World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama's guilty silence on Haiti

ஹைட்டியைப் பற்றி ஒபாமாவின் குற்றம் சார்ந்த மெளனம்

By Bill Van Auken
30 January 2010

Use this version to print | Send feedback

புதனன்று நாட்டு நிலை பற்றி ஆற்றிய உரையில், ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்காவின் வாசல்படியில் நடந்த பாரிய பேரழிவைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. நூறாயிரக்கணக்கான ஹைட்டியர்கள் அதில் இறந்துள்ளனர், இன்னம் பல மில்லியன்கள் காயமுற்று, பட்டினியில் வாடி, வீடுகள் இன்று உள்ளனர்.

முன்னோடியில்லாத இறப்பு, இடர்பாடுகள் உள்ள நிலையில்,ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் வந்துள்ள மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் இருப்பதை குறிப்பிடாவிட்டாலும் ஒபாமா நிலைமையின் தீவிரத்தை கவனித்திருக்கவேண்டும் அல்லது காங்கிரஸைக் கூட ஏராளமாக இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிட மெளனத்தை கடைப்பிடிக்க கேட்டிருக்காலம் என ஒருவர் நினைக்கலாம்.

உண்மையில் அவர் அவ்வாறு ஏதும் செய்யவில்லை. தன்னுடைய உரையில் முக்கால் பகுதிக்கு கிட்டத்தட்ட வந்தவுடன்தான் ஹைட்டியின் நிகழ்ச்சிகளை பற்றியே குறிப்பிட்டார். இழிந்த தன்மை மற்றும் கூறப்பட்ட கருத்துக்கள், அவருடைய பார்வையாளர்களாக இருக்கும் மில்லியனர்களான அரசியல்வாதிகளை பார்த்து கண்சிமிட்டி தலையசைத்த வகையில் (குடியரசு, ஜனநாயக கட்சியினரும் இருந்தது) ஹைட்டிய மக்கள் குறித்து பரிவுணர்வு, நிதானம் பற்றிய பேச்சுக்கள் முற்றிலும் இடத்திற்கு பொருந்தாதவையாக இருந்தன.

மாறாக, ஒபாமா ஹைட்டிய பேரழிவை சாதகமாக பயன்படுத்தி அமெரிக்க அதிகாரம், சிறப்புத் தன்மைகள் ஆகியவற்றை பாராட்டத்தான் செய்தார். ஹைட்டியில் அமெரிக்க நடவடிக்கைகள் ஈராக், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர்களுடன் ஒன்றாக இணைத்தும், வட கொரியா மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுடனும் இணைத்துப் பேசினார். தன்னுடைய நிர்வாகம் நூற்றுக்கணக்கான அல்குவாடா "போராளிகள் மற்றும் தொடர்புடையவர்களை" புஷ் காலத்தையும்விட அதிகமாக கொன்றுள்ளதாகவும் பெருமை அடித்துக் கொண்டார்.

"இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பதற்கான காரணம், நம் தலைவிதி நம்முடைய கடல்களுக்கு அப்பாலும் தொடர்புடையதால்தான். ஆனால் அவை சரி என்பதாலும் நாம் செய்கிறோம்" என்றார் அவர்.

தீவிர நாட்டுணர்விற்காக பேரழிவைப் பயன்படுத்திய விதத்தில், ஒபாமா Port-au-Prince க்கு சென்றுள்ள அமெரிக்க மீட்புக் குழுக்கள் மற்றொரு உயிர் காப்பாற்றப்பட்டபோது, "அமெரிக்கா!, அமெரிக்கா!, அமெரிக்கா!" என்ற கோஷங்கள் வந்ததாக வலியுறுத்தினார்.

இத்தகைய அணுகுமுறை அதிர்ச்சியைத் தரலாம், ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் தன்மையுடன் முற்றிலும் இயைந்து உள்ளது. ஹைட்டியில் வாஷிங்டனின் "மனிதாபிமான" பணிகள் பாரசீக வளைகுடா, மத்திய ஆசியாவில் அது நடத்தும் போர்களைப் போலவும், பாக்கிஸ்தான், யேமன் மற்றும் பிற இடங்களில் இலக்கு வைத்து நடத்தும் படுகொலைகளைப் போல்தான் உள்ளன.

ஹைட்டிய பேரழிவை எதிர்கொண்ட ஒபாமா நிர்வாகம் ஒரு இராணுவத் தலையீட்டையும் ஆக்கிரமிப்பையும் நடத்தியுள்ளது. அதன் முதல் முன்னுரிமைகள் உணவு, நீர், மருத்துவ உதவி ஆகியவற்றை நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அளிப்பது என்று இல்லாமல், ஆயிரக்கணக்கான போராயுதங்களை ஏந்திய படையினர், மரைன்களை நாட்டிற்குள் அனுப்பி அதைச்சுற்றி கடற்படைத் தடுப்பை ஏற்படுத்தி பேரழிவில் இருந்து ஹைட்டியர்கள் எவரும் தப்பி அமெரிக்காவிற்குள் புகலிடம் நாட வராமல் தடுப்பது என்பதாக இருந்தது.

இதன் விளைவு நிலநடுக்கத்தை அடுத்து முதல் 72 மணி நேரத்தில் முக்கியமாகத் தேவைப்பட்ட உதவிகள் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழப்பில் நிறுத்தப்பட்டதுதான். Port-au-Prince விமான நிலையத்தில் மருத்துவப் பொருட்கள், கருவிகளைக் கொண்டுவந்த விமானங்கள் இறங்க அனுமதி மறுக்கப்பட்டன. துருப்புக்கள் வருவதற்கு ஓடும் பாதைகள் தயாராக இருப்பதற்காக அவை திருப்பி அனுப்பப்பட்டன.

Port-au-Prince இல் பேரழிவு நடந்தவுடன் முதல் செயல்படும் அறுவை சிகிச்சை நிலையத்தை நிறுவிய Dean Lorich, Soumitra Eachempati, David L. Helfet என்னும் மூன்று நியூயோர்க் நகர அறுவைச்சிகிச்சை வைத்தியர்கள், இத்தகைய முன்னுரிமைகளால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் குறித்து கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு அமெரிக்கா ஹைட்டியை எதிர்கொண்ட விதத்தை "ஒபாமாவின் கட்ரீனா" என்று கூறியுள்ளனர்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் CNN க்காக எழுதப்பட்ட கட்டுரைகளில் நிலநடுக்கம் நடந்த மறுநாள் ஹைட்டிக்கு விமானத்தில் செல்லத் தாங்கள் தயாராக இருந்ததாகவும், அமெரிக்க இராணுவம் பேரழிவு நடந்து நான்காம் நாள் வரை அனுமதி கொடுக்க வில்லை என்றும் எழுதியுள்ளனர். அப்பொழுதும் கூட அவர்கள்தான் நாட்டில் முதலில் அனுமதிக்கப்பட்ட உதவி மருத்துவக் குழுக்களில் ஒன்றாக இருந்தனர்.

அங்கு சென்று அடைந்தவுடன், "பேரழிவை எதிர்கொள்ளும் நிர்வாகம் ஹைட்டியில் முற்றிலும் இல்லை" என்று அவர்கள் அறிந்தனர்.

ஹைட்டிய மருத்துவமனையில் அவர்கள் ஏராளமான நோயாளிகள், காயங்களுடன் அவை தீவிர நிலையில் இரத்தம், சீழ், புழுக்களைக் கொண்டிருந்த நிலையில் இருப்பதை பார்த்தனர். அவர்கள் "மருத்துவமனை வளாகத்தில் பல நாட்கள் நீர், எதிர்ப்புமருந்துகள், வலி குறைக்கும் மருந்துகள் கூட இல்லாமல் இருந்தனர்."

அடிப்படை அறுவை சிகிச்சை தேவைகள் இல்லாமல் இருந்த மருத்துவமனையில், அவர்கள் நியூயோர்க்கில் இருந்த தங்கள் சக ஊழியர்களிடம் தேவைப்பட்டதை அனுப்புமாறு கோரினர். ஆனால் வந்த விநியோகங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் கடத்தப்பட்டுவிட்டன. இரண்டாம் முறை விமானத்தில் வந்த விநியோகங்களும் புதிய மருத்துவக்குழுவிற்கும் கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டன. இந்த பொருட்களை வினியோகிக்க தவறியதால், பல நோயாளிகள் தொற்று நோயினால் இறந்தனர்.

தாங்கள் ஹைட்டியை விட்டு நீங்கிய பின்னரும், "பெரிய கிடங்குகளில் பயன்படுத்தப்படாத மருந்துகள், உணவுப் பொருட்கள், மற்றும் பிற விநியோகங்களும் விமான நிலையத்தில் இருந்ததையும், நூற்றுக்கணக்கான அமெரிக்க, சர்வதேச படையினர் இலக்கின்றி அலைந்து நின்றதையும்தான் கண்டதாகக்" கூறினர்.

இந்த நிகழ்வில் அம்பலப்படுத்தப்படுவது அமெரிக்க அரசாங்கம் எதிர்கொண்ட முறை குற்றம் சார்ந்தது என்பது விளங்கப்படுவதுதான். ஒபாமா நிர்வாகம் மற்றும் பென்டகனின் உயர்மட்டங்களில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு பதிலாக துருப்புக்கள் முதலில் அனுப்பப்படும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. பல பாதிக்கப்பட்டவர்கள் இறப்பர் என்ற முடிவு இதனால் எதிர்பார்க்கக்கூடியதுதான்.

இது ஒன்றும் கவனமின்மையினால் உருவானதல்ல. திட்டமிட்டு நடந்த செயலாகும். கடுமையாகக் காயமுற்ற வறிய மக்கள் மீட்கப்படுவதற்கு பெரும் அவசரம் காட்டப்பட வேண்டியதில்லை, அவர்களுக்கு பாதுகாப்பு இருப்புக்களுக்கு செலவு ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. இத்தகைய கருத்து மனச் சிதைவு அல்ல. ஹைட்டியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தியுள்ள ஒரு நூற்றாண்டு அடக்குமுறையின் தொடர்ச்சிதான். பல முறையும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் நடந்துள்ளதுடன், பெரும் வறுமையில் நாட்டின் முக்கால்வாசிப் பேரை அடக்கி வைத்திருக்கும் மிருகத்தன சர்வாதிகாரிகளுக்குத்தான் ஆதரவு கொடுக்கப்பட்டது.

மறுபுறத்தில், ஹைட்டிய நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய இராணுவச் செயற்பாட்டை நடத்தும் தெளிவான உறுதிப்பாடு இருந்தது.

முதலாவது, இந்த தலையீடு அமெரிக்க நலன்கள் மற்றும் நாட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் உள்ளுர் தன்னலச் சிறு குழுவின் நலன்களைக் காப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தது. மற்றையது, இந்த பேரழிவினால் கீழிருந்து எழுச்சி வந்துவிடுமோ என்ற அச்சறுத்தலுக்கு பாதுகாப்பு கொடுப்பதாகும்.

மேலும் வெனிஜூலா மற்றும் கியூபாவிற்கும் இடையே உள்ள ஒரு நாட்டில் இராணுவ வலிமையைக் காட்டுவது இப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்தும் நிலைப்பாட்டிலுள்ள வெளிப்படையான கவனம் என்பது தெரியவரும்.

இவ்விதத்தில் ஹைட்டியில் இராணுவ ஆக்கிரமிப்பு கடந்த ஆண்டு ஹொண்டூரஸில் ஆட்சிசதி நடந்ததற்கு வாஷிங்டன் காட்டிய பிரதிபலிப்பிற்கு ஏற்ப இருந்தது. இதே போல் கொலம்பியாவில் சமீபத்தில் புதிய இராணுவத் தளங்களை அமைக்கும் உடன்பாட்டிற்கும் இசைந்த முறையில்தான் இருந்தது. ஒபாமா நிர்வாகம் பதவிக்கு வந்தது அமெரிக்காவை அடித்தளமாக கொண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் இலத்தின் அமெரிக்கா, கரிபியத் தீவுகளில் இலாப நலன்களை தொடர இராணுவ வலிமையை பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உந்துதலைப் புது வேகத்துடன் செயல்படுத்துவதைத்தான் காட்டுகிறது.

ஹைட்டிய பேரழிவிற்கு வாஷிங்டன் காட்டிய பிரதிபலிப்பு, ஒபாமா நிர்வாகத்தின் அரசியல் சாராம்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஓராண்டிற்கு முன் "நம்பிக்கை", "மாற்றம்" ஆகியவற்றைக் கூறி வேட்பாளராக நின்று பதவிக்கு வந்தவர், இப்பொழுது அமெரிக்காவின் நிதிய அடுக்கைக் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டில், இறுதியில் அமெரிக்க இராணுவவாதத்தின் விரிவாக்கத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அந்த இலக்கிற்காக எண்ணிக்கையற்ற மனித உயிர்களை பலியிட தயாராக இருப்பதையும் காட்டுகின்றது.