World Socialist Web Site www.wsws.org


SWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Mexico: President Calderon calls for "doing more with less"

மெக்சிகோ: ஜனாதிபதி கால்டிரோன் "குறைந்த இருப்புக்களைக் கொண்டு அதிகம் செய்யவேண்டும்" என்று அழைப்பு விடுகிறார்

By Rafael Azul
14 September 2009

Back to screen version

மெக்சிகோவின் ஜனாதிபதி Felipe Calderon, கடந்த செவ்வாயன்று மெக்சிகோவின் பிரதிநிதிகள் மன்றத்தில், அவருடைய 2010 பட்ஜெட்டை அளித்த போது "குறைந்த இருப்புக்களைக் கொண்டு நிறைய செய்யவேண்டும்" என்ற அழைப்பை விடுத்தார். கடும் சிக்கன நடவடிக்கைகள் நிறைந்த இந்த பட்ஜெட், 480,000 மில்லியன் பெசோ நிதியப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டது, தொழிலாளர் வர்க்கத்தையும், ஏழைகளையும் பாதிக்கும் ஒவ்வொரு வித வரியும் இதில் அதிகரிக்கப்பட்டுள்ளன. IVA எனப்படும் கூடுதல் மதிப்பு வரி, இணையதள பணிகள், மொபைல் தொலைபேசிகள் மீதான வரிகள், வருமான வரிகள், வங்கி சேமிப்பு வரிகள் என்று பலதரப்பட்ட வரிகள் இதில் உள்ளடங்கி உள்ளன. இந்த பட்ஜெட் அதன் தற்பொழுதைய வடிவத்தில், இன்னும் கூடுதலாக மெக்சிகோவின் தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறைகளின் எஞ்சியிரு க்கும் கூறுபாடுகளை மேலும் தகர்த்துள்ளது.

இன்னும் இறுதிவடிவு பெறாத நிலையிலிருக்கும் இந்த ஆவணம், நவம்பர் மாத இறுதியில், ஒப்புதல் பெறுவதற்கு முன் சட்டமன்றத்தில் பல மாறுதல்களுக்கு உட்படக்கூடும். எவ்வாறிருப்பினும், வடக்கு அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் (North American Free Trade Agreement) மெக்சிகோவின் பங்குவகிப்பு என்ற பின்னணியில், நாட்டின் ஆளும் உயரடுக்கு இந்த விஷயத்தில் கலிபோர்னியா அல்லது மிச்சிகனைவிட அதிக விருப்புரிமை எதையும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க மாநிலங்களைப் போலவே, மெக்சிகன் அரசாங்கமும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் நிதிய துறையின் ஆணைகளின் கீழ் செயல்படுகிறது.

இறுதி விளைவு எப்படி இருந்தாலும், 2010 பட்ஜெட் மற்றும் கால்டரோனின் நிதிய சீர்திருத்தமானது, வாழ்க்கை தரங்களைக் குறைந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெருவணிகம் மற்றும் வங்கி அமைப்புகளுக்கு திசை திருப்பிவிடும்.

இப்பொழுது இருக்கும் 15 சதவீத கூடுதல் மதிப்பு வரியைத் தவிர, உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு 2 சதவீத விற்பனை வரியும் விதிக்கப்படும்--வரலாற்றளவில் இதுவரை இவையெல்லாம் வரிகள் இல்லாமல் இருந்த பொருட்களாகும். விந்தையான முறையில், இந்த புதிய வரியை "வறுமையை எதிர்ப்பதற்கான நிதி" என்று பட்ஜெட் ஆவணம் குறிப்பிடுகிறது; மிக வறியவர்களுக்கான சில திட்டங்களில் அற்பத்தொகையை ஒதுக்குவதற்கு இந்த பெயர். மின்சாரம் மற்றும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தவும் பட்ஜெட்டில் திட்டம் உள்ளது. பீரும், சிகரெட்டுக்களுக்கும் கூட வரிவிகிதங்கள் உயர்த்தப்படும்.

சுருங்க கூறினால், பிற்போக்குத்தனமான வரிகள் மூலமாகவும், சமூக திட்டங்களில் குறைப்புக்கள் மூலமாகவும் மெக்சிகன் அரசாங்கம் அதன் நிதிய நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் விவசாயிகளின் முதுகில் ஏற்றுவதற்கு முற்படுகிறது; அதே நேரத்தில், வட அமெரிக்க பொருளாதாரத்தில் முழுமையாக இணைந்திருக்கும் பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஊழல் நிறைந்த ஓர் அமைப்பில், செல்வந்தர்களும், அரசியல் வர்க்கமும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் தொடர்ந்து பலனடைந்து வருகின்றன.

வரிவிதிப்புக்கள் உயர்த்தப்பட்டிருப்பதற்கும் கூடுதலாக, வரைவு பட்ஜெட் செலவின குறைப்புக்களையும் கொண்டுள்ளது; இதில் மூன்று அரசாங்க அமைச் சகங்களும் -- சுற்றுலாத்துறை, ஆட்சிப் பணித்துறை, விவசாய சீர்திருத்தம் -- ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்படும். கல்வி செலவினங்கள் 16.7 சதவீதம், கலாச்சார நடவடிக்கைகள் பிரிவில் 11 சதவீத குறைப்பு, பொது போக்குவரத்துத்துறையில் 6.7 செலவு குறைப்பு என திட்டமிடப்பட்டுள்ளது. வரி உயர்வுடன் கூடிய இந்த நடவடிக்கைகள், பட்ஜெட் பற்றாக்குறையை 60 பில்லியன் பெசோக்களுக்கு (அமெரிக்க $4.5 பில்லியனுக்கு) கொண்டு வரும்; இதை முதலீட்டுச் சந்தையில் கடன் வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒப்பீட்டளவில், ஏறத்தாழ நிரந்தரமாக இருக்கும் "போதைப் பொருட்கள் மீதான போர்" என்பதால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிதிய நெருக்கடி பற்றியும் இந்த பட்ஜெட் சிந்திக்கிறது. 2007ல் இருந்து பொது பாதுகாப்பு செலவினங்கள் 140 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேசிய பாதுகாப்பு செலவினங்கள் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பட்ஜெட் அறிக்கை மீதான தமது அறிக்கையில் கால்டெரோன், தற்போதைய பின்னடைவுக்கு உரிய நேரத்தில் தமது நிர்வாகம் விடையிறுப்பை அளித்திருப்பதாக தெரிவித்தார்--மெக்சிகன் சமூகம் 1930களுக்குப் பிறகு ஆழ்ந்த பொருளாதார சரிவில் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீத சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிதிய நெருக்கடியின் பாதிப்பு, மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் குறைந்தது மற்றும் உலகில் எண்ணெய் விலை சரிவுகள் ஆகியவற்றை கால்டரோன் நெருக்கடிக்கான காரணமாக எடுத்து காட்டினார். இந்த ஆண்டு பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதால், அதையொட்டி மெக்சிகோவின் மீட்பும் இருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது என்று மெக்சிகோவின் ஜனாதிபதி சுட்டி காட்டினார்; அமெரிக்கா தான் அந்நாட்டின் ஏற்றுமதிகளில் 80 சதவிகிதத்தைப் பெற்று வருகிறது. இதுவரை ஏனைய பெரிய இலத்தீன் அமெரிக்க பொருளாதாரங்கள் எதுவும், மெக்சிகோவின் சரிவைப் போல கடுமையான சரிவைச் சந்திக்கவில்லை; ஏனெனில், அவர்களின் வர்த்தகம் இந்தியா, சீனா, மேற்கு ஐரோப்பா மற்றும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதிகபட்சமாக 139 அமெரிக்க டாலராக இருந்த மெக்சிகன் எண்ணெய் விலைகள், 2008 இடைப்பகுதியில் 70 அமெரிக்க டாலராக சரிந்தன; அரசாங்கம் கடந்த ஆண்டு எதிர்பாராமல் கிடைத்த இந்த ஆதாயம் தொடரும் என்று நினைத்ததாகவும், உண்மையில் எண்ணெய் வருமானத்தில் 300,000 மில்லியன் பெசோக்கள் குறைந்துவிடும் என்பதற்கான எந்த திட்டத்தையும் அரசாங்கம் எதிர்கொள்ளவில்லை என்றும் கால்டரோன் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் சர்வதேச பத்திரங்களின் மதிப்பைப் பட்டியலிடும் நிஊவனங்களிடமிருந்தும், வங்கிகளிடமிருந்தும் இந்த வரைவு பட்ஜெட் அதிக வரவேற்பை பெறவில்லை; அவற்றுள் பலவும், குறைந்த ஊதியங்களைச் செயல்படுத்துவதற்கும், ஏற்றுமதி தொழில்துறைக்கு ஊக்கமளிப்பதற்கும் ஓர் இரகசியசொல் போன்றிருந்த, கால்டரோன் நிர்வாகத்தின், நிதிய கட்டுப்பாடு என்றழைக்கப்பட்டதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட்டை குறிப்பிட்டு காட்டின.

மெக்சிகோவின் இரண்டாம் பெரிய வங்கியும், Citibankன் துணை அமைப்புமான Banamexன் நிர்வாகி Sergio Kurczyn, கால்டரோனைப் பாராட்டி இருந்தார்: "இந்த நிதிய திட்டம், நிதியக் கட்டுப்பாட்டின் ஓர் அறிகுறியை அளிக்கிறது, அதே நேரத்தில் சமூகத்தின் நலிந்த அடுக்குகளின் ஆதாரங்களின் மீதும் உண்மையான முறையில் கவனம் செலுத்தி உள்ளது."

வாஷிங்டனைத் தளமாக கொண்ட வங்கி பணிகள் அளிக்கும் நிறுவனமான 4Castன் Pdro Tuestaவும், கூடுதல் மதிப்பு வரி மற்றும் விற்பனை வரி உயர்வுகளை வரவேற்றுள்ளது. "இது சரியான விடையிறுப்பு, மெக்சிகர்கள் பொதுமான அளவு வரி விதிக்கப்படுவதில்லை" என்றார். எவ்வாறிருப்பினும், "பட்ஜெட் குறைப்புகள் மிகக் குறைவானவை என்று தான் கூறவேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அனைவரும் மகிழ்ச்சியடைந்து விடவில்லை. தன்னை ஒரு "முதன்மையான முதலீட்டு வங்கி" என அழைத்து கொள்ளும் நிறுவனமான RBC Capital Markets, அக்டோபரில் மெக்சிகோ அதனுடைய நிலையிலிருந்து கீழ் இறங்கி விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்றும், ஆகவே கால்டரோன் அரசாங்கம் இன்னும் கூடுதலான பட்ஜெட் குறைப்புக்களைச் சுமத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. Finch, S&P ஆகியவையும் இதே அச்சுறுத்தலை எதிரொலித்தன. கால்டரோன் அறிவிப்பைத் தொடர்ந்து மறுநாள், சில ஊக வணிகர்கள் தங்கள் கடன்களைத் திரும்ப பெற தொடங்கியதால், பெசோவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.

PRIன் செல்வாக்கில் உள்ள பிரதிநிதிகள் மன்றத்தின் இசைவை, பட்ஜெட் பெற வேண்டுமே என்பது தான், வோல்ஸ்ட்ரீட் ஊக வணிகர்களை இருமடங்கு கவலை கொள்ள வைத்திருக்கிறது. ஜூலை மாதம், கால்டெரோனின் கட்சியான PAN, சட்டமன்றத்தின் கீழ்சபையில் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. PRI பிரதிநிதிகள் வரைவு பட்ஜெட்டை எதிர்த்துள்ளனர், கால்டரோன் ஓர் ஊக்க பட்ஜெட் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சர்வதேச வங்கிகள் மற்றும் ஊக வணிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பட்ஜெட் வரைவு ஒரு நிதிய ஊக்கப்பொதி மூலம் உள்நாட்டு கோரிக்கைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியே உள்ளது. அரசாங்க பொருளாதார வல்லுனர்கள், மெக்சிகன் பொருளாதாரம் ஜூன் மாதம் மோசமான சரிவு நிலையில் இருந்தது என்றும், அதிலிருந்து அது விரைவில் மீளத் தலைப்படும் என்றும் கூறுகின்றனர். மெக்சிகன் பங்கு சந்தைகளில் குறியீடு அதிகரித்திருப்பதானது, எதிர்பார்க்கப்படும் மீட்பிற்கான ஓர் அறிகுறி என்றும், இது அமெரிக்க பொருளாதாரத்தின் "green-shoots" என அழைக்கப்படுவதைத் தளமாக கொண்ட கருத்து என்றும் கூறுகின்றனர். அக்காரணத்தினால் அம்மாதிரியான கொள்கைகள் தேவையில்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

அந்த வாரத்தில் பின்பகுதியில், National Autonomous University (UNAM) உடன் தொடர்புபட்ட, கல்வித்துறை பொருளாதார வல்லுனர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாற்று திட்டத்துடனும் இந்த வரைவு பட்ஜெட் ஒத்திருந்தது.

UNAM வல்லுனர்கள் கடந்த காலத்திலிருந்து, Jesus Silva Herzog Flores மற்றும் Cardenas Solorzano ஆகிய இரு நபர்களைச் சேர்க்கின்றனர். 1980 களில் இருந்த Miguel De La Madrid மற்றும் Carlos Salinas ஆகியோரின் PRI அரசாங்கங்களில் Herzog மந்திரியாக இருந்தவர். அப்பொழுது மெக்சிக ஆளும் வர்க்கம் பொருளாதார பெருநிறுவன முறையிலிருந்து தடையற்ற சந்தை, ஏற்றுமதி சார்புடைய பொருளாதாரம் ஆகியவற்றை கொண்ட கொள்கைகளுக்கு மாறி கொண்டிருந்தது. அந்த நேரத்தில் Cardenas, இந்த மாற்றத்திற்கான எதிர்ப்பிற்கு தலைமை தாங்கினார்.

மந்தநிலை முடிந்துவிட்டது என்பதை இந்த அறிக்கை மறுக்கிறது. பொருளாதாரத்தில் இன்னும் சற்றே கூடுதலாக அரசாங்கத்தின் தலையீடு தீவிரமடைய வேண்டும் என்றும், வணிக உயரடுக்குகளின் தனியுரிமைகளைக் காக்கும் ஒரு தீவிர வரிமுறையை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படை சீர்திருத்தமும் இதில் இணைந்திருக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைக்கும் நிலையில், இனி கடந்த காலத்திற்கு செல்லும் வாய்ப்பில்லை என்பதை தான் UNAM அறிக்கை உறுதிபடுத்துகிறது.

அரசாங்கத்தில் எல்லா மட்டங்களிலும், மெக்சிகோ, கிட்டத்தட்ட திவாலாகியுள்ளது. United Electrical Union (UE) நிதியத்தில் நடத்தப்படும் ஒரு வலைத் தளமான மெக்சிக செய்தி மற்றும் பகுப்பாய்வு என்பதில் வந்திருக்கும் ஒரு மதிப்பீட்டின்படி, மெக்சிகோவின் 2,400 முனிசிபாலிட்டிகளில் சுமார் 95 சதவீதம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க நிதியாதாரம் இல்லாமல் இருக்கின்றன. பெரும்பாலானவை, 20 சதவீத அளவிற்கு குறைத்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல, மத்தியிலிருந்து உதவியை நாடியுள்ளன.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved