World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: teachers, students march against education cuts

பிரான்ஸ்: ஆசிரியர்கள், மாணவர்கள் கல்விச் செலவு வெட்டுக்களுக்கு எதிராக அணிவகுப்பில் ஈடுபட்டனர்

By Kumaran Ira
17 March 2010

Back to screen version

மார்ச் 12ம் திகதி, பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெருக்களுக்கு வந்து கல்விச் "சீர்திருத்தங்கள்", சரியும் பணி நிலைமைகள் மற்றும் வேலை வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற தேசிய வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எட்டு கல்விச் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. SEEN-FSU என்னும் முக்கிய உயர்நிலைப் பள்ளி சங்கக் கருத்துப்படி, 50 சதவிகித ஆசிரியர்கள் colleges (11-15 வயது மாணவர்கள் பயிலும் பள்ளிகள்), lycees (16-18 வயது மாணவர்கள் பயிலும் பள்ளிகள்) ஆகியவற்றில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். செய்தி ஊடகம் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக மதிப்பிட்டுள்ளது--பாரிஸ், மார்சேய், லியோன், Sarreguemines, துலூஸ், நீஸ், ரெய்ம் மற்றும் மெட்ஸ் ஆகிய இடங்களிலாகும்.

கல்வி வரவு-செலவுத் திட்டத்திலும், பயிலும் நேரக் குறைப்புக்கள், பொதுப் பள்ளிகளை தனியார்மய பள்ளிகளுடன் போட்டியிட வைக்கும் முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவைகள் இறுதியில் பெறும் சான்றிதழ்களை முதலாளிகளின் பார்வையில் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் அஞ்சுகின்றனர். சீர்திருத்தத்தில் கணிதம், இயற்பியில், வேதியல் ஆகியவை உயர்நிலைப்பள்ளி 2ம் ஆண்டு மாணவர்களுக்கு 2 மணி நேரம் குறைவாகக் கற்பிக்கப்படும் விதத்தில் உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வி இறுதியாண்டில் (Terminale S) வரலாறு, புவியியல் பாடங்கள் அகற்றப்பட்டுவிடும்.

இந்த ஆண்டு 16,000 வேலைகள் கல்வித்துறையில் அகற்றப்படுவதையும் அவர்கள் எதிர்க்கின்றனர். இது கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வித்துறையில் நீக்கப்பட்ட பணிகளின் மொத்த எண்ணிக்கையை 50,000 க்கு கொண்டு செல்லும். சீர்திருத்தமானது பள்ளி முதல்வர்களுக்கு கூடுதலான அதிகாரத்தைக் கொடுக்கும். அவர்கள்தான் வரவு-செலவுத் திட்டம் மற்றும் ஊழியர்களை வேலைக்கு வைத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கைப் பெறுவர். அது ஊழியர் குறைப்புக்களுக்கும் வகை செய்யும்--"ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று அல்லது நான்கு பதவிகள் குறைக்கப்படலாம்"--என்று SNES குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வி மந்திரி Luc Chatel சமீபத்தில், "அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பதிலாக பயன்படுத்தலாம்" என்று அண்மையில் கூறிய திட்டத்தால் சீற்றம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் சங்க தகவலின்படி பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் 10,000 பேர் பங்கு பெற்றனர்.

பதாகையில் எழுதப்பட்டுள்ளது: "சார்க்கோசி-சாட்டெல் சீர்திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும், எல்லா இளைஞர்களின் பேரவா அதுதான்!", வேலைகள், நல்ல பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை!". மற்றொரு பதாகை, "கல்வித்துறையில் அவசர விற்பனை--அதாவது வேலைகள், மாணவர்களின் வெற்றி, பயிற்சி, நிதிகள்: அனைத்தும் நீக்கப்பட வேண்டும்".

WSWS ஆதரவாளர்கள் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு "ஐரோப்பிய வேலைநிறுத்தங்களும் தொழிற்சங்கங்களும்" என்னும் துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தனர். அவர்கள் மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் உரையாடினார்கள்.

WSWS இடம் ஒரு ஆசிரியர் கூறினார்: "உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை தகர்க்கும் அதன் திட்டத்தை வலது தொடங்கிவிட்டது. கல்வியை தனியார்துறைக்கு திறந்துவிடுகிறது. நிர்வாக முறையில் அனைத்தையும் நடத்தும் விதத்திற்கு செல்லுகிறோம், கூடுதல் அதிகாரங்கள் பள்ளி முதல்வர்களுக்கு கொடுக்கப்படுகின்றன."

அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பை வேலைநிறுத்தம் வெளிப்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து கிரேக்க கடன் நெருக்கடி வெடித்துள்ளதை அடுத்து வங்கிகளுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. கடந்த மாதம் பிரான்சில் பல பிரிவுகளில் அலையென வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. எண்ணெய் சுத்திகரிப்பு பெருநிறுவனம் Total நிலையங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஏயர் பிரான்ஸின் ஊழியர்கள் என. இந்தப் போராட்டங்களை, தொழிலாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே தொழிற்சங்கங்கள் கைவிட்டுவிட்டன.

கல்வி வெட்டுக்கள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தயாரிக்கும் தொடர்ந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதி ஆகும். கிரேக்கத்தைப் போலவே, சார்க்கோசியும் பிரெஞ்சு வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு கடுமையான சமூக நலச் செலவின வெட்டுக்களுக்கு தயாரிப்பு நடத்துகிறார். இந்த ஆண்டு இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2 சதவிகிதம் இருக்கக்கூடும். பெப்ருவரி மாதம் சார்க்கோசி தன் அரசாங்கம் ஓய்வூதிய சீர்திருத்தம் ஒன்றை செயல்படுத்தும் என்றார். 2010 இறுதியில் செயல்படத்தப்படக்கூடும் என்று சார்கோசி நம்பும் இத்திட்டத்தில் பணிக்கால ஆண்டுகள் 41 க்கு அப்பாலும் ஓய்வுதிய வயது 60ஐத் தாண்டியும் இருக்கும் என்பது அடங்கும்.

பிரெஞ்சு அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் பெப்ருவரி ஆரம்பத்தில் 2010-13 உறுதித் திட்டத்தை அளித்தது. பொதுப் பற்றாக்குறை தற்பொழுதைய 8.2 சதவிகிதத்தில் இருந்து 2013க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு குறைந்துவிடும் என்று அது எதிர்பார்க்கிறது. இதையொட்டி அரசாங்கச் செலவில் 100 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்கள் இருக்கும். இத்திட்டத்தில் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு செலவு, ஓய்வூதிய, வேலையின்மை நலன்கள் குறைப்பு மற்றும் பொதுத்துறை வேலைக் குறைப்புக்கள் ஆகியவை இருக்கும்.

தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள மைய இடர்பாடு தொழிற்சங்கங்களில் அரசியல் ஆதிக்கமும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரின் மேலாதிக்கம் இருப்பதும் ஆகும். அவர்கள் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்து வேலைநிறுத்தங்கள் சிக்கன நடவடிக்கைளின் மாற்றத்தை கேட்பதுடன் வரம்பு இட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

திட்டமிட்ட கல்விச் செலவினக் குறைப்புக்கள் பற்றி SNES பொதுச் செயலாளர் Frederique Rolet கூறினார்: "மாற்றம், ஆம் தேவை, ஆனால் இவ்வித்தில் அல்ல."இந்த ஆண்டு அரசாங்கம் கல்விக்கு கூடுதல் நிதி கொடுக்கக்கூடும், "கூட்டு வரவு-செலவுத் திட்டம்" என்ற முறையில் எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கம் அரசாங்கத்தின் வெட்டுக்களை அரசியல் எதிர்ப்பாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பல போராட்டங்களையும் தனிமைப்படுத்தி பிரிக்கின்றன.

மார்ச் 11 அன்று பொது மருத்துவமனைகளின் ஊழியர்கள் (AP-HP-Assistance publique-Hopitaux de Paris) அறிவிக்கப்பட்டுள்ள மறுகட்டமைப்பு திட்டங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர். அதன்படி 4,000 வேலைகள் 2012 ஐ ஒட்டி அகற்றப்படும். கோபமுற்ற ஊழியர்கள் பாரிஸில் உள்ள AP-HP தலைமையகத்தை மறுநாள் வரை முற்றுகை இட்டனர்.

அதே தினத்தில் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் கொடுப்பதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். பிரான்சில் மழலையர் பராமரிப்பு மையங்களில் பணி நிலைமை மோசமாகி விட்டதை எதிர்த்து மழலையர் பள்ளி ஊழியர்கள் அணிவகுப்பு நடத்தினார்கள். தங்கள் தகுதிக்கு கூடுதல் அங்கீகாரம் வேண்டும், ஓய்வூதிய வயதை 55ல் இருந்து 60 ஆக மாற்ற வேண்டும் என்று பாரிஸில் கூடிய தாதிமார்கள் கேட்டுக் கொண்டனர்.

மார்ச் 9 அன்று மஜிஸ்ட்ரேட்டுக்கள், வக்கீல்கள் மற்றும் சிறை அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்தனர். Emmaus அறக்கட்டளையின் தொழிலாளர்களும் அந்த அமைப்பின் 60 ஆண்டு வரலாற்றில் முதல் தடவையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved