World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-China trade tensions set to escalate

அமெரிக்கா-சீனா வர்த்தக பதட்டங்கள் அதிகரிக்கின்றது

By John Chan
3 February 2009

Back to screen version

ஆரம்பத்திலிருந்தே, ஒபாமா நிர்வாகம் பெய்ஜீங்கிற்கு ஒரு எதிரிடையான அணுகுமுறையைக் காட்டி வருகிறது. கடந்த மாதம், கருவூல செயலாளர் பதவிக்கான ஒபாமாவின் வேட்பாளர் திமோதி கெயித்னர் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் முன் கையொப்பமிடுகையில், சீனா அதன் வெளிநாட்டு போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக அதன் யுவான் அல்லது ரென்மின்பி நாணயத்தை செயற்கையாக பலவீனப்படுத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். கெயித்னரின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டிற்கு காங்கிரசின் வலுவான ஆதரவை வெளிக்காட்டும் வகையில், ஜனவரி 26 இல், 60 க்கு 34 என்ற வாக்கு வித்தியாசத்தில் செனட் அவரின் நியமனத்தை உறுதி செய்தது.

ஏப்ரலில் வரவிருக்கும் ஒரு சர்வதேச நாணய அறிக்கையில் சீனா ஒரு நாணய மோசடியாளர் என்று கெயித்னர் குறிப்பிட்டால், யுவான் மீதான பெய்ஜிங்கின் இறுக்கமான கட்டுப்பாட்டை அது தளர்த்த வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்துவதை அவ்வறிக்கை அனுமதிக்கும். பெய்ஜிங் அவ்வாறு செய்ய தவறினால், வாஷிங்டன் சீனாவிற்கு எதிராக அபராத கட்டணங்களையும், பிற முறைமைகளையும் அறிமுகப்படுத்த கூடும். இது ஒரு முழு அளவிலான வர்த்தக யுத்தத்திற்கு இட்டு செல்லுவதற்கான சாத்தியமுள்ளது.

ஆத்திரமூட்டும் அமெரிக்க நிலைப்பாட்டின் மீது சர்வதேச கண்டனங்கள் உருவாகி வரும் நிலையில், பதட்டங்களைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாக ஒபாமா கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி ஹூ ஜிண்டோவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அமெரிக்க-சீனா உறவுகளின் முக்கியத்துவம் குறித்த சிநேகிதபூர்வமான பேச்சுவார்த்தையாக இருந்ததாக செய்திகள் தெரிவித்தபோதிலும், உலகளாவிய சமமின்மையைச் சரி செய்வதற்கான தேவையை ஒபாமா வலியுறுத்தினார். இது சீனாவுடன் பெரியளவில் அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை இருப்பதையே குறிப்பிட்டு காட்டுகிறது. இதற்கு பதிலாக, ஹூ வர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான தேவை இருப்பதை வலியுறுத்தினார். இது அமெரிக்காவிற்கு நேரடியாக விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிராச்சாரத்தின் போது, ஒபாமா பின்வருமாறு அவரின் சீன கொள்கை அறிக்கையை அறிவித்திருந்தார்: "சீனாவுடனான நமது பொருளாதார உறவுகளின் எவ்வித மறுசமப்படுத்தலின் மத்தியில் அதன் நாணய நடைமுறையை மாற்றுவதாக இருக்க வேண்டும். ஏனெனில், அது அதன் நாணயத்தை செயற்கையாக குறைந்த விகிதத்தில் வைத்திருப்பதனூடாக தற்போது பாரியளவு உபரி நிதிய கையிருப்புகளை கொண்டுள்ளது. இது அமெரிக்க நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நல்லதல்ல, உலகிற்கும் நல்லதல்ல. மேலும் இது இறுதியாக சீனாவிலேயே பணவீக்க பிரச்சனையை உருவாக்க கூடும்." என்றார்.

ஒரு கடுமையான வெளிநாட்டு கொள்கையை முன்வைத்ததற்கு அப்பாற்பட்டு, சர்வதேச போட்டியையும், அதனோடு தொடர்புடைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் பாதிப்பிற்கு உட்படுத்தக் கூடிய எஃகு துறை, வாகனத்துறை மற்றும் ஜவுளித்துறை போன்ற தொழில்துறைகளில் அமெரிக்க நிறுவனங்களால் மிக குறைவாகவே போட்டியிட முடியும் என்ற அச்சத்தின் ஒரு பகுதியையே ஒபாமாவின் பாதுகாப்புவாதம் பிரதிபலிக்கிறது. ஒபாமாவிற்கு எதிரான குடியரசு கட்சி போட்டியாளர் ஜோன் மெக்கெயின், சீனாவின் நாணயம் மீதான ஒரு நேரடி எதிர்ப்பைத் தவிர்க்கும், முக்கியமாக சீனாவில் அமெரிக்க வியாபார நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தில் புஷ் நிர்வாக கொள்கையுடன் பெருமளவில் ஒத்திருந்தார்.

பரந்த "விட்டுக்கொடுக்ககூடிய" செலாவணி விகிதங்களுக்கு புஷ் நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தால், சீனா அதன் தசாப்த காலமாக இருந்து வந்த யுவான்-டாலர் கட்டுப்பாட்டை 2005ல் முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் சீனாவின் ஏற்றுமதி போட்டியைத் தக்க வைக்க நாணயம் மீதான அதன் கடுமையான கட்டுப்பாட்டை தொடர்ந்தது. அதே நேரத்தில், சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டு கேள்விப்பத்திரங்களின் பொறிவுக்கு முன்னரே கூட, கடந்த மூன்று ஆண்டில் 20 சதவீத யுவானின் படிப்படியான மறுமதிப்பீடானது, சீன ஏற்றுமதியாளர்களிடையே பாரியளவில் அழுத்தத்தை உருவாக்கியது. அதிகரித்து வரும் வேலை இழப்புகள் மற்றும் சமூக பதட்டங்களுக்கு இடையிலும், யுவானை மறுமதிப்பீடு செய்ய கோரி சீனாவிற்குள் அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. கடந்த நவம்பரின் போது, சீனாவிலிருந்த 20 மில்லியன் இடம்பெயர்ந்து வந்துள்ள புறநகர் தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழந்தார்கள். 2009 இல் மேலும் 40 முதல் 50 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் என புதிய கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இவை மில்லியன்கணக்கான வேலையில்லா நகர்புற தொழிலாளர்களை இணைத்துகொள்ளாத புள்ளிவிபரங்களாகும்.

கடந்த வியாழனன்று டாவோசில் நடந்த உலக பொருளாதார பேரவையில், சீன பிரதம மந்திரி வென் ஜியாபோ பேசுகையில், "குருட்டுத்தனமான இலாப நோக்கத்தில் நிதி நிறுவனங்களின் அளவுக்கதிகமான விரிவாக்கமும்", "நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தை அமைப்புகளிடையே கட்டுப்பாடின்மை" ஆகியவற்றிற்காக தற்போதைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டினார். ஒபாமா நிர்வாகத்தின் பெயரை குறிப்பிடாத போதினும், "பாதுகாப்புவாதம் நெருக்கடியை மேலும் மோசமாக்குவதும், நீடிக்க செய்வதுமல்லாமல் அதனால் வேறெந்த பயனும் இல்லை" என்று வென் அறிவித்தார்.

சீனாவை ஒரு நாணய மோசடியாளராக பட்டியலிடுவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அந்த மாநாட்டில் இருந்த முன்னணி பொருளாதார வல்லுனர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்கள். மோர்கன் ஸ்டேன்லியின் ஆசிய தலைவரான ஸ்டீபன் ரோச் பின்வருமாறு கூறினார்: "ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருந்தும் மந்தநிலைக்குள் நுழையும் ஒரு பொருளாதாரத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அதுவொரு பொருளாதார தற்கொலையாக இருக்கும்." உண்மையில் சீன பொருளாதாரம் கடந்த காலாண்டிலும், தற்போதைய காலாண்டிலும் முரண்பாடாக இருப்பதாக ரோச் குறிப்பிட்டார். சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் மீது வர்த்தக தடைகளை விதிக்கும் அச்சுறுத்தல்களைக் கொண்ட சுமார் 45 மசோதாக்கள் அமெரிக்க காங்கிரசில், முக்கியமாக ஜனநாயக கட்சியினரால் கொண்டு வரப்பட்டிருப்பதாக அவர் எடுத்துக்காட்டினார்.

அமெரிக்க-சீன பதட்டங்கள், டாலருக்கு பேரழிவு பொறிவை ஏற்படுத்தும் வகையில், பெய்ஜிங் 1 டிரில்லியன் டாலருக்கும் மேலான அதன் அமெரிக்க சொத்துக்களை இல்லாதுசெய்துவிடக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனா ஒரு நாணய மோசடியாளர் என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம் கெயித்னர் நெருப்புடன் விளையாடுகிறார் என்று ஜனவரி 26 இல் வெளியான Financial Times இன் ஒரு தலையங்கம் குறிப்பிட்டது. "அது சீனா அதன் செலாவணி பரிமாற்ற விகிதம் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு நிர்வாகத்தில் ஒரு திடீர் மாற்றத்தைக் கொண்டு வருமாறு தூண்டிவிடக்கூடும். அமெரிக்காவிற்கு மட்டும் உடமையான பங்குகள் தக்க வைப்பதற்கான அதன் விருப்பமும் இதில் உள்ளடங்க கூடும்" என்று குறிப்பிட்டது. Bloomberg வலைத்தளம் எச்சரித்ததாவது: "மிக பெருமளவில் அமெரிக்க அரசாங்க கடன் வைத்திருப்பவருடன் ஒரு வர்த்தக யுத்தத்தின் அபாயங்களை கெயித்னர் வலியுறுத்தவில்லை என்பதை நம்ப கடினமாக உள்ளது. மந்தநிலை தொடர்பான ஒரு பெரிய வல்லுனரான மத்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னான்கே வளர்ச்சியைத் தடுக்கும் கொள்கைகளுக்கு எதிராக நிச்சயம் அறிவுறுத்த வேண்டும்."

முக்கியமாக, ஜனவரி 26 இல் வெளியான வோல் ஸ்டீரீட் ஜெர்னல் சீனாவின் செலாவணி முறைக்கு சாதகமாக பின்வருமாறு குறிப்பிட்டது: "டாலர்-யுவான் முறை [1994 இல் உருவாக்கப்பட்டது] சீனாவில் ஒரு உண்மையான பண முறை உருவாக அனுமதித்தது. மேலும் பசிபிக் முழுவதும் ஒரே பொருளாதார நீட்சியையும் உருவாக்கியது. நீண்ட காலத்திற்கு முன்னர், அந்த பிராந்தியம் முழுவதும் ஸ்டான்போர்டு பொருளாதார நிபுணர் ரோனால்டு மெக்கென்னன் அழைப்பது போன்ற ''கிழக்கு ஆசிய டாலர் தரநிலை என்பது கடைபிடிக்கப்பட்டு வந்தது. நாணய 'மோசடிக்கு' எதிராக, இந்த டாலர் தரநிலை கட்டுப்பாடற்ற வர்த்தகம் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கு வெற்றி அளித்தது. ஆனால் அமெரிக்க பொருளியலாளர்கள் இதன் தகமையை கண்டுகொள்ளவில்லை".

பெரும்பாலான ஆசிய நாடுகள், ஏற்றுமதி போட்டியைச் சமாளிக்க அமெரிக்க டாலருக்கு எதிராக தங்களின் நாணயத்தை நிர்ணயித்திருந்தார்கள். தற்போதைய மந்தநிலைக்கு முன்னர் இருந்த வளர்ச்சியை நினைவுபடுத்தி பார்க்கையில், மலிவு விலை ஏற்றுமதிகளிலிருந்து அமெரிக்க வாடிக்கையாளர்கள் "பயனடைவதுடன்", முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் "பெருமளவிலான உலகின் இலாபத்தையும், வளங்களையும்" குவிக்க சீனா அவற்றிற்கு உதவிய போது, சீனாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை "துல்லியமாக இயற்கையானதாக இருந்தது" என்று வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் குறிப்பிட்டது.

கடன்களால் நடத்தப்படும் பொருளாதார விரிவாக்கம் மற்றும் அதன் பொறிவுகளுக்கு இட்டு செல்லக்கூடிய, குறைந்த வட்டிவிகிதத்துடனான ஓர் எளிய நிதி கொள்கையை கடைபிடித்ததற்காக புஷ் நிர்வாகத்தையும், முன்னாள் மத்திய வங்கிகூட்டமைப்பு தலைவர் அலன் க்ரீன்ஸ்பானையும் அந்த பத்திரிக்கை விமர்சித்தது. இந்த வாதம், பரந்த மற்றும் நிலையில்லாத ஊக மூலதனத்தின் வளர்ச்சியிலிருந்து வோல்ஸ் ஸ்ட்ரீட் நிதி வசதிபடைத்ததட்டு (plutocracy) உருவாகியது மற்றும் இலாபமீட்டியது என்ற உண்மையை சாதாரணமாக மறைக்கிறது. தனது கடுதாசி மாளிகை போன்ற நிதியமைப்புகளுக்கு முக்கிய பாதுகாப்பளித்த சீனாவின் நாணயம் நாட்டினுள் பாய்வதை தடுக்கவிரும்பாத புஷ் நிர்வாகம், சீனாவை ஒரு நாணய மோசடியாளர் என்று பெயரிடுவதற்கான அமெரிக்க காங்கிரசின் அழுத்தத்தையும் எதிர்த்தது.

சீனப்பொருட்களின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி அமெரிக்க நிறுவனங்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது. இது அவர்களின் இலாப விகிதங்களை அதிகரிப்பதுடன், உண்மையான கூலிகளில் வீழ்ச்சி இருந்த போதினும், அமெரிக்க தொழிலாளர்களின் நுகர்வை தற்காலியமாக நிலைநிறுத்துகிறது. மிக முக்கியமாக, சீனாவின் விரிந்து வரும் வர்த்தக உபரிகள் அமெரிக்க கருவூல பங்குகளை வாங்குவதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இது அமெரிக்க வர்த்தகத்திற்கு நிதி உதவியளிப்பதுடன், நிதி பற்றாக்குறையையும் சமப்படுத்துகிறது. சீனா மற்றும் ஜப்பான் மட்டும் ஒரு காலாண்டில் 5.8 டிரில்லியன் டாலரை அமெரிக்க அரசாங்க கடனாக நிலுவையில் வைத்துள்ளன. ஆசியாவிலிருந்து மலிவு கடன் மற்றும் குறைந்த விலை பொருட்களின் வரவானது, மத்திய வங்கிக்கூட்டமைப்பு ஒரு குறைந்த வட்டி விகித கொள்கையை கடைபிடிக்க உதவியது. இதனால், சீனாவில் ஒருபோதும் இல்லாத பெரியளவிலான பற்று மற்றும் கடன் குமிழிகள் உருவாக்கவும், அமெரிக்க நிறுவனங்களால் நடத்தப்படும் தொழில்கள் உட்பட சீனாவில் தொழில்துறைகளுக்கான சந்தையை விரிவாக்கவும் மற்றும் உருவாக்கவும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

கடந்த 30 ஆண்டுகளில் சீனா ஒரு பெரிய மலிவு கூலி தளமாக திறந்துவிடப்பட்டதால், முதலாளித்துவத்தின் இலாப விகித வீழ்ச்சிக்கு இது முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன், குறைந்த கூலிக்கு சம்மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் மேற்கத்திய தொழிலாளர்கள் தள்ளப்பட்டார்கள். பெரும்பாலும் சீனா மற்றும் பிற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களால் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக பயன்படுத்தியதால், கடந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்காவில், நான்கு மில்லியன் உற்பத்தித்துறை வேலைகள் அழிக்கப்பட்டன. இதன் எதிர்புறம் அமெரிக்காவில், பரந்த நிதி சுரண்டல் பரவல் மற்றும் தொழில்துறை வீழ்ச்சி இருந்தது. இது இறுதியில் 2008 இல் வெடிப்புக்கும், மேலும் இதுவரை 2.6 மில்லியன் வேலையிழப்புக்கும் இட்டு சென்றுள்ளது.

தற்போது, அமெரிக்காவின் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மைக்கு சீனாவை பலிக்கடா ஆக்குவதற்காக, வாஷிங்டன் உலக வர்த்தக அமைப்பில் (WTO) பெய்ஜிங்கை தாக்கியுள்ளது. திரைப்படங்கள், மென்பொருள்கள் மற்றும் பிற பொருட்களில் அமெரிக்காவின் அறிசார் சொத்துரிமையை காப்பதற்கான சீனா அதன் உறுதிமொழியை மீறியுள்ளது என்று கடந்த வாரம் உலக வர்த்தக அமைப்பு கண்டித்ததைத் தொடர்ந்து, சீனா மீது ஒரு வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க கூறிக்கொண்டது. டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், சீனா அதன் ஏற்றுமதியை ஊக்குவிக்க, 70 க்கும் மேற்பட்ட சேய் நிறுவனங்களுடன், அவற்றிற்கு "நியாயமற்ற" சலுகைகள் வழங்கி, ஒரு "பிரபல முத்திரை" திட்டத்தைச் செயல்படுத்தியதன் மூலம் சர்வதேச கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை அது மீறியுள்ளதாக அமெரிக்கா சீனாவை குற்றஞ்சாட்டியது.

சீனாவில் படிப்படியாக சரிந்து வரும் பொருளாதாரம் அங்கு ஒரு சமூக வெடிப்பை ஏற்படுத்த கூடும் என்ற அச்சத்தில் சீனாவின் சொந்த பாதுகாப்புவாதம் வேரூன்றியுள்ளது. சுருங்கி வரும் சர்வதேச சந்தையில் சீனாவின் பங்கை விரிவாக்க, சுமார் 3,000 ஏற்றுமதி பொருட்களுக்கு பெய்ஜிங் வரிக்குறைப்பு செய்தது. புறநகர் வருமானம் வீழ்ச்சி அடைவதற்கு இடையில், பெய்ஜிங் விவசாய ஏற்றுமதியையும் தடுக்க உள்ளது. இது பிற நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் பதட்டங்களை அதிகரிக்க கூடும்.

சீன ஆய்வுகளுக்கான பெய்ஜிங் மையத்தின் ஒரு நிபுணரான ரூஸ்செல் லீ மோசஸ், Christian Science Monitor க்கு கடந்த மாதம் கூறுகையில்: "இங்கிருக்கும் தலைமை, வேலைகளைப் பாதுகாக்கவும், ஸ்திரத்தன்மையை தக்கவைக்கவும் என்ன செய்தாலும், உற்பத்தியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் பாரிய அழுத்தத்தின் கீழ் அவர்கள் இருக்கிறார்கள். இந்த 'சீனா முதலில்' என்ற மூலோபாயத்தில் விருப்பம் கொண்டு அதிகாரவர்த்திற்குள் அங்கு சிறிது குரல்கள் எழுகின்றன. ஆனால் அவர்கள் இந்த உதவிக்கான உள்நாட்டு அழுகைகளால் அமுக்கப்படுகிறார்கள்."

இந்த "சீனா முதலில்" என்ற மூலோபாயம், வாஷிங்டன்னின் "அமெரிக்க பொருட்களை வாங்கு" என்ற நகர்வுடன் வெளிப்படையாகவே பெய்ஜிங்கை மோதலுக்கு கொண்டு வரும். 1930களில் போல, முக்கிய முதலாளித்துவ அதிகாரங்களுக்கு இடையிலான வர்த்தக பதட்டங்கள், முழு அளவிலான யுத்தம் உட்பட மிக அபாயமான மோதல் வடிவங்களை தூண்டிவிடுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved