World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

EU leaders fail to calm fears of Greek sovereign default

ஐரோப்பிய தலைவர்கள் கிரேக்க அரசாங்கக் கடன் செலுத்தத் தவறுதல் பற்றிய அச்சங்களை அமைதிப்படுத்த முடியவில்லை

By Chris Marsden
12 February 2010

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியத்தின் நேற்றைய உறுதிமொழியானது தேவையானால் அது நலிந்து இருக்கும் கிரேக்க பொருளாதாரத்தின் உதவிக்கு வருவதாகக் கூறியது, கிரேக்க அரசாங்கக் கடன் பத்திரங்களைப் (Bond) பற்றிய பெருகிய ஊகங்கள் மற்றும் அரசாங்கக் கடன்கள் முழு யூரோப் பகுதியை அச்சுறுத்தும் தொற்றாக உள்ளது என்னும் அச்சங்களை அமைதிப்படுத்துவது ஒரு வெற்று முயற்சியாகும். கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தையும் மற்றய ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் பொறுத்த வரையில் இது அவர்களின் தலையைக் குறி வைக்கும் ஒரு துப்பாக்கிக்கு சமமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Herman Van Rompuy, எவ்விதமான நிதிய ஆதரவு ஒன்றை சேர்த்துத் தரப்படுகிறது என்பது பற்றிய விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த விவரங்கள் திங்களன்று நடக்க இருக்கும் நிதி மந்திரி கூட்டம் வரை வெளிவருவதற்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் எந்த உதவிக்கும் முன்னிபந்தனையாக பிரதம மந்திரி ஜோர்ஜ் பாபாண்ட்ரூவின் ஜனநாயக சமூக PASOK அரசாங்கம் "கடுமையான" நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு உறுதிப்பாட்டை இது தனியே குறித்துக் காட்டவில்லை அதாவது கிரேக்கத்தின் வரவு-செலவுப் பற்றாக்குறையை அதன் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதத்தில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச பட்சமான 3 சதவிகிதத்திற்கும் குறைவாக 2012-க்குள் கொண்டுவருவது ஆகும். பொதுத்துறை ஊதியங்களை முடக்குதல், போனஸ்களில் வெட்டுக்களைச் செய்தல், இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வூதிய வயதுத் தகுதியை உயர்த்துதல், எரிபொருள், புகையில், மதுபானம் மற்றும் சொத்துக்கள் மீது வரிகளை உயர்த்துதல் ஆகியவை ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளால் முற்றிலும் போதாதவை என்றுதான் காணப்படுகின்றன. ஏற்கனவே அயர்லாந்து குடியரசு சுமத்திய இதே போன்ற நடவடிக்கைகளான பொதுத்துறையில் 20 சதவிகித ஊதிய வெட்டுக்கள், வரி அதிகரிப்புக்கள் மற்றும் பொதுநலச் செலவு வெட்டுக்கள் என்று கொண்டுவந்தவை இங்கும் கோரப்படலாம்.

அரசாங்கக் கடன் செலுத்தத் தவறுதல் என்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் அதனிடம் கேட்பதையெல்லாம் கொடுக்க ஒப்புக் கொள்ளும். 16 யூரோப்பகுதி நாடுகள் "உறுதியான, ஒருங்கிணைந்த நடவடிக்கையை யூரோப்பகுதி முழுவதின் உறுதியையும் பாதுகாக்க எடுக்கும் உறுதியை மேற்கொள்ளும்" என்று Van Rompuy கூறினார். பின்னர் உண்மையில் கிரேக்கம் நிதி உதவியை நாடவில்லை என்றும் வலியுறுத்தினார். முன்னைய தினம் பாப்பாண்ட்ரூ பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் பேச்சுக்களை நடத்தினார். "நாங்கள் உதவி எதையும் நாடவில்லை" என்றார் அவர். "எங்கள் உறுதிக்கு உங்கள் ஆதரவு தேவை என்று நாங்கள் கூறினோம், எங்கள் நாட்டின் நம்பகத்தன்மை இச் சிக்கனச் செயல்படுகளை செய்வதற்கு ஆதரவு வேண்டும் என்றோம்."

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் உலக முதலீட்டாளர்களால் வரவேற்கப்பட்டது. பின்னர் வணிக நாள் முடிவதற்குள் விடையிறுப்பின் ஆர்வம் கரைந்துவிட்டது. ஐரோப்பாவில் பங்குச் சந்தை முடிவுகள் கலந்த விதத்தில் இருந்தது. அமெரிக்க டொலரோடு ஒப்பிடும்போது யூரோ மதிப்பு குறைவாக உயர்ந்தது. கிரேக்கப் பங்குகள் தொடக்கத்தில் உயர்ந்திருந்தன பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து தகவல்கள் வராததால் சரிந்தன. ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் பங்குகள் விலை குறைந்து போயின.

BGC பங்காளிகள் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் David Buik, BBC இடம் கூறினார்: "அவர்கள் முழு ஒற்றுமையுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் எந்த உறுப்பு நாட்டில் இருந்தும் பொதுச் செலவுகளைக் குறைக்க தெளிவான திட்டங்கள் வரவில்லை. இந்த வினாக்களுக்கு விடையேதும் வரவில்லை."

திங்களன்று விவரங்கள் அளிக்கப்பட்டாலும்கூட, கிரேக்கம் அல்லது ஐரோப்பா முழுவதும் நீண்ட கால உறுதிப்பாடு பற்றிய நடவடிக்கைகள் வர இயலாது. அதுவும் திங்கள் மட்டும் யூரோவிற்கு எதிராக 8 பில்லியன் டாலர் பந்தயம் கட்டப்பட்டுள்ள நிலையில்.

கிரேக்கத்தில் கட்டுப்பாடற்ற சரிவை எதிர்கொள்ள பிணை எடுப்பிற்கு கொடுக்கப்பட்ட பணம் மிகப்பெரியது. நாட்டின் கடன் கிட்டத்தட்ட 300 பில்லியன் யூரோக்கள் ($419 பில்லியன்) ஆகும். இக்கடனுக்கு வட்டி கொடுப்பதற்கே கிரேக்கத்திற்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.6 சதவிகிதம் செலவாகிறது. இந்த அளவும் உயர்ந்து கொண்டே போகிறது.

ஜேர்மனி கொடுக்கும் 3 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது கிரேக்கம் தன் பத்திரங்களுக்கு 6 முதல் 7 சதவிகிதம் வட்டி கொடுக்கிறது. இந்த ஆண்டு 54 பில்லியன் யூரோக்களை வரவு-செலவுப் பற்றாக்குறைகளை சரி செய்வதற்கு மட்டும் கடன் வாங்க வேண்டும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இதில் 20ல் இருந்து 31 பில்லியன் யூரோக்கள் அடுத்த சில வாரங்களில் உயர்த்தப்பட வேண்டும். கிரேக்கத்தின் கடன் மதிப்புத் தரம் ஏற்கனவே A ஐ விட குறைவாக்கப்பட்டுவிட்டது.

ஓர் உடனடி நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடாக கிரேக்கம் மட்டும் இல்லை. இதேபோன்ற அரசாங்கக் கடன் செலுத்த தவறுதல்கள் மற்றய ஐரோப்பிய "Club Med" நாடுகளிடையே வந்துள்ளன. கூட்டாக, அதிக பெருமையின்றி இவை PIGS என்று அதாவது Portugal, Italy, Greece, Spain என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்களை குவிக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

கிரேக்கம் மிக மோசமான நிலைமையை எதிர்கொள்கிறது. அதன் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 110 சதவிகிதம் என்று ஆகியுள்ளது. ஆனால் ஸ்பெயின் பணம் கொடுத்தல் பற்றாக்குறையாக 46 பில்லியன் பவுண்டுகளைக் கொண்டுள்ளது. இதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.8 சதவிகிதம் கடன் வாங்கியுள்ளது. இத்தாலி பெரும் பத்திர விற்பனையை எதிர்கொள்ளுகிறது. அதன் குறைந்த பற்றாக்குறை உற்பத்திக்கு 5 சதவிகிதம் என்றாலும், இதற்குக் காரணம் அதன் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஆண்டு 120 சதவிகிதமாகவும் 2011ல் 128.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்பதுதான்.

கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல் பொருளாதாரங்களின் சிறிய அளவு அவற்றை ஊகத்திற்கு உகந்த இலக்காகச் செய்துள்ளது. ஆனால் இதே போன்ற ஐரோப்பியப் பெரிய பொருளாதாரங்களின் அதிக கடன் தரங்களைப் பற்றியும் பரந்த கவலைகள் உள்ளன. யூரோவே தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. ஏனெனில் டிசம்பரில் இருந்து டாலருக்கு எதிராக அது 9 சதவிகிதம் இழந்து விட்டது. பரந்த வகையில் நாடுகள் யூரோவில் இருந்து அகன்றுவிடக்கூடும் அல்லது நாணயத்தின் சரிவே ஏற்படக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

"யூரோப் பகுதியை எதிர்கொள்ளும் சவால்கள் தீவிரமானவை" என்று Centre for European Reform உடைய தலைமைப் பொருளாதார வல்லுனர் Simon Tilford லண்டனில் கூறினார். "யூரோப் பகுதியில் அதிக போட்டி இல்லாத் தன்மையை கொண்ட நாடுகள், நலிந்த பொது நிதியங்களை கொண்டிருப்பதுடன், தற்போதைய சூழல் ஆபத்து மிக்கதாக உள்ளது."

இதைத்தவிர, நெருக்கடியான யூரோப் பகுதி 16 நாடுகளுடன் நின்றுவிடவில்லை. இங்கிலாந்து கடனும் அதிகமாக, ஏன் கிரேக்கத்தை விட இன்னும் அதிகமாக இருக்கும் நிலையில், கார்டியன் சுட்டிக்காட்டிய விதத்தில் கேட்டது: "இதற்கிடையில் அடுத்த நாணய வெடிப்பு எங்கு ஏற்படும்? ஒருவேளை இது இங்கிலாந்தில் வரலாமோ, இங்குதான் வரவு-செலவு பற்றாக்குறைகள் கடன்தர மறுமதிப்பை அச்சுறுத்தும் நிலையில் உள்ளது, அது பவுண்டிற்கு எதிராக மிகப்பெரிய நாணய ஊகத்திற்கு வகை செய்யுமா?"

தற்போதைய நெருக்கடியின் பூகோளத்தன்மையை சுட்டிக்காட்டிய விதத்தில் Observer, "அரசாங்கக் கடன்கள் பற்றிச் சூழ்ந்துள்ள கவலைகளின் உறுதியற்ற தன்மை, கடந்த வாரம் பல பிற சந்தைகளுக்கு பரவியது. உலகப் பொருளாதாரம் மீள்வதின் வலிமை பற்றிய புதிய அச்சங்களை எழுப்பியது.

"அனைத்து முக்கிய பொருளாதாரங்களும் தங்கள் மந்த நிலையினால் பற்றாக்குறைகளை தீர்க்க முடியாத நிலை பெருகி இருக்கும்போது, அவை வரி உயர்த்துவதின் மூலமும் செலவுகளை குறைப்பதின் மூலமும் பல ஆண்டுகள் சிரமப்பட்டு மீளலாம். ஆனால் திடீரென்று வலுவான பூகோள மீட்பு பங்குச் சந்தை விலைகளுக்கு வருவது என்பது மிகக் கூடுதலான நம்பிக்கை என்பதைத்தான் காட்டுகிறது."

பெப்ருவரி 6ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் இதேபோல் எச்சரித்தது: "முதலீட்டாளரின் பீதி இப்பொழுது உலகில் பல நாடுகளிலும் கடன் வாங்குவதின் செலவை அதிகரித்துள்ளது. உலக நாணய சந்தைகளை உறுதிகுலைக்க வைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது."

பொருளாதார வரலாற்றாளர் Niall Ferguson, பைனான்ஸியல் டைம்ஸ் கட்டுரை "A Greek Crisis is Coming to America இல் ஒரு கிரேக்க நெருக்கடி அமெரிக்காவிற்கு வருகிறது" என்ற தலைப்பில், கூறியது: "உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவிற்கு கணக்குக் கூறும் நாள் மிகத் தொலைவில் இருப்பது போல் தோன்றுகிறது. மோசமான விஷயங்கள் யூரோப்பகுதியில் நடக்கின்றன. இதையொட்டி அமெரிக்க டாலர் ஏற்றம் பெருகிறது. ஏனெனில் அச்சப்படும் முதலீட்டாளர்கள் "பாதுகாப்பான" அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களில் தங்கள் ரொக்கத்தை வைக்கின்றனர். இதன் விளைவு சில மாதங்களுக்குத் தொடரும். இப்படித்தான் டாலரும், கருவூலப் பத்திரங்களும் 2008 கடைசியில் வங்கிப் பீதியின் பெரும் ஆழத்தில் இருந்து மீண்டன."

"ஆயினும்கூட கூட்டாட்சி அரசாங்கத்தின் நிதிய நிலைமையை மேலோட்டமாகப் பார்த்தாலே (மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை), "பாதுகாப்பான இடம்" என்ற சொற்றொடரின் ஆபத்தை காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரம் என்பது 1941ல் பேர்ல் ஹார்பர் எந்த அளவு பாதுகாப்பு உறைவிடமாக இருந்ததோ, அப்படித்தான் உள்ளது."

ஐரோப்பிய, உலக முதலாளித்துவம் பொருளாதாரச் சரிவு என்ற உண்மையான, தவிர்க்க முடியாத ஆபத்தை எதிர்கொள்ளுகின்றன. இது 2008-ன் தொடர்ச்சியாக, அதையும் விட பரந்ததாக, மோசமாக இருக்கும். வங்கிகள் பல மில்லியன் டாலரில் பிணை எடுக்கப்பட்டது, பில்லியன் கணக்கான டாலர்களை உலகப் பொருளாதாரத்தில் "மொத்த அடிப்படையில்" உட்செலுத்தியது உலக மந்த நிலை அச்சத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடவில்லை. அது உலக வங்கிகளின் இழப்புக்களை தேசிய அரசாங்கங்களின் இழப்புக்களாத்தான் மாற்றியது.

ஆளும் உயரடுக்கிற்கு பேரழிவைத் தவிர்க்கும் ஒரே வகை முதலாளித்துவ முறையின் நெருக்கடியின் விலையை தொழிலாள வர்க்கம் கொடுக்க வைப்பது ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் கடும் சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படுகின்றன. இவை இன்னும் மிருகத்தனமாகப் போகும். ஐரோப்பிய குழு தற்பொழுது மீட்பு, வளர்ச்சிக்காக "ஐரோப்பா 2020" என்ற பெயரில் "திட்டத்தை" தயாரிக்கிறது. இது அடுத்த மாதத்தில் முடிவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர்க்க முடியாமல் அது ஒரு பொருளாதார, சமூகப் போரை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொடுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved