World Socialist Web Site www.wsws.org


SWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The plunder of Iraq's oil

ஈராக்கிய எண்ணெய் கொள்ளையடிப்பு

James Cogan
11 November 2009

Back to screen version

தெற்கு ஈராக்கில் இருக்கும் மிகப் பெரிய West Qurna எண்ணெய் வயல் வளர்ச்சித் திட்ட உரிமைகளை Exxon-Mobil மற்றும் Royal Dutch Shell க்கும் கடந்த வியாழனன்று வழங்கியமை தொடர்ந்துவரும் அமெரிக்கத் தலைமையிலான குற்றம் சார்ந்த ஆக்கிரமிப்பின் தன்மையை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈராக் போரின் நேரடி விளைவாக, முக்கிய அமெரிக்க, சர்வதேச விசைப் பெருநிறுவனங்கள் இப்பொழுது உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களின்மீது கட்டுப்பாட்டைப் பெற்று வருகின்றன.

8.7 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்புக்களை West Quarna கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் மொத்த எண்ணெய் இருப்புக்கள் இப்பொழுது 115 பில்லியன் பீப்பாய்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; டஜன் கணக்கான திறனுடைய வயல்கள் போதுமான அளவிற்கு ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. 2003ல் அமெரிக்கக் குறுக்கீட்டிற்கு முன்பு West Qurna மீதான உரிமைகள் சதாம் ஹுசைனால் ரஷ்ய எண்ணெய் நிறுவனம் Lukoil க்கு வழங்கப்பட்டிருந்தது. அமெரிக்க சார்புடைய பாக்தாத்தில் இருக்கும் கைப்பாவை அரசாங்கம் போருக்கு முந்தைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் கிழித்து எறிந்துவிட்டது.

Exxon-Mobil தான் அமெரிக்கத் தளமுடைய மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம் முதல் முதலில் நலன்களை அடைவதாக உள்ளது. ஒரு 20 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, Exxon-Mobil, Shell இரண்டும் West Qurna வில் உற்பத்தியை நாள் ஒன்றிற்கு 300,000 பீப்பாய்களுக்கும் குறைவு என்பதில் இருந்து 2.3 மில்லியன் பீப்பாய்களை அடுத்த ஆறு ஆண்டுகளில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. எண்ணெய் வயல்களின் தரங்களை உயர்த்துவதற்கான நிறுவனங்களின் செலவுகளுக்கு ஈராக்கிய அரசாங்கம் ஈடு செய்யும் என்பதுடன் --இதுவே 50 பில்லியன் டாலர் ஆகக்கூடும்-- அவை எடுக்கப்படும் பீப்பாய் ஒன்றிற்கு 1.90 டாலர் செலுத்தும் அல்லது ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டாலர் என்று ஆகும். Exxon-Mobil 80 சதவிகிதப் பங்கும் Shell மிஞ்சிய 20 சதவிகிதத்தையும் கொள்ளும்.

இது, வெளி நாட்டு விசை நிறுவனங்களுடன் (Energy companies) பாக்தாத் ஆட்சி கையெழுத்திடும் இரண்டாவது ஒப்பந்தமாகும். கடந்த செவ்வாயன்று, ஈராக்கிய அரசாங்கம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) மற்றும் சீனத் தேசிய பெட்ரோலிய நிறுவனத்துடன் (CNPC) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவற்றிற்கு மிகப் பெரிய Rumaila எண்ணெய் வயல் அபிவிருத்திக்கான உரிமைகளை கொடுத்தது; அதில் 17 பில்லியன் பீப்பாய்கள் இருப்புக்கள் உள்ளன. BP க்கு இதில் 38 சதவிகிதப் பங்கும், CNPC க்கு 37 சதவிகிதப் பங்கும் உள்ளது. இத்திட்டம் நாள் ஒன்றிற்றகு 1 மில்லியன் பீப்பாய்கள் என்பதில் இருந்து 2.85 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்தும்; இதையொட்டி ஆண்டுக்கு 2 பில்லியன் டாலருக்கும் மேலாக இலாபம் கிடைக்கும்.

நாடுகடந்த நிறுவனங்களுக்கு ஒரே ஏமாற்றம் ஒப்பந்தங்கள் உற்பத்தி பகிர்வு உடன்பாட்டு (Production Sharing Agreement PSA) மாதிரியைத் தளமாக் கொண்டிருக்கவில்லை என்பதுதான்; அது ஒரு எண்ணெய் வயலின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் வரை பெறுவதற்கு வாய்ப்புக் கொடுத்திருக்கும். ஈராக் அரசாங்கத்தில் இருக்கும் இழிந்த கூறுபாடுகள் கூட நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களை அந்த அளவிற்கு கையளித்துவிட தயாராக இல்லை. உண்மையில் ஒப்பந்தங்கள் "பணி" உடன்பாடுகள் என்றுதான் தரம் காட்டப்பட்டுள்ளன. இதையொட்டி பிரதம மந்திரி நூரி-அல்-மாலிகியும் அவருடைய எண்ணெய் துறை மந்திரி Hussain al-Shahristani ம் பாராளுமன்றத்தை பொருட்படுத்தாமல், விசைத் தொழிலைக் கட்டுப்படுத்தும் ஹைட்ரோகார்பன்கள் சட்டத்தை மதிக்காமலும் செயல்பட முடியும்.

மற்ற உடன்பாடுகளும் இறுதி வடிவம் பெறும் வழிவகையில் உள்ளன. இத்தாலிய நிறுவனம் Eni, அமெரிக்கத் தளம் கொண்ட Occidental, தென் கொரியாவின் Kogas ஆகியவை Zubir எண்ணெய் வயல் பற்றி ஒரு தற்காலிக உடன்பாட்டில் கையெழுத்திட்டுளன; இதில் 4 பில்லியன் பீப்பாய்கள் இருப்புக்கள் உள்ளன. Eni, ஜப்பானிய பெருநிறுவனம் Nippon Oil, ஸ்பெயினின் நிறுவனம் Repsol ஆகியவை நசிரியாவில் ஒரு வயலுக்கு முயல்கின்றன; அங்கும் இந்த அளவு இருப்புக்கள் உள்ளன. வடக்கு ஈராக்கில் Royal Dutch Shell முக்கிய Kirkuk எண்ணெய் வயலில் இருக்கும் இதுவரை பயன்படுத்தப்படாத பகுதிகளை வளர்க்கும் ஒப்பந்தத்திற்கு பேரம் பேசி வருகிறது; இங்கு 1934ல் இருந்து உற்பத்தி நடைபெற்று வந்தாலும் இன்னும் 10 பில்லியன் பீப்பாய்கள் இருப்புக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் கூடுதல் நலன்களுக்கு பேரம் பேசிய விசை நிறுவனங்கள் இப்பொழுது இருக்கும் வயல்களின் தரத்தை உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளன; இதையொட்டி இந்த ஆண்டு பிற்பகுதி அல்லது அடுத்த ஆண்டில் ஏலத்திற்கு வரவிருக்கும் 67 உபயோகிக்கப்படாத வயல்கள் வரும்போது PSA மாதிரியில் இன்னும் அதிக இலாபம் பெரும் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். எதிர்பார்த்ததைவிட தாமதம் ஆகியுள்ளது என்றாலும், பெரும் விசை நிறுவனங்கள் ஈராக்கில் இப்பொழுது போதுமான உறுதிப்பாடு வந்துவிட்டது, நாட்டின் எண்ணெய் உற்பத்தியை பெரிதும் பெருக்க பணத்தை முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இதன் முதல்படிதான் 1975ல் தேசியமயமாக்கப்பட்ட ஈராக்கின் எண்ணெய் தொழில்துறை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாகும்.

இச் செயல்பாட்டின் நவகாலனித்துவ தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் புஷ் நிர்வாகத்தின் இரு முன்னாள் உயர் அமெரிக்க அதிகாரிகள் இப்பொழுது ஈராக் பெருநிறுவன உடன்பாடுகளுக்கு வசதியளிக்கின்றனர். படையெடுப்பிற்குப் பின்னர் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகத்தின் முதல் தலைவராக இருந்த Jay Garner கனேடிய விசை நிறுவனமான Vast Explorastion க்கு ஆலோசகர் ஆவார்; இது வடக்கே உள்ள குர்டிஷ் எண்ணெய் வயலில் 37 சதவிகித பங்கை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஐ.நா.வில் முன்னாள் தூதராக இருந்த Zalmay Khalizad தன்னுடைய பெருநிறுவன ஆலோசனை நிலையத்தை இர்பில் என்னும் குர்டிஷ் நகரத்தில் அமைத்துள்ளார்.

ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் எப்போதும் விசை ஆதாரங்கள் மீதான கட்டுப்பாடு பற்றிய போர்தான். ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், பல மில்லியன் மக்கள் உறுப்புக்களை இழந்து, மன அதிர்ச்சிக்கும் உட்பட்டுள்ளனர்; நகரங்களும் உள்கட்டமைப்புக்களும் தகர்க்கப்பட்டு, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் கொண்டுள்ள பல பரந்த விழைவுகளின் ஒரு பகுதியாக ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீது மேலாதிக்கத்தை அடைய விரும்பும் அமெரிக்க விழைவிற்காக, பல ஆயிரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், அல்லது காயமுற்றனர்.

அமெரிக்கா 1990-91 முதல் வளைகுடா போருக்கு பின்னர் இந்த பிராந்திய இலக்குகளை சாதிக்கத் தவறிவிட்டது. ஐ.நா.பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், சதாம் ஹுசைன் ஆட்சி பதவியில் இருந்து, பிரான்சின் பெரும் எண்ணெய் நிறுவனமான Total மற்றும் Lukoil, ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்தது. 1990 களின் கடைசிப் பகுதியில் இருந்து ரஷ்யாவும் ஐரோப்பிய சக்திகளும் பொருளாதாரத் தடைகளை அகற்ற அழுத்தம் கொடுத்தன அதையொட்டி அந்நாட்டு நிறுவனங்கள் நலன்களை அடையலாம் என்று அவை கருதின. அமெரிக்க பெருநிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க போர் ஒரே வழிவகை ஆயிற்று.

அமெரிக்க விசை பெருநிறுவனங்களும் வெறுமே கைகட்டி ஒதுங்கி நிற்கவில்லை. Exxon-Mobil, Chevron, Conco-Philips, BP America, Shell ஆகியவற்றின் உயர்மட்ட பிரதிநிதிகள் புஷ் நிர்வாகத்தின் "விசைப் பணிக்குழு" என்று துணை ஜனாதிபதி டிக் ஷெனியின் கீழ் இருந்த அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்டன. விவாதங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்று ஈராக்கின் எண்ணெய் வயல்கள், முடிவிடங்கள், குழாய்த்திட்டங்கள் பற்றி விரிவான தகவல்களை கொடுத்தது; அதைத்தவிர இவற்றுள் செயல்படத் தயாராக இருந்த அமெரிக்கா-அல்லாத பிற நாட்டு நிறுவனங்களின் பட்டியலும் இருந்தது. 2001 மே மாதம் பணிக்குழு கொடுத்த அறிக்கை அமெரிக்க நோக்கத்தை அப்பட்டமாக கூறியது: "அமெரிக்க சர்வதேச விசைக் கொள்கையில் முக்கிய இலக்காக வளைகுடா இருக்கும்."

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் போருக்குப் போலிக் காரணமாக பயன்படுத்தப்பட்டன. ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய பொய்கள் அல் குவேடாவுடன் ஈராக் தொடர்பு கொண்டுள்ளது என்ற பொய்யுடன் இணைக்கப்பட்டன. படையெடுப்பிற்கு முன்பு, எண்ணெய் தொழில்துறை நிர்வாகிகள் பல முறையும் புஷ் நிர்வாக அதிகாரிகளை சந்தித்தனர். ஜனவரி 16, 2003 ல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது போல், "உலகின் மிக எண்ணெய் வளம் மிக்க நாடுகள் ஒன்றில் செயல்பாட்டை ஆரம்பிக்கும் வாய்ப்பு வருவதற்கான நாளுக்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாரிப்பைத் தொடங்கிவிட்டன."

ஈராக்கிய மக்களை குருதியில் மூழ்கடித்தபின், அமெரிக்க நிதிய, பெருநிறுவன தன்னலக்குழு அந்த நாள் இறுதியில் வந்துவிட்டதாக நம்புகிறது. ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே நலன் பெறவில்லை என்றாலும், ஈராக்கிய எண்ணெய் பற்றி எவர் முடிவெடுப்பது என்பதில் கேள்விக்கு இடமில்லை. நாட்டில் பிரமாண்டமான இராணுவத் தளங்களை கொண்டு, வாஷிங்டனுடன் பிணைந்துள்ள ஆட்சி பாக்தாத்தில் இருக்கையில், அமெரிக்கா அதன் ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்களுக்கு உத்தரவிட முடியும்; பெரும் சக்திகளுக்கு இடையே உள்ள எழுச்சி பெறும் அழுத்த காலத்தில், எண்ணெய் அளிப்புக்களை நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தவும் முடியும்--இதுதான் அமெரிக்க மூலோபாய கொள்கையின் நீண்ட கால அடிப்படைத் தன்மை ஆகும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved