World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Nobel Prize for Al Gore: "Old Europe" fires back at the Bush administration

அல் கோருக்கு நோபல் பரிசு: புஷ் நிர்வாகத்திற்கு "பழைய ஐரோப்பா" பதிலடி

By Patrick Martin
13 October 2007

Back to screen version

முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் அமெரிக்காவின் கொள்கைகள் பற்றிய ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் அறிக்கை ஆகும். அமெரிக்காகவின் உள் அரசியலில் இத்தகைய ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் வெளிப்படையான குறுக்கீடு அபூர்வம்தான்.

அல்கோர் ஜனாதிபதி வேட்பாளராகும் திறன் பெற்றுள்ளார் என பரவலாக குறிப்பிடப்படுகிறார், பல முறையும் புஷ் நிர்வாகத்தின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளை தாக்கியுள்ளார் என்பதை எடுத்துக்கொண்டால், கோர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதின் அரசியல் முக்கியத்துவம் மிகத் தெளிவாகும்; ஏனெனில் அவர் அமெரிக்க அரசியலில் இன்னும் தீவிரமாக உள்ள நபர்தான். இந்தப் பரிசானது குறைந்தபட்சம் நோர்வேஜிய அரசியல் நடைமுறை --அதில் இருந்துதான் பரிசு வழங்குபவர்களை நிர்ணயிக்கும் குழு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்-- 2008 ஜனாதிபதி தேர்தலில் ஒரு ஜனநாயகக் கட்சி வெற்றியை எதிர்பார்க்கிறது என்பதற்கான சமிக்கை என்று எடுத்துக் கொள்ளப்பட முடியும்.

பரிசுக் குழுவின் தலைவர், Ole Danbolt Mjoes, புஷ்ஷின் நிர்வாகத்திற்கு வெளிப்படையாக கடிந்துரை வழங்கப்பட்டுள்ளது என்பதை மறுத்த வகையில், "ஒரு சமாதானத்திற்கான பரிசு என்பது எது பற்றியுமான விமர்சனமாக ஒருபோதும் இல்லை. இப்பரிசானது உலகில் அமைதிக்காக பாடுபடுபவர்கள் அனைவருக்குமான ஒரு சாதகமான செய்தி மற்றும் ஆதரவு ஆகும்" என்று கூறினார்.

ஆனால், துணை ஜனாபதி கோர் ஒன்றும் "சமாதானத்தின்" நிமித்தம் அடையாளம் காணப்படுபவர் அல்லர். 1990ல் ஈராக்கிற்கு எதிராக முதல் அமெரிக்கப் போரில் வாக்களித்த செனட் ஜனநாயக கட்சியினர் பத்துபேர்களில் ஒருவர் என்ற முறையில் அவர் சோமாலியா, ஹைட்டி, பொஸ்னியா ஆகியவற்றிற்கு படைகளை அனுப்பிய நிர்வாகத்தின் இரண்டாம் உயர் அதிகாரி ஆவார்; அந்நிர்வாகம் கொலம்பியாவிற்கு கொலைக் குழுக்களை அனுப்பியது, ஈராக், ஆப்கானிஸ்தான், சுடான் ஆகியவற்றின் மீது குண்டுவீச்சுக்களை நடத்தியது, கிட்டத்தட்ட 500,000 ஈராக்கிய குழந்தைகளை காவு கொண்டு, ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடைகளை சுமத்தியது, சேர்பியாவிற்கு எதிரான பேரழிவு தரக்கூடிய போர் ஒன்றை நடத்தியது அனைத்திற்கும் நிதியங்களை ஒதுக்கியது.

முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் இலக்கியத் துறையில் பரிசு பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்த பணிக்காக, அல்லது குறிப்பிடத்தக்க சாதனைக்காக, பல தசாப்தங்கள் சேவைக்காக, காலம் கடந்து நிற்கும் செயற்கரிய செயல்களுக்காக நோபல் பரிசு பெறுகின்றனர்; இவற்றுடன் நோபல் சமாதானப் பரிசு குறைந்த அளவே பொதுத்தன்மை உடையதாக இருக்கிறது. சமாதானப் பரிசிற்கு உலகம் முழுவதும் உள்ள பெருமதிப்பு, தெளிவாய் பார்க்கவல்ல நிலை இவற்றை ஒட்டி, அதைப் பெறுபவரை தேர்ந்தெடுத்தல் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகிவிட்டது; ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்கு மிகப் பெரிய அக்கறையை கொடுக்கும் பிரச்சினைகள், நிகழ்வுகள் அல்லது நாடுகளை அடையாளம் காட்டும் தன்மை உடையதாகிவிட்டது.

டைனமைட்டை கண்டுபிடித்த பில்லியனர் ஆல்பிரெட் நோபல் எழுதி வைத்துள்ள உயிலில் உள்ள தேர்வு முறையின்படி, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பரந்த ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் அரசியல் முடிவாக இப்பரிசு இருக்கும். பல்வேறு துறைகளில் இருக்கும் வல்லுனர்கள் குழுவினரால், சுவீடிஷ் விஞ்ஞான கல்விக்கழகம் போன்றவற்றால், மற்ற நோபல் பரிசுகள் தேர்ந்தெடுக்கப்படும் போது, சமாதானத்திற்கான பரிசு பெறுபவர் மட்டும் எப்பொழுதும் நோர்வேஜிய பாராளுமன்றக் குழு ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்படுவார்; அதன் ஐந்து உறுப்பினர்கள் அச்சட்டமன்றத்தில் கட்சிகளின் வலிமையை பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவர்.

கோரை தேர்ந்தெடுத்த ஐந்து உறுப்பினர்கள் குழுவில் நான்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்; அவர்களில் இருவர் முன்னாள் மந்திரிகள், ஒருவர் டிரோம்சோ பல்கலைக் கழகத் தலைவர் ஆவர். ஐந்து அரசியல் கட்சிகளை சேர்ந்த இவர்கள், தீவிர வலதில் இருந்து தீவிர இடதுவரை நோர்வேயின் அரசியல் நிறமாலையில் இருந்து வருபவர்கள் ஆவர்: Progress (தீவிர வலது, குடியேறுவோர்-எதிர்ப்பு), கன்சர்வேடிவ், கிறிஸ்துவ மக்கள் கட்சி (Christian Democratic), லேபர் (சமூக ஜனநாயக கட்சி) மற்றும் சோசலிச இடது (Green, anti-European Union) என்பவை அக்கட்சிகள் ஆகும். ஐந்து கட்சிகளுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் போட்டிக் கூட்டணிகளின் ஒரு பகுதி என்ற முறையில் அரசாங்கப் பதவிகளை வகித்துள்ளன.

கோர் மற்றும் ஐ.நா. அமைப்பான சுற்றுச்சூழல் மாறுதல் பற்றிய பற்றிய அரசாங்கத்திற்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change) இரண்டையும் இவ்வாண்டு பரிசிசை கூட்டாக பெறுபவர்கள் என்று நிர்ணயிப்பதில் இரு அக்கறைகள் தெளிவாகின்றன: சுற்றுச் சூழல் மாறுதல் பிரச்சினையை உயர்த்திக் காட்டுவதில் ஒரு உறுதிப்பாடு மற்றும் அமெரிக்காவில் பெருகிய முறையில் அரசியல், சமூகப், பொருளாதார உறுதியற்ற தன்மை பற்றி பெருகிய முறையில் வெளிவரும் அடையாங்கள் பற்றிய கவலை என்பவையே அவை.

பரிசு பெறுபவர்கள் பற்றிய குறிப்பில், பரிசுக் குழு சுற்றுச்சூழல் மாறுதலின் அரசியல் உட்குறிப்புக்கள் பற்றி வலியுறுத்தும் வகையில் உலகம் வெப்பமயமாதல் "மிகப் பெரிய அளவு குடியேறுதல்களை தூண்டிவிடக்கூடும், பூமியின் இருப்புக்கள் மீது மிக அதிக போட்டிக்கு வழவகுக்கலாம். அத்தகைய மாறுதல்கள் குறிப்பான பெரும் சுமையை உலகின் மிக பாதிப்பிற்குரிய நாடுகள் மீது சுமத்தக்கூடும். வன்முறைப் பூசல்கள், போர்கள் ஆகியவை நாடுகளுக்கு இடையே மூளும் ஆபத்துக்கள் அதிகமாகலாம்." என்று தெரிவித்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, ஜுன் மாதம் நடைபெற்ற G-8 உச்சி மாநாடு எமது பகுப்பாய்வில் ("Climate compromise masks mounting conflicts"), ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெலும் மற்ற ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களும் உள்நாட்டு, பொருளாதார, வெளியுறவுக் கொள்கை காரணங்களை அடுத்து சுற்றுச் சூழல் மாறுதல் பற்றிய பிரச்சினைகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

உள்நாட்டில் மேர்க்கெல், பிரான்சில் நிக்கோலா சார்க்கோசி மற்றும் பிற வலதுசாரி அரசியல் வாதிகளும் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளை சமூக ஜனநாயக மற்றும் பசுமை கட்சிகளில் இருந்து பிரிப்பதற்கு கையாளும் வரவேற்பு உத்திகளுக்கு இந்தப் பிரச்சினையை பயன்படுத்தியுள்ளனர். பெருகிய முறையில் இலாபம் தரும் மாற்றீட்டு விசை ஆதாரங்கள், எரிபொருள் திறன் அதிகம் உடைய தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஐரோப்பிய மேலாதிக்கத்தையும் அவர்கள் நிறுவ முற்படுவதுடன் ஐரோப்பா வெளி விசை அளிப்பாளர்களை நம்பியிருந்தலை, ஓரளவு குறிப்பாக ரஷ்யா, பேர்சிய வளைகுடா நாடுகளை நம்பியிருத்தலை, குறைக்கவும் விரும்புகின்றன.

அனைத்து முக்கிய ஐரோப்பிய சக்திகளிடம் ஒரு பொது முன்னணியை தோற்றுவிப்பதிலும் சுற்றுச் சூழல் மாறுதல் ஒரு வழிவகையாகி உள்ளது; 2003ல் ஈராக் மீது அமெரிக்கப் படையெடுப்பை அடுத்து வெளியில் வந்த பல பிளவுகளை கடக்க முயலும் வகையில் இது உள்ளது. பிரான்ஸும், ஜேர்மனியும் --அப்பொழுது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரியான டொனால்ட் ரம்ஸ்பெல்டினால் "பழைய ஐரோப்பா" என்று எள்ளி நகையாடப்பட்டவை-- பகிரங்கமாக போரை எதிர்த்தன, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் போரில் பங்கு பெற்றன. இந்த ஆண்டு G-8 உச்சி மாநாட்டின்போது, ஐரோப்பிய சக்திகள் உலகம் வெப்பமயமாதல் பற்றி முதல் தடைவையாக ஒரே முகாமாக சேர்ந்து புஷ் நிர்வாகத்தை குறைந்த பட்சம் பெயரளவு சலுகைகளேனும் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தின; இது புஷ் நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச் சூழல் மாறுதல் பற்றிய கியோடோ ஒப்பந்தத்தை நிராகரித்ததற்கு பின் வந்துள்ளதாகும்.

சுற்றுச் சூழல் மாறுதல் பற்றிய ஆபத்தை உயர்த்திக் காட்டுவது மட்டும்தான் இதன் நோக்கம் என்றால், நோபல் பரிசுக் குழு கோரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒன்றும் தேவை இல்லை. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பற்றிய அரசாங்கத்திற்கிடையேயான குழுவை தேர்ந்தெடுத்தது மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA), அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர்(UNHCR), ஐ.நா. அமைதி காக்கும் படை மற்றும் ஐ.நா. தலைமை செயலாளர் கோபி அன்னான் போன்ற பல ஐ.நா. அமைப்புக்களுக்கு தொடர்ச்சியாக பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ள வகையில், இத்தகைய நடவடிக்கையும் பரிசு கொடுப்பதின் மரபார்ந்த வடிவமைப்பிற்கு உட்பட்டதாக இருந்திருக்கும்.

கோரை தேர்ந்தெடுத்ததில், சமாதான பரிசுக் குழு புஷ் நிர்வாகத்தின்மீது ஒருநேரடித் தாக்குதலை கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்றாம் தடைவையாக நிகழ்த்தியுள்ளது: 2002ல் சமாதானப் பரிசு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு கொடுக்கப்பட்டது; அவர் புஷ் நிர்வாகம் பற்றிப் பெருகிய முறையில் எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தார்; 2005ல் பரிசு சர்வதேச அணுசக்தி அமைப்பு மற்றும் அதன் தலைவர் மகம்மட் எல்பராடிக்கு கொடுக்கப்பட்டது; இரண்டும் புஷ் நிர்வாகத்தின் சீற்றத்திற்கு உள்ளான நிலை அது; ஏனெனில் எல்பராடி புஷ் நிர்வாகத்தை ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய மோசடித்தனமான கூற்றுக்களை குறைகூறியிருந்தார்; அது போன்றே ஈரானுக்கு எதிரான கூற்றிற்கும் ஆதரவு கொடுக்க மறுத்தார்.

பரிசுக்குழுவின் அறிவிப்பு "கோரின் வலுவான பிணைப்பு அவருடைய அரசியல் செயல்கள், உரைகள், படங்கள் மற்றும் நூல்களில் பிரதிபலிப்பது சுற்றுச் சூழல் மாறுதலுக்கு எதிரான அவருடைய போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உலக அளவில் பெரிதும் புரிதலை உருவாக்க அதிகம் பணியாற்றிய ஒற்றைத் தனிநபராக அவர் இருக்கக்கூடும்" என்று கூறியுள்ளது.

தன்னுடைய நூல்களிலும், உரைப் பயணங்களிலும், An Inconvenient Truth என்ற ஒரு ஆவணப்படம் எடுத்து அதில் கூறியுள்ள வகையிலும், இந்த ஆண்டு Live Earth நாளன்று பல பாடல் நிகழ்ச்சிகளில் சுற்றுச் சூழல் கருத்துக்களை கூறிய அளவில், வெப்பமயமாதலின் ஆபத்து பற்றி மக்களுடைய பொதுக் கவலையுடன் பரந்த அளவில் கோர் அடையாளம் காணப்படுகிறார் என்பது உண்மைதான்.

ஆனால் ஒரு "நிலத்தின் நெருக்கடி" பற்றிய கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும், சுற்றுச் சூழலுக்கான ஆபத்துக்கள் பற்றிய கோரின் எதிர் நடவடிக்கைகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள தீமையின் அடிப்படை காரணத்தை களைவது பற்றி அதிகம் கூறவில்லை: அதாவது திட்டமிடப்படாத வகையிலும், பெரும் குழப்ப நிலையிலும் இலாப முறை இருப்பது பற்றி ஏதும் கூறவில்லை. (See: "Al Gore's An Inconvenient Truth: political posturing and the Democratic Party")

உலகம் வெப்பமயமாதல் என்னும் அச்சுறுத்தல் பற்றி தீவிரமாக நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு பகுத்தறிவார்ந்த, சர்வதேச ரீதியாக ஒருங்கிணைந்த விஞ்ஞானபூர்வ வேலைத்திட்டம் தேவைப்படுகிறது; அதில் பொதுப் போக்குவரத்து முறைகளுக்கு தேவையான மகத்தான இருப்புக்கள் மற்றும் மாற்றீட்டு வகையில் ஆற்றல் உற்பத்திக்கான திட்டங்கள் ஆகியவை அடங்கி இருக்க வேண்டும். அத்தகைய உலகந்தழுவிய திட்டம் சோசலிச நடவடிக்கைகளை கொண்ட ஒரு தைரியமான பிரச்சாரத்தின்மூலம், ஒரு சர்வதேச அளவில் நடத்தப்பட்டால்தான் நிறைவேற்றப்பட முடியும்; அதல் ஆற்றல் மற்றும் பயன்பாட்டு நிறுவனங்கள் பொது நிறுவனங்களாகவும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்படவும் வேண்டும் என்பதும் அடங்கும்.

ஆனால் கோரோ ஒரு முதலாளித்துவ அரசியல் வாதியாவார்; Apple, Google மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பெருநிறுவனங்களில் பங்குகள் வைத்துள்ளதின் மூலம் செல்வக் கொழிப்பு அடைந்தவராவர். சிந்தனைப் போக்கு மற்றும் சமூக நலன்கள் ஆகிய அடிப்படையில் சுற்றுச்சூழல் பற்றி மாற்றுவதற்கான தீவிர வேலைத்திட்டத்தை அளிக்க இயலாதவர்.

மேலும் கோரே அவர் செய்ததை விட சிறந்த முறையில் பேசத்தான் செய்துள்ளார். எட்டு ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்தபோது இவருடைய பெரும் ஆர்வம் எனக் கூறிக்கொள்ளும் சுற்றுச் சூழல் நலன்களை முன்னேற்றுவிக்க இவர் ஏதும் செய்யவில்லை. எழுதப்படுவதில் இவர் முக்கிய பங்கு கொண்டிருந்த Kyoto Treaty பெரிதும் ஒரு அடையாள நடவடிக்கை ஆகும்; கிளின்டன் நிர்வாகம் அது செனட் மன்றத்தின் இசைவு பெறுவதை அனுமதிக்கவில்லை; ஏனெனில் அது அமெரிக்க வணிக நலன்களுக்க ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ளது.

செய்தி ஊடகத்தின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபின், அதைப் பயன்படுத்திக் கொண்டு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் நுழைவதற்கு கோர் முயல்வார் என்ற கணிசமான ஊகங்கள் வந்துள்ளன. "கோரை தேர்ந்தெடுக்கவும்" என்று கூறும் குழுக்கள் திடீரென தோன்றி ஊடகத்தில் விளம்பரமும் பெற்று வருகின்றன; ஆனால் கோரும் அவருடைய நெருக்கமான நண்பர்களும் அப்போட்டியில் உடனடி ஆர்வம் இருப்பதை மறுத்துள்ளனர்.

நோபல் பரிசுக் குழு, ஜனாதிபதித் தேர்தலில் கோரை புகுத்த இத்தகைய நேரடியான, வெளிப்படையான முயற்சியை நோக்கமாக கொண்டிருந்ததா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான். ஆனால் ஐரோப்பிய ஆளும் வட்டங்கள் அமெரிக்காவின் நெருக்கடி அமெரிக்க அரசியல் அமைப்புமுறை எதிர்பார்ப்பதைவிட மிக வேகமாக வளர்ந்துவருகிறது என்ற கவலையைத்தான் பரந்த அளவில் கொண்டுள்ளது.

ஒரு அரசியல் தீவிரத்தன்மை நிதிய நெருக்கடிகள், பெருகும் சமூக அழுத்தங்கள், ஈராக்கில் நடைபெற்றுவரும் குருதிப் போக்கு அல்லது ஏதேனும் புதிய இராணுவ முயற்சி புஷ்-செனி நிர்வாகத்தால் தூண்டிவிடப்படுதல் ஆகியவவை எழுச்சியுற்று அமெரிக்காவில் நிறுவப்பட்டுவிட்ட இரு கட்சி முறையின் எல்லைகளை மீறும் அச்சுறுத்தல் கொண்டால் அதைத் தடுக்கும் வகையில் கோர் தயார் செய்யப்படுகிறார்.

இந்த ஆபத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் செய்றபாடுகளை அதி தொலைநோக்காய் பார்ப்பதனால் அதிகரிக்கச் செய்துள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பெப்ருவரி மாதம் நடுப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர் விரைவாக ஆரம்ப தேர்தல்கள் நடக்க இருக்கையில் கிட்டத்தட்ட பாதி உறுப்பினர்கள் பெப்ருவரி 5ம் தேதிக்குள் நியமன மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்; ஆனால் நியமன மாநாடோ ஆகஸ்ட் மாதம்தான் நடைபெறும்.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் போர் ஆதரவு வேட்பாளர்களை -ஜனநாயகக் கட்சி சார்பில் ஹில்லாரி கிளின்டன் மற்றும் ஏதாவது முக்கிய குடியரசுக் கட்சி வேட்பாளரைப் பற்றி முடிவெடுத்திருக்கக்கூடும்; இதையொட்டி போர் எதிர்ப்பு உணர்வுடைய மில்லியன் கணக்கான மக்கள் ஒரு மாற்றீட்டை எதிர்பார்த்து அதற்கு ஏற்ப வாக்களிப்பு நடத்த முடியாமல் போகக்கூடும். இச் சூழ்நிலையில் நோபல் பரிசு பெற்ற ஒருவர், ஈராக் போரை எதிர்த்தவர் முதலாளித்துவ அரசியலில் பாதுகாப்பு வால்வ் என்ற பங்கை சிறப்பாகச் செய்ய முடியும்.

முதலாளித்துவ நிறுவன அமைப்புக்கள் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு தனது அடிப்படை ஆதரவை கோர் ஏற்கனவே நிரூபணம் செய்துள்ளார். 2000 தேர்தல் நெருக்கடி புளோரிடாவில் வெளிப்பட்டபோது இவர் நடந்து கொண்ட முறை அப்படித்தான் இருந்தது. மக்கள் வாக்குகள் பெரும்பான்மை பெற்றிருந்தபோதிலும், கோர் வலதுசாரிக் குடியரசுக் கட்சியினர் புளோரிடாவில் தேர்தல் குழு வாக்குகளை கடத்திச் சென்றதற்கு சரணடைந்தார்; அந்தக் கடத்தலோ அரசியல் அளவில் உந்துதல் பெற்றிருந்த தலைமை நீதிமன்றத்தால் 5-4 பெரும்பான்மை என்ற கணக்கில் இசைவைப் பெற்றது.

கோரும், ஜனநாயகக் கட்சியினரும் புளோரிடாவில் ஜனநாயகம் மிதிக்கப்பட்டதற்கு எதிராக எந்தத் தீவிர போராட்டத்தையும் கொள்ளவில்லை; ஏனெனில் அவர்கள் புஷ்ஷை வெள்ள மாளிகையில் இருந்திய ஆட்சி மாற்றத்தைவிட, வலதுசாரி ஆட்சி மாற்றத் திட்டத்திற்கு எதிராக மக்கள் திரட்டு ஏற்பட்டால் அதன் விளைவுகள் பற்றிக் கூடுதலான எச்சரிக்கையை கொண்டிருந்தனர். இவ்விதத்தில் அவர்கள் புஷ், செனி குழுவினர் புஷ் நிர்வாகம் ஜனவரி 20, 2001ல் தொடங்கியதில் இருந்து நிகழ்த்தப்பட்ட அரசியல் குற்றங்கள் அனைத்திலும் அரசியல் பொறுப்பில் பங்கு கொள்ளுபவர்கள் ஆவர்.

2000ம் ஆண்டு நெருக்கடியின்போது கோர் நடந்து கொண்ட முறை பற்றி நோபல் பரிசுக் குழு தன்னுடை உள்விவாதங்களில் குறிப்பைக் காட்டியது என்பதற்கு தக்க வரலாற்று ஆதாரம் உள்ளது. 1970 களில் இருந்து 1970கள் முடிய சமாதானப் பரிசுக் குழு பலமுறையும் மக்கள் புரட்சி இயக்கங்களுக்கு எதிரான ஊழல் மலிந்த நெருக்கடி நிறைந்த ஆட்சிகள் மாற்றீடுகளாக வருவதற்கு உதவும் வகையில் அடிக்கடி பரிசுகளை கொடுத்துள்ளது. இவற்றில் போலந்தின் Lech Walesa, தென்னாபிரிக்காவில் Desmond Tutu, ஆர்ஜென்டினாவில் Adolfo Esquivel, பர்மாவில் Aung San Suy Kyi, கெளத்தமாலாவில் Rigoberta Menchy மற்றும் கிழக்கு திமோரில் Jose Ramos-Horta ஆகியோர் அடங்குவர்.

அல் கோரை நோபல் சமாதான பரிசிற்கு தேர்ந்தெடுத்தது என்பது ஐரோப்பிய முதலாளித்துவம் உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் கீழிருந்து ஒரு பரந்துபட்ட எழுச்சி ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்பதைக் காண்கிறது என்பதைத்தான் உணர்த்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved