World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan rocked by protests after opposition leaders stripped of political rights

எதிர்க்கட்சித் தலைவர்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டபின், பாக்கிஸ்தான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அதிர்ந்தது

By Keith Jones
28 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

பாக்கிஸ்தானிலுள்ள பல நகரங்களில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், கடந்த மூன்று நாட்களாக புதனன்று அந்நாட்டு தலைமை நீதிமன்றம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவருடைய சகோதரர் ஷபாஷ் ஷெரிப் இருவரும் தேர்தலில் நிற்கவோ, பொதுப் பதவிகளை வகிக்கவோ முடியாது என்று கொடுத்த தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷெரிப்புக்கள்தான் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), PML(N) உடைய முக்கிய தலைவர்கள் ஆவர்.

செய்தி ஊடகத் தகவல்களின்படி PML(N) நடவடிக்கையாளர்களுக்கும் போலீசுக்கும் இடையே பல வன்முறை மோதல்கள் நிகழ்ந்துள்ளன; முந்தையவர்கள் பெரும்பாலோர் வணிகர்கள், தொழில்முறை வேலை மற்றும் போலீஸ் வேலை பார்க்கும் குடும்பங்களில் இருந்து வருபவர்கள். பாக்கிஸ்தான் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தை கொண்டுள்ள பஞ்சாபில் துணை இராணுவத் துருப்புக்கள் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை இப்பொழுது பதவியிழந்துள்ள இராணுவ சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரஃப் தயாரித்திருந்த குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் ஷெரிப்பிற்கு எதிராக கொடுக்கப்பட்டது; அக்டோபர் 1999 ல் இராணுவ ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் நவாப் ஷெரிப் பிரதம மந்திரி பதவியில் இருந்து அகற்றப்பட்டு இக்குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ன.

நீதிமன்ற அமைப்பு முறையே பெரும் சிக்கலுக்கு உட்பட்டது; ஏனெனில் தற்போதைய தலைமை நீதிபதியும் அவருடைய பல தலைமை நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் முஷாரஃப்பால் நாட்டின் அரசியலமைப்பை முற்றிலும் மீறிய வகையில் பதவியில் இருத்தப்பட்டனர். நவம்பர் 2007ல் தன் ஆட்சி கவிழாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முஷாரஃப் நெருக்கடி நிலையை அறிவித்து அவருக்கு விசுவாச உறுதிமொழி எடுக்கத்தயாராக இராத நீதித்துறையின் உயர்மட்ட நீதிபதிகள் அனைவரையும் பதவியை விட்டு நீக்கினார்; அப்படியும் அவர் ஆட்சி பின்னர் கவிழ்ந்தது.

பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைமையிலான கூட்டரசாங்கம், முஷாரஃப் மற்றும் புஷ் நிர்வாகத்தில் அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை அடுத்து ஓராண்டிற்கு முன் அதிகாரத்திற்கு வந்தது, மீண்டும் நீக்கப்பட்ட நீதிபதிகளை பதவியில் இருத்தல் என்ற உறுதிமொழியை கைவிட்டது; இப்படித்தான் அது முஷாரஃப் மற்றும் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக் காலத்தில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்ட பரந்த அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்படும் என்று கூறிய உறுதிமொழியையும் கைவிட்டுள்ளது.

PPPஇன் தலைவரும் படுகொலை செய்யப்பட்டுவிட்ட பெனாசீர் பூட்டோவின் கணவருமான, பாக்கிஸ்தானின் தற்போதைய ஜனதிபதி அசிப் அலி ஜர்தாரி, ஷெரிப்பை பொது வாழ்வில் இருந்து அகற்றும் நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறையின் தன்னாட்சியில் நேர்மையாக விளைந்த ஒரு முடிவு என்று கூறியுள்ளார்.

இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். ஷெரிப்கள் மீதான தாக்குதல் ஒரு ஜனநாயக எதிர்ப்பு அதிகார விளையாட்டு ஆகும்; இதன் நோக்கம் மக்கள் எதிர்ப்புக் கொள்கைகளை செயல்படுத்தும் அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்துதல் ஆகும். அத்தகைய செயற்பாடுகளில் சர்வதேச நிதிய அமைப்பின் மறுகட்டமைப்பு திட்டம் சுமத்தப்படுகிறது; இதில் மிகப் பெரிய குறைப்புக்கள் வளர்ச்சிக்கான செலவினங்களில் செய்யப்படுகின்றன; சக்தி உற்பத்திப் பொருட்களில் உதவித் தொகைகள் நிறுத்தப்படுகின்றன; ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கப் போர் விரிவாக்கத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படுகிறது.

அவருடைய ஆட்சி நீதிமன்றத் தீர்ப்பை PML(N) க்கு எதிராகப் பயன்படுத்தத்தான் முயற்சி செய்துள்ளது என்பதால் ஜர்தாரியின் கூற்றுக்கள் ஏற்கத்தக்கது அல்ல. தலமை நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களுக்குள் ஒரு இகழ்வுற்ற வகையில் PPP க்கு ஆதரவு கொடுக்கும் பஞ்சாப் கவர்னர் தற்காலிகமாக மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை அரசியலமைப்பு முறையில் கைப்பற்றினார்; நிதிமன்றம் பஞ்சாப் முதல் மந்திரி ஷபாஸ் பதவி வகிக்கக் கூடாது எனத் தீர்ப்பு கூறியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; அதையொட்டி அரசியல் வெற்றிடம் இல்லாமல் இருக்க இந்நடவடிக்கை வந்துள்ளது. PML(N) மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்ட இருக்கிறது என்பதை தேசிய அரசாங்கம் அறிந்தவுடன் ஜனதிபதி ஜர்தாரி தன்னுடைய அவசரக்கால அதிகாரங்களை பயன்படுத்தி சட்டமன்றத்தை தற்காலிகமாக வேலை செய்யாமல் தடுத்து, பாக்கிஸ்தானின் அதிக மக்கள் நிறைந்த மாநிலத்தை "ஜனாதிபதி ஆட்சியின்கீழ்" அதாவது, மத்திய அரசாங்கத்தின் கீழ் அடுத்த இரு மாதங்களுக்கு கொண்டுவந்து விட்டார்.

பஞ்சாப் சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட பாதி இடங்களைக் கொண்டுள்ள PML(N), இவ்விதத்தில் ஒருதலைப்பட்சமாக ஷபாஸ் ஷெரிப்பிற்கு பதிலாக ஒரு மாற்றீட்டு முதல் மந்திரியை நியமித்து சட்ட மன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டது; பல முறையும் சட்டமன்றத்தின் "நம்பிக்கையை கொண்டிருப்பதை" காட்டியிருந்த இதன் அரசாங்கம் இப்பொழுது ஜனாதிபதி ஆணையால் அகற்றப்பட்டுவிட்டது.

இதற்கு மறுநாள் PPP தலைமையானது ஜனாதிபதி ஆட்சி திரும்பப் பெற்ற பின்னர், அது PML(N) -ஐ பஞ்சாப் அரசாங்கமாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவித்தது. இந்த இலக்கை அடைவதற்கு இது இப்பொழுது சட்ட மன்ற உறுப்பினர்களை PML(Q) என்னும் முஷாரஃப் மற்றும் இராணுவம் தோற்றுவித்த கட்சியின் ஆதரவை நாடுகிறது; இது இராணுவ ஆட்சிக்கு ஒரு பாராளமன்ற மூடி மறைப்பைக் கொடுத்திருந்தது.

நவம்பர் 2007 களையெடுப்பின்போது முஷாரஃப்பால் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்ட அப்துல் ஹமித் டோகரை பதவியில் தொடர்ந்து வைத்திருப்பது என்ற முடிவிற்கு உடன்பட்டால், தன்மீதும் தன்னுடைய சகோதரர் மீதும் இருக்கும் நீதிமன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று ஜர்தாரி கூறியதாக நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.

புதன்கிழமையன்று நிருபர்களிடம் பேசிய நவாஸ் ஷெரிப் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் எதிரான தீர்ப்பு "ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அல்ல-- ஆணை" என்றார்; அதாவது ஜர்தாரி பிறப்பித்த ஆணை என்றார். "இது என்னை முதுகில் குத்துவதற்கு ஒப்பாகும்" என்று ஷெரிப் தொடர்ந்து கூறினார்.

செவ்வாயன்று ஷேகுபுராவில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் பேசிய ஷெரிப் ஜர்தாரி "நாட்டை ஏமாற்றிவிட்டார்" என்றும், "அவர் கொடுத்த உறுதிமொழிகளை" காப்பாற்றவில்லை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பிலும் அவர் போலீசாரை தற்போதைய பஞ்சாப் அரசாங்கத்திற்கு கீழ்ப்படியாமல் இருக்குமாறு வலியுறுத்தியதுடன், அடுத்த மாதம் வழக்கறிஞர்கள் நடத்த இருக்கும் எதிர்ப்பிற்கு தன் கட்சி ஆதரவு திரட்டும் என்று உறுதியளித்தார்; அனைத்து நீக்கப்பட்ட நீதிபதிகளும் மறுபடியும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று வக்கீல்கள் போராட உள்ளனர்.

பாக்கிஸ்தானின் மிகப் பெரிய ஆங்கிலமொழி நாளேடான Dawn நீதிமன்ற தீர்ப்பை இடித்துரைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு "பாக்கிஸ்தானின் கடினமான நீதித்துறை வரலாற்றில்.... இது மற்றொரு சந்தேகத்திற்கு உரிய தீர்ப்பு ஆகும்." என்று அது அறிவித்துள்ளது; பல நேரங்களிலும் நீதித்துறை நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தெளிவாக மீறப்படும் வகையில் தீர்ப்புக்களை நிர்வாகத்திற்கும் இராணுவத்திற்கும் ஆதரவாகக் கொடுத்துள்ளது." டான் மேலும் கூறியது: "ஷெரிப் பதவிநீக்கத்திற்கான அடிப்படைக் கருத்துக்கள் ஒரு சர்வாதிகாரியால் முன்வைக்கப்பட்டன; சிறிது பொது அறிவு இருப்பவர்கூட பர்வேஸ் முஸாரஃப் ஷரிப் சகோதரர்களை தேர்தல் அரசியலில் இருந்து அகற்றுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சி அல்லது நீதித்துறையின் உயர்ந்த கொள்கைகளை நிலைநிறுத்த முயற்சித்தார் என்று ஏற்கமாட்டார்கள்."

சிந்தில் இருந்து தலைமையைக் கொண்டுள்ள PPP, பஞ்சாப்பில் தளத்தைக் கொண்டுள்ள PML(N) இரண்டும் நீண்டகாலமாக கடுமையான போட்டிக் கட்சிகள் ஆகும். 1980, 1990 களில் ஷெரிப் பலமுறையும் இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்துடன் PPP க்கு எதிராக ஒத்துழைத்துள்ளார்; அப்பொழுது அது பாக்கிஸ்தானிய நடைமுறையினால் நம்பிக்கை கொள்ளப்படவில்லை; ஏனெனில் இது மக்களைத் திருப்தி செய்யும் அலங்காரச் சொற்களைக் கூறியது; மேலும் 1960களின் கடைசிப்பகுதியில் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியிலும் தொடர்பு கொண்டிருந்தது.

1999 முஷாரஃப் ஆட்சி மாற்றம் செய்ததை பெனாசீர் பூட்டோ ஆரம்பத்தில் வரவேற்றார்

2006ம் ஆண்டு இரு கட்சிகளும் ஒரு அதிக உறுதியற்ற "முஷாரஃப் எதிர்ப்பு" கூட்டணியை அமைத்தன. பாக்கிஸ்தானில் அரசியல் அதிகாரத்தை செலுத்துபவர்களின் சலுகையான தளத்தைக் கொண்டு பிறருக்கு நிறைந்த செல்வம் தரும் பணிகள் பலவும் தங்களைவிட்டு அகன்றது இரு கட்சிகளையும் ஒன்றாகச் சேர்த்தது; இதைத்தவிர, அவர்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் கொண்டிருந்த உண்மையான எதிர்ப்பையும் பொதுவாக எதிர்த்தனர். மக்கள் இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டைவிட்டு மீறிவிடும் மற்றும் பாக்கிஸ்தானின் உழைக்கும் மக்களுடைய சமூக பொருளாதாரக் குறைபாடுகள் வெளிவரும் என்ற அச்சத்தை இரண்டும் கொண்டிருந்தன.

2007 ல் புஷ் நிர்வாகம் முஷாரஃப் ஆட்சி அதன் வெட்கம் கெட்டதனமான போலி முதலாளித்துவம், அரசியல் அடக்குமுறை மற்றும் கொள்ளை முறைப் போர்களை ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நடத்திவரும் வாஷிங்டனுக்கு தாழ்ந்து நின்ற நிலை ஆகியவற்றால் பெருகிய முறையில் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுவிட்டது, அத்துடன் பொருளாதாரப் பிரச்சினைகள் பெருகியது இதற்குக் காரணம் என்று அறிந்த விதத்தில், PPP உடன் ஒரு சமரசம் செய்து கொள்ளுவதற்கு தன்னால் இயன்றதைச் செய்தது.

பூட்டோ இதற்கு உடந்தையாக இருக்க விரும்பியதை புஷ் நிர்வாகம் கண்டது. ஒரு வலதுசாரி தொழில்துறை அதிபரான ஷெரிப் செளதி அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார்; அவருக்கு ஏமாற்றம் தரும் வகையில் தான் தனிமனிதனாக ஒதுக்கப்பட்டதை அறிந்தார். வாஷிங்டன் அவரை எச்சரிக்கையுடன் கவனித்தது; ஏனெனில் முஷாரஃப் மீது அவர் தீவிர விரோதம் கொண்டிருந்தார்; அவர் இவரை தூக்கில்கூட போட விரும்பினார் --அதற்குக் காரணம் இவருடைய தொடர்பு இஸ்லாமிய அடிப்படைவாத வலதுடன் இருந்தது (அதன் பிரிவுகள் பல தாலிபனுக்கு பரிவுணர்வு காட்டுபவை ஆகும்.)

இறுதியில் PPP புஷ் நிர்வாகத்தின் இயக்கத்தின்படி சர்வாதிகாரி முஷாரஃப்புடன் உடன்பாட்டை கொண்டது; அதன்படி அக்கட்சி அவர் மீண்டும் ஜனாதிபதியாக "மறு தேர்தலில்" வருமாறும் அதற்கு ஈடாக ஜனாதிபதி உத்தரவு ஒன்று பூட்டோ இன்னும் பல உயர்மட்ட PPP தலைவர்கள் பதவியில் இருந்தபோது செய்திருந்த எந்தக் குற்றமும் செல்லுபடியாகாது என்ற உத்தரவு வெளியிடப்பட்டது. இது பூட்டோ பாக்கிஸ்தானுக்கு மீண்டும் திரும்பிவர வழிவகுத்தது; அவர் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பெற முடியும் என ஆயிற்று.

ஆனால் தேசிய இணக்க சட்டம் (National Reconciliation Ordinance) ஷெரிப்புக்களுக்கு விரிவாக்கப்படவில்லை.

முஷாரஃப்- பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உடன்பாடு எதிர்கொண்ட இடர்பாடுகள் அனைத்தையும் கூற இது இடமில்லை; அந்த உடன்பாடு கடுமையான விதத்தில் மக்களால் எதிர்க்கப்பட்டது; அதேபோல் ஆட்சியிலும் அதைச் சுற்றியிருந்த கூறுபாடுகளும் அதைத் தகர்க்க முயன்றவிதத்தில், உண்மையாகவே பூட்டோவின் படுகொலையும் நிகழ்ந்தது.

பெப்ருவரி 2008 தேர்தலில் மற்ற கட்சிகள் முஷாரஃப்பை எதிர்த்து வெற்றிபெற்ற பின்னரும்கூட ஜர்தாரி அவருக்கு நேரடி அறைகூவலைக் கொடுக்கவில்லை, வாஷிங்டனை கோபத்திற்கு உட்படுத்தவும் விரும்பவில்லை. டிசம்பர் 2008ல் பாக்கிஸ்தானின் படைகளின் தலைவர் பதவியைக் கைவிட்ட தளபதி, கடந்த ஆகஸ்ட்டில்தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார்; அப்பொழுது ஜர்தாரி PPP யின் குறைந்து கொண்டிருக்கும் மக்கள் நம்பகத்தன்மையை மீட்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று உணர்ந்தார்; ஏனெனில் PPP தலைவர் இப்பொழுது பக்கிஸ்தானின் புதிய "வலுவான மனிதர்" என்று வாஷிங்டன் பார்வையில் தளபதிக்கு பதிலாக கருதப்பட விரும்பினார்.

ஆனால் முஷாரஃப் முழு சுதந்திரமாக இருக்கிறார். அவரையோ அவருக்கு நெருக்கமானவர்கள் எவருமோ எட்டு ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் குற்றங்களுக்கு பொறுப்பு கூறுமாறு அழைக்கப்படவில்லை. இன்னும் முக்கியமான விதத்தில், PPP தலைமையிலான அரசாங்கம் பாக்கிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் இராணுவம் கொண்டிருக்கும் இரும்புப் பிடியை உடைக்க எதுவும் செய்யவில்லை; பல தசாப்தங்களாக பாக்கிஸ்தான் வாஷிங்டனுடன் கொண்டுள்ள தாழ்ந்த நிலை உறவுகளை மாற்றவும் முயலவில்லை; இந்த உறவுதான் இப்பொழுது பென்டகன்-பாக்கிஸ்தான் இராணுவ அச்சில் உயர்ந்த வெளிப்பாடாக இருக்கிறது.

ஷெரிப்பும் அவருடைய PML(N) உறுப்பினர்களும் இதற்கிடையில் ஜர்தாரிக்கும் அவருடைய PPP க்கும் மக்களிடையே விரைவில் ஆதரவு சரிந்துவிட்டதை பயன்படுத்திக் கொள்ள முற்பட்டு, பாக்கிஸ்தானின் மரபார்ந்த வலதுசாரி, இராணுவ சார்புடைய கட்சியை ஜனநாயகக் காவலர் என்ற முறையில் காட்டிக் கொள்ள விரும்புகின்றார்.

பணிநீக்கப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் இருத்தப்பட வேண்டும் என்பதை ஷெரிப் தன்னுடைய முக்கிய பணியாகக் கொண்டார்; நீக்கப்பட்ட நீதிபதிகள் சர்வாதிகாரி முஷாரஃப்பிற்கு எதிராகத் துணிந்து நின்றனர் என்பது அவருடைய கருத்து. உண்மையில் எல்லா நீதிபதிகளும் பல ஆண்டுகளாக முஷாரஃப் சர்வாதிகாரத்திற்கு துணை நின்ற, பெரும்பாலான பாக்கிஸ்தானிய மக்களை வறுமையிலும் இடுக்கண்களிலும் தள்ளிவிட்ட சமத்துவமற்ற சமூக ஒழுங்கிற்குத்தான் ஆதரவைக் கொடுத்து வந்துள்ளனர்.

ஜர்தாரி நீதிபதிகளை பழைய பதவியில் அமர்த்த எதிர்ப்புக் காட்டியுள்ளார் என்றால் அது தந்திர உத்தி நிலைப்பாட்டிற்காக என்று உள்ளது. இந்த நீதிபதிகளை அவர் விரும்பவில்லை, குறிப்பாக தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை ஆகும். இராணுவத்திற்கு பிரச்சினை கொடுக்கும் வகையில் செளத்ரி முஷாரஃப் எடுத்த நடவடிக்கைகளை, குறிப்பாக முஷாரஃப் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் எடுத்த National Reconciliation Ordinance உடைய சட்டத்தன்மை பற்றிய பிரச்சினை உள்பட பல நடவடிகைக்களை நீதித்துறையின் பரிசீலலனைக்கு உட்படுத்தினார்.

பாக்கிஸ்தானில் அரசியல் நெருக்கடி வெடித்துள்ளது பற்றி ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாக ஏதும் கூறவில்லை. அமெரிக்க உயரடுக்கு பல முறையும் பாக்கிஸ்தானிய மக்களுடைய ஜனநாயக உரிமைகள் பற்றி இழிந்த பொருட்படுத்தா தன்மையைத்தான் காட்டியுள்ளது. அரசாங்கம் மற்றும்/அல்லது இராணுவம் அமெரிக்க நலன்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் மக்களுடைய எதிர்ப்பை தூண்டிவிட்டால்தான் அல்லது இஸ்லாமாபாத் போதுமான அளவிற்கு வளைந்து கொடுக்கவில்லை என்று நினைத்தால்தான் அது தன்னுடைய கவலையை பொதுவாக வெளிப்படுத்தும்.

உதாரணத்திற்கு நியூ யோர்க் டைம்ஸ் முஷாரஃப் ஆட்சியில் இருந்து வாஷிங்டன் கொடுக்கும் பணத்திற்கு உரிய பங்கைப் பெறுகிறதா என்று வினவியபோதுதான், அமெரிக்கா பாக்கிஸ்தானில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்பதை "கண்டுபிடித்தது": அதாவது புஷ் நிர்வாகத்தில் இருந்து அது பெறும் $10 பில்லியன் உதவி, மற்றும் தொகைகளுக்கு ஈடாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இஸ்லாமாபாத் போதுமான ஆதரவைக் கொடுத்து வருகிறதா என அறிவதாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்ளை சுற்றி பாக்கிஸ்தான் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்த வாரம் உயர்மட்ட பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிய அதிகாரிகள் வாஷிங்டனுக்கு சென்று, ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானின் எல்லைப் பகுதிகளுக்குள் போர் விரிவாக்கம் பற்றிய பென்டகன் திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.