World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Political fallout from troop deployment to Afghanistan

பிரான்ஸ்: ஆப்கானிஸ்தானிற்கு துருப்புக்களை அனுப்புவதிலிருந்து அரசியல் மோதல்

By Alex Lantier
5 April 2008

Back to screen version

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு துருப்புக்களை வலுப்படுத்தும் வகையில் கூடுதலான படைகளை அனுப்ப எடுத்த முடிவு, பிரெஞ்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான வாதத்திற்கு உரிய பொருளாகிவிட்டது. விவாதத்தின் பிரதான விஷயம் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்பது அல்ல, ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு என்பது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்குள் ஒருமனதானதாகும். இன்னும் சொல்லப் போனால், மார்ச் 16ம் தேதி நகரசபை தேர்தல்களில் அரசாங்கத்தின் தோல்வியை அடுத்து வந்துள்ள நிலையில், நெருக்கடி நிறைந்த ஆங்கில-அமெரிக்க இராணுவவாதத்துடன் நெருக்கமான உடன்பாட்டை உறுதிப்படுத்துவதில் அது ஜனநாயக நடைமுறைகளை வெளிப்படையாக இழிவுபடுத்துவது என்பது பிரெஞ்சு அரசியலுக்குள்ளே மேலும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திவிடக் கூடும் என்பது பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் கவலை ஆகும்.

கிழக்கு ஆப்கானிஸ்தானிற்குள் மற்றொரு பட்டாலியன் தரைப்படை --கிட்டத்தட்ட 700முதல்1,000 இராணுவத்தினர்கள் என்று பலவிதமாக செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன-- இயக்கப்படும் என்று சார்க்கோசி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அவர் இங்கிலாந்து சென்றிருந்தபோது உரையாற்றியதில் முதலாவதாக அறிவித்திருந்தார். இந்த முன்னறிவிப்பு ஏப்ரல் 3ம் தேதி புகாரஸ்ட்டில் நேட்டோ உச்சிமாநாட்டில் அவருடைய உரையில் உறுதி செய்யப்பட்டது; அங்கு சார்க்கோசி பிரான்ஸ் நேட்டோவின் இராணுவக் கட்டுப்பாட்டு அமைப்பில் 2009ல் சேரும் திட்டத்தை கொண்டிருக்கிறது என்று அறிவித்திருந்தார்; 1966ம் ஆண்டு பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டு கோலின் முன்முயற்சியால் அவ்வமைப்பில் இருந்து பிரான்ஸ் விலகியிருந்தது.

ஆப்கானிஸ்தானிற்கு படைகளை அனுப்புதல் என்பது, ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு அருகில் ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளுக்கு மாற்று என்ற முறையில், மிகவும் வன்முறை நிறைந்துள்ள தெற்கு மாநிலங்களான காந்தஹார், ஹெல்மாண்ட் ஆகியவற்றில் இருக்கும் கனேடிய துருப்புக்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அமெரிக்க கடற்படைப் பிரிவு துருப்புகளை அனுப்ப உதவும். பிரான்ஸ் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் 1,600 துருப்புக்கள், 280 இராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் ஆறு ஜெட் போர் விமானங்களை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானிற்கு தெற்கே இந்திய பெருங்கடலில் அமெரிக்கா தலைமையிலான கடற்படையில் அது மூன்று கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.

சார்க்கோசி, பிரெஞ்சு மக்களின் விருப்பங்களை முற்றிலும் உதாசீனம் செய்தவகையில் ஆப்கானிஸ்தானிற்கு படைகளை அனுப்புகிறார். Sud-Ouest க்காக நடத்தப்பட்ட BVA கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, 68 சதவீத மக்கள் படைகள் அனுப்புதலை ஒப்புக் கொள்ளவில்லை; 15 சதவீதத்தினர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர். இக்கருத்துக் கணிப்பில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு 65 சதவீதம் பேர் எதிர்ப்பையும் காட்டியுள்ளனர்.

மார்ச் 16ம் தேதி நகரசபை தேர்தல்களில் தோற்று வலுவிழந்துள்ள அரசாங்கம் பாராளுமன்ற வாக்கு இல்லாமல் துருப்புக்களை அனுப்ப முடிவெடுத்தது. இந்த அரசியலமைப்புக்கு விரோதமான, ஜனநாயக விரோதமான முடிவை எடுக்கும் பணி பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனிடம் விழுந்தது; பாராளுமன்றத்திற்கு ஏப்ரல் 1 அன்று ஆற்றிய உரையில் அவர் வரம்பற்ற நிறைவேற்று அதிகாரத்தை உறுதிப்படுத்திப் பேசினார்.

பிய்யோன் கூறினார்: "எமது படைகளை இயக்கும் பொறுப்பில் (பாராளுமன்றத்திற்கு) பங்கு இல்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. ஐந்தாம் குடியரசின் அரசியலமைப்பு அவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. அதன் 35ம் விதி ("போர் அறிவிப்பு பாராளுமன்றத்தால் ஒப்புதல் கொடுப்பது") இன்று முற்றிலும் செயல்படா தன்மையில்தான் உள்ளது. தற்கால போர் வடிவமைப்புக்கள் இந்த விதியில் இருந்து நம்மை அப்பால் இட்டுச் சென்றுவிட்டன. இராணுவத்தை பயன்படுத்துதல் என்பது நிர்வாகப் பிரிவு அதிகாரத்தை சேர்ந்தது; குறிப்பாக குடியரசின் ஜனாதிபதியை சேர்ந்தது; அவர்தான் படைகளுக்கு தலைவர் ஆவார்."

அரசியலமைப்பு இப்படி மீறுதல் சோசலிஸ்ட் கட்சியால் ( PS) ஏற்படுத்தப்பட்ட முன்னோடிச் செயல்களில் தங்கியிருந்தது என்று பிய்யோன் குறிப்பிட்டார்; அக்கட்சிதான் சார்க்கோசியின் பழமைவாத UMPக்கு (மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியத்திற்கு) முக்கிய எதிர்க்கட்சி ஆகும். குறிப்பாக 2001ல் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த சோசலிஸ்ட் கட்சியின் லியோனல் ஜோஸ்பன் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக்கின் தலைமையில் இருந்த பழமைவாத கட்சிகளுடன் ஒத்துழைத்து ஆப்கானிஸ்தானில் ஆரம்ப அமெரிக்க படைகள் அனுப்புதலில் பாராளுமன்ற வாக்குப் பெறாமல் பங்கு பெற இராணுவத்தை அனுப்பியிருந்தார்.

இதற்கு விடையிறுக்கும் வகையில் சோசலிஸ்ட் கட்சியின் தேசிய பாராளுமன்றத்தின் முன் அரசாங்கத்திற்கு எதிராக கண்டனத் தீர்மானம் இயற்றுவதற்கு முறையான நடவடிக்கை எடுத்துள்ளது-- இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் கொள்கை பற்றிய நிலைப்பாட்டை விவாதிக்கும் திட்டமிட்ட போலித் தோற்றத்தை கொண்டு, சோசலிஸ்ட் கட்சிக்கு பின் தொழிலாள வர்க்கத்தை திரட்டுவதற்கான பொறியாகும்.

உடனடியாக சட்டமன்றம் தீர்மானத்தின் பொருளுரை பற்றி கருத்து வேறுபாடுகளை காட்டியது; சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரான்சுவா ஹாலந்த் அரசாங்கத்தின் சமூக, வெளியுறவுக் கொள்கைகள் பற்றி பொதுக் குறைகூறல்களை தொடக்கினார். இறுதியில் முன்னாள் பிரதம மந்திரி லோரன்ட் பாபியுஸ், வாஷிங்டனுடன் சார்க்கோசி மீண்டும் ஏற்படுத்திக் கொண்ட நட்புறவு மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு அவர் படைகளை அனுப்பும் திட்டம் ஆகியவற்றை பற்றி மட்டும் குவிமையப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவுடன் முன்னெடுத்தார். பழமைவாத நாளேடான Le Figaro கருத்தின்படி, ஒரு சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதி, "பழைய பாணி கோலிஸ்டுகளுக்கும் நேட்டோவிற்கு குரோதமான தேசியவாதிகளுக்கும் "இதமாய் உணர்ச்சியைக் கிளறிவிடுவதன்" மூலம் இது எம்மை பெரும்பான்மையை பிளவுபடுத்துவதற்கு அனுமதிக்கும் என்று பாபியுஸ் கூறியதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு தன்னுடைய தொடர்ந்த ஆதரவு இருக்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் சோசலிஸ்ட் கட்சி கவனத்துடன் இருந்தது. தேசிய பாரளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சி பிரிவின் தலைவரான Jean-Marc Ayrault, "நாம் எவ்வித தவறான குற்றச்சாட்டையும் முன்வைக்காதிருப்போம்: நாம் ஒன்றும் ஆப்கானிஸ்தானை கைவிட முயலவில்லை" என்றார். முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் உட்பட, பல சோசலிஸ்ட் கட்சி தலைவர்களும், ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான பிரெஞ்சு துருப்புக்கள் அனுப்பப்படுவதைத்தான் எதிர்த்ததாக கூறினர்.

பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையின் நடைமுறையில் இருந்து சார்க்கோசி விலகியுள்ளார் என்றும் ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் படைகளை அனுப்புவது பற்றி பாராளுமன்றத்திடம் ஆலோசனை பெறாதது பற்றியும் குறிப்பிட்டு ஏப்ரல் 3ம் தேதி சோசலிஸ்ட் கட்சி ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தது. இதற்கான விவாதமும் வாக்களிப்பும் ஏப்ரல் 8 அன்று நடைபெறும். பாராளுமன்றத்தில் UMP பிரிவின் தலைவரான Bernard Accoyer வேண்டுகோளின்படி, விவாதம் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பை தூண்டிவிடுவது மற்றும் அதிருப்தி அடைந்துள்ள UMP கூறுபாடுகளுக்கு முறையிடும் வகையில் சோசலிஸ்ட் கட்சி நடந்து கொள்வது அரசாங்கத்தின் செல்வாக்கு மீண்டும் நகரசபை தேர்தல்களில் சரிவு அடைந்த நிலையில் ஆகும். Le Nouvel Observateur க்காக CSA நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று சார்க்கோசிக்கு ஒப்புதல் சதவீதம் 30 புள்ளிகள் குறைந்துவிட்டது என்றும், 60 சதவீதத்தினர் அவருடைய கொள்கைகளை ஏற்கவில்லை என்றும் காட்டுகிறது. சோசலிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் சார்க்கோசியை விட சிறப்பாகவோ மட்டமாகவோ செயல்படப்போவதில்லை என்றும் 72 சதவிகிதத்தினர் கருத்துக் கூறியிருந்தனர்.

சார்க்கோசியின் மக்கள் விரும்பாத சமூக செலவினக் குறைப்பில் விளையும் ஆபத்துக்கள் தொழிலாள வர்க்கத்தில் அதிருப்தியை ஒரு வெடிப்பாக தூண்டிவிடும் தன்மையை கொண்டுள்ளது மற்றும் என்று பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. அமெரிக்க வகையிலான கட்டுப்பாடுகளை தளர்த்தல் வகை பொருளாதரத்தின் மூலம் ஏற்றம் அடையலாம் என்று சார்க்கோசி குறைந்த வரம்பு கொண்டு தொழிலாள வர்க்க வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், தேர்தலுக்கு முன் பேசியது அனைத்தும், தற்போது பணவீக்க வளர்ச்சி, வாங்கும் திறன் வீழ்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றக் குறைவு, ஆகிய நிலைமையில் ஆவியாகி கரைந்துவிட்டது.

தன்னுடைய மார்ச் 28ம் தேதி பதிப்பில் Le Monde நாளேடு முக்கிய தலையங்கம் ஒன்றை "சமூக தேக்கம்" என்ற தலைப்பில் எழுதியது; அதில் தேக்கம் அடைந்துள்ள வேலை வாய்ப்பு நிலைமை, பிரெஞ்சு பொருளாதாரத்தின் சரிவு நிலை ஆகியவை இருக்கும்போது சிறு வரம்புடைய நடவடிக்கைகளான வீடுகளுக்கான உதவித் தொகைகள், வருமானங்களுக்கான ஆதரவு போன்றவற்றிற்கு நிதி கொடுப்பது கூடக் கடினம் என்று கூறப்பட்டுள்ளது; அரசாங்கமோ சமூக விரோத சீர்திருத்த வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டும் என்ற விதத்தில் அவற்றை முன்மொழிய நம்பிக்கை கொண்டிருந்தது.

சோசலிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசாங்கம் பற்றிய பொது மக்கள் எதிர்ப்பு உணர்வை தங்களுக்கு ஆதரவாக கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்தாலும், பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்குள் பெருகிய முறையில் உறுதியற்ற பொருளாதார மற்றும் இராணுவ நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது பற்றிய குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்பில் (Command Structure) 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சேரவேண்டும் என்ற சார்க்கோசியின் முடிவு, வாஷிங்டன் மற்றும் லண்டனுடன் இன்னும் நெருக்கமாக பிணைந்து இருக்க வேண்டும் என்ற முழு மூலோபாயத்தின் ஒரு பகுதியே ஆகும்; பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள உண்மையான அரசியல் சவால்களை இது ஒத்துள்ளது. ஒரு புறத்தில் பிரான்ஸ் பெருகிய முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஜேர்மனியுடன் போட்டி போட முடியவில்லை; ஜேர்மனியின் மேலாதிக்கம் நிறைந்த குறைவூதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான தொழில்துறை நிலைப்பாடு, ஐரோப்பாவிற்கு பெட்ரோல், எரிபொருட்களை அளிக்கும் முக்கிய நாடான ரஷ்யாவுடன் அது கொண்டுள்ள நெருக்கமான நட்பு, ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அதன் வெற்றிகரச் செயல்கள் ஆகியவை இதற்கு காரணம் ஆகும்.

பிரெஞ்சு முதலாளித்துவம் ஒரு மத்தியதரைக் கடல் ஒன்றியத்தை முன்மொழிந்திருந்தது; அது வட ஆபிரிக்காவில் இருக்கும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை பயன்படுத்தும் வாய்ப்பை அதற்கு கொடுத்திருக்கும். ஆக்கிரோஷமான முறையில் அது இராணுவத் தளம் அமைக்கும் உரிமைகள் மற்றும் எண்ணெய், எரிவாயு ஒப்பந்தங்களை மத்திய கிழக்கில், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்டுகளிடம் இருந்து பெறவிரும்புகிறது. ஆனால் அத்தகைய கொள்கைகளோ அமெரிக்காவுடன் நல்ல உறவுகள் இருந்தால்தான் முடியும் என்று உள்ளன; ஏனெனில் அதுதான் இப்பொழுது அப்பகுதியில் இராணுவ மேலாதிக்கத்தை கொண்டுள்ளது. மேலும் தற்போதைய அரசாங்கம் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடி என்பது இதன் நலன்களுக்கும் பெரிய சேதத்தை விளைவிக்கக் கூடிய போராட்டங்களுக்கு வழிவகுத்துவிடும் என்பதை அது நன்கு அறிந்துள்ளது.

ஜூலை 2007 ல் தேசிய பாராளுமன்றத்திற்கான தன்னுடைய தொடக்க உரையில் பிரதம மந்திரி பிய்யோன் கூறியவாறு, "பல நூற்றாண்டுகளாக பிரான்சும் மற்ற சில நாடுகளும் அரசியல், பொருளாதார வகையில் உலகத்தின்மீது மேலாதிக்கம் செலுத்திவந்தன. இப்படி இணையில்லாத வகையில் அதிகாரம் இருந்தது நம்மை ஒரு செல்வச் செழிப்பு உடைய வளமான நாகரிகத்தை கட்டமைக்க அனுமதித்தது. இன்று உலகம் விழித்துக் கொண்டு வருகிறது; வரலாற்றின் மீது பழி தீர்த்துக் கொண்டிருக்கிறது. முழு கண்டங்களும் முன்னேற்றம் காண விரும்புகின்றன... இந்த புதிய வரலாற்று உண்மை, வேதனையும் ஈர்ப்புத் தன்மையையும் கொண்டிருந்தாலும், பிரான்ஸ் பெரிதும் தாமதிக்கப்பட்டுவிட்ட முடிவுகளைத்தான் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது" என்று கூறியிருந்தார்.

இதே போன்ற விதத்தில் செப்டம்பர் 2007ல், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மாறிவரும் அரசியல் சூழ்நிலை பற்றி மேற்கோளிட்டு, ஒரு தலையங்கத்தில் Le Figaro, எண்ணெய்த் தொழிற்துறையின் "பெருகிய முறையில், பிரான்ஸ் போன்ற தொழில்துறை வளர்ச்சியுற்ற ஜனநாயக நாடுகளுக்கு சாதகமாக இல்லாதிருக்க, சக்திகளின் சமச்சீர்நிலை உறுதிகொண்டுள்ளது.

இந்த பெருகிய இடர்பாடுகளுக்கு சார்க்கோசியின் தீர்வு வாஷிங்டனுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுதல், அதையொட்டி பல பொதுப் பயணங்களை மேற்கொள்ளுதல், தற்போதைய கூடுதல் படைகள் அனுப்புதல் போன்றவை ஆகும். ஆனால் 1,000 துருப்புக்களை கூடுதலாக அனுப்புவது ஒன்றும் ஆப்கானிஸ்தானில் தன்னுடைய நிலைமையை மறுசீரமைக்க அமெரிக்காவிற்கு உதவாது என்று பிரெஞ்சு ஆளும் வட்டங்களுக்கு நன்கு தெரியும். உதாரணமாக, அமெரிக்க தளபதியான Dan McNeill பல முறையும் அமெரிக்க எழுச்சி எதிர்நடவடிக்கை கோட்பாட்டின்படி ஆப்கானிஸ்தானை சமாதனப்படுத்த 400,000 வேண்டும் என்று கூறியுள்ளார்; இது இப்பொழுது அவரிடம் இருக்கும் படைகளை விட 300,000 அதிகமாகும்.

சார்க்கோசியின் வெளியுறவுக் கொள்கை பற்றிய விமர்சனம், வேறு மாற்றீட்டுப் பாதை இல்லை என்பது வெளிப்படையானாலும், பின்னர் பேரழிவுகரமாக வெற்றியில்லாத வெளிநாட்டு கொள்கையை கொண்டுள்ள ஒரு நாட்டுடன் பிரான்சை கொக்கிபோட்டு பிணைக்கிறார் என்பதை பற்றிய வளர்ந்துவரும் பதட்டத்தைத்தான் பிரதிபலிக்கிறது. இவ்விதத்தில் சோசலிஸ்ட் கட்சியின் Ayrault கண்டனத் தீர்மானம் பற்றி அறிவிக்கையில், "அட்லான்டிக் கடந்த ஆசைகளை" திருப்திப்படுத்த சார்க்கோசி பிரெஞ்சுப் படைகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்புவதன் மூலம், "இலக்குள் இல்லாத, முடிவு தெரியாத ஒரு போர் என்னும் சகதியில் மூழ்கிப் போவதின்" ஆபத்துக்களை பற்றி விமர்சித்தார்.

பழமைவாத ஏடான Le Figaro வின், புகாரஸ்ட் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பயணத்திருந்த புஷ் பற்றிய தலையங்கமும் இப்படித்தான் பளீரெனக் கூறுகிறது; "அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய கொள்கை பற்றி நேர்மையான இருப்புநிலை குறிப்பை இயற்ற விரும்பினால், அவர் ஒரு வலுவிழந்த அட்லான்டிக் கூட்டு, ஆப்கானிஸ்தானில் அரசியல்ரீதியான தொந்திரவு, பிளவுகள் நிறைந்த இராணுவ வலுவிழப்பு ஆகியவற்றை தன்பின்னே விட்டுச் செல்லுவதையும், அரசியல் ரீதியாக பிளவுற்று அதிகரித்த அளவில் ரஷ்யாவை எதிர்கொண்ட நிலையில், தன்னுடைய பணிகள் பற்றிய தயக்கத்தையும்தான் உணர்வார்... வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனைப் போக்கின் நலன்களுக்காக வலிமையை பயன்படுத்தி தொடங்கிய ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு இது ஒரு சோகமான முடிவு ஆகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved