World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Terrorist siege of Mumbai ends after 59 hours

59 மணி நேரத்திற்கு பின்னர் மும்பை முற்றுகை முடிவிற்கு வருகிறது

By Peter Symonds
29 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய கமாண்டோக்கள் எஞ்சிய அடைபட்டுக் கிடந்திருந்த மூன்று துப்பாக்கிதாரிகளை ஆடம்பர தாஜ்மகால் ஓட்டலில் சுட்டு வீழ்த்திய அளவில் மும்பை முற்றுகை இன்று இறுதியில் முடிவிற்கு வந்தது. மும்பை போலீஸ் கமிஷனர் ஹாஸன் கபூர் செய்தி ஊடகத்திடம் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து விட்டதாக கூறினார். பாதுகாப்புப் பிரிவினர் இன்னமும் ஒவ்வொரு அறையாக பார்த்து வருகின்றனர். இறுதித் தாக்குதலில் ஒரு கமாண்டோ இறந்து போனார்.

புதன் மாலை இந்தியாவின் நிதிய மையத்தில் பெரும் ஆயுதக் குவிப்புடன் துப்பாக்கிதாரிகள் வெறியாட்டத்தை தொடங்கியதில் இருந்து குறைந்தது 160 சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டதுடன் 320 பேருக்கு மேல் காயமும் அடைந்துள்ளனர். எவர் பொறுப்பாயினும் சரி, இந்த நிரபராதியான சாதாரண மக்கள் படுகொலையுண்டது இந்தியாவின் பதில்வினைக்கு உரம் அளிக்கும் என்பதுடன் உலகம் முழுவதிலும் போலித்தன "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதற்கும் ஒரு மறைப்பை கொடுக்கும்.

இவ்வெறியர்களின் முதல் இலக்கு சத்திரபதி சிவாஜி இரயில் நிலையம் ஆகும்; இங்கு குறைந்தது இருவர் தானியங்கி துப்பாகிகளில் இருந்து சுட்டதுடன் கை எறிகுண்டுகளையும் கூட்டம் நிறைந்த முக்கிய அரங்கில் பொறுப்பற்று வீசினர். வெளிநாட்டு இளைஞர்களுக்கு நன்கு தெரிந்த Café Leopold என்னும் உணவு விடுதி பின்னர் தாக்கப்பட்டது; அதைத் தொடர்ந்து சாபாத்-லுபாவிட்ச் மையத்தை கொண்டிருக்கும் நாரிமன் ஹெளஸ் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. காமா மற்றும் ஆல்பிளெஸ் மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை தாக்கப்பட்டதை அடுத்து தாஜ்மகால் மற்றும் ஐந்து நட்சத்திர ஒட்டலான ஒபேராய்-டிரைடன்ட் ஒட்டலும் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. செல்லும் இடங்களில் பல துப்பாக்கிச் சூடுகளும் நடைபெற்றன.

இரண்டு டஜன் பயங்கரவாதிகளுக்கும் மேலானவர்கள் நடத்திய இத்தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன என்று இந்திய போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு 15 நிமிஷத்திலும் ஒரு புதிய இலக்கு தாக்கப்படும், அதையொட்டி மிக அதிகப் பெரும் குழப்பம் ஏற்பட்டு பாதுகாப்புப் பிரிவினர் கலவரத்திற்குள்ளாவர் என்ற விதத்தில் இருந்தது. நேற்றைய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஒரூ மூத்த மரைன் கமாண்டோ அதிகாரி தன்னுடைய வீரர்களைக் காட்டிலும் துப்பாக்கிதாரிகள் தாஜ்மஹால் ஓட்டலின் அமைப்பு பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்று கூறினார். இந்தக் குழு "மிகவும் உறுதியுடன் இருந்தது" என்றும், தாக்குதலுக்கு முன்னதாகவே ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவை ஒட்டல்களுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன என்றும் கூறினார்.

நேற்று பிற்பகல், இந்திய பாதுகாப்புப் பிரிவுகள் ஒபெராய்-டிரைடன்ட் ஒட்டலின் கட்டுப்பாட்டை மீட்டனர்; 100 விருந்தாளிகளை பாதுகாப்புடன் வெளியே கொண்டுவந்தனர். பகுதியை மீட்டபோது குறைந்தது 36 சடலங்களை போலீசும் கமாண்டோக்களும் கண்ணுற்றனர். கிட்டத்தட்ட இரு நாட்கள் இராணுவத்தை நெருங்கவிடாமல் வைத்திருந்த இரு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர். நேற்று மாலை இந்திய கமாண்டோக்கள் யூத அடிப்படைவாத சபாட்-லிகோவிச் மையத்தை தாக்கி இரு பயங்கரவாதிகளை கொன்றனர். ஒரு அமெரிக்க யூதப் பாதிரி, அவருடைய இஸ்ரேலிய மனைவி உட்பட ஐந்து பிணையாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. நேற்று மாலை கூட்டாட்சி உள்துறை அமைச்சர் சிறீபிரகாஷ் ஜெயஸ்வால் இறுதி இறந்தோர் பட்டியல் 200 ஆகக்கூடும் என்று எச்சரித்தார். ஆரம்ப அறிக்கைகள் துப்பாக்கி ஏந்தியவர்கள் குறிப்பாக அமெரிக்க, பிரிட்டிஷ் குடிமக்களை இலக்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்ட வகையில், இதுவரை இறந்தவர்களில் இரண்டு பிரெஞ்சுக்காரர்கள், மூன்று ஜேர்மனியர், ஒரு இத்தாலியர், ஒரு ஜப்பானியர், இரு ஆஸ்திரேலியர்கள், ஒரு கனேடியர் மற்றும் ஒரு சிங்கப்பூர்க்காரரும் ஐந்து அமெரிக்கர்கள், இரு பிரிட்டிஷ்காரர்களும் இருந்தனர். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் ஆவர்; அவர்களில் பெரும்பாலனவர்கள் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

எந்த அமைப்பு அல்லது அமைப்புக்கள் இத்தாக்குதல்களுக்கு பொறுப்பு என்பது இன்னமும் தெளிவாகவில்லை. இதுவரை அறியப்பட்டிராத, தன்னை டெக்கான் முஜாஹைதீன் என்று அழைத்துக்கொண்ட அமைப்பு வியாழனன்று நிகழ்விற்கு பொறுப்பை ஏற்பதாக கூறியது. முந்தைய பயங்கரவாத தாக்குதல்களை போலவே, இந்திய அரசாங்கம் உடனடியாக பாக்கிஸ்தானை நோக்கி விரலைக் காட்டியுள்ளது. வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜி செய்தி ஊடகத்திடம் கூறினார்: "ஆரம்ப சான்றுகள், ஆரம்ப ஆதாரங்கள், பாக்கிஸ்தானுடனான் பிணைப்புக்கள் இக்கூறுபாடுகளில் உள்ளன என்பதைக் காட்டுகின்றன."

பல இந்திய செய்தி ஏடுகளும் மூன்று பிடிபட்ட துப்பாக்கிதாரிகளை போலீஸ் விசாரணை செய்தது என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்து நாளேட்டின்படி, அஜ்மல் அமீர் கமல் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு பாக்கிஸ்தானிய நாட்டினர் போலீசிடம் தான் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா- வைச் சேர்ந்தவர் எனக் கூறியதாக உள்ளது. அமெரிக்க அதிகாரிகளும் லஷ்கர்-இ-தொய்பா அல்லது மற்றொரு காஷ்மீரி போராளிக் குழுவான ஜெய்ஸ்-இ-மொகம்மதுதான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இத்துடன் எப்பொறுப்பும் இல்லை என்று லஷ்கர்-இ-தொய்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தன்னை விசாரித்தவர்களிடம் தானும் மற்றும் 11 பேரும் பாக்கிஸ்தானை சேர்ந்த கராச்சி துறைமுகத்தில் இருந்து ஒரு வணிகக் கப்பலில் புறப்பட்டதாகவும் இதன் பின் குஜராத்தில் ஒரு மீன் படகை கடத்தி, இந்திய கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் பிரிவிடம் இருந்து மும்பை நோக்கி வரும்போது தப்பியதாக கமல் கூறியதாக இந்து தெரிவிக்கிறது. இந்திய கடற்படை இரு பாக்கிஸ்தானிய சரக்குக் கப்பல்களை நிறுத்தி பின் சந்தேகத்திற்கு இடம் இல்லை என்ற வகையில் ஒன்றொன்பின் ஒன்றாக அனுப்பிவிட்டது. மும்பையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு சிறிய ஊதி உப்பவைக்கும் ரப்பர் படகை காட்டியுள்ளனர்; இதுதான் கடற்கரையை அடைவதற்கு துப்பாக்கிதாரிகள் குழு ஒன்றால் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் கட்டத்தில் எந்த அமைப்பு பொறுப்பு என்பதற்கான உறுதியான சான்று ஏதும் வெளியிடப்படவில்லை. பாக்கிஸ்தான் அரசாங்கம் இத்தாக்குதல்களில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வலுவாக மறுத்துள்ளது; மேலும் இந்தியாவை இரு நாடுகளுக்கும் இடையே அழுத்தங்களை தூண்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. நல்லெண்ணத்திற்கு அடையாளமாக இஸ்லாமாபாத் பாக்கிஸ்தானின் இராணுவ உளவு நிறுவன (ISI) தலைவரை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷூஜா பாஷாவை-- விசாரணையில் உதவுவதற்கு அனுப்ப வேண்டும் என்ற புது டெல்லியின் வேண்டுகோளை ஏற்றுள்ளது.

இந்தியாவில் முன்னரே முடிவெடுக்கப்பட்ட பயணத்திற்கு வந்துள்ள பாக்கிஸ்தானிய வெளியுறவு மந்திரி மெஹ்மூத் குரேஸ்தி அறிவித்தார்: "நாங்கள் இதற்குப் பொறுப்பு அல்ல; இது போன்ற எத்துடனும் தொடர்பை கொள்ளுவதும் எங்கள் அக்கறை இல்லை." ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தானத்தில் மோசமான போரில் ஈடுபட்டிருக்கும் பாக்கிஸ்தான் அரசாங்கம் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் நேரடித் தொடர்பு கொண்டிருப்பது என்பது இருக்க முடியாது. புதுதில்லியை பகைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக இஸ்லாமாபாத் இந்தியாவுடனான அழுத்தங்களை குறைக்கத்தான் முற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி முந்தைய பாக்கிஸ்தானிய அணுக் கொள்கையான முதல் தாக்குதல் இருக்கலாம் என்பதையும் மாற்றிவிட்டார்.

ஆனால் பாக்கிஸ்தானின் ஐஎஸ்ஐ உடைய பிளவுக் கூறுபாடுகள் அல்லது இராணுவத்தின் கூறுபாடு ஏதேனும் ஒன்று மும்பை தாக்குதல்களை இந்தியாவிற்குள் வேண்டுமென்றே அழுத்தங்களை தூண்ட மற்றும் ஏற்கனவே உறுதியற்று இருக்கும் பாக்கிஸ்தானிய அரசாங்கத்தை இன்னும் உறுதியற்றதாக்குவதற்கு தூண்டுதல் நடத்தியிருக்கக்கூடும் என்பது சாத்தியக் கூறுதான். இராணுவத்தின் சில பிரிவுகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுத்திருப்பது பற்றி எதிர்ப்புக் காட்டியுள்ளன; அதுவும் "பயங்கரவாதத்துடன் போரிடல்" என்ற மறைப்பில் அவர்கள் ஆப்கானிய எல்லைப் பகுதிகளில் இருக்கும் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்களை நசுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது உண்மையானால், மும்பையின் கொடூர நிகழ்வுகள் இப்பகுதியில் அமெரிக்காவின் குற்றம் சார்ந்த பங்கின் ஆழ்ந்த உறுதியற்ற பாதிப்புக் கொடுக்கும் நிலைப்பாட்டிற்கு அது மற்றொரு உதாரணம் ஆகும்.

அதே போல் லஷ்கர்-இ-தொய்பா போன்ற காஷ்மீர் பிரிவினைக் குழு தாக்குதல்களுக்கு பொறுப்பாக இருக்கக் கூடியதும் சாத்தியமானதுதான். குறிப்பிடத்தக்க வகையில் யூத மையத்தில் இருந்த துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்திய தொலைக்காட்சிக்கு நேற்று தொலைபேசி தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விட்டதாக தெரிகிறது. "காஷ்மீரில் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இராணுவத்தினர் முஸ்லீம்களை கொன்றது பற்றித் தெரியுமா? இந்த வாரம் காஷ்மீரில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றித் தெரியுமா?" என்று அந்த நபர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய இராணுவம் இந்திய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜம்மு, கஷ்மீரில் நடத்தும் செயல்பாடுகள் எவ்விதத்திலும் மும்பை பொறுப்பற்ற படுகொலையை நியாயப்படுத்தாது என்றாலும், பல தசாப்தங்களாக முஸ்லீம் பெரும்பான்மை இருக்கும் மாநிலம் அடக்கிவைக்கப்பட்டுள்ளது சீற்றத்தையும் எதிர்ப்பையும் ஊற்றுக்கள் போல் தோற்றுவிக்கத்தான் உதவியுள்ளன; அவை பல காஷ்மீரி பிரிவினைவாத, இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தயாராக புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உதவுகின்றன. கடந்த வெள்ளியன்று இந்திய அதிகாரிகள் இரு தசாப்தங்கள் எழுச்சியின் விளைவில் மொந்த இறப்பு எண்ணிக்கையை 47,000 என்று திருத்தியது. இந்திய பாதுகாப்புப் படைகள் நீதிமுறைக்கு அப்பாற்பட்ட விதத்தில் கொலை செய்வதில், விதிமுறையற்ற தடுப்புக்காவல் மற்றும் காஷ்மீரில் சந்தேகத்திற்கு உரிய போராளிகளை சித்திரவதை செய்தல் ஆகியவற்றில் இழிந்த பெயர் வாங்கியவை.

கடந்த வாரம், போலீசும் துணை இராணுவத்தினர்களும் மாநில தேர்தல்களில் இரண்டாம் சுற்றின்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த எதிர்ப்பாளர்களுடன் மோதியதில் இப்பகுதியில் அழுத்தங்கள் வெளிவந்தன. இந்த எதிர்ப்புக்கள் இந்திய அரசாங்கத்தின் தூண்டுதல் செயலான காஷ்மீரில் இந்து ஆலையம் கட்ட நிலம் கொடுத்ததை அடுத்து பலமாதங்களாக வந்த அரசியல் பூசல்களை தொடர்ந்தன.

இறுதியாக, மும்பை தாக்குதல்கள் இந்தியாவையே தளமாகக் கொண்டிருக்கும் இஸ்லாமிய குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவை பல தசாப்தங்களாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டை ஒட்டி வளர்ந்துள்ளன. இந்திய நடைமுறை வகுப்பாவதத்தை நம்பியிருப்பது இந்து மேலாதிக்கவாத பாஜக கடந்த இரு தசாப்தங்களில் அரசியலில் ஏற்றம் பெற்றிருப்பது மூலம் உதாரணமாகிறது. இந்திய முஸ்லிம்கள், மக்களின் மிக ஒடுக்கப்பட்ட, வறிய பிரிவுகளில் ஒரு பகுதி ஆவர்; பாஜக இன்னும் பிற இந்து வெறியர்களின் வகுப்புவாத இனவழிக் கொலைகளுக்கு இலக்காக இருந்திருக்கின்றனர்.

மும்பை நிகழ்வுகளுக்கு எவர் பொறுப்பாயினும், பயங்கரவாதிகளின் சீற்றம் இந்தியா மற்றும் சர்வதேச தீவிர வலது சாரியின் நோக்கங்களுக்கு சார்பாக செயலாற்றும் வகையில் அவற்றில் தானே சென்று சிக்கியுள்ளது. இந்திய செய்தி ஊடகம், வணிகத் தலைவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ஆகியோர் பயங்கரவாதத்தை எதிர்த்தல் என்ற பெயரில் கடுமையான புதிய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். பா.ஜ.க தலைவர் எல்.கே. அத்வானி இந்திய இராணுவம் பயங்கரவாத குண்டுவீச்சுக்களில் இந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையது என்று வெளிவந்த தகவல்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இந்திய பாதுகாப்புப் பிரிவுகள் இந்து பயங்கரவாதிகள் பற்றி "ஆழ்ந்து கவனம் செலுத்திய நிலையில்" முஸ்லிம்களிடத்திடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை நழுவ விட்டனர் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் தெற்கு ஆசியாவின் இரு அணுசக்தி ஆயுதப் போட்டியாளர்களான இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே வியத்தகு அழுத்த அதிகரிப்பை ஏற்படுத்தும் ஆபத்தையும் கொண்டுள்ளது; இவை ஒவ்வொன்றும் தங்கள் ஆதரவுத் தளத்தை பெருக்க வகுப்புவாதத்தைத்தான் நம்பியுள்ளன. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தின்மீது டிசம்பர் 2001ல் காஷ்மிர் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளும் பெரும் படைகளை திரட்டி முழுப் போரின் விளிம்பில் நின்றன; சர்வதேச அழுத்தத்தை ஒட்டித்தான் போர் மூளாமல் போயிற்று. பாக்கிஸ்தானில் உறுதியற்ற ஆட்சி மற்றும் இந்தியாவில் அடுத்த ஆண்டு தேர்தல்கள் என்று உள்ள இந்நிலையில், மும்பைத் தாக்குதலை அடுத்து அதே போன்ற அழுத்தங்கள் பெருகுவதற்கான திறன் இருக்கின்றது.