World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

G20 summit protest: A socialist answer to the global crisis is needed

G20 உச்சிமாநாடு எதிர்ப்பு : உலக நெருக்கடிக்கு ஒரு சோசலிச விடையிறுப்பு தேவைப்படுகிறது

Statement of the Socialist Equality Party (Britain)
27 March 2009

Back to screen version

லண்டனில் சனிக்கிழமை அன்று நடக்கவிருக்கும் "மக்களை முதலில் கருத்திற் கொள்க" எதிர்ப்பு அணியில் கீழ்க்கண்ட அறிக்கை வினியோகிக்கப்பட உள்ளது.

லண்டனில் மார்ச் 28 அன்று G20 உச்சி மாட்டிற்கு எதிராக நடக்க இருக்கும் பாரிய எதிர்ப்பு, அடிப்படை அரசியல் முன்னோக்கு பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

மனிதகுலத்தை முன்னொருபோதுமில்லாதவகையில் ஒரு பேரழிவுடன் எதிர்கொள்ளும் உலகப் பொருளாதாரச் சரிவு உலக வரலாற்றில் இல்லாத வகையில் மோசமான மந்த நிலையாகும். இந்த நெருக்கடி தொடங்குவதற்கு முன்பே உலகில் நான்கு பில்லியன் மக்கள் பெரும் தீமை கொடுக்கும் பரிமாணத்திலான இழிவான, வாழ்வை அச்சுறுத்துமளவிலான வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையை அடைந்திருந்தனர். உலகின் மக்கட்தொகையில் செல்வக் கொழிப்புடைய 10 சதவிகிதத்தினர் உலகின் இருப்புக்களில் 85 சதவிகிதத்தின் மீது உரிமை கொண்டிருத்தனர். இதற்குள் மிக உயர்மட்டத்தில் இருக்கும் 1 சதவிகிதம் 40 சதவிகித இருப்புக்களை கொண்டிருந்தனர். இதற்கு மாறாக கீழ்நிலையில் இருந்த உலகின் 50 சதவிகித மக்கள் உலக சொத்துக்களில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் கொண்டிருந்தனர்.

பல மில்லியன் மக்கள் தங்கள் வேலைகளை இழக்கையில், நிறுவனங்கள் மூடப்படுகையில், வீடுகள் கடன்கள் திருப்பிக் கட்டமுடியாமல் இழக்கப்படுகையில், வங்கிகள் மூடப்படும் நிலையில் மற்றும் முழு தேசியப் பொருளாதாரங்களும் திவால் தன்மையை எதிர்கொள்ளுகையில், இந்த ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மோசமாக தீவிரமடையும்.

சிந்தனா ரீதியாகவும், சமூக மற்றும் அறநெறித் தன்மையிலும், இந்தப் பொருளாதாரச் சரிவின் தாக்கங்கள் புரட்சிகரமானவை. ஒரே அடியில், "தடையற்ற சந்தையின்" பெரும் சிறப்புக்கள் பற்றிய கற்பனைகள், அவற்றைத் தொடர்ந்திருந்த தனிநபர் செல்வக்குவிப்பிற்கு ஆதரவான பிரகடனங்கள், சமூக ஒற்றைமை மீதான தாக்குதல்கள் ஆகியவை அனைத்தும் அம்பலமாகியுள்ளன.

எனவேதான் உலகின் மிகச் செல்வக் கொழிப்புடைய நாடுகளின் தலைவர்களும் G20 உச்சிமாநாட்டின் முக்கியத்துவம் பற்றி பெரிதும் பாடி களிநடனமும் புரிகின்றனர். ஒவ்வொருவரும் தான்தான் நெருக்கடிக்கு தக்க திட்டம் வைத்துள்ளது போல் காட்டிக் கொள்ள முற்படுகின்றனர். அவர்களுடைய திட்டங்கள் விரைவில் உறுதியாகச் செயல்படுத்தப்பட்டால் இயல்பு நிலையை மீட்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில், கூடியிருக்கும் நாடுகளின் தலைவர்கள் எதன் எஜமானர்களும் அல்லர். அவர்கள் தளமாகக் கொண்டுள்ள பொருளாதார, அரசியல் செயல் கருத்துக்கள், மூன்றரை தசாப்தங்களாக அழிவில்தான் உள்ளன. இயக்கத்தின் மாறுதல் என்ற உறுதிமொழிகள் மக்களுக்கு மயக்க மருத்து கொடுப்பது போல்தான் பயன்படுத்தப்படுகின்றன. சரிவின் உண்மையான தன்மை எடுத்துக் கூறப்படவில்லை. ஆனால் வங்கியாளர்கள், பெரும் செல்வந்தர்கள் ஆகியோரின் பைகளில் பணத்தை நிரப்புவதற்கு தொழிலாளர்களை தொடர்ந்து விரட்டுகின்றனர்.

இதுவரை நிதிய ஊக்கப் பொதிகள் மட்டுமே உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2 சதவிகிதமாக இருப்பதுடன், நிதிய நிறுவனங்களுக்கு வருங்காலத்தில் ஒதுக்கப்படவிருக்கும் இருப்புக்களுக்கான உறுதிமொழிகள் இந்த எண்ணிக்கையையும் மிகச் சிறியதாக ஆக்கியுள்ளன. இந்தப் பணம் எந்த தெளிவான முடிவையும் கொடுக்காத விதத்தில் உறிஞ்சப்பட்டுவிட்டது. சர்வதேச நிதிய நிறுவனமும் உலக வங்கியும் இந்த ஆண்டு இரு சதவிகிதப் பொருளாதாரச் சரிவு உலகில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றன. உண்மையில் எவரும் எவ்வளவு மோசமாக விஷயங்கள் போகும் என்று கணிக்க முடியாது. ஒவ்வொரு மதிப்பீடும் முந்தையதை விட மோசமான நிலையைத்தான் காட்டுகிறது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தை அமைப்பவர்கள் கெளரவமான வேலைகளுக்கும் பொதுப் பணிகளுக்கும் வறுமை, சமத்துவமின்மை இவற்றை அகற்ற முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று சரியான விதத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இது G20 தலைவர்களுக்கு "மக்களை முதலில் கருத்திற் கொள்க" என்ற முறையீட்டின் மூலம் சாதிக்கப்படலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுடைய கருத்து சந்தைப் பொருளாதாரத்தில் தவறு அடிப்படையில் ஏதும் இல்லை என்றும், ஒரே பிழை அதில் "ஜனநாயகமற்ற ஆட்சிமுறைதான்" என்றும் கூறுகின்றனர். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்றவற்றை "கூடுதலான வெளிப்படைத்தன்மை", "கோரிக்கைகளுக்கும் வாக்குகளுக்கும் இடைய சமத்துவம்" என்ற விதத்தில் "ஜனநாயகப்படுத்துவதின் மூலமும்" கூடுதலான கட்டுப்பாட்டின் மூலமும் சந்தை "ஒரு சிலருக்கு என்றில்லாமல் பலருக்கும் பயன்படுமாறு" உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்.

இது உண்மையை தலைகீழாக மாற்றிக் கூறுவது போல் ஆகும். பொருளாதார நிறுவனங்களுக்குள் பொறுப்புக் கூறுதல் இல்லாத நிலை பெரும்பான்மையினரின் நலனுக்கு சந்தை நடத்தப்படலாம் என்பதை திசைதிருப்புவற்கு ஒரு விதிவிலக்கல்ல. பெரும்பாலான மக்களை எண்ணிக்கையில் மிகக் குறைவான, முற்றிலும் ஒட்டுண்ணித்தன உயரடுக்கு சுரண்டும் முறை என்பது ஜனநாயகத்துடன் இயைந்து செயல்பட முடியாது என்பதற்கு நிரூபணம் ஆகும்.

கடந்த தசாப்தங்கள் ஒரு நிதிய பிரபுத்துவத்தின் எழுச்சியைக் கண்டுள்ளன. அது இன்னும் கூடுதலான மட்டத்தில் தனிப்பட்ட செல்வக் கொழிப்பை ஊக முறையினால், சமூகத்தின் பிற பிரிவினர் உண்மை உற்பத்தி முறையின் மூலம் அடைவதில் இருந்து மாறுபட்ட முறையில் குவிக்கிறது. இந்த அடுக்கு ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக் கூறுதல் என்பதை தன் சமூக நலனகளுக்கு முற்றிலும் எதிரிடையானது என்று கருதுகிறது. உலகின் இருப்புக்களை அது சுரண்டுவதற்கு எந்தத் தடையையும் அது பொறுத்துக் கொள்ளாது, பொறுத்துக் கொள்ள முடியாது.

உலகின் முக்கிய சக்திகள் ஒருங்கிணைந்த "உலகளாவிய புதிய உடன்பாட்டிற்கு" ஒப்புக் கொள்ளுவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. போருக்குப் பிந்தைய பொருளாதாரக் கட்டுப்பாடு பிரெட்டன் வூட்ஸில் நிறுவப்பட்டது போன்ற முறைக்கு மீண்டும் திரும்புதல் என்பது இயலாது. அது அமெரிக்கா சவாலுக்கு இடமின்றிக் கொண்டிருந்த உலகமேலாதிகத்தை தளமாகக் கொண்டிருந்தது. இன்று அமெரிக்கா பொருளாதாரச் சூறாவளி ஒன்றின் மையத்தில் உள்ளது. அதன் உலகின் முக்கிய சக்தி என்ற நிலையில் ஏற்பட்டுள்ள சரிவு உலக அரசியலில் உறுதியைக் குலைக்கும் காரணியாக உள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் நாடுகள் இயக்க வேண்டிய நிதிய ஊக்கப் பொதிகளின் அளவு பற்றி எதிரெதிரான கருத்துக்களை கொண்டுள்ளன. ஐரோப்பா இன்னும் கூடுதலான நிதியை அளிக்க வேண்டும் என்னும் வாஷிங்டனுடைய அழைப்புக்களுக்கு முக்கிய எதிர்ப்பு ஜேர்மனியில் இருந்து வந்துள்ளது. இதைத்தவிர எந்த G20 நாடும் கூடுதலான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை நிர்ணயிக்கும் நிதியப்பிரிவை மதிப்பிடும் திட்டத்தை முன்னெடுக்கவில்லை.

"மந்த நிலையில் இருந்து ஒரு நியாயமான, செயல்படுத்தக்கூடிய வெளியேறும் வழிவகை" என்பதற்கு பதிலாக பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகள் லண்டனில் கூடியிருப்பவர்கள், திரைக்குப் பின்னே கடுமையான சிக்கன வரவு-செலவுத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வேலைகள் தகர்ப்பு, பொதுநலப் பணிகள் தகர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பதுடன், உலகின் மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரங்களை குறைப்பதிலும் முயன்றுள்ளனர்.

அதே நேரத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பன், சீனா ஆகிய முக்கிய சக்திகள் உலக மந்த நிலையின் மோசமான பாதிப்பில் இருந்து தங்கள் போட்டியாளர்களின் இழப்பில் தங்களை காத்துக்கொள்ள முயலுகின்றன.

இந்த வாரம் உலக வங்கியின் அறிக்கை ஒன்று 20 உறுப்பினர் குழுவில் 17 உறுப்பினர்கள் நவம்பர் 15ம் தேதி உறுதிமொழி எடுத்திருந்தபோதிலும் பாதுகாப்புவரி நடவடிக்கைகளில் இப்பொழுது ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கிறது. நிதிய நெருக்கடி தொடங்கியதில் இருந்தே அதிகாரிகள் அத்தகைய 78 வணிக நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன. இவற்றில் 66 வணிகத் தடைகள் பற்றியவை ஆகும். நியூ யோர்க் டைம்ஸ், "பாதுகாப்பு வரி முறை முன்னணியில் இருப்பதுடன், இழிந்த வர்த்தக மோதல்களை தூண்டுகிறது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான உலகப் பொருளாதார சரிவை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்ளும் திட்டங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." என்று முடிவுரையாக கூறியுள்ளது.

முதலாளித்துவம் மனிதகுலத்தை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டுவந்துவிட்டது. இந்த வாரம் சர்வதே நாணய நிதியத்தின் தலைவரான ஸ்ட்ரவுஸ் கான் கீழ்க்கண்ட எச்சரிக்கையை விடும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

"அப்பட்டமாகக் கூற வேண்டும் என்றால், நிலைமை மிக மோசமாக உள்ளது. பொருளாதார நெருக்கடி, "பல நாடுகளிலும் வேலையின்மையை மிகமோசமான அளவில் உண்டாக்கும். இது சமூக அமைதியின்மையின் அடித்தளத்தில் இருந்து, சில சந்தர்ப்பங்களில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகி, சில இடங்களில் இது போரில்கூட முடியக்கூடும்" என்று ஸ்ட்ரவுஸ் கான் கூறினார்.

நிதிய உயரடுக்கு மற்றும் அதன் பிரதிநிதிகள் உலகின் மக்களுக்கு என்ன நடக்கும் என்று கட்டளையிடுவதை இனி அனுமதிக்கக்கூடாது. தற்போதைய நெருக்கடியின் மிகத் தீவிரத் தன்மை உலகப் பொருளாதாரத்தை ஒரு பகுத்தறிவார்ந்த, திட்டமிட்ட அடிப்படையில் சமூக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இயக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

உற்பத்தி சாதனங்களைத் தனியார் உடமையாக ஆக்கியிருக்கும் முறை, ஒரு சிலருக்கு இலாபக் குவிப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது சமூக உடைமை என்னும் கருத்தால் மாற்றப்பட வேண்டும்; பெரிய வங்கிகளும் நிறுவனங்களும் பொது உடைமையாக்கப்பட்ட வசதிகளாக பாற்றப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவேண்டும். உலகை பகுத்தறிவற்ற முறையில் போட்டியிட்டும் விரோதப் போக்கு உடைய தேசிய அரசுகளாக பிரித்திருப்பது, இறுதியில் வணிகத்திற்கு அச்சறுத்தல் கொடுத்து இறுதியாக இராணுவப் பூசலுக்கு வழிவகுப்பது ஒரு உலக சோசலிச கூட்டமைப்பால் பதிலீடு செய்யப்பட்டாக வேண்டும்.

முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் மற்றும் அதன் கூட்டான தொழிற்கட்சி அதிகாரத்துவத்திற்கும் எதிராக இப்போராட்டத்தை உழைக்கும்மக்கள்தான் முன்னெடுக்கவேண்டும். இதற்கு அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்த அரசியல் அணிதிரளல் தேவைப்படுகிறது. அது புதிய சர்வதேச, சோசலிச கட்சி நிறுவப்படுவதின்மூலம்தான் சாதிக்கப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved