World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

As US, NATO causalities mount

Pentagon to press for more troops in Afghan war

அமெரிக்க, நேட்டோ இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கையில்

பென்டகன் ஆப்கான் போருக்கு கூடுதலான துருப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது

By Jerry White
4 August 2009

Back to screen version

ஆறு அமெரிக்க துருப்புக்கள் கடந்த வார இறுதியில் நடைபெற்ற போர்களில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர். இவர்களுடன் ஒரு பிரெஞ்சு படையினரும், இரு கனேடியர்களும் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 43 அமெரிக்கர்கள் உட்பட 74 நேட்டோ படையினர் கொல்லப்பட்டதுடன் இந்த இறந்தவர் எண்ணிக்கையும் கூடுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஜூலை மாதம் மிக அதிக இறப்பு எண்ணிக்கைகளை கண்டது.

பெரும்பாலான இறப்புக்கள் குறிப்பாக ஹெல்மண்ட் மாநிலத்தில், நாட்டின் தென்புறத்தே நிகழ்ந்தன. இங்கு அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் கடந்த மாதம் ஒரு தாக்குதலை தொடங்கின. அமெரிக்க இறப்புக்களில் மூன்று சனிக்கிழமையன்று காந்தகார் மாநிலத்தில் சாலையோர குண்டுவெடிப்பில் ஏற்பட்டன. அதேபோல், இரு கனேடியர்கள் காந்தகாருக்கு சற்று மேற்கே ரோந்து வந்த போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.

இன்னும் மூன்று அமெரிக்கர்கள் ஞாயிறன்று வார்டக் மாநிலத்தில், தலைநகரமான காபூலுக்கு மேற்கே அவர்கள் சென்றுகொண்டிருந்த வாகன அணிவகுப்பு சாலையோர குண்டு ஒன்றினால் தாக்குதலுக்கு உட்பட்டு, எழுச்சியாளர்களின் சிறு ஆயுத தாக்குதலுக்கு உட்பட்டபோது இறந்து போயினர். சனிக்கிழமை அன்று ஒரு பிரெஞ்சு இராணுவத்தினன் காபூலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்து போனார்.

கடந்த ஆண்டில் இருந்து இந்நாட்டில் தன்னுடைய துருப்புக்களை கிட்டத்தட்ட இருமடங்காக ஆக்கிவிட்ட அமெரிக்கா இன்னும் ஒரு 21,000 துருப்புக்களை அனுப்ப உள்ளது. அது ஆகஸ்ட் 20 அன்று நாடு முழுவதும் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இராணுவ செயற்பாடுகளை தீவிரமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு நடப்பதாக இருந்த இத்தேர்தல், ஆழ்ந்த வெறுப்பிற்குட்டபட்ட, தனிமைப்படுத்தப்பட்ட காபூல் அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் போரில் "ஒரு வேறு கட்டத்திற்கு மாற்றம் ஏற்படும்" என்று தான் நம்புவதாக கடந்த மாதம் ஜனாதிபதி ஒபாமா கூறியிருந்தார். இது பெருகிய முறையில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதில் இருந்து மாற்றத்தை காண்கிறது. அப்போரோ புஷ் நிர்வாகத்தால் நாட்டின் தொலைப் பகுதிகளில் இருக்கும் அல் கொய்தா தலைவர்களை வேட்டையாடத்தான் தொடக்கப்பட்டதாக பெயரளவிற்குக் கூறப்பட்டது. ஆனால் பல மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலும் நீடித்த, இரத்தம்தோய்ந்த கிளர்ச்சி எதிர்நடவடிக்கைகளாக உருவாகிவிட்டது. இதனால் அமெரிக்க தலைமையிலான இராணுவ வன்முறை ஆப்கானிய மக்களுக்கு எதிராகவும் காபூலில் இருக்கும் கைப்பாவை அரசாங்கம் மற்றும் ஆக்கிரமிப்பு படைகளை காப்பாற்றும் நோக்கத்துடனும் தீவிரமான அமெரிக்க இராணுவத்தின் வன்முறை தேவைப்படுகிறது.

பாதுகாப்பு துறைக்கு கொடுக்க இருக்கும் அறிக்கை ஒன்றில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் அனைத்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ள தளபதி ஸ்ரான்லி மக்கிரிஸ்டல், ஒபாமா நிர்வாகத்திடம் கூடுதலான துருப்புக்களை கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தவிர இன்னும் நவீன ஆயுதங்களும் இச்செயற்பாடுகளுக்கு கேட்கப்பட உள்ளன. மக்கிரிஸ்டலுடைய அறிக்கை ஆகஸ்ட் 14 அன்று கொடுக்கப்பட உள்ளது.

CNN இடம் பேசிய, ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி கூற்றின்படி, மக்கிரிஸ்டல் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் நோட்டம் விடுதல் ஆகியவற்றை நடத்த கூடுதல் துருப்புக்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் சாலையோர குண்டுவீச்சிற்கு எதிரான பாதுகாப்பிற்காகவும் நாட உள்ளார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்படை தற்போதைய 150,000 துருப்புக்களில் இருந்து 300,000 க்கும் மேல் இருக்க வேண்டும் எனக் கோர இருப்பதாகவும் தெரிகிறது.

Los Angeles Times க்கு கடந்த வாரம் கொடுத்த பேட்டி ஒன்றில் தளபதி மக்கிரிஸ்டல் அமெரிக்க படைகள் எதிர்கொண்டுள்ள இராணுவ, அரசியல் நெருக்கடிகளை ஒப்புக்கொண்டு இராணுவ மூலோபாயத்தின் மைய நோக்கம் அமெரிக்க இராணுவம் வாடிக்கையாக தாலிபன் என்று குறிப்பிடும் ஆக்கிரமிப்பு-எதிர் சக்திகளுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை இல்லாதொழிப்பதே என்றார்.

"தாலிபன் சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகள் உள்ளன. ஆப்கான் மற்றும் கூட்டணிப் படைகள் வாடிக்கையாக செல்லமுடியாத இடங்கள் உள்ளன. அங்கு எழுச்சியாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதுடன் அவர்களால் ஒரு நிழல் அரசாங்கத்தை சுமத்த முடிகிறது. அவை ஒன்றும் முன்மாதிரி பாதுகாப்பு இடங்கள் இல்லை என்றாலும், எழுச்சி என்பது நாம் சமாளிக்கக்கூடியதை விட அதிகமாகத்தான் உள்ளது. எனவே இத்தகைய இடங்களின் தன்மையை வருங்காலத்தில் சிறிது சிறிதாகக் குறைக்க நாங்கள் விரும்புகிறோம்." என்றார் அவர்.

"பாரம்பரிய எழுச்சி எதிர்ப்பு" மூலோபாயத்திற்கு மாறுவதை விளக்கிய மக்கிரிஸ்ட்டல், "எமது நோக்கம் நமக்கு முக்கிய மக்கள் மையங்கள் இருக்கும் இடங்களில் முதலில் முன்னுரிமை கொடுத்தலாகும். சில சமயம் இவ்விடங்களில் எழுச்சியாளர்களும் அதிகமாக உள்ளனர். ஆனால் மக்களை காப்பதற்கு இது தேவையாகும். எழுச்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மக்கள் அதிகம் இல்லாத இடங்களில் இருந்தால், வெற்றிக்கு தேவையான வசதிகளை அணுகுவது, அதாவது மக்கள் அவர்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே மக்களிடம் இருந்து அவர்களை பிரிக்க முற்படுவோம்" என்றார்.

"மக்களை பாதுகாத்தல் என்பதற்கு பதிலாக" எழுச்சி எதிர் நடவடிக்கைகளாக, பிரித்தானியர்கள் மலேசியாவிலும், அமெரிக்கர்கள் வியட்நாமிலும் எல் சல்வடோரிலும் செய்யப்பட்ட முயற்சிகள் மக்களின் பெரும் பகுதியை அழித்ததுடன் அரசியல் எதிரிகள் அனைவரையும் படுகொலை செய்வதாகவும் இருந்தது. இது ஏற்கனவே ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் கொல்லப்படுகின்றனர். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆப்கானிஸ்தான் உதவிப் பணி (UNAMA) மனித உரிமைகள் பிரிவு நடத்திய ஆய்வின்படி, ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் இறப்புக்கள் 2009ன் முதல் ஆறுமாதத்தில் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

எத்தகைய பிரச்சாரம் திட்டமிடப்படுகிறது என்பதற்கான அடையாளம் ஜூலை 29 நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மூலோபாயங்களுக்கும் சர்வதேச ஆய்வுகளுக்குமான நிறுவனத்தை (Center for Strategic and International Studies) சேர்ந்த ஆன்டனி கார்ட்ஸ்மன் ஆல் கொடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானிற்கு சென்று வந்த பின் அவருடைய கருத்துக்கள் வந்துள்ளன. அங்கு அவர் தளபதி மக்கிரிஸ்டலுடைய மூலோபாய மதிப்பீட்டுக் குழுவிற்கு ஆலோசகராக இருந்தார்.

"சாதாரண எழுச்சி எதிர் நடவடிக்ககளின் வரம்பில் இருந்து தொலைதூரம் நாம் செல்ல வேண்டும். நாம் வெற்றிபெற வேண்டும் என்றால் அமெரிக்க கூடுதலான வளங்களை கொடுக்க வேண்டும். இதன்பொருள் கணிசமான செலவு அதிகரிப்பு; அதன் பொருள் கூடுதலான படைத்துருப்புக்களாகும். இதற்கு பொதுமுயற்சிகளுக்கும் போர்க்கள முயற்சிகளுக்கும் கூடுதல் நிதி தேவை. ஆப்கானிய தேசிய பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக்கப்பட வேண்டும்'' என்றார் கார்ட்ஸ்மன்.

மத்திய ஆசிய நாட்டை எவ்வளவு காலம்தான் அமெரிக்கா ஆக்கிரமிக்கும் என்று நிருபர்கள் கேட்டதற்கு கார்ட்ஸ்மன் "எழுச்சி எதிர் வரலாற்றை படித்தவர்கள் எவரும் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் இதை மாற்றிவிட முடியும் என்று நம்பவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நாம் அதிக முன்னேற்றம் அடையலாம்.... ஆனால் சமீபத்திய RAND ஆய்வின்படி, அரசாங்கம் வெற்றிபெற்றபோது எழுச்சியின் சராசரி காலம் 14 ஆண்டுகள் என்பதாகும்.... நாம் ஒரு தசாப்தத்தை வீணடித்து, அவ்வளவு ஆண்டுகளாக விரோதியை வலுவடைய செய்துவிட்டோம். எனவே திடீரென மாற்றும் விஷயம் அல்ல இது." எனக்கூறினார்.

ஒபாமா நிர்வாகம் பாக்கிஸ்தானிலும் போரை விரிவாக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கருத்தின்படி, கடற்படை தளபதி, மைக்கேல் ஜி.முல்லன், கூட்டுப்படைகளின் தலைவர், "பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஒருங்கிணைப்பு குழு" ஒன்றை பென்டகனின் அடித்தளத்தில் நிறுவி அப்பகுதியில் நடக்கும் போரை முற்றிலும் நடத்துமாறு உதவியுள்ளார்.

முல்லன் தன்னுடைய இராணுவப் போக்கை, வியட்நாம் அழிப்புக்காலத்தில் ஒரு இளைய அதிகாரியாக தொடங்கினார் என்றும் அப்போரில் இருந்து பல படிப்பினைகளை பெற்றார் என்றும் டைம்ஸ் கூறுகிறது. "பாக்கிஸ்தானில் உள்ள விரோதியின் புகலிடம் பற்றி ஏதாவது செய்யவேண்டும் என்பதன் முக்கியத்துவம் பற்றி அவர் மிக உணர்வுடன் உள்ளார்." ஒரு ஓய்வு பெற்ற தளபதி செய்தித்தாளிடம் கூறியது: "நாம் வியட்நாம் போரில் அனுபவித்ததற்கு ஒப்பானது என்பதை அவர் அறிந்துள்ளார்; விரோதிக்கு லாவோஸ், கம்போடியா போன்ற இடங்களில் உந்துகோல் இருந்தது."

இராணுவ வன்முறையின் அதிரிப்பு அமெரிக்கா, பிரிட்டன், கனடா இன்னும் மற்ற நாடுகளின் அரசியல் நடைமுறைக்குள் இருக்கும் கவலைகளுடன் பிணைந்துள்ளது. இவ்விடங்களில் மக்கள் தங்கள் நாடுகளின் புதிய காலனித்துவவகை போர்களுக்கு எதிர்ப்பை கொண்டுள்ளனர். குறிப்பாக கூட்டணி இறப்புக்கள் பெருகியிருக்கையில் தற்போதைய தாக்குதல் "வெற்றியை" நிரூபிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

கடந்த மாதம், பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் வெற்றி என்பது எப்படியும் "நீண்ட காலத்திற்கு பின்தான் வரும்" என்றும் ஓராண்டிற்குள் அமெரிக்கா வெற்றிபெறாது என்றும் கூறினார். ஆனால், அமெரிக்க படைகள் ஓராண்டிற்குள் நிலைமையை மாற்றிவிட முடியும் என்றும் இல்லாவிடின் மக்கள் ஆதரவை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். "ஈராக் அனுபவத்திற்கு பின் நாம் அதிக முன்னேற்றம் காணவில்லை என்றால் நீண்ட காலம் உழலத் தயாராக இல்லை என்ற கருத்துத்தான் அனைவருக்கும் உள்ளது" என்று பேட்டியின்போது கேட்ஸ் கூறினார். "படைகள் சோர்வு அடைந்து விட்டன, அமெரிக்க மக்களும் நன்கு சோர்ந்துவிட்டனர்."

அதன் நேட்டோ நட்பு நாடுகளின்மீதும், குறிப்பாக பிரிட்டன்மீது, அமெரிக்க கூடுதலான அழுத்தத்தை துருப்புக்களை அதிகரிக்கவும் தடைகளை உயர்த்தவும், எத்தகைய போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பது பற்றியும் கொடுத்துவருகிறது. ஆப்கானிஸ்தானில் ஏன் 9,000 பிரிட்டிஷ் படைகள் இருக்கின்றன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தாவிட்டால் இன்னும் அதிக துருப்புக்களுக்கான கோரிக்கைக்கு கூடுதலான மக்கள் ஆதரவு இழப்பு வரக்கூடிய "தீவிர ஆபத்தை" ஏற்படுத்தும் என்று மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றைத் தொடர்ந்து வருகிறது.

"இது ஒரு தீவிர ஆபத்து என நான் நினைக்கிறேன்." என்று வெளியுறவு விவகாரங்கள் சிறப்புக் குழு உறுப்பினர் எம்.பி. மைக் கேப்ஸ் டைம்ஸிடம் கூறினார்: "மக்கள் ஆண்களும் பெண்களும் ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்படுவதை பார்த்துள்ளனர்; ஆனால் இவர்கள் ஏன் இப்பொழுது கொல்லப்படுகின்றனர் என்பது அவர்களுக்கு புரியவில்லை." என்றார்.

மோதல் ஆரம்பித்ததில் இருந்து ஜூலை மாதத்தில் பெரும் குருதி கொட்டிய மாதத்தை பிரிட்டன் அனுபவித்தது. 22 படையினர் இறந்து போயினர், இன்னும் பலர் காயமுற்றனர். நிதியச் செலவுகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன என்று செய்தித்தாள் கூறுகிறது; ஆப்கானிஸ்தானில் இராணுவ செயல்களின் செலவு 2007-07ல் 750 மில்லியன் பவுண்டில் இருந்து (அமெரிக்க $1.3 பில்லியன்), 2008-09ல் 2.6 பில்லியன் பவுண்டாக (அமெரிக்க$4.4 பில்லியன்) உயர்ந்துவிட்டது.

ஒரு முன்னாள் வெளியுறவு அமைச்சரான கிம் ஹோவெல்ஸ் இதற்கிடையில் ஒரு நீண்டகால ஆப்கானிய போருக்கு மக்கள் ஆதரவு இருக்காது என்று கூறியுள்ளதுடன், போர்களை நடத்துவதில் பிரிட்டிஷ் அணுகுமுறைகள் அடிப்படையில் மாறிவருவதாகவும் கூறினார். அவர் BBC இடம் "ஆப்கானிஸ்தானத்தில் 30 ஆண்டுகள் இருக்கலாம் என்ற கருத்தை எவரும் இக்கணத்தில் கொள்ளப்போவதில்லை. அதேபோல் கொடூரமான இறப்பு எண்ணிக்கை சிறிது சிறிதாக உயர்வதையும் மற்றும் இறுதி ஊர்வலங்கள் நடத்தவும் தொடர்ந்து விரும்பப் போவதில்லை. எல்லாம் மாறிவிட்டது. ஒரு நாடு என்ற முறையில் எமது படையினரை வெளியிடங்களுக்கு அனுப்ப விரும்பவில்லை. அந்த மனநிலையில், கடந்த காலம் போல் நாம் ஒரு பெரிய, தீவிரமான போரை வெல்வோம் என்ற உறுதி எனக்கு இல்லை." எனக்கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved