23 வயது இளைஞரான அந்த சிப்பாய், கடந்த பத்து மாதங்களாக தனியாக காவலில் வைக்கப்பட்டு, மனிதஉரிமை குழுக்களால் சித்திரவதை என்று கண்டிக்கப்படும் மற்றும் ஆணவ துஷ்பிரயோகமாக கருதப்படும், தனிமைப்படுத்தும் முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஓர் அமெரிக்க சிப்பாய் வேறு ஏதேனும் நாட்டில் இதுபோன்ற நிலைமைகளில் ஒரு யுத்தக்கைதியாக  வைக்கப்பட்டிருந்தால், அமெரிக்க அரசாங்கமும், அமெரிக்க ஊடகங்களும் யுத்த குற்றங்களுக்காக அந்த சிறைக்காவலர்கள் மீது வழக்குதொடுக்க கோரியிருக்கும்.

பிராட்லெ மேனிங்கிற்கு எதிராக பழிதீர்க்கும் இந்த எண்ணம், அமெரிக்க ஆளும் மேற்தட்டில் உள்ள நிஜமான குற்றவாளிகளை ஒபாமா நிர்வாகம் விடாபிடியாக பாதுகாத்து வருவதற்கு முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. ஒபாமா வெள்ளைமாளிகையில் நுழைந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த காலத்தில், அமெரிக்க மக்களிடம் பொய்யுரைத்து, ஓர் சட்டவிரோத யுத்தத்தைத் தொடக்கியதற்காக புஷ் நிர்வாகத்தின் ஒரேயொரு அதிகாரியின்மீது கூட வழக்கு தொடுக்கப்படவில்லை. உண்மையில் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட பல ஆவணங்கள், ஒபாமா நிர்வாகம் ஏனைய நாடுகளில் கொண்டுவரப்பட்ட வழக்குகளைத் தடுக்க செய்த தீர்க்கமான முயற்சிகளையும் கூட அம்பலப்படுத்துகின்றன. சிறைக்கைதிகளை சித்திரவதைப்படுத்தியதற்காக ஒரேயொரு உளவுத்துறை முகவர்மீதோ அல்லது ஒரேயொரு அதிகாரியின்மீதோ கூட வழக்கு தொடுக்கப்படவில்லை. வரலாற்றில் மிகப் பெரிய நிதியியல் முறிவை கொண்டு வந்த குற்றவியல் நடவடிக்கைகளுக்காக, ஒரேயொரு முதன்மை வங்கியாளர்மீதோ அல்லது ஒரேயொரு தலைமை செயல் நிர்வாகியின்மீதோ வழக்கு கொண்டு வரப்படவில்லை. பெரும் எண்ணெய் நிறுவனமான BP, மெக்சிக்கோ வளைகுடாவில் பேரழிவை ஏற்படுத்தியதற்காக, அதன் ஒரேயொரு நிர்வாகியின்மீது கூட வழங்கு போடப்படவில்லை.

ஆனால் நூரெம்பேர்க் யுத்த குற்ற வழக்குகளில் கொண்டு வரப்பட்ட கோட்பாடுகளின் அடித்தளத்தில் நியாயப்படுத்தப்பட்ட அமெரிக்க யுத்த குற்றங்களின் பெரும் ஆதாரங்களை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதைத் தனது கடமையாக உணர்ந்த ஓர் வீரம்மிக்க இராணுவ சிப்பாயின்மீது முதலாளித்துவ அரசின் ஒட்டுமொத்த பலமும் பாய்ந்திருக்கிறது. பாக்தாத்திற்கு அருகில் ராய்டர் செய்தி நிறுவனத்தின் இரண்டு பணியாளர்கள் உட்பட, ஈராக் குடிமக்களை கொலைசெய்த ஓர் அமெரிக்க குண்டுசுடும் ஹெலிகாப்டரை எடுத்துக்காட்டும், துப்பாக்கிமுனை-காமிராவின் ஒரு படம் தான் விக்கிலீக்ஸிற்கு அனுப்பப்பட்ட முதல் ஆவணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒபாமா ஒன்றுமே செய்யவில்லை என்றாலும்கூட, பிராட்லெ மேனிங்மீது வழக்கு தொடுக்கும் முடிவே, புஷ் மற்றும் ஷென்னியைவிட பிற்போக்குத்தனத்திலும், யுத்தம் நாடுவதிலும் ஒபாமா ஒன்றும் குறைந்தவரில்லை என்று முத்திரைக்குத்த போதுமானதாக உள்ளது.

புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட ஈராக் யுத்த முடிவுக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமன பிரச்சாரத்திலும், மற்றும் 2008 தேர்தலிலும் கூட, ஒபாமாவின் வெற்றியில் யுத்த-எதிர்ப்புணர்வு ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

எவ்வாறிருந்த போதினும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, புஷ்ஷின் பென்டகன் தலைவர் ரோபர்ட் கேட்ஸையும், அவருடைய தலைமை தளபதி ஜெனரல் டேவிட் பீட்ராய்ஸையும் தக்க வைத்து கொண்டு, புஷ்ஷால் வரையறுக்கப்பட்ட "திரும்ப பெறும்" அட்டவணையின்படி ஈராக்கில் ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து வருகிறார். மேலும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் யுத்தத்தையும் மேலும் தீவிரப்படுத்தி வருகிறார். இப்போது அந்த நிர்வாகம், லிபியாவில் சாத்தியப்பட்ட அளவிற்கு தலையீடு செய்து இராணுவ உடைமைகளை நிலைநிறுத்திக் கொண்டு, எண்ணெய்-உற்பத்தி தரும் அப்பிராந்தியத்தில் ஒரு மூன்றாம் அமெரிக்க யுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது 

இந்த நகர்வுகள் அனைத்தும் புஷ் நிர்வாகத்திற்கு கண்டனம் செய்த அதே எதிர்ப்பு அமைப்புகளிடமிருந்து, சிறிதும்கூட எதிர்ப்பில்லாமல் நடந்துவருகின்றன. முற்றிலுமாக ஜனநாயக கட்சிக்கு அடிபணிந்துள்ள இடது-தாராளவாத சூழல், யுத்த-எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் அபிவிருத்திக்கு நேரடியாகவே நாசவேலைகளைச் செய்துள்ளது.

அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டம் மீள்-எழுச்சி பெற்று வரும் நிலைமைகளின்கீழ் சிப்பாய் பிராட்லெ மேனிங்கின் தலைக்கு மேல் மரணதண்டனை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. மேனிங்கிற்கு எதிராக காட்டப்படும் கொடூரத்திற்கும், தொழிலாள வர்க்கத்தின் மேல் தாக்குதல் செய்யும் பெருநிறுவன மேற்தட்டின் அதே பிரதிநிதிகளின் வக்கிரத்தனத்திற்கும் இடையில் ஓர் உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது.

யுத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கும், அவை பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு புதிய அரசியல் அடித்தளத்தில் அது புதுப்பிக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய மக்கள் சோசலிச இயக்கத்தின் பதாகையின்கீழ், பிராட்லெ மேனிங்கை விடுவிக்கும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.