World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Scientists warn Spain could see mass spread of deserts

ஸ்பெயினின் பெரும் பகுதிகள் பாலைவனப் பகுதிகளாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை

By David O'Rourke
28 August 2007

Back to screen version

சுற்றுச் சூழல் மாசு, கரையோர அபிவிருத்திகள் மற்றும் உலகம் வெப்பமயமாதல் ஆகியவற்றை அடுத்து மாபெரும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை ஸ்பெயின் எதிர்கொள்ளக்கூடும் என்று அண்மமையில் பல அறிவியல் தகவல்கள் எச்சரித்துள்ளன.

ஸ்பெயின் நகரங்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் சட்டபூர்வ காற்று மாசு வரம்புகளை மீறியுள்ளதாகவும், அதுவே ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 16,000 இறப்புக்களுக்கு காரணமாக உள்ளது என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது. பூகோள வெப்பத்தை விளைவிப்பதாக எண்ணப்படும் பலவகை வாயுக்களின் வெளிப்பாடுகள் (Greenhouse gas emissions) 1990ல் இருந்து 52 சதவிகிதம் அதிகமாகிவிட்ட நிலையில் ஸ்பெயின் ஐரோப்பாவிலேயே மிகவும் மாசுபட்டுள்ள நாடாக மாறியுள்ளது. மற்றொரு அறிக்கை ஸ்பெயினின் கடலோரப் பகுதிகளில் தடையற்ற வளர்ச்சி --கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கட்டுமானங்கள் வந்துள்ளமை-- நாட்டின் மிக முக்கியமான இயற்கைச் சூழலை அழித்துவிட்டதாக தெரிவிக்கிறது.

மிகவும் முக்கியமானதும், பரந்த அளவில் உணரப்படாததுமான ஒரு பிரச்சினை ஸ்பெயினின் பெரும்பகுதி ஒரு பாலைவனமாகக் கூடும் என்பதுதான். செப்டம்பர் மாதம் மாட்ரிட்டில் தன் ஆண்டு மாநாட்டை நடத்த இருக்கும் ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதல் எதிர்ப்பு மாநாட்டில் (United Nations Convention to Combat Desertification UNCCD) உள்ள விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து அவமதிப்பைச் செய்வதால் நாடு பாலைவனப்பகுதிகள் படர்ந்ததாக மாறிவிடக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்; இந்நிகழ்வு உலக வெப்பமயமாதலால் கூடுதலான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி பாலைவனமாகும் ஆபத்தில் உள்ளது; மற்றொரு மூன்றில் ஒரு பகுதி அந்த அச்சுறுத்தலின்கீழ் இருக்கிறது.

கானரித் தீவுகள் மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியைச் சுற்றி இருக்கும் நிலங்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவை பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று ஆய்வு தெரிவிக்கிறது; ஆனால் இந்த ஆபத்து விகிதம் Alicant, Murcia பகுதிகளில் 100 சதவிகிதமாகக் கூட இருக்கலாம். காஸ்டில்லா லா மன்சா (44 சதவிகிதம் உயர்மட்ட பாலைவனமாகக்கூடிய ஆபத்து), கட்டலோனியா (42 சதவிகிதம்), மாட்ரிட் (37 சதவிகிதம்), அரகான் (29 சதவிகிதம்), பாலெரைக் தீவுகள் (25 சதவிகிதம்), அண்டலூசியா (22 சதவிகிதம்) என்று மற்ற பகுதிகளும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன.

பொதுவாக மிக அதிக அளவு மேய்ச்சல் மற்றும் மரங்கள் வெட்டுதல், காட்டுத் தீக்கள், அவற்றைத் தொடர்ந்து காற்று வீசுதல், சாகுபடி நிலத்தில் நீர் அரிப்பு ஏற்படுதல் ஆகியவற்றால் பாலைவனமாதல் நிகழ்கிறது. வறட்சி மற்றும் சுற்றுலா, நகரமயமாக்கல், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகக் கூடுதலான வகையில் பாசன விவசாயம் நடத்துதல் ஆகியவற்றிலிருந்து எழும் நீர்த்தட்டுப்பாடு ஆகியவற்றால் நிலைமை மோசமடைகிறது.

வட ஆபிரிக்காவில் பாலைவனங்களில் இருந்து குறுகிய ஜிப்ரால்டர் சந்தி கடல் ஓடையினால் மட்டும் பிரிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் பல நேரமும் வறட்சியினால் பாதிக்கப்படுகிறது; 1880 முதல் 1980 வரையிலான ஆண்டுகளில் பாதிக்கும் மேலானவை வறட்சி அல்லது மிக அதிகமான வறட்சி நிலை என்று பகுக்கப் பெற்றன. 1992ல் இருந்து 1995 வரையிலான காலம் நூற்றாண்டிலேயே வரட்சியான காலங்களில் ஒன்றாகும்; அதையொட்டி 30 முதல் 50 சதவிகிதம் வரை பயிர்கள் இழப்பு ஏற்பட்டது. ஆனால் இவை அனைத்தையுமே 2005-06 ம் ஆண்டு வறட்சி மிஞ்சியது; அந்த ஆண்டை அரசாங்ம் "எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமானது" என்று விவரித்தது; சமீபத்தில்தான் சுற்றுச் சூழல் மந்திரி Cristina Narbona வறட்சி முடிந்துள்ளதாக அறிவித்தார்.

கடந்த தசாப்தத்தில் கட்டுமானத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு ஸ்பெயின் மிக அதிக வளர்ச்சியை கண்டது; ஆனால் அப்பகுதிகளோ தண்ணீர் அதிகம் இல்லாத பாதிப்பை உடைய மையங்கள் ஆகும்; இதில் கோஸ்டா பிராவா மற்றும் ஆலிகான்ட் ஆகியவை ஆகும். இந்த வளர்ச்சிக்கான உந்துதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிக்கொடைகள், தேசிய வங்கிகள் கொடுத்த எளிதான கடன்கள் மற்றும் ஸ்பெயினின் ஏனைய பகுதிகள் மற்றும் வட ஆபிரிக்கா ஆகியவற்றில் உள்ள குறைவூதிய உழைப்பில் தங்கி இருக்கும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தது. இப்பொழுது பரந்த ஓட்டல்கள், கால்ப் மைதானங்கள், கேளிக்கை அமைப்புக்கள், ஓய்வு வளாகங்கள் ஆகியவை பெருகிவிட்டன; கிட்டத்தட்ட 50 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வந்துசெல்லுகின்றனர்; இது இப்பகுதியில் இருக்கும் குறைந்த நீர் ஆதாரங்களின் பெரும் பகுதியை உறிஞ்சி விடுகிறது.

பொதுவாக 8,000 முதல் 10,000 மக்கள் இருக்கக்கூடிய சிற்றூரின் சாதாரண தேவைகளுக்கு சமமான ஆதாரங்களை ஒவ்வொரு புதிதாகக் கட்டப்படும் கால்ப் விளையாட்டு மைதானமும் பயன்படுத்துகிறது. ஸ்பெயினின் கடலோரப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 180,000 விடுமுறை இல்லங்கள் கட்டப்படுவதாக மதிப்பிட்டுள்ளது; இந்நிலை, மாட்ரிட்டில் உள்ள Complutense பல்கலைக் கழகத்தை சேர்ந்த Javier Pedraza வை "இயற்கை பகுதிகளைக் காப்பாற்றாமல் நாம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளோம்" எனக் கூற வைத்தது.

கட்டுமானத் தொழில் குமிழை பெருநிறுவனங்கள், அதன் சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் கொழுத்த இலாபம் கொடுக்கும் ஆதாரமாகத்தான் கண்டுள்ளன. இந்த முழு வழிவகையும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நில அபிவிருத்தியாளர்களின் ஊழல்கள், இலாப வகைகள் ஆகியவை நிறைந்ததாக உள்ளது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதி விசாரணை ஒன்று, மார்பெல்லாவில் நில பேரங்களினால் மிகப் பெரும் இலாபங்கள் பெற்ற 86 நபர்கள்மீது அத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.

சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், ஸ்பெயினில் உள்ள தண்ணீரில் 80 சதவிகிதம் விவசாயத்திற்கு எடுக்கப்படுகிறது; இது தெற்கு ஸ்பெயினில் 90 சதவிகிதமாக உயர்கிறது; இது ஐரோப்பாவின் தோட்டமாகிவிட்டது. 115 லிட்டர் நீர் (30 காலன்கள்) ஒரு கிலோ (2 பவுண்டுகள்) ஸ்ட்ரோபெரி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்துள்ளனர். WWF (உலக வனவிலங்குகள் நிதியம்) இன் Alberto Fernandez எளிதில் இலாபம் அடைய விரும்ப நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்: "நாம் இயற்கை பொக்கிஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்; நல்ல விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை இழந்து மிகக் கடுமையான முறையில் நீரின் தரத்தை சேதப்படுத்தி வருகிறோம்."

விடுமுறை மற்றும் விவசாய வளர்ச்சி இரண்டுமே தங்களுடைய நீர்த்தேவைக்கு அரை மில்லியனுக்கும் மேலான, நீரை எடுப்பதற்காக நிலத்தில் துளைகள் தோண்டும் சட்டவிரோத ஆழ்குழாய்களை ---- நம்பியுள்ளன; இது இலாபகரமான கள்ளச் சந்தைக்கான அடிப்படையை அமைக்கிறது. WWF ன் ஸ்பெயினின் புதிய நீர்த் திட்டத்தின் தலைவரான Guido Schmidt இன் கருத்தின்படி, இத்துறையில் பல ஊக வணிகர்கள் நுழைந்து ஏராளமான வலைப்பின்னல்களை கொண்ட பெரிய, சிறிய குழாய் இணைப்புக்களை பல கிலோமீட்டர்கள் கடந்து செல்லும் வகையில் அமைத்து ஆழ்குழாய்களை தொலைவில் இருக்கும் பண்ணைகள், வீடுகளுக்கு எடுத்துச் செல்லுகின்றன என்று தெரிகிறது. "இது ஒரு பெரிய நகரத்தின் நிலத்தடியில் காணப்படுவது போல் உள்ளது. நீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பல வளர்ச்சிகள் வந்துள்ளன... ஒரு கால்ப் மைதானத் தடத்திற்கு திட்டமிட்டு அதற்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு அனுமதி பெறுவது கிடையாது; ஏனெனில் கறுப்புச் சந்தையில் இருந்து தேவையானதை பெறமுடியும்."

பல முன்னாள் மக்கள் கட்சி வெளியுறவு மந்திரி ஏபெல் மாடூட்டையும் தன்னுடைய உறுப்பினராக கொண்ட, ஐபீசாத் தீவில் ஆதிக்கம் செலுத்தும் Matutes குடும்பம், தற்பொழுது என் போசா கடற்கரையில் திட்டமிடப்பட்டுள்ள கால்ப் மைதானம் உட்பட பல நில பேரங்கள் தொடர்பாக ஊழல் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளது; இம்மைதானம் அது விவசாயத்திற்காக கொடுக்கப்படும் மானிய உதவி அளிக்கப்படும் நீரை கணிசமாகப் பயன்படுத்தியிருக்கும்.

2005ம் ஆண்டு அண்டலூசியாவில் பல ஆறுகள் முற்றுமுழுதாக வறண்டு போயின; இதில் உலகப் புகழ்பெற்ற டோனானாவும் அடங்கும்; இது, இதே பெயரைக் கொண்ட தேசிய பூங்கா வழியே ஒடுகிறது; சில ஐரோப்பிய உயிரினங்கள் Lynx போன்றவற்றிற்கு இதுதான் கடைசிப் புகலிடம் ஆகும்; இது இப்பொழுது 1,000 சட்டவிரோத ஆழ்துளை குழாய்களால் சுழப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டங்கள் கடந்த ஆண்டு இருந்ததில் பாதிதான் உள்ளன. 1930களில் பதிவு செய்யப்படும் வழக்கம் ஏற்பட்டதில் இருந்து, ஆண்டு மழை அளவு சராசரிக்கும் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது; இதையொட்டி மீன் பிடிக்கும் தொழில் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் ஆகியவை ஒரு பில்லியன் யூரோக்கும் மேலான இழப்புக்களைக் கண்டுள்ளன.

அதே நேரத்தில் Murcia மற்றும் Castilla La Mancha பகுதிகளுக்கு இடையே "நீர்ப் போர்" தொடங்கிவிட்டது; இதற்கு வட்டார அரசியல் வாதிகள் துணை நிறைகின்றனர்; ஏனெனில் செகுரா ஆறு, முர்சியாவின் தேவைகளுக்கு போதுமான நீரைக் கொடுப்பதில்லை. மத்திய ஸ்பெயினில் உள்ள டாஜோ ஆறு இப்பகுதிக்கு கடந்த 30 ஆண்டுகளாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

இந்த வறட்சியின்போது, காஸ்டில்லா லா மன்சா அரசாங்கம் டாஜோவில் இருந்து கொடுக்கும் நீரை நிறுத்தி, முர்சியா மீது ஒற்று விமானங்களையும் அனுப்பி அவர்களுக்குக் கொடுத்த நீரை என்ன செய்தார்கள் என்பதையும் கண்காணித்தது. எவருக்கும் தெரியாமல் 14,000 இரகசிய நீர்த் தேக்கங்களை கண்டுபிடித்தனர்.

2005ல் ஸ்பெயினிடம் இருந்து ஆறு மில்லியன் யூரோக்களை இழப்பீடாக போர்த்துக்கல் கோரியது; போர்த்துக்கலின் பெரிய ஆறுகளுக்கும் ஆதாரம் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்குக் கீழே ஆற்று நீர் குறையும் பொழுது இந்தக் கோரிக்கை எழுந்தது.

விஷயத்தை இன்னும் மோசமாக்கும் வகையில், விஞ்ஞானிகள் உலகம் வெப்பமயமாவதால், ஸ்பெயினின் உள்நாட்டு தட்பவெப்ப நிலை, 2071ல் இருந்து 2100 க்குள், 5 முதல் 8 செல்சியன் டிகிரிகள் (8-12 பாரன்ஹீட்) அதிகரிக்கக்கூடும் என்றும் கடலோரப்பகுதியில் இது 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகலாம் என்றும் கூறியுள்ளனர். இதன் பொருள் மாட்ரிட் உட்பகுதிக்குள் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியசாக (122 பாரன்ஹீட்டாக) நூற்றாண்டின் இறுதிக்குள் உயரக்கூடும் என்பதாகும். தெற்கு ஸ்பெயினில் மழை பொழிதல் 40 சதவிகிதம்கூட வீழ்ச்சி அடையக்கூடும்; ஆனால் நாட்டின் வடக்குப் பகுதியில் கூடுலாக ஆண்டின் நிறைய மாதங்களில் மழை இருக்கும். வடக்கு ஸ்பெயின் பகுதியில் கரடிகள் பொதுவாக செயலற்று இருக்கும் நிலையைக் கைவிட்டுவிட்டமை உலக வெப்பமயமாதலின் மாறுதல்களை ஏற்கனவே அடையாளம் காட்டுகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நீர்தேக்கங்களின் அடர்த்தியை ஸ்பெயின் கொண்டுள்ளது; இவற்றுள் பல, ஜெனரல் பிராங்கோவின் பாசிச ஆட்சியில் தொடக்கப்பட்டன; அவை பொருளாதார வளர்ச்சியை தேசிய தன்னாட்சி மூலம் அடைய முயல்வதற்காக அமைக்கப்பட்டன. மிகப் பெரிய வேகத்தில் கால்வாய்கள் கட்டுதல் மற்றும் நீர்மின் உற்பத்தி ஆலைக் கட்டுமானங்கள் குறிப்பாக 1950, 1960 களில் நடைபெற்றது ஸ்பெயினின் நீர் அளிப்பை வியத்தகு முறையில் அதிகரித்தது; சக்திவாய்ந்த விவசாய நலன்களைத் திருப்திப்படுத்துவதாக அது இருந்தது.

பிராங்கோவின் மரணத்திற்கு பின்னர் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு பிராங்கோவின் வாரிசுகளை பொறுத்த வரையில் அரசியல் சமரசம் என்று மட்டும் அல்லாமல், நீர், நீர்வழிகள் ஆகியவை பயன்படுத்தப்படுதல், கட்டுப்படுத்தப்படுதல் பற்றி பெருகிய முறையில் விரோதப் போக்குகளை நிறைந்த வட்டார அரசாங்க நிர்வாகங்களையும் ஏற்படுத்தியது; இது குறிப்பாக செல்வம் கொழித்து நீர்வளம் உள்ள வடக்குப் பகுதிகளுக்கும் வறண்ட, வறிய, தெற்குக்கும் இடையே இப்படி ஆயிற்று.

2001 ம் ஆண்டு Popular Party ஊக்கம் கொடுத்த ஒரு புதிய நீர் கொள்கைக்கு இதுதான் உந்து சக்தியாக இருந்தது. The Hydrological Plan (NHP) என்றும் நீர்த்திட்டம் நல்ல திறனுடைய வடபகுதி நீர் நிலை முறைகள் தெற்கு பகுதிகளுக்கு நீர் அளிக்க வேண்டும் என்று இருந்தது; ஆனால் அது வடக்கு பிராந்தியவாதிகளின் கூட்டணியினிலிருந்து பெரும் எதிர்ப்பை சந்தித்தது; அவர்கள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு நீரைப் பயன்படுத்த விரும்பினர்; சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நீர்த்திட்டம் சுற்றுச் சூழல் இழப்புக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அதற்காக இடத்தை விட்டு நகரும் மக்கள் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறினர்.

இச்சக்திகளின் அழுத்தத்தையொட்டியும், NHP யை "சீர்திருத்தும்" அறிக்கை உறுதிமொழியையும் அடுத்து, Jose Luis Zapatero உடைய Spanish Socialist Workers Party (PSOE) அரசாங்கம் 2004ல் பதவிக்கு வந்தது. இதன் முக்கிய விளைவு வடக்கில் இருக்கும் பெரிய ஆறுகளில் ஒன்றான Ebro வில் இருந்த தெற்கிற்கு நீர் கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகும்; அதற்கு மாறாக பல புதிய கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான உப்பை அகற்றும் வசதிகள் கொண்ட பல திட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

பல பில்லியன் யூரோக்கள் செலவாகும் குடிநீராக்கும் திட்டமுடைய ஆலைகள் ஒரு குறுகிய நோக்குடையவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; அவை இன்னும் கூடுதலான வகையில் பெரிய சுற்றுலா வளாகங்கள் மற்றும் கால்ப் மைதானங்கள் இப்பகுதியில் வருவதற்கு வழிவகுக்கும் என்றும் அதையொட்டி வறட்சியும் பாலைவனமாகுதலும் அதிகரித்துத்தான் போகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். WWF கடல்நீரிலிருந்து உப்பை அகற்றி குடிநீராக்கும் திட்டம், மிகவும் செலவாகும் திட்டம் என்றும் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் மிக அதிகமான ஆற்றல் செறிவுமுறையை அது உடையது என்றும் கூறுகிறது; இதைத்தவிர, "உலகின் வருங்கால நல்ல நீர் வரத்திற்கு இது ஒரு கருவியாக இருக்கக் கூடும் என்றாலும், சுற்றுச் சூழலுக்கு அதிக ஆபத்து விளைவிக்காத வகையில் நீரை அளிக்க இருக்கும் மலிவான, சிறந்த மற்றும் முழுமையாக்க வல்ல வழிவகைகளை பிராந்தியங்கள் இன்னும் கொண்டிருக்கின்றன" என்றும் கூறியுள்ளது.

கடல்நீரில் இருந்து உப்பை அகற்றும் திட்டத்தினால் ஆலைகளைச் சுற்றி கூடுதலான உப்பு சேர்தல், கூடுதலான பூகோள வெப்பத்தை விளைவிப்பதாக எண்ணப்படும் பலவகை வாயுக்களின் வெளிப்பாடுகள், கடலோரப் பகுதிகள் அழிதல் மற்றும் ஆறுகள், ஈரப்பகுதிகள் பாதுகாப்பு வலியுறுத்தப்படுவது குறையும் போன்றவை நேரிடும் என்றும் இந்த அமைப்பு பாதிப்புக்களை பற்றி விரிவாகக் கூறியுள்ளது.

ஸ்பெயின் போன்ற உலகின் அழகிய, விருந்தோம்பும் தன்மை உடைய இடத்தில் வளர்ச்சி சுற்றுசூழல் சரிவு இல்லாமல் ஏன் அடையப்படக்கூடாது என்பதற்கு தக்க காரணம் இல்லை; இப்பொழுதோ அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்பெயினின் பெரும்பகுதி இயல்பாக வறட்சியாக இருந்து அவ்வப்பொழுது வறட்சிகளும் காட்டுத் தீக்களும் இருக்கும் நிலையில், வணிக, சமுகத் தேவைகளுக்கு ஒரு பகுத்தறிவார்ந்த, விஞ்ஞான ரீதியாக, நிலைப்படுத்தக்கூடிய முறைதான் நடைமுறைக்கு கொண்டுவரப் படவேண்டும்.

மனிதகுல வரலாற்றின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி முழுவதும் --அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்தின் கீழ்-- ஏற்கனவே இயற்கைச் சூழலை கட்டுப்பாட்டிற்குள் மனித குலம் கொண்டு வந்து அதன் ஆதாரங்கள் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஆனால் நீர் போன்ற உண்மையான ஆதாரத்தின் அளிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி திட்டமிடுவது பெருகிய முறையில் சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் பெருநிறுவன சொந்த வணிகப் பேராசைகள், வட்டார மற்றும் தேசிய பதட்டங்கள், மற்றும் "கறுப்புச் சந்தை" என்பதன் வளர்ச்சி மட்டுமே அவற்றின் தீய வெளிப்பாடாக இருக்கும் சந்தை அராஜகங்கள் ஆகியவற்றாலும் தொல்லைக்காளாகுகின்றன. உலக வெப்பமயமாதலினால் முன்வைக்கப்படும் பொதுமையாக்கப்பட்ட பேரழிவு போல, அத்துடன், இதுதான் ஸ்பெயினின் நீர் நெருக்கடியின் வேராக உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved