World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian government to leave Tamil refugees detained on Nauru

நெளருவில் இருக்கும் தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் அங்கேயே தடுத்துவைத்துள்ளது

By Mike Head
14 September 2007

Back to screen version

ஆஸ்திரேலிய அரசாங்கம், 72 இலங்கை தமிழ் அடைக்கலம் கோரியோரை உண்மையான அகதிகள் என்று ஏற்றும் கூட, அவர்களை தொலைவில் உள்ள பசிபிக் தீவான நெளருவில் சிறைவைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவு தஞ்சம் கோருவோரின் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மறுப்பது ஆகும். இதன் விளைவு அவர்கள் ஆறு மாத காலமாக காவலில் வைக்கப்பட்டிருக்கும் நெளருவில் இன்னமும் காலவரையற்று சிறையில், தனி, சமூக, பொதுஉரிமைகள் ஆகியவற்றை இழந்து தாங்கள் விரும்பும் இடத்தில் வாழக்கூடிய உரிமைகளும் இல்லாமல் இருப்பது என்பதாகும்.

இலங்கை இராணுவத்தின் கைது, சித்திரவதையில் இருந்து தப்பி ஓடி வந்திருக்கும் இவர்களை ஏற்பதற்கு ஏனைய பெயர்குறிப்பிடப்படாத நாடுகளிடம் கோரப்படும் என குடிவரவுத்துறையின் மந்திரியான Kevin Andrews குறிப்பிட்டார். ஆனால் இதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் இது தஞ்சம் கோருவோரை தடுக்கும் வகையிலான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும் என்றும் அவர் கூறினார். "சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடுவோர் எண்ணிக்கை குறைந்திருப்பது, ஆஸ்திரேலியாவினுள் சட்ட விரோதமாக நுழைபவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது என்ற பிரதமர் ஹோவர்ட் அரசாங்கத்தின் தெளிவான கொள்கையின் நேரடி விளைவுதான்" என்று ஆண்ட்ரூஸ் கூறினார். இவருடைய அறிக்கை அகதிகள் உடன்படிக்கையை (Refugee Convention) அப்பட்டமாக மீறுகிறது; அந்த ஆவணம் அகதிகளை துன்புறுத்துதல் அல்லது தண்டனைக்கு உட்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கு முன்பே இந்தோனேசியாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணைக்குழு (UNHCR) 83 பேரைக்கோண்ட இத் தமிழ் குழுவில் இருவருக்கு தஞ்சம் கோருவோர் மனுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது. கூர்மையான ஆயுதங்கள் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு பேர்த்தில் மருத்துவ உதவி பெற்று வரும் ஒரு நபரின் மனு பரிசீலனையில் உள்ளது. மற்றொருவரின்

மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நெளரு பெண்ணை அநாகரிகமாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறு பேரின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அகதிகளின் மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒரு ஆஸ்திரேலிய போர்க்கப்பலான HMAS Success ஆல் பெப்ருவரி 20ம் தேதி அதிகாலையில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிற்கு அருகே பிடிக்கப்பட்டது. பல நாட்களும் நீர் கசிவு ஏற்பட்டிருந்த படகுகளில் தத்தளிக்கவிடப்பட்டிருந்த பின் அவர்கள் தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்புக் காவல் மையத்தில் ஒரு மாத காலம் வைக்கப்பட்டிருந்தனர்; எவ்வித செய்தி ஊடகத் தொடர்போ, அகதிகள் குழுக்கள் தொடர்போ அல்லது சட்டபூர்வ உதவியோ அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இவர்கள் புறப்பட்டு வந்திருந்த இந்தோனேசியாவிற்கு மீண்டும் இவ் அகதிகளை திருப்பி அனுப்புதல் என்ற ஹோவர்ட் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இந்தோனேசிய அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. மாறாக அவர்கள் "பசிபிக் தீர்வு" ("Pacific Solution") என்று அழைக்கப்பட்ட ஒரு முறையின்கீழ் நெளருவிற்கு அனுப்பப்பட்டனர்; துன்புறுத்தப்படல் மற்றும் போரில் இருந்துதப்பிப் பிழைக்க முற்படும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஒதுக்கமான பசிபிக் தீவு முகாம்களில் மந்தைகளாக அடைக்கப்படுகின்றனர்.

பல முந்தைய பாதிப்பாளர்கள், முக்கியமாக ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வந்தவர்கள், நெளருவிலோ பாப்புவா கினியின் மனுஸ் தீவிலோ பல ஆண்டுகளாக பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டுள்ளனர்; சிலர் ஐந்து ஆண்டுகள் கூட அப்படி உள்ளனர். போர் மற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்து தப்பி வரும் முயற்சிகளில் ஈடுபட்ட "குற்றத்திற்காக" இவர்கள் தீவிர மனப்பாதிப்பு உட்பட கொடூரமான மனித விலை பலவற்றை கொடுக்க வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணைக்குழு மற்றும் உள்ளூர் அகதிகள் குழுக்கள் ஆண்ட்ரூவின் முடிவை கண்டித்துள்ளன. அகதிகளுடன் சற்றே நேரத்தை கழித்திருந்த Susan Metcalfe என்னும் அகதிகளுடைய வக்கீல் "நெளருவில் அவர்கள் காலவரையற்று மாட்டிக் கொள்ள நேரலாம்.ஆஸ்திரேலியாவின் பொறுப்பு என்ற பரந்த அளவில் கருதப்படும் மக்களை வேறு எந்த மூன்றாம் நாடும் ஏற்றுக்கொள்ளுவதில் தலையிடுவது என்பது பொதுவாக நடக்காது." என கூறினார்.

Asylum Seeker Resource Centre உடைய ஒருங்கிணைப்பாளரான Pamela Curr கூறினார்: "அவர்கள் உடலளவிலும், மனத்தளவிலும் பெரும் சோர்வு ஏற்பட்டு வேறு வழியின்றி அவர்களுக்கு இடத்தை ஆஸ்திரேலியா கொடுக்கும் வரை அவர்கள் நெளருவில்தான் வாடுவர். இதுதான் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெளருவில் காத்திருந்த ஆப்கானிஸ்தான், ஈராக்கிய அகதிகளுக்கும் நேர்ந்தது."

அரசாங்கம் தங்களுடைய தஞ்சம் கோரும் மனுக்களை பரிசிலிப்பதற்கு காட்டிய தாமதம் பற்றி தமிழர்கள் ஒரு ஏழு-நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆண்ட்ரூவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த வாரம் முடிவடைந்த இந்த எதிர்ப்பு ஆஸ்திரேலியாவில் கணிசமான ஆதரவைப் பெற்றது; இது சாதாரண மக்கள் ஹோவர்ட் அரசாங்கத்தின் அகதிகள்-எதிர்ப்புக் கொள்கை பற்றி வெறுப்பு உணர்வு கொண்டுள்ளது பெருகியிருப்பதை காட்டும் மற்றொரு குறிப்பு ஆகும்.

தமிழ் அகதிகளின் சார்பில் பேசிய 34 வயதான புலேந்திரன் பத்மேந்திரா, பட்டினிப் போராட்டத்தை ஆஸ்திரேலியர் எதிர்கொண்டவிதம் உள்ளத்தை தொடுவதாக இருந்தது என்றும் 1,000க்கும் மேற்பட்ட ஆதரவு மின்அஞ்சல்கள் வந்தன என்றும் குறிப்பிட்டார். "மக்கள் கூறுகின்றனர், 'உங்களுடைய உள்ளங்களையும், உடல்களையும் வருத்திக்கொள்ளாதீர்கள் என்று.' நாங்கள் ஆஸ்திரேலிய மக்களை விரும்புகிறோம்; எனவேதான் நாங்கள் அங்கு வர விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.

தமிழர்களை ஒதுக்கி வைப்பதில் ஆண்ட்ரூஸ் கொண்டிருந்த உறுதிப்பாடு, குடியேறுபவர்கள் தடுப்புக் காவல் மையங்கள் பற்றி ஆண்டுப் பரிசீலனை மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையாளர் Greame Innes நெளரு முகாமிற்கு செல்ல விரும்பியதற்கு அனுமதி கொடுக்க மறுத்தவகையில் வெளிவந்தது. மனித உரிமைகள் சட்டத்தின்படி அனைத்து ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டு மையங்களையும் கண்காணிக்கும் உரிமை இருப்பதாக Innes வலியுறுத்தினார். வறுமையில் வாடியிருக்கும் நெளரு அரசாங்கத்திற்கு முகாம் செலவுகளை கான்பரா கொடுக்கிறபோதிலும் Innes இன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பொருள் இது என்று ஆண்ட்ரூ விடையிறுத்தார்.

இலங்கை அரசாங்கம் இக்குழுவை "பொருளாதார அகதிகள்" என்று முத்திரையிட்டு அவர்கள் "நாட்டிற்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட வேண்டும்" என்று கோரியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இவ்வகதிகள் தாங்கள் பிரிவினைவாத தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாட்டை உள்நாட்டுப் போரில் ஆழ்த்திவிட்ட கொழும்பு அரசாங்கத்திடம் இருந்துதான் தப்பியோடி வருவதாக கூறியுள்ளனர். ஆண்ட்ரூசிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் 83 பேரில் 57 அகதிகள் தாங்கள் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறினர்.

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்தே தமிழ் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானவர்கள் தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடக்கும் இராணுவ தாக்குதல்களை அடுத்து இடம் பெயர்ந்துள்ளனர். சில அகதிகள் முகாம்களும் இராணுவ பீரங்கிப்படைகளால் தாக்கப்பட்டு பலர் மடிந்ததுடன், சாதாரண மக்கள் இடம் பெயர்ந்து செல்லவும் நேரிட்டது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் காணாமற் போய்விட்டனர் அல்லது படையினராலும் சிங்கள இராணுவ குழுக்களாலும் கொல்லப்பட்டு விட்டனர்.

இறுதியில் சர்வதேச அகதிகள் உடன்பாட்டின் மிகக் கடுமையான, குறுகிய சோதனைகளை திருப்தி செய்துள்ளனர் என்பதை ஆண்ட்ரூஸ் ஒப்புக் கொண்டார்; அந்த உடன்பாட்டின்படி தஞ்சம் கோருபவர்கள் மத, இன, அரசியல் துன்புறுத்தலினால் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ''ஆபத்திற்கு உட்பட்டுள்ளனர் என்று" தக்க முறையில் நிரூபிக்க வேண்டும். ஆயினும்கூட, அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்று ஆண்ட்ரூஸ் கருதுகிறார்.

மாறாக, அவர்கள் அமெரிக்காவிற்கு, இவ் ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ள ஒரு விவாதத்திற்கு உரிய உடன்பாட்டின்கீழ் அனுப்பப்படலாம்; அந்த உடன்படிக்கையின்படி தற்பொழுது குவான்டநாமோ குடாவில் காவலில் உள்ள ஹைட்டிய, கியூபா அகதிகள் ஆஸ்திரேலியாவிற்கு தள்ளப்படலாம். மே மாதத்தில் குடியேற்றம், குடியுரிமைத் துறையின் செயலாளர் ஆண்ட்ரூ மெட்காப் ஒரு செனட் விசாரணைக் குழுக் கூட்டத்தில் இலங்கைவினர் அகதிகள் என்று கண்டறியப்பட்டால் அமெரிக்காவில் குடியிருத்தப்படலாம் என்று உறுதிப்படுத்தினார்.

இலங்கையினரை தவிர நெளருவில் பர்மாவினை சேர்ந்த ஏழு பேர் தஞ்சம் கோரியுள்ளனர்; இவர்கள் அங்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து உள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணைக்குழுவின் கருத்தின்படி நெளரு மற்றும் மனுஸ் தீவுகளில் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் நான்கு சதவிகிதத்தினர்தான் மற்ற நாடுகளில் பின்னர் ஏற்கப்பட்டனர். 50 தஞ்சம் கோருவோர் குழு ஒன்று நெளருவில் மூன்றரை ஆண்டுகளை கழித்த பின்புதான், 2005ம் ஆண்டு ஒரு மனநோய்களுக்கான சுகாதாரக் குழுவால் பலருமே தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்று எச்சரிக்கப்பட்ட பின்னர் மறு குடியிருப்பை பெற முடிந்தது.

பெருகும் எதிர்ப்பு

1996ல் பதவிக்கு வந்ததில் இருந்து, ஹோவர்ட் அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளின் பாதிப்பில் இருந்து --மோசமாகி வரும் சமூகச் சூழ்நிலை, பெருகிவரும் சமத்துவமின்மை இவற்றில் இருந்து-- கவனத்தை திசை திருப்பும் வகையில் அகதிகளை அரக்கத்தனமாக சித்தரித்து பலிகடாக்களாகவும்

செய்துள்ளது. 2001 தேர்தலில் தோல்வியை எதிர்நோக்கியிருந்த அது, கடற்படை கப்பல்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக தங்கள் குழந்தைகளையே கடலில் தூக்கி எறிந்தனர் என்ற தவறான முறையில் பிரச்சாரத்தையும் செய்திருந்தனர்.

அதே நேரத்தில் அரசாங்க மந்திரிகள் அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்தி, எந்த ஆதாரமும் இல்லாமல், தஞ்சம் கோருபவர்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியும் என்ற குற்றச்சாட்டை கூறினர். இப்பிரச்சாரம் அக்டோபர் 2001ல் உச்சக் கட்டத்தை அடைந்தது; அப்பொழுது அகதிகள் படகுகளை திருப்பி அனுப்பவதற்காக Operation Relex என்று பெயரிடப்பட்ட அரசாங்கத்தின் கடற்படை முற்றுகை, 150 குழந்தைகள் உட்பட 353 பேர் வந்த SIEV X என கூறப்பட்ட படகு, ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பிற்குட்பட்ட ஜாவாக் கடல் பகுதியில் மூழ்கி இறப்பதற்கு வழிவகுத்தது.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதுடன் அரசாங்கத்தின் பிரச்சாரம் இன்னும் பரந்த அளவில் தேசியவாதத்துடன் பிணைந்தது. அகிதகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் "வெள்ளை ஆஸ்திரேலியா" மொழிச் சோதனைகள் மற்றும் பிறவற்றை ஆங்கில அறிவு, திறமைகள், தகுதிகள் உடையவர்களை மட்டும் குடியேறும் வகையில் ஊக்குவித்தது. இதற்கிடையில், பல தற்காலிக அனுமதிதிட்டங்களும் பெருகி முதலாளிகள் குறைவூதிய தொழிலாளர்களை நியமிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது; இத்தொழிலார்கள் பாதுகாப்பு அற்ற வசிக்கும் அந்தஸ்தை கொண்டிருந்தனர்; இதையொட்டி கிட்டத்தட்ட அடிமை உழைப்பு என்ற வகையில் சுரண்டப்பட்டனர்.

தொழிற் கட்சியிலிருந்து வரும் இரு கட்சிமுறை ஆதரவினால் மட்டுமே அரசாங்கம் தன்னுடைய மிருகத்தனமான கொள்கையை தொடரக் கூடியதாக இருந்து வருகிறது, தொழிற்கட்சி, தஞ்சம் கோருபவர்கள் கட்டாயமாக காவலில் வைக்கப்படுவதற்கு தொடர்ந்து முழுதாய் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது; இந்நடைமுறை 1990 களின் தொடக்கத்தில் ஹாக் மற்றும் கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

அதிகரித்தளவில் மதிப்பிழந்துவரும் அரசாங்கத்தின் "பசிபிக் தீர்வு" என்பதில் இருந்து தன்னை அந்நியப்படுத்தி வைத்துக் கொள்ள முற்பட்டுள்ள தொழிற்கட்சி நெளரு முகாமை மூடிவிடுவதாக உறுதி கொடுத்துள்ளதுடன் அதற்குப் பதிலாக தஞ்சம் கோருவோரை கிறிஸ்துமஸ் தீவில் பரிசீலிப்பதாக கூறியுள்ளது. இது ஒரு தந்திரோபாய வேறுபாடுதான்; ஏனெனில் ஆஸ்திரேலிய குடியேற்ற பகுதியில் இருந்து கிறிஸ்துமஸ் தீவுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு காவலில் வைக்கப்பட்டவர் எவருக்கும் சட்ட முறையில் பங்கு பெற முடியாது; அதையொட்டி அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்டால், உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடையாது.

இந்த வாரம், அரசாங்கம் தேவையில்லாமல் பணத்தை நெளரு முகாமில் வீணடிப்பதற்கு கடிந்துள்ளது; அதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் பெரிய புதிய நிலையத்தை பயன்படுத்தியிருக்கலாம் என தொழிற்கட்சி கூறுகிறது. தொழிற்கட்சியின் குடியேற்ற பிரிவு செய்தித் தொடர்பாளர் Tony Burke "உண்மை என்னவென்றால், நெளருவில் இருந்து மறுகுடியிருப்பு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதியை இறுதியில் பெற்றுள்ளனர்." என கூறினார்.

ஒரு வானொலிப் பேட்டியில் அழுத்தம் கொடுத்து கேட்கப்பட்டதற்கு Burke ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் இறுதியில் "சில" அகதிகளை ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்கும் என்றார். ஆனால் வாஷிங்டனுடன் குடியேறுபவர்களை "மாற்றிக் கொள்ளும்" உடன்பாடு, ஒரு "சட்டவிரோத குடியேற்றம்" என்று அரசாங்கத்தை தாக்கியுள்ளார். "இப்பொழுது இருக்கும் நிலையில் ஒரு மூன்றாம் நாடு என்ற விருப்பம் அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் விந்தையான அகதிகள் உடன்பாட்டை புதுப்பித்தால்தான் வரும். அரசாங்கம் இந்த விருப்பத்தை பயன்படுத்தினால், அமெரிக்காவின் பச்சை அட்டை வேண்டும் (US green card) என்று விரும்புபவர்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு காந்தமாகி விடும்." என்று அவர் கூறினார்.

மக்களுடைய அக்கறை பற்றி ஆழ்ந்து அறிய முற்பட்டுள்ள பசுமைக் கட்சியினர், ஆண்ட்ரூஸின் முடிவைக் கண்டித்து, "பசிபிக் தீர்வை" "ஒரு சர்வதேச சங்கடம்" என்ற குறிப்பிட்டு அது அகற்றப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு மாற்றீடாக பசுமையினர் "சமூக அடிப்படையிலான" தஞ்சம் கோருபவர்கள் மற்றும் குடிவரவு அனுமதி விதிக்கு பொருந்தாதவர் எனக் கருதப்படுபவர்கள் திருப்பி அனுப்பப்டுவது இன்னும் தொடரப்படுகின்ற பிற "அங்கீகாரம் இல்லாத" வருகைகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இறுதிப் பகுப்பாய்வில், தொழிற்கட்சி, பசுமைவாதிகள் இருவருமே பிரதம மந்திரி ஜோன் ஹோவர்டின் 2001 தேர்தல் அறிவிப்பான "இந்நாட்டிற்குள் எவர் நுழைவர் என்பதை நாம்தான் முடிவெடுப்போம்" என்பதுடன் சேர்ந்து கொண்டுள்ளனர். இரு கட்சிகளுமே தேசிய அரசை அடித்தளமாக கொண்ட கட்டுப்பாட்டு முறையின் வடிவமைப்புத்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளன; அதன்படி அரசாங்கங்கள் ஒருதலைப்பட்சமாக பெருநிறுவன உயரடுக்கின் நலனை ஒட்டி வறிய, தொழிலாள வர்க்க மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கண்காணிக்க முடியும். செல்வந்தர்கள் அவர்கள் மூலதனத்துடன் உலகில் எங்கும் தடையின்றிச் செல்ல முடியும் என்ற நிலையில், சாமானிய மக்கள் இன்னும் பெருகிய முறையில் எல்லைக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளுகின்றனர்.

சுற்றுச் சூழல் மாறுதல், அகதிகள் சட்டவரைவு செனட் மன்றத்தில் கட்சி கொண்டுவந்த விதத்தில் பசுமை வாதிகளின் நிலைப்பாடு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. இதன்படி உயர்ந்து வரும் கடல்மட்டத்தின் விளைவாக நிலமட்டத்திற்கு கீழுளள பசிபிக் தீவுகளின் இருந்து நிறைய மக்கள் நாட்டினுள் புகுவதை எவ்வாறு சமாளிப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட உரையில் பசுமைக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், செனட் உறுப்பினருமான Kerry Nettle "இச்சட்டவரைவின்படி, Tuvalu சுற்றுச்சூழல் மாறுதலைப் பெற்றுள்ளது என்றும், இது சுற்றுச் சூழல் பேரழிவினால் உந்துதல் பெற்றுள்ளது என்றும் அதற்கு காரணம் எழுச்சி பெற்று வரும் கடல்மட்ட அளவுகளும் கூடுதலான ஆழ்ந்த தன்மையுடைய புயல்களும்தான் என்றும் குடியேற்றப்பிரிவு மந்திரி அறிக்கை விட வேண்டும்'' எனவும், ஆண்டு ஒன்றுக்கு 300 Tuvalu வாழ் மக்கள் சுற்றுச் சூழல் பாதிப்பு அகதிகளாக ஏற்கப்படலாம் என்று மந்திரி வரையறுக்காலம் என்றும் அவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் பரிசீலக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தலாம்." என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved