World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Union calls off militant Rico strike

இந்தியா: போர்க்குணமிக்க ரிக்கோ வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் முடிக்கிறது

By Deepal Jayasekera
14 November 2009

Back to screen version

குர்கான்-மனேசரில் (Gurgaon-Manesar) உள்ள ரிக்கோ கார்த்தொழில் ஆலையில் 45 நாட்கள் நடைபெற்ற போர்க்குணமிக்க வேலை நிறுத்தம், நவம்பர் 5ம் தேதி மாலையில் AITUC (All-India Trade Union Congress) நிர்வாகத்துடனும் ஹரியானா மாநில அரசாங்க அதிகாரிகளுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வழிவகுத்தபின் முடிவிற்கு வந்தது.

குர்காம்-மனேசர் தொழில்துறைப்பகுதியில், நாட்டின் மிக முக்கியமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை தயாரிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நவம்பர் 6ம் தேதி ரிக்கோத் தொழிலாளர்களுக்கு ஆதரவு காட்டும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதாக இருந்தனர்.

ஏற்கனவே அக்டோபர் 23ம் தேதி குர்காம்-மனேசர் பகுதியில் இருக்கும் 60 நிறுவனங்களில் உள்ள 100,000 தொழிலாளர்கள், நிர்வாக ரெளடிகளால் ஒரு 26 வயது ரிக்கோ வேலைநிறுத்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்திருந்தனர். அடிக்கடி தொழிலாளர் பூசல்களில் இடம் பெற்றிருந்த போலீஸ் தாக்குதல் மறுபடி நடக்கக்கூடும் என்று அஞ்சிய, அக்டோபர் 23 நடவடிக்கையில் சேர்ந்திருந்த பல தொழிலாளர்கள் தங்களிடம் கற்களையும், மரத் தடிகளையும் ஆயுதங்களாக வைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மாநில அரசாங்கம், வேலைநிறுத்தத்தை முன்னதாக சட்டவிரோதம் என்று அறிவித்து 3 பேருக்கு மேலாக மக்கள் கூடுவதை குற்றவியல் சட்டப்படி தடைசெய்தும் அறிவித்தது; மேலும் மக்கள் திரளலை எதிர்கொள்ளும் வகையில் துணை இராணுவப்படைகளையும் திரட்டியிருந்தது.

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிறிமி உடன் இணைந்துள்ள AITUC எதிர்பார்த்தபடி நவம்பர் 5 உடன்பாட்டை ரிக்கோ தொழிலாளர்களுக்கு ஒரு வெற்றி என்று அறிவித்தது. ஆனால் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் அடையப்படவில்லை. கணிசமான ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளிகள் பற்றிய வரம்பு, AITUC ஐ தொழிலாளர்களின் பேரம் பேசும் பிரதிநிதியாக அங்கீகரித்தல், பாதிப்பிற்குட்பட்ட 16 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்தல், கொல்லப்பட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் அஜித் யாதவ் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை ஆகியவை கோரப்பட்டிருந்தன.

தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையை முழுமையாக அல்லது பகுதியாகக் கூட தருவதாக நிர்வாகம் எந்த உறுதியையும் கொடுக்கவில்லை. ரிக்கோவின் துணைத் தலைவர் (மனித வளங்கள்), சுரிந்தர் சிங் செளதரி செய்தி ஊடகத்திடம் ரிக்கோத் தொழிலாளர்ளின் ஊக்கத் தொகைகள் மற்றும் ஊதிய அதிகரிப்புக்கள் குர்காம்-மனேசர் தொழில்துறை வட்டத்தில் உள்ள மற்ற முக்கிய கார் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்களோடு ஒப்பிட்ட பின்னர்தான் நிர்ணயிக்கப்படும் என்று கூறிவிட்டார்.

தற்காலிமாக வேலையில் இருந்து அகற்றப்பட்ட 16 தொழிலாளர்களில் 8 பேர்தான் உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். மற்றொரு தொழிலாளி ஒரு மாதத்திற்கு பின்னர்தான் வேலையில் அமர்த்தப்படுவார். எஞ்சிய ஏழு பேரின் விதி ஹரியானா தொழிலாளர் நலத்துறை விசாரணை நடத்தியபின்தான் முடிவு செய்யப்படும்.

தேசியத் தலைநகரான டெல்லியில் இருந்து சற்று தூரத்தில்தான் உள்ளகுர்காம்-மனேசர் பகுதியில் இருக்கும் தொழிலாளர்கள் அடிக்கடி தொழிலாளர்நலத் துறை மிகக் குறைந்தபட்ச தொழிலாளர் தரங்களைக் கூட செயல்படுத்துவதில்லை என்றும், இல்லாவிடின் முதலாளிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் குறைகூறியுள்ளனர்.

இந்த உடன்பாட்டை ஒட்டி தொழிலாளர்கள் செப்டம்பர் 21ல், அவர்கள் பணிக்கு வராத நாட்களில் இருந்து ஒன்றரை மாத காலத்திற்கு எந்த ஊதியமும் பெற மாட்டார்கள்; ஆனால் பொதுவாக இந்தியாவில் மிகக் குறைவான அல்லது ஒன்றும் கிடையாது என்ற நிலையில் வேலைநிறுத்த சம்பளம் இருந்தாலும், பொதுவாக உடன்பாடுகளில் வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஏதேனும் தொகை கொடுக்கப்படுவது உண்டு.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாய்களை (சுமார் அமெரிக்க 20,000 டாலர்) யாதவின் விதவைக்கு இழப்பீடாக கொடுக்க ரிக்கோ ஒப்புக் கொண்டுள்ளது: இதைத்தவிர அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலை கொடுக்கவும் முன்வந்துள்ளது.

நவம்பர் 4ம் தேதி போலீஸ் AITUC பொதுச் செயலாளரும் சிறிமி யின் இந்திய பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரு பிரதிநிதியுமான குருதாஸ் தாஸ்குப்தாவை வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்த ரிக்கோத் தொழிலாளர்களிடம் பேச வருகையில் கைது செய்தது. ஒரு சில மணி நேரத்திற்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார்; ஆனால் குர்காம்-மனேசர் பகுதியை விட்டு நீங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டார். ரிக்கோ வேலைநிறுத்தத்தை பொறுத்தவரை தாஸ்குப்தா கைது செய்யப்படுவது இரண்டாம் முறையாகும். அக்டோபர் 1ம் தேதி அவர் AITUC தேசியச் செயலாளர் H.L. Sachdev உடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கைதுகள் கார் முதலாளிகளின் நலன்களைப் பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் அரசாங்கத்தின் தீவிர விரோதத்தைப் பெறும் என்பதை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன.

ஸ்ராலினிச சிறிமி பல தசாப்தங்களாக இந்தியநடை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் செயல்பட்டு வந்துள்ளது. இடது முன்னணியின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்று என்ற விதத்தில் தாஸ்குப்தாவும் மற்ற சிறிமி எம்.பி.க்களும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கு மே 2004ல் இருந்து ஜூன் 2008 வரை பாராளுமன்ற பெரும்பான்மைக்கு உதவியது; அப்பொழுது ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்தி வந்தது.

ஆயினும்கூட, காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஹரியானா அரசாங்கம் தொழிலாளர்களின் அதிருப்தி எந்த விதத்திலும் அடக்கப்பட வேண்டும் என்ற அதன் ஒருங்கிணைந்த உந்துதலின் பகுதியாக CPI/AITUC தலைவர்களை கடுமையாகச் சாடுகிறது.

தங்கள் பங்கிற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் நவம்பர் 4ம் தேதி தாஸ் குப்தா கைது செய்யப்பட்டதற்கு விடையிறுக்கும் வகையில் AITUC, CPI இரண்டும் ரிக்கோ வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு வழிவகைகளை நாடுவதாக அறிவித்துள்ளனர்--அதாவது குர்காம்-மனேசர் தொழில் பகுதியில் பெருகி வரும் தொழிலாளர் எழுச்சியை அடக்குவதற்கு தாங்கள் அரசாங்கம், கார்த்தயாரிப்பு முதலாளிகள் ஆகியோரின் பங்காளியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சிறிமி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், தாஸ்குப்தா கைது "முறையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் அடாவடித்தன குறுக்கீடு" என்று கூறி, பின் வேலைநிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். "சூழ்நிலை உடன்பாட்டிற்கு சிறந்ததாக உள்ளது" என்று பரதன் அறிவித்தார்.

தாஸ்குப்தா விடுவிக்கப்பட்ட பின்னரும், ரிக்கோ நிர்வாகம் அவருடனும் மற்ற AITUC தலைவர்களுடனும் பேச மறுத்து நேரடியாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஆலைத் தொழிற்சங்கத் தலைவர்களுடன்தான் பேச முடியும் என்றும் கூறிவிட்டது. ஆனால் திரைக்குப் பின்னால் AITUC மற்றும் சிறிமி அதிகாரிகள் உடன்பாட்டிற்கு அதிகம் வலியுறுத்தினர்.

AITUC இன் தேசிய செயலாளர் சச்தேவ், "நாங்கள் அவர்களுடன் [ஆலைத் தொழிற்சங்க தலைவர்களுடன்] தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்; ரிக்கோ நிர்வாகம், தொழிலாளர்நலத் துறை அதிகாரிகளுடன் நடத்தும் விவாதங்களுக்கு உதவியளித்து, வழிகாட்டுகிறோம்" என்று பீற்றிக் கொண்டார்.

ஐயத்திற்கு இடமின்றி, இந்தியாவின் ஆளும் உயரடுக்கு ரிக்கோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முடிவு பற்றி கூட்டாக ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. குர்காம்-மனேசர் பகுதியில் சீற்றம் மிகுந்த தொழிலாளர்களின் அதிருப்தியை தெரிவிக்கும் ஒரு குவிப்பாக அது வந்துவிட்டது மட்டும் இல்லாமல், ரிக்கோவின் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது, இரண்டு போர்ட் ஆலைகள், கனடா மற்றும் அமெரிக்காவில் இருப்பவை, தற்காலிகமாக மூடப்படுவதற்கும் ஒரு நிவி ஆலை அமெரிக்காவில் மூடப்படவும் வகை செய்தது இதையொட்டி இந்தியாவின் பெருநிறுவன முதலாளிகள் மற்றும் அரசியல் வாதிகள் நாட்டை குறைவூதியத் தொகுப்பு கொண்ட உலகக் கார்த் தொழிலில் தயாரிப்பாளர்கள் என்ற நற்பெயரை வளர்க்கும் முயற்சியில் கீழறுப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 21ம் தேதி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது: "ரிக்கோ வேலைநிறுத்தம் இந்தியா மிக விரைவில் உற்பத்தித் துறையில் ஏற்றம் பெற்றது பற்றி மற்றொரு காட்சியைக் கொடுக்கிறது. தொழிலாளர் அமைதியின்மை இந்தியாவில் விரைவில் வெடிக்கக்கூடும்; அது நிறுவனங்களுக்கு அதிருப்தி அடைந்துள்ள ஊழியர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவோ, வேலைநிறுத்தத்தை முடிக்கவோ அதிக அவகாசம் கொடுக்காது. தொழிலாளர் பிரச்சினைகள், குறிப்பாக செல்வம் கொழிக்கும் இந்தியாவின் கார்த்தொழில் துறையில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் உற்பத்தியை தடுக்கக் கூடிய விதத்தில் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தால் ஆலை செயற்பாடுகள் வேறு நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவது பரிசீலிக்கப்படும் என்ற எச்சரிக்கைகளைக் கூற வைத்துள்ளன."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved