World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP-ISSE meeting in Sri Lanka: the lessons of the Russian Revolution

இலங்கையில் சோ.ச.க.-ஐ.எஸ்.எஸ்.இ. கூட்டம்: ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகள்

21 November 2007

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், நவம்பர் 25ம் திகதி ரஷ்யப் புரட்சியின் 90வது ஆண்டு நிறைவுக்காக பொதுக் கூட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தவுள்ளன.

அக்டோபர் 25ம் திகதி (மேல்நாட்டு நாட்காட்டியின்படி நவம்பர் 7), போல்ஷிவிக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் பல மில்லியன் கணக்கான விவசாயிகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, முதலாவது உலக ஏகாதிபத்திய யுத்தத்தில் மூழ்கிப்போயிருந்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக சோசலிச பதிலீட்டை ஸ்தாபிதம் செய்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாபெரும் அரசியல் நிகழ்ச்சி என்பதில் சந்தேகம் கிடையாது.

அக்டோபர் புரட்சியின் படிப்பினைகளை கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, புரட்சியில் லெனினுடன் துணைத் தலைவராக செயற்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி, அவரது அதி உயர்ந்த பணிகளில் ஒன்றாக ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலை எழுதினார்: "1917ன் முதல் இரண்டு மாத காலத்தில், ரஷ்யா இன்னமும் ஒரு ரோமானிய முடியாட்சிக்கு கீழ்ப்பட்டிருந்தது. எட்டு மாதங்களின் பின்னர், போல்ஷிவிக்குகள் தலைமைக்கு வந்தனர். அவர்கள் அந்த ஆண்டின் தொடக்கத்தில், பலர் மத்தியில் சிறியளவிலேயே அறியப்பட்டிருந்ததோடு, ஆட்சிக்கு வந்த போது அவர்களின் தலைவர்கள் அரச துரோகிகள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக 150 மில்லியன் மக்கள் இதில் பங்களிப்பு செய்திருந்ததை நீங்கள் நினைவு கூர்ந்தால், வரலாற்றில் அத்தகைய கூர்மையான இன்னுமொரு மாற்றத்தை நீங்கள் காணமாட்டீர்கள்."

தொழிலாளர் வர்க்கத்தினுள் சோசலிச கலாச்சாரத்தின் அபிவிருத்திக்காக மார்க்சிய இயக்கத்தால், குறிப்பாக ரஷ்ய மார்க்சிஸ்டுகளால், தசாப்த காலங்களாக கடும் உழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட கோட்பாட்டு மற்றும் அரசியல் வேலைகளினால் மட்டுமே 1917ம் ஆண்டு புரட்சி சாத்தியமானதாக இருந்தது. ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளும், அதே போல் நீடித்த ஸ்ராலினிச சீரழிவுகளும் மற்றும் 1991ல் சோவியத் ஒன்றியம் இறுதியாக வீழ்ச்சியடைந்தமையும் இன்றைய தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யுத்தத்தையும் புரட்சியையும் விளைவித்த உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அமெரிக்கா இராணுவ வழிமுறைகளின் ஊடாக தனது பூகோள மேலாதிக்கத்தை ஸ்தாபிதம் செய்துகொள்ள முயற்சிப்பதோடு, அது உலகை இன்னுமொரு பேரழிவை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றது. மீண்டும் ஒரு முறை காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்ற அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சமூக ஒழுங்கை தூக்கிவீசுவதே இதற்கு ஒரு மாற்றீடாகும். இன்றைய தொழிலாளர் மற்றும் இளைஞர் பரம்பரை எதிர்கொண்டுள்ள புரட்சிகர சவால் அதுவேயாகும்.

பிரதான பேச்சாளர்: சோ.ச.க. பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ்.

இடம்: அரச சேவையாளர் விளையாட்டுக் கழக மண்டபம் (PSC), அவிஸ்சாவலை.

காலம்: நவம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved