World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: LCR holds meeting for New Anti-Capitalist Party in St. Denis

பிரான்ஸ்: சென்ட் டெனிசில் எல் சி ஆர் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சிக்காக கூட்டம் நடத்துகிறது

By Francis Dubois
14 October 2008

Back to screen version

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) செப்டம்பர் 27, 28 தேதிகளில் பாரிசின் வடக்கு புறநகரான St.Denis ல் ஒரு கூட்டத்தை நடத்தியது. "ஊதியம் ஈட்டுவோர் மற்றும் வேலை இழப்பிற்கு ஆளானவர்களின் தேசிய மாநாடு" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு WSWS ன் நிருபர்களும் சென்றிருந்தனர்; மேலும் ஜனவரி 2009ல் LCR இனால் நிறுவப்பட இருக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிக்கு (New Anti-Capitalist Party NPA) உறுப்பினர்களை சேர்க்கும் கூட்டம் என்றும் கூறப்பட்டது.

LCR மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளரான ஒலிவியே பெசன்ஸநோவும் பூர்ஷ்வா செய்தி ஊடகத்தில் இருந்து கணிசமான விளம்பரத்தைப் பெற்றுக்கொண்டு, மரபார்ந்த "இடது" கட்சிகளான முதலாளித்துவ சோசலிசக் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) க்கு மக்கள் காட்டும் எதிர்ப்பை பெரிதும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். NPA முன் முயற்சியுடன், LCR ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கு விரோதப் போக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள், இளைஞர்களின் கணிசமான அடுக்கை ஆட்சேர்ப்பு செய்ய முடியும் என்று நம்புகிறது. புரட்சிகர மார்க்சிச அடிப்பிடையில் அல்லாமல், தொழிற்சங்க எதிர்ப்பு அரசியல் முறையை கையாளும் வகையில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நோக்கம் கொண்டிருப்பதை LCR இன் St.Denis கூட்டம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இக்கூட்டம் இரு அறிமுகங்களை தளமாகக் கொண்டிருந்தது; இதில் பேரவைக் கூட்டத்தில் பேச்சாளர் குழுவை எடுத்துக் கொண்டால், மற்றும் தொடர்ந்த பல பொருளாதார மற்றும் அன்றாட வாழ்வின் கூறுபாடுகளான ஊதியங்கள், பணி நீக்கம், சுகாதாரம், பணியிடத்தில் பாதுகாப்பு, விலைவாசிகள், சமூகப் பாதுகாப்பு, பொதுப் பணிகள், என்ற பல்வேறு தலைப்பிலும் தொழிற்சங்கவாதம் பற்றி இரு குழுக்கள் என்ற வகையிலும் மொத்தத்தில் எட்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.

பிரான்ஸ் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 350 பேர் பங்கு பெற்றனர்; இவர்களில் பெரும்பாலனவர்கள் 40 மற்றும் 50 வயதுகளை கொண்டிருந்தனர். WSWS நிருபர்களிடம் பேசியவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உறுப்பினர்களாக இருந்தனர்; அல்லது அதற்கு நெருக்கமாக இருந்தனர்.

இரு அறிமுகக் கூட்டங்களிலும் இருந்த தலைப்புக்கள், "வகையினங்கள் பெருகிய நிலை, ஒப்பந்த வேலைகள் வந்துள்ள நிலை, பாதுகாப்பாற்ற வேலைகள் பொதுமைப்படுத்தப்பட்ட நிலை இவை மூலம் தொழிலாள வர்க்கத்தில் உள்ள பிளவுகளை எப்படி எதிர்த்துப் போராடுவது, மற்றும் தொழிற்சங்க கருவிகளை ஒழுங்கமைக்கவும், போராடவும் மற்றும் தடுத்துநிறுத்தவும் எப்படி போராடுவது" என்றும் "எத்தகைய கோரிக்கைகள், எத்தகைய செயற்திட்டம் NPA வை, தொழிலாளர்களை நாளாந்த அடிப்படையில் அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு சேவை செய்யவைக்கும்?" என்றிருந்தன.

முதல் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் கூறினார்: "[சமீபத்திய வேலைக்குறைப்புக்கள் கார் உற்பத்தி நிறவனமான Renault மற்றும் டயர் நிறுவனம் Goodyear ல் நடந்ததற்கு எதிரான] நடவடிக்கை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றி மட்டும் காட்டவேண்டிய அக்கறை அல்ல. இதன் பொருள் இது அனைவருக்கும் பொதுவான பிரச்சினை ஆகும்... அதிக அளவில், தேசிய அளவில், தொழில்துறைகள் அனைத்தும் இணைந்த வகையில்... ஒரு விடையிறுப்பு இதற்குத் தேவை... அதில் பணிநீக்கங்கள் சமூக அளவில், மனித நெறி முறையில் ஏற்கத்தக்கதல்ல, சட்டவிரோதம் என்று கருதப்பட வேண்டும் வேலை செய்யும் உரிமை என்பது முழு உரிமை என்று ஆணையிடப்பட வேண்டும், அது இலாபங்களுக்கு முன்னதாக வரவேண்டும்."

அறிமுகத்தின் இரண்டாம் பிரிவு NPA இன் "செயல் திட்டத்திற்கு" அர்ப்பணிக்கப்பட்டது; இது மக்களின் "மிக அவசரத் தேவைகளுக்கு" விடையிறுப்பதற்கான "அவசர கால திட்டம்" என்றும் கூறப்பட்டது. பணிநீக்கங்கள் மீது தடை வேண்டும் என்றும், வேலைப்பாதுகாப்பின்மைக்கு எதிராக ஒரு சட்டம் வேண்டும் என்றும், சமீபத்தில் இயற்றப்பட்ட ஓய்வூதிய குறைப்புக்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், பணி வேலை வாரத்தில் "மகத்தான குறைப்பு" வேண்டும் என்றும், வேலைகள் புதிதாக தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது. ஒரு முக்கிய கோரிக்கை குறைந்தபட்ச ஊதியம் வரிகளுக்கு பின்னர் 1500 யூரோக்களாக இருக்க வேண்டும் என்பதாகும் --இது 2007 ஜனாதிபதி தேர்தலின்போது PS வேட்பாளராக இருந்த செகோலின் ரோயாலினால் முன்வைக்கப்பட்டது. பேச்சாளர்கள் விலைவாசி கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் பணவீக்கத்துடன் பிணைக்கும் வகையில் குறீயிடுகள் தேவை என்றும் இவை தொழிற்சங்கங்களால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

பிரெஞ்சு அரசு மற்றும் நீதிமன்றங்கள் மீது அழுத்தம் கொடுக்க தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள்விடுப்பதன் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் மிக அடிப்படையான நலன்களை அச்சுறுத்தும், அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்மொழிவது எல் சி ஆர் அரசியலின் சிறப்பியல்பாகும். தொழிற்சங்க அதிகாரத்துவமும் முதலாளித்துவ அரசும் ஒரு உறுதியான வர்க்க நிலைப்பாட்டை தொடர்கின்றன, அவை சக்திவாய்ந்த பொருள்சார் நலன்களைத்தான் ஒத்திருக்கும் என்று ஒரு இடத்தில்கூட LCR விளக்கவில்லை; இதையொட்டி LCR முன்மொழிவுகளை செயல்படுத்த தேவையான பாலின் மாற்றத்தை (Pauline conversion) இது முற்றிலும் அகற்றிவிட்டது

சார்க்கோசி தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகளுடன் நிறுத்திக் கொண்டாலும், தொழிற்சங்கங்களும் அரசும் ஒன்றாக இணைந்து சிக்கன நடவடிக்கைகளை இயக்கியதின் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது தெளிவு. பல தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தைகளில் அவருடைய ஓய்வூதியத் திட்டம், சமூக செலவினக் குறைப்புத் திட்டம் ஆகியவற்றில் நெருக்கமாக பங்கேற்றன. சார்க்கோசியே ஏப்ரல் 18 அன்று Le Monde நாளேட்டில், "வலுவான தொழிற்சங்கங்களுக்காக" என்ற கட்டுரையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

சார்க்கோசி எழுதினார்: "ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின், எலிசே அரண்மனைக்கு செல்வதற்கு முன் (ஜனாதிபதி அரண்மனை), நான் தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகக் குழுக்களுடன் அவர்கள் கூறுவதை கேட்கவும், அவர்கள் நிலைப்பாட்டை அறியவும், என்னுடைய முதல் நடவடிக்கைகளை திட்டமிட்ட போதே கேட்டறிந்தேன். அப்பொழுதில் இருந்து நான் அவர்களுடைய பிரதிநிதிகள் ஒவ்வொருவராக பார்த்து பேசி வருகிறேன். அவர்கள் அனைவரையும் நன்கு அறிவேன்; எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் பேச்சு வார்த்தைகள் வெளிப்படையாகத்தான் இருந்தன". இப்படி சார்க்கோசியின் ஜனாதிபதிக் கால நிகழ்வுகள் முழுவதும் அவர் இதைப் பொறுத்த வரையில் உண்மையைத்தான் கூறுகிறார் என்பதை காட்டுகின்றன.

அவருடைய முதல் பெரிய நடவடிக்கை --"சிறப்பு திட்ட ஓய்வூதியங்கள் அரச தொழிலாளர்களுக்கு ரயில், விசை மற்றும் மூலோபாயப் பிரிவுகள் பலவற்றில் குறைத்தது ஆகும்; சார்க்கோசி எழுதினார்; "சிறப்பு திட்ட ஓய்வுதியக் குறைப்புக்கள் கடந்த இலையுதிர்காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன; இதற்கு காரணம் தேசிய அளவில் ஆழ்ந்த ஒத்துழைப்பு மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் சீர்திருத்தத்தை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்கள் நடத்தியதுதான்" என்றார்

அக்டோபர் 2007ல் CGT தொழிற்சங்கம் இரயில் தொழிலாளர் வேலநிறுத்தங்கள பொதுவாக ஒருநாள் போராட்டமாக, அவர்களுடைய பெரும் ஆதரவு இருந்த போதிலும், குறைக்க முடிந்தது. நவம்பர் 2007 ல் தொழிற்சங்கங்கள் இரயில் பிரிவில் மீண்டும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தன; ஆனால் இவற்றை மற்ற மாணவர்கள், பொதுபணி தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களுடன் இணைக்க மறுத்தது. இறுதியில் அனைத்து வேலைநிறுத்தங்களும் தோல்வியில் முடிவடைந்தன.

சார்க்கோசியின் புகழ் 2008 இன் ஆரம்ப மாதங்களில் சரிந்து விழுந்தபோது, தொழிற்சங்கங்களுடன் இருக்கும் சமூகக் கொள்கைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக பெரிதும் காட்டிக் கொண்டார். இதன் விளைவுதான் சார்க்கோசிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஏப்ரல் 2008ல் ஏற்பட்ட "பொது நிலைப்பாடு" எனப்பட்ட உடன்பாடு ஆகும். தொழிற்சங்க நிதிய விதிகளில் சீர்திருத்தத்திற்கு ஈடாக, தொழிற்சங்கங்கள் தாங்கள் முக்கிய தொழிற் சட்டங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், இதையொட்டி 35 மணி நேரத்திற்கு மேல் வார வேலைநேரம் நீடிக்கப்படும் என்றும் பிற சமூக செலவினக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் கூறினார். இச்சட்டங்கள் இறுதியில் ஜூலை மாதக் கடைசியில் முடிவு செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்தன.

LCR க்கு மக்களுடைய அதிருப்தி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒத்துழைப்பதற்கு விரோதப் போக்கு பற்றி நன்கு தெரியும்; எனவே இந்த விரோதப் போக்கை போர்க்குண அழுத்தங்கள் கொடுப்பதின் மூலம் தொழிற்சங்கங்களை சீர்திருத்தும் முயற்சியில் அது ஈடுபடுகிறது. இவ்விதத்தில் மாநாட்டு கூட்டத் தொடர் ஒன்றின் தலைப்பு: "தொழிற்சங்கவாதம் எவ்வகை வர்க்கப் போராட்டத்தை இப்பொழுது கொண்டிருக்கிறது?" இக்கூட்டத்தின்போது இதன் அமைப்பாளர்களுள் ஒருவர் கேட்டார்: கோரிக்கைகளை எழுப்பும் மற்றும் போராடும் ஏதோ 'வர்க்கப் போராட்டம்' என்று இருக்கும் போக்குகள் மற்றும் கட்டமைப்புக்களை நாம் எவ்வாறு வளர்த்தெடுக்க முடியும்?"

பங்கு பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று கூறியது: "கடந்த ஆண்டு தொழிற்சங்கத் தலைமைகள் செய்தது போல் கணக்கற்ற நாட்கள் கூப்பிடுவது போதாது; ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கத்தை கட்டமைக்க வேண்டும். வேலைநிறுத்ததில் உள்ள தொழிலாளர்கள் போராட்டம் ஒவ்வொன்றிற்கும் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்கள், செயற்பாடுகள் என... அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிர்ப்பு அணிகள் பெருக வேண்டும், தொடர்ந்து நடைபெற வேண்டும்."

அத்தகைய தொழிலாள வர்க்கத்தின் பெரும் இயக்கம் எதை அடித்தளமாக கொள்ளும் என்ற வினாவிற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபியத்தில் பொதிந்துள்ள மார்க்சிச புரட்சிகர மரபு பற்றிய விவாதங்கள் கூட்டத்தில் முறையாக மறைத்து, ஒதுக்கப்பட்டன. "செயல்திட்டத்தில்" பங்கேற்ற ஒருவர் நகைச்சுவையாக, "ட்ரொ.. என்று ஒருவர்.... அவரைப் பற்றி பேச எனக்கு அனுமதி உண்டா?" என்றார்.

WSWS நிருபர்கள், கூட்டத்தில் ஏன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் பகுப்பாய்வுகளும் அரசியல் மரபியமும் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்படவில்லை என்று கேட்டதற்கு அவர்களுக்கு கிடைத்த பதில்: "மக்களுடைய புத்தியில் ட்ரொட்ஸ்கியை திணிக்க முடியாது. அது அவர்களை பயமுறுத்திவிடும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved