World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Thousands of retail workers strike for better wages and conditions

பிரான்ஸ்: ஊதிய மற்றும் பணியிட நிலைமை உயர்வுக்காக ஆயிரக்கணக்கான சில்லறை விற்பனைத்துறை தொழிலாளர்கள் போராட்டம் செய்கிறார்கள்

By Kumaran Ira and Antoine Lerougetel
6 February 2008

Back to screen version

பெப்ரவரி 1ல், பிரான்சின் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெருவியாபார அங்காடிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விலை உயர்வுக்கேற்ப தங்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஒரு நாள் போராட்டத்தில் இறங்கினார்கள். மேலும், அவர்கள் மேம்பட்ட பணியிட நிலைமைக்காகவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தானியங்கி விற்பனை (caisses automatiques) முறையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பணிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவுகிறது.

இந்த வேலைநிறுத்தம், ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் கருத்துக்கணிப்பு விகிதத்தின் ஒரு பாரிய சரிவுடன் ஒரே நேரத்தில் நிகழ்கிறது.

CGT, CFDT மற்றும் FO தொழிற்சங்களால் அழைப்புவிடப்பட்டிருக்கும் இந்த வெளிநடப்பானது, இதற்கு முந்தைய நாளில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களின் அமைப்பான, வர்த்தகம் மற்றும் வினியோக கூட்டமைப்பு (Fédération des entreprises du commerce et de la distribution-FCD) இணங்க மறுத்ததற்கு பதிலடியாக நடத்தப்படுகிறது.

"ஒரு மாதத்திற்கு மொத்தமாக 1,500 யூரோவிற்கு ஊதியத்தை உயர்த்துமாறு நாங்கள் கோரி வருகிறோம்." என கூறிய தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பை சேர்ந்த சில்லறை விற்பனை பிரிவின் Charles Dassonville, தொடர்ந்து கூறுகையில், வர்த்தகம் மற்றும் வினியோக கூட்டமைப்புடன் (FCD) நடந்த பேச்சுவார்த்தையில் குறைந்தளவு சலுகைகளை வழங்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட நாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தார். முன்பு சட்ட விரோதமாக, ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு பின்னர் எடுக்கப்படும் இடைவேளைக்கு கூலியைக் குறைத்த தொழில்வழங்குனர்கள் அந்த நடைமுறையை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதனால் ஊதியத்தில் 5 சதவீதம் உயர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.

இந்த வேலைநிறுத்தத்தில் பெருமளவில் பெண் விற்பனை கணக்கர்கள் பங்கெடுத்தனர். நிர்வாகத்தால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும், நாடு முழுவதிலும் உள்ள 80 சதவீத பெருவியாபார அங்காடிகளும், 70 சதவீத பல்பொருள் அங்காடிகளும் மற்றும் 50 சதவீத சரக்குகிடங்குகளும் பாதிக்கப்பட்டதாக தொழிற்சங்க கணிப்புகள் தெரிவித்தன. சுமார் 20 அங்காடிகள் பூட்டி இருந்தன. நிறைய இடங்களில் வெளிநடப்புகள் பல மணி நேரம் நீடித்திருந்ததுடன், அதனை தொடர்ந்து பேரணிகளும், ஆர்பாட்டங்களும் மற்றும் பிரச்சார துண்டறிக்கைகள் வழங்குதலும் நிகழ்ந்தது.

Nouvel Observateur பத்திரிகை இதுபற்றி கூறுகையில், "கார்போர், ஆச்சன், சேம்பியன், மோனோபிரிக்ஸ் மற்றும் இன்னும் பல இதர பிற பல்பொருள் அங்காடிகளில் நேற்று நடந்தது 'வரலாற்று புகழ் மிக்கதாகும்.' இது சில்லறை விற்பனை அங்காடி விற்பனையர்களின் முதல் மாபெரும் வேலைநிறுத்தமாகும்.... இது புதிய நவீன பாட்டாளி வர்க்கத்தின், பெரும்பான்மையாக விஷேட தகமையற்ற (Unskilled) மற்றும் பெண்கள் பங்குபெற்ற வேலைநிறுத்தமாகும்." என்று தெரிவித்து.

CGT இன் பொதுச்செயலாளர் Bernard Thibault, பெப்ரவரி 1ம் தேதி காலையில் RMC வானொலியில் பேசும் போது, பெரிய அங்காடிகளில் உள்ள ஊழியர்களின் சமூக மற்றும் ஊதிய நிலைமையை வெளிக்கொணர மூன்று தொழிற்சங்களின் முயற்சியையும் ஒன்று திரட்ட முடிந்ததில் தாம் "திருப்தியடைந்ததாக" அவர் தெரிவித்தார்.

இந்த கருத்து தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சுயதிருப்தியான மற்றும் மனிதப் பண்பற்றத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. இவை, இந்த குறைந்த ஊதிய தொழிலாளர்களின் நம்பகத்தன்மையை பெறுவதற்காக வெறுமனே அவர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கான பதில் நடவடிக்கையாக, கடந்த வெள்ளியன்று இந்த ஒரு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இவை அவர்களின் கடன் அளவை குறைப்பதை தடுக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் தாழ்வதற்கு எதிரான போராட்டங்களை பலனற்ற எதிர்ப்புகளுக்குள் கொண்டு வர அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு அனைத்தும் செய்ய தங்களுக்குள் ஓர் உடன்படிக்கையை செய்து கொள்கின்றன. சில்லரை விற்பனை அங்காடிகளுக்கு எதிராக அல்லது தொழிலாளர்களின் உரிமைகளை எதிர்க்கும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஓர் அரசியல் சவாலை முன்னிறுத்தி எவ்வித உண்மையான போராட்டத்தையும் முன்வைக்க அவர்களுக்கு விருப்பமில்லை.

2007ன் கடைசி மூன்று மாதங்களில் தங்களின் ஓய்வூதிய உரிமைகளைப் பாதுகாக்க போராடிய இரயில் மற்றும் பிற தொழிலாளர்களை பிரித்து, ஒதுக்கி மற்றும் காட்டிக் கொடுத்ததன் மூலம் அரசாங்க சிறப்பு ஓய்வூதிய திட்டங்களை உடைக்க தொழிலாளர்களின் CGT மற்றும் பிற தொழிற்சங்கங்கள் சார்கோசிக்கு உதவுவதில் பெரும் பங்கு வகித்தன. சில்லறை விற்பனைத்துறை தொழிலாளர்கள் தொழில்வழங்குனர்களுக்கு எதிராக போராட இறங்கும் போது, இந்த அனுபவம் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

தொழில்வழங்குனர்களுக்கு பணியில் அமர்த்த மற்றும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அதிகளவில் உரிமைகளை அனுமதிக்கும் ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இந்த உடன்படிக்கை தொழிலாளர் சட்டவிதிகளின் சட்டரீதியான பாதுகாப்பையும் கூட சீரழிக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி பிரன்சுவா மித்திரோனின் மிக நெருங்கிய ஆலோசகர் Jacques Attali ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு சமீபத்திய அறிக்கையானது, பிரான்ஸ் தொழில்துறையின் போட்டியை சமாளிக்க தொழிலாளர் செலவுகளைக் குறைக்க வலியுறுத்தியதிற்கு அப்பாற்பட்டு, சில்லறை விற்பனைத் துறையில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவும், இவ்வங்காடி உரிமையாளர்களின் ஒரு முக்கிய கோரிக்கையான ஞாயிறன்று வியாபாரத்திற்கான மற்றும் பணியாற்றுவதற்கான தடைகளை நீக்குவதையும் வலியுறுத்தி உள்ளது. முன்னாள் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகொலின் ரோயாலும் இந்த அறிக்கையை விருப்பமுடன் பாராட்டியுள்ளார்.

பிரான்சில் 1,435 பெருவியாபார அங்காடிகளும், 5,525 பல்பொருள் விற்பனை அங்காடிகளும் மற்றும் 4,074 சில்லரை விற்பனைக் கடைகளும் உள்ளன. அவை சுமார் 636,000 ஊழியர்களை நியமித்துள்ளன, அதில் 61 சதவீதம் பெண் தொழிலாளர்கள் மற்றும் 39 சதவீதம் ஆண் தொழிலாளர்கள். சங்கங்களின் புள்ளிவிபரங்களின்படி, 63 சதவீதம் முழு நேர தொழிலாளர்கள் மற்றும் 37 சதவீதம் பகுதி நேர தொழிலாளர்கள்.

பெருவியாபார அங்காடிகளின் இலாபம் பிரமிக்கத்தக்கவை. உதாரணமாக, Carrefour 12,500க்கும் மேலான அங்காடிகளைக் கொண்டிருக்கிறது. அந்நிறுவன புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2005ல் 4.3 சதவீதம் மற்றும் 2006ல் 6.3 சதவீதத்திற்கு எதிராக 2007ல், அதன் விற்பனை முழு அளவில் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. 2007ல் அதன் வருவாய் ஏறத்தாழ 92.3 பில்லியன் யூரோவாகும். 2006ல், அதன் மொத்த விற்பனை வருமானம் மற்றும் நிகர வருமானம் முறையே 4.8 பில்லியன் யூரோ மற்றும் 1.8 பில்லியன் யூரோவாகும். Auchan 35 பில்லியன் யூரோவை வருவாயாகப் பெற்றது மற்றும் அதன் நிகர வருமானம் ஏறத்தாழ 760 மில்லியன் யூரோவாகும்.

சில்லரை விற்பனைத் துறை உரிமையாளர்களின் அமைப்பான வர்த்தகம் மற்றும் வினியோக கூட்டமைப்பின் (FCD) தலைவர் Jérôme Bedier கூறியதாவது: இந்த போராட்டம் "புரிந்து கொள்ள முடியாததாகவும்" மற்றும் உறுதி செய்ய முடியாததாகவும் உள்ளது, "நாம் மீண்டும் உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது துறை ஒரு பாதுகாப்பற்ற தொழில்துறை அல்ல: நமது ஊழியர்களில் 90 சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் காலவரையற்ற ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.

உண்மையில், இந்த துறையில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்குள்ளேயே அடங்கி இருக்கிறார்கள் (SMIC - மாதத்திற்கு 1280 யூரோவாகும்). எவ்வாறிருப்பினும், பகுதி நேர ஊழியர்கள் SMIC ஐ விட குறைவாக ஊதியம் பெற்று வருகிறார்கள் என்பதுடன் சில்லரை விற்பனைத் துறை உரிமையாளர்கள், நியமனங்களின் தேவையில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்ய உதவி வரும் தொழிலாளர்களில் உழைப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பல சந்தர்ப்பங்களில் முழு நேர பணி நியமனத்தை மறுத்து வருகிறார்கள். கூடுதல் நேர பணி ஊதியம் சாதாரண தொகைக்கு கூடுதலாக அளிக்கப்படுவதில்லை.

1993ல், பிரான்ஸ் தொழிலாளர்களில் 8 சதவீதத்தினர் குறைவான ஊதியத்தில் இருந்தனர். 2005 மற்றும் 2006ல், முறையே இது 16.3 சதவீதம் மற்றும் 15.1 சதவீதமாக உயர்ந்தது.

"வாரத்திற்கு 35 மணி நேரம் என்பது ஓர் ஏய்ப்பு என்று கூறுவதே ஒரு நடப்பாகி விட்ட போது, அங்காடிகளின் விற்பனை பெண்மணிகள் 35 மணி நேர ஒப்பந்தங்களுக்காக போராடுகிறார்கள். அனைத்து வீட்டுப்பணிகளையும் முடக்கக் கூடிய சிக்கலான பணிநேர அட்டவணையின்படி பணியாற்ற 30 மணி நேர ஒப்பந்தங்களுக்கு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை திரு Bédier அறிந்திருக்கவில்லை." âù Nouvel Observateur தெரிவித்துள்ளது. பிற அறிக்கைகள் இன்னும் குறுகிய சிறிய ஒப்பந்தங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. கார் மற்றும் எஃகு தொழில்துறையிலும் மற்றும் உயர்நுட்ப நிறுவனங்களிலும் ஏற்பட்ட அதிகளவிலான வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் பணியிழப்புகள் காரணமாக உயர் கல்வித் தகுதி பெற்ற தொழிலாளர்களும், இது போன்ற குறைந்த ஊதிய பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 2ல், அங்காடி விற்பனையாளர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணலை Libération வெளியிட்டிருந்தது: "காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை என்பதற்கு பதிலாக திடீரென, மாலை 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலான வேலைநேரம் எங்களுக்கு கொடுக்கப்படும்" என ஒரு தொழிலாளி வெறுப்புடன் கூறினார். "வேலைநேரம் நான்கு மணி நேரத்திற்கு குறைவாக இருந்தால் இடைவேளை அனுமதிக்கப்படுவதில்லை.... சில நேரங்களில் அவர்கள் எங்களை மூன்று அல்லது மூன்றேகால் மணி நேரத்திற்கு வருமாறு கூறுவார்கள்." என்று குறிப்பிட்டார். வேலைநேரங்களுக்கு இடையே உள்ள உபரி நேரங்கள் குறித்தும் ஒரு விற்பனை பெண்மணி குறை கூறினார். இவ்வாறு Sylvie என்பவர் ஒருநாளைக்கு காலை 10.15ல் இருந்து மதியம் 1.15 வரையிலும், பின் மாலை 4.00 முதல் இரவு 8.31 வரையிலும் வரவேண்டும் என்பதால், பணிநேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி செல்லும் நேரமும், பணமும் வீணாணதாகும்." என்பதை அந்த செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது.

மேலும் அங்கு வெளிப்படையான பதவி உயர்வோ அல்லது தொழில் முன்னேற்றமோ எதுவும் கிடையாது. Wal-Mart இற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய சில்லறை விற்பனையாளரான Carrefour இல், முப்பது ஆண்டு பணிமூப்பு பெற்ற ஊழியர்களும், தங்களின் முதல் ஆண்டில் ஊதியம் பெறுபவர்களுக்கு சமமாக ஊதியம் பெற்று வருகிறார்கள். பெரும்பான்மையாக வறிய நிலையிலுள்ள தொழிலாளர்கள் சில்லறை விற்பனைத்துறையில் நியமிக்கப்படுகிறார்கள்.

தொழிலாளர்களுக்கான இந்த ஆதாரமும் குறைய இருக்கிறது. அதாவது, தானியங்கி விற்பனை முறையானது 200,000 முதல் 400,000 பணியிழப்புகளை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வானை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் உணவு பொருட்கள், வீட்டு பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தின் மீது வளர்ந்து வரும் பிரச்சனைகளையும் மற்றும் ஐரோப்பாவில் பொருட்கள் நுகரும் சக்தி குறைந்து வருவதையும் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சில்லறை விற்பனைத் துறை தொழிலாளர்களின் போராட்டம் பிரதிபலித்திருக்கிறது. அதே நாளில், 8 சதவீதம் மற்றும் அதற்கு மேலான ஊதிய உயர்வை வலியுறுத்தி ஜேர்மனியில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். பேர்லின் நகர்புற போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன், வற்றன்ஃபால் மின்சார மற்றும் எரிவாயு தொழிலாளர்களும் மற்றும் இவர்களுடன் Thyssen Krupp தொழிலாளர்களும் அடுத்த வாரம் போராட்டத்தில் இறங்க உள்ளார்கள்.

பைனான்சியல் டைம்ஸ் இதழ் அதன் ஜனவரி 31ம் தேதி பதிப்பில், ஐரோப்பிய பிராந்திய பணவீக்க விகிதம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவாக 3.2 சதவீதமாக உயர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டது. "ஆச்சரியப்படத்தக்க அளவில் உயர்ந்த டிசம்பரின் 3.1 சதவீத பணவீக்கம் உயர்வு, எரிபொருள் மற்றும் உணவுபொருட்களின் விலைகள் உயர்வால் ஏற்பட்ட பணவீக்கத்தின் தாக்கமானது ஐரோப்பிய மத்திய வங்கியும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரியளவில் மற்றும் நீடித்து நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது." என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது. "ஐரோப்பிய பிராந்தியத்தில் நாணய கொள்கைகளின் பொறுப்புக்களை ஐரோப்பிய மத்திய வங்கி 1999ல் ஏற்றுக் கொண்டதில் இருந்து, ஜனவரியில் ஏற்பட்டுள்ள விகிதம் மிக உயர்ந்ததாகும். இந்த வங்கி, 15 நாடுகளை உள்ளடக்கி உள்ளது. மேலும் அது அதன் ஆண்டு விகித இலக்கை விட அதிகமாகவும், அண்ணளவாக 2 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது."

2007ன் பணவீக்க விகிதமான 2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2008ல் பிரான்ஸ் அதிக பணவீக்க விகிதத்தை கொண்டிருக்கும் என பொருளாதார, நிதித்துறை மந்திரி Christine Lagarde இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்தார்.

ஐரோப்பிய வட்டி விகிதங்களை 4 சதவீதத்தில் வைத்திருக்கும் ஐரோப்பிய மத்திய வங்கி, 3 சதவீதத்திற்கு படிப்படியாக வட்டி விகிதங்களை குறைக்க கூறிய அமெரிக்க மத்திய வங்கி ஆணையத்தின் முடிவுக்கு பதிலளிக்கவில்லை. ஒருங்கமைப்பின் முடிவு டாலர் செலவீனங்களுக்கு சாதகமாக உள்ளது மற்றும் அமெரிக்காவின் பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், அதனுடன் சேர்த்து, டாலரின் மதிப்பையும் குறைப்பதாக உள்ளது.

டாலரின் மதிப்பு குறைந்த போதினும், யூரோவின் மதிப்பைப் பாதுக்காக்க ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தின் கொள்கைகளை ஐரோப்பிய மத்திய வங்கி வெளிப்படுத்துகிறது. 2002ல், ஒரு யூரோ 98 சென்டாக இருந்தது. இன்று அதுவே 1.48 டாலர் மதிப்பில் இருக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கியானது, குறைந்த டாலர் மதிப்பிலான அமெரிக்க ஏற்றுமதியால் ஏற்பட்ட ஐரோப்பிய பொருட்களின் போட்டி முன்னுரிமைகளை, ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் குறைந்த வாழ்க்கைத் தரத்தால் ஈடு செய்ய விரும்புகிறது.

பைனான்சியல் டைம்ஸ் விவரிப்பதாவது: "பொதுவாக இந்த ஆண்டில் ஆண்டு பணவீக்க விகிதம் சற்று குறைவாக இருக்கும் கணக்கிடப்படும், ஆனால் தற்காலிக உயர்வு ஊதிய கோரிக்கைகளுக்குள் நுழைந்து விட்டால் அது தொடர்ந்து நீடிக்கலாம் என ஐரோப்பிய மத்திய வங்கி அஞ்சுகிறது. தற்போதைய சுற்று ஊதிய பேச்சுவார்த்தையின் போது ஒரு வலிமையான சொற்பிரயோகத்தை வெளியிட்டதன் மூலம் சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் கடுமையான செய்தி வெளிப்பட்டது."

வாழ்க்கை செலவுகளுக்கு இணையாக ஊதிய உயர்வை அளிக்க கோரும் உழைக்கும் வர்க்கத்தின் எவ்வித முயற்சிக்கு எதிராகவும் உறுதியாக நிற்க வேண்டும் என சார்க்கோசி அரசாங்கத்திற்கு பிரான்சு மற்றும் ஐரோப்பிய அதிகாரவர்க்கம் இரண்டும் அழுத்தம் அளித்து வருகிறது. 1983ல் சோசலிச கட்சியின் நிர்வாகத்தின் ஜனாதிபதி பிரன்சுவா மித்திரனால் கொண்டு வரப்பட்ட சிக்கன முறைமைகள் (ஊதிய நிலைப்படுத்தல் மற்றும் சமூக திட்டங்களின் வெட்டுக்கள் ஆகியவற்றை இது உட்கொண்டிருந்தது) உலக நிதியியல் நிலையால் மற்றும் பிராங்க்கின் மதிப்பு குலைந்துவிடும் என்ற அச்சத்தால் கசக்கிப் பிழியப்பட்டது. இந்த செயல்முறை தூண்டிவிடப்பட வேண்டும் என பெருநிறுவனங்கள் கோரி வருகின்றன.

TNS Sofres ஆல் வெளியிடப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜனாதிபதி சார்க்கோசியின் புகழ் 8 புள்ளிகள் சரிந்துள்ளது, அது 49 புள்ளிகளில் இருந்து 41 புள்ளிகளாக குறைந்துள்ளது. அந்த கருத்துக்கணிப்பின்படி, அரசாங்கத்திற்கு விலை உயர்வை எதிர்த்து போராடும் திறனில்லை என பிரான்சு மக்களில் 87 சதவீதத்தினரும், அவரால் வேலைவாய்ப்பின்மையை குறைக்க முடியாது என நினைப்பதாக 70 சதவீதத்தினரும் தெரிவித்தனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெருமளவிலான சமூக பிரச்சனைகள் உருவாகலாம் என சுமார் 66 சதவீதத்தினர் கணித்தனர், மற்றும் 46 சதவீதத்தினர் இந்த பிரச்சனைகள் வன்முறைகள் மற்றும் குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் என நினைக்கின்றனர்.

சில்லறை விற்பனை அங்காடி தொழிலாளர்களின் போராட்டம் என்பது அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்கு எதிரான ஒரு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்கான அறிகுறியாக உள்ளது. அவர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதலை எதிர்க்கின்றனர். "அதிகாரத்தை பெறுவதற்கு" ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் போலியானவை என வெளிப்படுகையில், இந்த கிளர்ச்சியின் ஒரு பகுதி சார்க்கோசி நிர்வாகத்திற்கு எதிராக அரசியல் விரோதம் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. அவரின் செல்வத்தின் மீதான ஊதாரித்தனமான மற்றும் மட்டரகமான ஈர்ப்பு மற்றும் குறுகிய செய்தித்துறையினதும் மற்றும் செல்வந்தர்களின் கூட்டும் போராட்டங்களுக்கு வெடிப்புமிக்க கசப்பான தன்மையை வழங்குகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved