World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP takes its presidential election campaign to Matara

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி மாத்தறைக்கு கொண்டு செல்லுகிறது

By our correspondent
20 January 2010

Back to screen version

ஜனவரி 26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு கடலோர சிறுநகரம் மாத்தறை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு சென்றிருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிகளை ஆயிரக்கணக்கில் வினியோகித்தனர். தொழிலாளர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள், விவசாயிகள், மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களிடம் விவாதங்களையும் நடத்தினர்.

ஒரு காலத்தில் மாத்தறை இடதுசாரி கோட்டையென புகழ்பெற்றிருந்தது. இலங்கை ஸ்ராலிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CP) ஒரே எஞ்சியிருந்த பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உறுப்பினர், சந்திரசிறி கஜதீரா இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையில் உள்ள கூட்டணி மந்திரிசபையில் அவர் ஒரு துணை மந்திரி ஆவார்.

1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் சேர்ந்தபோது ட்ரொட்ஸ்கிச கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துவிட்ட லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) இப்பகுதியில் வலுவான கிளைகள் பலவற்றைக் கொண்டிருந்தது. இக்கட்சி ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் எதிரான சோசலிசத்திற்கும் சர்வதேசியத்திற்கும் போராடியது இன்னமும் பழைய தலைமுறையினரால் நினைவில் கொள்ளப்படுகிறது.

மாத்தறை புறநகர் ஒன்றான வெலிகொடாவில் இருந்து 70 வயது நிரம்பிய திவாகரா அவருடைய தந்தையார் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட "சமசமாஜக் கட்சிக்காரர்" (LSSP உறுப்பினர்) என்றார். "தனது தந்தையாரும் சக தோழர்களும் எப்படி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP) உறுப்பினர்களிடம் 1956 பாராளுமன்றத் தேர்தலில் எடுத்த நிலைப்பாடு பற்றி வாதிட்டனர் என்பதை நான் நினைவுகூருகிறேன்." என்றார் அவர். அத்தேர்தலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மஹாஜன ஏக்சத் பெரமுனாவின் S.W.R.D. பண்டாரநாயக்காவையும் பிலிப் குணவர்தனவையும் ஆதரித்தது. அதுவோ சிங்கள வகுப்புவாதத்தைத் தளமாக கொண்டிருந்தது. "இக்காட்டிக் கொடுப்பு நேரடியாக தனிச்சிங்களமொழி என்ற கொள்கையை சுமத்துவதற்கு உதவியது என்று என் தகப்பனார் கூறுவார்." என்றார்.

திவாகராவின் தந்தையார் 1950களின் கடைசியில் இருந்து லங்கா சம சமாஜக் கட்சி சென்ற பாதை பற்றிப் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி அரசாங்கத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி இரண்டும் சேர்ந்தபின், 1972 அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி பெளத்த மதத்தை அரசமதமாக அறிவித்தது பற்றி அவர் பெரும் இகழ்வுற்றார். ஒரு லங்கா சம சமாஜக் கட்சி தலைவரான கொல்வின். ஆர்.டி. சில்வா அரசியலமைப்பின் வரைவை இயற்றியிருந்தார். "கொல்வின். ஆர்.டி. சில்வா என் தந்தையாரிடம் ஒரு ஜனநாயகக் கொள்கை என்ற முறையில் மதம் அரசிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்று தனக்கு கற்பித்திருந்ததாகக் கூறியதாகவும்" தெரிவித்தார்.

தன்னுடைய இளமைப் பருவத்தில் தானும் லங்கா சம சமாஜக் கட்சியின் கொள்கைகளால் ஊக்கம் பெற்றதாகவும், ஆனால் நாளடைவில் அவர் சோசலிசத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாகவும் திவாகரா கூறினார். "ஆனால் உங்கள் வேட்பாளர் விஜே டயஸ் என்னுடைய தந்தையாரும் அவர்கள் தலைமுறையும் போராடிய பெரும் கொள்கைகளுக்காக போராடுகிறார் என்பதை அறியும்போது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

நூபவெலா சுனாமி வீடுகட்டும் திட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள் ரம்யா என்னும் இல்லத்தரசியை சந்தித்தனர். அவருடைய குடும்பம் 2004 டிசம்பர் மாதம் ஆசிய சுனாமியினால் பேரழிவிற்குட்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றாகும்.

இரு முக்கிய வேட்பாளர்களான இராஜபக்ஷ மற்றும் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றிக்கு உரிமை கொள்ளப் போட்டியிடுகின்றனர் என்று ரம்யா கூறினார். "போர் முடிந்ததும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நிலைமை மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் அனைவரும் போலி உறுதிமொழிகளுடன்தான் எங்களிடம் வருகின்றனர்."

ரம்யாவின் குடும்பம் அவர்கள் வீடு உட்பட அனைத்தையும் சுனாமியில் இழந்தது. அவருடைய கணவர், ஒரு மீன்பிடிப்பவர், ஒரு காலை இழந்துவிட்டார். இப்பொழுது ஒரு மீன் விற்கும் கடையில் உதவியாளராக நாளொன்றிற்கு 300 ரூபாய்க்கு (3 அமெரிக்க டாலர்) குறைவாக பணிபுரிகிறார். அரசாங்கம் கொடுத்துள்ள வீட்டில் குடும்பம் வாழ்கிறது.

"இந்த வீடு எங்களுக்கு போதுமானதாக இல்லை" என்றார் ரம்யா. "இந்த வீடும் எங்களுக்கு சொந்தமானதும் அல்ல. எனவே பல பிரச்சினைகளை, குறிப்பாக எங்கள் குழந்தைகள் பாடசாலையில் சேர்தல் உட்பட எதிர்கொள்கிறோம்." வீட்டுத்திட்டத்தில் வசிப்பவர்கள் மந்திரி கஜதீராவை பலமுறையும் காண்பதற்கு சென்றுள்னர், ஆனால் பார்க்க முடிவதில்லை. "இப்பொழுது அவர் அவருடைய எஜமானர் இராஜபக்ஷவிற்காக எங்கள் வாக்குகளை கேட்கிறார். நாங்கள் ஏன் போடவேண்டும்? அவர்கள் எங்களுக்கு துயரத்தைத்தான் கொடுத்துள்ளனர்" என்றார் இவர்.

"நாங்கள் எவருக்கும் வாக்களிப்பதில்லை. எங்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை. மக்கள் விடுதலை முன்னணி (JVP-சிங்கள இனவாத கட்சி) எங்கள் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் எங்கள் பிரச்சினைகளை மறந்துவிட்டு முக்கிய கட்சி ஒன்றுடன் சேர்ந்துவிடுகின்றனர்."

குடியிருப்பில் வசிப்பவர்களில் சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர். "அதே நேரத்தில் அவர்கள் பொன்சேகாவின் போலி உறுதிமொழிகளையும் நம்பவில்லை."

பொருள்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ள நிலையில், பலராலும் நிலைமையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார் ரம்யா. பலருக்கும் நாள் ஒன்றிற்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில்லை. "நாங்கள் 10,000 முதல் 12,000 வரை ஒரு மாதத்திற்கு உணவிற்கு செலவழிக்கிறோம். மருந்துகளுக்காகக் கூட சிறிது பணத்தைச் சேமிக்க முடிவதில்லை. பொது சுகாதரப் பணியை நம்புவதற்கில்லை; ஏனெனில் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை" என்றார் அவர்.

மற்றொரு இல்லத்தரசி கூறினார்: "எங்களிடைய கணவன்மார்கள் மீன்பிடிப்பவர்கள். பருவம் இல்லாத ஐந்து, ஆறு மாத காலங்களில் அவர்களால் மீன் பிடிக்க முடியாது. நாங்கள் 50 ரூபாய் நீர் மோட்டார் கட்டணம், 12 ரூபாய் பொது விளக்குகளுக்கு, 500 ரூபாய்க்கு மேல் வீட்டு மின்வசதிக்கு என்று கட்ட வேண்டியிருக்கிறது. எங்கள் நீருக்கான கட்டணம் 250 ரூபாய்கள் ஆகின்றது. மீன்பிடிக்கும் பருவத்தில் எப்படியோ காலத்தை ஓட்டுகிறோம், ஆனால் அது இல்லாத காலத்தில் வாழ்வதற்கே எங்கள் நகைகளை அடைமானம் வைக்க வேண்டியுள்ளது."

நுபேவேலாவில் வசிக்கும் 24 வயதான ஓஷானி மந்திரி கஜதீராவின் தந்திர உத்திகளை விளக்கினார். உயர்கல்வி படித்த அவருடைய கணவர் கடந்த தேர்தலில் கஜதீராவிற்கு உழைத்து ஒரு வேலை கிடைப்பதற்கு அவர் உதவுவார் என்று எதிர்பார்த்தார். "ஆனால் கஜதீரா என்னுடைய கணவருக்கு நான்கு போலி நேர்முக பரீட்சை அறிமுகத்தை மட்டுமே கொடுத்தார். பின்னர் என்னுடைய கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்."

தேர்தலைப் பற்றி கேட்கப்பட்டதற்கு ஓஷானி பின்வருமாறு கூறினார்: "ஜனாதிபதி ஒரு முன்கூட்டியே தேர்தலை நடத்துகிறார். ஏனெனில் மக்கள் அரசாங்கத்திடம் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்துவிட்டனர். சரத் பொன்சேகாவும் மகிந்த இராஜபக்ஷவும் போரை நடத்தினார்கள், மற்றவர்கள் இறந்து போயினர். இறந்த படையினரின் குடும்பங்கள், உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன."

செய்தி ஊடகமும் அரசாங்கமும் இறப்பு எண்ணிக்கை மற்றும் தமிழ் மக்களின் பாரிய கஷ்டங்களை மூடி மறைத்துவிட்டன என்று ஓஷானி குறிப்பிட்டார். "நீங்கள் கூறியது போல், சிங்கள, தமிழ் மக்களிடையேயான ஐக்கியம் போரினால் பெரிதும் பாதிப்பிற்கு உட்பட்டுவிட்டது" என்று அவர் முடிவாகக் கூறினார்.

மற்றொரு சுனாமி பாதிக்கப்பட்ட இரயில் தொழிலாளியின் மனைவி சமீபத்தில் அவருடைய கணவரின் ஊதியத்தில் நடத்தப்பட்ட பெரும் குறைப்பு பற்றிக் குறைகூறினார். "நவம்பரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகைகள் அரசாங்கத்தால் மாதத்திற்கு 7,000 ரூபாய்கள் குறைக்கப்பட்டுவிட்டன. என்னுடைய கணவர் இப்பொழுது மேலதிக படிகளையும் சேர்த்து 30,000 ரூபா தான் பெறுகிறார். போருக்குப் பின்னர் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளேயே இப்பொழுது விழுந்துவிட்டோம்" என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved