World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

CIA destroyed torture tapes

சித்திரவதை ஒளிப்பதிவு நாடாக்களை சி.ஐ.ஏ அழித்துவிட்டது

By Joe Kay
8 December 2007

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை சித்திரவதை செய்தலைக் காட்டும் ஒளிநாடாக்கள் குறைந்தது இரண்டாவது, CIA இனால் அழிக்கப்பட்டு விட்டன என்ற வெளிப்பாடானது புஷ் நிர்வாகத்தின் ஆணவம் நிறைந்த குற்றத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சித்திரவைதை தன்னும் தவிர, மூர்க்கத்தனமான விசாரணை பற்றிய சான்றை அழித்தல் என்பது நீதித்துறை குற்றச்சாட்டுகளை தடைசெய்யும் உயர்மட்ட CIA மற்றும் அரசாங்க அதிகாரிகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை பெயரிடப்படாத பல முன்னாள் மற்றும் தற்போதைய அரசாங்க அதிகாரிகளை மேற்கோளிட்டு "குறைந்தது இரு ஒளிப்பதிவு நாடாக்களாவது" அழிக்கப்பட்டு விட்டன என்ற தகவலை கொடுத்துள்ளது. இந்த ஒளிப்பதிவு நாடாக்கள் இரு கைதிகள் 2002ல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை காட்டியவை ஆகும்; ஒருவர் அல் கொய்தாவின் உயர்மட்ட உறுப்பினர் என்று கருதப்படும் அபு சுபைதா ஆவார். மற்ற நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

உத்தியோகபூர்வமாக அரசாங்கம் இதை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், 2002 மார்ச்சில் பிடிக்கப்பட்ட ஜுபயதா நீரில் மூழ்கடிக்கும் வகையிலான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்; இவ்விதத்தில் கிட்டத்தட்ட ஒரு நபர் மூழ்கடிக்கப்படுதல், கைதி மூச்சுதிணறலுக்கு உள்ளாவது என்ற சித்திரவதையாகும். நீரில் மூழ்கடிக்கும் சித்திரவதை மற்றும் அதையும் விட மோசமான சித்திரவதைகளைத்தான் நாடாக்கள் காட்டின என்று அனுமானிக்கத்தான் முடியும்.

CIA இயக்குனர் மைக்கேல் ஹேடன், CIA பணியாளர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில்தான் வியாழனன்று நாடாக்கள் இருந்ததும், அழிக்கப்பட்டதும் முதல் முறையாக வெளிப்படுத்தப்பட்டன. புதனன்று செய்தித்தாள் இத் தலைப்பை பற்றி ஒரு கட்டுரை எழுத திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு அறிவித்த பின்னர்தான் ஹேடன் இக்கடிதத்தை எழுதினார்.

ஹேடனுடைய கடிதம், அமெரிக்க மற்றும் உலகப் பொதுமக்கள் கருத்தில் இருந்து அரசாங்கத்தின் செயல்களை மறைப்பதையும் நியாயப்படுத்துவதையும், CIA முனைவர்கள் மற்றும் ஜனாதிபதி புஷ் உட்பட அரசாங்க அதிகாரிகளின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளை அழிப்பதை நியாயப்படுத்துவதுமான முயற்சியை மேற்கொண்டுள்ளது;

CIA நன்கு அறிந்துள்ளபடி, ஒளிப்பதிவுநாடாக்கள் பகிரங்கமாகியிருந்தால் -அதுவும் அபு கிரைப் நிகழ்வுகள் வெளிப்பாட்டிற்கு பின்னர்- அவை அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் அதிர்ச்சி மற்றும் கடும் வெறுப்பு அலையையும் தூண்விட்டிருக்கும் என்பதுடன் அபு கிரைப் ஒரு தவறுதலான நிகழ்வு என்பதற்கு பதிலாக அமெரிக்க அரசாங்கக் கொள்கையின் விளைவுதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கும்.

அல் கொய்தாவின் பதிலடியில் இருந்து CIA விசாரணையாளர்களை காப்பதற்காகத்தான் ஒலிநாடாக்கள் அழிக்கப்பட்டன என்ற, நிகழ்வதற்கரிய கூற்றை ஹேடன் தெரிவித்தார். தன்னுடைய கடிததத்தில் 2002லேயே நாடாக்களில் விசாரணைகளை பதிவு செய்யும் வழக்கத்தை CIA நிறுத்திவிட்டதாகவும், அதற்கு முன்பு ஒரு சில பதிவுகள்தான் செய்யப்பட்டன என்றும் அவர் எழுதியுள்ளார்.

இந்த நாடாக்கள் "கடுமையான விசாரணை வழிவகைகளை ஒளிப்பதிவு காட்சிகள் காட்டுவதால் அதிகாரிகளை சட்டபூர்வ ஆபத்துக்களுக்கு உட்படுத்தக்கூடும் என்ற கவலை பல அதிகாரிகளுக்கு இருந்ததுதான் ஓரளவு இவை அழிக்கப்பட்டதற்கு காரணம்" என்று டைம்ஸ் சில அதிகாரிகள் தெரிவித்ததை தகவலாக கொடுத்துள்ளது.

இந்த அறிக்கை உண்மையாக இருந்தால், நீதி வழங்குதல் தடையாகிவிடும் என்பதற்கு தெளிவான சான்றாகிவிடும். "CIA அதிகாரிகள் பயங்கரவாதியை விசாரணை செய்யப்பட்டதில் புகைப்படங்கள் அல்லது ஒளிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டால் அது கடுமையான எதிர்விளைவை தூண்டும் என்ற முடிவிற்கு வந்ததாக" அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுவது தடுக்கப்பட வேண்டும் என்ற சதித் தொடர்பைத்தான் நாடாக்கள் அழிப்பு கொண்டிருந்தது.

CIA தவறான முறையில் விசாரணைகளை நடத்தும் பரப்பு மக்களுக்கு தெரிய வந்த அளவில் 2005ம் ஆண்டு கடைசியில் நாடாக்கள் அழிக்கப்பட்டன. நவம்பர் 2, 2005ல் வெளிநாடுகளில் CIA விசாரணை திட்டங்கள் பற்றிய முதல் தகவலை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இதன் பின் வந்த தகவல்கள் விசாரணை வழிவகை உத்திகளை விவரமாக கூறின; நவம்பர் 18 அன்று ABC News இந்த உத்திகளில் ஒன்று நீரில் மூழ்கடிக்கும் சித்திரவதை என்று தெரிவித்தது. டிசம்பர் 5, 2005ல் இத்திட்டத்திற்குள்ளான கைதிகளில் ஒருவர் சுபைதா என்றும் தாய்லாந்து நாட்டில் இருக்கும் CIA சிறையில் அவர் அடைத்துவைக்கப்பட்டுள்ளார் என்றும் ABC கூறியது.

செப்டம்பர் 11 தாக்குதல்கள் சதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஷகாரியாஸ் மசூவ்யீ பற்றிய விசாரணையின் பின்னணியில் நாடாக்கள் அழிக்கப்பட்டமை நடைபெற்றுள்ளது. மசூவ்யீ இன் வக்கீல்கள் அவர் தாக்குதல்கள் திட்டத்தில் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அல் கொய்தா உறுப்பினர்கள் விசாரணை பற்றிய நாடாக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

2003 மற்றும் 2005ல் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோனி பிறிங்க்மா அரசாங்க வக்கீல்கள் சான்றுகள் ஏதும் பதிவு செய்யப்பட்டனவா என்று கூறும்படி உத்தரவிட்டார்; ஆனால் அரசாங்கம் இதற்குக் கீழ்ப்படியவில்லை. நவம்பர் 3, 2005ல் பிரிங்க்மா குறிப்பான விசாரணைகளின் ஒளிப்பதிவு நாடாக்களை பற்றிக் கேட்டார். நவம்பர் 14ம் தேதி அரசாங்கம் அந்த விசாரணைகள் பற்றி எவ்வித நாடாக்களையும் அது கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்து விட்டது.

இந்த ஒளிப்பதிவு நாடாக்கள் எப்பொழுது சரியாக அழிக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாஷிங்டன் போஸ்ட்டின் கருத்தின்படி பிரிங்க்மாவிற்கு விடையிறுக்கும் வகையில் இது நவம்பர் 14க்கு பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும். CIA செய்தித் தொடர்பாளர் ஒருவரின்படி ஒளிப்பதிவு நாடாக்கள் பிரிங்க்மாவால் குறிப்பாகக் கேட்கப்பட்டவற்றுள் அடங்கியிருக்கவில்லை.

கடந்த மாதம், அரசாங்கம் தன்னிடம் இரு ஒளி நாடாக்கள் மற்றும் ஒரு ஒலிநாடா இருந்த்தாகவும் 2005ல் அவைபற்றி தெரிவிக்காமல் போய்விட்டது என்பதையும் ஒப்புக் கொண்டது; ஆனால் மீண்டும் ஒளி நாடாக்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை அது குறிப்பிடவில்லை. நாடாக்கள் அழிக்கப்பட்டுவிட்டதை பற்றிய வெளிப்பாடு, மசூவ்யீ பற்றிய குற்ற விசாரணையின்போது அரசாங்கம் நடந்துகொண்ட தவறான நடத்தையின் சமீபத்திய மாதிரி மட்டுமே ஆகும்.

ஒரு சில பிற விசாரணைகளும், வழக்குகளும் நாடாக்கள் அழிக்கப்பட்டபோது நடைபெற்று வந்தன. இவற்றுள் ஒன்று அமெரிக்க குடியியல் உரிமைகள் அமைப்பு (American Civil Liberties Union) தகவல் கேட்கும் சுதந்திரத்தை ஒட்டி விடுத்த வேண்டுகோள் ஆகும். ஆகஸ்ட் 2004ல் ஒரு நீதிபதி, விசாரணை பற்றி அனைத்துச் சான்றுகளையும் கொடுக்க வேண்டும் அல்லது ஏன் சான்றுகள் வெளியிடப்படவில்லை என்று அரசாங்கம் விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அழிக்கப்படுவதற்கு முன்னதாக நாடாக்கள், புஷ் நிர்வாகத்தாலும் காங்கிரசாலும் செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி விசாரணை நடத்தும் குழுவிடமும் அளிக்கப்படவில்லை. 9/11 குழு தன்னுடைய இறுதி அறிக்கையை 2004ல், நாடாக்கள் அழிக்கப்படுவதற்கு ஓராண்டு முன்னதாகக் கொடுத்தது; ஆனால் அதனிடம் நாடாக்கள் பற்றிக் கூறப்படவே இல்லை.

குழுவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய Philip Zelikow வை மேற்கோளிட்டு டைம்ஸ் எழுதுகிறது: "அனைத்து தொடர்புடைய நிறுவனங்களில் இருந்தும் இத்தகைய ஆதாரங்களை முறையாக குழு கேட்கவில்லை; நாம் கேட்டதற்கு ஏற்ப பொருத்தமான தகவல்கள் அனைத்தையும் பெற்றுவிட்டோம் என்று குழுவிற்குக் கூறப்பட்டது. எந்த நாடாக்களும் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்படவில்லை; விசாரணைக்குழுக்களிடம் கொடுக்கப்படவும் இல்லை; பதிவுகளுக்காக தயாரிக்கப்பட்ட குறிப்புக்கள் பற்றிய எதுவும் குழுவிற்கு கொடுக்கப்படவும் இல்லை.

டைம்ஸ் மேலும் கூறுவதாவது: "அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டப் பேராசிரியராக இருக்கும் Daniel Marcus, அல் கொய்தா தலைவர்களுடன் நடந்த விவாதம் பற்றி செப்டம்பர் 11 குழுவின் பொது வக்கீலாக பணியாற்றினார்; இவர் நாடாக்கள் அழிக்கப்பட்டது பற்றி தான் ஏதும் கேள்விப்படவில்லை என்று கூறினார். நாடாக்கள் அழிக்கப்பட்டிருந்தால், "அது ஒரு பெரிய விஷயம், அது ஒரு மிகப் பெரிய விஷயம்", ஏனெனில் ஒரு குற்ற வழக்கில் அல்லது உண்மையை கண்டறியும் வழக்கில் தேவைப்படும் சாட்சியத்தை கொடுக்காமல் இருப்பது என்பது நீதிப் போக்கிற்கு தடை ஆகும்."

செப்டம்பர் 11 விசாரணைக்குழு ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்தின் செயலற்ற தன்மை, மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததை பூசிமறைப்பதற்குத்தான் நிறுவப்பட்டது. ஓசாமா பின் லேடனுக்கு நெருக்கமான தொடர்புடையவர் என்று கருதப்பட்ட நபரிடம் நேர்காணல் செய்ய விசாரணைக் கமிஷன் மறுக்கப்பட்டது என்ற உண்மை அதன் கண்டுபிடிப்புக்கள் பற்றிய மோசடித்தனத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சித்தரவதையை சித்தரித்துக் காட்டுவதோடு, சுபைதா இன் விசாரணையில் செப்டம்பர் 11 பற்றி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கூறும் கருத்துக்களுடன் முரண்பட்ட தகவல்களும் இருந்திருக்கக்கூடும். இதுதான் குழுவிற்கு விசாரணை பற்றிய குறிப்புக்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பதை விளக்குகிறது.

CIA பணியாளர்களுக்கு தான் எழுதிய கடிதத்தில் ஹேடன் "அறிவார்ந்த மதிப்பீடு இல்லை என்பதற்கும் அப்பால் -எழுத்து ஊடகங்களில் விசாரணைகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுவிட்டன - சட்டபூர்வ அல்லது உள்காரணங்கள் அவற்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லாத நிலையில், நாடாக்கள் ஒரு தீவிரப் பாதுகாப்பு ஆபத்தை கொடுத்தவை ஆகும். அவை கசிந்துவிட்டால், திட்டத்தில் பணியாற்றிய உங்கள் CIA சக ஊழியர்கள் சிலர் அவர்கள் குடும்பத்தினர் ஆகியோரை, அல் கொய்தா மற்றும் அதன் ஆதரவாளர்கள் தாக்குவதற்கு அடையாளம் காண வைத்துவிடும்." என எழுதினார்.

இவை அப்பட்டமான பொய்களாகும். நாடாக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான காரணம் இல்லை என்ற கருத்து, அப்பொழுது அமெரிக்க காவலில் சுபைதா இருந்தபோது, அதுவும் ஏதேனும் ஒரு விசாரணை அல்லது இராணுவ நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடும் என்ற நிலையில் அபத்தமாகும். அதன் பின் அவர் குவான்டநாமோ முகாமிற்கு மாற்றப்பட்டுவிட்டார்; ஒரு இராணுவக் குழுவின் முன் விசாரணைக்கு கொண்டுவரப்படலாம். அவரைப் பற்றிய விசாரணை காட்சிகள் அத்தகைய நடவடிக்கைகளில் மிக முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

பாதுகாப்பு பிரச்சினையை பொறுத்தவரையில், எந்த ஒளிநாடாவிலும் விசாரிப்பவர்களின் அடையாளத்தை மறைப்பது எளிதான காரியம் ஆகும்; அது ஒன்றுதான் உண்மையில் அரசாங்கத்தின் அக்கறை என்று இருந்தால். ஹேடனின் தர்க்கப்படி CIA, அதன் விசாரணையாளர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் எந்த ஆவணம் இருந்தாலும் அது கசியாமல் தடுப்பதற்காக சிஐஏ அழித்திருக்கும்.

நாடாக்கள் அழிப்பை நியாயப்படுத்தும் ஹேடனின் முயற்சியின் நைந்துபோனதன்மை, அரசாங்கத்தின் குற்றம் சார்ந்த உள்நோக்ங்களை உயர்த்திக்காட்டுவதற்குத்தான் பயன்படுகிறது.

குற்றச்செயலில் ஜனநாயகக் கட்சியின் உடந்தை

இந்த வெளிப்பாடுகளில் இருந்து ஒரு முக்கிய பிரச்சினை எழுகிறது. எவருக்கு நாடாக்கள் பற்றி தெரிந்திருந்தது, அவை அழிந்தது தெரிந்தது, எப்பொழுது அப்படித் தெரிந்தது? இந்த வினாவிற்கான விடை சித்திரவதையை மூடி மறைப்பதில் முழு அரசியல் கட்டமைப்பும் கொண்டிருந்த சதியைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

அதனுடைய கடிதத்தில் ஹேடன் அறிவித்தார்: "நாடாக்களை அழிக்கும் முடிவு CIA இற்குள்ளேயே எடுக்கப்பட்டது." CIA இன் முழு உள்விவகாரம்தான் இப்படி சாட்சியத்தை அகற்றுதல் என்னும் ஹேடனுடைய கூற்று கிட்டத்தட்ட ஒரு பொய்தான். நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் நாடாக்கள் அழிக்கப்படுவது என்பது பெரிதும் நடக்கவியலா செயல் ஆகும்.

நியூயோர்க் டைம்ஸின் கருத்தின்படி, இந்த முடிவு ஜோசே ரொட்றிகஸ் இனால் எடுக்கப்பட்டது; அவர் ஒரு நீண்ட நாள் CIA முனைவர் ஆவார்; நடவடிக்கைளுக்கான தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியை அப்பொழுது அவர் கொண்டிருந்தார் என்பதோடு பல இரகசிய, மற்றும் திருட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். செப்டம்பரில் தான் ஓய்வு பெறுவதற்கு சற்று முன்பு, ரொட்றிகஸின் அடையாளமே பெரும் இரகசியமாகத்தான் இருந்தது.

ரொட்றிகஸின் நேரடி உயரதிகாரியான, அப்பொழுது CIA இயக்குனராக இருந்த போட்டர் கொஸிடம், முடிவு பற்றிக் கூறப்படவில்லை என்றும் நாடாக்கள் அழிக்கப்பட்டுவிட்டமை பற்றி அவர் கேள்விப்பட்டபோது கோபம் அடைந்தார் என்றும் "இரு முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளை" மேற்கோளிட்டு டைம்ஸ் தகவல் கூறியது:

தன்னுடைய பங்கிற்கு புஷ் மிக கவனமாக ஒதுக்கமான முறையில் இது பற்றி ஏதும் தெரியாது என்ற வகையில் மறுப்பு அறிக்கையை வெளியிட்டார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ வெள்ளியன்று " நாடாக்கள் பற்றியோ, அவை அழிக்கப்பட்டது பற்றியோ நேற்று வரை புஷ்ஷிற்கு ஏதும் தெரியாது." என்று கூறினார்.

ஒளிப்பதிவு நாடாக்களில் காணும் வழிவகைகளை பயன்படுத்த தான் நேரடி ஒப்புதலை வாங்கியிருப்பதாக CIA கூறியுள்ளது; ஆனால் இந்த ஒப்புதலின் வகை மக்களுக்கு கூறப்படவில்லை. இந்த நிலமைதான் புதனன்று ஹேடனால் அவர் தன்னுடைய கடிதத்தில், "விசாரணை நடவடிக்கைகள் தொடங்கு முன், அவை பரிசீலிக்கப்பட்டு நீதித்துறை மற்றும் நிர்வாகப் பிரிவின் மற்ற பிரிவுகள் ஒப்புதல் அளித்துவிட்டன என்று எழுதிய வகையில் வலியுறுத்தப்பட்டது.

இதன் பொருள் ஒளிப்பதிவு நாடாக்களில் காணப்படும் நடவடிக்கை பற்றி இறுதிப் பொறுப்பு புஷ், ஷெனி முன்னாள் அரசாங்க தலைமை வக்கீல் ஜோன் அஸ்ரொப் இன்னும் நிர்வாகத்தில் உள்ள பலரிடம்தான் உள்ளது என்பதாகும். இந்த அர்த்தத்தில் ஒளிநாடாக்கள் அபு கிரைப்பில் சித்திரவதை பற்றிய நிழற்படங்களைவிட மிகவும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை; அதில் அரசாங்கம் ஒரு சில தனிநபர்களின் அனுமதியற்ற நடத்தை என்று கூற முடிந்தது.

பலமுறையும் அமெரிக்கா எவரையும் "சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை" என்று அறிவித்துள்ளார்; ஆனால் இந்த நாடாக்கள் சித்திரவதைக்கு சிலர் உட்படுத்தப்பட்டனர் என்பதை பற்றி மறுக்க முடியாத நிரூபணமாக உள்ளன.

"காங்கிரசில் இருக்கும் எங்களை மேற்பார்வையிடும் குழுக்களில் தலைவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒளிநாடாக்கள் பற்றிக் கூறப்பட்டன; இந்த பொருட்கள் முடிவடைவது பற்றிய முகவாண்மையின் விருப்பமும் கூறப்பட்டுவிட்டது." என்று ஹேடன் வலியுறுத்தியுள்ளார். செனட் மற்றும் பெருமன்ற உளவுத்துறைக் குழுக்களில் அப்பொழுது இருந்த உயர்மட்ட உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜேன் ஹார்மான், செனட் உறுப்பினர் ஜே ரொக்பெல்லர், குடியரசுக் கட்சித் தலைவரும் கீழ் மன்ற உறுப்பினருமான பேட் ஹொக்ஷ்ரா மற்றும் செனட்டர் பாட் ரோபர்ட்ஸ் ஆகியோர் அதில் அடங்குவர்.

ஹொக்ஷ்ராவின் செய்தித் தொடர்பாளர் நாடாக்கள் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று மறுத்துவிட்டார்; ஆனால் ஹார்மான், ரொக்பெல்லர் ஆகியோரிடம் இருந்து வந்துள்ள கருத்துக்களை ஹேடன் கூறுபவற்றை உறுதி செய்கின்றன.

ஹார்மான், "நாடாக்கள் இருப்பது பற்றி காங்கிரசில் அறிந்த நான்கு நபர்களில் ஒருவராவார்" என்று Associated Press கூறியுள்ளது; மேலும் "2003ல் அவை அழிக்கப்பட்ட தகவல் அவருக்குக் கொடுக்கப்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் மேற்கோளிடப்பட்டுள்ளது.

விசாரணை பற்றிய வீடியோ நாடாக்களை அழிப்பது என்பது தவறான சிந்தனை என்றும் அவ்வாறு அவர்கள் செய்யக்கூடாது என எழுத்து மூலம்" நான் கூறினேன் என்று ஹார்மான் தெரிவித்துள்ளார்.

இது தப்பியோடும் செயல். ஹார்மனும் அதையொட்டி ஜனநாயக் கட்சியும் 2003லேயே நாடாக்கள் பற்றி தெரிந்திருந்தனர்; ஆனால் அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் சித்திரவதை கொள்கையை அம்பலப்படுத்த வேண்டாம் என்றும் முடிவெடுத்துவிட்டனர். இதைப்பற்றிய விவரங்கள் அமெரிக்க மக்களிடம் இருந்து 2004ல் தொடங்கிய அபு கிரைப் ஊழல் நடந்த காலம் முழுவதும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அரசாங்கம் நீரில் மூழ்கடிப்பது போன்ற உத்தியை பயன்படுத்தியது என்பதை அமெரிக்க மக்கள் அறிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாடாக்கள் பற்றி முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் அறிந்திருந்தனர்.

"முக்கிய சட்டமியற்றுபவர்கள் CIA இன் நாடாக்கள் அழிப்புத் திட்டம் பற்றிக் கூறப்பட்டபோது, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உளவு நிறுவனம் அத்திட்டத்தை செயல்படுத்தியபோது அவர்கள் தெரிவிக்கப்படவில்லை" என்று Associated Press தன் தகவலில் கூறுகிறது. நவம்பர் 2006ல் தான் நாடாக்கள் அழிக்கப்பட்டது பற்றி ரொக்பெல்லர் அறிந்தார் என்றும் இது தகவல் கொடுக்கிறது.

இந்த விவரம் உண்மை என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், அதன் பொருள் ஜனநாயகக் கட்சியினர் ஓராண்டிற்கு முன்பே இந்த நாடாக்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை அறிந்திருந்தனர், ஆனால் அது பற்றி ஏதும் கூற வேண்டாம் என்ற முடிவில் இருந்தனர் என்பதாகும்.

செப்டம்பர் 2006ல் ரொக்பெல்லர் மற்ற 11 ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு செனட்டில் இராணுவ ஆணைக்குழுக்கள் சட்டத்திற்காக வாக்களித்தார். இந்தச் சட்டமும், தடுப்புக் காவலில் உள்ளோரை நடத்தும் முறை பற்றிய சட்டமும், டிசம்பர் 2005ல் இயற்றப்பட்டவை; இவற்றில் CIA செயலூக்கிகள் மற்றும் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளை சித்திரவதை மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணைக்குட்படுத்துவதை தடுக்கும் விதிகளும் சேர்க்கப்பட்டது.

புஷ் நிர்வாகத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து, ஜனநாயகக் கட்சி ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட தடுப்பு நெறிகளின் மீதான மாபெரும் தாக்குதலை நடத்த முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது. சித்திரவதை கொள்கையை முன்னின்று நடத்திய அனைத்து நிர்வாக அதிகாரிகள் நியமனங்களை உறுதி செய்வதில் இக்கட்சி உறுதுணையாக இருந்துள்ளது; அதில் ஹேடனும், இன்னும் சமீபத்தில் அரசாங்க தலைமை வக்கீலான மைக்கல் முகாசேயும் அடங்குவார்; பிந்தையவர் ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செனட்டின் ஒப்புதலை, நீர்வழிச் சித்திரவதையை கண்டிக்க மறுத்த போதிலும், பெற்றார்.

ஜனநாயகக் கட்சி ஒளிநாடாக்கள் இருப்பதை மூடி மறைத்த்தில், அழிப்பில் உடந்தையாக இருந்தது என்பது எந்த விசாரணையும் ஒரு பூசிமறைப்பதாகத்தான் இருக்கும் என்ற பொருளைத் தருகிறது. வெள்ளியன்று ரொக்பெல்லர், செனட் உளவுத்துறைக் குழு "நாடாக்களின் வரலாறு, கால வரிசைப் பட்டி இவற்றை முழுமையாக மீளாய்வு செய்யும்; அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, அழிக்கப்பட்டதற்கான காரணங்கள், மற்றும் அவற்றை பற்றி காங்கிரஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை மீளாய்வு செய்யும்" என்று கூறினார். முகாசேயின் தலைமையில் இருக்கும் நீதித்துறை ஒரு பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்று செனட்டர் எட்வர்ட் கென்னடி கேட்டுக் கொண்டார்.

ஜனநாயக கட்சியினர் இப்பொழுது CIA "கூடுதலான விசாரணை உத்திகளை" கையாளுவதில் இருந்து தடுக்கப்படும் எனக் கூறும் ஒரு சட்ட வரைவு வருவதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்; ஆனால் அது இயற்றப்பட்டாலும் -அநேகமாக அப்படி நடக்காது- அது புஷ்ஷினால் தடுப்பதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டுவிடும்.

இதையொட்டியே CIA சித்திரவதை நாடாக்களின் அழிப்பு உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள்மீது பெரிய குற்ற விசாரணை நடத்துவதற்கு போதுமான அடிப்படை ஆகும். பாரிய உள்நாட்டு ஒற்றுவேலை, சட்டவிரோதத்தன்மை இவற்றின் வெளிப்பாட்டை அடுத்து இது வந்துள்ளது. வாடிக்கையாக சட்டங்களை அசட்டை செய்தல், மீறுதல், சட்டவிரோத ஆக்கிரமிப்பு போர்களை தொடக்குதல், அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக சதி செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் அரசாங்கத்தால் இது செய்யப்படுகிறது.

ஆனால் ஜனநாயக் கட்சியின் தலைமை ஓராண்டிற்கு முன்பு மன்றத்தின் இரு பிரிவுகளின் மீதும் கட்டுப்பாட்டை அடைந்த பின்னரும், பெரிய குற்ற விசாரணை ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. புஷ் நிர்வாகத்தின் சித்திரவதை திட்டம் மற்றும் பல அமெரிக்க, சர்வதேச சட்டத்தை திமிருடன் மீறிய செயல்கள் பற்றி ஜனநாயக கட்சியின் கீழ் இருக்கும் காங்கிரசில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ஒளிப்பதிவுநாடாக்கள் அழிப்பில் இருந்து ஒரு சில பின்விளைவுகள் வரக்கூடும். ஒரு சில கீழ்மட்ட நபர்கள் வெள்ளை மாளிகை மற்றும் CIA இன் பலிகடாக்களாக ஆக்கப்படுவர். ஆனால் புஷ் நிர்வாகம் விஷயத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு ஜனநாயக கட்சியை தக்க காரணத்துடன் நம்பியுள்ளது.

இந்த புதிய வெளிப்பாடு புஷ்ஷை சுற்றி இருக்கும் குழுவின் சட்டமற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு அவை பிரதிபலிக்கும் மகத்தான ஆபத்துக்களையும் காட்டுகிறது. ஜனநாயக உரிமைகளை காக்க வேண்டும் என்று எந்தத் தீவிர உறுதிப்பாடும் இல்லாத ஜனநாயகக் கட்சியின் தன்மையையும் இது உயர்த்திக் காட்டுகிறது. இந்த உரிமைகள் இருகட்சி அரசியல் நடைமுறை மற்றும் அது அடிபணிந்து செயல்படும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினரின் ஒரு சுயாதீனமான அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் பாதுகாக்கப்படும்.