World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

EU summit agrees to new rescue fund for the banks

வங்கிகளுக்கு புதிய மீட்பு நிதி உருவாக்க ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு உடன்படுகிறது

Peter Schwarz
18 December 2010

Back to screen version

பல வார கால கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, ஒரு நிரந்தரமான நிதி நெருக்கடி நேர வகைமுறையை நிறுவுவதற்கான ஆரம்பப் படிகளுக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்கள் வியாழனன்று புரூசெல்ஸில் ஒப்புக் கொண்டனர். 2013ல் தொடங்கி ஐரோப்பிய ஸ்திரநிலை வகைமுறையானது (ESM) நடப்பு யூரோ மீட்பு திட்டத்திற்குப் பதிலாய் இடம்பெறும்.

உச்சி மாநாட்டின் முடிவுகளில் எப்போதும் உடன்வருவதானஐரோப்பிய ஒற்றுமை குறித்த நைச்சியமான வார்த்தைகளை எல்லாம் ஓரம்வைத்து விட்டு, புதிய ஐரோப்பிய நெருக்கடி நேர வகைமுறையானது இரண்டு விடயங்களைக் கொண்டுவருகிறது:

முதலாவதாக, சர்வதேச ஊக வணிகர்களுக்கு, அவர்களது முதலீடுகள் நிலைகுலையும் போது பொது நிதிகளில் இருந்து எடுத்து அவர்களுக்கு வழங்குவது தொடரும் என்று இது உத்தரவாதம் அளிக்கிறது. இரண்டாவதாக, இத்தகைய மீட்பு நடவடிக்கைகளுக்கான செலவு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளின் மூலமாக சாதாரண மக்களின் மேல் சுமத்தி விடப்படும் என்பதை இது உறுதிசெய்கிறது.

லிஸ்பன் ஒப்பந்தத்தத்துக்கு துணையளிப்பாக பரஸ்பர நிதி உதவிக்கு எதிரான நடப்பு தடையின் மேலமரும் விதமாக இரண்டு வாசகங்களை சேர்த்தளிக்க மாநாட்டு பங்கேற்பாளர்கள் உடன்பட்டனர். இத்தகையதொரு திருத்தத்திற்கு ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது ஏனென்றால், இத்திருத்தம் இல்லாத பட்சத்தில் ஜேர்மனியின் உச்சநீதி மன்றம் நடப்பு யூரோ மீட்பு நிதியை 2013 கடந்து நீட்டிப்பதை தடை செய்து விடும் என்று அது அஞ்சியது.

2013க்குப் பின்னர், ஒரு நாடு சர்வதேச ஊக வணிகர்களின் வேட்டைக்குப் பலியாகும் போது யூரோ மண்டலத்தின் 16 உறுப்பு நாடுகளும் பரஸ்பர நிதி ஆதரவை வழங்கும். ஆயினும் மிகக் கடுமையான நிபந்தனைகள் உடனிருக்கும்.

நிதி உதவி கடுமையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே வழங்கப்படும் என்பதையும் நெருக்கடி வகைமுறையானது ஒட்டுமொத்தமாய் யூரோ மண்டலமே அச்சுறுத்தலுக்கு ஆளானால் மட்டுமே பொருந்தும் என்பதையும் ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்தியது. ஊக நிதியின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு நாடு பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஏற்கனவே செய்திருப்பதைப் போல, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஆகியவற்றின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளுக்கு அந்நாடு நிபந்தனையின்றி அடிபணிய வேண்டும்.

ஒரு அரசு திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளுமாயின் தனியார் பத்திர உரிமையாளர்களும் தானாகவே அந்த நிதிச் சுமையில் பகுதியை பகிர்ந்து கொள்ள கோரப்படுவார்கள் என்று இருந்த ஆரம்ப முன்மொழிவு புரூசெல்ஸ் மாநாட்டில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இப்போது இது தனித்தனியான சந்தர்ப்பங்களில் மட்டுமே நிகழும்.

புதிய நெருக்கடி வகைமுறையின் விரிவெல்லை உட்பட அது குறித்த விவரங்கள் வியாழனன்று தீர்மானிக்கப்படாமலே இருந்தது. இந்த விடயங்களில் வருங்கால உச்சிமாநாடு தீர்மானிக்கும்.

யூரோ மண்டலத்தின் அனைத்து நாடுகளின் தேசியக் கடன்களிலும் ஒரு பகுதிக்கு, யூரோ பத்திரங்கள் வழங்குவதன் மூலம் நிதியாதாரம் பெறும் ஒரு திட்டத்தை லுக்சம்பேர்க் பிரதமர் ஜோன் குளோட் ஜங்கரும் இத்தாலிய நிதி அமைச்சர் கிலியோ டிரோமோண்டியும் கூட்டாய் முன்வைத்தனர். அதை முதலில் ஜேர்மனியும் பின் பிரான்சும் உடனடியாகக் கண்டித்து மறுத்து விட்டன.

தங்களது ஆலோசனைத்திட்டம் யூரோ மீதான ஊக நிதியின் தாக்குதலுக்கு எதிரான அதிக பாதுகாப்பை வழங்கி அதன் மூலம் மிகவும் கடன்பட்ட நிலையிலிருக்கும் நாடுகளுக்கு மிகக் குறைந்த வட்டிவீதங்களை கிட்டச் செய்யும் என்று ஜங்கரும் டிரெமோண்டியும் நம்பியிருந்தனர். ஆனால் ஜேர்மன் அரசாங்கமோ ஒரு பொதுவான நிலைப்பாடு வேண்டுமென்பதற்காக தனது சொந்த கடன் வட்டியில் ஒரு இலேசான அதிகரிப்பை ஏற்றுக் கொள்வதற்கு தயாரிப்பு கொண்டிராமல் இருந்தது. இதனால் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெலுக்கும் ஜங்கருக்கும் இடையே சூடான பொது விவாதம் ஒன்றும் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், “யூரோவுக்கு ஒரு நல்ல நாள்” என்று கூறிய ஜேர்மன் சான்சலர், புதிய நெருக்கடி வகைமுறை உருவாக்கப்பட்டிருப்பது இந்த உச்சிமாநாடு “ஒட்டுமொத்தமாய் யூரோவின் ஸ்திரநிலையை உறுதி செய்ய” ஒப்புக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது என்றார் 

உண்மையில், யூரோவின் நெருக்கடி சளைக்காமல் தொடர்கிறது. உச்சிமாநாட்டிற்கு ஒருநாள் முன்னதாகத் தான், அமெரிக்க கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் ஸ்பெயினின் தரமதிப்பீட்டைக் குறைக்க அச்சுறுத்தியது. இது அந்நாட்டை பதின்மூன்று ஆண்டுகளில் மிக உயர்ந்ததொரு வட்டிவீதத்தை அந்நாடு செலுத்துவதற்குத் தள்ளியிருக்கும். ஒரு நாள் கழித்து, கிரீஸின் தரமதிப்பீட்டை இன்னும் குறைக்கவிருப்பதாய் மூடி’ஸ் அச்சுறுத்தியது. 2009 டிசம்பர் முதல் பல்வேறு தரமதிப்பீட்டு முகமைகளும் கிரீஸின் தரமதிப்பீட்டைக் குறைத்துத் தான் நடப்பு யூரோ நெருக்கடியானது தூண்டப்பட்டிருக்கும் நிலையில் அதே நிகழ்வுப்போக்கு தான் மீண்டும் எழுந்திருக்கிறது. முதலில், ஒரு நாட்டின் தரமதிப்பீடு குறைக்கப்படுகிறது. அடுத்ததாக, புதிய கடனுக்கான வட்டிவீதம் அதிகரிக்கப்படுகிறது.

பொதுச் செலவினம் குறைக்கப்படும் வேகத்தைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் வட்டிச் சுமை வளரும்போது நாடு ஒரு கடன் சுருளுக்குள் வீழுமானால், அது ஐரோப்பிய மீட்பு வகைமுறையை நோக்கித் திரும்புவதற்குத் தள்ளப்படும். இது வங்கிகள் தம் மீதான முதலீடுகளுக்கு முழுமையான திரும்ப செலுத்தத்தை அளிப்பதை உறுதி செய்யும், அதே சமயத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசாங்கம் உறுதிகொள்ள நேரும்.

இது வங்கிகளுக்கு பெரும் நன்மை பயக்கும் ஒப்பந்தம் ஆகும். இவை பத்திரங்கள் மீது உயர்ந்த வட்டி வீதங்களைப் பெறுகின்றன, அதே சமயத்தில் அபாயத்தையோ ஐரோப்பிய மீட்பு நிதி தாங்கிக் கொள்கிறது. விவகாரங்கள் மோசமாய் போய் விட்டாலும் அவற்றுக்குப் பிரச்சினையில்லை, ஏனென்றால் அவர்களின் இலாபங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பிம்கோ என்கிற முதலீட்டு நிறுவனத்தின் தலைவரான முகமது எல்-எரியன் சமீபத்திய பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்றில் இதனை நேர்மையாய் ஒப்புக் கொண்டார். அவர் எழுதினார்: “விளிம்பு நாடுகளில் பணத்தைப் பாய்ச்சுவதன் மூலமாக மறுஉத்தரவாதம் பெறுவதனைக் காட்டிலும், வைப்புதாரர்களும் கடன்கொடுத்தவர்களும் தாங்கள் கொடுத்த கடன்களில் இருந்து வெளியே வருவதற்கு மீட்பு நிதிகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.”

கிரேக்க நெருக்கடியில் நிறுவப்பட்ட நிகழ்வுப்போக்கினையே அடுத்தடுத்த நாடுகளில் வங்கிகள் இப்போது பின்பற்றி வருகின்றன. அரசாங்க பத்திரங்களில் வட்டி வீதங்களை அதிகரிப்பதன் மூலம் அவை நெருக்கடியைத் தூண்டுகின்றன. இது அந்நாட்டை ஒரு மீட்புத் தொகுப்புக்கு கோரவும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை மோசமாக்குகின்ற ஒரு வெட்டுகளின் வேலைத்திட்டத்திற்குள்ளும் தள்ளும். கிரீசுக்குப் பின் அயர்லாந்து வந்தது. அடுத்து போர்ச்சுகல், ஸ்பெயின், மற்றும் அநேகமாய் இத்தாலி ஆகியவை வரலாம்.

இந்த நடவடிக்கைகளின் வர்க்க தன்மையானது மேலும் மேலும் வெளிப்படையானதாகி வருகிறது. கிரீஸின் அரசாங்கக் கடனுக்கு நீண்ட சிக்கலான வரலாறு இருக்கிறதான அதே சமயத்தில், அயர்லாந்தின் நெருக்கடியோ வங்கிகள் போட்ட ஊக நிதிக் களியாட்டத்தின் நேரடி விளைவு ஆகும். அயர்லாந்து வங்கிகளின் இழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் அயர்லாந்து அரசாங்கம் ஏற்க முடிவு செய்யும் வரை தேசியக் கடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. இப்போது வங்கிகளின் கடன்களை அடைப்பதற்கு பொதுத் துறை வேலைகள், சமூக செலவினங்கள், வருவாய்கள் மற்றும் ஓய்வூதியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச நிதி பிரபுத்துவத்தின் கட்டளைகளை எதிர்க்க ஒரு ஐரோப்பிய அரசாங்கத்திற்கும் கூட - அது கன்சர்வேடிவ், லிபரல் அல்லது சமூக ஜனநாயகக் கட்சி எந்த அரசாங்கமாயினும் சரி - விருப்பமில்லை. தணிக்க முடியாத பசியுடன் நரபலி கோரும் கடவுளைப் போல, கடந்த ஆறு தசாப்தங்களில் தொழிலாள வர்க்கம் வென்றிருக்கக் கூடிய சமூக நலங்களின் கடைசி மிச்சங்கள் அழிக்கப்படும் வரையிலும் அது தொடர்ந்து புதிய தியாகங்களைக் கோருகிறது.

அதே சமயத்தில் வங்கிகள் ஐரோப்பாவில் தேசியப் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கங்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் காலடியில் விழுந்து கொண்டு அதேசமயத்தில் நெருக்கடியின் கூர்முனையை தங்களின் அண்டை நாடுகளின் பக்கம் தள்ளி விடுவதற்கு முயற்சி செய்கின்றன. இது கண்டம் பொருளாதாரரீதியாக சிதறலுறுவதற்கும் அரசியல்ரீதியாக துண்டுதுண்டாய் ஆவதற்கும் அச்சுறுத்துகிறது. தேசியவாதத்தை தூண்டுவதென்பது அயலாரை வெறுக்கும் குணத்துடனும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுடனும் கைகோர்த்த வண்ணமே வருகிறது.

ஜேர்மனியில், ஒரு யூரோ-எதிர்ப்பு கட்சியை நிறுவுவது குறித்து பேச்சு நிலவி வருகிறது. இதன் பொருட்டு, ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள்  தலைவரான ஹேன்ஸ்-ஓலஃப் ஹேங்கெல் போன்ற பொருளாதார தேசியவாதிகளும் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திலோ சராசின் போன்ற இனவாதிகளும் உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் உரையாடல் நிகழ்ச்சிகளிலும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) வலதுசாரிப் பிரிவிலும், சுதந்திர ஜனநாயகக் கட்சியிலும் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளிலும் ஆதரவைக் காண்கின்றனர். CDU தலைவரான மேர்கெல் ஐரோப்பிய அரங்கில் சமரசமற்ற நிலைப்பாடு கொண்டு உலாவருவதில் அவரின் சொந்த கட்சி உடையாமல் இருக்க வேண்டுமே என்கிற அவரது அச்சம் வகிக்கும் பங்கும் கொஞ்சமல்ல.

கிரீஸில், வலது-சாரியைச் சேர்ந்த மற்றும் போலி-இடதைச் சேர்ந்த வீராவேச பேச்சாளர்கள் எல்லாம் பாப்பராண்ரூ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீதான பொதுமக்கள் கோபத்தை ஜேர்மனிக்கு எதிரான தேசியவாதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர்

தேசியவாதத்தை கிளறி விடுவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை தொழிற்சங்கங்கள் ஆற்றுகின்றன. இவை எல்லா இடங்களிலும் நேரடியாகவோ அல்லது திரைமறைவிலோ தத்தமது அரசாங்கங்களின் பின்னே நின்று கொள்கின்றன. இவை சிக்கன நடவடிக்கைகளை ஆதரிப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் ஐரோப்பா முழுமைக்குமான ஒரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான எந்த முயற்சிக்கும் குழிபறிக்கின்றன.   

1924ல் லியோன் ட்ரொட்ஸ்கி ஐரோப்பாவின் துண்டாடலைப் பற்றி எழுதினார்:

முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள், சமரசவாதிகள், வணிக திருடர்கள், பகல்கனவு காண்பவர்கள் மற்றும் வெறுமனே முதலாளித்துவ பிதற்றல் செய்பவர்கள் இவர்களெல்லாம் இப்போது ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் குறித்து பேசுவதற்கு கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை. ஆயினும் அந்தப் பணி, முரண்பாடுகளால் முற்றாய் அரிக்கப்பட்டிருக்கிற ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும். வெற்றி பெறுகின்ற ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே ஐரோப்பாவை ஐக்கியப்படுத்தப்பட முடியும். புரட்சி முதலில் எங்கு வெடித்தாலும் சரி, அத்துடன் அதன் அபிவிருத்தி வேகம் என்னவாய் இருந்தாலும் சரி, ஐரோப்பாவின் பொருளாதாரரீதியான ஐக்கியமே அதன் சோசலிச மறுகட்டுமானத்திற்கான முதல் தவிர்க்கவியலாத நிபந்தனையாக இருக்கும்.” (லியோன் ட்ரொட்ஸ்கி, “ஐரோப்பாவும் அமெரிக்காவும்”)

இந்த வார்த்தைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன. ஐரோப்பா தீர்மானகரமான முனையில் நிற்கிறது. மாற்றுக்களாக உள்ளவை இரண்டுதான், ஒன்று மந்தநிலை, சர்வாதிகாரம் மற்றும் போர் இதற்குள்ளான சரிவாக இருக்க வேண்டும், இல்லையேல் தொழிலாளர் அரசாங்கங்களுக்கான போராட்டத்திற்கும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்னும் வடிவத்தில் சமூகத்தின் சோசலிச உருமாற்றத்திற்கும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டும்.