World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP marks 40 years of struggle for socialist internationalism

இலங்கை: சோசலிச அனைத்துலகவாதத்திற்கான போராட்டத்தின் 40 வது ஆண்டை சோ.ச.க. கொண்டாடுகிறது

11 July 2008

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்நோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டு 40 ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) இயக்கமும் ஜூலை 16ம் திகதி பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்த உள்ளன.

1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளை காட்டிக்கொடுத்துவிட்டு ஸ்ரீமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதன் பின்னர், 1968ல் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டது. ல.ச.ச.க.யின் அரசியல் துரோகம் இலங்கையில் மட்டுமன்றி ஆசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.

பு.க.க. ஸ்தாபகர்கள் லங்கா சமசமாஜக் கட்சி பண்டாரநாயக்க அரசாங்கத்தில் இணைய எடுத்த முடிவை நிராகரித்தது மட்டுமன்றி, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நான்காம் அகிலத்திற்குள் மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மன்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாத போக்கின் தோற்றம் வரை அந்தக் காட்டிக்கொடுப்பின் அரசியல் வேர்களையும் கண்டறிந்தனர். பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக சோசலிச அனைத்துலகவாத வேலைத் திட்டத்தை பாதுகாப்பதற்காக 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) இலங்கைப் பகுதியாகவே பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டது.

பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, அது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படைகளில் உறுதியாக வேரூன்றிக்கொண்டதோடு, அனைத்து விதமான மத்தியதர வர்க்க தீவிரவாதத்திற்கும் மற்றும் மாவோ சேதுங், கோசிமின் மற்றும் சேகுவரா போன்ற உருவங்கள் மீது மேலோங்கி வந்த மோகத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக சளையாத போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்கள் உருவாக வழிவகுத்தது. இந்த இயக்கங்கள், தீவிரமடைந்திருந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் பிற்போக்கு பேரினவாத மற்றும் யுத்தப் பாதையில் விழுவதற்கு வழிவகுத்தன.

சோ.ச.க. மற்றும் அதன் முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் தேசியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராக -இனம், நிறம், தேசியம்- அனைத்துத் தொழிலாளர்களதும் ஐக்கியத்திற்காகப் போராடியதோடு, ஆசியா பூராவும் மற்றும் உலகம் முழுவதிலும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் காலத்தின் சோதனையை எதிர்த்து தனித்துப் போராடி வந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் பு.க.க/சோ.ச.க. முன்னெடுத்த போராட்டங்களின் வளமான படிப்பினைகள் எல்லா இடங்களிலும், குறிப்பாக ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேரிடயாக சம்பந்தப்பட்டவையாகும். நாம் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை எங்களது கூட்டத்திற்கு வருகை தருமாறு மனமுவந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்டத்தில் பு.க.க. ஸ்தாபக உறுப்பினரும் சோ.ச.க. பொதுச் செயலாளருமான விஜே டயஸ் பிரதான உரை நிகழ்த்துவார்.

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

நேரம்: ஜூலை 16, மாலை 4.00 மணி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved