World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The New York Times defends assassinations

நியூயோர்க் டைம்ஸ் படுகொலைகளை ஆதரிக்கிறது

Patrick Martin
11 October 2010

Back to screen version

ஞாயிறன்று, அமெரிக்காவில் தாராளவாதத்தின் முக்கிய குரல் எனக் கருதப்படும் நியூ யோர்க் டைம்ஸ் தனது முக்கிய தலையங்கத்தில், வெளிப்படையாக அமெரிக்க அரசாங்கம் தான் விரும்பியவர்களை படுகொலை செய்யும் உரிமையை ஆதரித்து எழுதியுள்ளது. டைம்ஸ் கூறும் ஒரே தடை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் கொலைக்கு உட்படக்கூடியவர்கள் ஒரு இரகசிய நீதிமன்றத்தின் ஒப்புதல் முத்திரையை பெற வேண்டும் என்பதுதான். இப்பொழுது 99.99% அனைத்து மின்னஞ்சல் ஒற்றுக் கேட்கும் வேண்டுகோளுக்கும் ஒப்புதல் கொடுக்கும் மன்றம் போல்தான் அதுவும் இருக்கும்.

இத்தகைய கொலைகளுக்கான வக்காலத்துக்கள் வாங்குதல் ஆப்கானிய-பாக்கிஸ்தானிய எல்லையில் சிஐஏ செயல்படுத்தும் ட்ரோன் விமானங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தும் அமெரிக்க படுகொலைகளை பற்றிக் கூறப்படும் அப்பட்டமான பொய்களுடன் தொடங்குகின்றன. உத்தியோகபூர்வ அமெரிக்க அரசாங்க ஆதாரங்களை மேற்கோளிட்டு, “ட்ரோன் திட்டம் திறமையுடன் செயல்படுகிறது: 400க்கும் மேற்பட்ட அல் குவைடா போராளிகளை இந்த ஆண்டு மட்டும் கொன்றுள்ளது, ஆனால் 10 போரில் ஈடுபடாதவர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்” என்று டைம்ஸ் கூறியுள்ளது.

உண்மையில், பாக்கிஸ்தானிய அரசாங்க அதிகாரிகள் 2009ல் மட்டும் ட்ரோன் தாக்குதல்களால் கொல்லப்பட்ட சாதாரணக் குடிமக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 700க்கும் மேற்பட்டு இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்: ஏனெனில் ஒபாமா நிர்வாகம் ஆப்கானிய-பாக்கிஸ்தான் எல்லையில் ஏவுகணைகளயும் குண்டுகளயும் மழை போல் பொழிந்துள்ளது.

பாக்கிஸ்தான் நாளேடான டான் ஒரு தகவலை முடிக்கும்போது, “அமெரிக்க ட்ரோன்கள் கொன்ற ஒவ்வொரு அல் குவெடா, தாலிபன் பயங்கரவாதிக்கும், 140 நிரபராதிகளான பாக்கிஸ்தானியர்களும் கொல்லப்பட்டனர். கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் சாதாரண குடிமக்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.” என்று எழுதியுள்ளது.

இந்த நன்கு அறியப்பட்டுள்ள எண்ணிக்கை பற்றி டைம்ஸ் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது.ஏனெனில் அவர்களுடைய செய்தியாளர்களே ஏப்ரல் 2009 ஐ ஒட்டி கிட்டத்தட்ட 500 குடிமக்கள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களில் இறந்துவிட்டனர் ஏப்ரல் 2010 ஐ ஒட்டி 100 ல் இருந்து 500 வரை இன்னும் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்றும் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகைய பரந்த கொலைகளுக்கு தாங்கள் ஒப்புதல் கொடுப்பதின் முக்கியத்துவத்தை மறைப்பதற்கு வேண்டுமென்றே அவர்கள் வெட்கம் கெட்டதனமாக பொய் கூறுகின்றனர்.

சர்வதேச சட்டப்படி இக்கொலைகள் சட்டபூர்வமானவை என்று தலையங்கம் வாதிடுகிறது: ஆனால் இது மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சட்ட வல்லுனர்களால் உறுதியாக நிராகரிக்கப்படுகிறது-சிஐஏ மற்றும் பென்டகனிடம் கூலிவாங்கி வக்காலத்து வாங்குபவர்களைத் தவிர மற்றவர்களால். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், யேமன் மற்றும் சோமாலியாவுடன் போரில் ஈடுபடவில்லை: ஆனால் அமெரிக்க ஏவுகணைகள் அந்நாட்டுப் பகுதிகள் பலவற்றைத் தாக்கி அவற்றின் குடிமக்களையும் சிதைத்துள்ளன.

ஜூன் மாதம் ஐ.நா.மனித உரிமைக் குழுவிற்கு அளித்த 28 பக்க அறிக்கை ஒன்றில், ஐ.நா. வின் நீதிமன்றத்திற்குப் புறத்தே நடத்தப்படும் கொலைதண்டனைகள் பற்றிய சிறப்பு அதிகாரி பிலிப் ஆஸ்டன் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் மற்றும் இஸ்ரேலிய நாட்டின் “தற்காப்பிற்கான தவிர்க்க முடியாத” கோட்பாட்டை நிராகரித்து உண்மைப் போருக்கு புறத்தே இலக்கு வைத்து நடத்தப்படும் கொலை “அநேகமாக சட்டபூர்வமாக இருக்க முடியாது” என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் இணைந்த அறிக்கை ஒன்றில், ஆஸ்டன் அனைவரும் அத்தகைய கோட்பாட்டை பின்பற்றினால் ஏற்படும் விளைவுகளச் சுட்டிக்காட்டியுள்ளார். “மற்ற நாடுகளும் தாங்கள் பயங்கரவாதிகள் என்று நினைப்பவர்களை இக்கருத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பெரும் குழப்பமாக இருக்கும்” என்று அவர் அறிவித்துள்ளார்

“தலைமைத் தளபதி எங்கே இருப்பவரையும் ஒரு போராளி என அறிவித்துக் கொலை செய்ய உத்தரவிடுவது என்பது, சிறிதுகூட சுயாதீன மேற்பார்வை அற்ற நிலையில், கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் இல்லை” என்பதை டைம்ஸ் ஒப்புக் கொள்கிறது. அத்தகைய தன்னிச்சையான கொலைச் செயல்கள் முற்றிலும் அலங்காரதன்மை உடைய பாதுகாப்பு முறைகள் மூலம் தடுக்கப்பட்டுவிட முடியும் என்றும் தலையங்கம் வாதிட்டுள்ளது.

“மக்களை பயங்கரவாத, படுகொலைக்கு உட்படுபவர்கள் பட்டியலில் இருத்த வேண்டிய தரங்கள்” பற்றி ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்”, “பயங்கரவாதத்தை தீவிரமாக திட்டமிடுபவர் அல்லது அதில் பங்கு பெறுபவர்கள் அல்லது அல் குவேடா, தலிபான் தலைவர்கள்” என்று இலக்குகள் வரையறுக்கப்பட வேண்டும்.” என்பவை இவற்றுள் அடங்கும். அதாவது, மேற்கூறிய நீதிப் பரிசீலனை வெளிநாட்டு உளவுத்துறை அவதானிப்பு நீதிமன்றத்தால் (Foreign Intelligence Surveillance Court) போன்ற அமைப்பினால் செய்யப்படும். உண்மைதான், நாஜிக்களும் இத்தகைய “முறையான வழிமுறைகளை” பின்பற்றியிருக்க வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு “தாராளவாத” நியாயப்படுத்தல்களை டைம்ஸ் வாடிக்கையாக வழங்கும் அற்பத்தனமான சொல்லாட்சியில், ஆசிரியர்கள் அமெரிக்க குடிமக்களைப் பொறுத்தவரை, “அரசாங்கம் எவருடைய வாழ்க்கையையும் பறிப்பதற்கு முன் ஏதேனும் முறையான வகையைப் பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். “முடிந்தால், அமெரிக்கா வேறுநாட்டு அரசாங்கத்திடம் இருந்து அதன் மண்ணில் தாக்குதல் நடத்துமுன் அனுமதி பெற வேண்டும்” என்றும் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

மிக அதிகமாக விளம்பரமாகியுள்ள அமெரிக்காவில் பிறந்த அன்வார் அல்-அவ்லகி என்னும் யேமனில் இப்பொழுது வசிக்கும் முஸ்லிம் மதகுரு வழக்கில் செய்தித்தாள் ஆதரவு கொடுப்பதாகக் கூறும் வழிவகையில் இருந்து வியத்தகு வழியில் முற்றிலும் மாறாகத்தான் ஒபாமா நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது. இரகசியமாக இருந்த, பரிசீலனைக்கு உட்படாத அளவுகோல்களின் அடிப்படையில்தான் படுகொலை இலக்கிற்கு அவ்லகி உட்பட்டார். நீதிமன்றத்தில் அவ்லாகியின் தகப்பனார் சார்பாக அவ்லகிக்கு வழங்கியிருந்த மரணதண்டனையை நியாயப்படுத்த வேண்டும் இல்லாவிடின் திரும்பப் பெறவேண்டும் என்று அமெரிக்கன் மனித உரிமைகள் அமைப்பு (American Civil Liberties Union) அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த தொடுத்திருந்த வழக்கை தள்ளுபடி செய்ய நிர்வாகத்தின் நீதித்துறை நீதிமன்றத்தில் ”அரசாங்க இரகசியங்கள்” சலுகையைப் பயன்படுத்தியது.

நீண்ட காலமாக இஸ்லாமிய அடிப்படைவாதியாக இருந்த அவ்லகி உண்மையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்கு எந்தச் சாட்சியங்களும் அளிக்கப்படவில்லை. டைம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது போல் “ஜிஹத்திற்கு அழைப்பு விடும் ஒவ்வொரு இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அமெரிக்கா கொல்லத் தொடங்கினால், வன்முறைக்கு எல்லை இல்லாமல் போய்விடும்.” ஆனாலும் கூட ஆசிரியர்கள் தங்கள் நம்பிக்கையை ஒபாமா நிர்வாகத்திடம் அமெரிக்க இன்னும் மற்ற நாடுகளில் உள்ள குடிமக்கள் உடைய வாழ்வு, மரணம் பற்றிய அதிகாரங்களைக் கொடுக்கும் அளவிற்குத் தயாராக உள்ளனர்.

இழிந்த பார்வையின் உருவகமாகத்தான் டைம்ஸ் தலையங்கம் உள்ளது. எவரையும் திருப்திப்படுத்த இயலாத வாதங்களை அது முன்வைக்கிறது: நம்ப வைக்க வேண்டும் என்ற நோக்கமும் அதற்கு இல்லை. ஏகாதிபத்தியக் காட்டுமிராண்டித்தனம், பிற்போக்குத்தனங்கள் நிறைந்த கொள்கைகளுக்கு சொற்களால் திரையிட முற்படுகிறது. அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்திற்குள் ஜனநாயக உரிமைகளைக் காக்க வேண்டும் என்ற கருத்து உடைய தளமே இல்லை என்பதற்கு இது மற்றொரு நிரூபணம் ஆகும்.

வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற வெளிப்படையான பிற்போக்கு ஏடுகள் கூட தங்கள் குருதிவெறியை வெட்கமின்றிக் காட்டுகின்றன. டைம்ஸ் போன்ற “தாராளவாத அமைப்புக்கள்” பாசாங்குத்தன அற உபதேசம், சட்டநெறிக்கு உட்படுத்துதல் போன்றவற்றை விரும்புகிறது. எப்படியும் மனிதகுலத்திற்கு விளைவுகள் ஒன்றுதான்.